Wednesday, June 30, 2010

சர்க்கஸ் கோமாளிகளும் சனங்களும்

நேற்றய தினம் வேலை முடித்து களைத்து வீடு திரும்பி தபால் பெட்டி துளாவிய போது கைக்குக் கிட்டிய புத்தகம் காசோ பேச்சுவார்த்தையோ எதுவுமில்லாமல் லக்ஷ்மி அனுப்பியிருந்த 'உயிர்நிழல்'

இன்றுகாலை அதிலிருந்து ஒரு 'பதச்சோறு'



முகப்பூச்சு வேட உடை ஒப்பனையுடன்
கோமாளிகள் கூத்துத் தொடங்கி விட்டார்கள்

கூடாரமடித்து
மேளம் கொட்டி
சனத்தைக் கூட்டி
கோமாளிகள் கூத்துத் தொடங்கி விட்டார்கள்

கோமாளிகள் கூத்தைப் பார்ப்பதற்கு
யாருக்குத் தான் ஆசை இல்லை?
கண்கள் விரித்து ஆச்சரியப் படுகிறார்கள்
கைகொட்டிச் சிரித்து ஆரவாரிக்கிறார்கள்

கயிற்றில் தொங்கும் கோமாளியின்
காற்சட்டையைத் துளாவுகிறான் ஒரு கோமாளி
கொட்டாவி விட்டவனின் வாயில்
கையோட்டுகிறான் இன்னொரு கோமாளி
பீப்பாவில் வைத்து உருட்டித் தள்ளுகிறான்
மற்றொரு கோமாளி
எல்லாக் கோமாளிகளும்
குரங்குகள் போல் குத்துக் கரணமும் அடிக்கிறார்கள்.

கோமாளிகள் கூத்தைப் பார்த்து
சனங்கள் சிரிக்கிறார்கள்
கோமாளிகள் கூத்தைப் பார்த்து
சனங்கள் கை கொட்டுகிறார்கள்
கோமாளிகள் கூத்தைப் பார்த்து
சனங்கள் காசு கொடுக்கிறார்கள்

கூத்து முடிய
கோமாளிகள்
வேட உடை களற்றுவர்
வெளியே வருவர்
இன்னும் கூத்துத் தொடரும் என்பர்

கண்கள் விரிய
கைகொட்டிச் சத்தமிட்டு
காசு கொடுப்பதற்கு
இன்னும் இன்னும்
இந்த ஏமாளிச் சனங்கள்
காத்திருக்கிறார்கள்.



நன்றி: துவாரகன்.

உயிர்நிழல் இதழ் 32 பக்;26.

Tuesday, June 22, 2010

ஒரு புதினம்;மேலும் ஒரு பதிவு


நேற்றய தினம் சற்றே வெய்யில் எறித்த குளிர் காலை நேரம்.எனக்கு விடுமுறை நாள்.கொஞ்ச நாளாய் சேலைகளிலும் மப்ளர்களிலும் ஏற்பட்டிருக்கிற தீவிர ஆர்வத்தின்(!)பயனாக பேரங்காடிகளில் இருக்கும் Tree of life என்ற இந்தியக் கலைப் பொருட்கள் மற்றும் இந்தியப் பாரம்பரியப் பொருட்கள் விற்கும் கடைக்குப் போவதாகத் தீர்மானித்திருந்தேன்.அங்கு சற்று விலைகள் அதிகமே எனினும் அக்கடை அலங்கரிக்கப் பட்டிருக்கும் விதமும் அங்கிருந்து வரும் இந்திய ஊதுபத்தியின் நறுமணமும் அவுஸ்திரேலியப் பெண்கள் உடுத்தியிருக்கும் இந்திய ஆடைகள், பொட்டுகள் அவர்களுக்குக் கொடுக்கின்ற அபூர்வமான அழகும் அவர்களது இந்திய உபசரிப்பும் இந்திய தத்துவ ஞானத்தையே அள்ளி வீசுவதைப் போல இருக்கும்.பேரங்காடிகளின் சலசலப்புகளுக்கு மத்தியில் அது மட்டும் தனக்குரிய அழகோடு தனித்து நிற்கும்.அது அக்கடைக்கென ஒரு தனிக் களையையே கொடுக்கும்.கடை அலங்கரிக்கப் பட்டிருக்கும் விதம் கூடத் தனிச் சோபையுடன் விளங்கும்.

