Tuesday, January 25, 2011

பிரமாண்டங்களுக்கூடாக ஒரு வரலாற்று நிகழ்வு


இலங்கையின் வரலாற்று நூல் மகாவம்சம்.அது புராணங்களை ஒத்த கதைகள் பல நிரம்பியது. ஆனாலும், அது அரசியல் வரலாற்றை; பெளத்த சங்கங்களின் உருவாக்கங்களை; மன்னர்கள் பெளத்த சங்கங்களுக்கு அளித்த தானங்களைப் பற்றியும் கூறுகின்றது. பெளத்த துறவி ஒருவரால் எழுதப் பட்டதால் அது பெளத்தம் சார்ந்த விடயங்களுக்கும் அவற்றுக்கு ஆதரவளித்த அரசர்களைப் பற்றிப் போற்றிக் கூறுவதும் தவிர்க்க முடியாதது.அவற்றை எல்லாம் தவிர்த்துப் பார்த்தாலும் சிங்கள இனத்தவர் பெருமை கொள்ளும் விதமாக ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை அது அவர்களுக்கு வழங்குகிறது.

அதில் எல்லாளன் துட்டகைமுணு போர் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது.எல்லாளன் தமிழன். வயதான அரசன்.துட்டகைமுனு சிங்ள தேசத்தவன்; இளமைத் துடிப்புள்ள இளைஞன்.துட்டகமுணுவின் மனம் முழுக்க இருந்த ஆசை இலங்கையை ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்பதே. ஒரு தடவை அவன் கால்களைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த போது துட்டகைமுனுவின் தாய் விக்கிரமாதேவி தன் மகனை நோக்கி, ’ஏன் இவ்வாறு உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய் மகனே! நன்றாகக் கால்களை நீட்டிக் கொண்டு படுக்கலாமே’ என்று கேட்டாள். அதற்கு வீரனான துட்டகைமுனு, ‘ஒரு புறம் தமிழர்களும் மறு புறம் கடலும் இருக்கும் போது நான் எவ்வாறு தாயே காலை நீட்டிப் படுத்துறங்க முடியும் என்று கேட்டான்.

அத்தனை பிரமாண்டம் அவன்!அவன் உள்ளத்தின் நீள அகலம் அது.

அது போல பொன்னியின் செல்வனில் ஓரிடம் வருகிறது.அது பெருங்கிள்ளி வளவன் என்ற மன்னனைப் பற்றியது. அவனிடம் யானை ஒன்றிருந்தது. அது நடந்து வருகின்றது. எப்படித் தெரியுமா?

“கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால்
தத்துநீர்த்தண் தஞ்சை தான் மிதியா - பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே நம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு”

அதாவது,யானை வருகிறது. அது சோழ நாட்டு யானை.அது வரும் போது ஒருகால் காஞ்சி மாநகரில் இருக்கிறது.மற்றய காலைத் தஞ்சை மாநகரில் ஊன்றுகிறது.மூன்றாவது கால் ஈழ நாட்டில் ஊன்றப் படுகிறது நாலாம் கால் உறையூரில் ஊன்றப்பட்டவாறு மெல்ல அசைந்து வருகிறது.சோழ நாட்டின் ஆதிக்கப் பரம்பலை யானையில் ஏற்றி வைத்துப் பாடிய பாடல் அது.

அத்தனை பிரமாண்டம் அந்த யானை!சோழ தேசப் பரப்பும்.

இனியொரு புராணக் கதையின் பால் நகருவோம். அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த மேருமலையை மத்தாகவும் வாசுகியை பாம்பாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாறு.இந்தக் கற்பனை எத்தனை பிரமாண்டம் என்று பாருங்கள்.உலகின் 70% கடல். உலகின் மிகப் பெரியமலை இமையமலை. கயிறைப் போன்ற நீளமும் பெருப்பமும் உடையது மலைப்பாம்பு.தேவர்களும் அசுரர்களும் இவ்வுலகுக்கே அப்பாற்பட்டவர்கள்.இவற்றை உள்ளடக்கி விரிந்த இக் கற்பனை எத்தனை பிரமாண்டம் பார்த்தீர்களா? உலகத்தில் எல்லாவற்றையும் விட எல்லோரையும் விட உயர்ந்தது உயர்ந்தவர் சைவம்;முழுமுதற்கடவுளான திருநீலகண்டர் என்று சொல்ல இதை விட ஒரு பிரமாண்டமான கற்பனையைச் செய்ய முடியுமா?

