Thursday, December 30, 2021

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; என் சிற்றறிவுக்கு எட்டிய தீர்வு - 3 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 2 - பிரச்சினையை இனம் காணுதல்

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 1 - பிரச்சினையைக் கண்டறிதல்

( இந்தப் பதிவு முன் வந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாகும். அவற்றை வாசிப்பதற்கு மேலே உள்ள தலைப்பினை அழுத்தவும்: நன்றி ) 


புலம்பெயர்ந்து வாழும் சமூகம் ஒன்றில் நற்பண்பாட்டின் மூலக் கூறுகளை

சமயம் சொல்லத் தவறி விட்ட ஒன்றை;

பாடசாலைகள் தீர்த்து வைக்க முடியாத ஒன்றை;

குடும்பங்களால் தீர்வு காணப்பட முடியாத ஒன்றை;

சமூகமாகச் சேர்ந்து தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருக்கிறது. எவ்வாறு அறக்கருத்துக்களை பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த வழிவகைகளில் சொல்லிக் கொடுக்கலாம்? 

அதற்குப் பல வழிவகைகள் இருக்கக் கூடும். எனக்குத் தெரிந்த வழிவகைகளில் ஒன்றை மட்டும் சில சான்றாதாரங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களையும் என்னோடு தயவு கூர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். அவை என் பார்வைப் புலத்தை விசாலிக்கப் பெரிதும் உதவும் என்பது என் நம்பிக்கை.

நாங்கள் சமூகமாக இந்திய இலங்கைத் தமிழர்கள் இணைந்து ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? 

இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும் இடமாக;

கலைகள் ( இசை, நடனம், வாத்திய கலைகள்) இலவசமாகக் கற்றுக் கொடுக்கப் படும் இடமாக;

இலக்கியம் அதன் சுவை அதன் பாடுபொருளை சுவையோடு சொல்லிக் கொடுக்கும் ஓர் இடமாக,

ஓரிடமும்; 

கூடவே அங்கு நம் பாரம்பரியப் பொருட்கள் - இன்று பாவனையில் இல்லாத பொருட்கள் - பார்வைக்கு வைக்கப்பட்டு - எத்தகைய ஒரு வாழ்வு முறையை நம் மூதாதையர் பின்பற்றினார்கள்; எப்பேற்பட்ட ஆழமான பண்பாட்டு வாழ்க்கைமுறை வேரில் இருந்து நாம் வந்திருக்கிறோம்; எப்படி எல்லாம் அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதை பார்க்கும் விதமாக ஒரு மியூசியமும் உள்ளதாக ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ - 

இதற்கு அவ் அவ் துறையில் துறைபோகிய சமூகசேவை மனப்பாண்மை கொண்ட குருமார் அவ் அவ் கலைகளை இலவசமாக பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சினேக மனப்பாண்மையோடு  கற்றுத்தர முன் வருவார்களாக இருந்தால் அது எத்தகையதான சமூகத்தை உருவாக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கவே மனதுக்கு பூரண இதத்தைத் தருவதாக  இருக்கிறது!!

சுமார் 5,6 வருடங்களுக்கு முன்னால் ஒரு சாதாரண, சமான்ய தோற்றம் கொண்ட ஒரு மனிதரை என் வேலை நாளொன்றில் சந்தித்தேன். கூச்ச சுபாவத்தோடு தயங்கித் தயங்கி என்னை அணுகினார். அவரின் பெயர் சிவசோதி. யாழ்ப்பானத்தில் உள்ள ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டை, கொட்டைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர், போர் சூழலால் துரத்துண்டு தமிழ் நாட்டில் சிலகாலங்கள் வசித்து, அதன் பின்னால் சிட்னிக்குப் புலம்பெயர்ந்தவர். இலங்கையில் இருந்த போது அச்சகத்தில் பணியாற்றியதாகக் கூறினார். அவர் கடந்த 17.12.21 அன்று தனது பிறந்ததினத்தைக் கொண்டாடியதோடு அவரின் கொண்டாட்டப் படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதனை உங்களோடும் அவசியம் பகிர்ந்து கொள்வேன்.

சிவசோதி ஐயா தன் மனைவியோடு

சிவசோதி ஐயா தன் பேரப்பிள்ளைகளோடு

அவரைப் பற்றி நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன் வாழ்நாளில் சேகரித்த சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். ஊரை விட்டுப் புலம் பெயரும் போதும்; பின்நாளில் தமிழ் நாட்டை விட்டுப் புலம் பெயரும் போதும்; அவர் தன்னோடு கொண்டுவந்த பொருட்கள் என்னவென்றால் பழங்கால முத்திரைகள், நாணயங்கள், முதல்நாள் தபால் உறைகள், அரசால் வெளியிடப்பட்ட நாட்டுத்தலைவர்கள் குறித்த சிற்றேடுகள் போன்றவை தான்.



அரிதாக அச்சிடப்பட்ட 1 ரூபாய் தாள் 1963.6.5.
1 ரூபாய் தாளின் பின் புறம்


1974ம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்து இன்று காணமுடியாத 10 ரூபாய் நோட்டு


அந்த 10 ரூபாய் நோட்டின் பின் புறம்

சுமார் 1974ம் ஆண்டளவில் புழக்கத்தில் இருந்த 2 ரூபாய் தாள்

2 ரூபாய் தாளின் பின் புறம்


பின்நாளில் வந்த 10 ரூபாய் நாணயம்



இவைகள் எல்லாம் பண்பாட்டின் கருவூலங்கள்; இன்று பார்வைக்குக் கிடைக்கப் பெறாதவை; அவைகளின் சில ஒளிப்படங்களைய் உங்கள்  பார்வைக்காகத் தருகிறேன். இது போல பல கலைப்பொக்கிஷங்கள் அவரிடம் உள்ளன.

இந்த இந்திய நாணயங்களைப் பாருங்கள்.



இந்த இந்திய நாணயங்களில் 5ம் ஜோர்ஜ் மன்னர் காலம், 1 பைசா, 1 அனா,2,3,5 பைசாக்கள், கால் அனா,1/2 ரூபா நாணயங்கள் இதில் பார்வைக்கு உள்ளன. இவை போல பல உள்ளன. ( எனக்கு இந்த பைசா, அனா, ரூபாய்களுக்கான வேறுபாடுகள் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன்.) 
இவைகளோடு கூடவே புராதன தலைவர்களின் தபால் தலைகள், 1st day cover என்று சொல்லப்படும் தலைவர்களின் படம் பொறித்த தபால் உறைகள் மற்றும் அவர்களைப்பற்றி தபாலகம் வெளியிட்டுள்ள சுருக்கப் பதிவுகள் என்று ஏரளமான வரலாற்றுக் குறிப்புகள் சிவசோதி ஐயா வழியாக என் வசம் தற்போது உள்ளன.

அவை சரியான இடத்தில் வாழ்நாள் பூராக சேகரித்து அதனைப் பொக்கிஷமாகக் காத்து வந்த சிவசோதி ஐயா அவர்களின் பெயரோடு நம் எதிர்கால சந்ததிக்குப் போய் சேர வேண்டும் என்பது என் அவா. ஒரு பெரும் கனவு. 

காலங்கள் கடக்கின்றன. வருடம் ஒன்று போக வயதும் ஒன்று கூடுகிறது. மலையில் ஏறிய காலம் கடந்து, நாம் இப்போது மலையில் இருந்து இறங்கும் வாழ்க்கைக் காலத்தில் இருக்கிறோம். இருக்கும் போது பிடித்தவற்றைச் செய்து விட வேண்டும் என்றும்; அதனை காலம் தாழ்த்தாது இப்போதே செய்து விட வேண்டும் என்றும் நுணுயிர் கிருமிகளும் வாழ்க்கைப் பாடங்களும்; வாழ்வியல்புகளும் நமக்கு உணர்த்திய வண்ணமாக உள்ளன. நாம் அதனை உதாசீனம் செய்து விடக் கூடாது என்று எஞ்சி இருக்கும் வாழ்க்கை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது...

 நான் ஒரு வரலாற்று ஆர்வலர் என்பதை எப்படியோ அறிந்து கொண்டதாலோ என்னவோ இவைகளின் சொந்தக்காரர் இவற்றை மகிழ்வோடு என்னிடம் தந்து வைத்திருக்கிறார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் பூதம் பொக்கிஷத்தைப் காப்பதைப் போல இவற்றைக் காத்து, காத்து வருகிறேன்.

இதனால் என்ன பயன்? இவை எல்லாம் சமூகத்துக்குப் பயன்படும் போது தானே அது எல்லோருக்கும் பயனுடயதாகும்!!

கூடவே என்னிடமும் சில மூதாதையர் பயன் படுத்திய பொருட்களை பெரும் முயற்சி எடுத்து தாயகம் போன ஒரு விடுமுறை நாளில் உருக்குப் பட்டறைகளில் இருந்து மீட்டெடுத்து இங்கு கொண்டு வந்திருக்கிறேன். 

இவைகளையும் கூட உங்கள் பார்வைக்கு தருகிறேன்.












இவைகள் எல்லாவற்றையும் கூடவே ஒவ்வொரு ஈழ, தமிழகத் தமிழர்களும் ஊருக்குப் போய் வரும் போது கண்டெடுத்து வரும் அரும் பொக்கிஷங்களையும் ஓரிடத்தில் - அதாவது இந்த - தமிழர் கலாசார இல்லத்தில் - பார்வைக்கு வைத்து, மாணவர்களின் பார்வைக்கு வைத்தால் அது சமூகத்தில் கலைவழி கற்றலினாலும் பார்வை வழி புரிதலினாலும் அறிதலின் வழி ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வராதா?

அதற்கு நாங்கள் முயற்சிக்கக் கூடாதா?

இந்தப் புது வருடத்தில் அதற்கு ஒரு வழி கிட்டாதா?

......................

எல்லோருக்கும் இன்னும் இரு நாளில் மலர இருக்கின்ற 2022 புதுவருட நல்வாழ்த்துக்கள்!

காலம் காயங்களை ஆற்றி எல்லோருக்கும் நல்வழி காட்டட்டும்!

மனிதம் மலரட்டும்!!

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; இனம் காணல் - 2 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையை கண்டறிதல் - 1 -

( முதல் பகுதியை வாசிக்க மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.)

சரி, அப்படி என்றால் அதனை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க என்னதான் செய்ய வேண்டும்? 

நாம் பாடசாலைகளை நிறுவி இருக்கிறோம்; கோயில்களைக் கட்டி இருக்கிறோம்; நடை, உடை பாவனைகள், உணவு முறைகள், பண்டிகைகள் எல்லாவற்றையும் முடிந்தவரை பின்பற்றுகிறோம். இனி என்னதான் செய்வது என்று கேட்பது காதில் ஒலிக்கிறது.

குடும்ப அலகில் இருக்கும் நாம்  ஒரு குடும்பச் சூழலில் ஒரு முக்கியமான வேலை ஒன்றைச் செய்ய நாம் தவறிவிட்டோமோ என்று எனக்குத் தோன்றுகிறது...

அது, அறத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பது தான். 

அறத்தோடு நின்ற வாழ்க்கை நமது. சங்க காலத்து காதல் வாழ்வில் இருந்தே நமக்கு அதற்கான ஆழ வேர்கள் விரவி விருட்சமாகி நம் பண்பாட்டில் தளைத்து நிற்கிறது. இன்றய தமிழில் எளிமையாகச் சொல்வதாக இருந்தால் ‘மனச்சாட்சியோடு இருத்தல்’, மனிதத்தன்மையோடிருத்தல்  என்று இலகுவாக அதனைத் தெளிவு படுத்தி விடலாம். 

இதனை தமிழ் பாடசாலைகள் கற்றுக் கொடுக்கவில்லை; கோயில்கள் கற்றுக் கொடுக்கவில்லை; பண்டிகைகளோ கொண்டாட்டங்களோ கற்றுக் கொடுக்கவில்லை; கூடவே குடும்பங்களும் அதனைச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. 

இது கற்றுக் கொடுத்து வருவதா என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆம்; இங்கு அதனை நாம் கற்றுக் கொடுத்துத் தான் ஆகவேண்டும். ஆங்கிலப் பாடசாலைகளில் அதன் கல்வி முறைகளில் தனி மனித சுதந்திரம்; தனிமனித சிந்தனை; முயற்சி அதன் வழி பெறப்படும் வெற்றி என்பது முதன்மைப் படுத்தப் படுமிடத்து; இல்லங்களில் பணத்தின் வழி பொருட்கள் நிறைந்து அன்பு பற்றாக்குறையாகிப் போகுமிடத்து; இரு பண்பாட்டுக்குள் வாழும் ஒரு குழந்தை அறத்தைக் கற்றுக் கொள்ளுதல் எங்ஙனம்? சுயநலம் மேலோங்கும் சாத்தியம் தானே அநேகம்....விட்டுக் கொடுக்க வேண்டி இருக்காது; சகித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது; ஒரு பொருளின் அருமை புரியாது; அன்பு என்பதன் வலிமையும் அதன் தார்ப்பரியமும் புரிந்து கொள்ளப்படாததாக ஆகி போயிருக்க தன்னை மையப்படுத்தியதாக ஒரு குழந்தை வளரத்தானே சாத்தியம் அதிகம்...

இவற்றுக்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்வது? சமூகமாக நாம் இணைந்து இதற்கு என்ன செய்யலாம் என்பது இன்று நமக்கு முன்னால் உள்ள சவால்.

பண்பாட்டின் வேர்களை இன்னும் ஆழமாகச் சொல்ல கல்விச்சாலைகளை விட வேறென்ன வழிவகைகள் உள்ளன? கவர்ச்சியாக; விரும்பும் படியாக; அவர்களின் ஆர்வத்தை ஊட்டும் படியாக;  பார்வைப் புலன் வழியாக பார்த்து; ஸ்பரிசித்து; உணர்ந்து பார்த்து, இளம் சமூகத்துக்கு ஒரு கருத்தினைக் கொண்டு செல்ல இருக்கும் வேறு வழி வகைகள் எனென்ன?

இது தான் நமக்கு முன்னால் இன்று நமக்குள்ள கேள்வி.

தொடரும்.....

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையைக் கண்டறிதல் - 1 -

 வருடம் ஒன்று நிறைவடையப் போகிறது. 2021 போய் 2022 வர இருக்கிறது.

கடந்த இருவருடங்கள் கொரோனா பேரிடர் பல வாழ்க்கைத் தத்துவங்களை நமக்குச் சொல்லி வருகிறது.  நாடுகள் ஒற்றுமையாக இணைந்து இந்த வைரஸைத் துரத்தினாலொழிய அதனை இப்போதைக்கு இல்லாது செய்ய முடியாது என்பதை அரசியல் வாதிகளுக்கும் அவர்கள் ஆழும் அரசுகளுக்கும் அது அடித்து அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனை செவிசாய்க்க எந்த வல்லரசு நாடுகளும் தயாராக இல்லை. ஆபிரிக்காவின் அழுகுரலை; தமக்கு முதலாவது தடுப்பூசியே போதுமான அளவு கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதன் ஈனக்குரலை யாரும் செவிமடுப்பதாக இல்லை. நாமோ போதுமான அளவு தடுப்பு ஊசியினை போட்டுவிட்டுக், கையிருப்பிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது ஊசிக்கும் நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் வளங்களைச் சுரண்டி எடுத்து வந்து விட்டு அவர்களை ஏழைகளாக வைத்திருந்தபடியே அவர்கள் மீது எந்த இரக்கமோ மனசாட்சியோ இல்லாது ஒதுக்கி வைத்திருக்கிறது முதலாம் உலக நாடுகள்; இன்று வரை.  அவர்கள் மீதான குறைந்த பட்ச இரக்கத்தை; மனிதாபிமானத்தை; நீதியை தர மறுக்கிறது அது!  

போதாததற்கு மூன்றாவது ’ஒமிக்குரோன்’ வைரஸ் ஆபிரிக்காவில் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லி அவர்களுடனான போக்குவரத்து தொடர்புகளை முற்றாகத் துண்டிக்கிறது ஏனைய நாடுகள்.... பாவம் ஆபிரிக்கா....நாங்கள் எப்போது இயற்கையிடம் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறோம்... எப்போது சுயநல சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்று ஒற்றுமையாக எல்லோரையும் அரவணைத்துப் போகப் போகிறோம்... தெரியவில்லை.

சரி, நாம் இதற்கு என்ன செய்யலாம்? அதுவும் தெரியவில்லை...கிடைத்திருக்கிற இந்த வீட்டில் சும்மா இருக்கிற தன்மை அடுத்த வருடமும் நீடிக்கப் போகும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. 

இந்த lockdawn காலப்பகுதி கொஞ்சம் படிப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் எதிர்கால பார்வை நோக்கி என்னைத் திருப்பியது.

இது ஒரு பின்னணி.... இனி விடயத்துக்கு வருகிறேன்,

.......................

சிலப்பதிகாரத்தில் ஓரிடம்,

கண்ணகி பாண்டியன் வாயிலில் வீராவேசத்தோடும் கோபம் நிறைந்த துக்கத்தோடும் அறச் சீற்றத்தோடும் வாசலுக்கு வருகிறாள். காவலன் அவளை மறித்து நீ யார் என்று கேட்கிறான். அதற்கு அவள்,

’தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று சொல்லி விட்டு,

’எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகார்என் பதியே’ 

என்று ஆரம்பிக்கிறாள். எது என் நாடு; எது என் தாயகம் என்பது அவள் சொல்லும் முதல் கூறு. அதிலும் ஓர் அடைமொழி வைக்கிறாள். எத்தகையது என் நாடு தெரியுமா? அழும் மாட்டுக்கும் நீதி வளங்கிய அறம் கொண்ட நாடு அது என்கிறாள்.அதன் பிறகு தான்,

’அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை ஆகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி’

என்கிறாள். அதாவது, அந்த ஊரில் உள்ள பெருங்குடிமக்களான வணிகனான மாசாத்துவானின் மகனை மணந்து ஊழ்வினை துரத்தியதால் உன் நகருக்கு வந்து சிலம்பை விற்கப் போனதால் கொலைக்களப்பட்ட கோவலனின் மனைவி நான் என்கிறாள்.

இந்தத் தன்மை தமிழ் மொழிப் பண்பாட்டில் மட்டுமல்லாது சமஸ்கிருத மொழிப் பண்பாட்டிலும் இடம்பெற்றே வந்திருக்கிறது. பிராமணப் புதல்வனான அறிவில் சிறந்த கவி புனையும் ஆற்றலும் நடிப்பு வல்லமையும் கொண்ட அஷ்வகோஷ் என்பான்  பிரபா என்கிற கிரேக்கப் பெண்ணைக் காதலித்து, கிரேக்க நாடக உத்திகளை பிராகிருத மொழிக்கு ( சமஸ்கிருதத்திற்கு முற்பட்ட மொழி வழக்கு) கொண்டுவந்து இந்தியாவின் முதல் நாடக ஆசிரியனாக வரலாற்றில் புகழப்படும் (ஊர்வசி வியோகம்’ என்பது பிராகிருத சமஸ்கிருத கலப்போடு எழுதப்பட்ட முதல் நாடகம்) அஷ்வகோஷ் பிராமணீய தத்துவங்களை எல்லாம் கற்றுத்தேர்ந்து அதன் சாதி குறித்த  பாதகங்களை உணர்ந்து பின்நாளில் புத்த தத்துவங்களால் கவரப்பட்டு பெளத்தனான, அறிவாற்றல் மிக்கவனான  அஷ்வகோஷ் தன் சிருஷ்டிகளில் எல்லாம் முடிவில் தன் கையொப்பத்தை இடும் போது, “ சாகேதத்தைச் சேர்ந்த, ஆர்ய சுவர்ணாட்சியின் புதல்வன் அஷ்வகோஷ் எழுதியது” என்று எழுதி தன் பெயரோடு கூட தான் பிறந்த சாகேதத்திற்கும் பெற்றெடுத்த தாய் சுவர்னாட்சிக்கும் சிரஞ்சீவித்தன்மையை ஏற்படுத்திவிட்டான் என்று கூறப்படுகிறது. (வொல்காவில் இருந்து கங்கை வரை - பக் 318 - 345 )

இந்தியப் பெரும் பரப்பில் வரலாற்றால் அறியப்படும் இவர்கள் இரண்டு பேரும் இரு பெரும் பண்பாடுகளின் முகவர்கள். அதாவது கண்ணகியும் அஷ்வகோஷும் தங்களை முன்னிலைப் படுத்துவதற்கு முன்னர் தாம் பிறந்த நாட்டை முன்னிலைப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

தாயகம்; நாம் பிறந்த பொன்னாடு என்பதற்கு அத்துணை மதிப்பும் மரியாதையும் பற்றும் பாசமும் வரலாற்றினால் அறியப்படும் அளவுக்கு மனித மனங்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது.

அதற்கு புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடி வந்திருக்கும் நாம் என்ன விதிவிலக்குகளா என்ன!!

காலமாற்றத்துக்குள்ளாகி எண்ணிம (டிஜிட்டல்) உலகில் அறிவினாலும் போரினாலும் இன்னபிற காரணங்களாலும் புதிய நாட்டொன்றுக்கு வந்திருக்கிற நாம், அடுத்த இரண்டு சந்ததிகளை புதிய தாயகத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிற நாம், நம் தாயக சிந்தனையை அதன் பண்பாடு பாரம்பரிய நம்பிக்கைகளை, வாழ்க்கை முறைகளை எப்படி அடுத்த சந்ததிக்கு கொடுக்கலாம் என்பது பெரும் சவாலாகி வரும் இந் நாட்களில்; பிள்ளைகள் பல புதிய பண்பாட்டு மொழி பாரம்பரியங்களைக் கொண்டுள்ள ஏனையவர்களோடு பழகும் வாய்ப்பும் கலப்பு மணங்களும் கூடிவரும் இந் நாளில், இதெல்லாம் தேவையா என்று கேட்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

உண்மைதான். தேவையா தேவை இல்லையா என்ற கேள்விக்கப்பால் இருவேறு பண்பாட்டுக்குள் திருமணம் வழியாக இணையும் உள்ளங்கள் எந்த இடத்தில் தம் சமநிலை புள்ளியை வைத்திருக்கப் போகிறார்கள் என்பது திருமணத்துக்குப் பின்பான சவால்களுக்கப்பால் இவர்கள் கண்டடைய வேண்டி இருக்கிற மேலதிக சவால்.

இதனைச் சவால் என்று பார்க்காமல் அது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற தனி வாய்ப்பு என்றும் கருதலாம். அவர்களின் முன்னே ஒரு பிரச்சினையைத் தீர்க்க இரு பண்பாடு சொல்லிக் கொடுத்த  வழிமுறைகள் முன்னால் இருக்கின்றன. அது ஒரு பெரிய வரப் பிரசாதம் தான்.

ஆனால், அதனைத் தெரிவதற்கு அவ்வப் பண்பாடுகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்தப் புதிய பண்பாட்டுக்குள்ளும் நாம் நிலை பெற்று நிமிருவதற்கிடையில் எண்ணிமப்புரட்சி நடந்து தொழில்நுட்பமும் நம்மை கட்டுப்படுத்தி வரும் சூழலில் இந்த புதிய சந்ததியினரின்  நிலை என்ன?

அதற்கு நாம் எத்தகைய வழிகாட்டுதல்களை வழிகளை அவர்களுக்குக் காட்டி இருக்கிறோம் என்பது தான் நமக்கு முன்னால் இருக்கின்ற பெரும் கேள்வி. ஆம் கோயில்கள் கட்டி இருக்கிறோம், மொழிப் பாடசாலைகளை உருவாக்கி இருக்கிறோம், அறிவகம் உண்டு, சமூக வானொலிகள் உண்டு, பண்பாடு சொல்லிக் கொடுத்த உணவு, உடை, கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் சில பல குறை நிறைகளோடு. அது மட்டும் அவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளப் போதுமா?

இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் தோற்றங்களின் வழியாக; பார்வைப் புலன்களின் வழியாகவே பலவற்றையும் உள்வாங்குகிறார்கள். கற்றுக் கொடுத்தலும் மொழியும் அவர்களை சலிப்படையச் செய்வனவாக உள்ளன. பொதுவாகவே விரைவாக ஒன்றில் சலிப்படைந்து விடுகிற தன்மை இளைய சந்ததியிடம் பரவலாகக் காணப்படுகிறது. 

நாம் சந்ததியினர் ஒன்றினைப் பெறக் கடினமாகப் போராட வேண்டி இருந்தது. அதன் காரனமாகவோ என்னவோ அதன் பின்னால் கிடைக்கும் அந்தப் பொருள் அருமையானதாக போற்றத்தகுந்ததாக இருந்தது அன்று.ஆனால்  இன்றோ முயற்சி எதுவும் செய்யாமல் விரைவாகவே வேண்டியதை பெற்றுவிடும் வாய்ப்பு வந்து விட்டதால் அதன் அருமை புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகி விரைவில் சலிப்படையச் செய்து விடும் ஒன்றாக மாறி விடுகிறது போலும்! 

இங்கு இருக்கிற சொகுசான வாழ்வு; கடின உழைப்பு என்பதை; சிக்கனம் என்பதை கற்றுக் கொடுக்கவில்லை. அன்பு, பற்று, பாசம், அக்கறை என்பதை காட்ட பண்பாடு கற்றுத்தரவில்லை. ‘ஒருவருக்காக நிற்றல்’ என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது. பாசம் பணத்தால் நிறுக்கப் படுகிறது. அறம் என்பது பற்றிய புரிதல்கள் இல்லாதே போயின. சுயநலம், பணபலம் இவைகளால் பெறுமதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழின் மூல சொத்தே ‘அறம்’ தான் இல்லையா?

இவைகளை நாம் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

 ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும்? என்று  ஒருசாரார் கேட்கக் கூடும். வாழ்க்கை முறை மாறினாலும் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் மனித ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒன்று தான்.இரத்தமும் வியர்வையும் ஒன்றுதான் என்று சொல்வார்களே அது மாதிரி.  இழப்புகள், விபத்துகள், துன்பங்கள், இன்பங்கள், நோய்கள், பிறப்புகள், இறப்புகள் எல்லாம் எல்லோருக்கும் ஒன்று தானே!

இவைகளை எதிர்கொள்ளும் அணுக்க வழிமுறைகளை ஒவ்வொரு பண்பாடும் ஒவ்வொரு விதமாக  கற்றுக் கொடுக்கின்றன. ஒரு தமிழன் பிரச்சினை ஒன்றை அறத்தின் வழியாக அணுகுகின்றான். ஒரு மேலைத்தேய பண்பாட்டினன் தன்னம்பிக்கையின் வழியாக அணுகுகிறான். மத்திய தேசத்தவன் மத நம்பிக்கையின் வழியாக ஆறுதலை கண்டடைகிறான். ஆசிய நாட்டவன் விடாத முயற்சி, பயிற்சி மற்றும் வேறொன்றில் மனதைச் செலுத்துதல் வழியாக சம்பவத்தை மறக்க முயல்கிறான்.

இவ்வாறாகப் பண்பாடுகள் சொல்லிக் கொடுக்கும் மூலோபாயங்கள் வேறு வேறானவை. அவைகளை - குறைந்த பட்சம் நம் பண்பாடு நமக்குச் சொல்லிக் கொடுத்த அணுகு முறைகளை அடுத்த சந்ததிக்கு சொல்லிக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோமல்லவா? 

எப்படி இதனைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

ஓர் இளங்குடும்பம் - அவளது கணவனை அவளின் நெருங்கிய தோழி சுவீகரித்துக் கொண்டு சென்று விட்டதோடு மட்டுமன்றி அவளின் வீட்டுக்கருகிலேயே தலை நிமிர்ந்து வாழவும் செய்வதை அண்மையில் கண்கூடாகக் கண்டேன்.

புற்றுநோய் வந்துவிட்ட இரண்டு பிள்ளைகளின் தாயொருத்தியை அப்படியே விட்டு விட்டு தன் பள்ளிக் காலக் காதலியை முகப்புப் புத்தகத்தில் கண்டுபிடித்து அவளோடு உலகம் சுற்ற போன ஒரு கணவனை என் வேலைத்தலத்தில் கண்டேன்.

இவ்வாறெல்லாம் செய்யத் துணிவதற்கு எது காரணமாயிற்று என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

பண்பாடு பற்றிய அறிதலில் ஏற்பட்ட வெற்றிடம்.

அந்த வெற்றிடம் ஒன்றே தான்! 

தொடரும்......

Thursday, November 25, 2021

ஆஸ்பத்திரி அனுபவங்கள்

 


அண்மையில் ஓர் அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இருக்க நேர்ந்தது. கொரோனாக் காலம் வேறு. அதனால் தங்கியிருப்போர் தொகை கனிசமான அளவு குறைந்திருந்தது. யாரும் யாரையும் பார்க்க வரமுடியாத நிலை. அது தாதியர்களுக்கு சற்ரு செளகரிகத்தைக் கொடுத்திருந்தது. வளாகம் அமைதியில் நிரம்பிப் போய் இருந்தது.  அதனால் தாதியர்களுக்குப் போதுமான நேரம் இருந்ததோடு பணிச்சுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு குறைந்திருந்தது. எல்லோரும் நோயாளிகளோடு அன்புறவோடு பழகினார்கள். அக்கறையோடு இருந்தார்கள்.

வாழ்க்கை பல நேரங்களில் அனுபவங்களூடாக பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அதனை ஏற்று நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளும் போது நாம் இன்னும் நல்ல மனிதர்களாக மாற சந்தர்ப்பம் கிடைக்கிறது.

சரியான மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் நாம் பின்னாளில் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் அது வாய்ப்பளிக்கிறது.

எது வாழ்க்கையில் முக்கியம் என்பதும்; நாம் வீணாக்கிய நேரங்களும்; ஆரோக்கியத்தின் முக்கியத்துவமும் புரியும் இடமாக ஆஸ்பத்திரியும் அனுபவங்களும் அமைந்து விடுகிறது.

‘ஏணி; தோணி; வாத்தியார்’ என்று ஒரு சொற்கூட்டை முன்நாளில் நம் சிறுவர்களாக இருந்த போது சொல்வது வழக்கம். ஏணி ஏற்றி விட்டு தன் இடத்தில் இருக்கும். தோணி ஆட்களை ஏற்றி இறக்கி விட்டு தண்ணீருக்குள் இருக்கும். வாத்தியார்களும் அப்படித்தான். என்பதால் அதனை சேர்த்து அப்படிச் சொல்வது வழக்கம்.

இவர்களுக்குள் வைத்தியர்களையும் தாதியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தைப் பழுத்து பார்ப்பவர்களையும் இதற்குள் சேர்த்துக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. 

பழுதுபட்டிருப்பவற்றைச் செப்பனாக்கித் தந்து விட்டு தம் இடத்தில் இருப்பவர்கள்.

கூடவே மனநிறைவு தந்த ஒரு விடயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். என் குடும்பவைத்தியர் ஒரு தமிழர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக அவர் தான் எங்கள் குடும்ப வைத்தியர். சுகவீனமுற்றுப் போன போது அவர் பரிந்துரைத்த சிறப்பு நிபுணர் ஒரு தமிழர். ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த போது என்னைப் பார்த்துக் கொண்டவர் - என்னை மாத்திரமல்ல - அந்த தங்கு விடுதியை கவனித்துக் கொண்ட வைத்தியர் புதிதாக கற்றுத் தேறி தொழில்பார்க்க வந்திருக்கும் ஒரு இளம் தமிழ் வைத்தியர். டொக்டர். துஷ்யந்தி என்பது அவர் பெயர். துஷ்யந்தி என்ற அந்த இளம் வைத்தியர் - அவரிடம் இருந்த அன்பு, அக்கறை, கவனிப்பு, அவதானம், அர்ப்பணிப்பு, அன்பு, தாய்மைப் பண்பு நிறைந்த ஒருவித மென்மை, வேலை மீது அவர் கொண்டிருக்கும் நேசம்,.... ஆஹா... அது தான் எத்தனை அழகு! டொக்டர் துஷ்யந்தி என்பது அவர் பெயர். நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தை தாயே!

சரி இவர்கள் தான் தமிழர்கள் என்று பார்த்தால் எனக்கு அறுவை சிகிச்சை  செய்தவர் ஒரு தமிழர். அது குறித்தும்; எவ்வாறெல்லாம் அறுவை சிகிச்சை நடைபெறப்போகிறது என்பதையும்; அதில் தன் பங்கு என்னவாக இருக்கப் போகிறது என்பதையும் அறுவை சிகிச்சை நடைபெறும் தினத்தன்று வாசலில் வைத்து எனக்கு விளக்கிக் கூறி புன்னகையோடு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று இன்முகத்தோடு சொன்னவர் இன்னொரு இளம்தமிழ் வைத்தியர் டொக்டர். காயத்திரி. நான் வீடு வரும் வரை தினம் தோறும் வந்து பார்த்து என் தேறுதல் பார்த்து மகிழ்ந்து என்னை விடையனுப்பி வைத்தவர்.

இவ்வாறாக வீடு வரும்வைரை தமிழர்களாலே அன்னியநாடொன்றில் நான் சூழப்பட்டிருந்தேன்; கவனிக்கப் பட்டிருந்தேன் என்பது ஓர் ஆசீர்வாதம் தான் இல்லையா? 

எல்லா வைத்தியர்களும் இதைத்தான் செய்திருப்பார்கள் என்ற போதும் தமிழன் கையால் அன்னிய இடத்தில் ஒரு சிறந்த சேவையைப் பெறும் சுகம் சற்று வித்தியாசமானது.

இந்த இளம் வைத்தியர்கள் துஷ்யந்தியும் காயத்திரியும் என் பிள்ளை வயதொத்தவர்கள். சிட்னியில் வாழும் இந்த சிறு தமிழ் சமூகத்தில் நான் முன்னெப்போதும் கண்டறிந்திராதவர்கள். 

எதிர்பாராத, மிக வேண்டப்படும், இவ்வாறான தருணங்களில் மிக தற்செயலாக அமைந்து விட்ட இப்படியானவர்களின் பிரசன்னமும் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் அவர்களின் உயர்வும் பண்பும் என இவற்றை எல்லாம் காணவும் அனுபவிக்கவும் கிடைத்தது இறைவனின் பெருங்கருணையின்றி வெறென்னவென்று நான் சொல்ல! 

 என் வாழ்வில் இடம்பெற்ற இந்த முதலாவது அறுவை சிகிச்சை பலவிதங்களில் எனக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தந்து போயிருக்கிறது. அவைகளை எண்ணிப் பார்க்கிற போது இந்த இளம் வைத்தியர்களும் அவர்களின் மனதுக்கிதமான சேவையும் கூடவே வந்து செல்லும். இவர்களை எல்லாம் இப்போதைக்கு மறக்க முடியும் என்று தோன்றவில்லை.

வாழ்க்கையை இன்னும் சரியாக செப்பனிட்டுக் கொள்ளத்தக்க வாய்ப்புகளையும் அனுபவங்களையும் இந்த அறுவை சிகிச்சை எனக்கு வழங்கி இருக்கிறது.

அன்பே சிவம்! கொடுப்பதனால் குறைவு படாதது அன்பு. தேவைப்படுமிடத்து இலவசமாக வழங்கத்தக்கது அன்பு. 

இந்த இளம் வைத்தியர்களும் தாதியர்களும் அதையே எதிர்பார்ப்பின்றி புலமையோடு நமக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.

பிறகு அடுத்து வருபவருக்குக் கொடுக்க தயார் நிலையில் அங்கேயே நிற்கிறார்கள். அவர்களை நடமாடும் கடவுள்கள் என்பது சற்று மிகையாகத் தோன்றலாம். ஆனால் கடவுளால் தன் தொழிலைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட  ஊழியர்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

அதில் வேறொரு மொழிபேசும் தேசமொன்றில் முன் பின் தெரியாத தமிழர்கள் கையால் அந்தச் சேவையைப் பெறுவதென்பது கொஞ்சம் விஷேசம்.

இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது......

Saturday, November 6, 2021

ஆதித் திராவிடத் தமிழர்களின் ஜீவ காருண்யம்

 


காருண்யம், இரக்கம், அன்பு,அக்கறை  என்பது எல்லாம் உயர்வான ஒரு மனநிலை. மேலான மனங்களில் மேலோங்கி நிற்பன.

அது என்ன தமிழரிட்ட மட்டும் அது தனியா இருக்கிற ஒரு பண்பா எண்டு கேட்டா நிச்சயமா இல்லை. அது எல்லா இன, மொழி, பண்பாடு கொண்ட மக்களிட்டையும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்  இருக்கு. அது ஒரு நல்ல மனிசரின்ர குணம்.

இண்டைக்கு நான் இங்க குறிப்பா சொல்ல விரும்புற விஷயம் என்னெண்டா எங்கட தமிழ் மரபில; அதிலயும் குறிப்பா வேற எந்த ஒரு சிந்தனைக் கலப்பு, பண்பாட்டு செல்வாக்குகளும் தமிழுக்குள்ள வராமல் இருந்த ஒரு காலத்திலயே இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயம் தமிழன்ர மனநிலையில நிலைச்சு இருந்திருக்கு எண்டதத் தான்.

அது தெளிவா தெரியிற ஒரு தனித்தமிழ் வேர். பின்னாளில அது பிறகு அறமா நிலைக்கிறதுக்கு இது தான் அடிப்படையா அமைஞ்சிருக்கு. இதுக்கு தமிழ் இலக்கியத்தின்ர பாதை யெல்லாம் தொடர்ச்சியான தெளிவான சான்றிருக்கு. அத எல்லாம் இணைச்சா  ஒரு பெரிய தமிழ் Free Way யே போட்டிடலாம். அவ்வளவு கிளியர் அது!

சரி அது இருக்கட்டும், நாங்கள்  ஆதித்தமிழ் திராவிட வாழ்க்கை முறையின்ர தொடக்கத்துக்கு வருவம்.  தமிழ் மூதையையரின்ர தனித்தமிழ் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் வாழ்க்கை. காதல், சண்டை இந்த ரெண்டு பிறக்கெட்டுக்குள்ளயும் எங்கள அடைச்சுப் போடலாம். இதுக்குள்ள தான் மானம் ரோசம், அறிவு புலமை, அன்பு பண்பு, ரசிப்பு ருசிப்பு, வாழ்க்கை இறப்பு எல்லாம் அடங்கி இருந்திருக்கு. 

ஏன் சண்டையள் வந்திருக்கு எண்டு பாத்தா அது நாட்டுக்கு நாடு நிலம் பிடிக்கிறதா இல்லாட்டி ஒருத்தரின்ர மந்தையளை அடுத்த நாட்டுக்காரன் வந்து கடத்திக் கொண்டு போக இந்த நாட்டுக்காரர் அதை மீட்க  சண்டைக்கு போன விதமா தான் இருந்திருக்கு. போரில போய் செத்த வீரருக்கு அவர தாட்ட இடத்தில ஒரு கல்லை வச்சுப் போட்டு அந்த நடுக்கல்ல கடவுளா வழிபட்ட வாழ்க்கை தான் இவையின்ர கடவுள் கொள்கை. ஒரு விதமான செய்நன்றிக்கடன். அதத்தாண்டி அவை வேற ஒண்டையும் யோசிக்கேல்ல. 

கண்ணுக்குத் தெரிஞ்ச இந்த வாழ்க்கையை எல்லாரும் ஒரேமாதிரி; ஒரு பாகுபாடும் இல்லாமல்; நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்கினம். தன்னைச் சுத்தி இருக்கிற இயற்கையை  அவை அவதானிச்சு நேசிச்சு வாழ்ந்திருக்கினம்.

உதாரணமா ஒரு சின்ன சம்பவத்தை உங்களோட பகிர்ந்து கொள்ளலாம். நற்றிணை எண்ட இலக்கியத்தில வாற உலோச்சனார் எண்ட புலவர் பாடின பாட்டு இது. ரெண்டு இளஞ் சினேகிதியள் கதைக்கினம். வேறை என்ன? காதல் தான். வாறன் எண்டு சொன்ன காதலனைக் காணயில்லை. இது தான் ரொபிக். ஒரு சினேகிதி மற்றச் சினேகிதியயிட்ட இதச் சொல்லி கவலைப்படுரா. மற்ற சினேகிதி இவவுக்கு கவுன்ஸிலிங் செய்யிறா; இப்பிடி. இங்க பாரு, ஆருஞ் சூடாமல் சும்மா வச்சிருக்கிற பூமாலை மாதிரி வாடுறியே! முதல்ல இப்பிடி கவலைபடுறத நிப்பாட்டு எண்டு முதல்ல கவலையை நிப்பாட்டச் சொல்லிப் போட்டு ஏன் அவன் வரத் தாமதமாகுது எண்டதுக்கு காரணம் சொல்லுறா.

 ஏனெண்டா அவன் கடற்கரை வழியா இரவு வர வேணும். இரவில நண்டுகள் எல்லாம் கடற்கரையில ஓடித்திரியும். இப்பிடி நண்டுகள் ஓடித்திரியிற பாதைவழியா தேரை ஓட்டி வரவேணும். அது லேசான காரியமில்லை. இந்தகாலத்தில நாங்கள் இரவு ரோட்டுகளில கங்காருகள் குவாலாக்கள் ரோட்டுகள குறொஸ் பண்ணேக்கை அடிபடாமல் கவனமா கார் ஓட்டி வாற மாதிரி - அந்தக்காலத்தில  நண்டுகளை மிதிச்சிடாமல் தேரை ஓட்டி வரவேண்டிய தேவை இருந்திருக்கு போல. அப்பிடி அவன் கவனமா நண்டுகளை கவனிச்சு தேர் ஓட்டி வாறதால தான் தாமதமாகுதாம் எண்ணுறா. பெய்யாது வைகிய கோதை போல... எண்டு தொடங்குற அந்தப்பாட்டில அந்தச் சினேகிதி.

அட இதெல்லாம் என்ன பெரிய விஷயமா எண்டு நீங்க கேட்டா, அது பெரிய விஷயம் தான் எண்டு சொல்லுறதுக்கு தமிழிட்ட ஒரு காரணம் இருக்கு. அது என்னெண்டா கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில செம்மொழியா; தெய்வீக மொழியா; தேவ பாஷையா  வளர்ச்சி அடைஞ்சிருந்த சமஸ்கிருதத்தில - யாகம் எண்டு ஒரு சடங்கு நடந்திருக்கு.  வேதங்களும் பாரத இராமாயண இதிகாசங்களும் செல்வாக்கோட இருந்த  அந்த ஆரிய வாழ்க்கையில - அதின்ர சிந்தனைப் பண்பாட்டில - வேத மந்திரங்களை ஓதி, அக்கினி வளர்த்து அதில கடவுளுக்கான உணவுப் பொருள்களை அவிப்பாகமாக போட்டு  கடவுளோடு அவர்கள் தொடர்பு கொண்டு தமக்கு தேவையானதை பெற்ற முறை அது. அப்பாவி உயிரினங்களை அக்கினியில போட்டு ஆகுதி ஆக்கி கடவுளுக்கு சமர்ப்பிக்கிற முறையும் அதில இருந்து இருக்கு. 

இதை எல்லாம் நாங்கள் சிம்பிளா ஒரு வரியில கடந்து போயிட முடியாது. பக்கம் பக்கமா; கிட்ட கிட்டவா; அருகருகா வளர்ந்து வந்த  சிந்தனைப்பண்பாடு  எண்டாலும் வேற வேறயான வாழ்க்கை நெறிமுறையள் நம்பிக்கையள் இந்த ரெண்டு பண்பாட்டிலயும் இருந்திருக்கு. அதுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒண்டு சொல்லலாம்.

