Monday, November 5, 2012

வெத்திலைத் தட்டம்

பித்தளையினாலான பாதமும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த தட்டமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் வெத்திலைத் தட்டம் அல்லது கால் தட்டம் என அழைக்கப் படுகின்றது.



இந்த ஒளிப் படத்தில் காட்டப்படும் வெத்திலைத் தட்டம் இலங்கை நாட்டுக்குரியது. தற்போது பிரித்தானியாவில் விலைக்கு வந்திருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் தட்டத்தின் நடுத்தண்டில்
ப + தோ + க + எனத் தமிழில்  எழுதப்பட்டிருக்கிறது. பழம் பொருட்கள் விற்கும் இந்த மனிதருடய இணையக் கடையில் பல அழகிய அரிய பழங்காலப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன. நேரமிருந்தால் சும்மா ஒருக்காப் போய் தான் பாருங்கள்!

முகவரி:

http://www.michaelbackmanltd.com/960.html


தமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும் வெற்றிலைத்தட்டத்துக்கும்  தனியான ஓரிடம் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது. அதனால் வெற்றிலையை வைத்திருக்கும் தட்டமும்  தனக்கென தனித்துவமான வடிவத்தையும் இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.













திருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு மணமக்களின் சார்பாக அவர்களுடய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முகமாக மணமக்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதப் பைகளில் வெற்றிலைபாக்கு,பூ, பலகாரம், கொடுத்து விடுவது மரபார்ந்த வழக்கமாக இருந்த அதே காலத்தில் திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலையினதும் வெற்றிலைத்தட்டத்தினதும் பாவனை வெகுவாக வேண்டப்பட்டிருந்தது.

மங்கைப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சம்பிருதாயப் பொழுதுகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு இப்பித்தளைத் தட்டம் கன கம்பீரமாக முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் வீற்றிருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை,பாக்கு சுண்ணாம்பு ஆகியன வைக்கப் படும் தட்டங்கள் அனேக வீடுகளில் காணப் பட்டன. பொதுவாக பித்தளை உலோகத்தில் ஒரு சாண் அளவு உயரத்தில் அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டனவாக அவை அமைந்திருந்தன.

அவை எலுமிச்சம் புளி அல்லது பழப்புளியினால் தென்னந்தும்பு, சாம்பல், சவர்க்காரம், மற்றும் ரின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் சலவைத் தூள்கள் ( விம்) எல்லாம் சேர்த்து மினுக்கிப்  பாவிக்கப் பட்டன.

காலப் போக்கில் வெற்றிலைப் பாவனையாளர்கள் குறைந்தமை, தட்டங்களின் கனதியான தன்மை, அவற்றைச் சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமம்,பாவனைக்கு இலகுவான வேறு மென் உலோகங்களின் வருகை போன்ற இன்னோரன்ன காரனங்களால் வெற்றிலைப் பாவனையும் வெற்றிலைத்தட்டத்தின் பாவனையும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.

( குறிப்பும் நன்றியும்: 4 வயதுக்குக் குறைந்த 3 குழந்தைகளின் தந்தையான விமலன் கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்குத் தன் குடும்பத்தோடு சென்று திரும்பிய போது தன்னோடு,  உருக்கத் தயாராக இருந்த பழைய பித்தளைப் பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து தேடி எடுத்து சிட்னிக்குக் கொண்டு வந்து சேர்த்த  பொருளில் இந்த வெத்திலைத் தட்டமும் ஒன்று.

சந்தோஷமாகப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு :  யசோதா : 02.11.2012.)

4 comments:

