Tuesday, October 29, 2019

நிலைபெறுமாறு எண்ணுதியேல்...

நெஞ்சே நீ வா!

என்றழைத்த கம்பன் விழா வியாழக்கிழமை மாலை 10.10.19, வெள்ளிக்கிழமை மாலை 11.10.19 மற்றும் அதனைத் தொடர்ந்த  வார இறுதியிலுமாக ( 12.10. 19 / 13.10.19 ) கோலாகலமாக நடந்து நிறைவெய்தியது.




செவிக்குணவும் அப்பாலே வயிற்றுக்குணவும் இலவசமாய் ஈந்து சிந்தை, சொல், செயல் மூன்றாலும் வந்த அத்தனை பேருக்கும் ‘உணவளித்த’ கம்பன் கழகம் அதன் சிந்தை நலத்தாலும் சொற்திறத்தாலும் திட்டமிட்ட செயற்பாட்டாலும் தமிழரை கட்டிப்போட்டிருந்தது.

இக் கழகம் தனக்கென சில பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறது. அலங்காரங்களில் இருந்து ஆரம்பமாகும் அது, கொடி குடை ஆலவட்டம் பதாகைகள், மலர் அலங்காரங்கள் சிம்மாசனங்கள் மேடை அலங்காரம் என புறவயமாக சில கட்டாய தோற்றப்பாடுகளைக் கொண்டிருக்கும். பொன்னாடைகள், மரியாதைகள், சிரமபரிகார உபகாரம் ஆராதனைகள் என மேடை நிகழ்வு பல புகழ்மாலைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.

 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சுதந்திரத்துக்கும் அழகுணர்ச்சிக்கும் அவர்களுடய எண்ணப்பாங்குக்கும் ஏற்ப இவைகள் துலங்குவதால் இவை குறித்து என்னுடய அபிப்பிராயத்தைக் கூற எனக்கேதும் உரித்துக் கிடையாது. இவை ஒரு விழாக்கால கொண்டாட்ட உணர்வைத் தூண்டிவிட வல்லவை என்பதில் எனக்கு கருத்து முரண்பாடு கிடையாது. எனினும் யாம், ’பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம்  காட்சியில் தெளிந்தனம்’.

அது நிற்க,

இவைகளை அப்பால் வைத்து விட்டு மக்களுக்கு இந்தத் தமிழ் தந்த விருந்து என்னவென்று பார்ப்பது இந்த எழுத்தின் பிரதான நோக்கம். முதல் நாள் காலை நிகழ்வு இளையோரின் விவாத அரங்கோடு ஆரம்பித்தது. ’கற்பவர் நெஞ்சைப் பெரிதும் கவர்பவன்’ என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த முனைவர். இராதா. மாது என்பாரின் தலைமையில்
மாணவன் இராமனே!
மானுடன் இராமனே!
காதலன் இராமனே!
நண்பன் இராமனே!
பகைவன் இராமனே!
என்ற தலைப்புகளில் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இளைஞர் யுவதிகள் பேசக் கேட்டோம். அழகாய் தான் இருந்தது. பேச்சு வன்மையும் மேடையை ஆழும் ஆற்றலும் சொற்தேட்டமும் பொருள் வனப்பும் மிகுந்த பேச்சுக்கள் அவை.பல விதமாக இராமனைப் பார்த்த பார்வைகள் அவை! இதன் பின்னாலே ஒரு பெரிய தயார்படுத்தல்கள் சரிபார்ப்புகள் ஒத்திகைகள் அயராத பயிற்சிகள் எல்லாம் இருந்திருக்கும் என்பதை ஊகித்து உணரத்தக்க வகையில் கனகச்சிதமாகப் பேசினார்கள்.

பின்னாலே இவைகளை எல்லாம் சரிபார்க்கும் ’நாணயக் கயிறு’ அவுஸ்திரேலிய கம்பன் கழக அமைப்பாளர் ஜெயராம் அவர்களுக்கு இந்தப்பாராட்டுக்களின் பெரும் பகுதி சென்று சேருதல் தகும்!



அதன் பின்னரான கவிநய அரங்கு பெரியவர்களால் அமையப் பெற்றது. கம்பவாரிதி.இ. ஜெயராஜ் அவர்கள் தலைமை தாங்க, இராமாயணத்தில் அமையப்பெற்றிருக்கும் சொற்திறம் குறித்து ம. தனபால சிங்கம் அவர்களும்; அணிநலம் குறித்து முனைவர் இராதா. மாது அவர்களும்; கற்பனை குறித்து ஸ்ரீ பிரசாந்தன் அவர்களும் உரையாற்றினார்கள்.

