Sunday, April 28, 2013

தாய் land - 3 -


வெளியே மழைக்கோலம். 

இராக்காலம்! சாப்பாட்டுக்கும் சுற்றுப்புறங்களைத் பரீட்சயப்படுத்திச் சற்றே இடங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் வெளியே புறப்பட்டோம்.

புன்னகை சுமந்த வண்ணம் ருக்ருக் வந்து நின்றது.


பொழுது சாய்ந்து இரவு நேரக் கடைகளின் ஆரவாரம்! திடீர் உணவுக்கடைகள் தெருவோரம் எங்கும். உடனே உடனே சமைத்து வருபவர்களுக்குக் கொடுக்கிறார்கள். மக்களும் தெருவோரமே நின்று சாப்பிட்டுச் செல்கிறார்கள். ஒரு தெருவோரக் கடை ஒன்றையே கீழே காண்கிறீர்கள். 


பெண்களும் ஆண்களும் கடும் உழைப்பாளிகளாகத் தென்படுகிறார்கள். சீனர்களைப் போலோ கொறியர்களைப் போலோ தீவிரமான அங்க அடையாளங்கள் இல்லாமல் ஆணும் பெண்ணும் மென்மையான தோற்றம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓரளவு கண்கள் அகலமாகவும் மூக்கு நீளமாகவும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

ஆங்கிலம் அநேகமாக எவருக்கும் தெரியவில்லை. விலைகளைக் கேட்கின்ற போது கல்குலேட்டரில் விலையைப் போட்டுக் காட்டுகிறார்கள். நாங்கள் அதிலிருந்து பேரம் பேசத் தொடங்குகிறோம்.20 இலிருந்து 40 % க்கு விலைகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கிறது.


பலரும் தாய்லாந்தைப் பற்றிச் சொல்லும் போது உணவினைச் சிலாகித்துச் சொல்லக் கேட்கலாம்.தெருவோர உணவுக்கடைகள் பற்றி போய் வருகின்ற எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் போன இடம் பிழையோ அல்லது எங்களுடய ரசனையில் தான் குளறு படியோ தெரியாது அவ்வளவு நல்ல அனுபவங்கள் எங்களுக்குக் கிட்டவில்லை என்பதையும் அவசியம் சொல்லியாக வேண்டும்.

அனேகமான இந்தத் தெருவோரக்கடைகள் கால்வாய்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கின்றன. (நாங்கள் போனவை) கால்வாய்களின் நாற்றத்தை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தெருவோரக் கடைக்காரர்களும் தம் பாத்திரங்களை கடையின் கரையில் இருந்து கானுக்குள் பாத்திரங்களைக் கழுவிய தண்ணீரை அனுப்புகிறார்கள்.அந்தத் தேங்கிய நீரின் வாடையைச் சுமந்த வண்ணம் உணவுகளின் சுவை அமைந்திருந்தமை சத்தியமாக என் பிரமையல்ல.


இந்தக் கடைகளை எல்லாம் தாண்டி முகப்புக்கு வந்தால் ஜே ஜே என்று சனக்கூட்டம். கடைகள் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கின்றன. பெரிய கடைகள் பெட்டிக்கடைகள் என்று எந்த வேறுபாடும் கிடையாது. சனக்கூட்டம் போவதும் வருவதுமாக இருக்கிறது.

மாம்பழம், பலாப்பழம், பப்பாப்பழம், மங்குஸ்தான், றம்புட்டான், வேறும் தெரியாத தெரியாத பழ வர்க்கங்கள், கிழங்குகள் வகைகள் போன்றவை வெட்டியும் முழுதாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. முடக்குகள் தோறும் தாய் மசாஜ் என்ற பெயருள்ள கடைகள் கண்சிமிட்டுகின்றன. ஒளி உமிழ்கின்றன. இந்தக்கடைகள் இரவு பகலாக வேலை செய்கின்றன. பெண்கள் பாரம்பரிய உடையனிந்து வெளியே நின்று வாடிக்கையாளர்களை அழைக்கிறார்கள்.




நிறைய மேலை நாட்டவர் !ஆணும் ஆணும் ஜோடியாக கிழவனும் இளம் பெண்ணும் கைகோர்த்த படி அரைகுறை ஆடைகளோடு இளம் தாய் பெண்கள் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்த படி, ...இப்படியாக ஜே ஜே என்று சனக்கூட்டம். சில பெண்பிள்ளைகள் பால்மனம் மாறா பருவத்தில் அப்பாவியாய் சிரித்தபடி வெள்ளைக்காரக் கிழவர்களோடு போவதைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. அவர்கள் நம்மைக் கடக்கின்ற போது நம்மைப் பார்த்து சினேகமாய் புன்னகைப்பது இன்னும் கொடுமை!

சொன்னால் நம்ப முடியுமா? அங்கே ஒரு பிள்ளையாரப்பா. அவர் தான் இங்கே கீழே உள்ள படத்தில் காட்சி தருகிறார். அவர் ஒரு சந்துக்குள் இப்படியாக நிமிர்ந்து கூரை எதுவும் இல்லாமல் நின்றபடி சிரிக்கிறார்.





இப்போது கொண்டு சென்ற கமரா தனக்கு சக்தி போதாது என எச்சரிக்கத் தொடங்கி விட்டது. கீழே இருப்பது ஒரு பெட்டிக் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்ற காட்சிப் பொருட்கள்.




இவற்றில் இராமர் சீதா கதைகள், அனுமான், இந்திரன், கடல்கன்னி, இராவனன், அருட்சுணன், லவகுசனோடு காட்டில் பழம்பறிக்கும் சீதா என பல படங்கள் அவர்களின் பாரம்பரிய கலைகளைப் பேசுவனவாக இருக்கின்றன.



இன்றைக்கு அவ்வளவு தான். இனி நான் உயிர் பெற முடியாது என கமறா சொல்லி விட்டது.

நாமும் திரும்பி விட்டோம்.
நாளை பிளட்டினம் கடைத்தொகுதிக்குப் போவோம். வாருங்கள்!

தொடரும்...........................................








Thursday, April 25, 2013

தாய் Land - 2 -

நாம் இப்போது பாங்கொக்கில் (Bangkok) சுக்கும்விற் (Sukhumvit) என்ற இடத்துக்கு வந்திருக்கிறோம்.Soi 13 என்பது அந்த உள்வீதியின் பெயர்.



இந்த நாட்டு நாணயத்தை Bhut பட் என அழைக்கிறார்கள்.ஒரு அவுஸ்திரேலிய டொலர் 28 - 30 பட்டுக்குள் அமைந்திருக்கின்றன. சர்வதேச நாணயங்களை அந்த ஹொட்டலிலேயே மாற்ற முடிகிறது. ஹொட்டேலின் பிரதான வாசல் கதவைத் திறக்கின்ற இருவர் பாரம்பரிய ஆடை அணிந்து நெஞ்சருகில் இரு கரங்களியும் கூப்பி தலை குனிந்து வணங்கி வரவேற்புத்தர; மற்றுமிருவர் பயணப்பொதிகளை எடுத்துச் செல்ல; நாம் வரவினைப் பதிவு செய்து, எட்டாம் மாடிக்கு லிவ்ட்டில் செல்வதற்கான காட்டையும்  பெற்றுக் கொண்டு  உள் நுழைந்தோம்.

அது ஒரு அழகிய சிறு suite.தொலைக்காட்சி, பக்க விளக்குகளோடு கூடிய படுக்கையறை, தொலைக்காட்சியோடு கூடிய சிறு வரவேற்பறை, இருந்து இளைப்பாறத்க்கத்தக்க மேசைகதிரை, மேசை விளக்கு சகிதம் சிறு கொப்பி பேனா மேசை, சர்வ தேசங்களுக்கும் எடுக்கக் கூடிய வசதியோடு தொலைபேசி, மற்றும் குளியலறை, சிறுதேனீர் போடத்தக்க வசதிகளுடன் கூடிய சிறு குசினி, குளிபானங்கள் நிரப்பப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, தண்ணீர் போத்தல்கள், இருந்து சாப்பிடும் மேசைகதிரை , பெறுமதியான பொருட்களை வைப்பதற்கான லொக்கர், ஒரு பக்கம் முழுவதுமான பார்க்கும் கண்ணாடி, மற்றும் தலையுலர்த்தி,அயர்ன் செய்வதற்கான வசதிகள்,ஆடைகளைக் கொழுவி வைப்பதற்கான அலுமாரி,நைட் கவுன்கள், செருப்புகள், துவாய்கள், கிறீம்கள், ஷப்பூ, சோப் என எல்லாம் அழகிய சுத்தமும் நேர்த்தியுமான வகையில் வைக்கப்பட்ட ஒரு suite. சிறு குடித்தன அறை.

அறையை விட்டு வெளியே வருகின்ற போது ஒரு சன்னமான மெல்லிய இசை கேட்டுக் கொண்டிருக்கிறது. மென்மையான வாசம் எங்கிருந்தோ வந்து அந்த இடத்தை நறுமணம் கமழ வைக்கிறது. வாசல் கதவுகளுக்குத் திறப்புகள் இல்லை. ஒரு (தந்த) அட்டையை வாசலருகில் காட்டினால் அது திறந்து கொள்கிறது. லிப்ட் உபயோகிக்கும் போதும் அதனைத் தான் பாவிக்க வேண்டும். அறைக்குள் வந்ததும் அந்த அட்டையை அதற்குரிய இடத்தில் சொருகியதும் அறை வெளிச்சம் பெறுகிறது. விட்ட தொலைக்காட்சி விட்ட இடத்தில் இருந்து  உயிர் பெறுகிறது.

















இங்கிருக்கின்ற ஓட்டோ மாதிரியான ஒரு வாகனத்தை (கீழே உள்ளது) ”ருக்ருக்” என அழைக்கிறார்கள். நாம் பதிவு செய்திருந்த ஹொட்டேல் சிப்பந்திகள் (Radisson) இதன் மூலம் பயணிகளை சுற்றுப்புறங்களுக்கு இலவசமாகக் கொண்டு சென்று இறக்குகிறார்கள். பிறகு குறிப்பிட்ட நேரத்துக்குச் சொல்லும் இடத்துக்கு வரச் சொன்னால் வந்து இலவசமாகவே ஏற்றிக் கொண்டு வந்தும் சேர்க்கிறார்கள். முன் புறம் வந்து குறிப்பிட்ட ஓரிடத்துக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ருக் ருக் வந்து உங்களை ஏற்றிச் செல்லும். தூர இடங்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் அவர்களிடம் சொன்னால் அவர்கள் ரக்‌ஷிக்கு ஏற்பாடு செய்வார்கள். சுமார் 2 - 3 நிமிடத்தில் நீங்கள் கோரிய ரக்‌ஷி உங்கள் இடத்துக்கு வந்து நிற்க கொடுக்க வேண்டிய பெறுமதியையும் அவர்களே பேசி நமக்கு வாடகைக் காரைப் பெற்றுத் தருகிறார்கள்.