ஆனால், செய்திருக்கிறார்கள். சங்க காலத்துப் புலவர்களுக்கு அது முற்றிலுமாகக் கைவந்திருக்கிரது.அவர்களுக்கு அது இயலுமாக இருந்திருக்கிறது.அரசனுடய திறத்தை அவர்கள் அவ்வாறு எல்லாம் பாடியிருக்கிறார்கள்.

புறநானூறில் இரண்டாவது பாடல் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. அப்பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடி இருக்கிறார்.

“மண் தின்ற நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார் பொறுத்தலும்,சூழ்ச்சியது அகலமும்
வரலும் தெறலும் அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெந்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
.....”

என்றவாறு தொடங்குகின்றது அந்தப் பாடல்.அதாவது,மண் நிறைந்து காணப்படுகின்ற இந்த நிலமும், அதற்கு மேலாகக் கானப்படுகின்ற வானும், அதனோடு சேர்ந்திருக்கின்ற காற்றும், காற்றினுடய இயல்பினால் பெருகும் நெருப்பும், அவ்வாறான நெருப்புக்கு முரண்பட்டு விளங்குகின்ற நீருமான, இவ் ஐம்பெரும் பூதங்களான இயற்கையைப் போல விளங்குகின்ற தலைவனே!நீ உன்னைப் போற்றாதவர்களைப் பற்றி நீ சிறிதும் எண்ணினாய் இல்லை;அவர்களிடத்து நீ மிகப் பெரும் பொறுமை காட்டுகிறாய்;நன்கு ஆராய்ந்து அறிவதில் சிறந்த ஞானமும் பகைவரை அடக்குவதில் உன்னுடய பேராற்றலையும் காட்டுகிறவன் நீ!அதே நேரம் உன்னுடய குடிமக்களிடம் பெரும் அன்பும் கொண்டிருக்கிறாய்.உன்னுடய ஆட்சி உரிமை காணப்படுகின்ற கிழக்குக் கடலில் இருந்து தோன்றும் சூரியன் மீண்டும் உன் ஆட்சி உரிமைக்குரிய மேற்குக் கடலிலே சென்று நீராடும்.....என்றவாறு தொடரும் அப்பாடல்.

இது எத்தகைய பிரமாண்டம்!தெய்வ சமானம் அந்த விசாலம்!

மீண்டும் இப்போது அந்த முதலாவது பிரமாண்டத்துக்குப் போவோம்.துட்டகைமுனு தன்னால் கால் நீட்டிப் படுக்க முடியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னான் அல்லவா? பின்னொரு முறை அவனுக்குக் கால் நீட்டிப் படுக்க ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவன் எல்லாளனோடு மேற்கொண்ட போரில் எல்லாளனை வென்று நாட்டை ஒரு குடைக்கீழ் ஆளுகின்ற சந்தர்ப்பம் அவனுக்குக் கிட்டியது.ஆனாலும் அவன் தான் தமிழரையும் ஆளவேண்டி இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருந்தான். அதனால் அநுராதபுரத்தில் எல்லாளன் உயிர் துறந்த இடத்தில் போரிட்டு உயிர் துறந்த எல்லாள மன்னனுக்கு அவ்விடத்தில் நினைவு ஸ்தூபி ஒன்றை எழுப்பி அதனைத் தாண்டிப் போகும் எல்லோரும் அந்த இடத்தை வனங்கிச் செல்ல வேண்டும் என்று ஆணையிட்டான் என்று மகாவம்சம் கூறுகிறது.

அவ்வாறு அவன் தமிழர்களை வெற்றி கொண்டான்.

வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது இப்போது.

அண்மையில் அமெரிக்காவில் இலங்கை நாட்டின் அதிபர் திரு.மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடு தமிழர்களிடம் இருந்து வெற்றி கொளளப் பட்டதன் பின்னால் ஒரு வரவேற்புபசாரம் நடைபெற்றது. அங்கு அமெரிக்கத் தலைவரான பராக் ஒபாமாவுக்கு தென் ஆசியப் பிராந்தியத்துக்கான அரசியல் ஆலோசகராக விளங்குகிறார் ஒரு யாழ்ப்பாணத் தமிழன்.அவர் அந்த வரவேற்புரையில் ஒரு உரையினை ஆற்றுகிறார்.சற்றே பொறுமையோடு கேட்டுப் பாருங்கள்.

15 நிமிடங்கள் சற்றே அதிகமெனினும் முழுவதையும் தயவு கூர்ந்து பொறுமையோடு கேட்டு விட்டுச் செல்லுங்கள். ஏனென்றால் அவை எங்கள் இதயத்தின் குரல்,கைவிடப் பட்ட தமிழ் மனங்களின் அபிலாஷைகள்.

