Thursday, December 30, 2021

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; இனம் காணல் - 2 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையை கண்டறிதல் - 1 -

( முதல் பகுதியை வாசிக்க மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.)

சரி, அப்படி என்றால் அதனை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க என்னதான் செய்ய வேண்டும்? 

நாம் பாடசாலைகளை நிறுவி இருக்கிறோம்; கோயில்களைக் கட்டி இருக்கிறோம்; நடை, உடை பாவனைகள், உணவு முறைகள், பண்டிகைகள் எல்லாவற்றையும் முடிந்தவரை பின்பற்றுகிறோம். இனி என்னதான் செய்வது என்று கேட்பது காதில் ஒலிக்கிறது.

குடும்ப அலகில் இருக்கும் நாம்  ஒரு குடும்பச் சூழலில் ஒரு முக்கியமான வேலை ஒன்றைச் செய்ய நாம் தவறிவிட்டோமோ என்று எனக்குத் தோன்றுகிறது...

அது, அறத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பது தான். 

அறத்தோடு நின்ற வாழ்க்கை நமது. சங்க காலத்து காதல் வாழ்வில் இருந்தே நமக்கு அதற்கான ஆழ வேர்கள் விரவி விருட்சமாகி நம் பண்பாட்டில் தளைத்து நிற்கிறது. இன்றய தமிழில் எளிமையாகச் சொல்வதாக இருந்தால் ‘மனச்சாட்சியோடு இருத்தல்’, மனிதத்தன்மையோடிருத்தல்  என்று இலகுவாக அதனைத் தெளிவு படுத்தி விடலாம். 

இதனை தமிழ் பாடசாலைகள் கற்றுக் கொடுக்கவில்லை; கோயில்கள் கற்றுக் கொடுக்கவில்லை; பண்டிகைகளோ கொண்டாட்டங்களோ கற்றுக் கொடுக்கவில்லை; கூடவே குடும்பங்களும் அதனைச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. 

இது கற்றுக் கொடுத்து வருவதா என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆம்; இங்கு அதனை நாம் கற்றுக் கொடுத்துத் தான் ஆகவேண்டும். ஆங்கிலப் பாடசாலைகளில் அதன் கல்வி முறைகளில் தனி மனித சுதந்திரம்; தனிமனித சிந்தனை; முயற்சி அதன் வழி பெறப்படும் வெற்றி என்பது முதன்மைப் படுத்தப் படுமிடத்து; இல்லங்களில் பணத்தின் வழி பொருட்கள் நிறைந்து அன்பு பற்றாக்குறையாகிப் போகுமிடத்து; இரு பண்பாட்டுக்குள் வாழும் ஒரு குழந்தை அறத்தைக் கற்றுக் கொள்ளுதல் எங்ஙனம்? சுயநலம் மேலோங்கும் சாத்தியம் தானே அநேகம்....விட்டுக் கொடுக்க வேண்டி இருக்காது; சகித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது; ஒரு பொருளின் அருமை புரியாது; அன்பு என்பதன் வலிமையும் அதன் தார்ப்பரியமும் புரிந்து கொள்ளப்படாததாக ஆகி போயிருக்க தன்னை மையப்படுத்தியதாக ஒரு குழந்தை வளரத்தானே சாத்தியம் அதிகம்...

இவற்றுக்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்வது? சமூகமாக நாம் இணைந்து இதற்கு என்ன செய்யலாம் என்பது இன்று நமக்கு முன்னால் உள்ள சவால்.

பண்பாட்டின் வேர்களை இன்னும் ஆழமாகச் சொல்ல கல்விச்சாலைகளை விட வேறென்ன வழிவகைகள் உள்ளன? கவர்ச்சியாக; விரும்பும் படியாக; அவர்களின் ஆர்வத்தை ஊட்டும் படியாக;  பார்வைப் புலன் வழியாக பார்த்து; ஸ்பரிசித்து; உணர்ந்து பார்த்து, இளம் சமூகத்துக்கு ஒரு கருத்தினைக் கொண்டு செல்ல இருக்கும் வேறு வழி வகைகள் எனென்ன?

இது தான் நமக்கு முன்னால் இன்று நமக்குள்ள கேள்வி.

தொடரும்.....

No comments:

Post a Comment