Thursday, September 9, 2010

BODY CLOCK


'நாம் எல்லாம் சாய்வு நாற்காலி மனிதராகி விடும் ஒரு பொழுதில் இந்த நினைவு மலரைப் புரட்ட நேர்ந்தால் இதிலிருக்கின்ற ஒரு சிறு சம்பவம் உங்களுக்கு நம் பல்கலைக் கழக வாழ்வை நினைக்கப் போதுமானதாக இருக்கும்' என்ற வாசகம் நாம் வளாகத்தை விட்டு வெளியேறிய போது அச்சடிக்கப் பட்டு விநியோகிக்கப் பட்ட மலர் ஒன்றில் இருந்தது.அம்மலர் கையில் இப்போது இல்லை.ஆனால் அந்த வாசகம் மட்டும் மனதோடு பதிந்து விட்டது.அதில் நம்முடைய ஆண்டில் வளாகம் புகுந்த ஒவ்வொருவர் பற்றியும் ஒவ்வொரு வரி எழுதப் பட்டிருந்தது ஞாபகம்.என்னைப் பற்றிய வாசகமும் ஞாபகம் இருக்கிறது. அதை இப்ப சொல்லி உங்களைக் கஸ்டப் படுத்த விரும்பவில்லை நான்:).

புவியியலைச் சிறப்புப் பாடமாகக் கற்ற ஒரு அழகான பெண்ணைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்கள்'அன்ன நடை உன் அழகு அனிதா' அப் பெண் நடையிலும் நிறத்திலும் புன்னகையிலும் அன்னத்தையே ஒத்திருந்தாள்.அதனாலோ என்னவோ என்னோடு படித்த எத்தனையோ பேர் இருந்த போதும் என்னோடு படிக்காத அப் பெண்னைப் பற்றிய அவ்வரி அப்படியே காரணமில்லாமல் மனதோடு தங்கி விட்டது.

சரி அது போகட்டும் நான் சொல்ல வந்த விடயம் வேறு.

நான் இப்படி நினைத்துப் பார்த்ததுண்டு.அப்படிச் சாய்வு நாற்காலி மனிதராகி விடும் ஒரு நாளில் என் வாழ்க்கையின் உன்னதமான தருணங்கள் பற்றி நினைத்துப் பார்த்தால் எவ்வெவற்றை எல்லாம் நான் பட்டியலிடக் கூடும் என்று.

1.படித்த புத்தகங்கள்
2.சந்தித்த மனிதர்கள்
3.அனுபவித்த சில சில தருணங்கள்
4.மனதுக்கு நேர்மையாய் வாழ்ந்த வாழ்க்கை
5.விட்ட தவறுகள், பெற்ற பாடங்கள், சந்தித்த சவால்கள்,
6.மீண்டெழுந்த வரலாறுகள்
7.என் மீது எனக்கிருந்த நம்பிக்கை
8.என் பலவீனங்கள்,
9.இலக்கியம் இணையம் என்று மேய்ந்து மேய்ந்து இரை மீட்டியவை
10.சேர்த்து வைத்த பொக்கிஷங்கள்
11.தேடாமல் கிட்டிய அதிஷ்டங்கள் தேடியும் கிட்டாத துரதிஷ்டங்கள்
12.சமூகத்தைக் கற்றுக் கொண்டது
..........

இப்படி நீளும் பட்டியல்.இறுதியில் எஞ்சி நிற்கும் வாழ்க்கை பற்றிய என் சொந்த சாரம்.

அப்படிப் பார்க்கும் போது இந்தப் பானங்கள் பற்றிச் சொல்லாமல் போக முடியாது.நான் துயிலால் எழுந்த பின்னரும் 'என்னை'எழுப்பும் பானம் இது.நீர் இறைக்கும் இயந்திரத்தை start ஆக்குவதற்கு முன்னால் அந்த வெள்ளை நிற புளொக்கில் கொஞ்சம் பெற்றோல் ஊற்றிப் பின் கயிற்றினால் 3,4 சுற்றுச் சுற்றி ஒரு இழு இழுத்து start ஆக்குவார்களே! அது போல என் நாளைத் தொடங்கவும் இப்படி ஒரு 'பெற்றோல்'ஊற்ற வேண்டி இருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் இந்தப் பெற்றோல் ஒவ்வொரு மூலையிலும் தாராளமாகப் புளக்கத்தில் இருகிறது.இங்கு ஒரு வழக்கம் இருக்கிறது.புதிதாக வேலையில் சேருகின்ற போதிலும் சரி புதிதாக ஏதேனும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதிலும் சரி முதலில் அவர்கள் அறிமுகப் படுத்துவது எங்கு தேநீர் சிற்றுண்டி வசதி இருக்கிறது, எங்கே கழிப்பறை வசதி இருக்கிறது என்பதைத் தான்.ஆரம்ப காலங்களில் இது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் விடயமாகத் தான் இருந்தது.பின்னர் அது இங்கத்தைய பண்பாடு என்று புரிந்தது.