Monday, January 17, 2011

சூரியனின் குதிரைகள்



வானரங்கள் கனி கொடுத்து மந்தி யொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
ககன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரை யெழும்பி வானின் வழி ஒழுகும்
செங் கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங் காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே.


இது குற்றாலக் குறவஞ்சியிலே வருகின்ற ஒரு பாடல்.இதன் பொருள் என்னவென்றால்,பழ மரங்களிலே வானரக் கூட்டம். அவை பழங்களை உண்டு களிக்கிறன. அவை தாம் மட்டும் உண்ணவில்லை. தன் இனத்தாருக்கும் கொடுத்து கொஞ்சி மகிழ்கின்றன.(மந்தி - பெண்குரங்கு;கடுவன் - ஆண்குரங்கு).அவை தம் இயல்புக்கேற்ப சிலவற்றைக் கொட்டியும் சிந்தியும் உண்கின்றன.அதாவது கொட்டிச் சிந்தியும் கொடுத்துண்டும் மகிழ்கின்றன.அவ்வாறு கொட்டுண்ணுகிற பழங்களுக்காக வானுலகில் வாழுபவர்கள் மிகவும் ஆசைப் படுகிறார்கள்.இதனை இயல்பாகவே கண்ணுறுகிறார்கள் காடுகளில் வசிக்கின்ற கானவர்கள்(வேடர்கள்). அதன் காரணமாக தேவர்களைத் தம் கண்களாலேயே பழங்களை உண்ண அழைக்கிறார்கள்.

அதே நேரம், இந்த நாட்டினுடய வளத்தைப் பார்த்தவாறு வானில் வழியாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சித்தர்கள் இந் நாட்டின் இத்தகைய வளத்தில் கிறங்கி; இங்கிறங்கித்; தம் சித்துக்களைச் செய்கிறார்கள்.அருகில் இரைச்சலோடு வானில் இருந்து பொங்கிப் பிரவகிப்பது போல மலையில் இருந்து பொங்கி வழிகிறதே தேனருவி; அதிலிருந்து மேலெழும் தண்ணீர் துளிகள் தெறித்து சூரியன் வரும் பாதை ஈரமாகி விட்டது.அதனால் ஏழு குதிரைகளைப் பூட்டிக் கொண்டு காலை தோறும் நேரம் தவறாமல் வருகின்ற சூரியனின் குதிரைகளுக்கு ஓட முடியவில்லை. அவற்றின் கால்களும் சூரியபகவானின் தேர் சில்லுகளும் வழுக்குகின்றன.என்றவாறு தொடரும் திரிகூட ராசப்பரின் மலை வளம் கூறும் பாடல்.(ஏழு வர்ணங்களுக்கும் ஏழு குதிரைகளைக் கற்பனை பண்ணிய தமிழ் கூட அழகு தான்).

திரிகூடராசப்பர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இந் நூல் சோழர் காலத்துக்கு பிற்பட்ட நாயக்கர் காலத்தில் எழுந்தது.

ஆனால்,சூரியனுக்கு எப்போது தமிழ் ஏழு வர்ணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏழு குதிரைகளை உவமையாகக் கொடுத்தது என்பது பற்றியோ; அவர் சக்கரங்கள் பொருத்திய தேரில் அக்குதிரைகள் இழுக்க தினந்தோறும் பயணிப்பது பற்றிய கற்பனை எப்போது உருவானது என்பது பற்றியோ; இவை பற்றிய சான்றுகள் பற்றி முதன் முதலில் எங்கு குறிப்புகள் காணப்பட்டன என்பது பற்றியோ எனக்கதிகம் தெரியாது.(அறிந்தவர்கள் சொன்னால் பயனுடயதாக இருக்கும்)

ஆனால் இந்த அழகு மிகு கற்பனைக்கு நிகரான இன்னொரு அழகான கற்பனை சோழர் காலத்து பாடல் ஒன்றில் காணப்படுகிறது. பொன்னியின் செல்வனைத் தந்த கல்கி தன் முதலாம் பாகத்தில் சுந்தரசோழர் இயற்றியதாக ஒரு பாடலைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பாடல் இது தான்.

“இந்திரன் ஏறக் கரி அளித்தார்;
பரி ஏழளித்தார்
செந்திரு மேனித் தினகற்கு;
சிவனார் மணத்துப்
பைந்துகிலேறப் பல்லக்களித்தார்;
பழையாறை நகர்ச்
சுந்தர சோழரை யாவரொப்பார்கள் இத்
தென்னிலத்தே”

அதன் பொருளைக் கல்கியின் தமிழிலேயே அப்படியே தருகிறேன்.

”ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனுடய ஐராவதம்(யானை) இறந்து போய் விட்டது.அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான்.கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் வந்து ‘ஐராவதத்துக்கு நிகரான யானை ஒன்று வேண்டும்’ என யாசித்தான்.’ஐராவத்தத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை.அதை விட சிறந்த யானைகள் தான் இருக்கின்றன’என்று கூறி,இந்திரனைத் தன் யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார்.அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக் கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்து விட்டு,’எதைக் கேட்பது?’ என்று தெரியாமல் திகைத்து நின்றான்.அவனுடய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர் தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார்.’அந்த யானையை எப்படி அடக்கி ஆளப் போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!’ என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தை விட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்...

பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது.ராகு தினகரனை விழுங்கப் பார்த்தான்.முடியவில்லை!தினகரனுடய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்து விட்டது.ஆனால் சூரியனுடய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவினுடய காலகோடி விஷத்தினால் தாக்கப் பட்டு இறந்தன.சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில்,அவனுடய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தர சோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, ‘ரதத்தில் இந்தக் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்’என்று கேட்டுக் கொண்டார்.தன் குலத்தில் வந்த ஒரு சோழச் சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.

‘பின்னர் சிவபெருமானிற்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது.பெண் வீட்டார் கல்யாண சீர்வரிசையுடன் வந்திருந்தார்கள்.ஆனால் பல்லக்குக் கொண்டுவரத் தவறி விட்டார்கள்.ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள்.இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி உடனே பழையாறை அரண்மனையில் இருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார்.பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப் பல்லக்கை அளித்தார்.அப்படிப் பட்ட சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்...”(பொன்னியின் செல்வன்; பாகம் ஒன்று; வானதி பதிப்பகம்; 12ம் பதிப்பு; 2004;பக் 205 - 206)


சோழர் காலத்தில் இந்தச் சுந்தர சோழன் கொடுத்த குதிரைகளுக்குத் தானோ நாயக்கர் காலத்துக் குற்றாலக் குறவஞ்சியில் குற்றால மலையில் ஏறக் கால்கள் வழுக்குகின்றன?

Tuesday, January 11, 2011

ஒரு துளி சோழ வளம்


என் அன்புத் தோழி தாருஹாசினி அறிமுகப் படுத்தி வைத்த புத்தகம் பொன்னியின் செல்வன். நம் கவுன்சில் நூலகத்தில் சில நல்ல தமிழ் நூல்கள் இருப்பதை நானறிவேன். ஒரு படியாக கிடைத்த ஒரு நேர அவகாசத்தைப் பயன் படுத்தி அங்கு சென்றால் முதல் இரண்டு பாகங்களையும் யாரோ எடுத்துப் போயிருந்தார்கள். மூன்றாவது பாகம் மட்டும் இருந்தது.

பெரிய புத்தகம். ஒரு விதமான ஏமாற்றமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மன நிலை எனக்கு. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை மாதிரி.அம் மூன்றாம் பாகத்தைப் புரட்டிப் பார்த்தேன். 2004ம் ஆண்டு 12ம் பதிப்பை அது கண்டிருந்தது. ம.செ.யின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் அவரது தந்தையார் மணியன் என்பவர் ஓவியங்களை வரைந்திருந்தார். ஆசையோடு அதனைச் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு முதல் பாகத்தில் இருந்து முறைப்படி படிக்கத் தொடங்குவதே நல்லது என்ற தீர்மானத்தோடு கவுண்டரில் சினேகமாய் சிரிக்கும் பெண்மணியிடம் அதன் முதல் இரண்டு பாகங்களுக்குமான பதிவினைச் செய்து விட்டு வந்திருந்தேன்.அவரது கூற்றுப் படி அது தை மாத நடுப்பகுதியில் வந்து சேரும் சாத்தியக் கூறுகளே அதிகம் இருந்தன.

ஆனால் இன்று நல்ல வேளையாக நான் வீட்டில் நின்றிருந்த ஒரு பொழுதில் நூலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.நீ கேட்டு வைத்திருந்த புத்தகத்தில் முதலாம் பாகம் வந்திருக்கிறது. நீ வந்தால் எடுத்துச் செல்லலாம் என்றது அவ் அழைப்பு.