’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே’ எண்டு தன்ர காதலன் போரில செத்தாப்பிறகும் எங்கட வீட்டுல இருக்கிற  நீ எப்பிடி இப்பிடி பூத்திருக்கிறாய் எண்டு முல்லைப்பூவோட ஒரு தமிழ் காதலி கோவிச்சுக்கொண்டிருந்த தமிழ் பண்பாட்டு நிலவின அதே காலத்தில  குதிரையின்ர முதுகில அரசன் வெற்றிக் கொடியை வச்சு அது சுத்தித்திரிஞ்ச ஊரெல்லாம் தன்ர ஊர் எண்டு பிரகடனப்படுத்தி, அந்தக் குதிரைய வேற ஒரு அரசன் பிடிச்சிட்டா அவனோட போர் செய்து, அவனை வெற்றி கொண்டு, அதுக்குப் பிறகு  தன்னை சக்கரவர்த்தி எண்டு பிரகடனப்படுத்தி, அந்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக யாகம் செய்து அதில அதே குதிரையை கொன்று அதின்ர கொழுப்பை ஆகூதி ஆக்கி அந்த முளாசி எரியுற அக்கினியில அந்த குதிரையின்ர  மாமிசத்தை வாட்டி விருந்து கொடுத்து ‘அஸ்வமேத யாகம்’ நடத்திக் கொண்டிருந்தது தேவ பாஷை. 

சரி, இப்ப இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயத்துக்கு வருவம். இண்டைக்கு நான் உங்களோட பகிர்ந்து கொள்ள இருக்கிற பாட்டு புறநானூறு எண்ட இலக்கியத்தில கோவூர் கிழார் எண்ட புலவர் பாடின 46வது பாட்டு.

இந்தப் பாட்டை சொல்லுறதுக்கு முதல் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னால் நல்லா இருக்கும். கிள்ளிவளவன்; மலையமான் எண்டு ரெண்டு சோழ ராசாக்கள். ரெண்டுபேருக்கும் பகை. ஒருமுறை கிள்ளிவளவன் மலையமானின்ர ரெண்டு பிள்ளைகளையும் உயிரோட பிடிச்சுக்கொண்டு வந்திட்டார். யானையால பிள்ளையளக் கொண்று பழி தீர்க்கிறது தான் கிள்ளி வளவன்ர நோக்கம். இது தான் சம்பவப் பின்னணி.

பிள்ளையள் சின்னவை. ரோற்றிலர்ஸா இருந்திருப்பினம் போல.  பெரிய ஆக்களின்ர உலகம் போல இல்லத் தானே குழந்தையளின்ர உலகம்! பிள்ளையளுக்கு இடம் ஆக்கள் எல்லாம் புதுசா இருக்கு; பழக்கமில்லாத இடம். மருண்டு போய் நிக்கினம். என்ன நடக்குது; ஏன் தாங்கள் அங்க நிக்கிறம் எண்ட ஒண்டும் அவைக்கு விளங்கேல்ல. யானை கொண்டுவரப் படுது. யானையை கண்ட உடன பிள்ளையளுக்கு கொண்டாட்டம். வாவ்... யானை... எண்டு ஆச்சரியமும் குதூகலமுமாக எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா ஒரு விதமான கூறியோசிற்ரியோட அதப் பாத்துக் கொண்டு நிக்கினம்.

கோவூர் கிழார் பாடுறார்.


நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!

இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்

தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்!

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த 

புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்தின் புன்கண் நோவு உடையார்!

கேட்டனை! ஆயின், நீ வேட்டது செய்ம்மே!

மன்னா, புறாவின்ர துன்பம் போக்கின சோழ பரம்பரையில வந்தவன் நீ. புறாவுக்கு மட்டுமா? எல்லா உயிர்களின்ர துன்பங்களையும் போக்குகிறவன் நீ. இந்தப் பிள்ளையளப் பாரு! இவையும் பெரிய குடும்பத்தில பிறந்த பிள்ளையள் தான். படிச்ச ஆக்களும் அறிஞர்களும் வறுமையில் வாடக்கூடாது எண்ணுறதுக்காக தங்கட செல்வங்களை எல்லாம் பகிர்ந்து குடுத்து வாழுற மரபில வந்த பிள்ளையள் இவை!

நேற்றுவரைக்கும் குளிர்மையான நிழலில; ஒரு கவலையுமில்லாமல் பாதுகாப்பா விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையள். இண்டைக்கு உனக்கு முன்னால கைதியளா நிக்கினம். இந்த புது இடத்தைப் பாத்து திகைச்சுப் போய் நிக்கினம். 

இவையை கொல்லுறதுக்காக நீ யானையை கொண்டு வந்திருக்கிறாய். அது கூட தெரியாமல் அதுகள் யானையை பார்த்து சந்தோஷமா ஆச்சரியப்பட்டுக் கொண்டு  நிக்குதுகள்.. இந்த அப்பாவிப் பிள்ளையளையா நீ கொல்லப் போறாய்?

என்னவோ நான் சொல்லுரத சொல்லியிட்டன். இனி நீ உனக்கு எது சரி எண்டு படுதோ அப்படிச் செய் 

எண்டு சொல்லுறார். 

ஒரு காருண்யமான காரியத்தை உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டு சுடச் சுட சொல்லாமல்; மென்மையா உணர்த்திற அதே நேரம் எதிரி மன்னன்ர குண இயல்புகளை அதுக்காக இகழ்ந்து கூறியோ அல்லது இந்த மன்னனிட்ட பணிஞ்சு போயோ சொல்லாமல் கோவூர் கிழார் சொன்ன பாணி எவ்வளவு அழகாயிருக்கு இல்லையா? 

கோவூரார்; தமிழ; அதின்ர ஜீவகாருண்யத்தை சொன்ன முறையும் இந்த வரலாற்று சம்பவமும் அதைப் பாட்டுக்குள்ள புகுத்தி காட்சிப்படுத்தின பாங்கும் தமிழ் உள்ள வரை தமிழன்ர அறம், கருணை, காருண்யம், மனசாட்சி எல்லாத்துக்குமான தொடக்கப் புள்ளியா இருந்தே வரும்.

இப்பிடி எத்தினையோ பாட்டிருக்கு. அதில இது ஆதித் தமிழ் திராவிடனிட்ட இருந்த காருண்யத்தின்ர ஒரு சிறு துளி!

Friday, October 22, 2021

Do it Anyway

அண்மையில் இந்தக் கவி வரிகளைக் காண முடிந்தது. கல்கத்தாவில் உள்ல அன்னை திரேசாவின் வீட்டுச் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த கவிதையாம் இது. திரு.  Kent M Keith என்பார் இக் கவிதையை எழுதி இருக்கிறாராம்.

People are often unreasonable, illogical, and self-centered.
Forgive them anyway.

If you are kind,
people may accuse you of selfish ulterior motives.
Be kind anyway.

If you are successful,
you will win some false friends and some true enemies.
Succeed anyway.

If you are honest and frank,
people may cheat you.
Be honest and frank anyway.

What you spend years building,
someone could destroy overnight.
Build anyway.

If you find serenity and happiness,
they may be jealous.
Be happy anyway.

The good you do today,
people will often forget tomorrow.
Do good anyway.

Give the world the best you have,
and it may never be enough.
Give the best you've got anyway.

You see,
in the final analysis it is between you and God;
it was never between you and them anyway.

இதனை ஒலி வடிவிலும் காட்சி வடிவிலும் கேட்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்காக இது!



Saturday, October 9, 2021

புலனும் கலையும்

 ” கண் என்பது புலன்

பார்ப்பது என்பது கலை”

ஜோர்ஜ். பார்க்கின்ஸ் என்பவர் சொல்லி இருப்பதாக அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அது எத்தனை உண்மை இல்லையா? கண் இருக்கிற எல்லோரும் ஒரு காட்சியை ஒரு மாதிரியாகவா பார்க்கிறார்கள்? 

ஒரு அழகான பூவை பார்க்கிற கவிஞன் அதைக் கண்டதும் கவிஞன் ஆகிறான். கதாசிரியன் தன் கதையை அப் பூக்களால் அலங்கரிக்கிறான். ஒரு ரசிகன் சற்றே நின்று அதன் அழகில் கிறங்கி அப்பால் செல்கிறான். ஒரு தாவரவியலாளனின் கண்ணோ அதன் மண்ணிலும் வளர்ச்சியிலும் பூவின் தோற்றத்திலும் கொண்டுபோய் அவனை நிறுத்துகிறது. ஒரு மூலிகை வைத்தியனுக்கு இது தன் மருத்துவத்துக்கும் பயன்படக்கூடுமா என்று நோக்கத் தோன்றும்.ஒரு வியாபாரிக்கு இதனை எப்படிச் சந்தைப்படுத்தலாம் என்று அறிய ஆவல் ஏற்படும். மூலிகைத் தைலம் தயாரிப்பவருக்கோ இதனை எப்படிக் கசக்கிப் பிளிந்து சாறெடுக்கலாம் என்று எண்ணம் ஓடும். 

ஆனால் அந்தச் செடியோ பூவினைப் பூப்பித்து தேனீக்களுக்கும் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் மேலும் சில குருவிகளுக்குமாக புன்னகை இதழ் விரித்து அதன் பின்னே தேனையும் உள்ளூர ஒழித்து வைத்து காத்திருக்கும்.

அதனைப் பார்த்தும் பார்க்காமல் போகிற கண்களும் உண்டு. அதனை அப்போதே பறித்து கடவுளின் சன்னிதானத்திற்குக் கொண்டு சேர்ப்போரும் உண்டு. 

எதை எடுத்து யாருக்குக் கொடுப்பது? இல்லையா? தோட்டக்காறன் பூக்களைப் பறிக்க வரும் போது மொட்டுக்கள் சொல்லிக் கொள்ளுமாம். ’இன்று அவர்கள்; நாளை  நாங்கள்’.

இது ஒரு உதாரணம் தான். ’பார்க்கும் கலை’ நம் எல்லோருக்கும் வாய்க்க வேண்டும். கலைக்கு மாத்திரமல்ல; ஒருவரைக் கவனிப்பதாக இருந்தால் என்ன, ஒருவரோடு உரையாடுவதாக இருந்தால் என்ன, ஒருவருக்கு ஒன்றைச் செய்து கொடுப்பதாக இருந்தால் என்ன அதிலெல்லாம் ஒரு கலையம்சம், அக்கறை, முழுமன ஈடுபாடு இதெல்லாம் இருக்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

 இப்போதெல்லாம் மக்களைப் பார்த்தால் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய அவசரம் காட்டுகிறார்கள். நேரத்தை மிச்சம் பிடிப்பதாகவும், நேரமே இல்லாதது போலவும் ஒன்றிலும் ஆழமான பார்வை இல்லாது மேலோட்டமாக எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என்ற அவசரத்தோடு செய்து முடிப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள். தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது கணணியில் வேறொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், சமையலின் போது தொலைக்காட்சி நாடகங்களில் கண்களையும் காதுகளையும் பொருத்திக் கொள்ளுகிறார்கள், பிள்ளைக்கு பாலோ சோறோ ஊட்டும் போது கைபேசியில் வட்ஸப் பார்க்கிறார்கள்... இப்படியே தொடர்கிறது இதன் போக்கு. 

இவர்களைப் பார்க்கிற போது இவர்கள் தாம் செய்கிற செயல்களில் உண்மையில் அக்கறையோ அன்போ ஈடுபாடோ கொண்டிருக்கிறார்களா என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒன்றினை செய்கிற போது அதனை முழுமையாக அனுபவித்து செய்தல் என்பது எத்தனை மகிழ்வு தரும் ஒன்று! 

வாழ்க்கையை அனுபவித்தல் என்பது எது? அவசர அவசரமாக ஓடுவது என்பது தானா? ரசிக்கவோ பேசவோ நேரமில்லாதது மாதிரி நடந்து கொள்வது தானா?

அக்கறை செலுத்துகிறீர்களா? உண்மையாக அக்கறை செலுத்துங்கள். அதற்கான நேரத்தியும் அவகாசத்தையும் அதற்கான இயல்பையும் அதற்குக் கொடுங்கள். ஒரு நிகழ்ச்சிக்குப் போவதாக தீர்மானிக்கிறீர்களா? தீர்மானித்த பிறகு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அங்கேயே முழுமனசோடு ஆழ்ந்திருங்கள். அங்கிருந்தபடி போனைப் பார்க்காது அடுத்தவரோடு பேசி அவரையும் குழப்பாது நிகழ்ச்சியை நடத்துகிறவருக்கு அதற்கான ஒத்துழைப்பைக் கொடுங்கள். அன்பு செலுத்துகிறீர்களா? அந்த அன்பு உண்மையானது தானா என்பதை ஒருமுறை உங்களை நீங்களே கேட்டு அதனைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஒன்றில் ஈடுபடுகிறீர்களா? அதில் முழுமையாக ஈடுபடுங்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுதல் என்பது அது தான். கலைத்துவமாக வாழுதல் என்பதற்கும் அது தான் பொருள். இதற்கு பணமோ, பதவியோ, பொருளோ புகழோ தேவை இல்லை. 

மனதைக் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறு குடிசை

முன்னால் ஒரு பூந்தோட்டம்

செய்ய ஒரு சிறு தொழில்

நீ

இது போதும் எனக்கு! 

என்று யாரோ ஒரு கவிஞன் எப்போதோ எழுதியதைப் படித்த ஞாபகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. இவர்கள் தான் வாழ்க்கையை அனுபவித்து முழுமையாக வாழ்பவர்கள் என்று தோன்றுகிறது எனக்கு.

போட்டிகளிலும் ஒப்பீடுகளிலும் பங்குபற்றாது சுயமான மூளையில் கிடைக்கிற வருவாயில் சரியான  தீர்மானங்களை எடுத்து தனித்துவமாக நம் வாழ்வை நாம் வாழ முனைதலில் ஆரம்பமாகும் இந்த புலனும் புலன் வழி காணும் பார்வையும் கலையம்சம் கொண்ட வாழ்வும்.

இறுதியாக விடைபெற்றுச் செல்லு முன் ’எழுத்தின் ரகசியம்’ என்ற புத்தகத்தில் பசுவய்யா அவர்கள் எழுதிய ’காலக் குழந்தைக்குப் பாலூட்டு’ என்ற இந்தக் கவிதையோடு விடைபெற்றுக் கொள்ளலாம் என்று தொன்றுகிறது.

காலக் குழந்தைக்குப் பாலூட்டு

எழுது.

எவர் முகமும் பாராமல்

உன் மனது பார்த்து,

உன் தாகம் தீர்க்க

நதியில் இருந்து நீரைக்

கைகளால் அள்ளுவது போல

கண்டுபிடி

உன் மன மொழியை.

மார்புக் கச்சையை

முற்றாக விலக்கி

காலக் குழந்தைக்குப் 

பாலூட்டு.


Sunday, September 5, 2021

தமிழர் மான உணர்வு - ஓளவை வழி - 2 -

கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.8.21 அன்று SBS தமிழ் தேசிய வானொலியில் ஒலிபரப்பான  நம்மதமிழ் நிகழ்ச்சிக்காக எழுதிய ஆக்கம் இது. எடிட் செய்யப்பட்ட 7/8 நிமிட நிகழ்ச்சியைக் கேட்க கீழ்வரும் இணைப்பை அழுத்திக் கேட்கலாம்.