அண்மையில் ஒரு கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.அது நாம் வசிக்கின்ற பகுதியின் பந்தோபஸ்து நடவெடிக்கைகளை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றிய கூட்டம்.அங்கு ஒரு பிறேசில் நாட்டுப் பெண்மணி வந்திருந்தார்.இங்கும் அப்படித்தான்.எல்லோரும் அவரவர் தேநீர்,பிஸ்கட் போன்றவற்றோடு அமர்ந்து கொண்டாயிற்று.அந்த பிறேஸில் நாட்டுப் பெண்மணி இப்படி ஆரம்பித்தார்.

ஒரு நாள் வேலை முடித்து வீடு வந்து மிகவும் களைப்போடு இருந்ததால் குளித்து விட்டு தேநீரும் ஒரு புத்தகமுமாக ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து புத்தகத்தை விரித்துக் கொண்டே தேநீரை உறிஞ்சினாராம்.அப்போது தான் அதற்குச் தான் சீனி போடவில்லை என்பதை உணர்ந்து கொண்டாராம். மீண்டும் எழுந்து போய் சீனி போடப் பஞ்சியாய் இருந்ததால் அப்படியே குடிப்போம் என்று விட்டுக் குடித்தாராம்.ஆனால் அது நாவுக்கும் உடலுக்கும் நல்ல உவப்பாக இருந்ததாம்.அன்றிலிருந்து தான் உடலின் பாசையை அறியக் கற்றுக் கொண்டு விட்டேன்.உண்மையில் உடல் சீனியின் தேவையைப் புறக்கணித்தே வந்திருக்கிறது. நான் அதனைக் கவனியாது விட்டிருந்ததை அத் தற்செயல் நிகழ்வே எனக்கு உணர்த்தியது என்றார்.நீங்கள் எப்போதேனும் இந்த உடலின் பாசையை அறிந்திருக்கிறீர்களா?

என் தோழி ஒருத்தி இருக்கிறாள்.அவருக்கு தேனீர் எவ்வளவு சுவையாகப் போட்டுக் கொடுத்தாலும் அதில் பாதியளவு மிச்சமிருக்கும். ஒரு முறை வந்த போது அது கூடுதலாக இருக்கிறதோ என்றெண்ணி பாதியளவு போடுகிறேன் என்றேன்.( எனக்கு அநியாயமாக்குகிறவர்களைப் பார்த்தால் கெட்ட கோபம் வரும்) அதற்கு அவர் சொன்ன பதில் இல்லை இல்லை எனக்கு இப்படி விட்டு பழகி விட்டது. நான் வீட்டில் எனக்குப் போட்டாலும் அப்படித்தான். அடியில் மண்டி இருக்கும் என்று ஒரு பயம் என்றார்.இதற்கு என்ன செய்வது?

என் அக்காள் இருக்கிறார். அவவுக்கு எல்லாம் கொளகொளா என்று ஆறி வெள்ளையாய் இருக்க வேண்டும்.(எனக்கு வாசமாய் கலராய் கண்டு கேட்டு உண்டு உயிர்க்கத் தக்கதாய் இருக்க வேண்டும்)அப்படிப் போட்டுக் கொடுத்தாலும் கொஞ்சம் பால் விடு; கொஞ்சம் ஆறட்டும் என்று ஆறிய பின் குடிப்பா.

அண்மையில் இடம் பெற்ற தமிழ் பாடசாலைக் கலைவிழாவின் நிமித்தம் நான் வேறொரு ஆசிரியையோடு சேர்ந்து பணியாற்ற வேண்டி இருந்தது. அங்கு இடை வேளையின் போது நானும் அவ் ஆசிரியரும் தேநீர் குடிக்கப் போயிருந்தோம்.நாமே நமக்குப் போட்டுக் கொண்டு சீனியைக் கலக்குவதற்காக என் கையில் வைத்திருந்த கரண்டியை அவவின் கையில் கொடுத்தேன். உடனே ஐயோ வேண்டாம் நான் கலக்குவதில்லை. எனக்கு குறைந்த அளவு சீனியின் ருசியில் இருந்து அதன் அளவு கூடிக்கொண்டு போவது வரை அதன் சுவை வேறுபாட்டை அனுபவித்துக் கொண்டே குடிப்பது பிடிக்கும் என்றார்.

