Tuesday, March 20, 2018

நூலெனப்படுவது.....

’நூலெனப்படுவது நுவலுங் காலை
முதலும் முடிவும் மாறுகோ ளின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே’



பொருள்: நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக் கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதிய பொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி உதனகத்து நின்றும் விரிந்தவுரையோடு பொருத்த முடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு.

இது ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம். இனி எப்படி ஒரு நூல் இருக்கக் கூடாது என்பதற்கும் இலக்கணம் கூறுகிறது தொல்காப்பியம். அது இது.

‘சிதைவெனை படுபவை வசையற நாடிற்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில கூறல் மயங்கக் கூறல்
கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல்
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்
தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்’

இதன் பொருள் என்னவெனில்,
மாறுகொளக்கூறுதலாவது ஒருகாற் கூறிய பொருளொடு மாறு கொள்ளுமாறு பின் கூறல். அஃதாவது தவம் நன்று என்றவன்றான் தவந் தீதென்று கூறல்.

குன்றக் கூறலாவது, தானதிகரித்த பொருட்களுள் சிலவற்ரைக் கூறாதொழித்தல்.

மிகைபடக் கூறலாவது, அதிகாரப் பொருளன்றி பிற பொருளும் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவான் எடுத்துக் கொண்டால் வடமொழி இலக்கணமும் கூறுதல்.

பொருளில கூறலாவது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைகொப்பின்றி பயனிலாதன கூறல்.

மயங்கக் கூறலாவது, கேட்போர்க்குப் பொருள் விளங்குமாறன்றிக் கூறல்.

கேட்பார்க்கின்னா யாப்பிற்றாதலென்பது, பொருள் யாக்கப்பட்ட சூத்திரம் சந்த இன்பமன்றி யிருத்தல்.

பழித்த மொழியான் இழுக்கக் கூறலாவது, தானொரு பொருளை யொரு வாய்ப்பாட்டாற்றிரித்துப் பிறிதொரு வாய்ப்பாட்டாற் கூறுதல். அக்குறிப்பு உலக வழக் கின்மையாற் பிறர்க்குப் புலப்படாதாம்; அதனால் அதுவும் குற்றமாயிற்று.

என்னவகையானும் மனங்கோள் இன்மையாவது, எழுத்தினானுஞ் சொல்லினானும் பொருளினானும் நமங் கொள்ளுமாறு கூறாமை.

இது இவ்வாறு இருக்க, எப்படி ஒரு பொருளை மற்றவருக்குப் புரியும் படி சொல்லலாம் என்பதற்கும் ஒரு சூத்திரம் உண்டு. அது கீழே...

‘ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்
நுதலிய தறிதல் அதிகார முறையே
தொகுத்துக் கூறல் வகுத்து மெய் நிறுத்தல்
மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல்
மொழியா ததனை முட்டின்றி முடித்தல்
வாரா ததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வராதது முடித்தல்
முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே
ஒப்பக் கூறல் ஒரு தலை மொழியே
தன் கோட் கூறல் உடம்பொடு புணர்தல்
பிறனுடம்பட்டது தனுடம் படுதல்
இறந்தது காத்தல் எதிரது போற்றல்
மொழிவாம் என்றல் கூறிற் றென்றல்
தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை
முடிந்தது காட்டல் ஆணை கூறல்
பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்
பொருளிடை யிடுதல் எதிர்பொருள் உணர்த்தல்
சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தல்
தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண் டுணர்தலோடு மெய்பட நாடிச்
சொல்லிய அல்ல பிறவவண் வரினும்
சொல்லிய வகையாற் சுருங்க நாடி
மனத்தி மெண்ணி மாசறத் தெரிந்து கொண்டு
இனத்திற் சேர்த்தி உணர்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே’

