Friday, January 19, 2018

பூ அன்ரி......



24.12.17. மதியம் கடந்த வேளை நமக்கு.....
குடியிருப்புகள் செறிந்த வீதி ஒன்றால் வந்து கொண்டிருந்த வேளை....
யாழ்ப்பாணத்தில் இருந்து செந்தி whatsapp இல்.....
ஓரமாய் வண்டியை நிறுத்தி விசாரிக்கிறேன்...
‘பூ அன்ரி மோசம் போட்டாவாம்’
’பூ அன்ரி மோட்சம் போட்டாவாம்’ என்று கேட்கிறது எனக்கு.......

பூ அன்ரி.......
தொழில் நுட்பம் எதுவும் தொட்டிராத வாழ்வொன்று இருந்தது அப்போது எங்களிடம். அது நாங்களும் அன்ரியின் குடும்பமும் அனுபவித்து வாழ்ந்த வாழ்வு. இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்வு. பாசாங்கில்லாத பாசங்கள் கொட்டிக் கிடந்த வாழ்வு....


வன்னிப் பெருநிலப்பரப்பில் வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி வரும் பிரதான வீதியில் 10 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம் எங்களது.

சேவல் கூவுமுன் மயில் அகவி விடியும் காலைகள்...

 நெல்மணிகள் விளையும் 5 ஏக்கர் நிலம். முன் பக்கம் யாழ் வீதியும் பின் பக்கம் ரயில் பாதையும் எல்லையாகக் கொண்ட பசுந்தரை. பெரிய கிணறு. மா, பலா, வாழை, தென்னை, கமுகு, கொய்யா, லாவுல் என பழமரங்கள். அவற்றைப் பறித்துண்ன வரும் குரங்குகள். அவற்றைக் கலைப்பதற்காக கல்விட்டெறிவதாகப் பாசாங்கு காட்டினால் தாமும் அவ்வாறு செய்து காட்டி இடம் விட்டு நகராதிருக்கும் புத்திசாலிக் குரங்குகள். அவற்றின் நடுவே கம்பீரமாய் பூமரங்கள் சூழ பிரதான வீடு. வீட்டுக்கு முன்னாலே சாணத்தால் மெழுகப்பட்ட நிலம். தென்னோலையால் வேயப்பட்ட கூரை, அதற்குள்ளே கூடு கட்டிக் குடியிருக்கும் சிட்டுக் குருவிகள். நெல்மூட்டைகளுக்குப் பின்னேயும்  வெளியில் உள்ள வைக்கோல் போருக்குள்ளேயும் ஒளித்துப் பிடித்து விளையாடும் நாங்கள். ஆடு,மாடு, கோழி,நாய், பூனை என இவை வேறு.

மழையால் நிறையும் குளத்தால் செழிக்கும் பூமி. பிள்ளையார் கோயில் மணி கேட்கும் மாலைகள். இரவுகளில் பின்புறக்காடுகளில் இருந்து வரும் பன்றி, மான், மரைகளோடு யானைகளும்...ஆனால் பகல் பொழுதுக் காடுகளை நமக்கவை விட்டுத் தரும். அங்கு பாலப்பழம் வீரப்பழம் என கொப்பு வெட்டி பறித்துண்ணும் நாங்கள்....

அவை மண்ணெண்ணை விளக்கில் நாம் படித்த வாழ்க்கைக் கோலங்கள்...
பஸ்ஸிற்குக் காத்திருந்து நடந்தே வீடு திரும்பிய சீருடைக் காலங்கள்....
விளாங்காயும் மாங்காயும்   அடித்தும் பறித்தும் தின்ற பருவங்கள்.....

எளிமையான இந்தச் சிறுவயது வாழ்வில், வாத்சல்யத்தால், பூரித்த புன்னகையால், வாரி வழங்கும் பரிசுகளால், அழகுறச் செய்து கொண்டுவரும் என் பிறந்த நாளுக்கான கேக்குகளால், கட்டி அணைத்துத் தரும் முத்தங்களால் என் சிறுவயது ஞாபகங்களை இனிய நினைவுகளாக நிறைத்தவர் பூ அன்ரி...

அன்ரி இருக்கும் இடமே எங்களுக்குப் பட்டிணம். போவதொன்றே குதூகலம்.
வவுனியாவில் இருக்கும் அவர் வீட்டில் தங்குவதே கொண்டாட்டம்.  அவர்களின் ’ஷங்கர்’ லொறி எங்கள் விளையாட்டுத் திடல்.