கதவு திறந்து நம்மை அனுப்பவும், கதவு திறந்து நம்மை வரவேற்கவும் அவர்கள் ஒரு பொழுதிலும் மறந்ததில்லை. புன்னகை பூத்த முகங்கள்! அதிர்ந்து பேசாத குரல்கள்!!, கேட்டால் மட்டும் அறிவுரை தரும் இதம்!!!, உதவி செய்கின்ற மனங்கள்!!! மேடம், மேடம் என்று கூப்புடுகின்ற பாங்கு எல்லாம் அபாரம்! ஒரு வித ஓசை நயம் மிக்க பேச்சுப் பாணி அவர்களது.

ஒரு ஓரமாக ஒரு அழகிய பெண் உட்கார்ந்திருக்கிறார். அவர்களிடம் இருந்தும் உல்லாசப்பயணங்களுக்கான இட விபரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். பஸ்கள் நாளாந்தம் பயணிகளை ஏற்றியவாறு புறப்படுகிறது. விரும்பினால் அவர்களிடம் இருக்கின்ற பயண அனுபவங்களையும் நாம் சற்றே ருசி பார்க்கலாம். அதற்கான தகவல்களை அவர் விபரமாகத் தருகிறார். இவர்கள் எல்லோரும் தரமான ஆங்கிலம் பேசுகிறார்கள். 




நாங்கள் மறு நாள் காலை பிளட்டினம் என்ற ஷொப்பிங் சென்ரருக்கு போவதாகத் திட்டமிட்டிருந்தோம். காரணம் அடுத்து வரும் மூன்று நாட்களும் கடைகள் யாவும் பூட்டப்பட்டிருக்கும் என்பது தான்.


நல்லதொரு தூக்கத்தின் முன் இரவு நேரச் சாப்பாட்டுக்காகவும் சுற்று வட்டாரத்தைப் பார்ப்பதற்காகவும் குளித்து தேநீர் போட்டுக் குடித்து விட்டு வெளியே புறப்பட்டோம். 

வெளியே மழைக்கோலம்.


தொடரும்..............











Monday, April 22, 2013

தாய் Land ன் ஸ்வர்ண பூமியில் இருந்து......1....



இந்தப் புது வருடம் எங்களுக்கு தாய்லாந்தில் அமைந்திருந்தது.

எதிர் பாராத சம்பவங்களால் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பயணம் நல்லதொரு உதாரணம். உண்மையில் என் திட்டப்படி கொழும்பில் நடைபெற இருக்கும் ஆவண மாநாட்டுக்குசெல்வது என்பது தான் என் நோக்கம். அதற்காக என் ஆய்வுக் கட்டுரையின் முன் வரைபுகள் அனுப்பி வைக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்கான கால நேரத்தையும் அவர்கள் அனுப்பியிருந்தார்கள்.எனக்கு ஒரே ஒரு வேலை தான் மிச்சமிருந்தது. அது யாழ்ப்பாணம் சென்று சில புகைப்பட ஆவணங்களை கட்டுரையோடு இணைக்க வேண்டும். அதனால் மாநாட்டுக்கு முன்னர் வட பகுதி சென்று அவற்றை எடுத்து கட்டுரையோடு இணைப்பது என் பிரதான நோக்கம்.

அதற்காக ஏற்கனவே வேலைத்தலத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்து நண்பர்கள் உறவினர்களுக்கான பரிசுப்பொருட்களையும் நேரம் இருக்கிற நேரங்களில் வாங்கி பெட்டியை நிரப்பி இருக்கின்ற நேரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்க அறிவித்தல் ஒன்று தன் பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை அதிலும் குறிப்பாக வடபகுதிக்குச் செல்வதை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவ்வாறு அவர்கள் செல்லும் பட்சத்தில் அவர்களது பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என்ற அறிவித்தல் வானொலிவழியாக வீடு வந்து சேர்ந்ததில் குடும்பம் குழம்பியதோடல்லாது போக வேண்டாம் என்ற தடையுத்தரவையும் பிறப்பித்து விட்டது.எனக்கும் சற்றுப் பயமாக இருந்ததென்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.2004 ந் பின் கால் வைக்கவில்லை.

நூலக நிறுவனத்தாரோடு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிய போது அவர்கள் பெருந்தன்மையோடு அதனை ஏற்றுக் கொண்டதுடன் படங்கள் எடுப்பித்துத் தருவதற்கான உதவிகளைத் தம் தொண்டர்கள் மூலமாக தம்மால் செய்து தர முடியும் என்றும் கட்டுரையைத் தங்களுக்கு அனுபுமாறும் அவர்கள் தெரிவித்தது  மனதுக்கு பெருத்த நிறைவினை அளித்தது.