இவர் என்னவாம் என்றால்,

ஒரு விஷயத்தை விளக்க பயன் படக்கூடிய உத்திகள் என்ன வகையாக எல்லாம் இருக்கென்றால்,
1.காட்சியை விரித்துக் கூறுதல்.
2.அதிகார முறை; முன்னம் விபரித்துச் சொன்ன முறையில் அதே பாணியில் மேலும் விரித்துரைத்தல்.
3.தொகுத்துக் கூறல்;வகைகளை தெரிந்து கூறுதல்.
4.வகுத்து மெய் நிறுத்தல்; தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறுதல்.
5.மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல்: சூத்திரத்துள் பொருள் பலபடத் தோன்றுமாயின் முற்பட்ட சூத்திரத்திற்கு ஒத்த பொருளை உரைத்தல். அல்லது முற்பட்ட சூத்திரத்திற்கு பொருள்வழி பிற்பட்ட சூத்திரமும் பொருளோடு ஒன்ற வைத்தல்.
6.மொழியாததனை முட்டின்றி முடித்தல்; எடுத்துச் சொல்லாத பொருளை முட்டுப்படாமல் உரையினால் முடித்தல்.
7.வாராததனான் வந்தது முடித்தல்; ஒருங்கெண்ணப்பட்ட பொருள் ஒன்றினைப் பகுத்துக் கூறிய வழி ஆண்டு வராததற்கோதிய இலக்கணத்தை இதன் கண்ணும் வருவித்து உணர்த்துதல்.
8. வந்தது கொண்டு வராதது முடித்தல்; இலக்கணம் கூறியவழி வராததன் கண்ணும் இவ் இலக்கணத்தைக் கூட்டி முடித்தல்.
9.முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றம்; முற்பட அதிகரித்த பொருளை அவ் வகையினால் கூறாது முறை பிறழக் கூறுதல்.( அவ்வாறு கூறும் போது ஒரு பயன் நோக்கிக் கூற வேண்டும்)
10.ஒப்பக் கூறல்: ஒரு பொருளெடுத்து இலக்கணம் கூறிய வழி அது போல்வனவற்றையும் இலக்கணத்தால் முடித்தல்.
11.ஒருதலை மொழி;சூத்திரத்துக்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனுள்ளொன்றினை துணிந்து கூறல்.
12.தன்கோட் கூறல்; பிறநூலாசிரியர் கூறியதைக் கூறாது தன் கோட்பாட்டைக் கூறல்.
13.உடம்பொடு புணர்தல்: இலக்கணவகையால் ஓதுதலன்றி ஆசிரியனுக்கின்றி சூத்திரத்தின் கண்ணே ஒரு சொல்லை வைப்பானாயின் அவ் அமைப்பினை இலக்கணமாகக் கோடல்.
14.பிறனுடம்பட்டது தானுடம்படுதல்; பிற ஆசிரியர் உடன் பட்ட பொருளோடு தானும் உடன்படுதல்.
15.இறந்தது காத்தல்; சூத்திரத்தால் கூறப்படாத பொருளை தான் ஒரு சூத்திரத்தால் அமைத்தல்.
16.எதிரது போற்றல்: முன் கூறப்பட்ட சூத்திரத்தால் வருகின்ற சூத்திரத்தின் பொருளையும் பாதுகாக்குமாறு வைத்தல்.
17.மொழிவாம்; சில பொருளைக் கூறி அவற்றுள் ஒன்றினை இன்னவிடத்துக் கூறுவாம் என்றுரைத்தல்.
18.கூறிற்றென்றலாவது; பல பொருள் அதிகரித்தவற்றுள் சில பொருளை மேற் சொல்லப்பட்டன என்ரல்.
19.தான் குறியிடுதல்; உலகின் கண் வழக்கின்றி ஒரு பொருளுக்கு ஆசிரியன் தான் குறியிடுதல்.
20.ஒருதலையன்மை முடிந்தது காட்டல்; ஒரு பொருளை ஓதிய வழி சொல்லுதற்கே உரித்ததன்றி  பிற பொருளுக்கும் பொதுவாக முடித்தமை காட்டல்.
21.ஆணை கூறல்: ஒரு பொருளைக் கூறும் வழி எதுவினால் கூறலன்றி தன் ஆணையால் கூறல்.
22.பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்: ஒரு சூத்திரம் பல பொருளுக்கேற்குமாயின் அவற்றுல் நல்லதனை பொருளாகக் கோடல்.
23.தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்; தொகுத்துச் கூறிய சொல் தன்னாலே பிறிதுமொரு பொருளைக் காட்டல்.
24.மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல்: பிற நூலாசிரியன் கூறிய பொருண்மையைக் கெடுத்து தந்துணிவு கூறுதல்.
25. பிறன் கோட்கூறல்: பிற நூலாசிரியனின் கோட்பாட்டைக் கூறல்.
26.அறியாதுடன்படல்; தான் அறியாத பொருளை பிறர் கூறியதால் உடன்படுதல்.
27.பொருளிடையிடுதல்: ஒரு பொருளை ஓதிய வழி அதற்கிணக்கமாகிய பொருளை சேரக் கூறாது இடையீடுபடக் கூறல்.
28. எதிர்பொருள் உணர்த்தல்: இனிக் கூறவேண்டியது எதுவென உணர்த்தல்.
29.சொல்லின் எச்சம் சொல்லியாங்குணர்த்தல்; பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு ஆங்கு சொல்லியவற்ரால் பொருள் கோடல்.
30. தந்து புணர்ந்துரைத்தல்; முன்னாயினும் பின்னாயினும் நின்ற சூத்திரத்தால் சொல்லை இடைநின்ற சூத்திரத்தால் கொணர்ந்து புனைந்துரைத்தல்.
31.ஞாபகங் கூறல்: இரட்டுற மொழிந்து இரண்டு சொற்களுக்கும் பொருள் கூறல்.
32.உய்த்துக் கொண்டுணர்தல்: ஒரு சூத்திரத்தால் ஒரு இலக்கணம் ஓதியவழி அதற்குப் பொருந்தாமை உளதாகத் தோன்றின் அதற்குப் பொருந்துமாறு விரித்துரைத்தல்.
33.மெய்ப்பட நூலென்பது: மேற் சொல்லப்பட்டவற்றோடு கூடப் பொருள்பட ஆராய்ந்து சொல்லிய அல்லாதனவாகிய பிறவற்றினாலும் சொல்லிய நெறியினாலும் சுருக்கமாக ஆராய்ந்து மனதினால் நேர்ந்து  குற்ரமறத் தெரிந்து கொண்டு சொல்லிய இனத்தோடு பாகுபடுத்தி உரைத்தல்.
34. சொற்பொருள் விரித்தல்: பதந் தோறும் பொருள் விரித்து கடாவும் விடையும் கூறல்.
35. ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல்: சொல்லப்பட்டவற்றால் ஒரு முடிவுக்கு வருதல்.

(தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, தென்னிந்திய சைவசித்தந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு, மே.1961. ( முதற் பதிப்பு ஜூன் 1953) (பக்கங்கள் தமிழ் இலக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளன. )
..