அது மிகச் சொற்ப வேளையில் கைப் பைக்குள் அது இடம் மாறியது மட்டுமன்றி வெளி வேலையாய் திரிந்த பொழுதுகளிலும் அது ஒரு சுகமான பாரமாகக் கனத்துக் கொண்டிருந்தது.ஆம் படிக்காத போதிலும் அது ஒரு சுகமான பாரமாகத் தான் இருந்தது. ஒரு விதமான உற்சாகம் அப்போதிருந்தே தொற்றிக் கொண்டது.வேலைகளை விரைவாக முடிக்க அது ஒரு காரணமாகவும் இருந்தது.

ஆயிற்று. வீடு வந்து சேர்ந்தால் மழை வரவா விடவா என்று வெருட்டிக் கொண்டிருந்தது.இனிமையான பழைய பாடல்கள் வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்க வானம் இருட்டி குளிர் காற்றைத் தந்து கொண்டிருந்தது.களைப்புத் தீர குளித்து சிறப்பானதொரு தேநீரோடு ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டு பிரம்பு நாற்காலியை வெளிச்சம் வரும் இடத்தில் தள்ளி வைத்து விட்டு தேநீரின் இதமான சூட்டோடு படங்களில் லயித்து பதிப்புரை முன்னுரையினூடாக மெல்ல முதல் அத்தியாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தேன்.

அது ஆடிப் பெருக்கைப் பார்க்கும் வல்லவரையன் வந்தியத்தேவனின் கண்களூடாக விரியும் காட்சி.ஆடிப் பெருக்கும்,மக்கள் வருகையும், களனிகளின் உழவும் நடவும் நடந்து கொண்டிருக்க; ஆற்றோரம் மக்கள் குழுமி கூட்டஞ்சோறும் சித்திரான்னமும் பகிர்ந்துண்ணுகிறார்கள். அவை கமுகம் பாளைகளில் இட்டு உண்னப் படுகின்றன.சோழ தேசத்து வளத்தில் தோய்ந்தவாறு கதை நகருகிறது.

ஆனால் முதல் அத்தியாயத்துக்கு மேல் என்னால் நகர முடியவில்லை.சோழ வளம் கண்ணில் கருக்கட்டி விட்டது தான் அதற்குக் காரணம்.அந்தச் சோழ நாட்டினுடய வளத்தினை ஒளவையார் இப்படிப் பாடுகிறார்.

“வெளளத்தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிளித்து மழைத்
துளியோடிறங்கும் சோ நாடா
......”

என்றவாறு தொடரும் அப்பாடல்.இந்தப் பொன்னியின் செல்வனின் அதே ஏரிக் கரையோரம் வெளளம் கரை புரண்டோடுகிறது. அருகில் மருத நிலம். விவசாயபூமி.குடியானவர்கள் உழுது கொண்டிருக்கிரார்கள்.பெண்கள் நடவு நட்டுக் கொண்டிருக்கிறார்கள்.கரை புரண்டோடும் ஏரியையும் வயல் நிலங்களையும் பிரிப்பது கமுகம் வேலி.வந்தியத் தேவன் காண்கின்ற பெண்கள் ஆடிப் பாடிக் களித்த படி கூட்டாஞ் சோறுண்ணும் கமுகம் பாழைகள் நிறைந்திருக்கின்ற அதே கமுகம்வேலி.

கருக் கொண்டிருக்கிறது மேகம்.வெள்ளத்துக்குள் துள்ளியோடும் மீன்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.அதனால் நுரைத்துக் கொண்டோடும் வெள்ளத்துக்குள் அடங்கா மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவாறு ஓடுகின்றன.அதற்குள் ஒரு கர்ப்பம் தரித்திருக்கிற வாளை மீன்.(சினை வாளை)அப்படியே அது உயர ஒரு துள்ளுத் துள்ளுகிறது.அப்படித் துள்ளிக் குதித்த வேகத்தில் அது வேலியோரம் நிற்கின்ற கமுகம் மரத்தில் ஏறி கரு முகிலாய் கூடி இருக்கின்ற முகிலையும் கீறிக் கிழித்தவாறு கீழிறங்கி மீண்டும் வெள்ளத்துக்குள் விழுகின்றது.அது அவ்வாறு முகிலைக் கிளித்து துள்ளி விழுந்த காரணத்தால் மழை முகிலாது மழைத் துளியாக மண்ணில் விழுகிறது.அதன் காரணமாக வாளை மீன் வெள்ளத்துக்குள் விழுகின்ற போதினில் மழைத் துளியையும் இழுத்துக் கொண்டு வந்து விழுகின்றது என்று ஒளவையார் சோழ வளம் கூறுவார்.

