Wednesday, September 24, 2014

பறக்கவும் பறக்கும் நிமித்தமாகவும்; தோழமைக்காக ஒரு பதிவு....




கொஞ்ச மாதங்களாய் சோர்வு. எழுத ஏதும் இல்லாதது போலவும்; மெளனமாக இருக்க வேண்டும் போலும் ஒரு நினைப்பு. எதனை முயன்றாலும் ஏதும் கைகூடுவதாக இல்லை. வேலைத்தலத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களா? அல்லது பண்பாடுகள் தரும் அதிர்ச்சிகளா? முகமூடிகளுக்கு அப்பால் கண்டுகொள்ளப்படுகிற விகார முகங்கள் தருகிற அதிர்ச்சிகளா?வாழ்க்கை பற்றிய தடுமாற்ற சிந்தனைகளா? எதுவென்று தெரியவில்லை.

இணையப்பக்கங்களுக்கும் அதிகம் வருவதில்லை. ’சுகமும் துக்கமும் வெளி இடங்களில் இல்லை. மற்றவர்களுடய குணக்கேடுகள் நம்மை எதுவும் செய்யாது’ என மகா பாரதத்தில் ஒரு வாசகம் வரும். அது போல, ’எதுவும் நேராதது மாதிரி நடந்து கொள்ளுங்கள். என்ன நேர்ந்திருந்தாலும் சரி’ என்றும் இணையத்தில் ஒரு அற்புத வாசகம் இருந்தது. இவை எல்லாம் ஏன் என்னை தூக்கி நிறுத்தப் போதுமானதாக இல்லை என்று தெரியவில்லை.

ஓர் அனுபவம் ஒன்று மெளனமாக சேகரிக்கப்படுகிறது என்பது மாத்திரம் புலனாகிறது. அது எத்தகைய அனுபவம் என்பதும் எத்தகைய பாடம் என்பதும் புரிந்து கொள்ளப்பட இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அது வரை இது ஓர் வலி மிகுந்த பயணம்.

சரி அது போகட்டும்..

ஏதோ ஒரு புள்ளியில் உயிர்ப்பினை உசுப்பி இயக்கத்தினைத் தொடங்க வேண்டும்.

நிலா அதற்கான ஆரம்பமாய் ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தா. மிக்க நன்றி நிலா. பறக்கவும் பறக்கும் நிமித்தமாகவும்  உங்கள் தொடர் பதிவின் அழைப்பினை நன்றியோடு  ஏற்று என் பதில்களைத் தந்திருக்கிறேன்.

...............................................

1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நிச்சயமாக இருக்கப் போவதில்லை. :)

சொத்துக்கள் யாவும் சரியாக சரியானவர்களிடம் போக இருப்பதை உறுதி செய்து கொள்வதோடு என் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்வேன்.

ஏதேனும் தெரிந்தோ தெரியாமலோ கடந்த காலத்தில் தவறுகள் விட்டிருப்பதாக மனதுக்குத் தோன்றினால் அதற்கு ஏதேனும் பிராயச் சித்தம் செய்யலாமா என யோசிப்பேன். ( என்னால் மன்னிக்க முடியாத நபர்கள் என் கடந்த காலத்தில் என்னைக் கடந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு மெளனமான புறக்கணித்தலின் மூலம் மிகக் கடுமையான தண்டனையையும் வழங்கி இருக்கிறேன்.)

மரணத்திற்கு மனதளவில் தயாரான நிலையில் இருப்பேன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஒவ்வொரு சமயமும் பண்பாடும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறைகளைப் போதிக்கின்றன. ஒரு பண்பாட்டுக்குச் சரியாக இருப்பது இன்னொரு பண்பாட்டுக்கும் சமயத்துக்கும் முரண்பாடாக இருக்கிறது.

உதாரனமாக தவறுகள் மன்னிக்கப்படும் என கிறீஸ்தவம் போதிக்கிறது. இந்து சமயம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயம் ‘கணக்கு’ வைக்கப்படும் என்று சொல்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நம் பண்பாடு போதிக்கிறது. ஒருவர் ஐவரை மணந்து கொள்ளலாம் என இஸ்லாம் போதிக்கிறது.

கணவனும் மனைவியும் தமக்குள் உண்மையாகவும் விசுவாசத்தோடும் நேர்மையோடும் இருக்க வேண்டும் என்பதை நம் பண்பாடு பொதுவாக ஒப்புக் கொள்கிறது. அவுஸ்திரேலியப் பண்பாடு திருமணத்துக்கு அப்பாலான ஆண்,பெண் உறவை ஆரோக்கியமானது என ஏற்றுக் கொள்ளுகிறது.

