Thursday, July 2, 2009

அறிவின் விழிப்பு - முருகையன் -

27.06.2009 அன்று காலமான கவிஞர் முருகையன் அவர்களின் நினைவாக!

நான் யாழ் வளாகத்தில் கற்றபோதும்; வேலை செய்த போதும் பதிவாளராகக் கடமையாற்றியவர்.உருவத்தில் சிறியவராகவும்; சுபாவத்தில் அமைதியானவராகவும் விளங்கியவர்.உணர்வுகளை வென்றவராக அவர் விளங்கினார்.அதனால் போலும் சர்ச்சைகள் அவரிடம் சொந்தம் கொண்டாடியதில்லை.

அவர் தமிழுக்குத் தந்த கவிதை இது!!!
ஈழத் தமிழருக்கு விட்டுச் சென்ற அவரின் சிந்தனைச் செல்வத்தில் ஒன்று!!



இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைய சுமை எங்களுக்கு



இரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு

மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின்முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள்பயணம்.
தேட்டம் என்று நம்பி,சிதைந்த பழம் பொருளின்
ஓட்டை,உடைசல்,உளுத்த இறவல்கள்,
பீத்தல்,பிறுதல்,பிசகி உதிர்ந்தவைகள்,
நைந்த கந்தல்- நன்றாக நாறிப் பழுதுபட்டு
சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை -
இப்படி யான இவற்றையெல்லாம் சேகரித்து
மூட்டைகட்டி, அந்த முழுப்பாரம் கண்பிதுக்கக்
காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.

மூட்டை முடிச்சு முதலியன இல்லாதார்
ஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும்.
பாதை நடையின் பயணத் துயர் உணரா
மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள்.
ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள்.

மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள்
பற்றி, முயன்று, பகை களைந்து,மேலேறி
விண்வெளியை எட்டி வெளிச்செல்லு முன்பாக
மண்தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும்,
வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும்
ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும்
நெஞ்சம் இசைந்தார்.
நிகழ்த்தினார் நீள்பயணம்.

பின் முதுகில் பாரப் பெருமை இல்லாதவர்கள்
இத்தனையும் செய்தார்.
இனியும் பல செய்ய
எத்தனிப்போம் என்றார்.
இவை கண்டும்,
நாமோ
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும்
சற்றே இறக்கிச் சலிப்பகற்றி, ஓய்வு பெற்றுப்
புத்தூக்கம் எய்திப் புறப்படவும் எண்ணுகிலோம்.

மேலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக்
கொட்டி உதறி, குவிகின்ற கூழத்துள்
வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி,
அப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதோ
சற்றேனும் இல்லோம்.
சலிப்பும் வலிப்பும் எழ,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த,
ஊருகிறோம்;ஊருகிறோம் - ஓயாமல் ஊருகிறோம்.

பரந்த உலகோர் பலரும், சுமையைச்
சுருங்கும் படியாகக் குறைத்துச் சிறிதாக்கிக்
கைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில்,
வெற்றுக்கை கொண்டும் வியப்புகள் ஆக்குகையில்,
புத்தி நுட்பம்,செய்கை நுட்பம்,போக்கு நுட்பம் என்பவற்றால்
சித்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில்,
நாங்கள் எனிலோ நலிந்து மிகவிரங்கி,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர் படுத்த
ஊருகிறோம்,ஊருகிறோம் - ஓயவில்லை,
ஊருகிறோம்.

வேண்டாத குப்பை விலக்கி,மணி பொறுக்கி
அப்பாலே செல்லும் அறிவோ குறைவு
ஓ!
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;
பண்பாட்டின் பேரால் பல சோலி எங்களுக்கு.



"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து....

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!
அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

2 comments:

  1. அவரது மறைவு சொல்லி மாளாது.
    (..நீங்கள்....ம்..ம்...ம்...!)
    ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...!
    எனது மாணவியாக இருக்க சான்ஸ் இருக்கு.
    I dont have to show myself in big screen but,
    I like to remember my cute students.
    1980..1984 I was there.

    ReplyDelete