ஒவ்வொரு முறை அடுத்த நிகழ்ச்சி தொடங்கு முன்னும் அதற்கு முன்னரான நிகழ்ச்சி குறித்த தன் அறிவார்ந்த அபிப்பிராயத்தை முதலிலே சொல்லி, தன் தொடக்க உரையை ஆற்றுவது கம்பவாரிதியின் வழக்கம். மிக மகிழ்வுக்குரியதாக விளங்கும் அந்த கருத்துச் சுருக்கம் முன்னர் நிகழ்ச்சி செய்தவர்களுக்கும் கேட்போருக்கும் நல்லதொரு ‘பார்வையை’ நல்கவல்லது. வெறுமனே புகழுரையும் பாராட்டுரையுமாக அல்லாது அவரது மனமார்ந்த கருத்துரையாக அமைவதை கேட்போர் நன்குணர்ந்து கொள்வர்.

இந் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போது, முதல் நிகழ்ந்த விவாத அரங்கில் பேசிய மாணவர்களின் திறமையை பாராட்டி, கூடவே இம் மாணவர்களின் பேச்சுத்தொனியில் இருக்கும் ஒரு வித ’ஒரே மாதிரியான’ இயல்பு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

கவிநய அரங்கு அறிஞர் பெருமக்களால் வழங்கப்பெறும் போது அதன் அழகுக்கு சொல்லவா வேண்டும். எல்லாமே கன கச்சிதமாக நேர வரம்புக்குள் நின்று சொல்லவேண்டியவற்றை சொற்திறம் மேலோங்க சொல்லியபாங்கில் பொருளுணர்ந்து சொல்லி மக்களின் மனங்களில் நயங்களை நவரத்தினங்களாகப் பதித்துச் சென்றனர்.

அதிலும் கற்பனை வளம் என்பது ‘புகுந்து விளையாடக்கூடிய’ பெரும் சுரங்கமல்லவா? கற்பனைக்குள் ஸ்ரீ பிரசாந்தன் சென்று கொணர்ந்த கட்சிகள் கொஞ்சநாட்களுக்கு காட்சியாக மனதில் விரிந்து நிலைபெற்றிருக்கும். கலித்தொகைக்காதலியின் குறும்பும் புறநானூற்று புரவலனின் /கிழவரின் ‘நரையிலவாகிய’ மகிழ்ச்சியும்  விவேக சிந்தாமணியின் ஒளியும் தமிழ்மொழி வழி பொங்கிப் புரண்டோடின.

பெருமையும் பெருமிதமும். மனதிலும் மகிழ்ச்சி தான் காண்!

காலைநிகழ்வு செவிக்குணவாக, பின் வயிற்றுக்கு சற்று ஈய வேண்டி காலைநிகழ்வு அத்தோடு நிறைவுற்றது. இந்த உணவு குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டும். இம் மேலை நாடுகளில் பணத்துக்கும் உணவுக்குமா பஞ்சம்! எல்லாம் ஜே ஜே என்று தான் இருக்கும்.பலரகங்களிலும் பல விதங்களிலும் கறிகள் சோறை மூடும் வண்ணம் பலவண்ண வகைகளில் மின்னும்.  எங்கெங்கு செல்லினும் அது  கல்யாண சமையல் சாதம் தான்.

 எங்கேனும் எப்போதேனும் எங்கள் ஊர் கிராமத்துச்  சிறு கோயிலில் உள்ள மடங்களில் வாழையிலையில் தரும் அன்னதானம் சாப்பிட்டிருக்கிறீர்களா? வெறும் சோறும் பருப்பும்  சாம்பாரும் அப்பளம் மிளகாய் பொரியலுமே எனினும் அது எத்தனை சுவையூறும் ருசி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அத்தனை ருசியினை சுடச்சுட சோறும் சாம்பாரும் பருப்பும் ரசமும் அப்பளம் மிளகாய் பொரியலோடு தந்த சுவையை என்னவென்று சொல்வது!! ஜோர்ரோ ஜோர்!

யாருக்கு கிட்டும் செவிக்குணவும் வயிற்றுக்குணவும் - அதிலும் எல்லாம் இலவசமாக......கம்பன் கழகத்தாரே யாரையா நீர்? தமிழையும் இயலையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்த வந்த நீவீர்?

 வாழ்க!

சனிக்கிழமை மாலை நிகழ்வு மாலை 4.45 மணிக்கு ஆரம்பமாகியது. எனினும் எனக்கு சரியான நேரத்துக்குப் போக முடியவில்லை. இத்தியாதி இத்யாதி நிகழ்வுகளின் பின்னர் இடம்பெற்ற சிறுவர் அரங்கை நான் தவற விட்டதோடு விருது வழங்கும் வைபவத்திலும் மாருதி விருது கிட்டும் போது தான் சென்று சேர முடிந்தது. உயர் மாருதி விருதுக்குத் தேர்வானவர் டார்வினில் இருந்து வந்திருந்த பல்கலைக்கழகம் ஒன்றின் உபவேந்தர். திரு. பிரதாபன்.....அவர் ஒரு சிறந்த ஒரு ஏற்புரையை வழங்கி இருந்தார்.





நம் மொழிக்கும் சமூகத்துக்கும் மட்டுமன்றி நாம் வந்து சேர்ந்திருக்கும் இந் நாட்டுக்கும் நாம் எவ்வாறு நல்ல பிரஜைகளாகவும் நன்றி உணர்வுள்ளவரகளாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கூறி, உலகின் மிகப்பழமையான மொழியை நான் பேசுகிறேன்; உலகிலேயே மிகப்பழைமையான சமயத்தை நான் பின்பற்றுகிறேன் என்பதில் எனக்குப் பெருமை என்றும்; விருதுகளைப் பெறுபவர்கள் விருது கிடைக்கும் என்றெண்ணி உழைப்பதில்லை என்றும் கம்பன் கழகம் தனக்கு விருது கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது அவர்களை மரியாதை செய்வது என் கடமை என்பதால் நெடுந்தூரம் கடந்து  தான் வந்ததாகவும் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தலைப்பாகை சற்றே நழுவியது. அதனை இலாவகமாக மீண்டும் தலையிலே சரியாக வைத்தபடி,’ எனக்கும் மண்டை வீங்கிப்போச்சுப் போல இருக்கு’ என்று நிதானமாகச் சொன்னது அந்த மனிதரிடம் இருந்த இடம்பார்த்து வரும் நகைச்சுவை உணர்ச்சி கொண்ட குணம்சத்தை வெளிக்கொணர்வதாக இருந்தது.

அந்த மனிதர் உண்மையாகவே பெரிய மனுஷன் தான்!

அதன்பிறகு இடம்பெற்றது பட்டி மண்டபம். இராமனுக்குப் பெரிதும் ஏற்றம் தந்த தொடர்
‘போர்க்கு நாளை வா’
’சிந்தையாலும் தொடேன்’
’விடையும் கொண்டேன்’
என்ற தலைப்புகளில் முறையே திருவாளர்கள் திருநந்தகுமார், ஞானாகரன்; திருவாளர்கள் குமாரதாசன் ஸ்ரீபிசாந்தன், மற்றும் திருவாளர்கள்  இராதா.மாது, ஜெயராம் ஆகியோர் சொற்பொழிவினை நிகழ்த்தினார்கள். கம்பவாரிதி ஐயா தலைமை ஏற்றார். எல்லோரும் கம்பன் கழக நெடுநாள் உறுப்பினர்கள்; பேச்சாளர்கள்; அனுபவஸ்தர்கள். செவிக்கு சென்றடைந்த உணவின் திறத்தைச் / சுவையை / தரத்தைச் சொல்லவா வேண்டும்!

தேநீர் மாலைச் சிற்றுண்டிகளோடு முதல் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

மறு நாள் காலை ஞாயிற்றுக் கிழமை. எனக்கு வேலை நாள். எனினும் போவதில்லை என்று தீர்மானம் எடுக்க தோதான நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காய் அமைந்திருந்தன. முதலில் அமைந்திருந்தது கவிஅரங்கம். ஸ்ரீ.பிரசாந்தன் தலைமையில் ’ஒருவனைத் தந்திடு’ என்ற தலைப்பில் இரவிச்சந்திரன். எத்திராஜ் அவர்களும் ’ஏயவரங்கள் இரண்டு’ என்ற தலைப்பில் செல்லையா. பாஸ்கரனும் ‘மும்மைசால் உலகு’ என்ற தலைப்பில் ஆனந்பாலா அவர்களும் கவிமழை பொழிந்தார்கள்.

