Thursday, January 21, 2021

தன்மை நவிற்சி அணி - 12 - ( 27.12.2020)

 SBS அரச வானொலியில் கடந்த வருடம் மாதம் ஒருதடவை ஒலிபரப்பாகி வந்த நம்ம தமிழ் - அணிகள் அறிமுகம் - நிகழ்ச்சியில் கடந்த டிசெம்பர் மாதம் நிகழ்ந்த இறுதி நிகழ்ச்சி இது. கீழ்வரும் link ஐ அழுத்துவதன் மூலம் அதன் ஒலிபரப்பை கேட்கலாம்.

sbs வானொலியில் தன்மை நவிற்சி அணி

அப்படிக் கேட்க விரும்பாதவர்கள் விரும்பினால் கீழே உள்ள  எழுத்துவடிவத்தை வாசிக்கலாம்.

......................................

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…..



https://www.youtube.com/watch?v=g5rxdBRSik8

இப்பாடலை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம் இல்லையா? இந்தப் பாடலுக்கும் நிகழ்ச்சியில் பேச இருக்கும் தன்மை நவிற்சி அணிக்கும்  என்ன சம்பந்தம்? 

ஒரு சம்பந்தம் இருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்வது தன்மை நவிற்சி அணி. அதாவது, எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டு அதன் இயல்புத்தன்மை மாறாதவாறு பாடப்படுவன தன்மைநவிற்சி அணியின் ஆகும்.

‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்

சொல்முறை தொடுப்பது தன்மையாகும்’ 

என்பது தண்டியாசிரியர் இவ்வணிக்குத் தரும் விளக்கமாகும். பொருளின் இயல்பை நேரில் பார்த்தது போல தோன்றுமாறு உள்ளதை உள்ளபடி விளங்கச் சொல்வது இவ் அணியில் சிறப்பான இயல்பு.

இப்போது இவ்வணியில் வெளிவந்த சில சினிமாப்பாடல்களைக் கேட்போமா?

1.இன்னும் கொஞ்சநேரம் இருந்தாத்தான் என்ன…


https://www.youtube.com/watch?v=I8UrKhurkuk

2.கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி….


https://www.youtube.com/watch?v=NDNjEMHeHi4

3.உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு..


https://www.youtube.com/watch?v=wqSYBDggWis

4. கறுப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு...

https://www.youtube.com/watch?v=Cj2XKo7zodA

5. ஊர்வசி ஊர்வசி….(4.20 -4.40)

https://www.youtube.com/watch?v=2lRX7zNSgX4

இப்பாடல்களில் எல்லாம் கவிஞர் தான் சொல்லவரும் கருத்தை எந்த விதமான மேற்கோள்களும் இல்லாமல் இருப்பதை இருந்தவாறாக காட்டியிருக்கும் பாங்கு எளிமையான இந்த அணிக்கு சில சினிமாப்பாடல் உதாரணங்கள்.

பொருளணியிலே தண்டியாசிரியர் குறிப்பிடும் இந்த தன்மை நவிற்சி அணியிலே பொருள் நவிற்சி அணி, குண நவிற்சி அணி, இன நவிற்சி அணி, தொழில் நவிற்சி அணி என விரிவான சில உட்கட்டமைப்புகளும் உள்ளன. 

பொருள் நவிற்சி அணி என்பது ஒரு பொருளின் புறத்தோற்றத்தில் தெரியும் தன்மையை விபரிப்பது. அதாவது வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தை அதன் இயல்பு மாறாது சொல்லுதல் பொருள்நவிற்சி அணியாகும். 

உதாரணமாக சிவனின் புற உருவத்தை கூறும் 

நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்

நூலணிந்த மார்பன் நுதல்விழியன்.... என்ற இப்பாடல் அடிகள் அதற்கு

ஓர் உதாரணமாகும்.