விரும்பிய மனதுக்குப் பிடித்த மிக அழகான $20 டொலர்களுக்கு விற்கும் மப்ளர்கள் அன்று $6.95 டொலர்களுக்கு விற்பனையானது அதிசயத்திலும் அதிசயம்.எனக்கும் அக்காவுக்கும் அம்மாவுக்கும் தோழிமாருக்கும் என வாங்கியது மனதுக்கு நிறைவைத் தந்தது.அது பெண்களுக்கே உரித்தான மகிழ்ச்சி.அது தனி!

வருகின்ற வழியில் மயூரி என்ற இந்திய உடுப்புக் கடை புதிதாகத் தென்பட்டது. சரி அங்கு என்ன தான் இருக்கிறது பார்ப்போம் என்று போனால் 25 வருடங்களுக்கு முன்னால் வந்து போன இந்திய சேலைகளின் மீள் வருகை!என்னே அதிசயம்! எனக்குப் பிடித்தமான வடிவங்கள்! வண்ணங்கள்!!சேலைகளின் தெரிவில் நான் மொடேர்ன் பெண்ணல்ல. கடைசி யாக வந்த வடிவங்கள் என்பதால் நான் சேலை வாங்குவதில்லை.பிடித்திருந்த நிறம் மற்றும் துணியின் தரம்,வடிவங்கள் என்றால் மட்டும் தான் வாங்குவதுண்டு.

1995 யாழ்ப்பாணப் புலப் பெயர்வின் போது 2 விடயங்களை விட்டு விட்டு வந்ததில் இப்போதும் வருத்தம் எனக்கு.ஒன்று சனிக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருந்த திசைகள் என்றொரு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த மிக அருமையான கட்டுரைகள் பலவற்றை வெட்டி ஒட்டிச் சேகரித்து வைத்திருந்தேன்.அதனை விட்டு விட்டு வந்ததும்;இந்தக் குறிப்பிட்ட ஒரு சேலையை விட்டு விட்டு வந்ததும்.இன்று அதனை விடத் தரமானதும் அழகானதுமான சேலையைக் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எல்லாம் வாங்கியாயிற்று.மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கைகள் நிறைந்த பொருட்களோடும் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.நான் வசிக்கின்ற தொடர்மாடிக் குடியிருப்பை நெருங்கிக் கொண்டிருந்த போது வீதிப் பொலிஸார் வீதிப் போக்குவரத்தைத் துண்டித்து இருந்தார்கள்.சற்றே பதட்டம் ஏற்பட்டது.என் காரும் நிறுத்தப்பட்டது.கண்ணாடி இறக்கி என்னவென்று கேட்டபோது தென்பட்ட இலங்கை அவுஸ்திரேலியனின் பொலிஸ்முகம் மிக வசீகரமாய் இருந்தது.இள நீல சேட்டும் கடும் நீல நிற கீழாடையும் கொண்ட சீருடை பொது நிறம் கொண்ட அம்மனிதருக்கு கச்சிதமாக இருந்தது.புன்னகையோடு பின்வாங்கச் சொன்னான்.அவன் முகம் நெஞ்சில் பதியப் பின் வாங்கினேன்.

தூரத்தில் கார் நிறுத்தி அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்ற போது நம் குடியிருப்பாளர்களோடு நம் வீட்டுக்காரரும் அங்கு நின்றிருந்தனர்.விடயம் என்னவென்று கேட்டால் சமயலுக்குப் பயன்படுத்தும் உயிரியல் வாயு எங்கோ பாரதூரமாக வெளியேறுவதாகவும் அதனால் எல்லோரும் வெளியேற்றப் பட்டிருப்பதாகவும் தகவல் கிட்டியது.