அந்த ஆய்வுக் கட்டுரை அவர்களால் உருவாகியது. அவர்களுக்கே அது உரித்தாகும்.என்றேனும் ஒரு விரைவு நாளொன்றில் அவர்கள் மூலம் பிரசுரமாகி உங்கள் பார்வைக்கும் அது கிட்டக் கூடும்.

இப்போது எனக்கு முன்னால் இருந்த பெரிய பிரச்சினை இந்த விடுமுறையை - எடுத்த விடுமுறையை என்ன செய்வது என்பதாகும். பெரிய விடுமுறையை வேறு எடுத்து விட்டிருந்தேன். அதில் நீண்ட சேவைக்கான விடுமுறையும் அதில் அடக்கம். சரி ஒரு 4 நாட்களுக்கு தாய்லாந்துக்குப் போகலாம் என்று பல நாடுகள் பட்டியலில் இருந்து தாய்லாந்தைத் தெரிவு செய்தோம்.

வாருங்கள் என்னோடு. பயணம் 11.4.13.

இப்போது நாங்கள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட இருப்பிடத்துக்குப் போகப் போகிறோம். ஸ்வர்ண பூமி 
( தாய்நிலம்: Thailand. - தங்க பூமி Suvarnabhumi )கீழே இருக்கின்ற படங்கள் விமான நிலையத்தின் உள்ளே விமானத்தில் இருந்து இறங்கி வருகின்ற உள்ளகப் பாதை. சுவரோரங்களில் தென்பட்ட  சித்திரக்காட்சிகளில் சில.








இந்த உருவ அமைப்பு பாதை நடுவில் செய்யப்பட்டிருக்கிறது. விளையாடுகின்ற இந்தச் சிறுவர்களைப் பார்த்த போது பிராமணச் சிறுவர்களை அது நினைவுறுத்தியது.




இது அந் நாட்டு வாடகைக் கார்.பல வண்ணங்களில் அவை ஓடுகின்றன. பெரும்பாலானவை ரொயோட்டா கார்கள் தான்.இந்தக் காருக்குள் ஏறிய போது மல்லிகைப் பூ வாசம் குப்பென்று வீசியது.இந்தப் பாமர கார் ஓட்டுனருக்கு அத்தனை கடவுள் பக்தி. பலவிதமான சுவாமிப் படங்களும் தாயத்துக்களும் சில்லறைக்காசுகள் ஒட்டப்பட்ட தன் படமுமாக விசித்திரமான ஒரு கார் காட்சி உள்ளே. ஆனால் மிகவும் அப்பாவி மனிதர்கள்.பாமர புன்னகையோடு அம்மனிதன் நம்முடய இருப்பிடம் கேட்டு காரைக் கிளப்பு முன்னும் இந்த மல்லிகைப்பூச்சரத்தோடு இருந்த பலவித சலங்கைகளோடு கூடிய ஒரு கூட்டம் சாமியரை வணங்கி காரைக் கிளப்பும் போது மனிதன் என் மனதில் எங்கோ போய் விட்டார்.


ஊர் புதுசு தானே நமக்கும் என்று சற்றே பேச்சுக் கொடுத்தால் மனிதருக்கு துப்பரவாக ஆங்கிலம் தெரியவில்லை. ஆனால் அவருடய சிரிப்பு சற்றே புதினமாக இருந்தது. 


இந்த இடங்களால் திரும்புகின்ற போது ‘பட்டினம், பட்டினம்’ என்று சொல்லக் கேட்டேன். கவனியுங்கள் City என்பதற்கு அவர்கள் பாசையில் பட்டினம் என்று அர்த்தம். தமிழ்! தமிழ்!!





இரண்டு பாசைகளும் மோதிக் கொண்டதில் பொறுக்கிய விடயங்கள் எதற்கும் பேரம் பேசு. வாடகைக் கார்களை உன் ஹொட்டலில் இருந்து  முதலிலேயே கட்டனம் பேசி அமர்த்திக் கொள். என்பவைதான். 

எனக்கு அடக்க முடியாத ஒரு ஆர்வம் என்னவென்றால் ஏன் இந்த மனிதர் காரின் உட்புறம் முழுக்க பல நாட்டுக் காசுகளையும் காரின் உட்பகுதியின் மேற்புறமெல்லாம் பொலித்தீன் உறைகளில் பக்குவமாகப் போட்டு ஒட்டி வைத்திருக்கிரார் என்பது தான்.ஏற்கனவே எல்லோரும் அவரிடம் பேச்சுக் கொடுத்துக் களைத்துப் போயிருந்தார்கள். பயணக் களைப்போடு இந்த மனிதருக்கு ஒரு விடயத்தை விளங்கப் படுத்துவது பெரிய கடினமான காரியமாகப் பட்டது. எனக்கும் களைப்பாய் இருந்த போதும் ஆர்வம் அதை மிஞ்சி விட்டதால் ஏன் அவற்றை இங்கே ஒட்டி வைத்திருக்கிறாய் அப்பனே என்று கேட்டேன். அதற்கு நான் விளங்கிக் கொண்ட பதில் இத்தனை நாட்டவர்களையும் தான் ஏற்றி இறக்கி இருக்கிறாராம். அந்தந்த நாட்டுத் தாள் காசுகளை அவர்களின் நினைவாக தான் ஒட்டி வைத்திருக்கிறாராம். பார்! அவுஸ்திரேலியா நாட்டுக் காசு இங்கே இல்லை என்றார்.மிக்க மகிழ்ச்சியோடு ஒரு தாள் காசை எடுத்து நீட்டிய போது அந்த முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்! தான் அதனை முன் பக்கத்தில் இருக்கின்ற இடைவெளியில் ஒட்டப் போவதாக சொல்லி மகிழ்ந்தது அந்த பாமர நெஞ்சம். 

