Tuesday, August 2, 2016

பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள்...




அண்மையில் பாரதியாரின் பாடலை வாகனத்தில் கேட்டுக் கொண்டு போனேன்.
“ .......
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவ சக்தி
நிலச் சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீ சுடினும்
சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன்
இதை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இதை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

என்ன ஒரு கவிஞ கம்பீரம் பாருங்கள்! இதத் தாறதில உனக்கென்ன பிரச்சினை இருக்கு என சிவசத்தியையே கேள்வி கேட்கும் கம்பீரம்!!

அது போல மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் ஒரு வரி வரும். கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் வரியில் அதுவும் ஒன்று. உடனே நினைவுக்கு வந்த அப்பாடல் வரி இது. எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் என்று தொடங்கும் அது.

‘......
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்!
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க!
என் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க!
கங்குல் பகல்  என் கண் மற்றொன்று காணற்க!

என வரும்.

கடவுளிடம் கேள்வியும் கடவுளுக்கே சூழுரைத்தலும் நடக்கிற விதமானதாக ஒரு வித ‘பிரபஞ்சத்தை’ கூட்டிக் கொண்ட வாழ்வியலாக கீழைத்தேசத்தின் வாழ்வியல் இருந்திருக்கிறது.

மேலைத் தேயம் எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேள் என்று கற்பித்துக் கொண்டிருந்த போது  நாம் இப்படித்தான் 'பிரபஞ்சத்தோடு’ தொடர்புகளைப் பேணிக்கொண்டிருந்தோம். வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மேலைத்தேய சிந்தனைகள் இவ்வுலக வாழ்வை மையப்படுத்தி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற முடிவுக்கு வந்த போது  கீழைத்தேய சிந்தனை மரபோ ஆண்மீக வாழ்வை மையப்படுத்தி இறப்புக்குப் பின்னும் நீழும் வாழ்வு பற்றிய குறிப்புகளை இலக்கியங்களிலும் இதிகாசக் கதைகளிலும் வாழ வைத்துக்கொண்டிருந்தது.

இந்த வாழ்க்கை பற்றிய நோக்கு வாழ்க்கையை வாழுகின்ற முறைமையில் பிரதான தாக்கத்தை கொண்டிருக்கிறது.

இன்று வரை.

பெண்ணுக்கும் ஆணுக்குமான ‘இட நெருக்கடி’க்கு கவிஞர் வைரமுத்து அவர்களின் வரி இப்படி ஒரு தீர்வு காட்டும்.

’...... ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது,
கண்ணகி சிலைதான் இங்குண்டு;
சீதைக்கு தனியாய் சிலை ஏது?’

ஆனால் இன்று விரும்பியோ விரும்பாமலோ உலகம் சுருங்கி கையடக்கத் தொலைபேசிக்குள் வந்த பிற்பாடு ,

ஈழத்தமிழ் பிரச்சினை தமிழர்களை உலகெங்கும் சிதறச் செய்த பிற்பாடு -

இந்தியத் தமிழர்களின் இணையத் தொழில் நுட்ப அறிவு சிறப்பும் அதன் குறைந்த விலையிலான நுகர்வுத் திறனும் அவர்களை உலகெங்கும் கொண்டு செல்ல தொடங்கிய பிற்பாடு -

உலகில் சகல மூலையிலும் ஒரு தமிழன் தமிழ் சிந்தனையோடு மேலைத்தேயக் கலாசார சூழலில் ‘பரிசோதனை’ வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டான்.

இந்த புதிய வெள்ளம் பாய ஆரம்பித்து இப்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டன.

காரணம் எதுவாய் இருப்பினும் ஒருவாறு தம்மைத்  மேலைத் தேயங்களில் தக்கவைத்து தம் வேர்களை பதிக்க ஆரம்பித்தவர்களின் புதிய சந்ததி அங்கேயே பிறந்து அந் நாட்டு மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்டு அந் நாட்டுச் சிந்தனைகளோடு  தம் ’சொந்த’வேர்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

அவர்களுடய பார்வைகள் கேள்விகள் தாய் மரத்தில் புதிய துளிர்களைத் தோற்றுவிக்கின்றன.

2011 இல் ‘OZ தமிழ் 2011 - சில அவதானிப்புகள் என்ற தலைப்பில் சிங்கையில் நடந்த புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரை அந்த புதிய அரும்பும் துளிர்கள் பற்றிப் பேசியது.