பூங்காவில் குழந்தைகள் ஓடி விளையாட ஆரம்பித்தனர். தாய்மார் துரத்திப் பிடிக்கத் தொடங்கினர். இளம் பெண்கள் தம் கணவர்மாருடன் தொலைபேசினர்.வயதானவர்கள் இருக்கைகளில் கவலை தோய அமர்ந்திருந்தனர். எல்லோரும் அவரவர் வீட்டு ஆடைகளுடன் வந்திருந்தனர்.ஓர் இளம் சிங்களப் பெண் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல ஆடியபடி இருந்தாள்.நம் வீட்டார் அவளைக் காட்டி அவள் தான் எல்லோரையும் அவரவர் வீடுகளுக்குரிய பொத்தான்களை அமத்தி எல்லோரையும் வீட்டை விட்டு வெளியேறும் படி பதட்டத்தோடு கத்தியதாகத் தெரிவித்தார்கள்.

அவளோ ஒன்றும் நடக்காதது போல உல்லாசமாக மெல்ல மெல்ல ஊஞ்சலாடி அதன் சுகத்தில் லயித்திருந்தாள். சும்மாவே உம்மணா மூஞ்சியவள். சந்திக்கின்ற பொழுதுகளிலும் சிரிக்காதவள்.இலங்கையின் கண்டி மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவளாக அவள் இருக்க வேண்டும்.அழகான சிவந்த சிங்கள முகம்.செல்வத்தினதும் மகிழ்ச்சியினதும் சாயை அவளில் எப்போதும் விகசித்திருக்கும்.சந்திக்க நேர்கின்ற சந்தர்ப்பங்களில் அவள் சிரித்தால் இன்னும் அழகாயிருப்பாள் என்று தோன்றுமெனக்கு.நான் தமிழ் என்பதால் அந்தப் பாராமுகமோ என்றும் சில வேளைகளில் தோன்றுமெனக்கு. அவளது 17ம் இலக்க தபால் பெட்டிக்குள் Thank you card வாங்கிப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சில நிமிடங்களில் நீலக் கண்களைக் கொண்ட பெண் பொலிஸ் எம்மை நோக்கி வந்தார்.வாயுக் கசிவு நிறுத்தப் பட்டிருப்பதாகவும்; இன்னும் 20 நிமிடங்களில் பரவி இருக்கின்ற வாயுவின் மணம் அகன்று விடுமெனவும்; யாரோடும் தொலை பேசவேண்டுமெனில் தன்னிடம் இருக்கின்ற தொலைபேசியைப் பாவிக்கமுடியுமெனவும்; வீட்டுக்குப் போனபின் கதவு ஜன்னல்களைத் திறந்து விடுமாறும்; உங்கள் கட்டிடப் பொறுப்பாளர்களுக்கு தொலைபேசியில் நிலைமையைத் தெரிவிக்கும் படியும் கூறிப் போனாள்.

ஆயிற்று. வீடு வந்து செய்யவேண்டிய எல்லாம் செய்தாயிற்று.எழுதி வைத்திருந்த பதிவையும் பிரசுரம் செய்தாயிற்று.இன்றைய நாளைப் பதிவதா வேண்டாமா என்ற போராட்டத்தின் பின் வேண்டாம் என்று அதனைப் புறக்கணித்தேன்.மனதில் இன்னும் சொல்ல ஏதோ மிஞ்சி இருந்தது.சமையல் செய்ய முடியாது.சுடுநீர் 24 மணி நேரத்துக்கு இல்லை.

அந்த இலங்கை அவுஸ்திரேலியப் பொலிஸின் வசீகரம் காரணம் ஏதுமின்றி நெஞ்சில் நிழலாடிற்று.சினேகமான முகமது.காயங்களுக்கு மருந்திடும் கண்கள்.'எப்பிறப்பில் காண்போம் இனி'என்று தோன்றும் நினைபை அசட்டை செய்த போதும் அந்த மனிதன் இலங்கையராகவே இருக்கவேண்டும் என்று மனம் அடித்துச் சொல்லிற்று.கிட்டத் தட்ட ஒருமணி நேரம் கழிந்தது. அழைப்புமணி அடித்தது. என்னவென்று கேட்டபோது பொலிஸார் கீழே வருமாறு அழைப்பது கேட்டது.அவசரமாய் கீழே இறங்கிக் கதவைத் திறந்தபோது அதே இலங்கைப் பொலிஸ்.