என் சினேகிதி நீ எதற்காக இரண்டு $100 அமெரிக்க டொலர்களை ஒட்டியிருக்கிறாய்? ஞாபகார்த்தத்துக்கு ஒன்று போதாதா என்ன ? மற்றதை உன் செலவுக்கு வைத்துக் கொள்ளலாமே சும்மா எதற்கு வீணாக்குகிறாய் என்று கேட்டாள். நோ நோ இதெல்லாம் என்ர collections அதனை என்ன காரணம் கொண்டும் நான் தொடமாட்டேன் என்று மிகத் தீவிரமாகச் சொன்னார். 

அத்தோடு 12.13.14 அவர்களுடய புது வருடம் என்ற செய்தி எமக்கு ஆச்சரியமாக இருந்தது. அடடா, நம்முடய புது வருடப் பிறப்பன்று தானா அவர்களுக்கும் புது வருடம் என்று வியந்த போது, வருடத்திலேயே இந்த மூன்று நாட்களும் தான் கடையடைப்புடனான பொது விடுமுறை நாட்கள் என்ற தகவல் நமக்கு புதிய செய்தியாக இருந்தது. பல கேள்விகள் நம்மிடம் இருந்த போதும் மொழிப் பிரச்சினையால் கேட்க முடிய வில்லை.

பிறகின்ற புது வருடம் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கூறி சற்றே மேலதிகமாய் பணமும் கொடுத்து ஹொட்டேல் வாசலில் இறங்கிய போது நேரம் மாலை 6.30. 

பற்களை எல்லாம் பழுதாக்கியிருந்த போதும் தயங்காமல் சிரித்த படி பயணப்பொதிகள் யாவற்றையும் இறக்கி வாசலுக்குள்ளாக வைத்துவிட்டு நின்ற அந்த மனிதனின் முகம் இப்போதும் அந்த அழகிய பாமரப்  புன்னகையோடு மனதில் நிழலாடுகிறது.


இப்போது ஹொட்டேலுக்குள் வந்தாகி விட்டது.  

தொடரும்...............

















Friday, April 19, 2013

Author Talk..........



நேற்றய தினம் மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 மணி வரை “The Creative Seed" என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர்  Lilian Wissink தன் புத்தகம் பற்றிப் பேசப்போகிறார் என்ற செய்தி சில வாரத்துக்கு முன்னரே என் தொழில் முகவரிக்கு வந்திருந்தது. Parramatta நூலகம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. தலைப்பும் நோக்கமும் அழகாய் இருந்ததால் என் பெயரைப் பதிவு செய்திருந்தேன். கூடவே வருவார்கள் என்ற நம்பிக்கையில் இரு கலைஞர்களுடய பெயர்களையும் அவர்களைக் கேட்காமலே கொடுத்தும் விட்டிருந்தேன்.



நேற்றுக் காலை மற்ற இருவரும் தம் விருப்பமின்மையைத் தெரிவித்த போது மனது மெல்ல சோர்ந்து போனது. வாசிப்புப் பிரியை; கலைகளின் ரசிகை என்பதைத் தவிர என்னிடம் வேறு எந்த தகுதிகளும் இல்லை. கலை என்பது அழகுணர்ச்சியுடனான ஆக்க பூர்வ வெளிப்பாடுகளைக் கொண்டமைவது. அதில் ஈடுபடுகிறவர்கள் மிக சொற்பமானவர்களே. புதிதானவற்றைக் காண அறிய, பரீட்சிக்க, கலந்துரையாட அத் துறைகளில் ஈடுபடுபவர்களே ஏன் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.



எனினும் நான் போனேன். கச்சிதமான மேல் மாடி அறை ஒன்றில் தேநீர், கோப்பி, கேக், பிஸ்கட் வகையறாக்களோடு 9.10 பேர் வந்திருந்தார்கள். சின்னதான ஒரு microphone ஓடு புத்தக ஆசிரியரும் புன்னகையோடு பிரசன்னமாயிருந்தார். அவரவர் தமக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்களோடு கதிரைகளில் அமர, நூலகர் புத்தக ஆசிரியரை அறிமுகப் படுத்தி ஆசிரியரைப் பேச அழைத்தார்.

புன்னகையோடு இன்று தன் பேச்சு எவ் எவற்றை உள்ளடக்கி இருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறி, தன் வாழ்க்கையின் எதிர்பாராத ஒரு பக்கத்தில் இருந்து பேச்சை ஆரம்பித்து, இந்தப் புத்தகத்தினை எழுதக் காரணமாய் இருந்த பின்னணி பற்றியும்; அப்புத்தக உருவாக்கத்தோடு தனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும்; புத்தகம் சொல்லுகின்ற கருப்பொருள் என்ன என்பது பற்றியும்; அது நமக்கு என்னென்ன வகையில் பயன் படக் கூடும் என்பது பற்றியும் அன்பும் கனிவும் உறுதியும் நம்பிக்கையும் நேர்மையும் மிளிர மென்மையாக உரையாற்றினார். தெளிவான ஆங்கிலம். அச்சொட்டான அக்கறை மிக்க பேச்சு.



அதன் பின் கலந்துரையாடலுக்கான நேரம். பலருக்கும் பல விதமான கேள்விகள். சொற்பமான பேரே வந்திருந்த போதும் அவ்வளவு பேரும் ஈடுபாடும் தேவையும் விருப்பமும் உள்ளவர்களாகவும் நட்புணர்வும் அன்பும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்ததும் ஒரு ரம்யமான சூழலை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொருவருடய கேள்விகளும் மற்றவருக்கும் பயன் படும் விதமாகவும் உதவும் விதமாகவும் அமைந்திருந்தமை ஒரு கண்ணியமான கூட்டம் அது என்பதற்குப் போதுமான ஆதாரமாக இருந்தது.

அது முடிய நூலகர் வந்து அடுத்த மூன்று மாதத்திலும் என்னென்ன புத்தகங்கள் பேசப்பட இருக்கின்றன என்ற தகவலைக் கூறி நன்றி கூறி நிகழ்ச்சியை மிகச் சரியாக 2.00 மணிக்கு நிறைவு செய்தார்.

புத்தக ஆசிரியர் தம் முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி ஒரு சிறு பயிற்சித்தாளை நமக்குத் தந்தார்.

அடிப்படையில் அவர் ஒரு உளவளதுணையாளர், சுய மேம்பாட்டு திட்டவியலாளர். முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி தந்த அந்த கேள்வித்தாள் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் பெறும் என்று தோன்றுவதால் அதனைத் தமிழ் படுத்தி இங்கே தருகிறேன்.

1.என் மகிழ்ச்சிக்காக எப்போதும் நான் செய்ய விரும்புகின்ற ஒன்று......

2.எனக்கு வேலைப்பழு இல்லாவிட்டால் நான் எப்பவும் செய்ய விரும்புகின்ற ஒன்று........

3.நான் சிறு பிள்ளையாக இருந்த போது நாம் எப்போதும் செய்து மகிழ்ந்த ஒன்று.......

4.என் புத்திளமைப் பருவத்தில் நான் மிக அனுபவித்துச் செய்த ஒன்று.......

5.என்னால் இப்போதும் செய்தால் மகிழ்வேன் என்று நான் கருதுகின்ற ஒன்று( படம், ஓவியம் வரைதல்,செதுக்கு வேலை, எழுத்து, கலைப்பொருட்கள் செய்தல், வாத்தியக் கருவி வாசித்தல், பாடுதல், ஆடுதல்.....)

6.எனக்கு விருப்பம்.........

7.காலங் கடந்து விட்டது, எனக்கு திறமை இல்லை என்ற நினைப்பை நான் கடந்து விட்டால் நான் செய்வேன் என்று நினைக்கின்ற ஒன்று.......

8.எனக்கு நான் அனுமதி தர நினைத்தால் தர விரும்பும் ஒன்று.......

9.எனக்கே எனக்கான நேரத்தை எனக்கென நான் ஒதுக்கும் போது நான் செய்ய நினைப்பது..............

10.என் இளமைக்கால என்னோடு நான் பேச நினைத்தால் நான் சொல்ல நினைப்பது.............................

11.இன்றில் இருந்து இன்னும் ஐந்து வருடத்துக்குள்.........

12.என்னுடய அடுத்த கட்ட நடவெடிக்கை.....................

புத்தகம் நமக்குள் இருக்கின்ற நம்மை; நமக்கு மட்டுமாக வாய்த்திருக்கும் ஓர் அழகியலை  எப்படி அடையாளம் காண்பது அதனை எப்படி வளர்த்தெடுப்பது அதில் நாம் காணக்கூடிய ஆத்மார்த்த திருப்தி என்பது பற்றியது. அந்த ஆத்ம திருப்தியில் தொனிக்கும் தெய்வீகத்தை அது பேசுகிறது. உனக்குள் இருக்கும் உன்னை கண்டு பிடி என்பதே அதன் தொனிப்பொருள். அதற்கு அது கைபிடித்து வழிகாட்டிச் செல்கிறது. புத்தகத்துக்குள் போவதற்கு முன் என்ற பகுதியை மாத்திரம் இப்போது வாசித்து முடித்திருக்கிறேன். ஒரு பேரன்புத்தாயாக தன் பாசமிகு பிள்ளையை கை பிடித்து ”உள்நோக்கி”  பக்குவமாய் நம்மை அழைத்துச் செல்கிறது அது.

தன்னைக் கண்டு பிடிக்கும் மார்க்கம் அங்கே புலப்படுகிறது.

இது நிற்க!

ஏன் நம்மவர்கள் இவற்றில் எல்லாம் ஈடுபாடே காட்ட மாட்டேன் என்கிறார்கள்? எம்முடய புத்தக வெளியீடுகளை ஒரு தடவை நினைத்துப் பார்க்கிறேன்...............அங்கே வியாபார யுக்திகளே மலிந்து கிடக்கின்றன.