பொட்டுவைத்த முகமோ….

https://www.youtube.com/watch?v=Wem89JUffyE

குணத்தன்மையணி என்பது ஒரு பொருளினுடய உள் இயல்பினை விளக்குவதாகும். உதாரணமாக, உள்ளம் குளிர, உரோமம் சிலிர்த்து, நுரையும் தள்ள, விழி நீர்அரும்பத், தன்மறந்தாள்…என்று வரும் பாடலடியில் ஒருவருடய குண இயல்பு - உள்ளார்ந்த குணாம்சம் ஒன்று உள்ளவாறு சொல்லப்படுகிறதல்லவா? அது குணத்தன்மையணியாகும். இந்த சினிமாப்பாடல் அதற்கு சொல்லக்கூடிய ஒரு நவீன உதாரணம். 

.குமாரி என் நெஞ்சு விம்மி பம்மி நிக்குது குமாரி…

https://www.youtube.com/watch?v=fuLc6Z4ID1U&lc=UgjIubfiFAFzm3gCoAEC

அடுத்தது இனத்தன்மையணி. இனத்தன்மை என்பது தனக்கேயான இனத்தின் இயல்பை விளக்குவது. உதாரணமாக பாம்பு ஒன்றின் இயல்பை இப்படியாக ஒருபாடல் விளக்குகிறது.

பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்

துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர்

ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின்

பாகத்தான் சாத்தும் பணி.

இதில் பாம்பு இனத்தினுடய இயல்பு விபரிக்கப்படுகிறது. அதாவது, ஒழுங்குற அமைந்த கோடுகள் கொண்ட வயிற்றினை உடையன.நஞ்சு நிறைந்ததால் கரிய கழுத்தை உடையன.விரிந்த படத்தில் பிறையை ஒத்த புள்ளிகளை பெற்ரவை.மேலும், இரண்டாகப் பிளவுபட்ட நாக்கை உடையன. நஞ்சை பிற உயிர்கள் மீது செலுத்தவல்ல நுண்ணிய துளைகொண்ட பற்களைக் கொண்டவை என்பது இப்பாடலின் பொருளாகும்

  பெண் இனத்தினுடய இயல்பை வேடிக்கையாக விபரிக்கும் இந்த சினிமாப்பாடலும் கூட அதற்கு ஒரு உதாரணம் தான்.

பொம்பளைங்க காதலத்தான் நம்பி விடாதே….( 1.25 - 3.03)…


https://www.youtube.com/watch?v=_VLmEIsvVHE

தொழில் தன்மையணி என்பது தொழிலைப் பேசுவது.

சூழ்ந்து மூரன்றணவி வாசம் துதைந்தாடித்

தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் – 

என்ற இந்தப் பாடலடியில் வண்டினுடய தொழில் சொல்லப்படுகிறது. விவசாயத் தொழிலின் மேன்மையை சொல்லும் இப்பாடல் அதற்கு இன்னொரு உதாரணம்.

விவசாயி… விவசாயி… 0.39 – 1.15.

https://www.youtube.com/watch?v=bewqv9G6YX0

உள்ளதை உள்ளவாறாக விபரித்த இந்த தன்மைநவிற்சி அணியோடு நிறைவுக்கு வரும் அணிகள் குறித்த இந் நிகழ்ச்சியினை நிறைவு செய்யும் முன்பாக இதுவரை காலமும் இந் நிகழ்ச்சிக்கான நேரத்தையும் சுதந்திரத்தையும் பல்வேறு விதங்களில் உதவியையும் ஒத்தாசையையும் தந்து நிகழ்ச்சியினை மெருகு படுத்தி குரல் வெற்றிடங்களைச் சொல்லுக்குச் சொல் சரிபார்த்து பாடல்களை தோதான இடங்களில் இணைத்து அதனை நிறைவான நிகழ்ச்சியாக்கி நேயர்களுக்கு வழங்கியதில் எஸ்பிஏஸ் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் றைசெல் அவர்களுக்கு ஒரு பாரிய பங்குண்டு. அவருடய உழைப்புக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த  அவருடய தொழில் நிபுணத்துவத்துக்கும் நம்மதமிழ் ஊடாக என் மனமார்ந்த நன்றி 

இந் நிகழ்ச்சியை இதுவரைக் கேட்ட எஸ்பிஏஸ் நேயர்கள் அனைவருக்கும் பிறக்க இருக்கின்ற புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன். 