பக்கத்தில் நின்ற பொலிஸைப் புறக்கணித்து இருவருக்கும் இயல்பாய் விரிந்தது புன்னகை.
பக்கத்தில் நின்ற பொலிஸ் விபரங்கள் கேட்டது.பெயர்;சொன்னேன். பிறந்த திகதி; சொன்னேன். தொலைபேசி இலக்கம்; சொன்னேன்.நீண்ட எனது பெயரைச் எழுத்து எழுத்தாகச் சொன்னபோது சரியாக அதனை மீண்டும் சொல்லி சக பொலிஸாருக்கு உதவினான்.என் பெயரை அழகாய் யஷோதா என உச்சரித்தான்.

பின் புன்னகைத்து விடைபெற்றான்.

மனம் குதூகலிக்கிறது.அன்றைய திகதி 22.06.2010.
இன்று மறுநாள் காலை.

இது பெண்மொழி;கடல் அலை ஒன்றின் மொழிபெயர்ப்பு.

பழ விழா

கொண்டாட்டங்கள் தான் எத்தனை விதம்!எத்தனை ரகம்!!

விளையாட்டுக்கள்;ஆரவாரங்கள் என்று மகிழ்ந்திருக்கும் ஒரு கூட்டம்.

இசையில்,கலையில்,பயிலலில் லயித்திருக்கும் ஒரு கூட்டம்.

நவீன ஆடைகள்,அணிகலன்கள், விருந்துகள்,தொழில்நுட்பம்,என்று திளைத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.

பதவிகள்,விருதுகள்,விழாக்கள்,மக்கள்,ஆரவாரம் என ஓடித்திரியும் இன்னொரு கூட்டம்.

எழுத்து,சமூகமாற்றம்,மானுட முன்னேற்றம், என்று மகிழ்ந்திருக்கும் வேறொரு கூட்டம்.

அரசியல், உரிமை, சமத்துவம்,மக்கள் என்று தீவிரமாய் ஓடித்திரியும் இன்னொரு உலகம்.

இயற்கையில்,திறமையில்,சேவையில் கொண்டாட்டம் காணும் இன்னொரு மனிதக் குழு.

எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம்.


அரசாங்கமோ எனில் தன் இராணுவ வல்லமையைக் உலகுக்குக் காட்டிப் பயமுறுத்திக் 'கொண்டாடிக்' கொண்டிருக்கிறது.

இடைக்கிடை இயற்கையும் நானும் இருக்கிறேன் என்று தன் பங்குக்கு 'கொண்டாட்டக்' குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இவர்களை எல்லாம் பேசிக்கொண்டு உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது ஏதாவது செய்தாகவேண்டும் என்று கத்திக் கொண்டிருக்கிற கூட்டத்தை யாரும் கண்டு கொள்வதாக இல்லை.

அவரவர் உலகில் அவரவர்.


இந்த வாரம் பதிவு போட என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது வந்த மின் தபால் ஒன்று சில படங்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தது.

அது நெதர்லாண்ட் நாட்டுப் தோடம்பழ விழா!

தக்காளிப்பழங்களால் சேறு உண்டாக்கி அதனுள் மூழ்கி எழுந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது ஸ்பெயின்.தோடம்பழங்களால் தன்னை அலங்கரிக்கிறது நெதர்லாண்ட் நாடு.தீபங்களால் வீட்டை அலங்கரித்து அதனைப் புனிதமாய் கொண்டாடுகிறது பாரத நாடு.இலங்கையோவெனில் ஒளிப்பந்தல்களால் நாட்டையே அலங்கரித்து மகிழ்கிறது.வசந்தகாலத்து முழு நிலா நாள் ஒன்றில் குழந்தைகளின் கைகளில் வண்ண காகிதங்களால் செய்யப் பட்ட விளக்குகளை கொடுத்து மின்சாரமில்லா அவ்விரவில் நிலா கேக் உண்டு மகிழ்கிறது வியட்னாம் நாடு.அலி மக்களின் அலங்காரப் பவனி சிட்னியில் பிரசித்தம்.

