Thursday, April 9, 2009

வெள்ளந்தி உள்ளங்கள்

கடந்த இரண்டு வாரங்களில் கிடைத்த சில சொற்ப நிமிடங்களுக்குள் நட்பு வீடுகளை எட்டிப் பார்த்தேன். அகநாழிகை தன் மகளைப் பற்றிய அழகிய பதிவொன்று போட்டிருந்தார்.அவருக்கு 'நீங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் வாசு'என்றுஒரு பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்து விட்டு இரண்டு நாட்களின் பின் மீண்டும் திறந்தால் அந்த அழகிய பதிவு எடுக்கப் பட்டு மன்னிப்புக் கேட்கப் பட்டிருந்தது.மிகுந்த ஏமாற்றமாகப் போய்விட்டது.ஆனாலும் அந்த அழகிய சுட்டிச் சிறுமி இடம் மாறி இப்போது மனதுக்குள் வந்துவிட்டாள்.

இருந்த போதும்,அவருடய பதிவு குழந்தைகள் பற்றிய என் எண்ணப் பதிவுகளை மீண்டும் கிளறி விட்டது.சிறியதாகவேனும் அது பற்றி ஒரு பதிவு இன்று போட வேண்டும் என்று நினைத்தவாறே வந்தால் 'மழை' வலைப்பூ சகோதரியும் அவ்வாறு ஒரு பதிவு போட்டிருக்கிறார்.சரி, இப்போது குழந்தைகளின் பூங்காவனத்தில் மழை போலும்.

முந்தய என் குழந்தைகள் பற்றிய பதிவில் சொல்ல மறந்த இப்போது அகநாழிகையால் ஞாபகத்துக்கு வந்த என் வட இந்தியத் தோழி சொன்ன கதை இது.தன் 5 வயது மகன் வீட்டில் மகாபாரதம் தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருந்தாராம்.அதில் குந்திதேவி சூரிய பகவானிடம் குழந்தையை வரமாகப் பெற்ற காட்சி நடந்து கொண்டிருந்ததாம்.அப்போது அவரது தந்தை,'மகனே நீ வளர்ந்து எங்களைப் பார்த்துக் கொள்வாயா?' என்று கேட்டாராம்.மகன் உடனே ஆம் எனப் பதிலளித்துவிட்டு சற்று தீவிரமாக யோசித்து விட்டு சொன்னாராம்,'அப்பா,உங்களை என்னால் பார்க்கமுடியுமோ தெரியாது, ஏனென்றால் அப்போது நான் சூரியனைக் குப்பிட்டு எனக்குச் சொந்தமாகப் பல குழந்தைகள் இருக்கக் கூடும்.அப்படி என்றால் நான் அவர்களைத் தானே முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று உள்ளங்கைகள் இரண்டையும் முன்னால் விரித்த படி மிகவும் தீவிர பாவனையோடு சொன்னாராம்.

ஆஹா! 'வெள்ளந்தி மனம்' என்பது இதைத் தானோ!

இந்த ஆண் குழந்தையின் தந்தை விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராம். அது போல் தன் மகனும் விளையாட்டில் ஆர்வமுள்ளவனாக இல்லையே என்பது அத் தந்தையின் கவலை.அதனால் குழந்தையின் தாயார் மகனுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஊட்டும் விதமாகக் கதைகள் சொல்வதும் விளையாட்டிடங்களுக்கு அழைத்துச் செல்வதுமுண்டாம்.5 வயதில் ஒரு நாள் பாடசாலையில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியோடு வந்து ' அம்மா, நான் இன்று விளையாட்டில் இரண்டாவதாக வந்தேன்' என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவித்தாராம்.தாய்க்கோ மிகுந்த மனமகிழ்ச்சி;மனநிறைவு;பெருமை.மகனை மிகவும் உற்சாகப் படுத்தி நல்லது மகனே அப்படித்தான் இருக்க வேண்டும். 'அடுத்தமுறை இன்னும் நன்றாக முயன்றாயானால் முதலாம் இடத்தை நீ பிடித்து விடுவாய்' என்று பல வழிகளிலும் உற்சாகப் படுத்தி, குழந்தையின் தந்தை வீட்டுக்கு வந்த பின், மகன் விளையாட்டில் இரண்டாவதாக வந்த விடயத்தைப் பெருமையாகக் கூறினாராம். உடனே தந்தை மகனிடம் 'எத்தனை பேர் ஓடினீர்கள்' என்று கேட்டாராம்.உடனே மகன் ஒரு தயக்கமுமின்றிப் பதிலளித்தானாம்,'இரண்டு பேர் அப்பா.':)