கடையில் வாங்குகின்ற ஒரு புத்தகத்தைப் போலல்லாது ஆசிரியரின் கலந்துரையாடலுக்குப் பின்பான இப் புத்தகம் தனித்துவமான கட்புலனுக்கு உட்படாத ஏதோ ஒரு சிறப்பம்சத்தை தன்னுள் உள்ளடக்கி இருக்கிறது.  புத்தகத்தை அதன் அத்தனை பரிமானங்களோடும் அறிய புரிய ஆசிரியரது கையெழுத்தோடு உள்ள அவ்வுயிருள்ள சொத்தை ஸ்பரிசிக்கும் தோறும் எனக்கு மட்டுமேயான ஒரு முழுமை நிறைந்த உள்வாங்கலைக் கொண்ட ஒரு வஸ்துவாக அது பரினமிக்கிறது. அதன் முழுமையான அர்த்தங்களோடும் உள்வாங்கல்களோடும் அப்புத்தகம் புதியதொரு பரிமானத்தைத் தருகிறது.

நான் உயிரோடு இருக்கும் வரை இப் புத்தகத்துடனான என் உறவு மற்றெவருக்கும் கிட்டாத ஒரு சிறப்பு மிக்கதாய் இருக்கும். அந்த எழுத்தாளரோடு; அந்தக் குரலோடு; அந்த அனுபவங்களோடு; அந்தத் தோற்றப் பொலிவோடு; உரையாடல்களுக்கு வழங்கிய பதில்களோடு; அந்தக் கையெழுத்தோடு மேலும் அன்றய தினத்தோடு அது பின்னிப் பிணைந்த வாறு இருக்கும்.

உயிரோடு எப்போதும் என்னோடு வாழப் போகும் அது எனக்கு மட்டுமேயாக எத்தனை பெரிய வாசலை பூரண மகிழ்வு நிறைந்த மனநிலையோடு அது எனக்காகத் திறந்து விடுகிறது.

பிடித்த ஒரு துறைசார் புத்தகத்தை முழுமையாக அதன் அத்தனை தாற்பரியங்களோடும் உள்வாங்க வேண்டுமானால் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும். ஆசிரியரையும் அது உருவான விதத்தினையும் பின்னணியினையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆசிரியரின் திகதியிட்ட கையெழுத்தோடும் பிரியங்களோடும் புத்தகத்துக்கான முழுப் பெறுமதியைக் கொடுத்து புத்தகத்தை பெற்றுக் கொள்ள  வேண்டும்.

கூடவே அந்த நிகழ்ச்சியும்  சலசலப்பெதுவுமில்லாமல் சொற்பமான தீவிர வாசிப்பு பிரியர்களோடு நிறைவு பெற வேண்டும்.

இதே மாதிரி.

Tuesday, April 9, 2013

இலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைகளும்


கையெழுத்துப் பிரதிகளும் அச்சுயந்திர சாலைகளும் மையூறும் பேனாக்களும் தலைப்பாகை கட்டிய தமிழுமாக கொலுவீற்றிருந்த இலக்கியம் காட்சிப்பொருளாய் வரலாற்றுப் பக்கங்களின் கடந்து போனதொரு அத்தியாயமாய் ஆகிப் போனது காலத்தின் கட்டாயமாயிற்று. கால ஒளியில் துலங்கும் ஒரு நட்சத்திரமாய் எதிர்காலத்தில் அது நின்று ஜொலிக்கக் கூடும்.

விரும்பியோ விரும்பாமலோ நாம் அவற்றைக் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று. அது காலம் இட்ட கட்டளை. டிஜிட்டல் என்றொரு மாய உலகம் சிருஷ்டிக்கப் பட்டு புதிய உலகப்பண்பாடு ஒன்று தனித்தனி வீடுகளுக்குள்ளும் குடியிருக்கும் சிறு சிறுஅறைகளுக்குள்ளும் புகுந்து கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் புத்துருவாக்கி திருப்பித் தந்திருக்கிறது.

அது வீட்டில் இருந்து தொடங்கி வீதியில் இறங்கி, வாகனங்களில் பயணித்து, அலுவலகத்தில் உட்புதுந்து, மீண்டும் வீதி வாகனம் வழி திரும்பி, வரவேற்பறையில் உட்கார்ந்து ரீவி பார்த்து, சமையல் அறையில் பதார்த்தங்கள் செய்து, உறங்கப் போகும் வரை ஒரு மனிதனை தன் அத்தனை செயல் பாடுகளூடாகவும் அவனைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனை முதலாம் இரண்டாம் மூன்றாம் உலக நாடுகள் என்று பார்த்தால் என்ன, வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என்று பார்த்தால் என்ன; செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் என்று வகை பிரித்துக் கொண்டாலென்ன? - இவை எல்லாவற்றிலும் அது வேறுபாடு எதுவும் காட்டாமல் புகுந்து கொண்டு விட்டது.

உலகத்தில் 4000க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அதில் எட்டே எட்டுத் தான் செம்மொழி என கொண்டாடுகிறோம். அதில் தமிழ் ஒன்று என்று பெருமைப் பட்டுக் கொள்ளுகிறோம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என நாம் இந்தியா இலங்கை என்ற எல்லைகளுக்கப்பால் உலகம் முழுக்கப் பரந்து போனோம். - அதற்குக் காரணம் என்னவாக இருப்பினும் கூட - புலம்பெயர்ந்தோரின் புலம்பல் இலக்கியம் சொல்லும் ஏக்கப் பாடல்களுக்கப்பால் ’எல்லாம் நன்மைக்கே’ என்பதற்கமைய இப்போது தமிழ் இணையத்துக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழர் என்று ஓர் புதிய அடையாளம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. தாம் தாம் வாழும் நாடுகளின் பண்பாடுகள் வாழ்க்கை முறைகள் முன்னெப்போதும் இல்லாத வாறு தமிழுக்குள் சுவறுகின்றன. எல்லைகளற்ற கல்வி வேலைவாய்ப்புகள் புதிய புதிய விதைகளை வாழ்க்கை முழுக்கத் தூவிச் செல்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும்  அவை தம் வனப்பினை எழுதிச் செல்கின்றன.

