Tuesday, August 6, 2019

பட்டறையில் பட்ட அறிவு

’காலம் பிழைத்தால் ஒரு புல்லுக் கூட உன் பல்லை உடைக்கும்’ என்று கண்ணதாசன் ஓரிடத்தில் கூறி இருந்தார்.



அதன் உண்மையினை அறிய முடிந்தது சமீபத்தில் தான். சமீபத்தில் வீட்டுக்கு வர்ணம் அடிக்கும் வேலைகள் நடந்தன. ஒருவர் வீட்டில் நின்று ஒவ்வொரு சிறு விடயங்களையும் அவதானமாகக் கண்காணித்தாலன்றி வேலைகள் உரிய வகையில் நடைபெறாதென்பதை உணர்ந்த தருணம் அது.

என்னவோ அது ஒரு சிறு விடயம் தான். வேலைகள் நடைபெறுவதற்காக மின்சார உபகரனங்கள் அதன் மின்னிணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தன. மீண்டும் அவை உரிய இடத்துக்கு போகவும் நின்று சொல்லி செய்தாகி விட்டது. எனினும் off செய்யப்பட்ட மின்னிணைப்பை மீண்டும் வழங்குவதற்கான switch போட மறந்த ஒரு நாளில்  குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் இருந்த இறைச்சி வகைகள் குளிர் விட்டுப் போய் போட்ட நாற்றம் இருக்கிறதே.......

அது ஒரு வித எலி செத்த நெடி.....வீடு முழுவதுமாய் பரவி எங்கிருந்து அந்த நாற்றம் வருகிறதென்பதே தெரியாது இறுதியில் அது குளிர் சாதனப் பெட்டியில் இருந்து தான் என்பதைக் கண்டுபிடித்த போது அதனை சுத்தம் செய்ய ஒரு நாள் வேலையில் இருந்து விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.

இதில் இன்னொரு கஸ்ரம் என்னவென்றால் கெட்டுப் போனவற்றை உடனடியாகக் கொண்டு போய் Bin இற்குள்ளும் போட முடியாது. அது Bin எடுக்கும் வார நாள் வரை அப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் தான் இருக்க வேண்டிய நிலை. இல்லையெனில் அந்தச் சுற்றுப் புறமே நாற்றத்தின் தொட்டிலாகி விடும். அதனால் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாது அந்த நாற்றச் சகிப்புத் தன்மையையும் 3 நாட்கள் சகித்துக் கொள்ள வேண்டி இருந்தது.

அதனை ஒரு விதமாகச் செய்து முடித்த போது தான் தெரிகிறது அதன் நாற்றம் வீடு முழுவதிலும் ஆடைகளிலும் பொருள்கள் மீதும் படிந்து போயிருப்பதால் வீடு, பொருட்கள், ஆடைகள், துணிமணிகள், நிலையான பொருட்கள் எல்லாவற்றையும் சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது.

இத்தனைக்கும் செய்ய மறந்தது என்னவோ அந்த ஸ்விட்ஸ் ஐ போட மறந்த அந்த ஒன்று தான். அதுவும் சில மணித்துளி நேரம் மட்டும் தான்.

அது போலத்தான் ஆடை துவைக்கும் இயந்திரமும். அதனையும் களற்றி வேலை நடந்த பின் பூட்டியாகி விட்டது. பூட்டிய பின் தண்ணீர் வரும் குளாயைத் திறந்தால் அது தண்ணீர் வரும் பகுதியினூடாக தண்ணீர் ஒழுக ஆரம்பித்து விட்டது. இது என்னடா இப்படி ஆகிறது என்று பார்த்து உரிய வேலையாட்களை வர அழைத்தால் இன்று, நாளை என்று போக்குக் காட்டிய படியே இரு வாரங்கள் கழிந்து விட்டன. இதற்குள் உடுப்புகள் நிறைந்து வழிய ஆரம்பித்து விட்டது தனி ஒரு கதை.

இறுதியாக வேறு ஒருவர் வந்து பார்த்து விட்டு ( வந்து பார்த்து என்ன பிழை என்று சொல்ல மட்டும் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும்.) வந்தவர் குளாய் புதிதாக மாற்ற வேண்டும். அதற்கு 60 டொலர்கள் வரை செலவாகும் என்றார். சரி வாங்கி வந்து வேலையை முடிக்கலாம் என்று வந்ததற்கும் பொருளுக்கும் என்று அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டால் அவர் வருவதற்கிடையில் முதல் வருவதாகச் சொல்லி போக்குக் காட்டிக்கொண்டிருந்தவர்  சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் வந்து இறங்கினார்.

வந்து பார்த்து விட்டு அது setting இல் தான் தவறு நேர்ந்திருக்கிறது. தண்ணீர் குளாயை முழுவதுமாகத் திறக்கக் கூடாது. பாதி திறந்து விட்டால் மட்டும் போதும் என்று கூறி அதனைச் set பண்ணி விட்டு போனார். புரியினை சரியாகத் திறந்து விடத் தவறிய ஒரு சிறு சம்பவத்துக்காக கொடுத்த விலை அதிகம்.

மன உளைச்சலும் தான்.

இப்போது தான் புரிகிறது ஒரு சிறு தவறு அல்லது ஒரு சிறு அவதானமின்மை தரும் தண்டனை எத்தனை பெரிதென்று.

இதற்கே இத்தனை பாடென்றால் வாழ்க்கைக்கு.......

இதில் படித்த பாடம்,

 “ The best maths you can learn is how to calculate the future cost of current decision"

" No amount of guilt can solve the past and no amount of anxiety can change the future"

இது நான் பட்டறையில் பட்ட அறிவு.

2 comments:

  1. பட்டுத் தெளிந்த சம்பவங்கள்.... உங்கள் பட்டறிவு இப்பதிவு வாயிலாக மற்றவர்களுக்கும் ஒரு பாடம்.

    ReplyDelete
  2. ஓம் வெங்கட். உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete