Saturday, September 24, 2022

ஈழத்தமிழ் தேசிய கீதம் - பரமஹம்சதாசன்

 


இதுவரை நான் கேள்விப்பட்டிராத பெயர் பரமஹம்சதாசன். 

3.9.22 அன்று இலங்கையில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிகழ்த்தப்பட்ட இசைநிகழ்ச்சி ஒன்றிற்குப் போயிருந்தபோது கொடுக்கப்பட்ட ஓரு கைநூலில் இந்த ஈழத்தமிழ் வணக்கப் பண் என்ற தலைப்பில் அமிழ்தம் போன்ற இந்தப் பாடலைக் கண்டேன். அதனை இயற்றியவர் பெயர்  பரமஹம்சதாசன் என்றிருந்தது.

கூகுளில் அவரைத் தேடிய போது அவர் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு தமிழகக் கவிஞர் என்ற ஆச்சரியத் தகவல் கிட்டியது. 16.12.1916ல் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து, பிரமச்சாரியாகவே வாழ்ந்து, தனது 49வது வயதில் 1965 ஜனவரியில் மறைந்திருக்கிறார். 

கவியோகி சுத்தானந்த பாரதியார் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தவர் பின்னாளில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தொடர்பால் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீது பக்தி கொண்டு, தன் பெயரை பரமஹம்சதாசன் என்று மாற்றிக் கொண்டார் என்று அறிய முடிகிறது.




தாய்நாட்டு வணக்கப் பண்

வாழ்க ஈழத் தமிழகம்

வாழ்க இனிது வாழ்கவே

மலைநிகர்த்திவ் வுலகில் என்றும்

தலை நிமிர்ந்து வாழ்கவே!


அமிழ்தை வென்ற மொழியினள்

அருள் கனிந்த விழியினள்

அரிய பண்பு நிதியினள்

அவனி மெச்சும் மதியினள்

மமதை கொண்ட பகைவரும்

வணங்கும் அன்பு விதியினள்

வளரும் இருபத் தைந்துலட்சம்

மக்கள் கொண்ட பதியினள் 

                                                               ...வாழ்க

வானம் பாடி போலமீன்

கானம் பாடும் வாவிகள்

மலர்க் கனி குலுங்கிடும்

எழில் மிகுந்த சோலைகள்

தேனும் பாலும் பாய்ந்திடச்

செந்நெல் பொலியும் கழனிகள்

தெய்வ கற்பகத் தருக்கள்

உய்வ ளிக்கும் மாநிலம்

                                                        .....வாழ்க

பட்டிப் பளை

பயில் அருவிமுத் தாறுகள்

பல வளங்கள் பொலியவே

எழில் நடஞ்செய் துலவிடும்

மட்ட களப்பு, யாழ்நகர்,

மாந்தை, வன்னி, திருமலை,

மகிழ்வொடு மலைத் தமிழர்கள்

மலரடி தொழும் இனியவள்

                                                                .... வாழ்க

இக்கவிஞர் காலமாகுவதற்கு இரண்டு வருடங்களின் முன்னர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘Fruit Gathering' என்ற நீண்ட கவிதையை 'தீங்கனிச் சோலை' என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். அதில் ஒரு சிறு பகுதி இது.


                      எனது பிரார்த்தனை


’ஆபத்தி நின்றெனைக் காத்தருள்’ என்று 

தாபத்தி னாலுந்தன் தாளுறவில்லை!

’யாவற்றை யும்வெல்லும் ஆற்றலை நல்கென்

றே, பக்தி செய்துனை ஏத்திடு கின்றேன்!


’துன்பம் துடைத்துச் சுகப்படுத்’ தென்றுன்

இன்பப் பதத்தை இறைஞ்சிட வில்லை;

தெம்போ டணைத்தும் சிரித்துத் தகர்த்தும்

பண்பை எனக்கருள்’ என்றே பணிந்தேன்!


வாழ்வெனும் போர்க்கள வாயிலில் நின்றுன்

தாள்பணிந் தேதுணை தாவென வில்லை;

‘நாள் கடந்தாலும் , தன் நம்பிக்கை மிக்க

நீள்கடும் போர்த்திறல் நீயருள்’ என்றேன்


தப்பிக்க வெண்ணித் தயங்கிப் பதுக்கல்

அற்ப முமின்றி, என் ஆத்மசுதந்திரப்

பொற்பினை, ஆற்றல் பொறுமையில் காண

வெற்பெனத் திண்மன வீறெனக் கே, தா!


வெற்றியில் மட்டும்நின் விண்கரு ணைத்தேன்

கொட்டிடக் கண்டொரு கோழையா காமல்,

உற்றிடும் தோல்வியி லும், நின் கரத்தைப்

பற்றில், வாழ் வுண்டென்னும் பண்பு மனம் தா!


(- மகாகவி தாகூரின் ‘Fruit Gathering' ன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘தீங்கனிச் சோலை’ -  பரமஹம்சதாசன். முதற்பதிப்பு 1963, ஏப்பிரல், ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி, இலங்கை. பக் 139 - )

இப்புத்தகத்தை நூலகத்தின் கீழ்வரும் இணைப்பினைச் சொடுக்கிச் செல்வதின் வழி கண்டு கொள்ளலாம். 

 தீங்கனிச் சோலை

நன்றி: noolaham.org

No comments:

Post a Comment