மாதம் ஒருதடவை வார இறுதியில் ரூபவாஹினித் தொலைக்காட்சியில் போடும் கறுப்பு வெள்ளைத் தமிழ் படம் பார்ப்பதற்குப் போவதற்கான விண்ணப்பம் மாத ஆரம்பத்திலேயே வீட்டில் ஆரம்பித்து விடும். அங்கு செல்வதற்காகவே போடப்படும் நிபந்தனைகளை எல்லாம் விறு விறு என்று செய்வதில் நமக்குள்ளே போட்டிகள் தொடங்கி விடும்.

படிப்புகள் மும்மரமாய் நடக்கும்; வீட்டு வேலைகள் சிணுங்கல்கள் இன்றி முடியும். ஒரு முறைக்கு ஒருவருக்கு மட்டுமே போக அனுமதி இருக்கும் என்பதால் நாம் எல்லோரும் போட்டி போட்டு நல்ல பிள்ளைகளாவோம்.

அங்கு செல்ல விரும்புவது படம் பார்க்க மாத்திரமல்ல; அவரன்பில் மூழ்குவதற்கும் தான். ஒரு பிள்ளை மீதான வாத்சல்யத்தை, சந்தோஷத்தை, விருந்தோம்பலை, பேரன்பாய் பொழிந்து மகிழும் அந்த அன்பு மிகப் பிரத்தியேகமானதும் தனித்துவமானதும் கூட...

பூ அன்ரி....

நீங்கள் ஓர் அபூர்வ பிறவி....ஆசீர்வாதங்களோடு பிறந்த ஆச்சரியம் நீங்கள்...கடவுளின் செல்லப்பிள்ளையாய் மலர்ந்தீர்கள். குணம் என்றொரு நறுமணம் பரப்பினீர்கள்.

என் சிறு வயது ஞாபகங்களை உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத பேரன்பால் நிறைத்தீர்கள்.....

இன்று நீங்கள் இல்லை; நம்மோடு....

இது எனக்கு ஒரு wake up call ம் கூட...

மத்திய வயதை எட்டி விட்ட இந் நாட்களில் நீண்ட வருடங்களின் பின் நடந்த முதல் இழப்பு இது. பெற்றுக் கொண்ட அனுபவங்களினூடும்  கற்றுக் கொண்ட பாடங்களினூடும் பொதுவான எங்கள் மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்......

 மத்திய வயதைத் தொட்டு அதாவது  மலையின் உச்சியைத் தொட்டு விட்டு கீழிறங்கிக் கொண்டு வருகிற பருவம். ஒவ்வொரு அடியையும் அர்த்தபுஷ்டியோடும் அனுபவித்த படியும் அவதானத்தோடும் வைத்து புல்லுக்கும் பழுது எதுவும் நேர்ந்து விடாத வண்ணம் கவனமாக அடி எடுத்து வைத்து வர வேண்டும் என்று தெரிகிறது.

ஆனால், எதை நோக்கி நகர வேண்டும்; எந்தப் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றே தெரியவில்லை.....

’கடவுளின் சவுக்கடியில் சத்தங்கள் கேட்பதில்லை’ என்கிறார்கள்.

இறப்புகளும் இழப்புகளும் எதையோ நமக்குச் சொல்ல வருகிறது. அது எது என்று மொழிபெயர்க்க இயலவில்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ‘எதையோ’ கற்றுக் கொள்ள வருகிறோம். ஒவ்வொருவருடய ‘விடைபெறுதலும்’ வாழ்க்கை நிரந்தரமில்லை என்ற ஓர் உண்மையை அறைந்து நமக்குச் சொல்லி விட்டுச் செல்கிறது.

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலார் ஆசை
நடுச்சங்க நல்விலங்கு பூட்டும் — கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்

இருப்பது பொய் போவது மெய்யென்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருகும் தீங்கினையெண்ணாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மததென்று தாமிருக்க தான்

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே— வித்தகமாய்க்
காதி விளையாடி இருகைவீசி வந்தாலும்
தாதி மன நீர்க்குடத்தேதான்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.

 பூ அன்ரி........
7.1.18

Monday, January 1, 2018

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018 ம் மேலும் சில நினைவுகளும்...

நன்றி; whatsapp இலிருந்து வந்தது...

ஒவ்வொரு வருடமும் வருகிறது, மெல்லக் கரைந்து மறைகிறது... மறைகிறபோது நமக்கு ஒரு வயது கூடுகிறது... கொஞ்சம் அனுபவம் சேர்கிறது....

சிலரை இழக்கிறோம்.... சிலரைப் பெறுகிறோம்....

இந்தப் பதிவினை எழுத ஆரம்பித்த காலத்தை; அன்றய கால நண்பர்களாக இருந்தவர்களை; நினைத்துப் பார்க்கிறேன்.....