கொலை பஞ்சமா பாதகம் என போதிக்கப்படும் அதே வேளை ஒருவர் ஒரு மனிதனை காரணம் கருதியோ கருதாமலோ கொலை செய்தால் அதற்குத் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இதனையே இராணுவம் செய்தால் / மனித உயிர்களைக் கொன்றால் விருதுகளும் சன்மானங்களும் கொடுக்கப்படுகின்றன.

இவை பற்றியும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இறப்புக்குப் பின் என்ன நடக்கும்? யாரோ ஒருவர் போட்டு வைத்த இந்தப் பண்பாடுகளும் சமயமும் எம்மை மானசீகமாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறதா? இந்த இலட்டுமணக்கோடுகள் யாரால் எப்போது என்ன நோக்கத்துக்காகப் போடப்பட்டன என்பது பற்றி எல்லாம் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பண்பாடுகளும் சமயங்களும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? எங்கள் வாழ்க்கையை எப்படி நாங்கள் வடிவமைத்திருப்போம்?


3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சஞ்சிகை ஒன்றில் படித்த விடயம் ஒன்று.

காதலிக்கும் மனைவிக்குமான வேறுபாடுகளை அது இவ்வாறு பட்டியலிடுகிறது.

* பேச ஒரு விடயமும் இல்லாவிட்டாலும் கூட பேசிக்கொண்டே இருந்தால் அது அது காதலன் காதலி.
ஒன்றுமே இல்லாத விடயத்தை பொழுதுக்கும் பேசிக்கொண்டிருந்தால் அது கனவன் மனைவி.

* எங்கேயாவது போகும் போது சமமாக நடந்து போனால் அது காதலன் காதலி.
எங்கேயாவது போகும் போது ஆண் முன்னாலும் பெண் பின்னாலும் அல்லது பெண் முன்னாலும் ஆண் பின்னாலும் நடந்து போய் கொண்டிருந்தால் அது கனவன் மனைவி.

* பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால் காதலன் காதலி.
பொது இடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை என்றால் அது கணவன் மனைவி.

* பெண்ணின் வருகைக்காக ஆண் காத்துக்கொண்டிருந்தால் காதலன் காதலி. இந்தக் கிரகம் புடிச்சவன் இன்னும் வீட்டுக்கு வரலியே என ஆணுக்காய் பெண் காத்துக்கிட்டிருந்தா கணவன் மனைவி.

*பெண்னும் ஆணும் ஒருவருக்கொருவர் மிஸ் கோல் விட்டுக்கிட்டா காதலன் காதலி. பெண்ணும் ஆணும் ஒருவருக்கொருவர் அழைக்கும் கோலை மிஸ் கோல் ஆக்கினா கனவன் மனைவி.

*உன்னால தான் எல்லாமே என ஒருவருக்கொருவர் புகழ்ந்து கிட்டா காதலன் காதலி. உன்னால தான் எல்லாமே என ஒருவருக்கொருவர் திட்டிக்கிட்டா கனவன் மனைவி.

(நன்றி: 3.3.13 குங்குமம்)


4.. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?

வெளியே போய் வருதல், கடைச்சாப்பாடு, ஏகாந்தம்; மற்றும் தூக்கம்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

இரண்டு மாடுகள் சேர்ந்து ஓட்டுகின்ற வண்டி இந்த வாழ்க்கை என்பதால் திருமணம் என்ற பந்தம் பற்றிய தெளிவான புரிதல் முதலில் வேண்டும்.அதிலும் குறிப்பாக அன்னிய நாடுகளில் அது மிக முக்கியம். திருமணம் என்ற சொல்லின் மூலம் அவர்கள் எதற்குக் கட்டுப்படுகிறார்கள் எதற்குக் கட்டுப்படவில்லை என்பது பற்றிய அறிதல் அவசியம். பிறகு சக ’மாடு’:) பற்றிய குறை நிறைகளை அறிந்து தெளிவாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிலே விட்டுக் கொடுக்கலாம் எதிலே விட்டுக் கொடுக்க முடியாது என்பது பற்றி தன்னைத் தானும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அவை பற்றி இருவரும் கலந்தாலோசித்துக் கொள்ளுதலும் அவசியம்.
.
மற்றம்படி அவரவர் வாழ்க்கை அவரவரது. சொல்ல என்ன இருக்கிறது? ஏதேனும் பரிசுப்பொருள் வாங்கிக் கொடுப்பேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