நத்தார் புதுவருட நாட்களில் உலகமே ஒளியிலும் பரிசுகளிலும் மகிழ்ந்திருக்கும்.

இது நெதர்லாண்ட் நாட்டுப் தோடம்பழ விழா!!


















அழகாய் தான் இருக்கிறது.ஆனால் சொல்ல மறந்து போன விஷயம்!
வறுமையிலும் பசியிலும் இல்லாமையிலும் இறந்து கொண்டிருக்கிறதாம் ஒரு கூட்டம்.

Wednesday, June 16, 2010

பிரபல புகைப்படங்கள்


அடித்துக் கொலை செய்யப்பட்ட கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த மன நிலை பாதிக்கப்பட்ட சிவகுமார் என்ற இஞைஞனின் இப்புகைப்படம் சிங்கள இனத்தவரின் கொலை வெறியை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக் காட்டியது.அவன் செய்த ஒரே ஒரு தவறு ரயிலுக்குக் கல்லெறிந்ததே!



உலகுக்கு அமெரிக்காவின் முகத்திரையைத் தோலுரித்துக் காட்டியது இப்புகைப்படம்.சிறைப் பிடிக்கப்பட்ட ஈராக்கிய இளைஞர்கள் சிறைச்சாலைகளில் நடத்தப்படும் விதம் குறித்த இதனோடு சார்ந்த புகைப்படங்களும் வீடியோக் காட்சிகளும் உலகுக்கு அமெரிக்காவின் மனிதாபிமானத்தை அம்பலப் படுத்தியது.



நிக் உட் என்பவர் எடுத்த இப் புகைப்படம் அமெரிக்க போர் வெறியை நிறுத்திய வலிமை வாய்ந்தது.போரின் போது சாலையில் நிர்வானமாக ஓடி வரும் வியற்னாமியச் சிறுமியின் பெயர் கிம் புக்.

இதற்கே திரண்டு நின்றிருந்தது அன்று அமெரிக்கா.


மைக் என்பவரால் உகண்டாவின் வறுமையைப் பதிவு செய்த புகைப்படம் இது.1980ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதினை அதற்கு விண்ணப்பித்திருக்காத போதும் விருதினைப் பெற்றுக் கொண்ட புகைப்படம் இது.ஆனால் பசியினால் இறந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தையும் வெள்ளை விரல்களின் செழுமையையும் புகைப்படம் எடுத்தது விருது பெறுவதற்கல்ல என்று விருதினை நிராகரித்தார் மைக்.


பச்சைக் கண்களைக் கொண்ட இப்பெண்ணின் புகைப்படம் முதன் முதல் நஷனல் ஜியோகிரபி என்ற சஞ்சிகையில் புகைப்படமாக வந்தது.அசாத்திய உணர்வுகளைக் கொண்டிருக்கும் இப் பெண்ணின் கண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குரியது.இப்படம் எடுக்கப் பட்ட போது அவளுக்கு வயது 12.பொதுவாக ஆப்கானிஸ்தான் பெண்கள் எப்போதும் பர்தா அணிந்து காணப்படுவார்கள்.அதனால் அவர்களது முகங்கள் எப்போதும் மூடப்பட்டே காணப்படும்.இந்தப் பெண் பர்த்தாவை விலக்கிய ஒரு கணத்தில் எடுக்கப்பட்டது இப்புகைப்படம்.இப்பெண்ணின் பெயர் ஷர்பத் குலா.1992ல் இப்பெண் அகதி முகாமில் படித்துக் கொண்டிருந்த போது இப்படம் எடுக்கப் பட்டது.

இப்போது அவள் மூன்று குழந்தைகளின் தாய்.கண்களில் தொனிக்கும் ஏதோ ஒரு வீரியத்துக்காக இப்புகைப்படம் பிரபலமனது.