இந்த ஒளைவையாருக்கும் அவருக்குச் சம காலத்தில் இருந்த ஒட்டக் கூத்தர் என்ற புலவருக்கும் எப்போதும் புலமையில் ஒரு போட்டி நிகழ்வது சோழ சாம்ராஜ்ஜியத்தில் பிரபலமான ஒரு சங்கதி. இங்கு ஒட்டக் கூத்தர் அச் சோழ வள நாட்டினுடய வளத்தை இப்படிப் பாடுகிறார்.ஒளையார் நீரின் வளத்தைப் பாட இவர் நிலத்தின் வளத்தைப் பாடுகிறார் இப்படி,

“பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட்டெறியக் குரங்கு இளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாடா
....”

என்று பாடுகிறார்.அதாவது வயல்களிலே உழுது களைத்த உழவர்கள் தாம் தாக சாந்தி செய்வதற்காக ஒரு உபாயம் செய்கிறார்கள். அது என்னவென்றால் இந்த மரங்களிலே இருக்கின்ற குரங்குகள் பலாக்கனிகளைப் பாழ் செய்கின்றன என்று சாட்டுச் சொல்லிக் கொண்டு நிலத்திலே இயற்கையாக விளைந்து கிடக்கின்ற சங்குகளை எடுத்து குரங்குகளுக்கு மேலாக வீசுகிறார்கள்.அதன் காரணமாக அவர்களுக்கு அந்தக் குரங்குகள் இளநீர் குலைகளில் இருந்து இளநீர்களைப் பிடுங்கி உழவர்களை நோக்கி எறிகிறது. அதனால் உழவர்கள் தாக சாந்தி செய்து கொள்கிறார்கள். அத்தகைய வளம் பொருந்திய சோழ வள நாடு என்பார் ஒட்டக் கூத்தர்.

அந்த வள நாட்டில் தான் நான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.நூற்றாண்டுகள் தாண்டிய பயணம் அது!

இன்றைக்கு இவ்வளவும் தான்.:)


இங்கே இப்போது மழை.

எங்கோ ஒரு அழகான உவமை ஒன்று பார்த்தேன்.அது இப்படி அமைந்திருந்தது.


“நிதானமோ பக்குவ நளினமோ அற்றுச் சட்டென்று நிலத்தில் வைத்த வீணையின் தந்திக் கம்பி அதிர்வில் உதிர்ந்து விழுந்த ஒரு நாதத் துளிபோல; அவளது கண்களில் உருண்டு திரண்ட கண்ணீர் முத்து, தாமரைக் கன்னத்தில் ஒட்டாமல் உருண்டோடி, நிலத்தில் பொட்டென்று விழுந்து சிதறியது”

இப்போது இங்கு விழுகின்ற மழைத் துளிகளும் அப்படித் தான் இருக்கின்றன.அத்தனை பெரிசு.

Monday, January 3, 2011

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்....



எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்று பிடித்திருக்கும்.

இது தெரிய வந்தது வெளி நாடு வந்த பின் தான்.ஊரில் நாம் செய்வது எல்லாமே பிடித்திருந்தது.இங்கு செய்வது ஒன்று பிடிப்பது ஒன்றென்பதால் பிடிப்பதைச் செய்வதற்கு நேரமொதுக்கி சக்தியை மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது.

அது அன்றாட ஓட்டத்துக்கு காருக்கு பெற்ரோல் அடிப்பது மாதிரி!எங்கள் சக்தியை எமக்கு மீட்டுத் தரும் உபாயமாக அது இருக்கும்.பதிவு எழுதுவது, பாட்டு படிப்பது, இசைகேட்பது,வாத்தியங்கள் இசைப்பது,.....இப்படி!

என் தங்கைக்கு ஒரு வித விசித்திர வியாதி இருக்கிறது. விடுமுறையோ ஓய்வு நாளோ வருமிடத்து தன் ஆடைகள் நிறைந்த அலுமாரியை, முகம் பார்க்கும் கண்னாடி மேசையை மீண்டும் மீண்டும் அடுக்கி மகிழ்வாள்.அது அவளுக்கு தன் நாளாந்த சக்தியை மீட்டுத் தரும் ஒரு செயற்பாடு.

அது போல எனக்கும் ஒரு வித வியாதி இருக்கிறது.பார்க்கின்ற போது படிக்கின்ற போது பிடித்தவற்றைச் சேகரித்து வைக்கும் வழக்கம் ஒன்று இருக்கிறது என்னிடத்தில்.ஓய்வின் போது அல்லது (காருக்கு பெற்ரோல் அடிப்பது போல)சக்தி தேவைப் படும் போது முன்னர் ஒரு போது சேர்த்து வைத்த விடயங்களை மீண்டும் ஒரு முறை எடுத்துப் பார்த்து மகிழ்வதுவே அது.

