Saturday, May 23, 2009

கோரிக்கைகள்

சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.ஊர்வலங்கள்,இணையம், வானொலி, தொலைக்காட்சி.. என எல்லாம் பார்த்தும் கேட்டும் சலித்த பின்னர் மனிதர்கள்,சத்தங்கள், வன்முறைகள், இரைச்சல்கள் என இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு மெளனமாகவும் அமைதியாகவும் நான் என்ன செய்யலாம் என்பது தான் எனது நீண்ட நாள் சிந்தனையாக இருந்தது.

செய்யலாம் என்று நினைத்த விடயங்கள் இரண்டு.

1) சிறிது பணத்தை சேமித்தும் தானமாய்ப் பெற்றும் நேரடியாக தமிழரின் முகாம்களுக்குச் சென்று சரியான தேவைகளைக் கண்டறிவதும் வேண்டிய சேவைகளை அவர்களோடு இருந்து கண்டுபிடித்துப் பெற்றுக் கொடுப்பதும்.

2) இரண்டு அனாதைத் தமிழ் குழந்தைகளைத் தத்தெடுத்து கொண்டு வந்து வளர்ப்பது.

அதன் ஒரு கட்ட நடவெடிக்கையாக நான் இணைந்து செயற்படும் S.T.A.R.T.T.S என்ற அமைப்பினூடாக (சித்திரவதை,உணர்வதிர்ச்சி என்பவற்றிலிருந்து உயிர் பிழைத்தோருக்கான சிகிச்சைக்கும் மறு வாழ்வுக்குமான சேவைகளை வழங்கும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பு)அவர்களது உள்ளார்ந்த கரிசனையினாலும் இன்று ஒரு சிறு கூட்டம் ஒன்றை கூட்டினோம்.அதில் கலந்து கொண்ட எலிசபெத் அம்மையார் மக்களிடமிருந்து அவர்கள் என்னவகையில் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள் என்ற விடயம் பற்றிக் கலந்துரையாடினார்.

இனிய அந்த எம் மக்கள் உணர்வு பூர்வமாகவும் கண்ணீரோடும் அக்கறையோடும் சொன்ன விடயங்கள் கல்மனதையும் உருகச் செய்வன.அவர்கள் கேட்ட கோரிக்கைகள் இவைதான்.

*சரியான தரவுகள் எடுக்கப்பட வேண்டும்.

*அவசர உதவி அளிக்கப் பட வேண்டும்.

*அனாதயாக்கப் பட்ட குழந்தைகளுக்கு நீண்ட கால உதவித்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்.

*மருந்து, உணவுப் பொருட்கள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*கடத்தல், கற்பழிப்பு,என்பன ஒழிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*உண்மை தடைகளின்றி வெளிவர ஆவன செய்யப்பட வேண்டும்.

*போர் குற்றங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

*சர்வதேசம் ஏன் மெளனமாக இருந்தது என்பதற்குப் பதில் வேண்டும்.

*மனப் பாதிப்புக்கான சேவைகள் உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*வெளி நாடுகளுக்கு உண்மை நிலையை நடு நிலை அமைப்புகளால் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

*மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக மக்களைச் சென்றடைய ஏற்பாடு செய்யப் படுவதோடு அரசுக்கு உதவிக்காகப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

*சர்வதேச நடுவு நிலைமையாளர்கள் அங்கு நிறுத்தப்பட வேண்டும்.

*தமிழரின் அடையாளங்கள் அழிக்கப்படுவதும் பண்பாடு சிதைக்கப் படுவதும் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

*பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு சரியான தீர்வு எட்டப் பட வேண்டும்.

இவற்றை எல்லாம் அக்கறையோடு அந்த அம்மையார் கேட்டுக் கொண்டார்.

இந்த இடத்தில் இந்த அமைப்பினைப் பற்றியும் சொல்வது பொருத்தமாக இருக்கும்.உளவள நிபுணர்களால் அழகு பெற்றிருக்கிறது இந்த அமைப்பு. பொதுவாக போர்ச் சூழல்களால் பாதிக்கப் பட்டு வந்தவர்களுக்கான மீள் வாழ்வினைக் கொடுக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.சுகாதார அமைச்சு இதற்கான நிதிஉதவியை வழங்கிவருகிறது.இப்போது மேலும் தம்மை சுதந்திரமாக இயங்க விடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு அதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது இறங்கி இருக்கிறது. அதற்கான காரணங்கள்

* அரசின் கொள்கைகளுக்கும் மனிதாபிமானத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதாக இவ்வமைப்பு கருதுகிறது.

* ஒவ்வொரு அரசும் மாறும் போது அவர்களின் கொள்கைகள் தம்மைக் கட்டுப் படுத்தக் கூடாது என்று இவ்வமைப்பு கருதுகிறது.

இவ்வமைப்பினை எவ்வளவு தூரம் சுதந்திரமாக இயங்க அரசு அனுமதிக்கும் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாவிட்டாலும் இது கஸ்ரப்படும் மனிதர்கள் பால் கொண்டிருக்கும் கரிசனை சற்றே ஆறுதல் தரக்கூடியது.

இறுதியாக எலிசபெத் அம்மையார் பேசும் போது,தான் இது விடயமாகத் தன் மேலிடத்தோடு பேசுவதாகவும்;விரைவில் தமிழ் தலைவர்களோடு ஒரு திறந்த வெளிக் கூட்டம் ஒன்றக் கூட்டி தாம் செய்யக்கூடிய விடயங்கள் பற்றி கலந்துரயாடுவதாகவும்;உண்மைக்காக சர்வதேசத்தின் காதுகளைத் திறப்பதற்கான அனைத்து விடயங்களையும் தம் அமைப்பு மேற்கொள்ளும் எனவும்;அரசுக்கு அதற்கான அழுத்தங்களைத் தம் அமைப்பு கொடுக்க இயலும் எனவும் கூறினார்.

மேலும், அவுஸ்திரேலிய தொலைத்தொடர்பு சாதனங்களோடு( வானொலி, தொலைக்காட்சி,பத்திரிகை) சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறு அணுகவேண்டும் என்பது பற்றிய அறிவுரகளையும் ஆலோசனைகளையும் தம்மால் வழங்க இயலுமெனவும்; அது ஒரு வெற்றிகரமாக தொடர்புசாதனங்களை எமக்கு சார்பாகப் பயன்படுத்துவதற்கு மிக முக்கியம் என்பது பற்றியும் கருத்துத் தெரிவித்தார்.

அத்தோடு எம் மனக்குறைகளை உள்ளார்ந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டதே மன ஆறுதலைத் தரத்தக்க அம்சமாக இருந்தது.

கண்ணீரோடு பலர் விடைபெற்றுக் கொண்டனர்.

நாமும் தான்.

(மேலதிகமாக இவ்வமைப்பினைப் பற்றி அறிய www.startts.com)

No comments:

Post a Comment