இப்போதும் எனக்கு நினைவில் இருக்கும் ஒரு தேநீர் ஊர்மிளா என்ற ஒரு பெண்மணி போட்டுத் தந்த தேநீர்.அவரை அதற்குப் பிறகு 'ஊர்மிளை' என்று செல்லப் பெயரிட்டு மன அறையில் வத்திருக்கிறேன்.அவரின் வீட்டுக்கு ஏதோ ஒரு காரிய நிமித்தம் போயிருந்தேன்.மிகவும் அன்பும் பண்புமான தம்பதிகள். சற்று நேரத்தின் பின் அங்கு ஒரு அருமையான தேநீர் வாசம் நாம் இருந்த வரவேற்பறை முழுக்கப் பரவி தேநீருக்கு மனதைத் தயாராக்கியது.நாமெல்லாம் இலங்கையராக இருப்பதாலோ என்னவோ அதன் வாசம் குணாம்சம் எல்லாம் நம்மோடு கலந்து விட்டவை. அதன் பின் பால் வாசம் வந்தது. பின்னர் அவை இரண்டும் சேர்ந்து ஒரு தனித்துவ நிறத்தோடும் குணாம்சத்தோடும் அத் தேநீர் என்னை வந்தடைந்தது. அதன் பின் ஏனோ அவரை ஊர்மிளை என்று அவருக்கு மனம் பெயர் போட்டு விட்டது.ஊர்மிளையின் தேநீர் என் வரையில் மிக விஷேஷமானது.ஒரு சிலரால் மட்டும் தான் அப்படி விஷேஷமாகத் தேநீரைத் தயாரிக்க முடியும் போலும். ரசனையுள்ள கரங்கள்!

கடைகளுக்குப் போனால் English tea என்று ஒரு வகையான தேநீர் வாங்கலாம். கெண்டியுள்ள கேத்திலில் அது வருவதே அழகும் கம்பீரமுமாக இருக்கும்.சீனி, பால் தனித்தனியாகவும் cup & sauser தனியாகவும் கரண்டி இன்னொரு வகையாகவும் மிகக் கலைத்துவமான இயல்போடு அது வரும்.எம்முடைய சுவை விருப்பங்களுக்கேற்ப நாமே அதனைத் தயாரித்தும் கொள்ளலாம்.பெரிய பெரிய தேநீர் கடைகளுக்குப் போனால் பீங்கான் கேத்திலும் பாத்திரங்களும் அழகிய வேலைப் பாடுகள் அமைந்ததாய் இருக்கும்.

இங்கு தேநீர் அருந்துவது ஒரு பண்பாடு. ஒருவர் coffie க்குப் போவமா வெளியில என்று கேட்டால் அவர் ஏதோ முக்கியமான விடயம் பற்றி உங்களோடு பேச விரும்புகிறார் என்று அர்த்தம்.மற்றும் அயலவர் உங்களை வீட்டுக்குத் தேநீர் அருந்த வா என அழைத்தால் உங்களோடு அவர் சுமூகமான நட்புறவைப் பேண விரும்புகிறார் என்று அர்த்தம்.

வேலை சம்பந்தமாக முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் விடயங்களைப் பேசுவதற்கும், காதலர்கள் தம் நேரத்தைச் செலவிடுவதற்கும்,புதிதாகக் காதலைத் தெரிவிப்பவர்கள்,நண்பர்கள் என்று நேரத்தை பயனுள்ள வகையில் செலவளிக்கத் தேநீர் விடுதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். தேநீர் என்பதைத் தாண்டி அதற்கு ஒரு வலுவான காரணம் அங்கு இருக்கும். ஏன் சில வேளைகளில் தேநீர் குடித்துக் கொண்டே நேர்முகத் தேர்வுகளும் நடப்பதுண்டு.

வெளித் தேநீர் சாலைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் தேநீரைத் தேர்ந்தெடுப்பதற்கும் மனதை இலகுவாக்கும் அதன் தன்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் போலும்!


தேநீரைக் கண்டு பிடித்த மனித வலு வாழ்க!!

அது சரி உங்கட Body clock என்ன சொல்லுது? :)


குறிப்பு;

என் அக்ஷ்ய பாத்திரத்திலும் ஏதோ இருக்கும் என்று வரும் என் வாசகப் பெருங்குடி மக்களுக்கு என் வணக்கங்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் புதன் கிழமை தோறும் வழக்கமாக வருவது போல் வர முடியவில்லை. சில மதங்களுக்கு இந் நிலைமை நீடிக்கலாம் போலத் தோன்றுகிறது. என்றாலும் தெண்டித்து வரப் பார்க்கிறேன். புதன் பதிவு வரத் தாமதித்தால் கோபித்துக் கொண்டு போய் விடாதீர்கள். இணையப் பக்கம் வருகின்ற போது ஒரு முறை இப்பாத்திரத்தையும் எட்டிப் பாருங்கள்.

No comments:

Post a Comment