Sunday, May 3, 2009

பல்லினப் பண்பாட்டின் பாதை

புதிதாய் இங்கு குடியேறியோருக்காக!


1)திறந்த மனப் பாண்மை(OPEN MINDEDNESS):-

புதிய விடயங்களை அணுகுவதற்கும்,அறிந்து கொள்வதற்கும், பிடித்திருந்தால் பாராட்டுவதற்கும்,சிலவேளைகளில் ஏற்றுக் கொள்வதற்கும் மற்றவர்களுடய வாழ்க்கை பற்றிய இலக்கணங்களை இனங்கண்டு கொள்வதற்கும் அதன் பெறுமானங்களை நாம் வாழ்வு பற்றிக் கொண்டிருக்கும் பெறுமானங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்கும் பல தெரிவுகளில் இருந்து சரியான ஒன்றை தெரிவு செய்து கொள்வதற்கும் இந்த மனதைத் திறந்து வைத்திருக்கும் மன நிலை (open mindedness) உதவுகிறது.

2) நகைச்சுவை உணர்வு( SENSE OF HUMAR):-

எப்போதும் எல்லாப் பண்பாடுகளிலும் கோபம் கொள்வதற்கும் எரிச்சல் படுவதற்கும் அழுவதற்கும் வெட்கம் கொள்வதற்கும் பல விடயங்கள் உள்ளன.இவற்றை புறம் தள்ளி அக் காட்டமான நிலையிலிருந்து விடுபட இந்த நகைச்சுவையாக விடயங்களை எடுத்துக்கொள்ளும் மன நிலை நமக்கு உதவுகிறது.


3) தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலை( ABILITY TO COPE WITH FAILURE):-
எப்போதும் ஒரு புதுப் பண்பாட்டு வாழ்க்கை முறைக்குள் நாம் முற்றாகத் தள்ளப் படும் போது தோல்லி மனநிலை ஏற்படுவது சகஜமே.அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய்வருவோர் சிலவேளை இந்த இயல்பிலிருந்து வேறுபடலாம்.இந்தத் தோல்வி மனநிலை சில வேளைகளில் மிக முக்கியமாக இருக்கிறது. அது எங்களுக்கு சமாளித்து வாழும் மன நிலையைப் பயிற்றுவிக்கிறது.


4)தொடர்பாடல்(COMMUNICATIVENESS):-

பல பண்பாடுகள் இது விடயத்தில் பல குழப்பமான சிந்தனைகளையும் நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன.புதிய நாடொன்றில் இலகுவாக வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவர் தன்னுடய உணர்வுகளையும் சிந்தனைகளையும் தெளிவாக மற்றவருக்குப் புரியும் படி தெளிவுபடுத்தும் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.உதவிகளைப் பெறுவதிலும் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.தன்னுடய தேவைகளை உரியவாறு தெரியப்படுத்தும் போது தான் அதற்குரிய உதவிகளையும் சரியான முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.


5)எதற்கும் தயாரான மனநிலை(FLEXIBILITY AND ADAPTABILITY):-

புதிய பண்பாட்டு வாழ்க்கை முறையைச் சரியாக விளங்கிக் கொள்ளவும் சிலவற்றைக் சமாளித்துக் கொள்ளவும் சில விமர்சனங்களைச் சகித்துக் கொள்ளவும் மனதை இணக்கமான மன நிலையில் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.இது சிலவேளை நமக்கு பல காலமாக இணக்கமாக இருந்த ஒன்றை கேள்விக் குறியாக்குகின்ற விடயமாகக் கூட இருக்கலாம்.அவற்றுக்கு மனதைத் தயார் படுத்தி வைத்திருத்தல் நமது மனநிலைக்குப் பாதுகாப்பாகும்.