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்....

https://www.youtube.com/watch?v=1LrOTWoh7vs



Friday, January 15, 2021

தமிழர் அறம் குறித்த சிந்தனைகள்

 தமிழர்; தமிழ்; அவற்றின் பெருமை; வாழ்வு எல்லாம் அதன் தொன்மையிலும் போற்றுதலிலும் இல்லை; மாறாக அது சொல்லிச் சென்ற பொருளிலேயும் அதனை நம் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதிலேயுமே  தங்கி உள்ளது என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி’ என்று சொல்வதெல்லாம்   எத்தனை பேதமை? - வீண் பெருமை!

அண்மையில் அறம் குறித்த சிந்தனை மேலெழுந்த போது தமிழ் அறம் குறித்து  இலக்கியங்களில் குறித்து வைத்த சிந்தனைகள் தமிழின் மேன்மையினை இன்னொரு தளத்துக்கு உயர்த்துவதாகப் பட்டது. இலக்கிய வழி நெடுகிலும்; கடந்து வந்த தமிழ் பாதை எங்கினும்; அது, வாசம் வீசும் வண்ணம் தமிழ் பாதையின் இரு மருங்கிலும் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்ததைக் காண வாய்த்தது.

அது உலகு தழுவிய எல்லோரையும் சமனாகப் பேணும் பாண்மையில் எல்லோரையும் சகோதர வாஞ்சையோடு அணைத்துக் கொண்ட பாவனையில் பூத்திருந்தது. அடடா அதன் வாசனையில் தான் எத்தனை, எத்தனை சுகந்தம்!  தமிழனின் அறிவின் விசாலத்துக்கும் சிறப்புக்கும் மன மேன்மைக்கும் அதுவல்லவோ எடுத்துக் காட்டு!.Hormony ஐ அனுபவம் செய்யும் ஒரு வாழ்வியலை தமிழ், இப் பூஉலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது போலவும்.....

முதலாம் நூற்றாண்டுத் தமிழன் அதனை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றான். இப்படிச் சொல்ல எத்தனை பெரிய உயர்வான பண்பும் மேன்மையும் அறிவு விசாலமும் பக்குவமும் தேவைப்பட்டிருக்கும். அப்பாடல் மொத்தமுமே அழகு தான். ஒரு வாழ்க்கையைப் பக்குவமாய் வாழ வேண்டிய அத்தனை வாழ்க்கைச் செல்வங்களும் மொத்தமாய் அந்தப் பாடலில் அமைந்திருக்கிறது. அடக்கத்தையும் உண்மைச் செல்வத்தையும் வாழ்வின் இயல்பையும் வாழும் வழியையும் கூறும் அப்பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைத் தருவதே இல்லை.

   யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
 ( கணியன் பூங்குன்றனார்.)

இதனைச் சொல்லும் இச் சந்தர்ப்பத்தில் பிசிராந்தையாரை மறந்து கடந்து போக முடியுமா? அவர் சொல்லும் நரை இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழும் வழியை எத்தனை தரம் வாசித்தாலும் மனம் கடந்து போகத் தயங்கவே செய்யும்.