அநேகர் பதிவுலகிலேயே இல்லாது போய் விட்டார்கள். கண்தெரியாத உறவுகளாய் கருத்தால், எழுத்தால் இணைந்த காரணத்தால் நம்மோடு ஓர் அன்னியோன்னியத்தை வளர்த்துக் கொண்டவர்கள்.... என்ன ஆகினார்கள் என்றே தெரியாமல் அவர்களை இழந்து விடுதல் என்பது எத்தகைய ஓரிழப்பு!....

இருவாரம் முன்பு வரை சுகமாக இருந்த என் சித்தி 24.12.17ல் நம்மோடு இல்லை.
நாளை என்று ஒன்று நிச்சயமில்லை; யார்க்கும். இன்று என்பது மட்டுமே உண்மை. இன்றைகளை வாழுவோம்!

கோபங்களை மறந்து இன்றைக்கே கைகுலுக்கிக் கொள்வோம். உங்களிடம் தவறில்லை என்றாலும் சமரசம் செய்து கொள்ளுங்கள். நம் மனசை அது இலேசாக்கும் என்பதால்...

இறப்பு ஒன்றே சாஸ்வதம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டால்; நாளை இறந்து விடுபவனைப் போல சிந்தனை செய்தால்; இன்று நாம் என்ன வெல்லாம் செய்வோமோ அதை செய்ய இப்போதே ஆரம்பிப்போம்.
‘நூறு வருடம் வாழ்பவனைப்போல வேலை செய்; நாளை இறந்து விடுபவனைப்போல சிந்தனை செய்’ என்று ஒரு பொன்மொழி உண்டு.

இதனையே இறப்புகள் மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன...

எழுதுங்கள் தோழர்களே! எழுத்துக்களால் இணைந்திருப்போம்!!

எழுத்துக்கள் மட்டுமே சாஸ்வதம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நான் பதிவெழுதத் தொடங்கிய புதிது. நான், செளந்தரி, ஜெயன் மூவருமாக பதிவுலகில் புகுந்தோம். மற்றய இருவரும் பதிவுலகை விட்டு அதிக தூரம் போய் விட்டார்கள். நான் தனியனானேன். பதிவுலக அரிவரிப் பாடங்களை பதிவர்களிடம் இருந்தே கற்றேன். படங்களை இணைக்கிற முறையை செளந்தரியிடம் இருந்தும்; வீடியோக்களை இணைக்கிற முறையை தாருகாசினியிடம் இருந்தும் கற்றுக் கொண்டது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. இரண்டு பேருமே தம் வலைப்பக்கங்களை மூடிக் கொண்டு விட்டார்கள். 

பிறகு கொஞ்ச வருடங்கள் ஈழத்து முற்றம் என்ற குழும வலைப்பதிவில் கும்மாளம் கொட்டக் கிடைத்தது. அதுவும் இப்போது படுத்துக் கொண்டு விட்டது....

எழுத்துக்களால் நம்மை ஈர்த்த பலர் சொல்லாமல் கொள்ளாமல் பதிவுலகை விட்டு வெளியேறி விடுவது மேலும், எழுதாமலே போய் விடுவது ஒரு மலாரிடியாக தலையில் வந்து விழுகிறது. இவர்களுக்கெல்லாம் என்ன ஆகியிருக்கக் கூடும் என்றே மனம் அலைபாய்கிறது....

சில மாதங்களின் முன்னால் என் பிரியமான பதிவுலகத் தோழி கீதா, எழுதுகிற விடயங்களை தரம் பிரித்து தனித்தனித் தலைப்பின் கீழ் கோர்வைப்படுத்தினால் நன்றாக இருக்கும்; மேலும் ஒரு குறிப்பிட்ட பதிவைக் கண்டு பிடிப்பதும் இலகுவாக இருக்கும் என ஆலோசனை வழங்கி இருந்தார். அது ஒரு நல்ல யோசினையாகத் தான் பட்டது. 

ஆனாலும் நீங்கள் என் வலைப்பக்கம் மாற்றங்கள் காணாது இருந்தபடி அப்படியே இருப்பதைக் காண்பதைப் போல் மாற்றங்களை இலகுவாக ஒப்புக் கொள்ளத் தயங்கும் என் மனோபாவம் அதைப் பிற்போட்டுக்கொண்டே வந்தது. தொழில் நுட்பம் குறித்த அறிவு மிகச் சொற்பம் என்பதும் ; தவறாகிப் போய் விட்டால் இழப்பினை ஈடு செய்ய முடியாது என்ற தயக்கமும் அந்தப் பிற்போடலுக்குள் மறைந்திருந்தது.