முன்னொரு காலம்,1995ம் ஆண்டு,ஒக்ரோபர் மாதம் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வடமராட்சிப் பகுதிக்கு முழு யாழ்ப்பாணமுமே வந்திருந்தது. அங்கு என் தூரத்து உறவினர்களுடய வீட்டில் நான் 3 நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது.அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள்.இரவு வேளைகளில் தூரத்தே ஷெல் வீழ்ந்து வெடிக்கும் ஓசை அடிக்கடி கேட்கும்.நாம் இரவு உணவின் பின் பின்கட்டில் உட்கார்ந்து நாட்டு நிலைமைகள்,மக்களின் இறப்புகள், இனப்பூசல்கள்,பிள்ளகளின் எதிர்காலம் என்று பலதும் பத்தும் கதைப்போம். பிள்ளகளும் இதனைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு கதைத்துக் கொண்டிருந்த ஒரு நாள் வெடிச் சத்தங்கள் மிக அருகாமையில் கேட்கத் தொடங்கின.அவர்கள் எங்கும் போவதில்லை என்ற தீர்மானத்திலிருந்தார்கள்.அதனால் தந்தை தன் மூத்த மகனிடம்,'தற்சமயம் நாங்கள் இறக்க நேர்ந்தால் நீ எங்களுக்கு ஒன்றும் செய்யத்தேவை இல்லை, ஒரு சவப் பெட்டி வாங்கி எங்களை அதில் போட்டு எரித்து விட்டால் போதும்' என்று சொன்னார்.மகன் எதுவும் பேசவில்லை.மறு நாள் காலை நான் புறப்பட ஆயத்தமான போது மீண்டும் ஒரு முயற்சியாக அவர்களை என்னோடு வந்து விடுமாறு கேட்டேன்.அவர்களுடய முடிவில் மாற்றம் இருக்கவில்லை.அப்போது மகன் சொன்னான்.'அப்பா, நாங்கள் முதலிலேயே 2 சவப் பெட்டி வாங்கி வைத்து விட்டால் நல்லது.அந்த நேரத்தில் நாம் அதற்காக இந்த வெடிச்சத்தத்திற்குள் ஓடித்திரிய வேண்டியதில்லை அல்லாவா? நாம் இப்போதே அவற்றை வாங்கி வைத்து விடுவோமா?' என்று கேட்டான். இறைவனின் திருவருளால் அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்.ஆனால் இந்த நிகழ்ச்சியை ஏனோ என்னால் மறக்க முடியவில்லை.


சில வருடங்களுக்கு முன் Reader's Digest ல் என்று நினைக்கிறேன்.(நன்றாக நினைவில்லை)வாசித்த ஒரு தாயாரின் அனுபவக் குறிப்பு இது.தன் மகள் 3,4 வயதிருக்குமாம்.மலைப் பாங்கான ஒரு இடத்தில் அவர்களது வீடு அமைந்திருந்ததாம்.அவரது மகள் 3,4 வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்குள்ள அவரது வயதை ஒத்த சினேகிதர்களோடு விளயாடுவது வழக்கமாம். ஒரு நாள் மாலை வழமை போல் அவர் விளையாடச் சென்றிருந்தாராம்.திடீரென மழை மேகங்கள் கூடி இருள் சூழ்ந்து கொண்டனவாம்.இடியும் மின்னலும் தோன்ற ஆரம்பித்து விட்டனவாம்.குளிர் காற்றும் கடும் இடியும் மின்னலும் சட்டென்று சூழ்ந்த இருளும் தாயாருக்கு பதட்டத்தை ஏற்படுத்த பிள்ளையைப் போய் கூட்டி வர வேண்டும் என்ற உந்தலில் அவசர அவசரமாக வீதிக்கு வந்தாராம். தூரத்தில் மகள் வருவதும் மின்னல் ஏற்படுகின்ற தருணங்களில் உடனடியாக நின்று புன்னகை பூத்து விட்டு மின்னல் நின்றபின் நடந்து வந்தாராம். ஒவ்வொருமுறை மின்னலுக்கும் அக்குழந்தை அதையே செய்தவாறு பயமிலாமல் வெகுஜோராக நடந்து வந்தாராம்.ஓடிச் சென்று பிள்ளையை அணைத்தவாறு 'ஏன் மகளே,பயமில்லையா உனக்கு மின்னல் மின்னுகின்ற போதிலெல்லாம் நின்று சிரித்தவாறு வருகிறாயே, ஏன்?' என்று கேட்டாராம்.அதற்கு மகள் சொன்னாளாம்,'ஆம் அம்மா நான் நின்று சிரித்து விட்டுத் தான் வந்தேன். கடவுள் photo எடுக்கும் போது நான் அழகாகச் சிரிக்கத்தானே வேண்டும்.' என்றாளாம்.(மின்னல் பிள்ளைக்கு கடவுள் எடுக்கும் photo வாகத் தெரிந்திருக்கிறது.)என்னே அழகு! குழந்தைகள் உலகு!!