அவனவன் (மனிதர்கள்) (போர்)அடிச்சுக் கொள்ளட்டும். எல்லாம் அவனவன் உண்டாக்கியது தானே! அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் வாய் பேசா ஜீவன்களை அதன் பாட்டில் விட்டு விடுங்கள். அதற்கு ஏதேனும் செய்ய முடியும் என்றால் செய்ய ஆவல்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
பெரும்பாலும் புத்தகங்களிடம்; சில வேளைகளில் தெரிவு செய்யப்பட்ட நண்பர்களிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அதை எனக்குச் சொன்னவரிடம் இருந்து நூலைப்பிடித்து மூலத்தைக் கண்டுபிடித்து நேரடியாக விடயத்தைக் கேட்பேன். நிலைமைக்கேற்ற படியான தண்டனையும் வழங்கப்படும்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

எதுவும் நிரந்தரமில்லை நண்பரே! மாற்றம் ஒன்றே மாறாதது, வருகின்ற போதே போகின்ற செய்தி இருக்கின்றதென்பது மெய் தானே! எல்லாம் கொஞ்சக்காலம்.Let it go!


10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகங்கள் படிப்பேன், வீட்டை ஒழுங்கு படுத்துவேன், இணையத்தில் ஏதேனும் நோண்டுவேன், ரீவி பார்ப்பேன்.


1.தோழமையின் உன்னதம்?

மனதோடு பேசக்கிடைப்பது.

2.தோழமையின் உன்மத்தம்?

பருவ வயது.

3.நட்பின் உரிமைக்கு எல்லை எது?
அபிப்பிராயம் மட்டும் சொல்லலாம். வாழ்க்கையும் அதன் முடிவுகளும் அவரவரது.அபிப்பிராயம் சொல்வது வரை தான் எல்லை.

உதவி தேவைப்படுகிறது என்று அறிந்தால் உதவி. மீனக் கொடுப்பதைவிட தூண்டிலைக் கொடுப்பது மாதிரியான உதவி. அவரை அவர் மாதிரி வாழ விடுவதைப் போல அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போல ஓர் உதவி வேறு உண்டா?

4.நட்பு வட்டத்தில் யாரெல்லாம் இருக்கக் கூடும்?
எவரும். வயது, பால், நிறம், இனம், மதம், மொழி கிடையாது.

5.மனம் தகிக்கும் ஒரு சினேகிதியின் மரணம்?
இது வரை நிகழ்ந்ததில்லை.

என் வேலைத்தலத்து சினேகிதன் (Ray) யின் அகால மரணம் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்ற பாடத்தை எனக்குச் சொல்லிப் போனது. (சுடலை ஞானம் என்பது அது தான் போலும்!)

6.நிறம் மங்கிய நட்பூ?

பால்ய காலத்து சினேகிதங்கள். பள்ளிக் கால நட்புகள்.

7.மனம் மாறிய நட்பூ?

நான் தான் மாறி இருக்கிறேன்.

அடிப்படையான சில விடயங்களில் தெளிவான உறுதியான நிலைப்பாடுகள் என்னிடம் உண்டு. நான் போட்டு வைத்திருக்கிற  வாழ்க்கையின் சட்ட திட்ட நியதிகளுக்குள் அவர்கள் இருந்தால் மாத்திரமே எனக்கு நட்பு சாத்தியப்படுகிறது. நட்பாக இருந்தாலும் கூட அடிப்படையான சில விடயங்களில் ஒன்றுபட்டால் மாத்திரமே நட்பு சாத்தியமாகும் எனக்கு.

குறை நிறைகளோடு நட்பை ஏற்றுக்கொள்ளுகிற அளவுக்கு மனம் இன்னும் விசாலமடையவில்லை.

8.மணம் குன்றா நட்பூ?

புத்தகங்கள்! எப்போதும்!

9.தினம் தினம் நினைவில் ஒளிரும் தோழமைகள்?

தினம் தினம் நினைக்கின்ற வகையில் எதுவும் இல்லை.

10.நிஜம்மாவே இத்தனை பேரையும் தினம்தினம் நினைக்கறீங்களா?!

:)

Thursday, September 18, 2014

இலக்கிய சந்திப்பு - 21 -

அன்புக்குரிய இலக்கிய நெஞ்சங்களே!

