Sunday, March 3, 2013

Bower Bird

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணாத்திப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
பதினாறு வயதானால் பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்


ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளை நினைக்க வைத்தது உலகின் சுறுசுப்பான உயிரினங்கள் பற்றிய சிறு குறிப்பொன்று.



மனிதர்கள் சுசுறுப்பானவர்கள் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. உண்மையில் மனிதர்களை விட சுறுசுறுப்பில் மிஞ்சியவர்களாக தேனீக்கள்,பென்குயின்கள்,மண்புழு,கறையான்,Cleaner Wrasse என்ற ஒருவகை மீனினம்,Bower Bird என்ற ஒரு பறவை இனம், ஆபிரிக்கக் காட்டுநாய், பெண்சிங்கம், நீர் நாய், எறும்பு எனப்பட்டியலிடுகிறது அந்தக் குறிப்பு.



என்னை ஆச்சரியப்பட வைத்தது Bower Bird என்ற பறவை. சுறுசுறுப்பில் இது ஆறாம் இடத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறது. இன விருத்திக்காக; முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக கூடு கட்டுவது தானே பறவைகளின் இயல்பு.  ஆனால் இந்தப் பறவை தன்னுடய சந்தோஷத்திற்காகக் கூடு கட்டுகிறதாம். அழகிய முறையில் கலாரசனையோடு அது தன் வீட்டை  வடிவமைக்கிறதாம். அதுவும் வழக்கமாகப் பறவைகள் கூடு கட்டப் பயன்படுத்தும் குச்சிகள் தும்புகளால் அல்லாமல் நிறமுள்ள கூழாங்கற்கள், பூக்கள், வளவளப்பான சிப்பிகள், மரத்துண்டுகள், சின்னச் சின்ன வண்ணமான பொருட்களால் தன் கூட்டை தனித்துவமான முறையில் வடிவமைக்கிறதாம். எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தனித்துவமாகத் தெரியத்தக்க விதத்தில் கண்களை ஈர்க்கும் வகையில் அது தன் வீட்டை இணக்கிக் கொள்கிறது என்று அக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.


அதிசயம் என்னவென்றால் அது பாடுபட்டு கலாரசனையோடு வீட்டை இணக்கி விட்டு அதன் அழகில், ரசனையில் மயங்கி அதற்கு முன்னால் நின்று ஒரு ஆட்டம் போடுமாம். அந்த ஆட்டத்தில் மயங்கி பெண்பறவை இந்த ஆண்பறவையைத் தேடி  வந்து சேர்ந்து கொள்ளுமாம்!

’கலைஞக் குருவி’ போலும்! ரசிகை சோடி சேர்ந்து கொள்கிறது!

அதிசயமாக இல்லை?

6 comments:

  1. அதிசயங்கள் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நலம் தானா தனபாலன்? பல நாட்களாய் எங்கே காணோம்?

    ReplyDelete
  3. சந்தோஷத்துக்காக ஒரு கூடு... அதன் முன்னொரு உற்சாக ஆட்டம்... அதில் மயங்கி இணையுமொரு துணை... அடடா... படைப்பின் விசித்திர அழகு பிரம்மிக்கச் செய்கிறதே... அடுத்த பிறவி என்றிருந்தால் அப்பறவையாகப் பிறந்திடுவோமா தோழி...

    ReplyDelete
  4. கலைத் திறமையை எல்லாம் ஒன்றுகூட்டி ரசனையோடு இணக்கிய கூட்டில் அதை ரசிக்கும் துணையோடு வாழ்க்கை!

    அற்புதம்!!

    /அடுத்த பிறவி என்றிருந்தால் அப்பறவையாகப் பிறந்திடுவோமா தோழி.../

    கிடைக்குமா?

    ReplyDelete
  5. இந்தப் பறவையைப் பற்றி அறிந்தபோது உண்டான வியப்பு இன்னும் மாறவே இல்லை. கலைஞக் குருவியைப் பற்றிய பதிவில் தெரிகிறது உங்கள் இயற்கையின் ரசனை. பாராட்டுகள்.

    இதுபோல் இயற்கையின் விந்தைகளைப் பற்றி ஒரு தொகுப்பாய் எழுதும் எண்ணம் வெகுநாளாய் மனத்துள் குடைந்துகொண்டே இருக்கிறது. விரைவில் எழுதவேண்டும். அதற்கு உரமூட்டுகிறது இப்பதிவு. நன்றி தோழி.

    ReplyDelete
  6. அடடா! கீதமஞ்சரியா? உங்களை பதிவுலகில் மீளக்கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நலமா?

    கட்டாயமாக எழுதுங்கள் கீதா. தூக்கணாங்குருவி, தையல் குருவி என்ற படியான பறவைகள் உலகமும்; வாலாட்டிக் கொண்டு வரும் நாயின் நன்றி,துள்ளியோடும் கன்றுகளின் மகிழ்ச்சி பற்றியும்; தோலை உரித்து இலகுவாக உண்ணத்தக்க விதமாகக் கனிகளைக் கொடுக்கும் மரவர்க்கங்கள், பழங்களின் தன்மைகள் அதன் வேறுபட்ட சுவைகள் பற்றியும்; பூக்கள் அதன் வாசங்கள்,நிறங்கள் இயல்புகள் தன்மைகள் பற்றியும்; இயற்கையாவே வளர்ந்து நிற்கும் பக்கவிளைவுகள் ஏதும் தராத மருத்துவ தாவரங்கள்,மூலிகைகள் பற்றியும்;இன்னும் இன்னும்.....

    கூடவே மனிதவிலங்கினம் அவற்றைக் கையாளும் தன்மை பற்றியும்.....

    வாழ்த்துக்கள் கீதா!

    ReplyDelete