  1. ஹையா!! இதே போன்ற‌தொரு த‌ட்ட‌ம் என்னிட‌முண்டு. திரும‌ண‌த்துக்குப் பின் என் அம்மாவிட‌ம் நானாக‌ விரும்பிக்கேட்ட‌ ஒன்றே ஒன்று இதுதான். நான் விப‌ர‌ம் தெரிந்து பார்த்துவ‌ந்த‌ அது இன்றைக்கும் அது தொட‌ர்பான‌ சிறுபிராய‌த்து நினைவ‌லைக‌ளை தூண்டிய‌ப‌டி என்னுட‌ன். வெற்றிலைக் காளாஞ்சி என்போம் அதை. நீங்க‌ சொல்வ‌து போல் உண‌வுக்குப் பின் வெற்றிலைக் காளாஞ்சியை விருந்தின‌ர் முன் வைத்து உப‌ச‌ரிப்ப‌து வ‌ழ‌க்க‌ம். வீட்டுக்கு ஒருவ‌ர் வெற்றிலை போடும் ப‌ழ‌க்க‌த்திலிருந்த‌ன‌ர் அக்கால‌த்தில். வெற்றிலைக‌ள், கொட்டைப் பாக்கு, ந‌றுக்க‌ பாக்குவெட்டி, சீவ‌ல், சுண்ணாம்பு ட‌ப்பா(சுண்ணாம்புக் கிளிஞ்ச‌ல்க‌ளை வாங்கிவ‌ந்து கொதிநீரில் போட்டு குழ‌ப்பி ஒரு சுண்ணாம்புக் க‌ல‌ய‌ம் இருக்கும் எல்லோருடைய‌ வீட்டிலும். காய்ந்து போகாம‌ல் அவ்வ‌ப்போது சுடுநீர் ஊற்றி மூடியிருக்கும். கால‌ப்போக்கில் வாச்னைபோட்டு நிற‌மூட்டி சிறிய‌ பிளாஸ்டிக் ட‌ப்பாக்க‌ளில் வ‌ந்த‌தை வாங்க‌த் தொட‌ங்கின‌ர்) ஏல‌க்காய்க‌ள், கிராம்பு சிறித‌ள‌வு எல்லாம் அதில் அல‌ங்கார‌மாய் அடுக்கி வைக்க‌ப் ப‌ட்டிருக்கும்.

    இப்ப‌டிப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் தேவைய‌ற்று வ‌ழ‌க்கொழிந்து விட்டாலும், எஞ்சியிருப்ப‌வை பொக்கிஷ‌மாகி க‌ட‌ந்த‌ கால‌த்தின் ஆவ‌ண‌மாய் ந‌ம்முட‌ன்.

    கொஞ்ச‌ நாள் நீர் விட்டு பூக்க‌ள் போட்டு அல‌ங்க‌ரித்து வாச‌ல்புற‌த்தில் வைத்திருந்தேன். நீங்க‌ சொன்ன‌து போல் ப‌ராம‌ரிப்பு சிக்க‌லில் ம‌றுப‌டி ப‌ர‌ண் ஏறிவிட்ட‌து அது.

    ReplyDelete
  2. அடடா! அருமை, அருமை!! எனக்குத் தெரியாத எத்தனையோ விடயங்களை ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டீர்கள் தோழி!! இதில் எவ்வளவு ஆசை இருந்திருந்தால் அதை தாய் வீட்டுச் சீதனமாய் கொண்டுவந்திருப்பீர்கள்!! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நிலா!

    உண்மையில் இப்படியான கட்டுரை எழுத ஆரம்பித்தது தமிழ் விக்கிபீடியாவிற்காக! அவற்றில் மூழ்க மூழ்க எத்தனை எத்தனை பொக்கிஷங்கள் வெளியே வருகின்றன!

    தோழி, எனக்குத் தெரியாத எத்தனையோ விடயங்களைப் பட்டியல் இட்டிருக்கிறீர்கள். முடிந்தால் அவற்றை படத்தோடு பதிவு செய்யுங்களேன்! நாங்களும் கொஞ்சம் அறிந்து கொள்கிறோம்.

    அந்த அபூர்வ பொருட்கள் விற்கும் முகவரியில் சென்று பார்த்தீர்களா? நீங்கள் சொன்னது மாதிரி நம் நாட்டவர் பாவித்த சுன்னாம்பு டப்பா கூட காட்சிப் பொருளாய் விற்பனைக்கு இருக்கிறது.

    உங்களிடம் இருக்கும் இத்தகைய பாரம்பரியப் பொருட்களை எல்லாம் பார்க்க ஆவலாக இருக்கிறது நிலா. அவை காணாமல் போய் விடுவதற்கு முன்னால் பதிவு செய்து விடுங்கள் தோழி

    ReplyDelete
  3. அழகான தட்டு...

    அந்தக் காலத்தில் எல்லாவற்றையும் ரசனையோடு செய்தார்கள்... ரசித்தார்கள்... இன்று... ?

    இணைப்பில் பார்க்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  4. மகிழ்ச்சி நண்பரே! கட்டாயம் சென்று பாருங்கள். ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.இந்தியப் பண்பாட்டுக்குரிய பழங்காலப் பொருட்கள் கூட அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.

    இடது புறமாக இருக்கின்ற என் விருப்பப் பக்கத்தில் அம் மனிதருடய கடை :) இணைக்கப் பட்டிருக்கிறது.

    வரவுக்கும் பகிவுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete