Wednesday, May 6, 2020

வண்ணாத்திப் பூச்சி மனநிலைகள்....

இன்று ஒரு வண்ணாத்திப் பூச்சி மனநிலை.....
அது ஒரு மலரில் இல்லாமல் தத்தித் தத்தி பறந்து பறந்து வண்ண வண்ணப் பூக்களில் அதன் நிறங்களில் மயங்கி திரியும் ஒரு மனநிலை போல்வது அது....

தானே கொண்டிருக்கும் வண்ணங்களோடு வண்ணப் பூக்களில் அது குந்திக் குந்தி பறக்கும் இந்த பூலோகத்தில் தான் எத்தனை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன...

நல்ல காலநிலையும் தான் இன்றைக்கு...20களில் சூரியன். ஆனால் வின்ரர் காலத்து குளிர்மை காற்றில்....

இந்த தேசம் கங்காரு குவாலாக்களுக்கு மாத்திரமல்ல;
இந்த தேசம் றோசாப்பூக்களுக்குரிய தேசமும் தான்....

நின்மதியான தேசமும் கூட.

அரசாங்கம் தன் பிரஜைகளில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறது என்பதை இந்த கொரோனா வைரஸ் காலத்தில் நன்றாகவே உணர முடிந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய கவிஞர் Pansy Rose Napaljaree அவர்கள் எழுதி ஆழியாள் மொழிபெயர்த்த ‘கங்காரு’ என்ற தலைப்பிலான கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. மிகத் தற்செயல் நிகழ்ச்சியாகத் தான் இக்கவிதையை இன்று வாசிக்க நேர்ந்தது.

அக்கவிதை கங்காரு பற்றிச் சொன்னாலும், அது கங்காரு தேசத்திற்குரிய மக்களின் மனநிலைக்கும் பொருந்திப்போவது மொழிபெயர்ப்பில் சிதையாமல் வந்திருப்பது மொழிபெயர்ப்புச் சிறப்பும் தான்.

கங்காரு

சுணையிலிருந்து
நீர் மெல்ல சலசலத்து ஓடுகிறது
மலைகளின் அடிவாரத்தை நோக்கி.

சிவந்த மலர்கள் வளரும்
வாசனையை முகர்ந்த வண்ணம்
கிளையொன்றில் கூடி அமர்ந்திருக்கின்றன
பறவைகள்.

துள்ளித் திரிந்ததில் களைப்புற்ற கங்காரு
ஒரு நிழலில் கால்நீட்டிச் சாய்ந்து கிடக்கிறது
நீரின் சலசலப்பைக் கவனித்தபடி.
தண்ணீர் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

மிகச் சந்தோஷமாய் இருக்கிறது அது
குறிவைத்து ஈட்டி எறிய மனிதர் எவரும்
அங்கில்லை.
ஏகாந்தத்தில்,
சிவந்த மலர்களின் மணத்தை மோந்து
அனுபவித்து மிதந்து
களைப்பு மிக மேவ
அது நித்திரைக்குப் போகிறது மெல்ல.

( நன்றி: கருநாவு; ஆழியாழ்;கன்பரா; 2013.மாற்று வெளியீடு )

சந்தேகமே இல்லை. இது நின்மதியான தேசம்.
பூக்கள் பூக்கும் பருவநிலை.

அதனால் தான் பூக்களும் இத்தனை அழகோ? அத்தனை வகையோ? அதனால் தான் அவுஸ்திரேலியாவை Garden country என்கிறார்களோ என்னவோ...

அனேகமாக எல்லா வீடுகளும் பூந்தோட்டத்தைக் கொண்டு இருக்கிறன. அரசாங்கம் எப்படி மக்களைப் பராமரிக்கிறதோ அது மாதிரி மக்களும் பூந்தோட்டங்களை  மினைக்கெட்டு ஒரு வித அக்கறையோடு; ஆசையோடு பராமரிக்கிறார்கள். அது ஒரு கொண்டாட்ட மனநிலையை அவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்கிறது.

பூ லோகம் இது......
எத்தனை நிறம்.....
எத்தனை வகை....
என்ன ஒரு வாசம்....

சுமார் இரு ( 8.6.2018)  வருடங்களின் முன் நான் தற்செயலாய் நடந்து போன ஒரு பாதையோரத்து வீடொன்றில் பூத்திருந்த றோசாப்பூவை பல காலமாக என் what app ல் Profile Picture ராக வைத்திருந்தேன். அத்தனை கொள்ளை அழகு அந்தப் பூ. இன்றுவரை போனில் memory  கூடி பலவற்றை அழிக்க வேண்டி வந்தாலும் அழிக்காமல் வைத்திருக்கும் அற்புத மலர் அது.

