Monday, November 6, 2017

என் தேசத்தின் குரல்...

சுமார் 22 வருடங்களின் பின் தாயக மண்ணில் கால் மிதித்தேன்.....1995 யாழ்ப்பாணப் புலப்பெயர்வோடு பிரிந்த மண்......

இடையில் தான் எத்தனை மாற்றங்கள்.....
வாழ்க்கை புரட்டிப் போட்ட வண்ணங்கள் எத்தனை.....

எதனைச் சொல்வது எதனைச் சொல்லக் கூடாது என்று எதுவும் தெரியவில்லை....

என்னைச் சீராட்டி பாராட்டி வளர்த்த சொந்தங்கள் வயதாகி உடல் நலிந்து போனார்கள்... அவர்களைப் பார்க்க வேண்டும்....அப்போதெல்லாம் கால்சட்டை நழுவ நழுவ ஒரு கையால் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் திரிந்த என் ஒன்று விட்ட தம்பி மார் தங்கச்சி மார் எல்லாம் திருமணமாகி பிள்ளை குட்டிகளோடு..... புது மச்சாள் மார்... அவர்களைப் பார்க்க வேண்டும்....

டிஜிட்டல் உலகம் கொண்டுவந்து கொட்டிய குப்பைகளுக்கு அப்பால் நான் வாழ்ந்த வாழ்வியலை அதன் அத்தனை அழகுகளோடும் தரிசிக்க வேண்டும்.

எங்களூர் செம்பாட்டு மண், உண்டு தீர்த்த பழங்கள், ஓடித்திரிந்த இடங்கள், கோயில்கள்....

நான் திரிந்த மண்....நான் கொண்டாடிய நண்பர்கள்... நான் படித்த பள்ளி.... கண்டு அறிவூட்டிய விரிவுரையாளர்கள்....என்னோடு கூட வந்த ஒரு வாழ்வியல்.....

இவைகளைக் காண வேண்டும்.....

பார்த்தேன்; எல்லோரையும்... எல்லாவற்றையும்....

கூடவே போரினால் நலிந்து போயுள்ள ஒரு தேசத்தையும்....

வெளியே பார்க்க தேசம் புதுசாய் தான் இருக்கிறது. புதிதான வீதிகள்.... சிற்றூர் தோறும் கோபுரங்களோடு கோயில்கள்.... பூஞ்சோலைகளோடு புது மெருகு பெற்றுள்ள பாடசாலைகள்....மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள்....புதிது புதிதாக கல்யாண மண்டபங்கள்....

வீதி திருத்த வேலை தவிர்ந்த மற்றெல்லாம் வெளி நாட்டுக் காசுதான் போலும்...

ஆனால்,

வீதிகளில் தென்பகுதி சுற்றுலா வாகனங்கள் மூட்டை முடிச்சுகளுடன். கோயில் மணியோசை கேட்டு கூடுவார் அங்கெவரும் இல்லை; திருவிழாக்களில் சாமி காவ இளையோர் என எவரையும் காணோம். பொடி பொட்டை எண்டு இளைய முகம் எண்டு ஒண்டையும் காணயில்லை....ஆங்காங்கே சில முதிய முகங்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களாலும் இஸ்லாமிய சகோதரர்களாலும் நிறைந்திருக்கிறது. தற்போதய பேராசிரியர்கள் சிலர் நுனிப் புல் மேய்ந்து வரும் சம்பளத்தோடு திருப்தியுற்று தற்பெருமை மிக்க ஜம்பவான்களாக மிளிர்கிறார்கள். பழைய பேராசிரியர்கள் ஆதங்கத்தோடு ஆங்காங்கே ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள்; மற்றும் சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள், மற்றும் வேறு சிலர் தம் மன நலத்தை பேணும் நிமித்தம் அக்கறைகளை தம் குடும்பத்துக்குள்ளாகச் சுருக்கிக் கொண்டுள்ளார்கள். சில ஓய்வு பெற்ர பேராசிரியர்களைத் தவிர வேறு எங்கும் அர்த்தமுள்ள; சமூக நோக்கிலான உரையாடல்களை  கேட்கக் காணோம்...சொற்ப இளைஞர்கள் பிரக்ஞை பூர்வமாக இல்லாமலும் இல்லை...

