Monday, April 11, 2011

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே!


புறநானூறு படித்தேன்.

அதன் மூலமும் தெளிவுரையும் மூலம் சிதைவுறாதபடி அதனை தமிழுக்கு வழங்கி இருக்கிறார் வ.த. சுப்பிரமணியம் அவர்கள்.

முன்னரெல்லாம் யார் யாரோ எல்லாம் படித்துத் தம் ரசனைக்கேற்ப அவற்றை அடையாளம் கண்டு ‘தம்முடய சமையலாக’அதைத் தந்த போது இதுவல்லவோ சுவை என்று மகிழ்ந்திருக்கிறேன்.

அண்மையில் மு.க.வின் சங்கத்தமிழ் படித்த போது அதன் மூலத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை அது தூண்டியது.(இதற்காக யாரும் என்னோடு சண்டைக்கு வந்து விட வேண்டாம்.:)

நம்ப முடிகிறதா? அவுஸ்திரேலிய கவுன்சில் நூலகத்தில் தமிழுக்கென்று ஒதுக்கப் பட்டிருக்கிறது ஒரு பகுதி. அங்கு இருக்கிறது ‘புறநானூறு மூலமும் தெளிவுரையும்’.

ஒரு புது வாழ்க்கைக்குள் காலடி வைத்ததைப் போல உணர்கிறேன்.

உங்கள் எவருக்கேனும் இலக்கியத்தின் பால் ஈடுபாடு இருக்குமானால் முதலில் வெற்றிடமாக வெறும் தாளாக இருக்கும் உள்ளத்துக்குள் முதலில் மூல நூலை படித்து முதலில் உங்கள் சமையலைச் செய்யுங்கள்.அதன் மூலத்தின் சுவை உங்களால் முதலில் ஆக்கப் பெறட்டும். வேறு ஆன்றோர்களின் சிந்தனை புகுவதற்கு முதல் மூலத்தை நாம் படித்து நம் சிந்தனையை சுயமாய் மொழிபெயர்த்து வளம்படுத்திக் கொள்ள வேண்டியது முதலில் முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன்.

ஏனெனில் உங்கள் கண்களால் மூலத்தைப் பார்த்து உணர்வதைப் போல மற்றவர் கண்களால் அதனைக் கண்டுணர்ந்திருக்க முடியாது. மேலும்,உங்களுக்குப் பிடித்திருக்கின்ற ஒன்று மற்றவருக்கு பிடிக்காது போயிருக்கவும் வாய்ப்புண்டு அல்லவா?

ஒரு முறை றீடேர்ஸ் டைஜஸ்ட் டில் படித்த ஒரு சம்பவம் இது.ஒரு குழந்தை 3,4, வயதானவள். சற்று தள்ளி உள்ள பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போவது வழக்கம்.ஒரு நாள் அவள் விளையாடப் போய் சற்று நேரத்துக்கப்பால் மழை வரும் அறிகுறி. சட்டென இருண்டு மின்னலும் இடியுமாக ஊர் பெரு மழை ஒன்றுக்குத் தயாராகி விட்டது.

தாயாருக்கு குழந்தை பற்றிய எண்ணம் எழ,அவசர அவசரமாகக் காரோடு குழந்தை போன வீட்டுக்கு ஓடிப் போனாள்.மகளோ பாதித் தூரம் வந்து கொண்டிருந்தாள். மின்னலும் இடியும் இருட்டுமாக இருந்த அத்தருணம் அக்குழந்தையோ சற்றும் பயமின்றி மின்னல் எறிக்கும் போதெல்லாம் நடப்பதை நிறுத்தி புன்னகைத்து விட்டு மின்னல் மறைந்ததும் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிட்ருந்தாள்.

தாய்க்கு அது புரியாத புதிராக இருக்க, அவளை சென்றடைந்ததும் ‘ஏன் மகளே மின்னலுக்குச் சிரித்தாய் ?’என்று கேட்ட்டாள்.

மகள் பதிலளித்தாள்.”கடவுள் போட்டோ எடுக்கும் போது நான் மகிழ்ச்சியாகப் புன்னகைக்கத் தானே வேண்டும்?”

இப்படி நம்மால் சிந்திக்க முடியுமா? ஒரு குழந்தையால் மட்டுமே அது சாத்தியம். இல்லையா?

இது இலக்கிய நூல்களைப் படிப்பதற்கும் பொருத்தமானதே!

புறநானூறில் 91வது பாடலை ஒளவை பாடி இருக்கிறார்.

மிகப் புகழ் பெற்ற பாடல் தான். தெரிந்த கதையும் கூடத் தான். என்றாலும் அதனைப் பார்த்ததும் பகிர்ந்து கொள்ள ஆசை எழுந்தது.

அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்து சாகா வரம் பெற்ற நெல்லிக் கனியை அதன் உண்மையச் சொல்லாது (சொன்னால் வாங்க மறுத்து விடுவாள் என்றஞ்சி)நெல்லிக்கனி வழங்கியமைக்காக அந்த அன்பில் மனம் நெகிழ்ந்து பாடுகிறாள் ஒளவை.பாடல் இதுவே,

“.............
நீலமணி மிடற்று ஒருவன் போல,
மன்னுக பெரும நீயே! தொல் நிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து சக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!” (6-11)

அதன் பொருள்; பழமை விளங்கும் மலைச் சரிவில் உள்ள புதர்களுக்கிடையில் சிறிய இலையுடைய நெல்லி மரத்தில் இருந்து அரிய முயற்சி செய்து பெற்ற இனிய கனியை நீ அருந்த வேண்டும் என்று கருதாது, அதன் பயனும் இன்னதென்று வெளியே தெரியுமாறு உரைக்காது, நின் மனதில் இருத்தி, சாதல் நீங்க வேண்டும் என்று எமக்குக் கொடுத்தனையே! பால் போன்ற வெண்மையான பிறச் சந்திரனைத் தலையில் சூடி நீல கண்டத்தை உடைய தனிப்பெருஞ் சிறப்புடைய சிவபிரான் போன்று இந் நிலத்தில் நீ ஒளிர்க!

புலவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்படியான ஒரு நேசமும் நட்பும் இருந்திருக்கிறது பாருங்கள்!!

எத்தகைய ஒரு நெகிழ்ச்சியான ஆசீர்வாதம் இது!!!

2 comments:

  1. முதலில் வெற்றிடமாக வெறும் தாளாக இருக்கும் உள்ளத்துக்குள் முதலில் மூல நூலை படித்து முதலில் உங்கள் சமையலைச் செய்யுங்கள்.அதன் மூலத்தின் சுவை உங்களால் முதலில் ஆக்கப் பெறட்டும். வேறு ஆன்றோர்களின் சிந்தனை புகுவதற்கு முதல் மூலத்தை நாம் படித்து நம் சிந்தனையை சுயமாய் மொழிபெயர்த்து வளம்படுத்திக் கொள்ள வேண்டியது முதலில் முக்கியம்//

    சரியான கணிப்பு!

    //கடவுள் போட்டோ எடுக்கும் போது நான் மகிழ்ச்சியாகப் புன்னகைக்கத் தானே வேண்டும்?//

    நம்மை விட வயதில் மட்டுமே சிறியவர்கள் அல்லவா குழந்தைகள்!

    //புலவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்படியான ஒரு நேசமும் நட்பும் இருந்திருக்கிறது பாருங்கள்!!

    எத்தகைய ஒரு நெகிழ்ச்சியான ஆசீர்வாதம் இது!!! //
    ):

    ReplyDelete
  2. அதிலேயும் மின்னலைக் கடவுள் எடுக்கிற போட்டோ என்று நினைத்த அக்குழந்தையின் குழந்தைமை - அந்தக் கற்பனை - அவர்கள் வாழும் அந்த மன உலகு - எத்தனை அழகு நிலா!

    பாருங்கள்! சங்க காலத்தில்(கி.பி.1-3) வாழ்ந்திருக்கிறார் ஒரு பெண்பாற் புலவர்!

    கல்விப் புலமையும் சுதந்திரமும் பெண்ணுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது.

    அதே நேரம் அரச மட்டத்தோடு நல்ல நட்புறவும் அன்பும் கூட விளங்கியிருக்கிறது!

    ஒளவையினுடய அந்த சுயாதீனம்,மிடுக்கு, கம்பீரம்,துணிவு,தன்னம்பிக்கை,சுயமரியாதை,- அவற்றினால் உயர் மட்டத்திலும் அவளுக்குக் கிடைத்த மரியாதை,கம்பீரமாய் அவள் வாழ்ந்து முடித்த பாங்கு....மெய் சிலிர்க்கிறது நிலா!

    எத்தனை அழகாய் சிறப்புற்றிருந்திருக்கிறது சங்கத்து வாழ்வியல் என்பதற்கு இந்த ஒரு பாடல் போதாதா தாயே?

    ReplyDelete