2 மாதங்களின் முன்னால் இங்கு நடந்த சம்பவம் ஒன்று. நான் வசிக்கும் தொடர் மாடிக் குடியிருப்பில் ஒரு தமிழ் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.அவர்களுக்கு 5 வயதிலும் 1+ வயதிலும் குழந்தைகள் உள்ளன.அவர்கள் வேலை நிமித்தம் கிராமப் புறம் ஒன்றுக்கு மாற்றலாகி விட்டார்கள்.வார இறுதிகளில் அவர்களோடு தொலை பேசியில் நாம் கதைப்பதுண்டு.குறிப்பாக மூத்த மகள் தாரணி எங்கள் எல்லோரது உள்ளத்தையும் கவர்ந்தவர்.ஒரு முறை கதைக்கும் போது 'எப்போது சிட்னிக்கு வருகிறீர்கள் தாரணி' என்று கேட்டேன்.அவ சொன்னா, நான் கட்டாயம் ஒருமுறை வரத்தான் வேண்டும் யசோ அன்ரி.ஏனென்றால் நான் வரும் போது என் வீட்டை நன்றாகப் பார்த்து விட்டு வந்தேன். ஆனால் கராஜ் இனைப் பார்க்க மறந்து விட்டேன். நான் வந்து ஒருமுறை அதனைப் பார்த்து விட்டுப் போக வேண்டும்.'என்றார்.

2 நாட்களின் முன் என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம்.ஒரு குடும்பக் கொண்டாட்டம் ஒன்றுக்காக என் சகோதரி சுவிஸ் நாட்டில் இருந்து பிள்ளகளை கல்வி நிமித்தம் அங்கு விட்டு விட்டு 2 வாரத்திற்கு வந்திருந்தார்.11 வயதும் 6 வயதும் நிரம்பப் பெற்ற அவர்களுக்குக் காலையும் மாலையும் தாயாரோடு பேசுவதற்கும் கேட்பதற்கும் நிறைய விடயங்கள் இருக்கும்.மணிக் கணக்காகவும் அது நீளும்.இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னாலும் இவ்வாறு தான் பேச ஆரம்பித்தார்கள். நாம் வெளியே செல்வதற்கு ஆயத்தப் பட்டிருந்தோம். அதனால் மகளிடம் என் சகோதரி சொன்னார்,'மகள் நான் land phone ல் இருந்து பேசுகிறேன். காசு நிறைய விரயமாகிறது.நான் பிறகு கதைக்கிறேன்' என்று சொல்ல, 'சரி அம்மா அப்ப நீங்கள் வையுங்கோ' என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்கள்.மாலையில் அவர்கள் எடுத்தார்கள், 6 வயது மகள் சகோதரியிடம் சொன்னாள்,'அம்மா, நீங்கள் காசில்லை என்று கவலைப் படாதைங்கோ.என்னிடம் நிறையக் காசிருக்கிறது அதனை அழகாக வண்ணக் காகிதத்தில் சுற்றி றிபன் எல்லாம் கட்டி நான் அதனை airportக்கு நீங்கள் வரும் போது கொண்டு வருகிறேன்.அது மிகவும் பாரமாக இருக்கும்' என்று சொன்னாளாம்.(சில்லறைக் காசுகள் என்பதால்)

பரிசுத்தமான இந்த குழந்தை மலர்கள் எல்லாம் உலகத்தின் உன்னதங்களின்றி வேறென்ன!

கடவுள் தந்த அழகிய வாழ்வு........

4 comments:

  1. தோழி,
    உங்கள் பதிவு உணர்வெழுச்சியடையச் செய்வதாய் இருந்தது. என் மகள் பற்றிய பதிவைக் குறிப்பிட்டதற்கு நன்றி.
    ஒரு சிறு தகவல்... பதிவு எடுக்கப்படவில்லை, என் மகள் கூறிய சிறு திருத்தங்களுடன் மறுபடியும் இடப்பட்டது.
    நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  2. மழலைகள் உலகமே தனி.
    அதில் நனைவதே ஆநந்தம் தான்.

    ReplyDelete
  3. நன்றி வாசு.வருகிறேன்.

    ReplyDelete
  4. நலமா சூர்யா?நேற்றய தினம் (11.04.09)மெல்போர்ன் இல் நடந்த எழுத்தாளர் விழாவுக்குச் சென்றிருந்தேன்.

    உங்கள் தேசத்தில் இருந்து (டென்மார்க்)ஜீவகுமார் என்று ஒரு எழுத்தாளர் 'இணையத்தில் இளையோரின் பங்களிப்புகள்' பற்றி உரை நிகழ்த்தினார்.உங்கள் வலைப்பூ பற்றி அவரிடம் குறிப்பிட்டேன்.

    அவரை நீங்கள் அறிந்ததுண்டா?'மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்' என்ற தலைப்பில் இளையோரின் கவிதைப் பதிவுகளைப் பதிப்பித்துள்ளார்.

    ReplyDelete