சிறுகுழந்தைகளிடம் இயல்பாய் எழும் கேள்விகள் நம்மை சுளீர் என தாக்குகிறன. எப்படி நாம் அவ்வாறு சிந்திக்காமல் போனோம் என்று கேட்கத் தூண்டுகின்றனவாக அவர்களின் வினாக்கள் நம்மை நோக்கி வீசப் படுகின்றன. கீழே வருவன நடை முறையில் நடந்த உதாரணங்கள்,

1. தந்தையோடு கோவலன் கண்ணகி நாடக ஒத்திகைக்கு சென்றிருந்த 5 வயது மகள் தேநீர் இடை வேளையின் போது தந்தையிடம் கேட்கிறாள், ‘ஏனப்பா கண்ணகி அழுது கொண்டிருக்கிறா? தந்தை விடை சொன்னார் ‘கோவலன் மாதவி என்றொரு பெண்ணிடம் போய் விட்டார், அதனால் கண்னகி துக்கித்து அழுகிறாள்’ மகள் சொன்னாள்,’ஏனப்பா கண்ணகியும் அவவுக்கு பிடிச்ச ஒராளப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம் தானே? அவ ஏன் அழ வேணும்?

 - இங்கு நாம் இன்னும் கண்ணகி கோவலன் கதையை நாடகமாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரம் அடுத்த சந்ததி அதன் உள்ளடக்கத்தை வெகு இயல்பாக கேள்வி கேட்கக் காணலாம்.

2. அது போல இன்னொரு கதை. இது ஞான சம்பந்தர் பால் குடித்த கதை. தந்தை உமை பால் கொடுத்ததையும் தந்தை வந்து ‘யார் உனக்குப் பால் தந்தது என்று வினவுவதையும் சம்பந்தர் தோடுடைய செவியன் எனப் பாடுவதையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தை உடனடியாக எந்தத் தயக்கமும் இல்லாமல் கேட்டது, உமாதேவியார் தானே பால் கொடுத்தார்! ஏன் சம்பந்தர் சிவபெருமானைப் பாடினார்?

இவ்வாறு நாளாந்தம் நாம் கவனியாமலே கடந்து செல்லும் கேள்விகள் ஏராளம். அவை நம்மை நோக்கி வீசப்படுவன அல்ல; அவை பண்பாட்டை நோக்கிக் வீசப்படுகிற வினாக்கள்.

கடந்த சில வாரங்களின் முன்னர்  ஒரு பரிசுக்கதையை வாசிக்கக் கிட்டியது. அது 2014ல் தமிழ் தாய் சிறுகதைப் போட்டியில் 3ம் இடத்தைத் பெற்ற கதை அது.  அந்தக் கதை நம் சகோதர தளமான உயர்திணை இணையப் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தயவு கூர்ந்து அங்கு சென்று அந்த கதையை வாசித்துப் பாருங்கள். ஏழுமலை ஏழு கடல் என்பது கதையின் தலைப்பு. இந்தக் கதையை ஸிட்னி இரா. சத்யநாதன் என்பார் எழுதி இருக்கிறார்.

uyarthinai.wordpress.com

இவை எவ்வாறு எதிர்காலத்தில் விரியும் என இப்போது சொல்ல முடியாவிட்டாலும், நம் பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள் பற்றிய ஒரு பிம்பம் உங்கள் மனதிலும் தெரியலாம்.....

பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள்......

10 comments:

  1. இன்று படித்த பதிவுகளில் மனதிர்கு பிடித்த பதிவு உங்கள் பதிவுதான் பாராட்டுக்கள் இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்கள் படிக்க கிடைக்காமல் போய்விடுகின்றன.......தொடர்ந்து எழுதுங்கள் நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
      வரவுக்கும் நினைத்ததைச் சொல்லி விட்டுச் சென்ற அக்கறைக்கும் மிக்க நன்றி.
      சொற்களும் இனிக்கும் என இன்று கண்டேன்!

      Delete
  2. ஆமோதிக்கிறேன் தோழி... நம் தளிர்கள் நம்மைவிட அறிதலும் புரிதலும் அதிகம் பெற்றவர்கள். அவர்களுக்கு நம் பாரம்பர்ய பண்பாடுகளை அவற்றின் அருமைகளை நாம் காட்டித் தர வேண்டும். அதே சமயம் அவர்களின் புத்தி சாதுரியத்தையும் ஏற்று சிலவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிலா.
      மகிழ்ச்சியும்!

      Delete
  3. அருமை.... அருமையான கட்டுரை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார்,
      படத்தில் இருக்கும் இரு துளிர்கள் உங்கள் பிள்ளைகளோ?

      Delete
  4. சிறப்பான கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வெங்கட்.
      சிரத்தையோடு ஒரு குறிப்பைத் தந்து சென்றமைக்கும்.
      தொடர்ந்து வருவீர்களாக!

      Delete
  5. இங்கு பிறந்து வளர்ந்தவர்க‌ளின் சிந்தனைகள் மிகவும் வித்தியாசமானது அத்துடன் ஆரோக்கியமானதும்...பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  6. ஓமோம்.
    வித்தியாசமானதும் ஆரோக்கியமானதும் மாத்திரமல்ல அத்தோடு துணிவும் தன்னம்பிக்கையும் இணைந்திருப்பது தான் கூடுதல் சிறப்பு!

    ReplyDelete