நம்ம தமிழ் - ஒளவையின் மான உணர்வு


எடிட் செய்யப்படாத எழுத்துருவில் அமைந்த பகுதி கீழே வருகிறது.

மானம் உள்ளவன் தமிழன் என்று எங்களை நாங்களே சொல்லிக் கொள்ளும் மரபொன்று எங்களிட்ட இருக்கு. அது உண்மைதானா எண்டு பாக்கிறது இண்டைக்கு எங்கட நோக்கம். 

சிவன் நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே எண்டு நக்கீரன் சிவனுக்கே சவால் விட்டார் எண்டும்; கண்ணகி பாண்டியமன்னனின்  வாயிலோனைப்பார்த்து 

வாயி லோயே வாயி லோயே 

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே! 

என்று அறக்கோபம் கொண்ட கண்ணகியும், யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யமனை அஞ்சோம் எண்டு இந்து சமயம் சார்ந்த தமிழ் தொண்டர்கள் நிமிர்ந்து நிண்டதையும் திருப்பாவை பாடிய ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம் எண்டு கண்ணனுக்கு உறுதி அளிக்கிறதையும் மாணிக்கவாசகர், ‘எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்! எண்டு கடவுளோட உரிமையோட கதைக்கிறதையும் பார்க்கேக்க அதெல்லாம் தமிழின்ர; தமிழன்ர ஒருவித வீர வசனம்; மான உணர்வின்ர; தான் நம்புற ஒண்டின் மீதான அதீத நம்பிக்கையின் வழி வந்த உரிமைக் குரல்; உறுதி மொழிகள்; வாழ்வியலின் மொழி எச்சங்கள் எண்டுதான் படுகுது. 

ஏனெண்டா இதின்ர தொடர்ச்சி பாரதியார் வரைக்கும் வந்திருக்கு. நரை கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்கு இரை யெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று  நினைத்தாயோ?" எண்டு அவரும் பராசக்தியை கோவத்தோட கேட்டிருக்கிறார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி வழியில் நடந்தான் மாவீரன்; என்றொரு பாட்டு ஈழத்தமிழ் வாயில இருந்தும் புறப்பட்டதும் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இப்பிடியான இந்த கோபங்களுக்கு; சூழுறையளுக்கு; மான ரோச குணங்களுக்கு; அடிப்படையாக இருந்தது அறம் சார்ந்த நியாயப் பாடுகள் தான். தான் கண்டு கொண்ட  உண்மை என்ற ஒன்றின் மீதான அதி தீவிர நம்பிக்கை; தனக்கு சரி எனப் பட்ட ஒன்றுக்காக உயிர், வாழ்வு, நட்பு எல்லாவற்றையும் துச்சமாக கருதும் ஒரு மனப்பாண்மை; அறமும் தர்மமும் உண்மையும் முன்னுக்கு நிக்குமெண்டால் கடவுளும் எனக்கு ஒரு தூசிதான். அவருக்கே நான் சவால் விடுவன். எண்ட ஒரு தார்மீக கோபம் தான் அது. 

தமிழுக்கு அப்பிடி ஒரு கம்பீரம். தமிழ்வாழ்வான அறமே அவனது அனைத்து செயல்களுக்குமான ஆழமான அடிப்படை.

கம்பனும் கூட, மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? எண்டு சோழ அரசனோடு கோவிக்கிறார்.

இப்பிடி ஒரு கோபம் சங்க காலத்து தமிழ் திராவிட பெண்ணான ஒளவைக்கும் வந்திருக்கு. ஒரு கொடை வள்ளலான அரசனோட அவளுக்கு கோபம். இத்தனைக்கும் அந்த அரசன் பாரி வள்ளல். கேட்பவர்களுக்கு இல்லையென சொல்லாது வாரி வளங்கும் வள்ளல் அவன். ஒளவையின் நட்பினனும் கூட. அதியமான் நெடுமான் அஞ்சி எண்ணுறது அவரின்ர பேர். ஒரு நாள் ஒளவை அதியமானை பாக்க வாறா. வாயில் காவலன் அவவ உள்ள போக விடாமல் மறிச்சுப் போட்டான். அது தான் அவவுக்கு கோபம். நடந்தது என்னவோ அவ்வளவு தான். கோபமும் மான உணர்வும் அவவுக்கு முன்னால வந்திட்டுது. 

இத ஒரு விதத்தில ஒரு வித ஞானச் செருக்கு எண்டும் சொல்லலாம். ஏனெண்டா காவலன் போக விடாமல் மறிச்சது தன்ர ஞானத்துக்கு மேல விழுந்த ஒரு இழுக்கு எண்டு அவ நினைச்சிட்டா. அது ஒரு  அறிவின்ர கனல். இந்தச் அறிவுச் செல்வத்தை தான் கம்பரும் ’அரசரோடென்னை சரியாசனம் வைத்த தாய்’ என்று கல்வித்தெய்வத்தை புகழ்ந்துரைப்பார். 

தன்ர அறிவுச்செல்வத்துக்கு வந்த இந்த அவமரியாதையை ஒளவையால பொறுக்க முடியேல்ல. தமிழரின்ர வாழ்க்கையை அறிய முடிகிற முதல் எழுத்திலக்கியமா இருக்கிற சங்ககால தமிழ் இலக்கியத்தில ஒரு பெண்ணா; புலவரா இருந்து கொண்டு அப்பிடி ஒரு ரோசமுள்ள பாட்ட அவ பாடி இருக்கிறா.

அவமானங்களைச் சகிக்க முடியாதவனா தமிழன் எப்பவுமே இருந்து வந்திருக்கிறான் என்ணுறதுக்கும் இந்தப்பாட்டு ஒரு சான்றுதான். 

அவ அப்ப பாடின பாட்டுத் தான் இது. புறநானூறு எண்ட சங்க இலக்கியத்தில வாற 206 வது….பாட்டு இது.


வாயி லோயே! வாயிலோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்

5 பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!


கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?


அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.


பசியை விட மானம் பெரிசா இருந்திருக்கு அவவுக்கு. திறமைக்கு மதிப்புத் தராத இடத்தில இருக்க மாட்டன் எண்ட அறக் கோவம் இருந்திருக்கு அவவுக்கு.  தன்ர அறிவும் ஞானமும் ஒரு பெரும் தகுதியா தன்னோட இருக்கேக்க தனக்கு எங்க போனாலும் சோறு கிடைக்கும் எண்ட நம்பிக்கை அவவுக்கு இருந்திருக்கு. அது அறிவு கொடுத்த நம்பிக்கை; திறமை கொடுத்த நம்பிக்கை!!


 இந்தப் பாட்டில வாயில் காவலன பார்த்து, வாயிலோயே வாயிலோயே எண்டு கூப்பிட்டு வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை’ எண்டு சொல்லுறா. வரிசை எண்ட இந்தச் சொல்லு தகுதி தராதரம் பார்த்து எண்டு சங்க காலத்தில பொருள் கொள்ளப்பட்டிருக்கு. பரிசு தாரதா இருந்தா தகுதி தராதரம் பார்த்துத் தர வேணும். தானம் மாதிரிக் குடுக்கக் கூடாது எண்ணுறது அவவின்ர வாதம்.

பிறகு சொல்லுறா,

விரைவா ஓடுற குதிரையள வச்சிருக்கிற அரசனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா? அறிவும் புகழுடையவர்கள் பசியால் இறந்தார்கள் எண்டு சொல்லத்தக்க வறுமைப்பட்ட உலகமில்ல இது. அதால, என்ர யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் போகிறேன். மரம் வெட்டுற  தச்சனின்ர திறமை வாய்ந்த பிள்ளைகள் கோடாலியோட   காட்டுக்குப் போனால் விறகுகளா கிடைக்காது? அது போலத்தான் இந்த உலகம். நான் எங்க போனாலும் அங்கே எனக்கு சோறு கிடைக்காமல் போகாது. 

எண்டு சூழுரைச்சுப் போட்டு போற பாட்டு அது. அவவின்ர தமிழ் புலமை மேல அவவுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது எண்ணுறது மட்டுமில்ல; அதுக்கு ஒரு இழுக்கு வந்த சகிச்சுக் கொள்ள முடியாத தமிழ் மான உணர்வும் அதுக்குள்ள இருக்கு. அது தமிழ் கொடுத்த நம்பிக்கை. அரிவு கொடுத்த நம்பிக்கை. ஞானம் குடுத்த நம்பிக்கை.

எப்பேற்பட்ட தமிழன் வாழ்வு அது!! 

தமிழ் அதனை - தமிழ் வாழ்வைக் கைப்பற்றி நமக்கு பாதுகாப்பாக நம்மிடம் ஒப்படைச்சிருக்கு.

அது ஒளவை எண்ட திராவிடத் தமிழ் பெண்னின்ர குணாம்சமா தமிழன்ர மான ரோச உணர்வின்ர தொடக்க கால எச்சமா இந்த பாடலின் வழியாக நிரூபனமாகி இருக்கு.




Saturday, August 28, 2021

ஆத்திசூடிகள்

தமிழ் சில தகவல் - 1


ஒளவையார் அருளிச் செய்தது ஆத்திசூடி என்பது பலரும் அறிந்த விஷயம். அது,

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்

 என்று அகர வரிசையில் 2,3, சொற்களில் வாழ்க்கையில் எப்படி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகும்.

பிறகு பாரதியார் புதிய ஆத்திசூடி என்று ஒன்று எழுதினார். அது,

அச்சம் தவிர்
 ஆண்மை தவறேல்
 இளைத்தல் இகழ்ச்சி
 ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
 ஊண் மிக விரும்பு
 எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை...

இவ்வாறாக தொடரும். காலத்தின் நிமித்தமாகவும் சொற்செறிவு, பொருள் அழகு, எளிமை, காலத்தின் தேவை, யாருக்கு பாடப்படுகிறது என்பது பொறுத்து அதன் பொருள் மாறுபட்டும், காலத்தின் தேவைக்குரியதாகவும் அமைந்திருப்பது வாசிக்கும் போது புலப்படும்.

கூடவே இந்த கவிப்புலவர்களின் சமூக கரிசனையும் .

பலருக்கும் தெரியாத இந்னொரு ஆத்திசூடியும் ஒன்று இருக்கிறது. அது பாரதி தாசன் இயற்றியது. அது இவ்வாறாகத் தொடர்கிறது.

அனைவரும் உறவினர்
ஆட்சியை பொதுமை செய்
இசை மொழி மேலதே
 ஈதல் இன்பம்.
 உடைமை பொதுவே
 ஊன்றுளம் ஊறும்
எழுது புதுநூல்
 ஏடு பெருக்கு
ஐந்தொழிற்கிறை நீ
ஒற்றுமை அமைதி
ஓவியம் பயில்
ஒளவியம் பெருநோய்

இவ்வாறாகத் தொடர்கிறது பாரதிதாசனின் ஆத்திசூடி.

ஆத்திசூடிகளும்......

நானாக இருந்தால் எப்படி எழுதக்கூடும் என்று நினைத்துப் பார்த்தேன். இன்றைக்கு இன்றய நிலையில் இது தான் என் ஆத்திசூடி.

அன்போடிரு
ஆசை தவிர்
இயன்றதைச் செய்
ஈதலே அறம்
உதவி புரி
ஊக்கம் கொள்
ஏற்றம் போற்று
ஐயம் வேண்டாம்
ஒன்றே இறைவன்
ஓடுக நதிபோல
ஒளடதம் அன்பே!

இனி எவரேனும் எழுதகூடின் அது எவ்வாறெனத் தொடர்தல் கூடும்.....?

உங்கள் ஆத்திசூடி எப்படி இருக்கும் என்று எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்! பெற்றுக் கொள்வதன் வழி கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம்.

Friday, July 30, 2021

மூலையில் ஒரு நாற்காலி

குளிர்காலத்தின் நடுவில் உட்காந்திருக்கிறோம்.

நாளுக்கு நாள் கொரோனாவின் பெருக்கம் அதிகரித்தபடி இருக்கிறது. நேற்றயதினம் கட்டுப்பாடுகள் இன்னும் இறுகி 5 கி.மீ. ற்குள் மாத்திரம் தான் - அதிலும் அத்தியாவசியம் என்றால் மாத்திரம் தான் வீட்டினை விட்டு வெளியே வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்த அத்தியாவசியங்களும் கூட என்ன என்னத்திற்காக என்று பட்டியல் தரப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு அபராதங்களும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. நகர்புறங்களில்; நாட்டுப் புறங்களில் இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக பொலிசாரோடு சேர்ந்து இராணுவமும் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தே வருகிறது.

என் வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கிற பிரதேசங்கள் எல்லாம் கொரோனா தொற்றுகளும் பாதிப்புகளும் மிக அதிகரித்துப் போயிருப்பது இதுதான் முதல் தடவை.

சரி, மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கக் காலம் எம்மைப் பணித்திருக்கிறது. அதைமீறி செய்ய என்ன இருக்கிறது? 

எதுவுமில்லை.

என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏதேனும் புதிதாக இருக்கிறதா என்ற என் இணையத்தேடலில் டொக்டர் ஜேன் என்று ஒருவரைக் கண்டு கொண்டு அவரிடம் இருந்து கொஞ்சம் படித்துக் கொண்டேன். அதன் மூலையில் ஒரு சிறு குறிப்பு ஒன்று புத்தக வாசிப்பு குறித்து இருந்தது. 

அது இவ்வாறு சொல்கிறது.

இந்தப் புத்தகம் என் வீடு.
கதவு திறந்திருந்திருக்க
நான் உள்நுழைவேன்..
இங்கு நான் மகிழ்ந்திருக்க
சாளரங்கள் பல உண்டு.
என்னை விரும்பும் நண்பர்கள் 
ஆண்களும் பெண்களுமாய்
இங்கிருக்க, 
என் சிரிப்பை, அன்பை, காதலை,
அழகை, மகிழ்ச்சியைக் 
இங்கு நானும் கண்டெடுப்பேன்.

Sunday, July 4, 2021

The Universal Declaration Of Human Rights

 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ‘அகதிகள் வாரம்’ கொண்டாட்டப் பட்டது. (20.6.21 - 27.6.21) அது வந்தது தெரியாமலே போய் விட்டது. கவனத்தில் எடுக்கப் படாதவர்களாகவே அவர்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது  ஒரு சோகம். மேலும் அவர்கள் தமக்கான உரிமைகள் பற்றியும் கடமைகள் பற்றியும் தெரியாதவர்களாக அடங்கி ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள். கூச்ச சுபாவத்தோடு ஒருவித இயலாமை சூழ, பவ்வியமாக அவர்கள் மற்றவர்களோடு  நடந்து கொள்வதைக் காண மனசு துடிக்கிறது.

பலர் தவறான வழிகளில் சூதாட்டம், மது, புகை பழக்கங்களுக்கும் ஆளாகிப் போயுள்ளனர். பெண்களும் தாய்மார்களும் தனிமையோடிருக்கிறார்கள். பலருக்கு வேலைக்குச் செல்லும் உரிமை இல்லை. வேலை செய்வதற்கான உரிமை உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கிறது. போதுமான வருமானம் இல்லாததால் குழந்தைகள் சரியாகக் கவனிக்கப் படாதவர்களாக வளர்க்கப் படுகிறதையும் ஆங்காங்கே காண முடிகிறது....

அரசாங்கம் கருணை காட்டாதவரை அவர்கள் திரிசங்கு சொர்க்கத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில் இருக்கிற தொழில் வழங்குனர்கள்; சமூகநிறுவனங்கள்; ஏதேனும் செய்யலாம்; செய்கிறார்கள் என்ற போதும் அது போதுமானதாக இல்லை. இதற்கென ஏதேனும் ஒரு பாரிய திட்டத்தை உருவாக்கி அமுல் படுத்த; தொழில் கொடுத்து அவர்களது வருமானத்தை ஊக்குவிக்க கொரோனா காலமும் விடுவதாக இல்லை......

அது நிற்க,

நான் தொழில் பார்க்கிற பாடசாலையில் நான்காம் வகுப்புப் பிள்ளைகளுக்கான புத்தகம் ஒன்று கிடைத்தது. அப் புத்தகம் என்னை மிகவும் வசீகரித்தது. அதன் தமிழாக்கம் இது.

நாங்கள் சுதந்திரமாகவும் எல்லோரைப்போலவும் பிறந்திருக்கிறோம்.

எங்கள் எல்லோருக்கும் சொந்த சிந்தனைகளும் எண்ணங்களும் உள்ளன.

நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

எங்களுக்குள் என்ன வேறுபாடு இருக்கிற போதும்

இந்த உரிமை எல்லோருக்குமானது.


நாங்கள் வாழ உரித்துடையவர்கள்.

சுதந்திரமாகவும் பாதுகாப்பகவும் வாழ உரித்துடையவர்கள்.

எம்மை அடிமை கொள்ள எவருக்கும் உரிமை இல்லை.

மற்றவரை அடிமை கொள்ள எமக்கும் உரிமை இல்லை.

எங்களை வருத்த எவருக்கும் உரிமை இல்லை.

சித்திரவதைக்கும் உரித்துக் கிடையாது.


சட்டம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்.

சட்டத்தின் பாதுகாப்பு எல்லோருக்குமானது.

எல்லோரையும் அது சமனாகவும் சரியாகவும் காக்க வேண்டும்.

நாம் சரியாகக் காக்கப் படாதவிடத்து,

நாம் அனைவரும் சட்டத்தின் உதவியைக் கோரலாம்.

சரியான காரணம் இல்லாமல்,

யாரையும் சிறையிட உரிமை இல்லை.

எங்களை நாடுகடத்தவும் உரிமை இல்லை.

பரீட்சார்த்தங்கள் பகீரங்கமாக நிகழ்ந்த்தப்பட வேண்டும்.

அதில் மற்றவர்கள் தலையீடோ செல்வாக்கோ  இருத்தல் ஆகாது.

ஆதாரம் கிடைக்கும் வரை ஒருவரை குற்றவாளி எனக் கருத முடியாது.

நாம் குற்றம் இழைத்தோம் என்று குற்றம் சாட்டப்பட்டால்

இல்லை என்று நிரூபிக்க எமக்கு உரிமை உண்டு.


எங்கள் நற்பெயரர்க்கு களங்கம் விளைவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

எங்கள் வீட்டுக்குள் எங்கள் அனுமதி இன்றி நுழைய உரிமை கிடையாது.

உரிய காரணமின்றி, எங்கள் கடிதங்களை திறந்து பார்க்க, எங்களை; எங்கள் குடும்பத்தைத்  தொந்தரவு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.

எங்கள் எல்லோருக்கும் நம் நாட்டுக்குள் எங்கு போகவும்; விரும்பினால் வெளிநாட்டு போகவும் உரிமை உண்டு.

எங்கள் நாட்டில் நாம் சரியாக நடத்தப்படவில்லையானால் எங்கள் எல்லோருக்கும் வேறு நாட்டுக்குச் செல்ல உரிமை உண்டு.

நாங்கள் ஒரு நாட்டின் உரித்துக்குரிய பிரஜைகள்.

வளர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யவும் விரும்பினால் குடும்பத்தை உருவாக்கவும் உரிமை உண்டு.

அவர்கள் திருமணம் செய்யவும், பிரியவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகள் சமனாகும்.

சகல பிரஜைகளுக்கும் ஒரு பொருளை உடமையாக வைத்திருக்கவோ பகிர்ந்து கொள்ளவோ உரிமை உண்டு.

தகுந்த காரனமின்றி உங்களிடமிருந்து எவரும் அதனைப் பறிக்க முடியாது.

நமக்கு சரி என்று பட்ட சமயத்தை  நம்ப நமக்கு உரிமை உண்டு.

அது போல மாற விரும்பினால் மாறவும் நமக்கு உரிமை உண்டு.

நாங்கள் ஒன்றை  நினைக்கவும் நினைத்ததை வெளிப்படுத்தவும் அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் நம் நண்பர்களைச் சந்திக்கவும் அமைதியாக ஒன்றிணைந்து நம் உரிமைகளை கோரவும் நமக்கு உரிமை உண்டு.

அது போல, எமக்கு விருப்பமில்லாத போது அதிலிருந்து விலகி இருக்கவும் நமக்கு உரிமை உண்டு.

நம் நாட்டு அரசகாரியங்களில் பங்கெடுக்க நமக்கு உரிமை உண்டு. வளர்ந்த ஒவ்வொருவருக்கும் தனக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் வீட்டில் வசிக்க உரிமை உண்டு.

வாழத்தேவையான பணம் வைத்திருக்கவும் உரிமை உண்டு.

இசை, கலை, புனைவு, விளையாட்டு இவை எல்லாம் எல்லோரும் மகிழ்வதற்கானது.

ஒவ்வொரு வளர்ந்தவருக்கும் தொழில் பார்க்கவும் அதற்கான சரியான சம்பளத்தைப் பெறவும் தொழிற்சங்கத்தில் இணையவும் உரிமை உண்டு.

வேலைக்குப் பின்னர் ஓய்வெடுக்கவும், மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

நாங்கள் எல்லோரும் நல்வாழ்வுக்கு உரிமை உடையவர்கள்.

தாய்மார்கள்; பிள்ளைகள்; வயதானவர்; தொழிலற்றவர், மாற்றுத்திறனாளிகள், என்போருக்கும் அவரவர் தேவைகள் கவனிக்கப்படவும்  நல்லதொரு வாழ்க்கையை வாழவும் உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. ஆரம்பக்கல்வி கட்டாயம் இலவசமாக இருக்க வேண்டும்

நாங்கள் எங்கள் திறமையை நன்றாக சீராக்கி சிறந்த வேலைவாய்ப்பைப் பெற தொழில் கல்வி வாய்ப்பு இருக்க வேண்டும்.

பெற்றோருக்கு எப்படி எதை தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க உரிமை உண்டு.

ஐ.நா. சபை பற்றியும் ஏனைய மக்கள் பற்றியும் மற்றவர்கள் உரிமைகள் கடமைகள் பற்றியும் மேலும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்குப் பிடித்த வாழ்வை வாழ எமக்கு உரிமை உண்டு. அத்தோடு வாழ்ந்து அனுபவிக்கவும் கல்வியறிவு, விஞ்ஞானம் தொழில்நுட்பம் தரும் வசதி வாய்ப்புகளை பயன்படுத்தவும் நமக்கு உரிமை உண்டு.

உரிமைகளையும் சுதந்திரத்தையும் நாம் நம் நாட்டிலும் உலகிலும் அனுபவிக்க நல்ல ஆட்சி நிலவ வேண்டும்.

எங்களுக்கு மற்றவர்களுடய உரிமையை; சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிமை உண்டு.

யாரும் இந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் எங்களிடம் இருந்து  பறிக்க முடியாது.

நன்றி. சிறுவர்களுக்கான புத்தகம். - We are all born free.- 

Wednesday, June 2, 2021

ஒளவை குறித்து ஒரு பார்வை

 தமிழ் மரபில் ஒளவை

கடந்த ஞாயிற்றுக்கிழமை SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இந்த ஒலிக்கீற்றைக் கேட்டு உங்கள் அபிப்பிராயங்கள்; விமர்சனங்களை எனக்குத் தெரியப்படுத்துவீர்களா? 

மேலே இருக்கிற ‘தமிழ் மரபில் ஒளவை’ என்ற தலைப்பை அழுத்தினால் நீங்கள் நேரடியாக SBS இன் தளத்திற்குச் செல்லலாம். அங்கு இதனைக் கேட்கலாம். எல்லாவற்றையும் எழுத்துமொழியிலேயே எழுதியும் பேசியும் வந்ததால் பேச்சு மொழியில் கூறிய இந்த விஷயங்களில் எனக்கான திருத்தங்களை உங்களிடம் இருந்து அறிந்து கொள்ள பெரிதும் பிரியப்படுகிறேன்.

ஒரு கையளவு மக்களே இங்கு வருவதாக இருந்தாலும்; நானும் எனக்குத் தோன்றிய பொழுதுகளில் மட்டும் தான் இங்கு வந்து போனாலும்; எனக்கு நீங்கள் தானே எல்லாம்.

நம்புங்கள்! உங்களோடு எனக்கு ஓர் மானசீக அன்பு உண்டு....

நீங்கள் எப்பொழுதும் இங்கு வந்து போக வேணும்...

Monday, April 19, 2021

அன்றாட பாடங்கள்

 


தண்ணீர் சொல்லித் தருகிறது

நழுவிச் செல்வதெவ்வாறென


நெருப்பு அறிவுறுத்துகிறது

சுட்டெரித்தல் பற்றி


நிலம் தோண்டியும் பொறுமை காக்கும் பூமி

போதிக்கும் பாடம் 

நெருப்புக்கு எதிர்மாறு


காற்றோ, ஊதிப்பெருப்பித்தும்

வருடிக்கொடுத்தும்

நோகாமல் நகர்கிறது.


இறுதியாக,

எல்லாவற்றையும் 

பார்த்துக் கொண்டிருக்கும் 

ஆகாயத்தின் மீது தான்

கோபமாக சூரியனும்

குளிர்ச்சியாக சந்திரனும்

பவனி வருகிறது.


அன்றாட வாழ்வில்

படிக்கும் பாடங்கள் அநேகம்..


Sunday, April 18, 2021

மர்மங்கள்....



பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல் நீரில் இருந்து உப்பை பிரிக்கவும்

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


பிறந்தவுடன் கடல் நோக்கி வரவும் 

பை நோக்கி நகரவும் 

சொல்லித் தரவில்லை யாரும் என்ற போதும்,

அறிந்து கொண்டுள்ளன

ஆமை, கங்காரு குட்டிகள்


ஐந்தறிவுக் குழந்தைகளுக்குச்

 சொல்லிக் கொடுத்தது யார்?

பிறந்தவுடன் எழும்பவும் 

தாய்மடி தேடி பால்பெறவும்?


ஆதாம் ஏவாள் காதலுக்கும் 

சேய் கொண்ட தாய்மைக்கும் 

பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை யாரும்.


பழம் தந்து விதைபோட்டு வளரும் மரங்கள்

சொல்லித் தருகின்றன வாழ்வின் பாடல்களை!

பழம் தந்து வீழும் வாழையும்

விழுது விட்டு வாழும் விருட்சங்களும்

மெளன மொழியில் சொல்கின்றன

பூமியின் ரகசியங்களை!


முள்ளுள்ள றோஜா; வெள்ளைநிற பாரிஜாதம்

தண்ணீரோடு ஒட்டாமலே தண்ணீரில் வாழும் தாமரை

சொல்லும் பாடங்களும் படிக்க உகந்தன.


குழந்தை உயிரினங்கள் தவழும்

மடியிலெல்லாம்

உயிர்ப்பின்  புன்னகை நிறைந்து கிடக்கிறது.


கொன்று தின்னப் பணிக்கும் இங்கே தான்

தாய்மையின் உயிர்ப்பிலும் குழந்தைகள் பிறப்பிலும்

மறுபடி மறுபடி உயிர்க்கிறது உலகு.


சிப்பிக்குள் இருக்கிறது முத்து.

மண்ணுக்குள் இருக்கிறது வைரம்.

பெறத் தெரிந்த மனிதனுக்கு புரியவில்லை 

பிறப்பின் முன் பின்  மர்மங்கள் மட்டும்.


எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் இலைகளை எல்லாம்

கூட்டிப் பெருக்குகிறாள் சிறுமி.

எனினும்,

மீண்டும் மீண்டும் உதிர்கின்றன இலைகள்.


உலகப் பள்ளியில் அறிய உள்ளன

எண்ணற்ற இரகசியங்கள்....

Friday, April 16, 2021

பிரபஞ்சமும் மற்றும் ஓர் உண்மையும்

 

அண்மைக் காலமாக வாழ்க்கை குறித்த தத்துவார்த்த சிந்தனைகள் மனதில் உதித்த வண்ணமாக இருக்கின்றன.

மனம், அதில் உதிக்கும் எண்ணங்கள், அவை வாழ்க்கையை வழிநடத்தும் வலிமை - மற்றும் அதன் பின்னால் ஏதேனும் ஓர் சக்தி உண்டா என்பது குறித்தவையாக அவை இருக்கின்றன.

காலா காலமாக சமயங்களும் தத்துவவாதிகளும் பேசி வருபவை தான் அவை என்ற போதும்,  அந்த முன்னோரின் சித்தனைகள் எல்லாவற்றையும் சற்றே நகர்த்தி வைத்து விட்டு, சொந்த அனுபவத்தின் வழியே சில விஷயங்களை புரிந்து கொள்ள விரும்பும் முயற்சி இது.

 கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விஹாரங்கள், காவல் தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகியன  வழி நடத்தும் சடங்குகள் ஆசாரங்கள் சமர்ப்பனங்கள், பூசைகளுக்கு அப்பால் உலகப் பண்பாடு; சான்றோரின் தத்துவ சிந்தனைகள், விஞ்ஞான தத்துவங்கள், கலைஞர்களின் எண்ண ஓட்டங்கள் ஆகியன  நம்முடய அனுபவங்களோடு ஒத்துழைக்கிறதா என்று பார்க்கும் முயற்சியின் ஒரு சிறு பகுதியாகவும் இதை கொள்ளலாம்.

 தினமும் காரோடிச் சலித்து, செய்த வேலையையே நாள்தோறும் திருப்பி திருப்பி செய்து சலித்து, பணத்தேவைகளும் அதிகமில்லாத போது, எதற்கிந்த வேலையும்  அநாவசிய பணமும்? எதற்கிந்த அநாவசிய சிரமங்கள்? அதிலும் வயதான பெற்றோர் எனக்காகக் காத்திருக்கும் போது...என்று நினைத்த சில மாதங்களில்  என் மனதுக்குகந்த; வேலை ஒன்று என் இரு கைகளுள்ளும் தானாக வந்து வீழ்ந்தது! முயற்சி எதுவும் செய்யாமலே.... 

இது போல மேலும் பல எண்ணங்கள் எனக்கு அவ்வாறே ஈடேறுகின்றன.

 உங்களுக்கும் இவ்வாறான அனுபவங்கள் சித்தித்திருக்கலாம்...

இது இவ்வாறிருக்க,

இந்த அநாவசியப் பணம் என்பது எம்மை தவறான பாதையில் வழிநடத்த வல்லதாகவும் இருக்கிறது. அது எம்மை ஆடம்பரம் நோக்கி நகர்த்துகிறது. காரணமில்லாமல் பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறோம்; ஒரு ’ரொயோட்டா’ கொண்டு சென்று விடும் தூரத்தைத் தான் ஒரு ’ஓடி’ காரும் கொண்டு சென்று விடுகிறது என்பதை மறந்து விட்டு, அந்த போலிப் பாத்திரத்தை அன்னாந்து வியந்து  பார்க்க நிப்பந்திக்கப் படுகிறோம். இரண்டு பேர் கூடும் போது பேசப்படும் உபயோகமற்ற பேசுபொருளாக அது ஆகி விடுகிறது என்பது ஒரு வேடிக்கையான விஷயமாக இருக்கிறது; வீடு பொருட்களால் நிறைகிறது. உதாசீனமும் கவனமின்மையும் வளர்கின்றன. ஒரு மமதை தன் ஆரவாரமின்றி பிறக்கிறது....தவறான பாதை ஒன்று நமக்கு செங்கம்பள வரவேற்பளிக்கிறது...

அளவுக்கதிகமான பணம் ஒரு சாபம். 

அதனை பாத்திரமறிந்து இட்டு விட வேண்டும்.

அது அங்கு உபயோகமாகுவதை காணும் போது மேலான மகிழ்ச்சியை தருகிறது என்பது அதிசயமான உண்மை.

கடனில்லா பெருவாழ்வும்; மனதுக்குகந்த சிறு தொழிலும்; நோய்கள் குடியேறா உடலும்; பூமிக்கு பாரமில்லா வாழ்வும்; கூட்டிப் பெருக்கி சுத்தமாக இருக்கும் ‘அகமும்’, பிடித்ததைச் செய்ய போதுமான நேரமும்; உண்மை அன்பினை; அக்கறையினை பகிரும் குடும்பமும் நட்பும் போதாதா என்ன? 

ஒரு கட்டத்தில் பணத்தை விட நேரமும் நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக செலவு செய்கிறோம் என்பதும் தான் முக்கியமானதாகப் போகிறது....

மனம் நிறைந்த பின்னால், வேண்டிய எல்லாம் கிடைத்த பின்னால், பிறப்பின் இரகசியங்கள் நோக்கியும் உன்னத கலைகள் வெளிப்படுத்தும் அக மலர்ச்சி குறித்தும் மனம் நாட்டம் கொள்கிறது. அமைதியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நம்மை பூரணமாக ஆட்கொள்ளும் போது மனம் மேலான எண்ணங்களில் சஞ்சரிக்கிறது. மெளனம் பரிமளிக்கிறது. அது மண்ணோடும் விண்ணோடும் நம்மைப் பிணைக்கிறது. உலகமே உன்னதமான ஒன்றாகத் தோன்றுகிறது. பூக்களோடும் மரங்களோடும் காய் கனிகளோடும் கூட ஓர் உறவு சித்திக்கிறது. கால் தொடும் புல்லின் ஸ்பரிசம் அத்தனை உன்னதமாக இருக்கிறது.  பிரபஞ்சத்தின் மீதான அன்பு பெருகுகிறது. உலக உயிரினங்களே நமக்கு நம் உறவுகளாகத் தோன்றுகிறது......

இதன் வழியாக நான் சொல்ல வருவது என்னவென்றால்,

 நண்பர்களே! 

இந்த பிரபஞ்சத்துக்கு என்று ஒரு சக்தி உண்டு. மனதுக்கும் எண்ணங்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் நெருக்கமான பிணைப்பு என்று ஒன்றும் அதற்குள் உண்டு.  அது நம் மனம் மற்றும் எண்ணங்களோடு நமக்கு தெரியாமலே தொடர்பு கொள்ளுகிறது; பரிபாஷிக்கிறது;  நட்புறவோடு இருக்கிறது; வேண்டியதை கருணையோடு  நல்குகிறது.

நம்புங்கள்!!

‘மனம் போல மாங்கல்யம்’ என்று சொல்கிறார்கள்.

மேலும்,

‘நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்’ என்று சொல்வதெல்லாம் பொய்யில்லை தோழர்களே! 

அது உண்மைதான். 

நாம் வெறும் ஆரவாரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

உலகமோ புரிந்து கொள்ளப்பட வேண்டிய இரகசியங்களால் நிறைந்து போயுள்ளது.

......................................

ஒரு சிறு பின்னிணைப்பு;

அண்மைய பயணம் ஒன்றின் போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பித்த ’வேத மந்திரங்கள்’ என்ற புத்தகத்தை வாங்கி வந்தேன். 

வேதம், வேதம் என்று சொல்கிறார்களே; மந்திரம் என்று இன்றும் சன்னிதானத்தின் கர்ப்பக்கிருகத்தில், கடவுளால் ஆசீர்வாதிக்கப்பட்ட குருமார்களால்  உச்சரிக்கப்படும் மாண்பு பெற்றிருக்கிறதே; தொன்மைபெற்ற வாழ்வு பற்றிய தத்துவ சிந்தனையின் கருவூலமாக அமைந்திருக்கிறதே; தேவபாஷை என்றழைக்கப்படும் செம்மொழியில் உச்சரிக்கப்படுகிறதே; அதில்  அப்படி என்னதான் சொல்லி இருக்கிறது என்று  அறிய விரும்பியது தான் வாங்கக் காரணம். 

படித்தேன்; எனினும் வேதங்களும் மந்திரங்களும் என்னை அதிகம் ஆகர்ஷிக்கவில்லை. பொதுவாக அவை ’நான் உனக்கு இதை தருகிறேன்; நீ எனக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மந்தைகளையும் தா’ என்று கேட்கும் பண்டமாற்று வியாபாரம் தான் அங்கு அதிகம் நிலவுகிறது. 

இதனை விட மேலானவையாக தமிழ் தேவாரங்களும் பாசுரங்களும் விளங்குகின்றன என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது. அவை கடவுள் என்ற ஓர் அம்சத்தை போற்றித் துதி பாடுகின்றன. தத்துவங்களை தள்ளி வைத்து விட்ட பின்னாலும் தமிழ்மொழி பக்தியின் மொழியாகப் பொங்கி பொங்கி வழிகிறதை படித்து படித்து பரவசிக்கலாம்.

இருந்த போதும், ரிக் வேதத்தில் 5;51;11ஆவதாக வரும் இந்த சற்று வித்தியாசமான பாடலை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ( வேத மந்திரங்கள், விளக்கம் ஆசுதோஷானந்தர், இராமகிருஷ்ணமடம், 10ம் பதிப்பு, மயிலாப்பூர், சென்னை,  டிசெம்பர் 2017, பக்.357 )

‘ஸ்வஸ்திநோ மிமீதாம் ஸூக்தம்’ என்ற ரிக் வேத பகுதி இது. அதன் தமிழாக்கம் என்னவென்றால், ‘சூரிய சந்திரர்கள் வானில் தடையின்றி சஞ்சரிப்பது போல் நாமும் மேலான பாதையில் பாதுகாப்பாகப் பயணம் செய்வோம். நமக்கு மேன்மேலும் உதவி செய்பவர்கள், அமைதியை விரும்புபவர்கள், நம்மைத் தெரிந்து கொண்டு நினைத்துப் பார்ப்பவர்கள் ஆகியோருடன் இணைந்து செல்வோம்.’

( இதில் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படம்  Nan Tien என்ற சிட்னியில், சீனர்களால் பரிபாலிக்கப்படும் புத்தவிஹாரம் ஒன்றில் 10.4.21 அன்று எடுக்கப்பட்டது. புத்த விஹாரத்தினால் நடத்தப்பட்ட கண்காட்சியின் போது மூன்றாவது இடத்தைப் பெற்ற இக் கலைப்படைப்பு,  வயர்களால் பின்னப்பட்ட ’மரமும் வேரும்’ என்ற பெயரில் வெளிப்புறமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ) 

Tuesday, March 16, 2021

இன்றய மொழிபெயர்ப்புச் சூழலில் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புகள்

அண்மையில் சமஸ்கிருதக் கவி காளிதாசரை படிக்கவேண்டும் என்றொரு விபரீத ஆசை ஒன்று எனக்குத் தொற்றிக் கொண்டது. 

முன் ஒரு தடவை தனிநாயகம் அடிகளாரைப் படித்த போது அவர் சொல்லி இருந்த சாகுந்தலத்தின் ஒரு இடம் மறக்கவொண்ணாததாக அடிமனதில் அமர்ந்திருந்ததும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். அது என்னவென்றால், சகுந்தலை தன் தந்தையாரைப் பிரிந்து போகிற காட்சி. அதனை விபரிக்க ஒரு உவமையை காளிதாசர் சொல்கிறார். மலபார்கரைகளில் (மலையாளக் கரைகளில் ) செழித்து நிற்கிற சந்தன மரத்தினைப் பற்றிப் படர்ந்திருக்கிற கொடியை அந்த மரத்தில் இருந்து பிரிப்பதைப் போல சகுந்தலை தந்தையை விட்டுப் பிரிந்து போகிறாளாம். 

இது காளிதாசர் உவமை வழி சொல்லும் அழகியல் சார்ந்த புலமை அழகு. இந்தப் புலவனின் அழகே இந்த உவமைகள் தானே! அதனைப் புரிந்து கொள்ளாத மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்  தன் புலமையைக் காட்டும் படியாக அதிலிருக்கிற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தன் கவிதைகளின் வழியாக நமக்குக் கதை சொல்லிக் கொண்டு போகிற ஒரு மொழிபெயர்ப்பை வாசித்தேன். மேலுமொருவரின் மொழிபெயர்ப்போ எனில் ‘சந்தன மரத்தில் இருந்து அதன் பட்டையை உரிப்பதைப் போல சகுந்தலை தந்தையைப் பிரிந்து போகிறாளாம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருந்தது. 

இன்னும் எனக்கு மூலமொழியில் காளிதாசர் எப்படிச் சொல்லி இருக்கிறார் என்றே தெரியவில்லை......

உண்மையில் ஒருவருடய ஆக்கத்தை மொழிபெயர்க்க முயல்பவர்கள் முதலில் நல்ல ரசிகர்களாக இருக்க வேண்டும். இரண்டாவது அப் படைப்பின் முக்கியத்துவத்தையும், அதன் அழகியலையும், சொல்ல வரும் கருத்தையும் அது எழுந்த கால பண்பாட்டு வாழ்க்கைச் சூழலையும் உள்வாங்கி இருக்க வேண்டும். பிறகு கொஞ்சம் காலமெடுத்து அதனை அசை போட வேண்டும். அசைபோடுதல் என்று நான் சொல்வதன் தாற்பரியம் என்னவென்றால், அது எழுந்த பண்பாட்டு அரசியல் பொருளாதார சூழலை மட்டுமன்றி அந்த ஆசிரியனைப் பற்றியும்  படிக்க வேண்டும். அறிதல் வேண்டும். அந்தப் படைப்பின் ஆத்மாவைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான்  இரண்டு மொழிகளின் மீதான புலமை அவசியப்படும். 

மொழிபெயர்ப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய ஒரு செயல். முடிந்தால் மாத்திரமே செய்ய வேண்டிய ஒன்றும் கூட.  இதனைச் செய்வதால் யாருக்கு அல்லது எதற்கு என்னவிதமான பயன் அல்லது பலன் என்பதை நமக்கு நாமே ஒருதடவை கேள்வி கேட்டு நம்மை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதனை மொழிபெயர்ப்பதற்கான தகுதிப்பாடு நமக்கு இருக்கிறதா என்பதையும் அதன் வழியே  ஒரு தடவை நமக்கு நாமே  உறுதிப்படுத்திக்  கொள்ளுதல் அவசியம்.

‘வொல்காவில் இருந்து கங்கை வரை’ புத்தகத்தை மொழிபெயர்த்த கண. முத்தையாவை ஒரு தடவை நினைத்துக் கொள்ளுகிறேன். ‘தன்னை அறியும் விஞ்ஞானம்’ புத்தகத்தை மொழிபெயர்த்த கே. ராமசுப்பிரமணியம் என்பாரை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் அதனை ஒரு தொண்டாக; சமூக பற்றுறுதியோடும் பொறுப்புணர்வோடும் ஒரு வித பக்தியோடும் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தையும் தார்ப்பரியத்தையும் அறிந்தவர்களாக அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு தவத்தைப் போல தமிழையும் மூல மொழிச் சிந்தனையையும்  வளம்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இன்றய காலங்களில் பெரும்பாலானவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நேரடியாக ஒரு ஆக்கத்தைப் பார்த்துவிட்டு, அதனை அப்படியே மொழியாக்கம் செய்ய முனைகிறார்கள். ஆகையினால் அது உயிரற்ற உடலைப் போல ஆகி விடுகிறது. 

ஆகையினால், மொழிபெயர்ப்புகள் குறித்தும்; யார் அதனை மொழிபெயர்க்கிறார்கள் என்பது குறித்தும்; நாம் ஒரு சிறந்ததும் தெளிவானதுமான பார்வையைக் கொண்டிருத்தல் அவசியம்.  இல்லையெனில் அது விபரீதமாகப் போய் விடும் ஆபத்து அதில் அதிகம் உண்டு. அது மூல மொழிக்கு நாம் செய்யும் மொழித்துரோகமெனினும் மிகையில்லை.

இந்த ஒரு அவதானச் சூழலில் இருந்து கொண்டுதான், மொழிபெயர்ப்புகளுக்குள் நுழைவது பாதுகாப்பானது. இப்போது விரிந்துகிடக்கிற பரவலான சகலருக்குமான வாய்ப்புச் சூழல்கள் எல்லோரையும் படைப்பாளியாக்கி விடுகிறது; பணமிருந்தால் புகழையும் பிரபலத்தையும் கூட அது கொடுத்து விடுகிறது. நண்பர்களைப் பலவாறாகப் அது பெருக வைக்கிறது. இலகுவாக சமூக வலைத்தளங்கள் அவைகளை ஊதிப் பெருப்பித்து வீங்கச் செய்து இன்னொரு தளத்துக்கு உயர்த்திக் கொண்டும் சென்று விடுகிறது....

இப்போதைய ’வலை சூழ்’  வாழ்க்கைச் சூழல் அவ்வாறானது. ஆகையால் கவனமாய் ‘நடந்து செல்லுதல்’ அவசியம்.

அது நிற்க,

கடந்த சில மாதங்களின் முன் கனலி என்றொரு சிறந்த இணையப் பத்திரிகையில் கீழ்வரும் இந்த கீதா மதிவாணனின்  மொழிபெயர்ப்புக் கவிதையைப் படித்தேன்.


என் படகு பெரிதாய் எதிலோ மோதியுடைந்து 

ஆழ்கடலுக்குள் மூழ்கிவிட்ட உணர்வு


ஆனால் எதுவும் நடக்கவில்லை

எதுவுமில்லை... நிசப்தம்... அலைகள்...


எதுவும் நடக்கவில்லையா?

அல்லது எல்லாமே நடந்து முடிந்துவிட்டதா?

இப்போது நாம் அமைதியாய் நின்றிருப்பது

அடுத்த பிறவியிலா?


ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் என்பாரின் ( 1881 - 1958 ) இந்தக் கவிதையை ஆங்கில வழியில் இருந்து தமிழுக்கு ’கனலி’ யூடாக எடுத்து வந்த கீதாவின் கவிதை அது.  

( இதனைக் காண இங்கே கனலி அழுத்துங்கள் )

இந்தக் கவிதை வாழ்வுக்கும் இறப்புக்குமான ஓர் உயிரின் இடமாற்றத்தை ( Transformation ) எளிமையாக அறிவிக்கிறது என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.  

( இது போன்றதான கருவை கொண்டதான ஓர் அவுஸ்திரேலிய சிறுகதை ‘ A long wait' இனை கடந்த வருடம் SBS வானொலி மொழிபெயர்த்து ஒலிபரப்பாக்கியது. அதனை சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள் மொழிபெயர்த்து, தன் குரலில், புலமையோடு தருவதை கீழ்வரும் இணைப்பை அழுத்தி கேட்கலாம். A long wait  இவைகள் எல்லாம் ஒரு இறப்பின் போதான உயிரின் இடமாற்றத்தை சிந்திக்கும் செயல் நுட்பங்கள். )

ஆனால் அண்மையில் கீதாவின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வேறு சில புது கதைகளைப் பார்த்த பின்னால் மொழிபெயர்ப்புலகில் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் இக் கவிதை கச்சிதமாகப் பொருந்திப் போவது போல தோன்றுகிறது.

மிக இலகுவாகவும் எளிமையாகவும் வியக்கத்தக்க வகையிலும் நடந்து முடிந்து விடுகிறது அந்த லாவகம் மிக்க transformation. 

அவரின் மொழிபெயர்ப்பு கதைகளையோ கவிதைகளையோ படித்து முடித்து விட்ட பின்னால் இரண்டு விடயங்கள் மனதில் கூடாரம் போட்டு தங்கியும் தேங்கியும் விடுகின்றன. லாவகமாக அதே நேரம் ஒரு வித எளிமையோடும் ஒரு செயலைச் செய்து முடித்து விட்ட கைவண்ணம் என்பது ஒன்று. மற்றயது தெரிவு செய்த பொருளும் அது வெளிப்படுத்தும் காட்சிப் படிமமும் என்பது மற்றொன்று.

கனலியில் வெளி வந்திருக்கும் கீதாவின் மற்றொரு மொழிபெயர்ப்புக் கவிதை இது.

’ஒரு றோஜாவைப் போல 

ஒவ்வொரு இதழாய் பிய்த்தேன் உன்னை

உள்ளிருக்கும் உன் ஆண்மாவைக் கண்ணுற

என்னால் அதைப் பார்க்கவே இயலவில்லை.


ஆனாலும் சூழ்பரப்பு யாவிலும் எங்கெங்கும்

நிலத்தின் கடலின் நீள்எல்லை வரையிலும்

ஏன் அந்த முடிவிலியிலும் கூட வியாபகம் கொண்டிருந்தது

அளப்பரியதும் உயிர்ப்புமான ஒரு பரிமளம்’


இப்படியாகத் தான் இறுதியாக ஒரு ’பரிமளம்’ அவரின் கைவண்ணத்தில் பிரகாசிக்கிறது. நிஜமாகவே!

கடுமையான வித்துவச் சொற்களைக் கையாளாமலே மிக நேர்த்தியாகவும் நளினமாகவும் அதே நேரம் வசீகரமாகவும் மொழியைக் கையாளும் கலை கைவரப் பெற்றவர் கீதா. உதாரணமாக ‘மேக்வாரியின் நண்பன்’ என்றொரு கதை. மதுச்சாலை உரையாடல்களைக் கொண்டமைந்த, நட்பின் உயர்வை பேசும் அற்புதமான ஒரு கதை. அதில் ஒரு காட்சி விரிகிறது.  ஒரு குடிகாரன் மேசையருகில் வந்து நிற்பதை விபரிக்கும் இடம் அது. ‘.....அந்த மகா மோசமான ஜென்மம் தன்னைக் கட்டுப்படுத்தியவனாய் அமைதி காத்தான். அவனது கைகள் மேசையின் விளிம்பை இறுக்கிப் பிடித்திருந்தன. விறைப்பாய் நின்ற கைகளுக்கிடையே தலை தொங்க, அழுக்குத் தரையை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  பிறகு தலையை நிமிர்த்தி மெல்லிய குரலில் பேசினான்....’ (பக் 147)

சண்டைக்குத் தயாராகும் அந்தக் குடிகார நண்பனை விபரிக்கும் இடம் இது. ‘.......அவன் கடையின் பின்புறம் சென்று, கையிலிருந்த கண்ணாடிக் குவளையை வீசி எறிந்தான். தொப்பியைத் தூக்கி எறிந்தான். கால்சராயை இடுப்புவாரில் இறுக்கிப் பிடித்தான். அது கணுக்காலுக்கு மேலே துக்கிக் கொண்டு நின்றது. மேற்சட்டையின் கைகளை மடித்து விட்டான்......’ (பக். 151)

ஓர் ஆரம்ப கால அவுஸ்திரேலிய ஆங்கில மொழியிலமைந்த ஒரு கதையாடலை; அதன் காட்சிப் படிமங்களை மிக எளிய தமிழில், புரியும் படியான கொச்சையற்ற அழகு மொழியில் பிடித்துவரும் லாவகமும்,காட்சி விபரிப்பும் ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை எடுத்து வரும் ஆற்றலும்  கீதாவின் மிகப்பெரிய பலம். 

புதர் காடு, ஓடைக்கரை, மது விடுதி,ரோமக்கத்தரிப்பு நிலையம், தனிமைத் தருணங்கள், போக்கிரிப்பயல், அரைமனம், சகாயவிலை,கொட்டகை, விலவண்டி, தீவனப் பயிர்.... இவ்வாறாக பெருகி வரும் சொற்களுக்கான மூல மொழியாடல் என்னவிதமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதனை தமிழுக்கு மடைதிருப்ப எத்தனை பிரயத்தனங்களை அவர் மேற்கொண்டிருக்கக் கூடும்? எனினும் எத்தனை அநாயாசமாக அதனை இலகு தமிழுக்கு திருப்பி விடுகிறார் என்பது ஆச்சரியம்.

கீதாவின் மொழிபெயர்ப்பினூடாக ஹென்றியை அறிய முயல்கின்ற போது அவருடய பெரும்பாலான கதைகள் ஒரு மனித சுபாவத்தை ஒரு காட்சிப் பின்னணியில் மிகத் துல்லியமாக எடுத்துரைப்பனவாக அமைகின்றன. புறத்தோற்றத்தினாலன்றி கதாபாத்திரங்கள்  அவர்களின் அன்றாட குண இயல்புகள் வழியாகவே ஹென்றியால் கட்டமைக்கப்படுகிறார்கள். உன்னிப்பாக மனித சுபாவத்தை கவனித்து, தன் கதையில் இயல்பாக நடமாட விடும் ஹென்றியின் உச்சபட்ச திறமை கீதாவின் கைவண்ணத்திலும் சிதைவின்றி வந்திருக்கிறது.  பிறைட்டனின் மைத்துணி, பொறுப்பிலி, மேக்வாரியின் நண்பன், ஆசிரியர் செய்த பிழை, சமையல்காரரின் நாய், அவள் பேசவில்லை, ஒற்றைச்சக்கரவண்டி, சீனத்தவனின் ஆவி, மந்தை ஓட்டியின் மனைவி போன்ற கதைகள் ஒவ்வொரு மனிதர்களையும் துல்லியமான காட்சிப்புனைவுகளாக மனித உருவங்களுக்கு அவரவர் தனித்துவமான குணங்களூடாக உயிர் கொடுத்த பாத்திர வார்ப்புகளாக நம் கண்முன்னே உலா வருகிறார்கள். அவர்கள் வேறு மொழி பண்பாட்டு சிந்தனைச் சூழலில் இருப்பவர்களாக இருக்கின்ற போதும்.....அது மொழியை லாவகமாகக் கையாளத்தெரிந்ததால் வந்த விளைவென்றே எனக்குத் தோன்றுகிறது.

 ஹென்றியின் இந்த ஆழுமைப் புலத்தை நன்கு விளங்கிக் கொண்டவராக கீதாவும் இருந்திருக்கிறார் என்பதுவும் அதன் பலத்தை; சிறப்பை தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதோடு அதனை அவர் ரசித்து, விதந்து தன் அநாயாசமான மொழிவீச்சின் வழியாக அந்த குணங்கள் நிரம்பிய உருவங்களை எம் கண்முன்னே உலவ விடுகிறார் என்பதும் கீதாவின் மொழிபெயர்ப்புகளை நாமும் ரசிக்க  இன்னொரு முக்கிய காரணம்.. அது ஒரு பொறுப்புணர்வின் பாற்பட்டது. மூல ஆசிரியனுக்கும் கொடுக்கும் உயர்வான மரியாதை அது!

கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய முதலாவது தொகுப்பை படித்த நாளில் இருந்து நான் அவரின் மீது மதிப்பு கொண்ட ரசிகையாகி விட்டேன். அதற்கு அவரது இந்த பொறுப்பு மிக்கதான குண இயல்பே முக்கிய காரணம். 

குணம் என்று இங்கே நான் முக்கியமாகச் சொல்ல வருவது என்னவென்றால் மொழிமீது அவர் கொண்டிருக்கிற விசுவாசம்; மூல படைப்பாளியின் மீது அவர் கொண்டிருக்கும் பற்றுறுதியும் ஒருவிதமான விசுவாசம் கலந்த அன்பும் பொறுப்புணர்வும், அதனை தமிழுக்கு தர அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அதற்கு அவர் கொடுக்கும் நேரமும் உழைப்பும். ஓர் ஆலயம் தன் பிரசாதத்தை பக்தர்களுக்குக் கொடுப்பதைப் போல ஒருவித பவித்திர உனர்வோடு அதனை தமிழ் இலக்கிய உலகில் அவர் சமர்ப்பிக்கும் அந்தப் பாங்கு....

‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பில் மேலும் சில புதிய சிறுகதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன. அத்தனையும் முத்து முத்தான சிறுகதைகள். ஆரம்ப கால அவுஸ்திரேலியர்களின் வாழ்வை; பாடுகளை; உணர்வுச் சித்திரங்களாக்கி ஹென்றி லோஷன் உலவவிட; அதற்கு எந்தவிதமான பாதிப்பும் நேர்ந்து விடாதவாறு பக்குவமாக அதனை அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அதனைத் தமிழுக்குத் தந்து தமிழுக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கீதா.

இருந்த போதும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பை முதற்பதிப்பில் வந்த அதே அளவு கதைகளோடு தந்து விட்டு,  இன்னுமொரு மொழிபெயர்ப்புத் தொகுதியை இதில் பிரத்தியேகமாக இனைக்கப்பட்டுள்ள 7 கதைகளோடு, மேலும் சில கதைகளையும் மொழிபெயர்த்து இன்னொரு புத்தகமாகத் தந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற புத்தகத் தலைப்பு ஹென்றி லோஷனின் ஒரு சிறுகதையின் தலைப்பாக இருந்திருக்கிறது. அதனால்  கீதா அந்தத் தலைப்பை இந்தப் புத்தகத்துக்கு வைத்திருக்கக் கூடும். ஆனால், அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் மொழிபெயர்ப்புகள் என்பதை இந்தத் தலைப்பு எந்த விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது; ஹென்றி லொஷன் சிறுகதைகள் என்று அடைப்புக் குறிக்குள் அது இடம்பெற்றிருக்கிற போதும்.... மாறாக, ஹென்றி லோஷன் சிறுகதைகள்  என்று பொதுவாகத் தலைப்பிட்டிருந்தால் அது இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ என்று எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

இருந்த போதும், ஹென்றிலோஷனையும் ஆரம்பகாலகட்ட அவுஸ்திரேலிய வாழ்வியலை நமக்கு மிக இலகுவாக அறியத்தந்தமைக்கும் கீதாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதை விட, என் ஆத்மார்த்தமான நன்றியறிதலைச் சொல்லவே நான் பெரிதும் பிரியப்படுகிறேன்.

ஏனென்றால் அவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கு அதன் ஆரம்பகால பங்களிப்பாளராக தன் கடமையை செவ்வனே செய்து நிலையாக தன் இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். 

அவரிடம் இருந்து மேன்மேலும் பல அவுஸ்திரேலிய இலக்கியப் படைப்பாளிகளின் இலக்கியச் செல்வங்கள் அவரின் வழியாகத் தமிழை அலங்கரிக்க வேண்டும் என்பது என் ஆசை.

இறுதியாக விடைபெற்றுச் செல்லு முன்னர் ‘கனலி’ இணையப் பத்திரிகையில் அவரால் மொழிபெயர்க்கப் பட்ட இந்தக் கவிதையோடு விடைபெறுதல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

( முழு நிலவு வானை வியாபித்து, ஒளியால் பரிபாலித்த படி, பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதன் குளிர்மை மிக்க திவ்ய ஒளி உலகை ஒளியால் குளிப்பாட்டுகிறது. அதனை ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் தன்மொழியில் தர, அதை கீதா தமிழுக்குத் தருகிறார், இப்படியாக....)


கதவு திறந்திருக்கிறது

சில்வண்டு ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது

நீ நிர்வாணமாகத்தான் வலம் வரப் போகிறாயா 

அவ் வயல்களினூடே?


அழிவில்லாத நீர் போல

எல்லாவற்றினுள்ளும் நுழைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறாய்

நீ நிர்வானமாகத் தான் திரியப் போகிறாயா 

அக் காற்றினில்?


துளசிச் செடி தூங்கவில்லை

எறும்பு சுறுசுறுப்பாய் இயங்குகிறது

நீ நிர்வானமாகத்தான் உலவப் போகிறாயா

வீட்டில்?