இப்போது நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவோம். சரி சிட்னிக்குள் நுழைவோம். அந்தச் சிறு சட்டத்துக்குள் நம்மை பொருத்திப் உருப்பெருக்கியால் உருப்பெருக்கிப் பார்ப்போம்.இங்கு தமிழர்கள் குடியிருக்கத் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலிருக்கும். கலை இலக்கியம் என்ற வரையரைக்குள் நாம் வரைந்து காட்டிய சித்திரங்களும் வர்ணங்களும் எதைப் பேசுகின்றன? எப்படிப் பேசுகின்றன? ஏன் பேசுகின்றன? எதைப் பிரதி பலிக்கின்றன? கலையும் இலக்கியமும் சமூகத்தின் கண்ணாடி என்றால் புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தி அவுஸ்திரேலிய வாழ்புலத்தின் செல்வாக்கை உள்வாங்கியவாறு வெளிவந்த கலைப்படைப்புகள் எவை எவை?

நாடகக் கலை தவிர்ந்த கலையும் இலக்கியமும் வந்த பாதையை திரும்பிப் பார்த்து அழுது, விம்மிப்,பொருமி, பெருமிதப்பட்டு க் கொண்டு இருக்கிறதே தவிர புதிய சமூக அடையாளங்களை கலை இலக்கிய ஆவணங்களாய் ஆபரணங்களாய் ஆக்கியதாய் தெரியவில்லை.

நம் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? பண்பாட்டுத் தொடரோட்டத்தில் தடி இப்போது நம் கையில். தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது பண்பாட்டுக்கான கையளிப்பு. மாறிச் செல்லும் அதன் இயல்புகளை நாம் பதிந்து செல்லக் கூடாதா?

விடுபட்ட ‘பேசாப்பொருள்கள்” என்னென்னெ? ஏன் அவை விடுபட்டன? - இக்கேள்விகள் கலை இலக்கிய கர்த்தாக்களுக்கு; இலக்கிய சிருஷ்டிகளுக்கானவை.

ஒரு வருடம் ஒன்றில் எத்தனை அரங்கேற்றங்கள் நிகழ்கின்றன?
எத்தனை கவிதைகள் புனையப் படுகின்றன?
எத்தனை எத்தனை இசை வல்லுனர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்?
வாசிக்கும் வல்லமையுடம் எத்தனை எத்தனை விதமான வாத்தியக்கருவிகளும் கலைஞர்களும் ‘மெளனப்பொக்கிஷங்களாய்’ கடலுக்குள் முத்தாய் புதையுண்டு போயிருக்கிறார்கள்?

- இவர்களிடம் இருந்து ஏன் ஒரு புதிய படையல் “சொந்தப் பார்வையில்” புத்துருவாக்கம் பெறவில்லை? மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன? சமாதி நிலை கொள்கின்றன?

ஏதோ ஒரு நூற்றாண்டில் பாடியதையே மீண்டும் மீண்டும் பாடி -
ஏதோ ஒரு நூற்றாண்டில் ஆடிய பரதத்தையே மீண்டும் மீண்டும் ஆடி -
வாசித்துக் காட்டிய விற்பன்னங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து -
பழம்பெருமையையே மீண்டும் மீண்டும் மேடைகளில் முழங்கி -
இன்னும் இன்னுமாய்......

மரபுகளைப் பிடித்திழுத்து பலவந்தமாய் சேலைகட்டி வைத்திருப்பதில் கழிந்து போயிற்று கடந்த காலங்கள்.

குறும் படம் ஒன்றைக் அதன் அத்தனை தாற்பரியங்களோடும் கைத்தொலைபேசி ஒன்றினாலேயே உருவாக்கி விடலாம்!

சிறந்த கவிதை ஒன்றை உள்ளூர் கலைஞர்களின் கலைக் கருவிகளினால் மெல்லிசைப்பாடலாய் கொஞ்சம் மினைக்கெட்டால் குறுந்தகட்டில்  பொதித்து வைத்து விடலாம்.

வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.

ஒரு பரதநடனத்தில் புதிய நடன உத்திகளைப் புகுத்தி புது நடன வடிவம் ஒன்றை அறிமுகப்படுத்தத் தேவை கற்பனை வளமும் கலாஞானமும் தான்.

டிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் விட்டு விடுகிறேன்.

தேங்கிய குட்டையில் எத்தனை நாளைக்கு மீன் பிடித்த படியும்....
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்த படியும்....
வீண்பெருமையை மேடைகளில்  பேசிய படிக்கும்......

“ஊர் வாசத்தை தென்றலே நீ கொண்டு வருக”

அது நறுமணமாய் இருப்பினும் துர்நாற்றமாய் வீசினும் அதுவே நாம் எனும் வீச்சுடன் -