 ஒழிந்திருந்த இந்தத் தயக்கங்கள் எல்லாம் கிடைத்த இந்த வருட இறுதி விடுமுறையில் விழித்துக் கொண்டு போக விடை கேட்டன. அப்படியான ஒரு மாலைவேளையில் துணிந்து setting இற்குள் இறங்கி மெதுவாகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் அடி எடுத்து வைத்து கீதா சொன்ன வகைப்பிரிப்புகளைச் செய்து கொண்டேன். பிறகு அந்தந்தப் பிரிவுகளுக்குள் பதிவுகளை வகைப்படுத்த ஆரம்பித்த போது அது ஓர் எதிர்பாராத பின்னோக்கிய பயணமாகவும் நல்லதொரு நினைவு மீட்டலாகவும் அமைந்தது ஓரு மகிழ்வான தற்செயல். 

அதில் சின்னப்பிள்ளைத் தனமான பதிவுகள், தான் தோன்றித்தனமான பதிவுகள், ஒன்றுமே இல்லாத பதிவுகள்....இப்படி என  நான் ஆடிய கூத்துகள்....வெட்கப்படத் தக்கவை என அவற்றை நான் இனம் கண்ட போதும் அவற்றில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யாது அவற்றை அப்படி அப்படியே அந்தந்த வகைப்பாட்டுக்குள் அடக்கி விட்டேன்.

பணிப்பிணி ஒன்று அகன்ற மகிழ்வெனக்கு! 

இவ்வாறு நான் பின்னோக்கிப் பயணித்த போது தான் எழுதி Draft இல் போட்டு வைத்திருந்த - பின் மறந்தே போய் விட்டிருந்த - பல அம்சங்களைக் காண முடிந்தது. அவை இப்போதும் வரிசையாகப் பிரசுரத்துக்காகக் காத்திருக்கின்றன...கொஞ்சம் மெருகேறிப் பின் அவை வரக் கூடும்....

ஆனால் இந்த மெருகேற்றல் நடந்து கொண்டிருந்த வேளையில் நான் கண்டுகொண்ட;  விசனத்தைத் தந்த அம்சம் ஒன்றையும் குறிப்பிட வேண்டியது அவசியம். அது என்னவெனில் குறிப்பிட்ட இணையத் தளம் ஒன்று என் பதிவுகளையும் ஒளிப்படங்களையும் தங்களுடய பெயரில் உருமாற்றி தம் தளத்தில் பிரசுரம் செய்திருந்தமை தான் அது. 

என்னே ஒர் அநாகரிகம்....! இங்கிதம் கருதி அது என்ன இணையத்தளம் என்பதை இங்கு பகிரங்கப்படுத்தாது விடுகிறேன்.

அதனால் பிரசுர உரிமை குறித்த ஓர் எச்சரிக்கையை என் வலைப்பக்கத்தில் கறாராக இட நேர்ந்தது. அதே நேரம் கூகுள் இமேஜில் இருந்து நான் படங்களைப் பாவிப்பதில்லையா என்று என் மனசாட்சி கேட்கிற கேள்வி ஒன்றுண்டு. அது நியாயமானதும் கூட. நான் அவ்வாறு செய்ததுண்டு தான். ஆனால் நான் அவற்றை அதில் பதிக்கப்பட்டுள்ள இலட்சினையை  வெட்டி உருமாற்றம் செய்தோ அல்லது அதனை என்னுடயதாக்கி அதில் என் இலட்சினையைப் பொறித்தோ ஒரு போதும்   பிரசுரித்ததில்லை. 

எனினும் 1.1. 2018 இலிருந்து கூகுள் இமேஜில் இருந்தும் கூட இனிப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்கவே முயல்கிறேன். 

இவைகளைத் தவிர இணைப்புகளை பதிவுகளில் இணைப்பது தொடர்பான புதிய மார்க்கம் ஒன்றினை இன்று கீதா மூலமாகக் கண்டு கொண்டேன். அது பலகாலமாக எப்படி எப்படி என்று என் மனதைக் குடைந்து கொண்டிருந்த போதும் அதனை சரியாக அறிந்து கொள்ளத் தவறி இருந்தேன். அதை புது வருடமான இன்று (1.1.18 ) கண்டு கொண்டேன். சொல்லித்தந்த கீதாவுக்கு நன்றி.

புது வருடம் இப்படியாக மலர்ந்திருக்கிறது....

நண்பர்களே! 

இன்று என்பது மட்டும் தான் நிஜம் என்று பதிவுலகும், வாழ்க்கையும் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

’Do Dance! like no one watch you’...நள்ளிரவு புது வருடக் கொண்டாட்ட வாணவேடிக்கைகாட்சிகள் ABC தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதனை நடத்திக் கொண்டிருந்த பெண்மணி சொன்ன வாழ்த்து அது.

இன்றய வாழ்வை வாழ்வோம்! எங்களுக்குப் பிடித்த மாதிரி.....
எங்களுக்கு கைவந்த மாதிரி!! மேலும், எங்களுடய Own Style இல்!!

      Happy New Year!