     ‘’யாண்டு பலவாக நரையில ஆகுதல்
   யாங்காகியர் என வினவுதிராயின்
   மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
   யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
  அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
  ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
  சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’

  ’ சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல’ (புறம் - 31) எனக் கோவூர்கிழார் அறத்தின் தலைமை கூறுவார். அவரவருக்கு உரித்தாக விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக ஆற்றுதலே அறம் என சங்க காலம் போற்றியதை புறம் 312 பட்டியலிட்டுள்ளது. கொடையறம் அரச இயல்பாக மலர்ந்திருந்ததைக் கடை 7 வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் விபரிக்கக் காண்பது ஒன்றும் தற்செயல் அல்லவே! ‘வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்; நடு நள் யாமத்து பகலும் துஞ்சாது கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும் உண்பது நாழி; உடுப்பவை இரண்டே அதனால் செல்வத்துப் பயனே ஈதல் தான்  என்று நக்கீரர் சொல்வது வாழ்வை முழுமையாக பார்த்து பிளிந்து தந்த அறச் சாரமல்லவா? 

பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில், சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார் தனிநாயகம் அடிகள் (தமிழ்தூது பக் 32)

அதே நேரம் மன்னர், மருத்துவர், கணியர், பாணர், தச்சர், கொல்லர், குயவர் என பல நிலை மக்களும் புலவர்களாக விளங்கியதையும்; தொகை நூலில் காணப்படும் 459 புலவர்களில் 22 பெண்பாற் புலவர்களும் சமூகத்தில் கல்விப்புலமையோடு திகழ்ந்திருக்கிறார்கள்.

எத்தகைய சமத்துவ சமூகமாக; கல்வி அறிவு பெற்ற, பெரும் சமூக வாழ்வை இந்த சங்க மக்கள் வாழ்ந்திருத்தல் கூடும்!  ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” என்று சொல்லும் பரிபாடல் வாழ்க்கையின் மான்பு அத்தனையையும் அப்பாடலுக்குள் அடக்கி அறவழியினை அறைகூவி விட்டது.

மேலும், ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும்  ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ என்றும் வாழும் வழியை அறத்தோடு வாழ்ந்து காட்ட தமிழ் வள்ளுவன் தந்த வாய்ப்பாடு திருக்குறளாகும். சமகாலத்தில் நாகரிகத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்து எண்ணப்படும் கிரேக்க, ரோம நாகரிகங்களில் தனி மனித; தம் நாட்டுப் பெருமை குறித்து பெருமிதப்பட்டுக் கொண்ட சமுதாய வாழ்வு நிலவிய போது; இங்கோ வள்ளுவன் தமிழ், தமிழ் நாடு என்று கருதாமல் முழு உலகுக்குமான சிந்தனையோடு அவன் சிந்தனை மிளிரக் காணலாம். இங்கு மனித சமுதாயத்தை - உலக மனித குலத்தை மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் தன்னுடய உயிரைப்போன்ற சமத்துவத்தோடு மதித்து வாழ வழி காட்டியதாக தமிழ் சிந்தனை மரபு ஊற்றெடுக்கிறது. உலகு, உலகம்,  வையகம்,  உயிர்கள், உயிர்க்கு, மன்னுயிர், பல்லுயிர்  போன்றனவே வள்ளுவன் பாவித்த மேலும் சில சொற்பதங்களாகும்.

 அறம் என்றால் நல்வினை என்பது பொருளாகும். நல்லவற்றைச் செய்வதும் தீயவற்றைக் களைவதும் என அதற்கு மேலும் பொருள் விரிக்கலாம். உயிர்கள் மீதான இரக்கம் என்பதை அதன் மையப் பொருளெனவும் கொள்ளலாம்.

அறம் என்பது பிறப்போடும் குடிப் பண்போடும் சேர்ந்தே வருவது என்பதை ஒளவை ’கொடையும் தயையும் பிறவிக்குணம்' என்று சொல்வதில் இருந்து அறிகிறோம். ஒரு தடவை நற்பண்பு மிக்க செல்வர் ஒருவர் இல்லத்திற்கு புலவர் ஒருவர் சென்றாராம். அவர்களது குழந்தை நடைவண்டியில் நடைபயின்று கொண்டிருக்கும் பருவம் அது. புலவரைக் கண்டதும் குழந்தை நடைவண்டியை தள்ளியபடி மெதுவாக நடந்து வந்து, தன் நடை வண்டியை மகிழ்ச்சியோடு புலவருக்கும் கொடுத்ததாம். உடனே புலவர் மனம் நெகிழ்ந்து,’ நடை கற்கு முன் கொடை கற்றாயே’ என்று பாடி உருகினார். கொடையும் தயையும் பிறவிக்குணம் என்பது இத்தால் அறியப் படுகிறதல்லவா? பிறப்பில் இருந்தே அறவாழ்வு தொடங்கி விடுகிறது என்பது தெரிகிறதல்லவா?