உங்கள் இலக்கிய இதயங்கள் நலம் தானா?

இரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.



வசந்த காலம் ஆரம்பித்து விட்டது.

இருள் விலகி சூரியன் இதமாய் மேல் வர மெல்லிய தென்றலோடு பூக்ககளின் வாசம் பூலோகமெங்கும்!இலைகளும் பூ மொட்டுக்களும் துளிர்க்கின்றன.கிளிகளும் பறவை இனங்களும் ஆங்காங்கே இணைகளோடு தென்படுகின்றன!! தோற்ற அளவில் மனிதர்களும் கம்பளி ஆடைகள் தவிர்த்து புன்னகை இழையோட பாரமற்று நடக்கக் காண்கிறோம்.

மகிழ்ச்சியாக இருக்கிறது!

குளிர் நீங்கி விட்டதால் நாமும் இனி இயற்கையோடு இணைந்து கொள்ள காலம் கைகூடி விட்டது. பழைய படி பூங்கா கைவிரித்து நம்மை அணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறது.

நிலமையினைக் கண்டு வர கடந்த வார நடுப்பகுதி ஒன்றில் பூங்காவுக்குப் போனேன்.வசந்த கால மலர்களோடு நம்மை வரவேற்ற படி காத்திருக்கிறது பூங்கா.

ஆம். பூக்களால் நிறைந்து போயுள்ளது பூங்கா! அது மட்டுமல்ல, ஓவியக் கண்காட்சி மற்றும் Cumberland மனநோயாளர் வைத்தியசாலையைச் சேர்ந்தோரது  அரும்பொருள் காட்சியகம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கைவினைப் பொருட்களின் கடைகளும் உணவு விற்பனைகளும் அமோகமாக நடைபெறுகின்றன.

இம்மாத இறுதி வர மட்டுமே இத்தகைய அரிய காட்சிகள் அங்கிருக்கும்.

புல் தரையில் பூக்களின் ஊடே நடப்பதுவும்; ஓவியக்கண்காட்சியின் காட்சி விரிவில் இலயிப்பதுவும்; கூடவே உள்ளத்துக்கும் உடலுக்குமாக உறவின் விசித்திரங்களை தரிசிப்பதிலும்; கூடவே,  நீரோடை அருகே உட்கார்ந்து தேநீரோடு தாம் கண்டு கொண்ட கருப்பொருள் பற்றி கலந்துரையாடி அவற்றினூடே இலக்கியக் கருக்களை இனம் கண்டு கொள்வதும் இம்மாத சந்திப்பின் நோக்கமாகும்.

பூவுக்குள் தேனை வைத்து, தேனின் இருப்பிடத்தை தேனீக்களுக்கும் பறவைகளுக்கும் மாத்திரம் சொல்லி வைத்த இயற்கையிடமும் ஓவியக்காட்சிகளுக்குள்ளும் 19ம் நூற்றாணடின் உள்ளத்து நோயின் வாழ்க்கைச் சுவடுகளுக்குள்ளும் ஒழிந்து போயிருக்கின்றன ஓராயிரம் இலக்கியங்களுக்கும் கலைகளுக்குமான கருக்கள்!

கண்டடைய வாருங்கள்!

இம் மாத இறுதி இம்முறை இன்னும் சிறப்பாக நீண்ட வார இறுதி விடுமுறையாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை விடப்பட்டிருப்பதால் எல்லோருமாக கூடி இருந்து அனுபவம் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உங்கள் எல்லோரது பிரசன்னமும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் என நான் சொல்ல வேண்டியதில்லைத் தானே!

வருக! நாளாந்த வாழ்வின் இறுக்கங்களில் இருந்து சற்றே விடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியும் புது வெளிச்சமும் பெற இந் நாள் உதவும்.

உங்கள் இன்றய நாளும் இனி வரும் நாட்களும் இனியதாகுக!

தமிழால் இணைந்திருப்போம்.

Wednesday, September 10, 2014

மன வனம்

அண்மையில் குறிப்பிட்ட ஒரு காரணம் நிமித்தம் சூளாமணி என்ற காப்பியத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் சேடி நாட்டின் தலைநகரமான இரதனூபுரம் என்ற இடத்தை அரசாண்ட சேடி மன்னன் “மனோ வனம்” என்ற பூஞ்சோலைக்குக் குடும்பத்தோடு போன போன போது அச் சோலை அவனை வரவேற்ற பாங்கினை அது ஒரு இடத்தில் கீழ் கண்டவாறு சொல்லிக் கொண்டு செல்கிறது.


அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்


வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கிம னோவன நண்ணி னானே


வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்

கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே


மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்

கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே


புகழ் பாடிப் பூவிறைத்தல்

கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே


தென்றல் வீசுதல்

குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே


என்று பாடுகிறார் தோலாமொழித் தேவர்.


சாதாரண ஒரு நிலையில் இருந்திருந்தால் அவ் வர்ணனை வீச்சில்; தமிழின் அழகில்; அப்புலவனின் கற்பனை நயத்தில்; வந்த வேலையை மறந்து மனதைப் பறி கொடுத்திருப்பேன்.ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது ஒரு சொல் என்னை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டது.


பாடல் அழகாய் இருந்த போதும் பாடலுக்குள் நுழைய முடியாமல் ஒரு பெருந் தடையை ஏற்படுத்தியது “மனோவனம்” என்ற சொல்.


முன்னரும் ஒரு பொழுது இப்படித்தான்.மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் வரும் “சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை” என்று அவர் பாடிய பக்தித் திறத்தில் தடக்குற்று அந்தச் சொல்லழகில் பலமாதங்கள் திளைப்புற்றுக் கிடந்தேன். இப்போது இந்த மனோ வனம்!


உண்மையில் இந்த மனம் என்பது ஒரு வனத்தைப் போல என்பது எவ்வளவு உண்மை? அங்கு தான் எத்தனை கொடிய விலங்குகள்,பயந்து ஒளிந்து கொள்ளும் சிறு பிராணிகள், முயல்களில் இருந்து முயல்களைக் கொன்று தின்னும் மிருகங்கள் வரை எத்தனை ஜாதி? எத்தனை வண்ணங்கள்? இயல்புகள்?தோற்றங்கள்?

கொடிகள், பூக்கள், மரங்கள், விருட்சங்கள், ஊர்வன, பறப்பன, வண்ணாத்திப் பூட்டிகள், மின்மினிகள், நறுமண மலர்கள்,பூச்சிகள், பழமரங்கள், மற்றும் குளிர்ச்சி பொருந்திய நீரோடைகள், மலை முகடுகள், மண்மேடுகள், சமதரைகள்,புல்வெளிகள்,மேலும் கூடுகள், குகைகள், சிலந்திகள், தேனீக்கள், தேன் கூடுகள்,தாவித் திரிவன,தங்கி இருப்பன,அப்பப்பா எத்தனை எத்தனை?...........


மனதை ஒரு வனமாக எண்ணி மனதுக்குள் உள் நுழைந்தேன். அதனை உலகம் பார்க்கப் புறப்பட்ட ஒரு உல்லாசப் பயணியைப் போல மூன்றாம் தரப் பிரஜையைப் போல ஆராய்ந்து பார்த்தேன். என் மன வனத்தை.


இன்னும் மீள முடியவில்லை.:)


அங்கிருக்கிற ஒரு வினோத பிராணி இது வரை எங்கும் நான் கண்டறியாதது.:) அது மிக வினோதமாயும் சமயா சமயத்தில் பயமூட்டும் விதமாயும் (மற்றவர்களுக்கும்) தோற்றம் காட்டுகிறது.அது சில சந்தர்ப்பங்களில் நல்ல பிராணியைப் போலவும் தோற்றமளிக்கிறது.தேவை ஏற்படுகின்ற போது எங்கிருந்தோ கூரான கொம்புகள் மேல் கிளம்புகின்றன.அது தன்னை ஒரு கம்பீர பிராணியாய் தோற்றம் காட்டிய படி சுயம் தாக்கப் பட்டு விட்டதைப் போல பிடரி சிலிர்க்க எழுந்து நிற்கிறது.அது பூனையைப் போல மிருதுவானதாகவும் அதே சமயம் பாம்பினுடய விஷத்தைக் கொண்டிருப்பது போலவும் தெரிகிறது.


அது என் மனோ வனத்தில் மட்டும் தான் வசிக்கிற பிராணியோ தெரியவில்லை.அச்சத்தையும் ஆதூரத்தையும் ஒருங்கே கொண்ட அபூர்வ பிராணி அது.


வினோதமான இந்தப் பிராணியை தமிழில் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்!


பாற்கடலுக்குத் தானே தெரியும் மந்தர மலையில் ஆழம்!:)


மனோவனம்..........