இது அமெரிக்க தங்குமிடமொன்றில் அமைக்கப் பட்டிருந்த குடி நீர் வசதி.வெள்ளையர்கள் குடிக்கவென்று தனியான இடமும் கறுப்பர்கள் குடிக்கவென தனியான இடமும் அமைக்கப் பட்டிருப்பது மாத்திரமல்ல வெள்ளையர்கள் குடிக்கப் பயன் படுத்திய பின் கழிந்தோடும் தண்ணீர் குளாய் வழியாக வந்து கறுப்பினத்தவர்களுக்குச் செல்கிறது.

இந்தப் புகைப்படமும் பல உண்மைகளை வெளியுலகுக்கு அம்பலப் படுத்தியது.


இப் புகைப்படம் ஆபிரிக்கக்கண்டத்தின் வறுமையை உலகுக்குப் படம் பிடித்துக் காட்டியது.எழுந்து நிற்க வலுவின்றி ஈரமெல்லாம் வற்றி மயங்கிய நிலையில் இருந்து இறக்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் சூடான் நாட்டுக் குழந்தை ஒன்றை தின்பதற்குக் காத்திருக்கிறது பருந்து ஒன்று.

இதனைப் படம் பிடித்தவர் கெவின் காட்டர் என்பவர்.இந்தப் புகைப்படத்துக்கு புலிட்சர் விருது கிடைத்தது.ஆனாலும்,இன்னொரு பருந்தினைப்போல் காத்திருந்து படம் எடுத்தார் என்ற விமர்சனம் அவர் மீது பலத்த எதிர்ப்புணர்வோடு வைக்கப் பட்டதால் இளகிய மனம் கொண்ட கெவின் காட்டர் அதன் பின் தற்கொலை செய்து கொண்டார்.

Tuesday, June 8, 2010

YouTube - Airtel Super Singer Junior2, 03 11 2009 Alka Ajith

கடந்த சில வாரங்களாகப் பார்த்து வரும் 'சுப்பர் சிங்கர் யூனியர் 2' என்ற நிகழ்ச்சியப் பார்க்க ஆரம்பித்த பின் அச் சிறுவர்களின் திறமையில் அதிசயித்து நெற்றில் தேடி முதல் முயற்சியாக இதனை இங்கு தருகிறேன்.

YouTube - Airtel Super Singer Junior2, 03 11 2009 Alka Ajith


(மேலுள்ள ஆங்கில வரி வடிவத்தை அழுத்திப்(டபிள் கிளிக்) பாடலைக் கேட்கலாம்.இது முதல் முயற்சி என்பதால் கேட்க முடிவதில் சிரமமிருந்தால் அறியத் தரவும்.)


ஒரு மான் குட்டியின்
பூங் குயிலின்
வனக் கிளியின்
ஒரு மரகத வீணையின்
குரலிசை இது.

Wednesday, June 2, 2010

குழந்தைமை

30.05.2010 மாலை திரு. பாஸ்கரன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் எழுத்தாளர் திரு.எஸ்.ரஞ்சகுமார் அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அம்பி உணவகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.மெல்போர்னில் நடைபெற்ற (22.05.2010) எழுத்தாளர் விழாவில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றுக் கொண்டவர் இவர் என்பதும் கோசலை,மோகவாசல் என்ற கதைகள் மூலமாக ஈழத்து மக்களுக்குப் பரீட்சியமானவர் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அவரிடம் கொடுத்தனுப்பப் பட்டிருந்த எழுத்தாளர் விழாவில் வெளியிடப் பட்ட 'பூமராங்'என்ற புத்தகத்தை சகோதரன்.கானா.பிரபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.அடுத்தநாள் காலை தந்தையோடு வைத்திய நிலையத்தில் வைத்தியருக்காகக் காத்திருந்த நிமிடங்களில் வாசித்து முடித்த கதை ஆழியாள் எழுதிய 'ஒரு குட்டி இளவரசியுடனான வானவில் நாட்கள்'அதனைக் கதை என்று சொல்வதை விட ஒரு அனுபவப் பகிர்வென்றே சொல்லலாம்.

