Monday, October 29, 2018

சேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்

சேக்கிழாரின் காலம் கி.பி 12ம் நூற்ராண்டாகும். பெரியபுராணத்தின் ஆசிரியன். இந்து மதம் சார்ந்த தமிழ் புலமையாளன். தமிழும் சமயமும் கலந்து குழைத்து அவன் தந்த பக்திச் சுவை மிக்க தமிழ் பரவசம் தருவது.

பலரும் சமயம் என்றதும் அது குறிப்பிட்ட ஒரு சாராருக்கென ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அவ்வாறு ஒதுக்கப்பட்ட அச் சமயத்தவரோ சமயத்தைத் தாண்டி அதில் எதையும் பார்த்து விட்டால் அது ஆண்டவனுக்குச் செய்யும் பெரிய துரோகமென ஒரு விதமான ‘பார்க்க மறுக்கும்’ சோணம் கட்டிய குதிரை மனோ பாவத்தைக்  கொண்டிருக்கிறார்கள்.

அதனால் பக்தித் தமிழின் அழகியல் வெளியே அதிகம் வெளிவராமல் போய் விட்டது.

‘யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர் படோம்; ஏமாப்போம் பிணியறியோம்; இன்பமே எந் நாளும் துன்பமில்லை’ என்று பாடிய சமயக் கவிஞனின் தமிழின் ஏமாப்பு பாரதியின் ’அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...’கவிதையில் இருந்து எவ்வகையில் குறைந்து போயிற்று?

’சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை’ என்ற ஒரு சமயச் சித்தனின் ஏக்கத்தில் தான் எத்தனை அழகு! அந்தச் சித்தம் அழகியர் நம் விபுலானந்தரின் ‘உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது’ என்ற தேன் துளிக் குறிப்பில் இருந்து எவ்வகையில் தாழ்ந்து போயிற்று?

கொஞ்ச நாளைக்கு முன்னர் பார்த்து விட்டு அப்படியே ஆறப்போட்டு விட்ட அல்லது மனக் கிடங்கில் ஊறப்போட்டு வைத்திருந்த சேக்கிழானின் திருஞான சம்பந்தன் குறித்த புராண படலத்தில் இருந்து சில தமிழ் முத்துக்களை இன்று வெளியே கொண்டுவரலாம் என்று தோன்றியது.

அந்த மனுஷன் சம்பந்தனைப் பாடுமுன் அந்தாளின்ர நாட்டின்ர வளத்தை பாடுது. சோழர் காலத்தில நாட்டு வளத்தை வேறயும் கன புலவர்மார் பாடி ஒரு கரை கண்டிருக்கினம் தான். கம்பனைத் துக்கிப் பிடித்து கொண்டாடும் பலபேர் அத உருகி உருகிச் சொல்லுவினம். அதுகளைப்பற்றிச் சொல்லப் போனா சேக்கிழார் கைநழுவிப் போயிடுவார் எண்டதால அத இங்க தவிர்க்கிறன்.

சரி சேக்கிழார் எப்பிடி எண்டு நினைக்கிறீங்கள். சொல்லுறார் பாருங்கோ,

பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆகுதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.

அங்க ஊர் இப்பிடி இருக்குது வீடுகள் எப்பிடி இருக்குது தெரியுமோ?

புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.

சுற்றுப் புறம் எண்டா அது வேறொரு விதமாய் இருக்குது

மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.

இப்பிடியான அழகியலோட ஒரு ஊர கற்பனை பண்ணிப் பார்க்கவே எவ்வளவு அழகாயிருக்கு இல்லையா? இன்னும் அவர் கதைக்குள்ள வரயில்ல. சம்பந்தர் பிறக்கப் போற ஊர் தான் இது. இப்ப தெய்வத்தன்மை வாய்ந்த ஒருத்தர் பிறக்கப் போறார். அதைச் சொல்லுறதுக்காக

பாடல் எண் : 23
தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆகுதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.

பாடல் எண் : 24
திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.

பாடல் எண் : 25
தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.

பாடல் எண் : 26
அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.

இப்படியாகச் சம்பந்தர் பிறந்திட்டாராம்..என்ன ஒரு அழகு; என்ன ஒரு பாடல் வைப்பு! அதில் இசைந்து நிற்கும் ஒருவித ஒழுங்கு! தமிழில் இருந்து ஒழுகுது அழகு!!

அக்கம் பக்கமெல்லாம் இப்ப கொண்டாட்டமும் சந்தோஷமுமா இருக்கு. பாருங்கோ அது எப்பைடி இருக்கெண்டா

பாடல் எண் : 35
காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.

பாடல் எண் : 36
மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.

பாடல் எண் : 37
சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிறைப்பார்.

பாடல் எண் : 38
செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.

இப்பிடியாகக் கொண்டாட்டம் அக்கம் பக்கமெல்லாம். ஊரோ செழிச்ச ஊர். ஒரு பிள்ள பிறந்து விட்டா ஊரே கொண்டாடி மகிழுது. சொந்தமும் பந்தமும் சந்தோஷமுமா ஒரு சிற்றூர் நம் முன் விரிகிறதில்லையா?

பல்லவர் காலத்து ஒரு சைவச் சிற்ரூரை சோழர்கால தமிழ் புலமையாளன் ஒருவன் இப்படியாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறான்.

No comments:

Post a Comment