Monday, June 20, 2011

ஊதாப் பூக்கள் ((Jacaranda tree)



வான் முட்ட உயர்ந்து நிற்கும் ஊதாப் பூ மரம்.



தனித்துவம் பிரகாசிக்க கம்பீரமாய் ஊதாப் பூ மரம்.



மக்களிடையேயும் நிழல்குடை பிடித்த படி ஊதாப்பூ மரம்.



வீட்டுக்கும் காவலாய்...



வீதியோரம் விழாக் கோலமாய்.....



கொட்டிய பின்னும் கம்பளமாய்.......

(படங்கள்: நன்றி, கூகுள் இமேஜ்)

Thursday, June 16, 2011

ஓர் இலையின் குரல்




உலகம் சற்றே நிதானிக்கின்றது.

ஓட்டத்தை நிறுத்தி பின்னோக்கிப் பார்க்கிறது.

எதையோ தவற விட்டதாய் உணர்கின்றது.

இயற்கையுடனான தொடர்பறுந்து நேரத்தோடும் விஞ்ஞான தொழில் நுட்பத்தோடும் ஓடிப் பல வருட மைல்களையும் நூற்றாண்டுகளையும் கடந்தாயிற்று என்ற சோக உண்மை உறைக்க ஸ்தம்பிக்கிறது உலகு, மனதும்.

ஓடிக் களைத்து மூச்சு வாங்குகிறது 21ம் நூற்றாண்டு உலகம்.சந்திரனை எட்டி, அணு ஆயுதங்களைக் கொட்டி, நாடுகளோடு நாடுகள் மோதி முட்டுப் பட்டு நிற்கிறது நவீன நாகரிகம்.

இனிப் போக இடமில்லை என்றான போது பூமி வெப்பப் பந்தாகிப் போனது.இயற்கை இப்போது உரத்தும் அதட்டியும் பேசத் தொடங்கி விட்டது.மனச்சாட்சியின் குரலாய் விஸ்தாரம் எடுக்கிறது அது.விரக்தி விளைந்திருக்கும் மயாண மனப் பரப்பில் அது துல்லியமாய்க் கேட்கிறது.

குரல் இடியாய் காதில் விழுகிறது.நிவாண உண்மையாய் அது விகசிக்கிறது!

அது சுனாமியாக,நில அதிர்ச்சியாக,வெள்ளப் பெருக்காக,புயற்காற்றாக, காட்டுத் தீயாக பூகம்பமாக,சொல்லுகின்ற செய்தி ஒன்று இருக்கின்றது. அந்தப் பயமுறுத்தும் செய்திக்கு நம் விஞ்ஞானத்திடம், தொழில் நுட்பத்திடம் பதில் ஏதும் இல்லை.

அது இன்னும் நம்மைப் பயமுறுத்துகின்றது.

நாம் எங்கு தோற்றோம்? எங்கு தோற்றோம்?

மனிதம் தோற்ற பொழுதுக்கும் இயற்கையின் குரலைக் கேட்க மறந்த பொழுதிற்கும் வயது ஒன்றா?

தெரியவில்லை.

நம் மூதாதையரின் முணுமுணுப்பை அசட்டை செய்த பொழுதுக்கும் சுயநலம் மேலோங்கிய பொழுதுக்கும் வயது ஒன்றா?

அதுவும் தெரியவில்லை.

'உங்களுக்கு நிலம் விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள்.எங்களுக்கு அதுவே வாழ்க்கை.
தூய்மையான காற்றை,பெருகியோடும் ஆற்றை,மலைகளின் மெளனத்தைப் புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் தெரியாத அதிகார வர்க்கத்திடம் எப்படி இயற்கையை நாங்கள் ஒப்படைப்பது? அவர்கள் இயற்கையை விலைக்கு விற்கப் படும் பொருட்களைப் போலவே கருதுகிறார்கள்.

இங்கு உள்ள மரத்தை நீங்கள் வெறும் மரமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை எங்கள் மூதாதையர்களாகப் பார்க்கிறோம்.இங்கு பூத்துள்ள பூக்கள் இறந்து போன எங்கள் சகோதரிகளின் சிரிப்பு.காடு தான் எங்களின் வீடு.எங்களின் தாய் தகப்பன்.எங்களை நீங்கள் அதிகாரத்தின் துணை கொண்டு விரட்டி இதைக் கைப்பற்றக் கூடும்.ஆனால் இதன் புனிதத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் சிதைத்து விடுவீர்கள் என்பதற்காகவே நாங்கள் போராட வேண்டி இருக்கிறது.' என்றான் அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவன்.

இந்த இடத்தில் தான் நாம் தவறிழைத்தோமா?