குழந்தைகளுடனான அனுபவங்கள் எப்போதும் சுவாரிஸமானவை.ரம்யமானவை.வியக்கவைக்கும் கற்பனைகள் நிரம்பியவை.அழகுவாய்ந்தவை.ஆழியாள் அக்கதையை இவ்வாறு முடிக்கிறார்.ஒரு குழந்தையுடனான அவரின் உரையாடல் இவ்வாறு தொடர்கிறது.

'....உனக்கு எந்த மாதிரியான நாள் பிடித்தமானது என்று கேட்கிறேன்.நீலமாய் ஆகாயம் தெரியும் நாட்களில் உனக்கு விருப்பம் என்கிறாய்.அதனால் தான் உன் சாப்பாட்டுத் தட்டத்திலும் அந்த நிறம் இருக்கிறது என்கிறாய். பிறகு நீல வானத்தை விடவும் கடும் நாவல் நிற வானில் வெள்ளி நிறத்து நட்சத்திரங்கள் மின்னும் நாள் தான் உனக்கு விருப்பம் என்கிறாய்.அப்படியான வானத்தை நீ பார்த்திருக்கிறாயா என்று என்னிடம் கேட்கிறாய்.இது வரை நான் பார்க்கவில்லை.உன்னைப் போலவே நானும் கடும் நாவல் நிற வானில் வெள்ளி நிறத்து நட்சத்திரங்கள் மின்னும் நாளைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன் என்றேன்.நீ சிரிக்கிறாய்.சில வாய்கள் மேலும் சாப்பிட்டு விட்டு மீண்டும் சிரிக்கிறாய்.இரவுகளில் நித்திரை கொள்ளப் போகும் போது கடும் நாவல் நிற வானையும் ஒளிரும் நட்சத்திரங்களையும் நினைத்துக் கொண்டு தூங்கினால் கனவில் அவை வந்து எம்மைக் குஷிப்படுத்தும். கனவில் தான் அது நடக்கும். உண்மையில் அதற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை என்றாய்.ஏன் அப்படிச் சொல்கிறாய் என்றேன்.அப்படிக் காத்திருப்பவர்கள் முட்டாள்கள் என்றும் அதனால் தான் அவர்கள் தலையில் வெள்ளிகள் தோன்றி கண்கள் பூஞ்சையாகிப் போகின்றன என்றும் என் நரைத்த தலையைப் பார்த்துச் சொன்னாய்.'

எவ்வளவு அழகாயிருக்கிறது இந்தக் குழந்தைகள் உலகம் என்று பாருங்கள். இப்படித்தான் சுமார் 3 வருடங்களின் முன்னால் ஆண்டு 4 வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் பாடத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை அவ்வகுப்பு ஆசிரியர் விடுமுறையில் போனதால் எனக்கு வாய்த்தது.ஒரு நாள் உங்களுக்குப் பிடித்தமான விடயம் பற்றி 10 வசனங்கள் எழுதுமாறு கேட்டேன்.ஒரு சிறுவன் எழுதியிருந்தார்.இப்படி,

எனக்கு சித்திரம் விருப்பம்.
எனக்கு மிருகம் கீற விருப்பம்.
எனக்கு விருப்பமான மிருகம் முதளை.
எனக்கு முதளையின்ர பல் விருப்பம்.
நான் இப்ப பல்லி கீறினனான்.
இந்தப் படத்தில ஒரு பல்லி நடக்குது.
பல்லிக்குப் பசிக்குது.
அது பூச்சி தேடுது.
பூச்சி புல்லுக்கை இருக்குது.
பிறகு நான் படம் கீறுற ஆளா வரப் போறன்.'

இது போல யுகமாயினியில் எழுதும் இரா. எட்வினை எனக்கு நிரம்பப் பிடிக்கும். கடசியாக நான் பார்த்த கடந்த மாதச் சஞ்சிகையில் பல மாதங்களின் பின் அவரின் எழுத்தைக் காண முடிந்தது.பத்துக் கிலோ ஞானம் என்ற தலைப்பில் குழந்தைகளைப் பற்றிய அவர் அனுபவத்தை எழுதியிருந்தார்.அந்த உரையாடல் இப்படித் தொடர்கிறது.பேருந்தில் பக்கத்து சீட் குழந்தை அவள்.

