Monday, October 19, 2015

இது தாங்க நான் பேசினது....


         ”நேற்று; இன்று; நாளை” oz தமிழ் வரலாற்று ஆவணம்


ஒரு கவிதைக் குழந்தை இங்கு பிறந்திருக்கிறது. அதனைக் கொண்டாடும் முகமாக நாங்கள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம். உங்கள் எல்லோருக்கும் என் அன்பார்ந்த பணிவான வணக்கம்.

இப்படி ஒரு இடத்தில் நிற்பதற்குப் பொதுவாக 2 ,3 தகுதிகள் வேண்டும். 1. தலைக்குள்ளே ஏதேனும் இருக்க வேண்டும். 2. எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சிறப்பாகச் சொல்லுகின்ற மேடை ஆளுமை இருக்க வேண்டும். 3. உங்கள் நிமிடத் துளிகளுக்கு பயனுள்ளதாக ஒரு நியாயத்தை செய்யவேண்டும். மூன்றும்  இல்லாத நான் உங்கள் 3 நிமிடங்களைத் திருடிக் கொள்ளப் போகிறேன். அதற்கு முதலிலே என்னையும் என் பொருட்டு பாஸ்கரனையும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

சரி விஷயத்துக்கு வாறன்.

பெண்ணைப்பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றுபற்றி இன்று பேசலாம் என்று இருக்கிறேன்.

அதுக்கு முதல் தமிழ் நாட்டில பெண்ண எப்பிடிப் பாத்திருக்கினம் இலங்கையில பெண்ணை எப்பிடிப் பார்த்திருக்கினம் எண்டு பாக்கிறது பாஸ்கரன்ர கவிதையை விளங்கிக் கொள்ளுறதுக்கு கட்டாயம் தேவை எண்டு நினைக்கிறன்.

தமிழ் நாட்டில பெண்ண பார்த்த மாதிரி இலங்கையில பெண்ணை பாக்கயில்ல.
14ம் நூற்றாண்டளவில காளமேகப் புலவர் பாடின ஒரு பாட்டொண்டு பற்றிச் சொல்ல வேணும்.

“இந்திரையை மார்பில் வைத்தான்;ஈசன் உமையை இடத்து
அந்திபகல் அமைத்தான்; அம்புயத்தோன் – கந்தம் மிகு
வெந்தாமரை மயிலை வேண்டி வைத்தான் நாவில்; உலகு
உண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன்”

என்னெண்டா, உலகத்தையே சாப்பிட்டுட்டு கக்கின தாமரைக் கண்ணன் திருமால் இருக்கிறார் எல்லோ? அவர் தன் மனைவி திருமகளை நெஞ்சில / இதயத்தில இருத்திட்டார். சிவபெருமான் தன்ர உடம்பில பாதியையே தன்ர பொம்பிளைக்குக் குடுத்திட்டார். பிரம்மன் என்னடா எண்டா வெண்தாமரைக்கு மேல மயிலப்போல இருக்கிற கலைமகளுக்குத் தன்ர நாக்கில இடம் குடுத்திட்டாராம். அது தான் பாட்டின்ர பொருள்.

அவர் சொல்லாத ஒரு விஷயமும் இருக்கு. அது அடுத்த ஜெனரேசனை பற்றினது. மேல சொன்ன ஆக்கள் பெரிய ஆக்கள். படைத்தல் காத்தல் அழித்தல் வேலையைச் செய்யிறவை. அவை என்னெண்டா தங்கட உடம்பிலயே இடம் குடுத்திட்டினம். ஆனா பிறகு வந்த அவையின்ர அடுத்த சந்ததி; முருகன், பிள்ளையார், கண்ணன் இருக்கினமெல்லோ அவை அப்பிடி எல்லாம் குடுக்க ஏலாது எண்டுட்டினம். முருகன்  எனக்கு வலது பக்கம் ஒண்டு இடது பக்கம் ஒண்டு வேணும் எண்டிட்டார். கிருஷ்னர் நப்பின்னை, ராதை எல்லாம் ஸ்பெஷலா இருந்தாலும் நான் கூத்தடிக்க எனக்கு கன பேர் வேணும் எண்டிட்டார். பாவம் பிள்லையார் ஓடி ஆடித் திரிய முடியேல்ல. அவர் ஆத்தங்கரை ஓரமா இருந்து கொண்டு ஆஅராவது அம்மா மாதிரி (பார்வதி) ஒரு பொம்பிளயக் கொண்டு வாங்கோ நான் இப்பிடி ஒரு கதையா இருக்கிறன் எண்டிட்டார்.

இத நாங்கள் எங்கட அன்றாட வாழ்க்கையிலயும் பொருத்திப் பாக்கலாம்.

தமிழகத்தில அதுக்குப் பிறகு பாரதி வந்தார் பெரியார் வந்தார். இப்ப அண்மையில ஆனந்த விகடனில கூட நல்ல ஒரு கவிதை பெண்ணைப்பற்றி வந்திருந்தது.

இப்ப இணைய வெளியள்ளில பெண்விடுதலையைபற்றி நல்ல சூடான வாதப் பிரதி வாதங்கள் நடந்துகொண்டிருக்கு. நான் அங்கை எல்லாம் போகையில்ல. சரி பிழை எல்லாம் அவரவர் நியாயங்களுக்கு உட்பட்ட்து தானே!
......

இப்பிடி ஒரு வரலாறு பெண்சார்ந்து இலங்கை வரலாற்றில இருக்கா எண்டு தேடிப் பாத்தன். உண்மையில அப்பிடி எங்களிட்ட கனக்க இல்லை. அல்லாட்டிக்கு எனக்கு தெரியேல்ல.

இந்த போஸ்ட்காட் எண்டு ஒரு காட் முந்தி ஒருகாலத்தில இருந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ( தந்தி மாதிரி அது ஒரு விஷேஷமான சாமான். இது 2ஐயும் பற்றியே கனக்க கதைக்கலாம். அது எங்கட வாழ்க்கையோட எப்பிடி இணைஞ்சிருந்தது, தபால்காரர் எப்பிடி குடும்ப அங்கத்தவரா இருந்தார்.. ஈபிடி எல்லாம்) அப்படிப் போஸ்ட்காட்டுகளில கவிஞர்மார் கவிதைகளால கடிதம் எழுதி அனுப்பி இருக்கினம். கொழும்பில மகாகவி இருந்தார். மட்டக்களப்பில நீலாவாணன் இருந்தார். யாழ்ப்பாணத்தில முருகையன் இருந்தார். இவைக்குள்ள நல்ல நட்பிருந்தது. இவை கதைக்கிறது கவிதைகளாலயும் போஸ்ட்காட்டாலயும் தான்.

அப்பிடி 1958ம் ஆண்டு நீலாவாணனுக்கு மகாகவி ஒரு போஸ்ட்காட் அனுப்பி இருக்கிறார்.

“காடும் நகரும் கடந்து கடுகதியில் ஓடுவதும்;
பொங்கும் உவகையிலே பாடுவதும் - எல்லாம் இனிதே!
எனினும் அருகொருத்தி இல்லாக் குறையொன்றெமக்கு”

எண்டு யாழ்ப்பாணத்தில மனைவியை விட்டிட்டு கொழும்பில இருந்து எழுதின துண்டொண்டு கிட்டடியில கிடைச்சுது. இத விட அம்மாமாரைப் பற்றி; அவையின்ர சமையலப் பற்றி பாடி இருக்கினம் கனக்க.

‘தட்டைக் கரண்டி பிடிக்கிறாள்
சரியாய் பெரிய நிலவப் போல
வட்ட்த் தோசை சுடுகிறாள்
வடிவாய் தின்பீர் என்கிறாள்” எண்டும்

”அன்னை பழஞ்சோற்றுண்டி
கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால்
வாயூறாதோ? எண்டும் பாடி இருக்கினம் கனக்க.

“சொந்தத்தில கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு,வயல்,கேணி
இவ்வளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி” எண்டு ஒரு குறும்பா கூட வந்திருக்கு.

ஆனால் ஒரு பெண்ணை தனக்கு சமனா மதிச்சு அவளின்ர உணர்வுகளை; நியாய அநியாயங்கள; சரி பிழையள; நன்மை தீமையல; ஒரு நியாயமான வழிகாட்டல தந்த மாதிரி குறிப்பிடத் தக்க பாட்டுகள் எதுவும் வந்த்தா எனக்கு நினைவில்லை.

அல்லது எனக்குத் தெரியேல்ல.

ஆனால்,ஈழத்துப்பொப்பிளயள் எழுதி இருக்கினம்.போர்க் காலத்தில ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டிச்சினம் அது வேற.

போர் காலத்தைக் கடந்து வெளியில வந்தா அதாவது வெளிநாடெண்டு வந்தா ”குடும்ப வாழ்க்கைக்குள் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம்” நாங்கள் நாங்களே எங்களைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

விதை மாதிரி ஒரு நடந்த சம்பவம் ஒன்றை மட்டும் சொல்லுறன்.கல்லூரிக்கு போற மாணவி. தான் தமிழ் பையன கல்யானம் கட்டமாட்டன் எண்டு சொல்லிப் போட்டா. ஏனெண்டு கேட்டா  பிள்ல சொல்லுது,’ இஞ்ச இருக்கிற ஒரு டெசபிளிட்டி ஆளே தனக்கான எல்லா வேலையையும் தானே செய்யிறார். ஏன் ஒரு தமிழ் பையனால தனக்கான ஒரு நேரத் தேத்தண்னியக் கூட போடத் தெரியுதில்ல?

நியாயமான கேள்வி தானே? அதோட,புலம்பெயர்ந்த நாட்டில தமிழ் பெண்கள் கொஞ்சம் எழுதி இருக்கினம். ஆழியாழ் இங்கு இருக்கிறா.’ வட்ட வீடொண்று வேண்டும்; வானத்து வளைவுடன் “எண்டு சொன்ன கவிதைக்குச் சொந்தக் காரி. பாமதி இருக்கிறா.”விழுந்து கிடந்தது காணும் எழும்பு” எண்டு பெண்ணை எழுப்பி விடுற கவிதையள் அவவின்ர.

இந்த ஒரு பின்னணியில தான் நான் பாஸ்கரன்ர கவிதையளப் பார்க்க விரும்பிறன்.

2டே பிள்ளைகள். இரண்டும் பெண்பிள்ளைகள். காதலித்து மணமுடித்த மனைவி. இந்தக் கவிதைக் குழந்தைக்கும் அவர் மனைவியே காரணதாரி என்று அவரது முகவுரை சொல்கிறது. எனவே பெண்களால் சூழப்பட்டவர் மாத்திரமில்லை; பெண்களால் அவர் திறமைகள் இன்று எங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது  என்றும் சொல்ல்லாம்.

அதனால் அவர் பெண்ணைப்பற்றி என்ன நினைக்கிறார்; எப்படி அவர்களை அவர் பார்க்கிறார் என்ற பார்வை எனக்கு முக்கியமாகப் பட்டது.


சற்றே பெரிய கவிதை. 3 பரம்பரை சார்ந்த்து. இதனுடய கருப்பொருள் ஒரு பெரிய விஷயம். புலம்பெயர்ந்த நாட்டில் பெண்சார்பாக குடும்பங்களுக்குள் நிகழும் மாற்றங்களை சிந்தனைப்புரட்சியை சமூக பார்வைகளைச் சொல்லுகிற விதத்தில்; அதனோடு கவிஞன் தோழமையோடும் ஆதரவோடும்  பயணிக்கும் வகையில்  இந்தக் கவிதையை ஒரு ‘ஒஸ் ரமிழ் வரலாற்று ஆவணம்” என்று சொல்வேன்.

( இது தான் கவிதை!

 இந்த அழகுக் கவிதைக்கு நான் பொருள் விரித்து எந்த ஒரு விளக்கமும் நயமும் சொல்லத் தேவையே இல்லை.எளிய சொல்லும் சந்தமும் கருத்தும் காதினையும் கருத்தினையும் காந்தம் போல கவர்ந்திடவல்லவை.

இந்தத் தொகுதியின் ஒரு துளி தான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது.. இப்புத்தகத்தின் முழுக் கவிதைகளையும் படித்து முடித்தபின் ‘இவரொரு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதன்” என்றொரு படிமம் உங்களுக்குள் அடையாளம் பெறும்.அது தான் இந்தப் புத்தகத்தின் வெற்றியும் கூட.

கவிதைப்பிரியன், தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வலைத்தளத்துக்குச் சொந்தக்காரன், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன், தேர்ந்த நாடகக் கலைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானம் உள்ள மனிதன்.

விழா நாயகனுக்கும் அவர் தன் குடும்பத்தாருக்கும் என் அன்பினையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தமைக்கு நன்றியையும் கூறி அத்துடன் உங்கள் பெறுமதி மிக்க 3 நிமிட்த் துளிகளைத் தந்து என்னைத் தாங்கிக் கொண்டமைக்கு உங்களுக்கும் நன்றியைக் கூறி விடைபெறுகின்றேன். - இது நான் சொல்லாது விட்ட பகுதி )

இதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல போயிட்டுது. பிறகு கவிதைய வாசிக்க வெளிக்கிட்டு.... அது ஏற்கனவே ஒரு பட்டிமன்றக் கவிதை. அதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல வேணும்....

இந்தக் களபரத்துக்குள்ள இந்தக் கவிதை ஏன் முக்கியம் பெறுகிறது என்ற முக்கியமான பகுதியையும் தவற விட்டு.....( ஒரு ஆணின் பார்வையில்; புலம்பெயர் நாட்டில் 3 பரம்பரைகளுக்குள் ஏற்பட்ட பெண் சம்பந்தப்பட்டு; ஏற்பட்ட மாற்றங்கள எளிமையான தமிழில் சொல்லிய திறத்திலும் அதன் வரலாற்றுப் பெறுமதியிலும் இக்கவிதையைத் தாண்டி எவரும் போக முடியாது. ஒஸ்தமிழ் அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கிடையே பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள பற்றி அறிய வேணும் எண்டால் இக் கவிதைக்குள் பல முக்கியமான கருப்பொருள்கள் இருக்கின்றன )   வந்தமர்ந்தேன்.

கவிதையை தனியாய் அடுத்த பதிவில் போடுகிறேன்.

சட்டகத்துக்குள் நிற்காத சுயங்கள்!.................

கற்றுக் கொண்ட பாடங்கள்;

1. நேரத்தி்ற்குள் நிற்கவேண்டும். முடியவில்லை என்றால் மறுக்க வேண்டும். அது அந்த மனிதருக்கு நான் செய்யும் மிகப் பெரிய உபகாரமாக இருக்கும்.

2. விழாவின் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

3. என்னால் பேப்பரைப் பார்க்காமல் சுயமாகப் பேச முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது இந்த மேடை.

4. என்னை ரசிக்கவும் கேட்கவும் கிரகித்து சகித்துக் கொள்ளவும் ஆட்கள் இருந்தார்கள். (நெஞ்சை நிறத்த ஒரு விஷயம் இது.இதைப் பதியாமல் எல்லால் அகல இயலாது. கோவிந்தராஜன் என்ற ஐயா, இவரை அன்று தான் முதன் முதலில் கண்டேன். பஸ்கரனின் ஆத்மார்த்த மதிப்பிற்குரிய ஒருவர். முதல் பிரதி வாங்க அழைக்கப் பாட்டவர். பாஸ்கரனே அவரைப் பற்றி சிறப்பாக மேலையில் சிலாகித்து பெருமை கொண்டவர். நான் மேடையை விட்டு இரங்கிய கையோடு என்னை நெருங்கி, பெண்னைப் பற்றிய தன் அபிப்பிராயத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். )

எப்படி ஒரு பெண் தன் கணவனால் பார்க்கப் படவேண்டும் என்பது பற்றியும் ஒரு ஆண் தன் குடும்பத் தலைவியால் எப்படிப்  பார்க்கப்பட வேண்டும் என்பது பற்றி சொன்னார்.”ஆண் தன் மகளை எப்படி நேசிக்கிறாரோ அது மாதிரி தன் மனைவியை நேசிக்க வேண்டும். பெண் எப்படி தன் மகனை நேசிக்கிறாரோ அது மாதிரி தன் கணவனை நேசிக்க வேண்டும்”

5.பிரபலமான ஒருவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. எனக்கு அவரை முன் பின் தெரியாது.தன்னை அறிமுகப்படுத்திய போது வியந்து போனேன். தன் அடையாள அட்டையையும் தந்து,  “இன்றய நிகழ்வில் உங்களுடய பேச்சுத் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். மிக இரக்கமுடயவராக இருந்திருக்க வேண்டும். அவர் சொன்னது  சரியோ பிழையோ நக்கலோ தெரியவில்லை. ஆனால் அந்த நேரம் எனக்கு அது ஆறுதலூட்டும் மருந்துச் சொல்லாக இருந்தது என்பதை கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இது தாங்க நடந்தது.........

Saturday, October 17, 2015

நான் சொதப்பின கதை....



17.10.15 மாலை 5.00 மணிக்கு பாஸ்கரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிதைத் தொகுப்பின் பெயர் “முடிவுறாத முகாரி”

இப்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகத் தான் நிகழ்ச்சி முடிந்தது. வந்த கையோடு இங்கு உட்கார்ந்திருக்கிறேன்.

மனசுக்கு ஒரு விடிகால் வேண்டித்தான் இருக்கு! கொட்ட இது நல்ல தோதான இடம்! நன்றி மக்காள்!
......................

பாஸ்கரன்;

என் நல்ல நண்பன். நேர்மையான மனிதன். உண்மைக்கு எப்போதும் பக்கமாய் நிற்பவர். தனக்குச் சரியெனப்படுவதை துணிந்து சொல்ல தயங்காத உள்ளத்துக் காரன்.

‘தமிழ்முரசு அவுஸ்திரேலியா’ என்ற இணையத்தளத்தின் ஸ்தாபகன்; ஊடகவியலாளர்; நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக நெறியாழ்கையிலும் நடிப்பிலும் நாடகப்பிரதி ஆக்கத்திலும் தன் திறமையின் பெரும்பங்கு நேரத்தை கொடுத்து ஒஸ்தமிழ் நாடகத்துறைக்கு ஆரம்பகாலத்தில் இருந்து தன் ஆழமான பங்களிப்பைப் பதித்திருப்பவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதன். அன்பு, பண்பு, எளிமை, ஓர்மம் எல்லாம் கொண்டிருப்பவர்.

அவரது கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று.

இந்த மனிதன் தன் கவிதை ஒன்று பற்றி 3 நிமிடத் துளிகளுக்குள் நயப்புரை வழங்குமாறு கேட்டால் மறுக்க முடியுமா?

அங்கு தான் எனக்கு நாக்கில் சனி பகவான் குடியமர்ந்து விட்டார். அது தெரியாமல் ஓ.. அதுக்கென்ன, செய்கிறேனே என்று ஒரு மாதத்திற்கு முன்னரேயே சொல்லி விட்டேன்.

இன்று புரட்டாசிச் சனி கடசி நாள் என்றதையாவது யோசிச்சிருக்க வேணும் நான். ஆங்கிலேயரின் தின சோதிடக் குறிப்பில் இன்று புதிய கருமங்கள் ஆற்றுவதைத் தவிர்த்தல் நலம் என்ற கூற்றையாவது கொஞ்சம் கொன்சிடர் பண்ணி இருக்கலாம்.

நானும் புத்தகத்தை நன்றாகப் படித்து இந்தக் கவிதையை எடுக்கலாம் அந்தக்கவிதையை எடுக்கலாம் என்றெல்லாம் வலு சிரத்தையாகக் குறிப்பெடுத்துக் கொண்டு 2, 3, தரம் இது வேண்டாம் அது அது வேண்டாம் இது என்றெல்லாம் மாற்றி நேற்றைக்கு முதல் நாள் வேலையில் இருந்த மனிதருக்கு தொலைபேசியில் தொல்லை பண்ணி பெண் சம்பந்தப்பட்ட கவிதையை வேறு யாரும் நயப்புக்காக எடுத்திருக்கிறார்களா என்று கேட்டு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் அந்தக் கவிதையைப் பற்றிய நயப்புரையைச் செய்வதாகத் தீர்மானித்துக் கொண்டேன்.

இப்போதே பாருங்களேன் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வராமல் சுத்தி சுத்திக் கொண்டே நிற்கிறேனே!

இதைத் தான் அங்கேயும் செய்தேன்.தலைமை தாங்கியவர் 2 தரம் வந்து விஷயத்துக்கு வாங்கோ விஷயத்துக்கு வாங்கோ என்று 2 தரம் வந்து விட்டார் என்றால் பாருங்களேன்.

என்ன ஒரு வெக்கக் கேடு என்பதற்கும் அப்பால் அந்த நல்ல மனிதனின் நிகழ்ச்சியை இப்படி நாசம் பண்ணி இருக்கக் கூடாது என்ற சுய பச்சாதாபம் தான் என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

வரும் போது குடும்பத்தார்  தந்த நேர்மையான விமர்சனம் ஒன்று.

எல்லோரும் மெளனமாக வந்தது தான். ’கொடுமையான மெளனம்’ என்பதன் பரிபூரண அர்த்தத்தை விளங்கிக் கொண்ட கணம் / தருணம் அது!

கொஞ்ச நேரத்தால அம்மா மட்டும் மெல்ல முணுமுணுத்தா. உனக்கு நேரம் வேணுமெண்டா முதலில கேட்டெல்லோ இருக்க வேணும்? கவிதையப் பற்றிக் கதைக்கச் சொன்னா கவிதையை பற்றி 3 நிமிசம் கதைக்கிறது தானே!

என்ன பண்ணுறது நம்மால முடியாமல் போச்சே!

என் இனிய தோழி கீதா சொல்லும் விமர்சனமும் இது தான்.
”ஒரு விஷயம் என்றால் ஒரு விஷயத்துக்குள் நிற்கமுடியாமல் நிற்கிறீர்கள்.”

நான் என்ன செய்யட்டும்?

சொரி பாஸ்கரன். I'm truly sorry!!


( பாருங்களேன் இந்த ஒரு விஷயத்தச் சொல்லுறதே ஒரு பதிவின்ர நீளம் வந்திட்டுது.  இனி நான் எங்க விஷயத்துக்குப் போறது? கதச்ச விஷயம் அடுத்த பதிவில தொடரும். கட்டாயம் எனக்கு உங்கட விமர்சனம் வேண்டும். இதுக்கில்ல; அதுக்கு. :)

நன்றி மக்காள். விடிய வேலை. வேலையால வந்து அதப்பற்றிச் சொல்லுறன்.






Monday, October 12, 2015

தமயந்தி



தமிழ் சினிமாவிலே ஒரு பாடல் உண்டு. பெண்ணை தமிழகத்துக்கு தமிழின் எழிலோடும் அதன் பாரம்பரியப் பெருமைகளோடும்  வருணிக்கின்றதான ஒரு பாடல்.

கவிஞர் வாலி இயற்றிக் காட்டிய அற்புதங்களில் இந்தப் பாடலும் ஒன்று. இப்பாடலுக்கு குரலால் உயிர் கொடுத்தவர் டி.எம். சௌந்தரராஜன். இசையால் அதனை இன்னொரு தளத்துக்கு உயர்த்தி மெருகேற்றியவர் எம்.எஸ். விஸ்வநாதன். பூவா தலையா என்ற திரைப்படத்தில் இப்பாடல் பிறந்த ஆண்டு 1969.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்தது.

பாடல் இது தான்.

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.



என்ன ஒரு அற்புதமான பாடல். பழங் கால இலக்கியங்களுக்கு நிகராக வைத்து எண்னத்தக்க  இப்பாடலை அண்மையில் கேட்ட போது நினைவுக்கு வந்தது நளவெண்பா நாயகி தமயந்தி.

அவள் நடந்து வருகிறாள்.

“நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு”

பாடல் இது தான்.

இதனை நான் உடைத்துப் பொருள் கூற விரும்பவில்லை. அவரவர் உங்களுக்கேற்ற மாதிரியாக உடைத்து உண்டு களியுங்கள்.

முற்றிய மாங்காயை மரத்திலே இருந்து உடனே பறித்து கல்லிலே குற்றி சாப்பிடுவது மாதிரி....

சுடச் சுடப் பதமாக வறுத்த நிலக்கடலையை நாமே உடைத்து அதற்குள்ளே இருக்கும் பருப்பின் மெல்லிய கோதை கசக்கி ஊதி அகற்றியபின் பருப்பை வாய்க்குள்ளே போட்டுக்கொள்வது மாதிரி....

அவரவர்க்கே உரித்தான சுவைகள்....

குழந்தைகள் மண்ணில் சோறுகறி சமைத்து ஆர்வம் கண்ணில் மின்ன கொண்டோடி வந்து தரும் போது, நீங்கள் அதனைச் சுவைப்பதாகப் பாவனை காட்டி விட்டால் தோன்றுமே அந்த முகத்தில் ஒரு சந்தோஷமும் பெருமிதமுமான ஒரு மின்னல்! அதைக் காணும் ஒரு சந்தோஷ தருணம்  மாதிரி....

ஒன்றை நீங்கள் உணர்வீர்கள்.

இந்தச் சுவைக்கு ஏது ஈடு இணை!

Friday, October 9, 2015

தமிழகத்துக் காளமேகமும் ஈழத்துக் கவி வெள்ளமும்


தமிழகத்துக் கவிப்பரப்பில் காள மேகப்புலவரின் மேல் ஒரு விதமான ஈர்ப்பு எப்போதும் எனக்குண்டு.

இந்த கவிக்கிறுக்கன் ஒரு விதமான சுதந்திரப் போக்கன்! கட்டுமானங்களுக்குள் அகப்படாத ஒரு மனுஷன். பணம் இல்லாத போதும் அதை பகிடியாகவே பார்த்து திரிந்த ஒரு ஆத்மா. கடவுளையே கிண்டலடித்து வாழ்க்கையை சந்தோஷமாகத் தாண்டிப்போன ஒரு தற்துணிச்சல்காரன். தமிழாயுதத்தைக் கையிலேந்தியபடி அது ஒன்றையே தன் முழுச் சொத்தாகவும் கொண்டு இலக்கிய பரப்பில் ஒரு வித திமிரோடு இறுமாந்து திரிந்ததோடு தான் எப்படி பதியப்படுவேன் என்பதை அறிந்து ‘பதிஞ்சிட்டுப் போடா’ என்று சொல்லி விட்டுப் போன சுதந்திரப்புலவன். அந்த வித்துவச் செருக்கு அவனை வாழ்க்கை முழுக்க வழிநடத்தி இருக்கிறது.

அந்த ஒரு இறுமாப்புக்காகவே அம்மனிதனை எனக்கு நிரம்பப் பிடிக்கும். அந்த Guts! அது தான் அந்த மனிதன். ஒரு முறை அதி மதுரக் கவிராயர் இவரிடம் உமக்கு என்ன பெயர் எனக் கேட்கிறார். மனுஷன் உடனே பாட்டிலே எடுத்து விடுகிறார்.

“ இம்மென்னும் முன்னேஎழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதோ? - சும்மா
இருந்தால் இருந்தேன்; எழுந்தேனாயின்
பெரும் காளமேகம் பிளாய்!”

’....சும்மா தான் இருப்பன். எழும்பினன் எண்டா மழைநீரை ஆவியாக்கி நிறைத்து வைத்திருக்கிற; பொழியத் தயாராக சினைகொண்டிருக்கிற கருமுகில் கூட்டம் பிள்ள” என்று ‘பிளாய்’ என்பதில் ஒரு வித எக்காளம் ஒலிக்க சொல்லுவான். (காளமேகம்- பொழியத் தயாராக இருக்கும் கருமுகில் கூட்டம்) அதில் தான் எத்தனை தன்னம்பிக்கை! பெருமை!! ஒரு வித இறுமாப்பு!

’யாமார்க்கும் குடியல்லோம்’ என்று சொன்ன மாதிரி!
’எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங் கேள்’ என்று கடவுளுக்கே கட்டளை இட்டது மாதிரி ஒரு வித எழிலான திமிர்!

இப்போ நான் சொல்ல வந்தது என்னவென்றால் இந்த மனிதனைப் போல ஒரு மனிதனை ஈழத்துக் கவிப்பரப்பில் நாம் ஏன் காண முடியவில்லை என்பது தான். எனக்கு எப்போதும் இருக்கிற ஆதங்கம் இது.

சரி அது போகட்டும். இந்த ஆள் தன்னை ஒரு பொழியத் தயாராக இருக்கும் ஒரு கருக்கொண்ட மழைமுகில் கூட்டம் என்று சொல்லி விட்டுப் போனானே ஈழத்தில் ஒரு மழையே பொழிந்து விட்டுப் போயிருக்கிறது என்பதை அண்மையில் காணக் கிட்டியது.

ஈழத்து சோமசுந்தரப் புலவர் காட்டும் மழை வெள்ளம் அது.  கொஞ்சம் கால் நனைப்போம் வாருங்கள்.

“ எஃகிய பஞ்சினைப் போலத் - தமிழ்
எல்லாளமன்னனிருதயம் போல
வெஃகிய வெண்முகிற்கூட்டம் - இந்து
வெண்டிரை மேயவே முந்திடுமன்றே”

எஃகிய- தளர்ந்து பொருமி இருக்கிற, வெஃகிய- வெண்மையான முகில் கூட்டம். தளர்ந்து பொருமி இருக்கிற வெண்பஞ்சினைப் போலவும் எல்லாள (தமிழ் மன்னன்) மன்னனின் இதயத்தினைப் போலவும் வெண்முகில் கூட்டம் கருக்கொண்டு மழை பொழிவதற்காக கடல் நீரைப் பருகி மேலே எழும். (எல்லாளன் துட்டகைமுனுப் போர் மகாவம்சத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கும் எதிராக நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் என்பதான ஒரு வரலாற்றுப் படிமம் பலசர்ச்சைகளையும் வாதப்பிரதி வாதங்களையும் புத்திஜீவிகள்  மட்டத்தில் கிளப்பியதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.)

இப்போது வெண்முகில் நீரைப் பருகி கருமுகிலாகி விட்டது. அது உருண்டு திரண்டு பொழியத் தயாராகி விட்டது. அந்தக் கருமுகில் கூட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? கற்றறியாதவர்களின் மனம் போலவும்; கடுகண்ணாவை (என்பது இலங்கையில் ஓரிடம். தொடருந்து  மலை ஒன்றை ஊடுருவிச் செல்லும் குகையைக் கொண்ட ஓரிடம்) குகை வழியில் நிறைந்திருக்கிற இருளைப் போலவும்; பொறாமை கொண்டவர்களது மனதைப் போலவும் கறுத்து பெருத்து கர்ப்பமாகி நிற்கிறது அந்தக் கருமுகில் கூட்டம். அந்தப் பாடல் இது தான்.

“ கல்லா தவர் மனம் போல - அன்றிக்
கடுகணைக் குகைவரு கணையிருள் போல
அல்லா தழுக்காறு கொண்டோர் - மனம்
ஆமென வேயிருண்டங்கு சூல் கொண்டே”

இப்போது மின்னல் தெறிக்கிறது. கறுப்பு முகில் கூட்டத்தின் பின்னே மின்னி மின்னி மறைகிறது. கூடவே இடியோசையும் கேட்கிறது. அது எப்படி இருக்கிறது தெரியுமா? அது சூரியனைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்து போருக்குக் கூப்பிடுவது போல இருக்கிறதாம். ஒருவித எள்ளல் சிரிப்பு மின்னலுக்கும்  போருக்கு அறைகூவல் விடுப்பது இடிமுழக்கத்துக்கும் என்னமாய் பொருந்திப் போகிறது பாருங்கள். அந்தப் பாடல் இது.

“ செங்கதிரோன் தனை யெள்ளி - நின்று
சிரிப்பது போல விடையிடை மின்னி
அங்கவனோடறை கூவி எதிர்த்
தார்ப்பது போல விடித்து முழக்கும்”

இப்போது மேகத்தின் உருவம் சித்தரிக்கப்படுகிறது. திரண்டு நிற்கும் அக் கருமேகம்  எப்படி இருக்கிறது தெரியுமா? அது கையை உடைய மலையைப் போன்ற யானையைப் போலவும் கரும் கற்குன்றைப் போலவும் பெரிய காண்டாமிருகங்களின் கூட்டத்தைப் போலவும் கருமை மிக்க இராவணனுடய பெரிய போர் படையைப் போலவும் திரண்டு நிற்கிறது. இனி பாடலைப் பார்க்க வேண்டாமா?

“கைம்மலை கன்மலை போலப் - பெருங்
காண்டா மிருக நிரைகளைப் போல
மைம்மலி ராவணனேவும் - மூல
மாபலமென்னவும் வந்து குவிந்து”

திரண்டு நிற்கின்ற இந்தக் கருமேகக் கூட்டங்கள் இப்போது மழை பொழியத் தயாராகி விட்டன.அந்த மழை எப்படி இருக்கிறதென்றால்,

” கொடைமடம்படு குமண மன்னவன்
கூறு சித்திரப் புலவ னுக்கருள்
மடை திறந்திடுன்ஹ் கொடைவி தங்கள்போல்
வயிறு ளைந்துமா மழை சொரிந்ததுவே.

மழை சொரிகிறது. அது கொடைக் குணத்திலே சிறந்து விளங்கிய குமணமன்னன் பெருஞ்சித்தனார் என்னும் புலவருக்கு கருணையோடு வழங்கிய தானத்தைப் போல கருமுகில்கள் மழையைப் பொழிகிறது.  புலவனுக்கும் கொடுத்த தானத்தைப் போல மழை! ஒரு மனுஷனுக்கு கற்பனை எப்படி எல்லாம் ஒப்பிடச் சொல்கிறது பாருங்கள்.

இப்போது வானில் இருந்து மழை பூமியை நோக்கிக் கீழிறங்குகிறது. எங்கெங்கெல்லாம் அக் கொடையைப் போன்ற மழை பொழிகிறது என்று பார்க்க வேண்டான்மா? அது இலங்கையில் உள்ள மூன்று பிரதான மலைகளின் மீது வந்து மோதிப் பொழிகிறது. அதிலொன்று சிவனொளிபாதமலை. மற்றது பேதுருதாலகாலமலை. மூன்றாவது கதிரமலை. இன்னொரு இடமும் ஒன்று உண்டு. உயர்வான மரங்கள் உள்ள வன்னிக்காடு. இதனை நான் சொல்லவில்லை. அவரே சொல்கிறார். இப்படி.

” பாத பங்கய மலையின் மீதினும்
பகரு பேதுரு மலையின் மீதினும்
ஓது கதிரைமா மலையின் மீதினும்
உயர்ந்த வன்னியா ரணிய மீதினும்”

பாத  - சிவனொளிபாத; பங்கயம் - மலை.

இப்போது மலையில் இருந்து - பாத பங்கய மலையில் இருந்து அருவி பாய்கிறது. அது எப்படி இருக்கிறதென்றால் புத்த பகவான் அருளிச் செய்த அருளுரையைப் போல பாய்கிறது பேராறு. இலங்கையில் உள்ள பெளத்த மக்களுக்கு சிவனொளிபாதமலை புனிதமான இடம். இந்துக்களுக்கு கதிரமலை மாதிரி. அதனால் தானோ என்னவோ பாத பங்கயத்திலிருந்து பாய்கிற அருவியை அவர் புத்த பகவானின் அருளுரைக்கு ஒப்புவமை சொல்கிறார்.இனி அந்தப் பாடலைக் காண்போம்.

“ அரசு நீழலிற் புத்த மாமுனி
ஆரு வற்சரம் பெற்ற யோகினைப்
பரவு பாரினுக் கருளு மாறுபோற்
பரவு பாரினுக் கருளுமாறு போற்
பாத பங்கயத் தருவி பாயுமே”

இனி பேதுருதாலகாலமலையின் மீது எப்படி அருவி பாய்ந்தோடி வருகிறது என்று பார்ப்போம். அது கல்வாரி மலையிலே இறைகுமாரனான யேசுபிரான் ஆற்றிய மலைப்பிரசங்கம் போல பெருகி வருகிறது. இங்கு பேதுருதாலகால மலையை யேசுபிரானின் மலைப்பிரசங்கத்தோடு ஒப்பிட்டமைக்கு ஏதேனும் விசேட காரணம் இருக்க வேண்டுமே? ஆம். இருக்கிறது. அது யேசுநாதரின் சீடர் ஒருவரின் பெயர் பேதுரு என்பது நினைவுக்கு வருகிறதா? இந்தப் பாடல் இதோ கீழே வருகிறது.

“ ஏசு வென்றிடும் ஞான பண்டிதன்
ஏறி மாமலை கூறு நீதி போற்
பேசு மாமுகில் சொரிய வாங்கியே
பேதுருமலை யருவி பாயுமே”

பேதுருமலையை கல்வாரி மலைக்கும் மழைநீரை மலைப்பிரசங்கத்துக்கும் ஒப்பிட்டு பேதுருதாலகால மலையை பேதுரு என்ற சீடனின் பெயராகக் கொண்டு கிறீஸ்தவத்துக்கும் ஒப்பிட்டுச் சொன்னது எத்துணை பொருத்தம்!

இப்போது நாங்கள் கதிர்காமம் போய் கதிரமலையைக் காணப்போகிறோம். இது இன்று வரை இந்துக்களின் புனித தலம். வள்ளியை முருகன் கண்டு காதல் கொண்ட இடம் என்பது இந்துக்களது ஐதீகம். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். சைவத்துக்கெதிராக கிறீஸ்தவ சமயம் பரவிக்கொண்டிருந்த காலப்பகுதி. இந்த நடைமுறைக்கெதிராக சைவமும் தமிழும் என்ற போர் கொடியைப் பிடித்துக் கொண்டு போராடக் களமிறங்கியவர் ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். அவருடய பிரசாரங்கள் பிரசங்கங்கள் வரலாற்றுப் பரப்பில் வியந்து பேசப்படுவன. ஆறுமுகம் என்ற அவரது பெயருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டதே அவர் எத்துணை நா வல்லோனாகத் திகழ்ந்தார் என்பதற்கு சாட்சி சொல்லும்.

இப்போது நாங்கள் கதிரமலைக்கு வருவோம். அங்கு பெருகி வருகிற அருவி எப்படி இருக்கிறது தெரியுமா? அது நாவலரின் கண்டனப் பிரசங்கம் போல பாய்கிறது.அந்தப் பாடல் இதோ இது தான்.

“உண்ட செந்தமிழ் சைவ நூலமு
தோங்க நல்லைவந்தருளு நாவலன்
கண் டனப் பிரசங்க மாமெனக்
கதிரைமாமலை யருவி பாயுமே”

இன்னும் பல பல பாடல்கள் எப்படி எங்கெங்கெல்லாம் மழை பெருகி ஓடியது அதன் விளைவுகள் என்னென்ன என்றெல்லாம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்களில் அது என்னென்ன விளைவுகள ஏற்படுத்தியது என்பதை எல்லாம் சொல்லுகிற விதமான பாடல்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் விரிக்கப் புகுந்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நீங்கள் ஓடி விடுவீர்கள்.பதிவு ஏற்கனவே நீண்டும் தான் போய் விட்டது. அதனால் அவற்றை மிகச் சுருக்கி,மேற்கூறிய குறிஞ்சி நிலமான மலையில் இருந்து கீழிறங்குகின்ற மழை அருவி எப்படி இருக்கின்றது என்பதை மாத்திரம் பார்த்து, அப்பால் போவோம்.

“ பூங்குறிஞ்சி முகட்டினில் ஏறிப்
பொளிந்த தெள்ளமுதாகிய வெள்ளம்
பாங்கி லாதப ரத்தையை நாடிப்
படரு வேரிற் படர்ந்து பள்ளம்”

மலைகளில் இருந்து கீழிறங்குகின்ற வெள்ளம் பரத்தையர்களை நாடி போகின்றவர்களைப் போல கீழிறங்கி ஓடுகிறது. பாங்கிலாத பரத்தையர் - ஒழுக்கமில்லா விலைமாதர்.

இந்த இடத்தில் மீண்டும் ஏனோ அந்த காளமேகக் கிறுக்கன் நினைவுக்கு வந்து போகிறான்.அந்த மனுஷன் தான் பரத்தையிடம் போனதையும் பாடி வைத்துப் போயிருக்கிறான். ( பதிவு ஏற்கனவே நீண்டு தான் போய் விட்டது. எண்டாலும் கொஞ்சம் பொறுங்கோ. :)

இவர் - காளமேகத்துப் புலவன் போன பரத்தை ஒரு தெலுங்குக் காறி. அவர் அவவிட்ட பட்ட பாட்ட சொல்லுகிறார் நம்மட ஆள். இப்படி.

“ ஏமிரா ஓரி என்பாள் எந்துண்டி வஸ்தி என்பாள்
தாமிராச் சொன்ன எல்லாம் தலைகடை - தெரிந்ததில்லை
போமிராச் சூழும் சோலை பொருக் கொண்டைத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு நமன் கையில் பாடு தானே”

இந்த மனுஷனுக்கு தெலுங்கும் தெரிந்திருக்கிறது. ( திம்மி என்பது அவள் பெயர். ஏமிரா ஓரி - அடே என்னடா? எந்துண்டி வஸ்தி -  எங்கிருந்து வருகிறாய்? ) அடே என்னடா? எங்கே இருந்து வருகிறாய் என்பாள்.நேற்றிரவு அவள் கதைச்சதில எது தொடக்கம் எது முடிவு எண்டு எதுவும் விளங்கயில்ல. ( ஐயா அவ்வளவு ‘தெளிவா’ இருந்திருக்கிறார்.) இருட்டான சோலையைப் போல ஒரு கொண்டை வச்சிருக்கிற அவளிட்ட நான் பட்ட பாடு இருக்கே! அது யமனிண்ட கையில நான் பாட பாடப்பா என்கிறார் மனுஷன்.செத்துப் பிழைச்சு வந்திருக்கிறார் மாப்பிள்ள. :)

ஆனாலும் இந்த புலவனின் வித்துவச் சிறப்பும் விடுகதைப் பாங்கும் சிலேடை நயமும் மிக்க பாடல்கள் இன்னும் இன்னும் நயந்தும் வியந்தும் வாசித்து இன்புறத் தக்கவை.

இப்போது மீண்டும் இலங்கைக்கு வருவோம். வெள்ளம் இப்போது கடலைச் சென்றடையப் போகின்றன. அதன் அறிகுறியாக மீன் கொத்திப்பறவைகளும் கொக்குகளும் நாரைகளும் கழிமுகத்திடையே தென்படுகின்றன.அங்கு இந்தப் பறவைகளுக்கும் துள்ளிக் குத்தித்து கொண்டாட்டமாக நீந்தித்திரியும் மீன்களுக்குமிடையே ‘வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்!’

“செப்பு மத்தளங் கொட்டும் கரம் போற்
சிறைய சைத்துச் சிரலினம் மேவும்
கொக்கு நாரையும் மீனினங் கொத்திக்
கொண்டெழுந்து விழுங்கி விக்கும் மே”

மத்தளம் அடிக்கின்ற கைகளைப் போல மீன் கொத்திப் பறவைகள் தம் சிறகுகளை அடித்துக் கொண்டு வெள்ளம் பாய்கிற இடங்களுக்கு வந்து சேருகின்றன.அதே நேரம் கொக்குகளும் நாரைகளும் மீன் வகைகளைக் கொத்திக் விழுங்கி விக்குகின்றன.  சிரல் - மீன் கொத்திப் பறவை.

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தின் இடையில் தானே இருக்கிறது திருமணம் என்றொரு தூண்டில்.அந்தத் தூண்டிலின் நுனியில் இருக்கும் சிறு துண்டு ருசியில் வந்து சிக்குகின்றன மீனினங்கள். அங்கு ஒரு கல்யாண ஆரவாரம்.

“ மங்கலந் திகழ் மாப்பிள்ளை மார் வர
மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல் போற்
பொங்கு வெள்ளப் புதுமனை நீர் வரப்
புரளு மீனிரை போயெதிர் கொள்ளுமே”

திருமணத்திற்காக மங்கலம் நிறைந்த மாப்பிள்ளையும் அவர் சுற்றத்தாரும் மணமகள் வீடு நோக்கி வர, அவர்களைப் பெண் வீட்டாரும் அவர் சுற்றத்தாரும் (மாமன் பக்கம்)எதிர் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்லுதலைப் போல பொங்கிப் புரண்டு வருகிற புதிய ஆற்று வெள்ளத்தை புரளுகின்ற இயல்புள்ள மீன்கள் நிரை நிரையாக வந்து எதிர்கொண்டு அழைத்துச் செல்லுகின்றனவாம்.( மீனிரை) ஒரு மாப்பிள்ளை வரவேற்புக் காட்சி ஒன்று அங்கு அரங்கேறுமாற் போல...

இந்த மீனிரைகளுக்குப் பின்னாலே  பரிசத்தோடு பரிவாரக் கூட்டம்.  யார் யாரெல்லாம் பரிசுப்பொருளோடு புது வெள்ளத்தை; புது மாப்பிள்ளையை எதிர்கொள்கிறார்கள்? அடுக்கடுக்காய் வரும் நண்டுகள் குடை பிடிக்கின்றன.திருக்கை (மீன்) ஆலவட்டம் எடுக்கிறது. அச்சத்தை வர வைக்கக் கூடியதான சுறா வாள் ஏந்தி வருகிறது. நல்ல குணமான கணவாய்களோ கவரி வீசுகின்றன.

இவர்களுக்கு முற்புறத்திலே ஆமைகள் பரிசப் (சீதனப்) பொருட்களைச் சுமந்து நிற்கின்றன.முரல் மீன்கள் குழல் ஊதி நிற்கின்றன.கடல் அலைகள் மத்தளம் கொட்டுகின்றன. (கொட்டுமேளம்) (அந்த சுபமுகூர்த்தத்தில் ) கடலானது  நதியை ஏற்று ( வாரி அணைத்து ) பந்தத்தில் ஒன்றுகலக்கிறது.

அவ்விரு பாடல்களும் இவை தான்.

“ அடுக்கு ஞெண்டு குடைகள் பிடிக்க
ஆல வட்டந் திருக்கை எடுக்க
நடுக்குஞ் சுறவு நாந்தகமேந்த
நல்ல கணவாய் கவரியிரட்ட”

”முன்னே யாமை பரியஞ் சுமக்க
முரல்கள் சின்ன மூதி நிற்க
மன்னு திரைகள் முழவ மியம்ப
வாரி மணக்கும் நதியையே”

தமிழகத்துக் காள மேகத்துக்கு இடி முழக்கத்தோடு ஈழத்தில் ஒரு வெளளப் பெருக்கு......



(ஈழத்துப் பாடல்கள் ’தமிழ் இலக்கியம்’ என்ற புலவர் இளங்கோ அவர்கள் தொகுத்து ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலையால் செப். 1996ல் வெளியிட்ட 10ம் 11ம் வகுப்புக்குரிய தொகுப்பில் இருந்து பெறப்பட்டது. மூலம்; தமிழ் அறிவகம், சிட்னி; 894.811)