தொழில் நுட்பம் கொண்டு வந்த மாற்றங்களின் செல்வாக்கும் நிணைவு கூரற்பாலது தான்.

வீதிகளில் இறங்கினால் நேரத்தோடு போய் நேரத்தோடு வந்து விடு என்று எச்சரிக்கை செய்கிறார்கள். அல்லது துணை ஒன்றை பலவந்தமாகத் திணித்து விடுகிறார்கள். ஒரு வீட்டுக்குச் செல்கிறேன் என்றால் சென்று விட்டேன் என்று இருந்த வீட்டுக்கு தொலைபேசியில் சொன்னால் தான் நின்மதி அடைகிறார்கள். வாள் வெட்டு நடக்கிறது என்று மிரட்டுகிறார்கள்...

என்றாலும் பொதுவாக பயமோ பதட்டமோ இன்றி மக்கள் அன்றாடக் கருமங்களைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பாமர சனங்கள் இன்னும் புறணிகளிலும் வேலிச் சண்டைகளிலும் சாதி பிரிவினைகளிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கியே கிடக்கிறார்கள். இவைகளுக்கு எந்த விதத்திலும் போர் பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.

சமையல்கட்டு வேலைகள் முடிந்த குடும்பப் பெண்கள் இரவுகளில் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்களுக்குள் மூழ்கிப் போய் விடுகிறார்கள்.

குழந்தைகள் குழந்தைமையை இழந்து இளம் தாய்மாரின் கல்விக் கரிசனையில் கரைந்து போயுள்ளனர்.

மண்ணின் ஆத்மா காயப்பட்டுப் போயிருப்பதாக; ஊமைக்காயம் கண்டிருப்பதைப் போல ஓருணர்வு...
...........................

இவை எல்லாவற்றுக்கும் மேலாய் என் தேசத்து ஊர் மண்ணில் கால் வைத்த நேரம் ஏற்பட்ட பரவசம் இருக்கிறதே... அதை எந்தச் சொல் கொண்டு நிரப்ப?
............................

வீட்டில் இறங்கியவுடன் என் கண்ணில் பட்டது ஒரு சாக்குக் கட்டில்.....
இப்போது கூகுள் இமேஜிலும் கிடைக்காத அந்தச் சாக்குக் கட்டில்....

( இனி பாவனைப் பொருள்களின் பட்டியலாகவும் பதிவுகளாகவும்  வருவன நீளும்...)

8 comments:

  1. தேசத்தின் குரல் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் குமார் :) எப்பிடி இருக்கீங்க? சந்தோஷம்பா; கண்டது..

      Delete
  2. தேசத்து ஊர் மண்ணில் கால் வைத்த நேரம் ஏற்பட்ட பரவசம் //

    ஊர் நாட்டில் 'பொழைச்சுக் கெடந்தா பார்க்கலாம்' என்பது போல் பார்க்கவேணும் கொடுத்து வைத்திருக்கிங்க.

    கறம்பும் ஒருநாள் செப்பமாகி மறுபடி விளைநிலமாகிடும் இறை நாட்டத்தில்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாப்பா.:) சுகமா இருக்கீங்களா? நிறைய விஷயம் இருக்குப்பா எழுத... எழுதணும்; காலம் அதுக்கு இடம் குடுக்கணும்...மூளைக்குள்ள traffic :)வரிசைகட்டி நிக்குது வேலைகள்...

      Delete
  3. தங்கள் நலன் குறித்த பிரார்த்தனைகளுடன் சுகமே தோழி.
    //நிறைய விஷயம் இருக்குப்பா எழுத... எழுதணும்; //
    மகிழ்ச்சி ! குறிப்பேட்டில் சுருக்கமாகப்பதிந்து விட்டால் நேரம் கிடைக்கும் போது செப்பனிட்டுக் கொள்ளலாம். உங்க கண்களால் காண எங்களுக்கு வெகு விடயங்கள் உள்ளனவே...

    ReplyDelete
  4. ஓம் ஜேகே. அழகாய் இருக்கு இந்த (happy) சொல்ல விரும்பியதை அழகாய் சொல்லி விட்டீர்கள்!

    நன்றி வரவுக்கும்...

    ReplyDelete