குறிப்பாக எத்திராஜ் அவர்கள் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது. பேச்சுக்களை நாம் குறிப்புகள் இன்றி பேச்சாளர்கள் பேசக் கேட்டிருக்கிறோம். கவிதையை - அதுவும் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக சொல்ல வேண்டிய கவிதையை குறிப்புகள் எதுவுமின்றி கவிதையாக பொழிய கேட்டிருக்கிறோமா? அன்று கேட்டோம்.! அந்த மனிதர் தன் மூளையையே குறிப்புத் தாளாகக் கொண்டு கொட்ட ஆரம்பித்தார். ஒரு தங்கு தடங்கல் இல்லாத ஆசுகவி மழை! இடையிலே தலைவர் ஏதோ கேட்டார். அந்த மனிதர் அதற்கும் கவித்திறத்தாலே பதில் சொன்னார்! மேடையை அந்த மனிதர் கையாண்ட நிதானத்தைச் சொல்வதா? தமிழ் உச்சரிப்புச் சுத்தத்தைச் சொல்வதா? கவித்திறத்தைச் சொல்வதா? கவிப்பொருளை உரைப்பதா? அதில் உறைந்து நின்ற உணர்வுகளைச் - அதிலிருந்த உண்மைத்தன்மையை உரைப்பதா? பிரிஸ்பேர்னில் இருந்து வந்த ஓர் அபூர்வமான ஆசுகவி அவர்!

பிறகு கருத்தரங்கு ஆரம்பமானது. ஜெயராஜ் அவர்களின் தலைமையில் ‘அறிவு அஞ்லோட்டம்’ என்பது தலைப்பு. சங்கப்புலவரிடம் இருந்து வள்ளுவரும் வள்ளுவரிடம் இருந்து கம்பரும் கம்பரிடம் இருந்து பாரதியும் பெற்றவைகளைப் பேசியவர்கள் முறையே ஸ்ரீ பிரசாந்தன், ஜெயராம் மற்றும் இராதா.மாது ஆகியோர்.

தலைமை கொண்ட ஜெயராஜ் அவர்கள் தலைமை உரையாற்றும் போது இந்த அஞ்சலோட்டம் என்பதனை தன் குரு சீஷ்ய பரம்பரையில் இருந்து தொடங்கினார். குருவிடம் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்வது என்பது குறித்து அவர் வழங்கிய கருத்துக்கள் ’அஞ்சலோட்டத்துக்கு’ மிகக் கச்சிதமாக பொருந்தி அமைந்ததை என்னவென்று சொல்வது! அவை ஆழம் நேர்த்தி பொருள் அனுபவம் எல்லாம் குழைத்து ஊட்டிய சொற் சத்து!

இந்த மனுஷாள் நமக்கு ஒரு வரம்! இவரை குருவாகப் பெற்றவர்கள் பாக்கிய சாலிகள்! இந்த மனுஷாள் வாழும் நாளில் நாமும் வாழ்கிறோம் என்பதும் அவரின் கருத்துக்களை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டியிருக்கிறது என்பதும் நம் அதிஷ்டம்!

வழமை போல மீண்டும் மதிய உணவு! ஆனால் இன்று ஏனோ அதிக பதார்த்தங்களோடு கல்யாண சமையல் சாதம்! நேற்றயைப் போலல்ல....

மாலை நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு ஆரம்பம். ‘தீரஜடாயு’ என்ற நாடகத்தை ’கலை தெரி அரங்கம்’ என்ற தலைப்பின் கீழ் கம்பன் வகுப்பு மாணவர்கள் நடாத்திக் காட்டினார்கள். அபூர்வமான தலைப்பை எடுத்து அதற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய கச்சித நிகழ்வில் அதுவும் ஒன்று. சிறந்த பயிற்சியும் ஒழுங்கும் நேர்த்தியும் ஒவ்வொரு சிறு விடயத்திலும் துலங்கியது. ஜடாயுவுக்கு நடித்த பெண் என்னை பெரிதும் கவர்ந்தாள்.

இறுதி நிகழ்வாக இடம் பெற்றது வழக்காடு மன்றம். அங்கு குற்றவாளிக் கூண்டில் கும்பகர்ணன் நிறுத்தப்பட்டிருந்தான். வழமைபோல அனுபவஸ்தர்களான கம்பன் கழகத்துப் பேச்சாளர்கள் இராதா.மாது, திருநந்தகுமார், பிரசாந்தன் மற்றும் குமாரதாசன் அவர்கள் வாதிட நீதியர் ஆயத்தில் ஜெயராஜ் அவர்களும் ம. தனபாலசிங்கம், பூ. ஞானாகரன் ஆகியோரும் வீற்றிருந்தனர்.