தமிழர் தம் வாழ்வின் சகல துறைகளிலும்  அறமே மையமாக நின்று செயற்பட்டுக்கொண்டிருந்தது.. இல்லறம், துறவறம், காதலறம், போரறம், அரசியலறம் என அறம் என்பது எல்லாச் செயல்களிலும் நீக்கமற நிறைந்து நின்றது. எல்லாவற்றிலும் அறம் விளங்க வேண்டும் என விரும்பியவன் தமிழன். வள்ளுவனின் காலம் அறநெறிக்காலம் எனவே வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அறம் தமிழன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மேலோங்கி இருந்தது. அறத்தின் வழி பொருளும் பொருளின் வழி இன்பமும் ஈட்டற்பாலன என்பதால் அறம் பொருள் இன்பம் மூன்றையும் உள்ளே வைத்து எக்காலத்துக்கும் எல்லோருக்கும் - உலகத்தில் வாழும் சகலருக்கும் பொருந்தும் வண்ணம் வாழ்க்கை நெறியை படைத்தார் வள்ளுவன்.

அறம் என்பது சிந்தனை, பேச்சு, செயல்பாடு ஆகிய  மூன்றினாலும்  செய்யப்படுவதாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பினும் மனம் என்ற ஒன்றைக் கொண்டிருப்பதால் மனிதன் என அழைக்கப்படும் மனிதனின் மனமே - அது கொண்டிருக்கும் நினைவும் சிந்தனையுமே  அறத்தின் மிக இன்றியமையாத அடிப்படை  எனப் புரிந்து கொண்டிருந்தது தமிழ் சிந்தனை மரபின் ஆரம்ப காலம். அதனால் தான் வள்ளுவர் அதனை   ‘மனத்துக்கண் மாசில னாதல்’  (குறள் 34) மனதிலே முதலில் குற்றமற்ற சிந்தனைகள் உள்ளவனாக இரு என அறத்தை வலியுறுத்துகிறார்.

இளங்கோ அடிகள் அரச குலத்தில் பிறந்து, தனக்கு அரசுரிமை கிடைக்கும் என்று சோதிடன் சொன்ன சொல்லினை ஏற்க மறுத்து, அதனை தம்பியாகிய நான் தரியேன் அது அண்ணனுக்கே உரியது என தனக்கான தர்மத்தின் - மனசாட்சியின் - அறத்தின் வழி நின்று, உறுதி கூறி, அதற்கான தகுதியை தன் அண்ணனுக்குரியதென கொடுத்து, எழுது கோலைத் தூக்கி, தமிழ் இலக்கியத்தை தூக்கி நிறுத்திய துறவியாக இலக்கியத்தில் நிலைத்திருப்பவர். அவர் அறத்தை வாழ்ந்து காட்டிய செம்மல்.  அவர் சொல்லும் சிலப்பதிகார காவியத்தில் அவர் அரசியல் அறம் பற்றி உரைக்கிறார்.’அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்’ என்பது சிலப்பதிகாரத்தின் சுருக்க தர்க்க  வசனமாகும்.

பின் வந்த மணிமேகலை பசித்துயர் போக்குவதைத் தன் தலையாய அறமாகப் போற்றியது. (மணி 13) ஆதரவற்றோரைப் பேணுவது அதன் அறச் சாரமாகும். சமணமும் கிறீஸ்தவமும் அறமென எழுத்தறிவித்தலை கையிலெடுத்த காரணத்தால் இத்தனை கல்விச் செழுமையை தமிழ் இன்றைக்குக் கொண்டிருக்கிறது. இவர்கள் மொழி அறிவித்தலையும் அவற்றைப் பேணிக் கொடுத்தலையும் தலையாய அறமாக போற்றினர்.