'மாமா அந்தக் கோழி ரொம்ப அழகா இருக்குள்ளே?
ஆமாண்டா
உங்களுக்கு மந்திரம் தெரியுமா?
தெரியுமே..
அப்ப ச்சூ காளி மந்திரம் சொல்லி என்னை அந்தக் கோழிப் படமா மாத்துங்க பிளீஸ்?
எதுக்குடா கோழிப்படமா மாத்திட்டு கோழியாவே மாத்திடறேனே?
வேணாம் லூசு மாதிரிப் பேசாம என்னக் கோழிப்படமா மாத்துங்க.
ஏண்டா கோழியாவே மாத்திடறேனே?
மக்கு.. மக்கு.. கோழியா மாறினா.. அறுத்துருவாங்கல்லே?

அவளது ஞானம் அது.

வேண்டாத மனிதர்களையும் வேண்டாத பொருட்களையும் வைத்து விளையாடுபவர்கள் குழந்தைகள் என்றும் எங்கோ பார்த்தேன்.அதனால் தான் அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள் போலும்.அவர்களது உலகில் கோபம் இல்லை,பொறாமை இல்லை,எரிச்சல் இல்லை,எதையும் ஒழித்து வைத்து நடக்கும் தன்மை இல்லை,குரூரம் இல்லை,கவலை இல்லை. எவ்வளவு ரம்யமானதாகவும் பரிசுத்தமானதாகவும் அது இருக்கிறது.

அதே கட்டுரையில் எட்வின் எழுதும் போது ஒரு பஸ் பயணத்தின் போது கிராமத்துக் கிழவியில் உரத்த குரலினாலான முறைப்பாடுகள் பஸ்ஸுக்குள் இருந்த எல்லோரையும் எரிச்சல் படுத்தியதால் அம்மூதாட்டி இறங்கும் போது எல்லோரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட வேளையில் ஒரு குழந்தை மட்டும் "நீ பயப்படாம போ பாட்டி.குச்சி எடுத்து வந்து உனக்குச் சோறு போடாத அத்தையையும் மாமாவையும் வெளு வெளு என்று வெளுக்கிறேன்" என்று சொன்னதாக எழுதியிருந்தார்.

சிந்திக்க வேண்டிய கேள்விகளைப் போகிற போக்கில் சிந்தி விட்டு விட்டுப் போகின்றன குழந்தைகள்.எங்களைச் சிந்திக்கச் சொல்லி.
அவ்வளவு அழகும் பரிசுத்தமுமாக இருந்த அவர்களின் உலகம் எப்படிப் பிறகு தடம் புரண்டு போகிறது? எங்கு அந்த மாற்றம் நிகழ்கிறது? சமூகமும் குடும்பமும் சூழலும் குழந்தைகளிடம் எத்தகைய மாற்றங்களைச் யாரும் காணாத ஒரு பொழுதுகளில் செலுத்தி விடுகிறது. அவைகளில் எவை சரி எவை பிழை?அவர்களின் சுயாதீனமான சிந்தனைகளை எக் காரணிகள் தடைப் படுத்துகின்றன? நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.வானொலியில் கேட்ட ஒரு கோமல் சுவாமி நாதனின் நகைச்சுவை ஒன்று ஞாபகம் வந்து போகிறது. அது இது தான்.

ஒரு சிறு வயதுக் குழந்தையின் முன்னால் ஒரு கிலுகிலுப்பையைக் காட்டுங்கள். அது என்னமாய் சிரிக்கிறது. அதையே ஒரு 80 வயதுத் தாத்தாவுக்கு முன்னால் காட்டிப் பாருங்க.அவருக்கு என்னமாய் கோபம் வருகிறது? எப்படி இருந்த தாத்தா எப்படி ஆகிட்டார் பாத்தீங்களா?