Sunday, May 31, 2015

வா... தோழி!......



அண்மையில் ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்.

 அதில் ஓரு உளவியலாளர், இரண்டு பிளஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூடி விவாதித்த விடயம் அமெரிக்காவில் விவாகரத்துக்குப் பின்னர் பெண்கள் பிளாஸ்டிக் சத்திரசிகிகிச்சை நிபுணர்களை நாடி பல ஆயிரக்கணக்கான டொலர்களைச் செலவளித்து தம் உடலைத் திருத்திக் கொள்ளுகிறார்களாம். ஏற்கனவே மனநிலையில் இலகுவாக உடைந்து போகும் தன்மையில் உள்ள இத்தகைய பெண்களிடம் இந் நிபுணர்கள் உரையாடி மேலும் மேலும் உடல்திருத்தங்களைச் செய்யக் கோரி பல் ஆயிரக் கணக்கான டொலர்களைக் கறக்கிறார்களாம்.

மிக சூடாகவும் சுவாரிசமாகவும் நடந்த இந்த விவாத இறுதியில் உளவியல் நிபுணர் அமெரிக்க விவாக ரத்தான பெண்களுக்கு விடுத்த கோரிக்கையும் விண்ணப்பமும் கீழ் கண்ட 3 விடயங்களுக்குள் அடங்கி விட்டிருந்தது.

1. நீங்கள் உண்மையாக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். அது உங்கள் முகத்தில் இயல்பாக ஜொலிக்கட்டும்.

2.உங்கள் நடைஉடை பாவனையில் சீரான நடைமுறையைக் கொண்டு வாருங்கள். சரியான நேரம் சரியான உணவு, அளவான தூக்கம், பொருத்தமான உடற்பயிற்சி, நல்ல நண்பர்கள்,  செய்கின்ற காரியத்தில் முழுமையான ஈடுபாடு, இவற்றை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.

3. நீண்டகாலமாக திருமணத்துக்கு முன்னர் செய்ய வேண்டும் என்றிருந்த; பின்னர் விடுபட்டுப் போய் விட்ட நீண்ட அந்தக் கனவை நனவாக்குங்கள். அது உங்களுடய தன்னம்பிக்கையை மீட்டுத் தரும். அந்தப் பயணத்தில் உங்களுக்கான வாழ்வு எழுதப்பட்டிருக்கக் காண்பீர்கள்.

பொதுவாக பார்த்தால்,

எமக்கு தன்னம்பிக்கை குறைகிற போது எதிர் மறை எண்ணங்கள் நம்மைப் பீடிக்கின்றன. அவை சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விபரீத கற்பனைகளையும் மிக இலகுவாகத் தூண்ட வல்லனவாக இருக்கின்றன.

இதனை விளக்க ஒரு முல்லா நஸ்ருதீனின் கதை ஒன்று சொல்வார்கள். அதன் சுருக்கம் இது தான். முல்லா வீட்டில் பணம் திருட்டுப் போயிற்று. முல்லா அது பக்கத்து வீட்டுக் காரன் தான் திருடியது என பலமாக நம்பினார். பக்கத்து வீட்டுக் காரரின்  நடவெடிக்கையை முல்லா உன்னிப்பாக அவதானித்தார். பக்கத்து வீட்டுக் காரரின் நடவெடிக்கைகள் யாவும் அவரை ஒரு திருடனாகவே காட்டிற்று. பின்னர் முல்லா அப்பணம் வேறொரு இடத்தில் வைக்கப் பட்டிருந்ததை தாமதமாக உணர்ந்தார். இப்போது முல்லா பக்கத்து வீட்டுக் காரரை கவனித்தார். அவரின் நடவெடிக்கைகள் யாவும் அவரைத் திருடனாகக் காட்டவில்லை. என்று அக்குறுங்கதை முடிகிறது.

கதையின் சுருக்க வடிவம் ”மனமே எல்லாம்” என்பததே! ஆனால் கண்ணுக்குப் புலனாகாத இந்த அந்தரங்கங்களின் இருப்பிட அங்கமான மனம் எங்கே கேட்கிறது? முதலில் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லையே! என்று அங்கலாய்க்கிறீர்களா? அதுவும் சரி தான்.

எப்படி ஒரு விடயத்தை நாம் அணுகுகிறோம் என்பதும்; எமது வாழ்வியல் விழுமியச் சிந்தனைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அதில் எவ்வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும்; எவ்வளவு பலமாக நம்மை அது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்பதும் பயம் தரும் விடயமாக இருக்கிறது.

”அறம் - பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிய” பண்பாட்டில் அது  கடினமும் கூட.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்ற போதும் மாற்றங்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு ஆண் திருமணம் செய்யும் போது அவள் மாற மாட்டாள் என்று திருமணம் செய்கிறாராம். ஆனால் அவள் மாறி விடுகிறாளாம். ஒரு பெண் அவர் மாறுவார் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்கிறாளாம். ஆனால் அவர் மாறிவிடுவதில்லையாம்  என்று அண்மையில் எங்கோ வாசித்தேன்.

நம் நம்பிக்கைகளே நாங்கள். நம் நம்பிக்கைகளே நம்மை ஆழுகின்றன, வழி நடத்துகின்றன. நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும் போது - இது வரை நாம் சரி என நினைத்த ஒன்றை - இது தான் சரி என்று நினைத்த ஒன்றை ஒருவர் இலகுவாக உடைத்து வெளியேறும் போது நாம் நொருங்கிப் போகிறோம். சுக்கு நூறாக நம் வாழ்வு சிதறிப் போவதை காண்கிறோம்.

இங்கு தான் வெறுப்பு,பொறாமை, பழியுணர்வு, நிர்கதி நிலை, என்னசெய்வதென அறியா இடர் இவைகள் எல்லாம் வந்து சேர்கின்றன.

ஒவ்வொருவரிடமும் நல்ல இயல்புகளும் தீய இயல்புகளும் கலந்தே இருக்கின்றன. பலர் தம் அறிவு, ஆற்றல், சூழல், குடும்பம், சுய சிந்தனை, குடிப்பிறப்பு,வாழ்விடம், சமூகம், உயிரியல் மூலக்கூறுகள், பரம்பரை அலகுகள், ஹோமோன்களின் தாக்கம், வயது, அனுபவம் போன்ற பல காரணிகளின் தாக்கத்தால் தம் குண இயல்புகளைத் தீர்மானித்துக் கொள்ளுகிறார்கள்.

அதன் விளைவினால் விளைந்த வேறொருவர் இன்னொரு தனி நபரைப் பார்க்கின்ற போது தன் அடையாளங்கள் நம்பிக்கைகளின் ஊடாக ஒருவரை நல்லவர் எனவும் தீயவர் எனவும் தீர்மானித்துக் கொள்ளுகிறார்கள்.

இன்னொரு விதத்தில் நல்லவரெனவும் தீயவர் எனவும் எவரும் இல்லை எனவும் வாதிடலாம். தீயவர் எனக் கருதப்படும் ஒருவர் வேறொரு நபருக்கு அவரின் மனக்கண்ண்டியில் நல்லவரெனவும் தென்படலாம்.

மனிதர்கள் வளர்ந்து கொண்டும் மாறிக்கொண்டும் இருப்பது இயற்கை. சில இடத்தில் வளர்ச்சி நிலை, மாற்ற நிலை ஒருவருடய வேகத்தினதும் திசையினதும் போக்கில் இருந்து வேறுபட்டு அமைகின்ற போதும் சிக்கல்கள் தோன்றுகின்றன.

இவை காலப்போக்கில் தொடர்பாடலைப் பாதிக்கிறது. எடுத்ததற்கெல்லாம் கோபம் வருகிறது. ஈர்ப்பின்மையையும், அதிர்ப்தியையும் சண்டைகளையும் முரண்பாடுகளையும், கோபதாபங்களையும் அவை விளைவிக்கின்றன.

அது நிற்க,

ஓர் உறவு சிறந்ததென்பதையும் நமக்கு மிகப் பொருத்தமானது என்பதையும் எவ்வாறு நாம் கண்டறியலாம்?

அந்த உறவு உங்களிடம் மறைந்தும் மறையாமலும்  இருக்கின்ற சிறந்த இயல்புகளை வெளியே கொண்டு வருவதாக இருந்தால்;  மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, பாதுகாப்பை, பெருமையை, தன்னம்பிக்கையை உங்களுக்கு ஏற்படுத்துவதாக இருந்தால் அது உங்களுக்குரிய உறவு!

மண்ணுக்குள் மறைந்திருக்கிற விதை மேலே மழைத்துளி விழுவதைப் போன்றது அது.

மாறாக வேதனையை, பொறாமையை, வெறுப்பை, விருப்பமின்மையை, கவலையை, சந்தேகத்தை, மனதுக்கு ஒரு படபடப்பை, பயத்தை அது தொடர்ந்து தருவதாக இருந்தால் -

அது தனிமனித சிந்தனை, பாரம்பரிய நம்பிக்கை, வாழ்க்கையைப் பார்க்கின்ற பார்வை என்பவற்றின் அடிப்படையில் அமைவதாக இருந்தால் அது உங்களுக்குரியதானதல்ல.

மனதுக்கு ஒரு விதத்தில் அந்த உறவு பிடித்திருந்ததாக இருந்தாலும் கூட!

ஆழ்ந்து பார்த்தால் அந்தப் பிடிப்பு கூட நம் தன்னநம்பிக்கையீனத்தின்; ஒரு அவநம்பிக்கையின்; ஒரு பாதுகாப்பின்மையில் பிடியில் அந்தப் பிடிப்பு அமைந்திருக்கக் காணலாம்.

’இரகசியமாகச் சொல்லப்படும்; செய்யப்படும் செயல்கள் யாவும் தவறானவை’ என்றார் காந்தி.

விலகி நடந்து பாருங்கள்!

ஒரு வித சுதந்திரம்; விடுதலை; கட்டுக்களில் இருந்து விடுபட்ட ஓருணர்வு; மனம் லேசான தன்மை; ஒரு வித சந்தோஷம் இவற்றை நீங்கள் உணர்வீர்கள்!

( அதே நேரம் நீங்கள் ஒருவரில் தங்கியில்லை என்பது எல்லையற்ற சுதந்திரத்தை தருவதால் ‘வேலியற்ற பயிரை மேய’ உதவிக் கரம் நீட்டிப் பலர் வரக் கூடும். இங்கு பெண்கள் பொறுப்பையும்  தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் கூர் தீட்டிக் கொள்ள வேண்டும். “அவரவர் பயம் அவரவர் தர்மம்” என்பார் எஸ்போ. இந்த இடத்தில் தான் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.)

எல்லாவற்றையும் நீங்களாகவே உங்களுக்கே உங்களுக்கான கால அவகாசத்துக்குள் செய்து முடித்து விடுகின்ற போது தன்னம்பிக்கை மலரக் காண்பீர்கள்.

அது முகத்தில் புத்துணர்வையும் புன்னகையையும் தோற்றுவிக்கும். அந்தப் புன்னகை யாரும் பார்க்கிறார்கள் என்பதற்காகவாக அல்லாமல் இயல்பாக மலர்ந்து சத்தமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் வாசம் தரும் பூவைப் போலானதாக எப்போதும் இயல்பாக முகத்தில் மலர்ந்திருக்கும்

A happy woman is a beautiful woman.

Enjoy the simple things in life!

வாழ்க்கை என்பது என்ன ? எல்லாம் ஓர் அனுபவம் தான்! :)






Thursday, May 14, 2015

போட்ட விதை - குறும்படம்



திரையில் சரியாகப் பார்க்க முடியா விடின் கீழே உள்ள link இற்குச் சென்று தெளிவாகக் காண்க.

https://www.youtube.com/watch?v=YFFFqHTX3c4

ஆசிரியத் தொழிலில் மாத்திரமே கிட்டக் கூடிய இந்த பெருமிதமும் சந்தோஷமும் உன்னதமானது இல்லையா?

Monday, May 11, 2015

பொய்யாயினவெல்லாம் போயகல.....



அண்மையில் கைக்கு கிட்டியது ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ். இப்போது தான் பிறந்த ஒரு புதுக்குழந்தையைத் தூக்குவதைப் போல ஒரு வித பரவசம்.

பொருளடக்கத்தில் ஓடியது கண்கள். பேராசிரியர் சண்முகதாஸ் என்ற பெயரைக் கண்டதும் தலைப்பில் நிலைகுத்திற்றுக் கண்கள். தலைப்பு
‘ புலம்பெயர் இலக்கிய ஆய்வுகளும் அவ்விலக்கியங்களின் எதிர்காலமும்’

இந்த பெயரில் மனம் தரித்து நின்றதற்கு பலகாரணங்கள். ஒன்று, அவரிடம் ஒருவருடம் தமிழ் இலக்கியம் கற்கும் பாக்கியத்தை நான் பெற்றுக் கொண்டது. மற்றயது, அவரிடம் இருக்கும் பணிவும் அமைதியும் அறிவுப் பேரொளிப்பெருக்கும் சலசலப்புகள் புகழ் பாதைகளை விட்டு விலகி நிற்கும் அவரது மானுடகுணமும். இன்னொன்று அவரின் கற்பிக்கும் கலை.தேன்சுவை சொட்டச் சொட்ட இலக்கியம் கற்கும் போது நாம் மெய்மறந்து தேன் குடித்த வண்டுகளாய் மாறிப் போனது அவரிடம் தான்.

வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியக் கடல்! மானுடத்தின் அசல் பிரதி. தமிழ் பண்பாட்டின் பள்ளிக் கூடம்.

அதனால் மேற்கொண்டு மேலே போகாமல் நேரடியாக அவரின் கட்டுரைக்குள் நுழைந்து கொண்டேன். முற்பகுதி முழுக்க முழுக்க புலம்பெயர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்வோருக்கான தகவல் களஞ்சியமாகக் காணப்பட்டது. பிற்பகுதி தான் எங்கள் “உண்மை நிலையை” நமக்கு உணர்த்த வல்லதாக; நித்திரையில் இருந்து விழிப்பு நிலைக்கு நம்மை கொண்டு வர வல்லதாக; நீங்கள் நிற்கிற இடம் இது தான் என எமக்கு காட்ட வல்லதாக இருந்தது. அதனை அப்படியே நான் உங்களுக்கு தருவது தரவுச் சிறப்பு வாய்ந்தது.

“...புலம் பெயர்ந்து சென்ற தமிழரது அடுத்த தலைமுறை வாழிட மொழிகளிலே பெற்ற புலைமைத்துவத்தை இன்னும் தமிழ் மொழியிலே பெறவில்லை. அதற்கான தமிழ் மொழிப்பயிற்றலும், சில நாடுகளைத் தவிர, சரியாக நடை பெறவில்லை. தமிழ் மொழியின் தரத்தை குறைத்துப் பயிற்றுகின்ற கற்கை மரபு ஒன்றும் ஒரு நாட்டிலே உருவாக்கப் பட்டுத் தொடர்கிறது. இது எதிர்காலத்தில் தமிழ் மொழியிலே இலக்கியம் தோன்ற முடியாத சூழலையே ஏற்படுத்தும்......ஒரு மொழியின் பேணலுக்கு அம்மொழிப் பயில்கை தொடர வேண்டும். பண்டைய இலக்கியங்கள் கற்பிக்கப் பட வேண்டும்.

(எனக்குடனே பிஜி, தென்னாபிரிக்கா, மொறிசியஸ் நாடுகளுக்குப் போன தமிழர்கள் அந் நாட்டு விழுமியங்களுக்குள் தொலைந்து போனது ஒரு வரலாற்று எச்சரிக்கையாய் நினைவுக்கு வந்து திகில் கூட்டியது.)

... செம்மொழிகளுள் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் என்னும் மூன்று மொழிகளும் தற்போது பேச்சு வழக்கில் இல்லை. எனவே அம்மொழிகள் எதிர்காலத் தலை முறையினரால் பேசப்பட மாட்டா. அதே போன்று தமிழ் மொழியும் புலம் பெயர் நாடுகளில் பேசப்படாத ஒரு நிலையிலே  இளைய தலைமுறையினரால் பயிலப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியங்கள் தோன்றக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன. புலம் பெயர் நாடுகள் பலவற்றுக்கு நேரடியாகச் சென்று கண்டு கொண்ட அனுபவமே இக்கருத்தை முன் வைப்பதற்குச் சான்றாக உள்ளது......

....காலப்போக்கில், புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற கருத்து நிலை மாறி அந்தந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவரது இலக்கியமாக அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியம் என்ற மரபு நிலையும் தோன்றக்கூடும். நாம் அறிந்த வரையில் யேர்மனி தேசத்திலே அங்கு பிறந்து குடியுரிமை பெற்ற தமிழ் கற்ற பிள்ளைகள் தமிழ் இலக்கிய ஆக்கங்கள் செய்கின்றனர். அவை புலம் பெயர் இலக்கியங்கள் எனக் கூறப்பட மாட்டா. அவை ஜேர்மனியத் தமிழ் இலக்கியம் எனப்படும். ஐரோப்பிய நாடான யேர்மனியின் வாழிட மொழியிலும் தமிழ் மொழியிலும் முறையான தகைமை பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட இளையவர்கள்  (அங்கு பிறந்தவர்கள்)  தமிழ் ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். இவர்கள் மொழிபெயர்ப்புப் பணியிலும் விரைவில் தம் திறமையை காட்டுவதற்கு அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் வழிகாட்டுவார்கள் என நம்பலாம்.

சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் சென்ற தமிழ் நாட்டு புலம்பெயர்தமிழர்களின் வாரிசுகள் இலக்கியங்கள் படைத்து சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றை உருவாக்கி உள்ளார்கள். தமிழகத்தில் இருந்து இலங்கை வந்து மலைநாட்டில் குடியேறிய தமிழகத்து மக்களின் வாரிசுகள் இலங்கை மலையக இலக்கியம் படைத்துள்ளார்கள். இது போல அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழ் இலக்கியம், ஜேர்மனியத் தமிழ் இலக்கியம்,  பிரித்தானித் தமிழ் இலக்கியம்.... என்றெல்லாம் உருவாகலாம்.

இப்படியெல்லாம் தனித்துவமான இலக்கியங்கள் எழுந்தாலும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்னும் ஒரு பகுதி இடம்பெற்றே இருக்க வேண்டும். புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரின் அலைவையும் உலைவையும் நாம் மறந்து விட முடியாது. அவற்றை நமக்கு எடுத்துக் கூறப்போவனவாக இந்த இலக்கியங்களே நின்று நிலைக்கப் போகின்றன.”

இந்த கருத்துக்களின் சாரப்படி நாம் (புலம்பெயர்ந்தோர்) இனிமேலும் ஈழத்து தமிழ் இலக்கியத்தைச் சார்ந்து நிற்க முடியாது. அவர்களுடனான நம் தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி வெட்டுப் பட்டதோடு பிரிக்கப் பட்டு விட்டது. பிறந்த குழந்தை இனி தனக்கென தனக்கான அடையாளத்தைப் பெற்றுக் கொண்டு தான் வாழும் மண்ணின் சூழலுக்கேற்ப தன்னை தனித்துவமான ஜீவனாக தன் காலில் இனி எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

எத்தனை நாளைக்கு நாம் உணர்வு பூர்வமாக அரசியலிலும் இலக்கிய உலகிலும் சமூக உணர்விலும் இணைந்து நின்றாலும் யதார்த்தம் என்பது இது தான்.

விழித்துக் கொள் அவுத்திரேலியா! நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நடைமுறையில் மீள் நோக்குச் செய்து, நம்மை நிலைப்படுத்த வேண்டிய நேரம் இது!!

இதனையே அண்மையில் பார்க்கக் கிட்டிய ஈழத்து கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் “கடிதம்’ ஒன்றும் மெய்ப்பிக்கிறது. அதன் சில  வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

1. தங்கள் பாதுகாப்பை மட்டும் கருதி இந்த நாட்டை விட்டு ஓடிச் சென்று தங்கள் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி செய்து கொண்டு வேறொரு தேசத்தில் குடியுரிமை பெற்றவர்கள் சிறிதும் நாணம் இல்லாமல் எங்கள் பிரச்சினைகளில் தலையிடுவதும் பிரச்சினைத் தீர்வுகளுக்கு வழிகாட்டி எங்களை மேய்க்க நினைப்பதும் சற்றும் பொருத்தமில்லாத விடயம்.

2.என்னைப் பொறுத்தவரை மூன்றாம் தலைமுறையுடன்  இனம் மாறப்போகிற புலம்பெயர் தமிழர்கள் எம் தாய் நாட்டைப் பொறுத்தவரை வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அவர்களை எங்கள் பங்குதாரரைய் கருத நாங்கள் தயாராய் இல்லை.

3.கடைசியாய் ஒரு கேள்வி.என்றும் எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாட்டில், அவலப்பட்டு அகதியாய் வருவோரை தீவுகளில் அடைத்து வைத்து திக்குமுக்காடச் செய்யும் ஒரு நாட்டில், கெஞ்சிக் கூத்தாடி பெறற்கரிய வரமாய் குடியுரிமை பெற்றவர்கள் நீங்கள். அங்கு பொருள் தேடி அப்பொருளால் இங்கு வந்து மனைவியில் இருந்து மற்ற அனைத்திலும் முதன்மைத் தேர்வுகளைக் கொத்திச் சென்று குதூகலிப்பர்கள் நீங்கள். அங்ஙனமாய் இங்குள்ள பாமரர்களை பரிதவிக்க விடுகையில் நாகர்கோயில் பாடசாலையில் இறந்த குழந்தையின் தாயும்  போரால் உறவும் உடமையும் உறுப்பும் இழந்து இன்றுவரை நல்லவை ஏதும் கிட்டாமல் நிற்கும் உடன் பிறப்புகளின் எண்ணம் உங்களுக்கு வருவதே இல்லையா? அப்படி போரால் அபலைகள் ஆனோர்க்கு உங்களில் எத்தனை பேர் வாழ்வு கொடுக்க முன் வந்தீர்கள்?

பார்வைகளும் கேள்விகளும் நியாயம் தானே?

பொய்யாயினவெல்லாம் போயகல.....

வந்தருளி,

மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே!..........

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், எம்மைப் புகுவிப்பாய்...

இதன் பின்னர் என்ன செய்யப் போகிறாய்?