காணுகின்ற அத்தனையிலும் கடவுளைக் கண்டு கொண்டவன் தமிழன். இயற்கையில் இருக்கிற எல்லாமே கடவுளின் அம்சம் எனக் கொண்டதனால் இயற்கையினையும் சகல உயிர்களையும் கடவுளாகக் காணவும் மதிக்கவும் போற்றவும் செய்தான்.

‘தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மைநீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்த நீ!
வேதத்துமறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ!
அனைத்தும் நீ! அனைத்தின் உட்பொருளும் நீ!
உறையும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை!
முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில்
பிறவாப் பிறப்பிலை! பிறப்பித்தோர் இலையே!

என்று சொல்லும் பரி பாடல் அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. மேலும், கடவுள் அம்சம் எங்கெங்கெல்லாம் சார்ந்திருக்கிறதென்பதை கீழ்வரும் பரிபாடல் புலப்படுத்துவது சங்ககாலத்தமிழனின் உலகை இறை சார்ந்து பார்க்கும் சினேகபாவத்துக்கு மற்றுமோர் எடுத்துக் காட்டு.

‘ நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள;
நின், தண்மையும் சாயலும் திங்களுள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள;
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவையுள;
நின் தோற்றமும் அகலமும் நீரிலுள;
நின், உடுவமும் ஒலியும் ஆகாயத்துள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்திலுள;
அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏம மார்ந்த நிற் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்’

இயற்கையின் அம்சங்கள் யாவையும் இறையின் அம்சமாகக் காணும் மனிதன் அவைகளை எத்தனை பவித்திரத்தோடும் மரியாதையோடும் பேணி இருப்பான் என்பதையும் கூடவே உணரமுடிகிறதல்லவா? அதனால் தான் ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்றது திருமந்திரம். 

வீடுகள் திண்ணைகளோடு பொலிய, படலைகளில் ஆவுரோஞ்சிக் கற்கள் முளைத்திருக்க, முற்றங்கள் கோலங்களால் வடிவு பெற்றதும் கூட இந்த அறச் சிந்தனையின் விளைவு தானே? சூரியனுக்கு நன்றி சொல்லவும் மாடுகளை தெய்வமென போற்றவும் தெரிந்து கொண்டது கூட அதன் விளைவு தானே? இதே நேரம் மேலைத்தேயம் கேற்றினைப் பூட்டி நாயை காவலுக்கு வைத்திருந்தது என்பது எத்தனை பெரிய சிந்தனை முரண் இல்லையா?

பெண்ணின் நிலை குறித்து ‘அன்னாந்து ஏந்தியவனமுலை தளரினும்’ என்று தோழி தலைவனைக் கண்டு என் தோழியை நீ எப்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பாடியபோதிலும் சரி; பின்நாளில் பாரதி தாசன் தன் ’குடும்பவிளக்கு’ பகுதியில் முதியோர் காதல் பற்றிப் பேசும் போது சொன்ன

‘ புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்பதொன்றே”

இங்கெல்லாம் அன்பும் அறமுமே மேலோங்கி இருக்கக் காண்கிறோம்.

