Wednesday, April 21, 2010

சொல்லக் கூடாத ஒன்பது விடயங்கள்


ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று யாரிடமும் சொல்லக் கூடாத விடயங்கள் என்று ஒன்பது விடயங்களைப் பட்டியலிட்டிருக்கிறது."ஸூபாஷித ரத்ன பாண்டாகாரம்" என்பது அந்த ஸ்லோகம் காணப்படும் நூலின் பெயர்.ஸ்லோகம் இது தான்.

"ஆயுர்விருத்தம்,க்ருஹசித்ரம்,மந்த்ர மெளஷத மைதுனே,
தானம், மானாப, மானெளச நவ கோப்யானி காரவேத்".

இதன் பொருள் என்னவென்றால்,தனது வயது,சொத்து,சிறந்த மந்திரம்,நல்ல மருந்து,கணவன் மனைவியின் ப்ரியம்,மற்றும் வீட்டில் நடந்த சண்டை,தானம்,தனக்கேற்பட்ட புகழ்,மற்றும் அவமானம்,இந்த ஒன்பது விடயங்களையும் ஒருவருக்கும் கூறக் கூடாதாம்.(நன்றி தினக்குரல்.)

பொதுவாகப் பெண்களிடம் வயதையும் ஆண்களிடம் வருமானத்தையும் கேட்கக் கூடாது என்று கூறுவார்கள்.இப்போது பெண்களும் வேலைக்குப் போவதாலும், ஆண்களும் இளைமையோடு(!?) இருப்பதாலும் அதனை இருபாலாரிடமும் கேட்காதிருப்பதே நல்லது போல் தோன்றுகிறது.

சிறந்த மந்திரமும் நல்ல மருந்தும் சொன்னால் என்ன? நல்லது தானே! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மகிழ்ந்திருப்பது ஏன் கூடாது?

கணவன் மனைவியின் ப்ரியம், மற்றும் சண்டைகளை வெளியே சொல்வதைத் தவிர்த்தலே பல வேளைகளில் நலம் போலத் தோன்றுகிறது.குடும்பப் பிரச்சினைகள் சில,பல வேளைகளில் பெரிதாவது பிறரின் தலையீடுகளால் தானே!ஒரு பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது.கணவன் மனைவி இருவரும் கத்திரிக்கோல் மாதிரியாம்.அடிக்கடி எதிர் எதிர் பக்கமாக இயங்குவார்களாம். ஆனால் யாரையும் இடையில் வர விட மாட்டார்களாம்.:)மூன்றாவது மனிதர்கள் அதனைப் புரிந்து கொள்வது நல்லது.

மற்றும் தானம், புகழ், இவற்றைச் சொல்லாது இருப்பதால் யாருக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது? சொல்லாதிருப்பது பெருந்தன்மையன்றோ!

இறுதியாக அவமானம். அதனை நீங்கள் சொல்லவே வேண்டியதில்லை. அது தன் பாட்டில் வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கே தெரியாத விடயங்களை எல்லாம் சொல்லித் தரும்.

பண்டைய பாரதம் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது இதை.

1 comment:

  1. சிறந்த மந்திரமும் நல்ல மருந்தும் சொன்னால் என்ன? நல்லது தானே! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மகிழ்ந்திருப்பது ஏன் கூடாது?

    ReplyDelete