Wednesday, November 13, 2013

நினைவிடை தோய்ந்து.....


”உணவு ஒரு மொழி” என்பதனை சற்று முன்னர் BBC யின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடக்கேட்டேன். அது ஒரு பொறியைப்போல மனதில் பெரும் சிந்தனை நெருப்பை தூண்டி விட்டிருந்தது.

ஒரு மொழி பாரம்பரியத்தை பண்பாட்டை, பட்டறிவை,கலையை, ஒரு வாழ்க்கைமுறையை தனக்குள்ளே கொண்டிருப்பது.ஒரு இனத்தின் வரலாறு முழுவதையும் காவி நிற்பது.

உணவு அதனை பரிமாற்றம் செய்கிறது. சமைக்கிற அழகில்; கொடுக்கிற முறையில்; பதார்த்தங்களை சேர்க்கிற வகையில்,மருந்தையும் குணத்தையும் பண்பாட்டையும் அது வெளிப்படுத்தி நிற்கும் போலும்.

புகைப்படங்களுக்கும் இருக்கிறது அப்படி ஒரு தகைமை. ‘காலப் பொறி’ அது.

நேற்றய தினம் நாற்சார வீடொன்றைத்  தேடப்போய் யாரோ ஒரு அன்பருடய புகைப்படப் பக்கத்துக்குள் போய் சேர்ந்தேன். அது கிளப்பி வைத்து விட்டுப் போன ஊர் பற்றிய நினைவுகளை இன்னும் ஒதுக்கி வைக்க முடியவில்லை.

ஊர் போய் பல வருடங்கள் ஆகி விட்டன. அங்கும் இப்போது பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இருந்த போதும் நினைவுகளில் நிற்கும் சில விடயங்கள், மனிதர்கள் எப்போதேனும் மனதில் இருந்து நீங்குவதுண்டா?





மேலுள்ள இந்தப் படத்தை பார்த்த போது எங்கள் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளிக்கூடம் நினைவுக்கு வந்தது. அது ஒரு  சிறிய பள்ளிக் கூடம். இவ்வளவு தான் மொத்தமும் அந்தப் பள்ளிக் கூடம். நாங்கள் அந்த வன்னிப்பகுதியின் கிராமப்புறத்துக்கு வந்த போது நான் 4ம் வகுப்பு. என்னை நேரடியாகவே பெரிய பாடசாலையில் சேர்த்து விட்டார்கள். ஆனால் என் தங்கை இந்த மாதிரியான பள்ளிக்கூடத்தில் தான் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றாள். 

காலையில் இவர்கள் பள்ளிக்கு போகும் போது ஊர் மாடுகள் அங்கு முற்றத்தில் படுத்திருக்கும். இவர்கள் போய் மாடுகளைக் கலைத்து விட்டு சாணங்களை அள்ளி முற்றம் மற்றும் வகுப்பறைகளைக் கூட்டி விட்டு படிக்க வேண்டும். இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான் அந்த ஐந்து வகுப்புகளுக்கும்.

இங்கிருந்தும் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றார்கள்.ஆசிரியர்களிடம் அப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்திருந்தது. புளோரா ரீச்சர் மறக்க முடியாதவர். தனக்கென பிள்ளைகள் இல்லாத அவர் இந்தப் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல பார்த்தார்.


மேற்கூறிய இந்த வீட்டைப் பார்த்த போது தென்மராட்சிப்பகுதியும் அந்த மணல் பாங்கான தரையமைப்பும் கூடவே யாழ்ப்பாணம் புலம் பெயர்ந்த 90ன் காலப்பகுதியும் நாம் சரணடைந்த வீடுகளும் அவர்தம் விருந்தோம்பலும் நினைவை நிறைத்தன. ஓர் இரவும் ஒரு பகலும் பீதியுடனும் விழிப்புடனும் மழியில் நனைந்து வெய்யிலில் காய்ந்து பயமும் பசியும் நிறைந்த மனிதர்களாய் தென்மராட்சியை அடைந்த போது வீதி தோறும் தம் வாசல் தோறும் வாளி நிறைய தண்ணீரோடும் குளுக்கோஸ் பக்கட்டுகளோடும் தேசிக்காய் கரைசல்களோடும் வீதி தோறும் நின்று பசியாற்றிய தென்மராட்சியின் மனிதம் மனதை நிறைத்தது.


இப்படியான மேற்கூறிய தோற்றத்துடனான கோயிலை அநேகமாக யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் அநேகமாகக் கானலாம். ஒரு விதாமான தெய்வீக அமைதி நிலவும். பிராமண அந்தணர்கள் மிக அக்கறையோடு விக்கிரகத்தை அலங்கரித்து மிக சிரத்தையோடு மந்திரங்கள் கூறி பூசை செய்து வீபூதி பிரசாதம் கொடுப்பார்கள். 

இந்தக் கோயில் எனக்கு திருநெல்வேலிப்பகுதியில் அமைந்திருக்கிற ஒரு முத்துமாரி அம்மன் கோயிலை நினைவுக்கு கொண்டு வந்தது. பல்கலைக் கழக நாட்கள் அவை. மனம் முதிரா பருவம். செவ்வாயும் வெள்ளியும் விரதமிருந்து இக்கோயிலுக்கு உந்துருளியில் போய் ஆலய வழிபாடு செய்து பின் வளாகத்துக்குப் போவது வழக்கமாக இருந்தது.

அழகும் வனப்பும் இளமையும் கொண்ட பிரம்ச்சார்ய பிராமனர் இங்கு பூசை செய்து வந்தார். கண்ணியத்தோடும் நாணயத்தோடும் நிறைந்த தொழில் நேர்த்தியோடும் சிறப்பாக சலிபேதுமில்லாமல் ஒவ்வொருவருக்காகவும் முழுமையாக முழு மந்திரங்களும் சொல்லி கருமமே கண்ணாய் அந்தக் கோயிலை பரிபாலித்து வந்தார்.

அங்கு நடைபெரும் திருவிழாவில் தண்டிகை அலங்காரம் கண்கொளாக் காட்சியாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு சமமாக வீதியில் அடுத்த பக்கம் இன்னுமொரு கோயிலும் இருந்தது. அங்கிருந்த இளம் பிராமனர் இன்னும் அழகாய் இருந்தார். :)

இவர்கள் இந்தக் கோயில் எல்லாம் இப்போது எப்படி இருக்கும்? இந்த மனிதர்கள் எல்லாம் என்ன ஆகி இருப்பார்கள்? 




இப்படியான வீதி தோறும் எத்தனை தடவை போய் வந்திருப்போம்?


வேலிகளும் வேலிப்பொட்டுகளும் சொல்லும் மனிதர்கள் மனிதர்களோடும் அயலாரோடும் சேர்ந்து வாழ்ந்த வாழ்வொன்றின் வசந்தத்தை! 

இன்னும் அங்கு அந்த வாழ்க்கை இருக்குமோ?



இந்த அன்னதான மடம் என் சிறு பிள்ளை நினைவு ஒன்றை மீட்டி வர போதுமாய் இருந்தது. அது என் சிறு பிராயம். மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரத்தில் இருந்தது இதைப்போல ஒரு மடம். அப்போதெல்லாம் என் அம்மாவின் தங்கை குடும்பத்தினர் அவர்களுக்குச் சொந்தமான லொறியில் குடும்பமாக அங்கு போன ஒரு தருணத்தில் நாமும் போனோம். லொறியின் பின் புறம் கதிரைகள், பாய்கள் எல்லாம் விரித்து தேவையான பொருட்களும் எல்லாம் ஏற்றி இரண்டு குடும்பங்கள் வவுனியாவில் இருந்து பயணமானோம். அங்கு பாலாவித் தீர்த்தத்தில் குளித்து கோயில் எல்லாம் கும்பிட்டு விட்டு இப்படி ஒரு மடத்தில் சாப்பிட்டோம். சோறும் சாம்பாரும் தான். பந்திப்பாய் விரித்து சாப்பாடு தந்தார்கள்.அத்ந்தச் சாப்பாட்டின் ருசியை இது வரை எந்தச் சாப்பாடும் மிஞ்சவில்லை. அதற்கு அப்படி ஒரு சுவை.


வீடு தோறும், கோயில் தோறும் இருக்கும் இதைப்போல கிணறுகள்.


கிராமங்கள் தோறும் வாசிக சாலைகளும் அதே மாதிரித் தான். அங்கு பத்திரிகைகள் தென்னிந்திய இலங்கைச் சஞ்சிகைகள் எல்லாம் வரும். இளைஞர்கள் கூடிக் கதைக்கும் இடமாகவும் அது இருந்தது.சில சனசமூக நிலையங்களில் ஆரம்பப் பாடசாலை வகுப்புகளும் நடந்த நினைவு.


நான் படித்த பாடசாலையின் கிணற்றை இது நினைவுக்கு கொண்டு வந்தது. எத்தனை பிள்ளைகள் விழுந்து எழும்பினார்கள். எத்தனை ஆசிரியர்கள் உடனே குதித்து காப்பாற்றினார்கள். சரஸ்வதிப் பூசை நாட்களின் கடசி நாள் கும்பத்தண்னீரை இக்கிணற்ருக்குள் ஊற்ற போகும் போது சோ என பெரு மழை பெய்யும். அந்தணருக்கு பெரிய ஒரு குடை ஒன்றைப் பிடிக்க அவர் கும்பத்தைக் காவிச் செல்வார். நாம் அரைச்சுவர் கட்டிய சுவரோரம் நின்று மழையையும் இக்காட்சியையும் காண்போம். தெய்வீகம் பொலிந்த ஒரு வாசமும் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்திருக்கும். எல்லோரும் பொட்டும் பூவும் சுண்டலுமாய் சந்தோஷமாய் இருப்போம். அன்றய அந்த கடசி நாள் நிகழ்ச்சி முதல் மூன்று பாட வகுப்புகள் வரை நடக்கும். அடுத்த நாள் கலை விழா கோலாகலமாய் நடந்தேறும். சில பள்ளிக் காதல்களும்!


யாழ்ப்பானத்து பாரம்பரிய வீடொன்றை இது நினைவுறுத்திச் சென்றது. எங்கள் பல்கலைக்கழகத்து இராமநாதன் மண்டபத்திலும் இப்படியான ஒரு முன்புறம் இருக்கிறது.அங்கு படித்த போது தங்கேஸ்வரி என்றொரு தோழி என்னோடு படித்தாள். அவளின் வீடு கே.கே.எஸ். வீதியில் இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு அருகில் அமைந்திருந்தது. அந்த வீட்டுக்கு கமலாலயம் என்று பெயரும் இருந்தது. அவ்வீட்டுக்கு அவளின் அழைப்பின் பேரில் போயிருக்கிறேன். அவளுடய வீடும் இவ்வாறான அமைப்பைக் கொண்டிருந்தது. அவளுடய சிறிய தாயாரும் அவர் செய்து தந்த பொன்னாங்காணி சுண்டலும் தங்கேஸ்வரியின் பொன் நிறமும் ஆரோக்கியமும் சுருட்டையும் நீட்டமுமாக அமைந்திருந்த அவளுடய நீண்ட கூந்தலும் கூடவே நினைவுக்கு வருகின்றன. அவள் திருமணமாகி ஸ்வீடன் நாட்டுக்குப் போனதாய் அறிந்தேன். 

இப்ப எப்படி இருக்கக் கூடும் அவள்? சின்னம்மா சுகமாய் இருப்பாவா?



மாடுகளுக்கும் தொட்டிகள். நடுவில் உள்ள தொட்டியில் புல்லும் வைக்கோலும் கிளித்து ஈர்க்கில் எடுத்த பனையோலைகளும் போடப்பட்டிருக்கும்.மாடுகளை ஒரு செல்வமாய் - வீட்டின் அங்கத்தவரைப் போல பரிபாலித்தார்கள்.



இங்கு வசதிகள், வாய்ப்புகள்! எல்லாம் பளீச் என்று இருக்கும்.குறை என்று சொல்ல ஏதும் இல்லை.

தேடிப்பார்த்தால் இன்னதென்று சொல்ல முடியாத ஒன்று இடறிக் கொண்டு நிற்கும்.

ஒரு விதமான ஏக்கம்! அந்த ஏக்கம் ஊரின்  புழுதி மண்ணில் கலந்து கிடக்கிறது!

கடந்த காலத்துக்குள் மீண்டும் போக முடியுமா?

படங்கள்: நன்றி இணையம். 

(பெரும்பாலான படங்களை எடுத்த பக்கத்துக்கு மீண்டும் போக முடியவில்லை.அந்த அன்பருக்கும் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட அந்தப் புகைப்படங்களுக்கும் என் விசேட நன்றி)




3 comments:

  1. உணவு அதனை பரிமாற்றம் செய்கிறது. சமைக்கிற அழகில்; கொடுக்கிற முறையில்; பதார்த்தங்களை சேர்க்கிற வகையில்,மருந்தையும் குணத்தையும் பண்பாட்டையும் அது வெளிப்படுத்தி நிற்கும் போலும்.

    புகைப்படங்களுக்கும் இருக்கிறது அப்படி ஒரு தகைமை. ‘காலப் பொறி’ அது.//

    அழிக்க முடியாத / விரும்பாத நினைவுப் பொதிகள்!!

    'காலப்பொறி' வார்த்தைப் பிரயோகம் மனசெங்கும் பிரவாகம் ...அந்த அன்னதான மடத்து சோறும் சாம்பாரும் கூடிக் களித்திருந்த உறவுகளால் அல்லவா உயிர்த்திருக்கிறது இன்றும்!

    //இங்கிருந்தும் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றார்கள்.//

    அதெல்லாம் ஒரு காலம்!

    ReplyDelete
  2. கடந்த கால நினைவுகள்...
    அழகான பகிர்வு.

    ReplyDelete