அதன் பின் வந்த இந்து சமயக் கோட்பாடுகளிலும் ‘தென்னாடுடய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றே பாடக் காண்கிறோம். ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்றே அவர்கள் இறைவனைத் துதிக்கிறார்கள். ’அன்பே சிவம்’ என்பதே இந்து சமயத்தின் சாரம். பாடல் வழியான பிரார்த்தனைகள் முடிந்த பின் உலக முழுமையும் வளம் பெற வேண்டி பாடும் புராணத்திலும்’ வான்முகில் வளாது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோல் முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க! என்றே சொல்லச் கேட்கிறோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று வையகம் என்று மேன்மை பெற பாடும் வண்ணங்கள் யாவும் தமிழுக்கும் அதன் சிந்தனை மரபுக்கும் செழுமை சேர்ப்பன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுவும், ’வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் இரங்கும் போதும், தமிழ் மானுடமே உயிர்க்கிறதல்லவா? உயிர் மேல் கொண்ட அன்பின் செழுமையை அறத்தின் அழகை சொல்லாமல் இருக்க முடியுமா?

இத்தகைய காலப்பகுதிகளில் மேலைத்தேயங்கள் குறிப்பாக கிரேக்க ரோம பேரரசுகள் தனிமனித பெருமை; தன் நாடு குறித்த பெருமிதம்; உடற்பலம்; சிற்றின்ப நுகர்ச்சி; தனிமனித சுதந்திரம் இவைகளை மேல் நிறுத்த தமிழ் பேசு நல்லுலகமோ தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” ( பரிபாடல்) என்று வலியுறுத்தல் காண்கிறோம்.ரோமர்கள் தம்மைப்பற்றிய பெருமையில் நிமிர்ந்து நிற்க, தமிழோ உலகு தழுவிய அறச் சிந்தனையில் உயர்ந்து நின்றது.

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன தமிழின் பண்பு நலம் என்பார் தனிநாயகம் அடிகளார்

பின் நாளில் கூட வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று பாரதி கேட்பது கூட தமிழுக்கோ தமிழனுக்கோ அல்ல. மாநிலத்துக்கே அல்லவா? காக்கை, குருவி எங்கள் ஜாதி என்றவன் அல்லவா அவன்?! ‘ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்’ ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ ஆகியவற்றை கனவு கண்டவன். அவற்றினை மேலான அறமாக வரிந்து கொண்டவன் பாரதி. அதர்மங்களுக்கெதிரான போர் கொடியை பெண்களுக்காகவும் நாட்டுக்காகவும் தூக்கிச் சொற்போர் செய்தவன்.



அறம் குறித்த மேற்கோள்கள்கள்:


அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர். மாரிஸ் மாட்டர்லிங்க்.

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான். -ஸெனீக்கா.

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். -ஜான் டிரைடன்.

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. -லியோ டால்ஸ்டாய்.

அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும். -பழமொழி.

பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.-ஸ்வீடன் பர்க்.

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. -மாரிஸ் மாட்டர்லிங்க்.

எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. -ஜான் ரஸ்கின்.

என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம். -பர்க்.

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.-பாஸ்கல்.

விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும். -ஸெயின்ட் அகஸ்டைன்.

நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரிக்கா விட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி. -பென்தம்.

நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும். -ஜார்ஜ் எலியட்.

நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன். -எமர்ஸன்.

நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும். - ஜான் மார்லி.


Wednesday, January 6, 2021

மடக்கு அணி - 11 - ( 29.11.2020 )

 கடந்த இரு மாதங்களுக்கு முன் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் ஒலி வடிவத்தை கீழ் வரும் link இல் அழுத்திக் கேட்கலாம்.

 SBS வானொலியில் மடக்கு அணி


                           மடக்கு 16.6.20

இலக்கியங்களில் அழகுணர்ச்சியை சொற்களைக் கொண்டே அமைத்து அதனை பொருள் நயமும் ஓசைநயமும் விளங்குமாறு செய்தனர் தமிழர். செய்யுளில் சொற்களின் அமைப்பு, அதன் வைப்புமுறை, சொற்களைக் கொண்டு பொருள் கொள்ளும் முறை என்று நுட்பமாக அவற்றுக்கு இலக்கணங்களும் அவர்கள் வகுத்துள்ளார்கள். அவை சொல்லணி, பொருளணி என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடங்குவன.