பாதையோரத்து றோசா  8.6.2018
அற்புதமான; அபூர்வ சிருஷ்டி.

பின்பொரு போது அவ்வழியே போன போது அந்த மலர் இருந்த வீட்டையும் செடியையும் காணமுடியாமை ஒரு வித வருத்தத்தையும் பூவை படமாக வைத்திருப்பதில் ஒரு வித மகிழ்ச்சியையும் கலந்தனுபவிக்க நேரிட்டது.

கடந்த இந்த வருட தொடக்கத்தில் Flower Power என்ற பூங்கன்றுகள் மற்றும் பூந்தோட்டம் சம்பந்தமான பொருட்கள் விற்கின்ற கடைக்குப் போன போது, இந்தப் பூவின் ஞாபகார்த்தமாக ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ கணக்காக கிட்டத்தட்ட அது மாதிரியான சாயல் கொண்ட றோசாப் பூங்கன்று ஒன்றை வாங்கி வந்து வைத்திருக்கிறேன். அது வஞ்சகம் இல்லாமல் அழகாகவே பூக்கிறது. என்றாலும் அது மாதிரி வருமா... என்றொரு ஏக்கம் எனக்குள்ளே எப்போதும் இருந்த வண்ணமே இருக்கிறது. பாவம் என் வீட்டு றோசாவுக்கு இப்படி நான் துரோகம் இழைக்கலாகாது தான் எனினும் நான் என்செய்ய? பாழும் மனசு கேக்குதில்லையே....
என்வீட்டு றோசா 23.2.2020


இப்போதெல்லாம் அந்தப் பாதையால் நடந்து போகக் கூடிய தூரத்தில் வேலை அமைந்து போனது ஒரு தற்செயலான ஆசீர்வாதம்; அந்தப் பூ, தங்களுக்கான தேவதைகளிடம் கேட்டுக் கொண்ட விண்ணப்பமோ என்னவோ...

மனித அவசரங்கள் கடைசி நிமிடத்தில் காரில் போய் தொலைக்கவேண்டிய சந்தர்ப்பத்தையே எனக்கு - எனக்கு திட்டமிடும் பாக்கியம் அளிக்கப் படாத சாபத்தால் - எப்பொழுதுமே வாய்த்து விடுகிறது.

இப்படி எத்தனை சந்தர்ப்பங்களை தவற விடுகிறோம் வாழ்க்கையில்....

பத்து நிமிடம் நடக்கிற; புதிய காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் உடல் நிறைய ஏந்திக்கொள்ளுகிற; ஓர் புதிய உற்சாக மனநிலையைத் தருகிற; பூமியை வாகனத்தால் அசுத்தப் படுத்தாத; - தவற விடப்படக் கூடாத தருணங்கள்...

இன்று அந்த அதிஷ்டம் வாய்த்தது;

இன்றய சூரியன் புன்சிரிப்பு நிறைந்த குளிர் புன்னகையோடு வெளிவந்ததாலும் - முதல் சொன்னது போல ஒரு வண்ணாத்திப் பூச்சி மனநிலையை சில கவிதைகள் எனக்கு அளித்து, எனக்குள் இருந்த சிறுமியை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி விட்டதாலும், நடந்து போய் வருவதாக ஒரு தீர்மானம்.

மீண்டும் அதே பாதைவழி.

பாதை எங்கிலும் பல வகை மலர்கூட்டம்.

என்ன ஆச்சரியம்! எதிர்பாராத விதமாக அந்த மலர்செடி வளர்ந்து மீண்டும் பூத்திருந்தது. அந்த வீட்டுக்காரர் முன்னர் அதனைக் கத்தரித்து விட்டிருக்க வேண்டும். புதிதாகத் துளிர்விட்டு இந்த இலையுதிர்கால பருவநிலையில் செழித்து வளர்ந்திருந்தது அச்செடி.

அவைகளை மீண்டும் மனசாலும் கமறாவாலும் கைப்பற்றிக் கொண்டு வந்த இந்த நாளை இங்கு பதிவு செய்து விடும் ஒரு எளிய பிரயத்தனம் தான் இது!





அதே பாதையோரத்து றோசாச் செடி பூத்தமலர் 6.5.2020


வேறென்ன எனக்குள் இருக்கும் உசுப்பி விடப்பட்ட சிறுமியின் சின்னப் புன்னகையும் தான்.

மலரைக் கண்டடைந்ததில் அதன் செடித்தாய்க்கு ஹலோ சொன்னதில் தொடங்கி இருக்கிறது இன்றய காலை....

2 comments:

  1. கங்காரு தேசத்துக்
    கவிதையுடன்
    கண்கவர் ரோசாக்களின்
    காட்சிகளும் நன்றாகவே உள்ளது

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி புத்தன். :)

    ReplyDelete