நீங்கள் என்ன மாதிரி?

இது மாதிரி என் அக்காளுக்கு இருப்பது இன்னொரு விதமான விஷேச வியாதி.மரங்கள் செடி,கொடி பூக்களோடு பேசுவது தான் அது. அவற்றுக்கு உணவு, தண்ணீர்,சத்துகள் போடுவது,மண்ணைக் கிண்டி இதமாக்குவது,பூ இதழ்,நிறம்,வாசம்,மற்றும் அதன் செழுமை,வடிவம் இவற்றில் மனதைப் பறி கொடுத்து நிற்பது.. இப்படி தொடரும் அவர் வியாதி.

அது மாத்திரமல்ல வாழை, கொய்யா, பலா, மாமரம் எனவும் மேற்கொண்டு தொடரும் அது.சைவ போசனம் அருந்துபவர்கள் என்பதால் வல்லாரை தக்காளி, கத்தரி, வெண்டி,முருங்கை,பச்சை மிளகாய் என வீட்டுத் தோட்டமும் உண்டு பிறிம்பாக!பிதிரர்களுடய வருடம் ஒரு முறை வரும் நினைவு நாட்களில் தோட்டத்தில் விளைந்த மரக்கறிகளோடு வாழை இலையில் சைவ போசனம் அங்கு உண்ணக் கிடைப்பது - அதுவும் வெளி நாட்டில் -ஒரு வரம் மாதிரி.

அவவுக்குப் பிறந்த தினம் வருகிறது.அவவுக்கு என்ன வாங்கலாம் என யோசித்து கடை எல்லாம் சுற்றியதில் இறுதியாகக் கண்டு கொண்டது இது தான்.

மூங்கிலினால் மிக நேர்த்தியாக வளைத்துச் செய்யப் பட்ட பல வடிவங்களைக் கொண்ட பாத்திரங்கள் வியற்நாம் நாட்டவர்களால் வீட்டுக் கைவினையாகச் செய்து சந்தையிடப் படுகின்றன. மிக இலேசாகவும் வசீகரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அப்பாத்திரங்கள் புழக்கத்துக்கும் சுகமானவை.இலேசானவை.கூடவே மரத்தினால் வடிவமைக்கப் பட்ட கரண்டிகளும் குடுவைகளும் உள்ளன.அது மாத்திரமன்றி ஓலைகளால் இழைக்கப் பட்ட பெட்டிகள்,பல ரகங்களிலும் பல அளவுகளிலும் மூடிகளோடும் வருகின்றன.

இவற்றைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டன.இப்போது வாயு,மின்சார அடுப்புகளும் ஸ்ரிமரும் பாவனைக்கு வந்து விட்டன.பிட்டு அவிப்பது வேலை மினைக்கேடு ஆகி ரெடிமேட் சாப்பாடுகள் வீட்டு மேசைக்கு வர ஆரம்பித்து விட்டன.இனி ஈழத்து முற்றத்துக்கு யாரும் வந்து முந்தி எப்பிடி நாங்கள் பு(பி)ட்டு அவித்தோம் என்று பார்க்கிற காலம் வரும்.

அதற்காகத் தான் இந்தப் பதிவு.

முன்னர் ஒரு காலம்! இற்றைக்கு 40 வருடங்களாவது இருக்கும்!!

அது ஒரு கொண்டாட்ட காலம்! தாயக மண்.போர் மூளாக் காலம்!!

யாழ்ப்பாணத்தில் ஊர் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது என் தாயாரின் தாய் தந்தையரின் வீட்டுக்கு மற்றும் தந்தையாரின் தாய் தந்தையர் வீட்டுக்கு போவது வழமை.திருமணமாகி வெளியூர்களில் வாழ்ந்து கொண்டிருந்த சகோதர சகோதரிகளின் குடும்பம் ஒன்று கூடும் காலமும் அது தான்.