தேர்ச்சி பெற்ற பேச்சாளர்களாயினும் அவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள்; புதிது புதிதாய் அறிகிறார்கள்; அறிபவற்றை அதன் அம்சம் குலையாமல் அதன் அத்தனை ருசியோடும் அதனை மக்களுக்கு அளிக்கிறார்கள்;  அந்தத் தேடலையும் அறிதலையும் அதனை மற்றவர்களுடன் பகிரும் போதும் அறிகிறபோதும் நம் நேரமும் இருப்பும் அர்த்தமுடையதாகிறது.

அது பார்வையாளர்களின் நேரத்தையும் இருப்பையும் மதிக்கும் குணாம்சமுமாகும். அதனை இந்த தேர்ச்சி பெற்ற பேச்சாளர்களிடம் காணமுடிந்தது.

கூடவே, நிகழ்ச்சிகள் யாவும் குறிப்பாக மாலை நிகழ்ச்சிகள் யாவும்  மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடும் இலக்கியப் பிரியர்களாலும் நிறைந்திருந்தமை மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தர அடுத்தது எப்பவரும் என்ற எதிர்பார்ப்பைத் தந்து நிறைவு பெற்றது 2019 கம்பன் விழா!

இலைமறை கனியாக இருந்த சில கம்ப பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி ஓரளவு இலக்கிய தேர்ச்சி பெற்றவர்களையும் ‘கற்றுச் செல்ல’ வாய்ப்புகளைத் தந்த வகையில் கம்பன் கழகத்தாருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் யாவும் முழு மனதோடு உரியதாகுக!

நிலைபெறுமாறு எண்ணுதியேல்

நெஞ்சே நீ வா! தமிழ் பருக! பண்பாடு பழக!!

என்றழைத்து, தமிழ் தந்த அவுஸ்திரேலிய கம்பன் கழக அமைப்பாளர் திரு. ஜெயராம்,

வாழ்க! நீ, எம்மான்!!


2 comments:

  1. அன்புடை மணிமேகலா,

    கரும்பின் சாறுதான் உங்கள் கன்னித் தமிழ் வர்ணனை.
    கம்பன் விழா கண்டவர் எண்ணி எண்ணி இறுமாந்திடவும்,
    காணாதவர் ஏங்கித் தவிக்கவும் வைத்தன வரிகள்.
    என் கவிதைக்கு நீங்கள் தந்த பாராட்டு, என்னை இன்னும்
    தமிழ் நூற்க, நெஞ்சில் நிலைத்து நின்று எப்போதும் தூண்டும்.
    அட்சய பாத்திரத்தில் மணிமேகலை தரும் அமுதத் தமிழ்
    அள்ள அள்ளக் குறைவதில்லை என்பதை
    உணர்ந்து சிலிர்க்கிறேன் நான். உங்களுக்கும்,
    அமைப்பாளர் ஜெயராமனுக்கும்,அவர்க்குத் துணை நிற்கும்
    அத்தனை பேருக்கும், திரண்டு வந்து பெருமை தந்த
    அவையோர்க்கும், என் தலை தாழ்ந்த வணக்கமும்,
    பாராட்டும், நெஞ்சார்ந்த நன்றியும் கூறிட விழைகிறேன்.

    அன்பன்
    எ. இரவிச்சந்திரன்
    பிரிஸ்பேன்

    ReplyDelete
  2. அன்ப,
    ஈன்ற பொழுதிலும் பெரிதுவந்தேன்.நன்றி.

    ’மடையெங்கும் மணிக்குப்பை
    வயலெங்கும் கயல்வெள்ளம்
    புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
    புறமெங்கும் மகப்பொலிவு
    கிடையெங்கும் கலைச்சூழல்
    கிளர்வெங்கும் முரலளிகள்
    இடையெங்கும் முனிவர்குழாம்
    எயிலெங்கும் பயிலெழிலி’.

    என்பார் ஞானசம்பந்தரின் ஊர் குறித்து சொல்ல வந்த சேக்கிழார்.

    அந்த இரு தினங்களும் அவ்வாறான ஒரு சூழலை உங்கள் எல்லோராலும் அனுபவிக்க வாய்த்தது!

    ReplyDelete