சுயநலம் மேலோங்கிய அந்தப் பொழுது?
சாத்வீகக் குரலைப் புறக்கணித்தோமே அந்தப் பொழுது?
அம்புவில்லை துவக்குத் தோட்டா வென்று விட்ட பொழுது?
மூர்க்கம் முந்தியடித்து முந்திக் கொண்ட அந்தப் பொழுது?
அதிகாரம் கோலோச்சிய அந்த அலட்சியப் பொழுது?
மிதமிஞ்சிய இறுமாப்பு ஆட்கொண்ட அந்தப் பொழுது?

இருக்கலாம்; தெரியவில்லை.

ஆனால் பண்டய தமிழ் இனம் எவ்வாறெல்லாம் இயற்கையின் பாஷையைப் புரிந்திருந்தது என்று சற்றுப் பார்ப்போமா?

சங்க காலத்து மந்தாரப் பொழுது அது! சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கிடையே எப்போதும் பூசல்.வீரம் பொருந்திய படைதிரட்டிப் போருக்குத் தயாராக இருக்கும் பாண்டிய மன்னனிடம் வருகிறான் ஒரு குடியானவன். அவன் சமான்யன்.வாழ்வை நேசிக்கும் ஏழை.மண்ணோடு ஒட்டிய உறவு அவனுக்கு.அதிகாரம்,ஆதிக்கம்,போர்,பூசல் எல்லாம் அவனுக்குப் புரியாத சமாச்சாரம்.என்றாலும் ஓர் அசட்டுத் துணிவு அவனுக்கு.அணில் மண் கொண்டு வந்து கொட்டி ராமனுக்கு உதவியதே! அதைப் போல.ஏதோ அவனால் முடிந்தது!

அவனுக்குத் தெரியும் வெற்றி பாண்டியனுக்கே என்பது. அதனை எதிர் கொண்டு அவன் சொல்கிறான்."வேந்தே! கற்றவர்களும் சரி கல்லாதவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள்.அத்தகைய சிறப்புடையவன் நீ.உனக்கு ஒன்று சொல்கிறேன் சற்றே கேட்பாயாக! நீ எங்கள் நாட்டு வயல்களை, வயல் வெளிகளை எடுத்துக் கொள்; ஊரினை எரிக்க வேண்டுமென்று தோன்றினால் அதனையும் செய்;உன் வேலினால் மக்களைக் கொல்ல விரும்பினாலும் அதனை நீ செய்யலாம்.ஆனால் எங்கள் காவல் மரங்களை மட்டும் அழித்து விடாதே,அது உன் யானையைக் கட்டுவதற்குக் கூட பலமற்றது என்று கெஞ்சுகிறார் இவர்!

அந்த அழகான பாடல் இது தான்,

"வல்லவராயினும் வல்லுனராயினும்
புகழ்தலுற்றோருக்கு மாயோனன்ன
உரைசால் சிறப்பிற் புகழ் சால் மாற
நின்னொன்று கூறுவதுடையே னென்னெனின்
நீயே; பிறர் நாடு கொள்ளுங் காலை யவர் நாட்
டிறங்கு கதிர் களனி நின்னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரு ரெரியு நக்க
மின்னு நிமிர்ந்தன்ன நின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
கடிமரந் தடித லோம்பு நின்
நெடுதல் யானைக்குக் கந்தாற்றாவே!"

வஞ்சித்திணையில் வரும் இப்பாடலை காவிரிப் பூம் பட்டிணத்துக் காரிக்கண்ணனார் பாடி இருக்கிறார்.மரங்கள் மீது அவர்கள் கொண்ட நேசத்தைப் பார்த்தீர்களா?

இயற்கையைத் தடுக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை என்று பாடும் ஒரு புறநானூற்றின் 51 வது பாடல் "நீர் மிகின் சிறையும் இல்லை;தீ மிகின் மண்ணுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;வளி மிகின் வலியும் இல்லை...." என்று இயற்கையின் ஆற்றலினைச் சொல்கிறது. இயற்கையினை சீற்றத்தின் முன் நாமெல்லாம் சிறு துளி என்பதனை நமக்கு ஆழிப் பேரலையும் காட்டுத் தீயும், வெள்ளப் பெருக்கும், நில நடுக்கமும், சூறாவளியும் சொல்லிக் கொடுத்த வண்ணம் தானே இருக்கின்றன.

அவற்றின் இன்றய குரல் தான் நமக்கு அச்சம் ஊட்டுவதாக இருக்கிறது.அதுவே பின்னோக்கி அச்சத்தோடு பார்க்க வைக்கின்றது.

இங்கே சங்கத்துப் பெண்ணொருத்தி புன்னை மரத்தைத் தன் தோழி என்கிறாள். எப்படி?நற்றினையின் நெய்தல்-172 வது பாடல் அதனை நயமுற இப்படி நவில்கிறது.

"விளையாடு ஆயமொடு வெண்மல் அழுத்தி
மறந்தனம் துரந்த காழ் முளை அகைய
நிய் பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம் புரிவான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே"

அதாவது ஒரு நாள் புன்னை விதைகளை நானும் அவளுமாக மண்ணுக்குள் புதைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.அப்போது தாயார் எங்களை அழைத்ததால் அதனை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து விட்டோம். அதன் பிறகு பெய்த மழையால் புன்னை விதை முளை விட்டு வளரத் தொடங்கி விட்டது. நாம் அதற்கு தேனும் பாலும் ஊற்றி எங்கள் தங்கை எனவே கருதி சிரத்தையோடு வளர்த்தோம்.

அம்மா எங்களைத் திட்டுவதென்றால் கூட'நும்மிலும் சிறந்தது நுவ்வையாகும்'என்றெல்லோ திட்டுகிறாள்.அவ்வளவுக்கு புன்னையை எங்கள் தங்கையைப் போலவே அவளும் மதிக்கிறாள். யாராவது தங்கையின் முன் காதல் சல்லாபத்தில் ஈடு படுவார்களா என்ன? அதனால் நான் இனி அந்தப் புன்னை மரத்தடிக்கு வரமாட்டேன் என்று தலைவி கூறியதாகத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள். மரத்தைத் தன் தங்கையாக வளர்த்து அதன் முன்னால் சந்திக்க வரத் தயங்கும் கூச்சம் கொள்ளும் காதல் மகளீரைக் கொண்டிருந்தது சங்க காலம்.தாய் கூடவல்லவா தன் குடும்பத்துள் ஒருத்தியாய் புன்னை மரத்தை வரிந்து கொண்டு விட்டாள்.

இன்று எங்கே போனது அந்தப் பிணைப்பு?

இன்னொருத்தி ஊடல் கொள்கிறாள் முல்லைப் பூவோடு.அவளுக்குப் பெரும் கோபம் முல்லைப் பூவோடு.'முல்லையும் பூத்தியோ' என்று பேசுகிறாள் முல்லைப் பூவை.காரணம் சாந்தன் என்ற வீரன் இறந்து போனான்.மக்கள் துக்கத்தோடு இருக்கிறார்கள்.நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவளின் மனமும் வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது.இந்த அழகான பாடல் புற நானூற்றில் 242வது பாடலாக அமைகிறது.பாடலைப் பாடிய புலவர் குடவாயிற் தீரத்தனார். பாடல் இது தான்.

"இளையோர் சூடார்;வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்;பாடிணி அணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க்கடந்த
வல் வேற் சாந்த்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ? ஒல்லையூர் நாட்டே!"

என்று கேட்கிறாள் இப்பெண். அதாவது முல்லை மலரே! உன்னை இளையவர்கள் சூடிக் கொள்ள மாட்டார்கள்; வளையல்களை அணிந்த இளம் பெண்களும் பறிக்கப் போவதில்லை; யாழினை வாசிக்கின்ற பாணனும் பறிக்க மாட்டான்; பாடினியும் அதனைச் சூடிக் கொள்ளப் போவதில்லை;வலிய வீரனான ஒல்லையூர் நாட்டைச் சேர்ந்த சாந்தன் வீர மரணம் எய்திய பின்பு இந்த ஒல்லையூர் நாட்டில் (இந்த நாட்டுப் பிரஜையாய் இருக்கிற)முல்லையே நீ ஏன் வீணாகப் பூத்திருக்கிறாய்? வலிய வீரனான அவன் மரணமெய்தியதால் பகை நாட்டவர்கள் தான் களி கொள்வர்.மனம் மகிழ்வர்.நீ ஏன் மகிழ்ந்து பூத்திருக்கிறாய்? உனக்கு என்ன சந்தோஷம் என்று இப்படிக் கொள்ளையாய் பூத்துப் போய் கிடக்கிறாய்? என்று முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்கிறாள் இம்மகள்!

முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்ளும் இந்த உறவினளை என்னவென்பது?

இயற்கையோடு நம்மூதாதையர் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

அண்மையில் இணையத்தில் பார்த்த ஒரு கட்டுரை இப்படி முடிந்திருந்தது.'என்றேனும் ஒரு நாள் சில மணித் துளிகளாவது ஏதாவது ஒரு தாவரமாய் உங்களை நீங்கள் உருவகித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் மீது இலைகளும் கிளைகளும் மலர்களும் காய்களும் கனிகளும் உருவாகியிருப்பதை கற்பனை பண்ணிப் பாருங்கள். ஒரு மரத்தின் மகத்துவமும் அதன் தாய்மை மிக்க தியாகமும் அப்போது புரியும்.'

இந்த இலையின் குரல் இந்த இயற்கையின் செய்தி இப்போது உங்களுக்குக் கேட்கிறதா?


ஒரு மரத்தை, அதன் தியாகத்தை, அதற்குரிய உன்னதத்தோடும் மரியாதையோடும் இனியும் எம்மால் பார்க்க முடிதல் கூடுமா?

அதில் துளிர்க்கட்டும் புது உலகு!

மனிதமும் சமாதானமுமான புது உலகு!!