6) ஆர்வம்(CURIOSITY):-

இது மற்றவர்களுடய வாழ்க்கை முறையை,இடங்களை, புதுயுக்திகளை,இவை போன்ற பலவற்றை ஆராயத் தூண்டும்.புதிய நாடொன்றில் நிரந்தரமாய் இருக்க விரும்புவோருக்கு இத் திறமை வாழ்க்கையைத் திறம்பட நிலைநிறுத்த உதவும்.ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து பல புதிய நடத்தைகளையும் நிகழ்ச்சிகளையும் கண்டு அவர்களுக்குச் சரியெனப் பட்டது பற்றித் தெளிவான சிந்தனையைக் கொண்டிருப்பர்.



7) நடைமுறைக்கு ஒத்ததான எதிர்பார்ப்புகள்(POSITIVE AND REALISTIC EXPECTATIONS):-

புது நாடுபற்றி பல கனவுகளோடும் பல புதிய திறமைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வருவோருக்கு இது சற்றுக் கடினமாக இருந்தாலும் கூட அவற்றை அடைவதற்குக் காலம் எடுக்கும் என்ற நடைமுறை உண்மையை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.இது முக்கியமானதும் கூட.புது வாழ்க்கைக்குத் தன்னை பழக்கப் படுத்தும் படிமுறையில் மனநிலை அதி உச்சத்துக்கும் மிகத் தாழ்வுக்கும் மாறிமாறிச் செல்லுவது வழமை.ஆனால் அந்தச் சவால்களும் எதிர்மறையான சிந்தனைகளும் தான் அவர்களை உயர்வான நிலைக்கு இட்டுச் செல்லும் படிக் கற்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.


8) வேறுபாடுகளைச் சமாளித்தல்(TOLERANCE FOR DIFFERENCES):-

வேறுபாடான கருத்துக்களையும் வாழ்வு பற்றிய தனித்துவமான நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் மனிதர்களை சகித்துக் கொள்ளும் மனநிலையையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.அது மற்றவரைப் புரிந்து கொள்வதற்கு மாத்திரமன்றி நமது உள் மனதைப் பலப் படுத்தவும் உதவுகிறது.அதே நேரம்,வேறுபாடான தோற்றம், நடத்தை மற்றும் உணர்வுகள் கொண்டவர்கள் பாதுகாப்பை உணரவும் வைக்கிறது.அது நமக்கும் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும்.



9) மற்றவர்களைப் பற்றிய உடன்பாடான மன நிலை(POSITIVE REGARD FOR OTHERS):-

இது மற்றவர்களை நோக்கிய நமது மரியாதையை,நட்புறவை,இணக்கமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறான மனநிலை உள்ள மக்கள் விரைவில் மற்றவர்களின் கருத்தைக் கவருகிறார்கள்.ஒரு சிறு சம்பவம், ஒரு சிறு நடத்தை இதற்குப் போதுமானதாக இருக்கும்.


10) தன்னுணர்வு(SENSE OF SELF):-

தன்னை பற்றி தனக்கேயுரிய தனித்துவத்தை தெளிவாகவும் சிறப்பாகவும்அடையாளம் கண்டு அவற்றைத் தெளிவாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தும் ஒருவர் - தன்னுடய தெளிவான சிந்தனைக்காகத்- எழுந்து நின்று வாதாடத் தயாராக இருக்கும் ஒருவர் - மற்றவர்களுடய நம்பிக்கைகளைக் கொன்றுவிடாத பக்குவத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் - உறவு நிலைகளில் மற்றவருக்கும் அத்தகைய மனநிலையை அளிப்பார்.பலமும் பாதுகாப்பும் ஒருங்கு சேர அங்கிருக்கும்.

இங்கிருந்தே பல்லினப் பண்பாடு தோற்றம் பெறுகிறது. பண்பாடு வளம் கொள்கிறது.


Adapted from work by Laurette Bennhold - samaan and Storti,1996.
நன்றி: STARTTS.

1 comment:

  1. ஏற்கனவே குழம்பி்ப்யோயிருக்கிறன் அதுதோட இதுவும் என்றால் தாங்காது தாயே........

    ReplyDelete