பலாப்பழம்,வெத்திலைத் தட்டம்,பாக்குரல்,மூக்குப் பேணி,சிவப்பு சீமேந்துத் தரை,பனையோலை,முள்முருக்கு, கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் வாழைக்குலை, மற்றும் வெங்காயம்,மாட்டுக் கொட்டில்,மாதுளங்கன்று,விளாம்பழம்,புலவு என்று அழைக்கப் படும் தோட்டம்,கற்தறை,அதற்குள்ளும் செழித்து வளர்ந்திருக்கும் புகையிலைத் தோட்டங்கள்,செம்மண்,கிணறு,துலா,நெசவுசாலை,காங்கேசன் துறை சீமேந்துக் கூட்டுத் தாபனத்து விசில் ஓசை,எண்னை வைத்து வாரி இரட்டை பின்னலோடு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டு வெள்ளைச் சீருடையில் சைக்கிள் ஓடும் மாணவிகள் மற்றும் மாணவர்கள்,,இரவு 8.30க்கு காங்கேசன் துறையில் வந்து நிற்கும் யாழ்தேவியில் இருந்து வரும் மாமா,மாமியை மச்சான்,மச்சாளை அழைத்து வரப் போகும் கறுப்புக் கார்,திருவிழாக்காலங்கள்,வாழையிலைச் சாப்பாடு,தண்னீர் பந்தல்,காப்புகள்,அம்மம்மா குழல்....என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நினைவுகள்!

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுகளிலும் நிழலாடக் கூடும்!

அத் திருவிழாக் காலங்களில் மாலை ஆறுமணி அளவில் சமையலறை பக்கமாய் மிக அமளியாய் இருக்கும்.தென்னந்தும்பும் சாம்பலும் கொண்டு விளக்கப் பட்ட வெங்கலப் பானையில் காய்ந்த தென்னம் மட்டைகளாலும் பன்னாடை மற்றும் பனை மட்டைகளாலும் எரிக்கப் படும் அடுப்பில் மருமக்களும் மச்சாள் மார்களுமாகக் குழல் புட்டு/ நீத்துப் பெட்டியில் பிட்டு அவிக்கும் வாசம் தூள் கிழப்பும்.பிட்டும் தேங்காய் பூவும் தரும் வாசம் என்பதையும் தாண்டி பனை ஓலையால் கூம்பு வடிவில் தயாரிக்கப் படும் நீத்துப் பெட்டிக்கும் மூங்கில் குளாயினால் செய்து பருத்தித் துணி கொண்டு சுற்றப் பட்ட பிட்டுக் குழலினால் அவிக்கப் படும் பிட்டு மீண்டும் பனை ஓலைப் பெட்டுக்குள் கொட்டப் படும்.பிட்டின் வாசமும் பனை ஓலையின் வாசமும் சேர்ந்து ஒரு வித வாசம் அந்த நாற்சார வீடு பூரா பரவும்.

சரி இதற்குப் பொருத்தமா ஏதாவது கூகுளில் படம் ஏதாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பார்த்தால் மாதேவி என்றொரு சகோதரி பல அரிய - இப்போது பெரும்பாலும் கானக் கிடைக்காத படங்களைப் பதிவேற்றி இருக்கிறார்.(http://maathevi.wordpress.com/)
நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.இதனை ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.



இது திரிகை.தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.



இது அம்மி.இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கல் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்லங்கலை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு?



கொக்கத் தடி என அழைப்பது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.



இது தயிர் கடையிற மத்து.தயிரில் இருந்து வெண்னையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.


உரல்! மறக்க முடியுமா இதை? உரல் மாதிரி ஏன் நிக்கிறாய் என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.

இதைப் போல பொக்குணி உரல் என்றும் ஒரு உரல் இருந்தது. அது மரத்தாலானது. இடித்து இடித்து அது மிக ஆழத்துக்கு உட் குழிந்து போயிருக்கும். தோசைக்கு இடிச்ச சம்பல் என்று ஒன்று இதில் தான் இடிப்பார்கள்.



அடுப்பு! பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.



ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல். இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’



பாக்கு வெட்டி! பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!



சட்டியும் அகப்பையும்! களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!



காம்புச் சத்தகம்! இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.



ஆட்டுக் கல்! வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!



சுளகும் இடியப்பத் தட்டும்! சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை,மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும். ’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்று அடிக்குமாம்’ என்ரொரு பழமொழி ஊரில் வழக்கில் இருந்தது.கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!



திருவலகை! இது தான் சமையலறை நாயகன்.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!



வெத்திலத் தட்டம்!வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது.



இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது. தட்டத்துக்கு அருகில் இருப்பதைப் போடு செம்பு எண்டு எழுதி இருக்கிறா.அது வெத்திலையை ஸ்ரொக் பண்ணுற சாமானா இருக்கலாம்.



இதுக்குப் பேர் விசிறி. பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?




விசேட நன்றி;மாதேவி.

(http://maathevi.wordpress.com/)