அந்தவகையில் வரும் சொல்லணிகளான எதுகை, மோனை, சிலேடை, பின்வருநிலை,மடக்கு, அந்தாதி என்பவற்றுள் ஒன்று இந்த மடக்கு என்பதாகும். சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வரு நிலை அணி என்ற இந்த மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான சில வித்தியாசங்கள் உள்ளன.

சிலேடை என்பது ஒரு சொல்லே செய்யுளில் வரும் போது இரண்டு விதமாகவும் பொருள் கொள்ளக் கூடியது. உதாரணமாக ’சென்னை வரவேற்கிறது’ என்பதை ’சென்னை வர வேர்க்கிறது’  என்று சொல்லலாம். அதாவது இங்கு ஒரு வசனத்திலேயே இரு பொருளும் அமைந்திருக்கும்.

ஆனால் மடக்கில் அடுத்ததடவை அதேசொல் வரும் போது அது வேறொரு பொருளைத் தருவதாக இருக்கும். அதாவது மடக்கில் வரும் சொல் மறுதடவை வரும் போது அதே சொல் வேறொரு பொருளைக் குறிப்பதாக வருவது. அப்படியென்றால் பின்வருநிலையணியில் அது எப்படி வருகிறது?  பின்வரு நிலைஅணியில் ஒரே சொல் அடுத்தடுத்த இடத்தில் வரும் போதும் தனித்தனியாகவும் கூட அது ஒரே அர்த்தத்தையே கொண்டிருக்கும்.

உதாரனமாக 200 வது திருக்குறளை எடுத்துக் கொண்டால் அது

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.’ (குறள் எண் - 200)

அதில் சொல் என்ற சொல் பல இடங்களில் வந்தாலும் அது சொல் என்ற ஒரு அர்த்தத்திலேயே வருகுதல் காண்க. இதுவே பின்வருநிலை அணியாகும்.

வடமொழியில் மடக்கு என்பதை யமகம் என்று அழைப்பார்கள். சொற்களை எழுத்தெழுத்தாகப் பிரித்தும் கூட்டியும் முன்பின்னாக மாற்றியும் பொருள்கொள்ளக்கூடியதாக அமையப்பெறும் சொல்லணிகளிலே அழகு வாய்ந்தது மடக்கு. புலமைக்கும் மொழிஆழுமைக்கும் சொல்விளையாட்டுக்கும் வழிவிட்டுக் கொடுப்பது மடக்கு.

மடக்குஎன்றால்என்ன?

மடக்குஎன்பது ’எழுத்துக்களது தொகுதி பிறஎழுத்தாலும் சொல்லாலும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறுவேறு பொருளை விளைவிப்பது மடக்கு என்னும் அலங்காரமாகும்’ என்று தண்டியலங்காரம் அதற்கு விளக்கம்கூறுகிறது. அதாவது ஓர்எழுத்து அல்லது ஒருசொல் மீண்டும்மீண்டும் வந்து வெவ்வேறு பொருள் வருமாறு அமைத்தல் மடக்குஆகும்.

ஊதாஊதாஊதாப்பூ…



https://www.youtube.com/watch?v=IbyWiib5ZxQ

ஆனாலும் சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வருநிலைஅணிக்கும் என்று மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் நுட்பமான வித்தியாசம் உள்ளது.

’அரவம்அரவம்அறியுமா’ என்றவசனத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் முதலாவது அரவம் பாம்பையும் இரண்டாவது அரவம் என்றசொல் சத்தத்தையும் குறிப்பதாக ஒருவசனத்தில் ஒரேசொல் இருவேறுஅர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா? அதுதான்மடக்கு. 

இப்போதுமடக்குவகையில்அமைந்தபாடல்ஒன்றுகேட்போமா?

ஆடவரெலாம்ஆடவரலாம்....

https://www.youtube.com/watch?v=w5DjkjH8qME

ஆடவரெலாம்ஆடவரலாம்என்பதில்வரும்ஆடவரெலாம்என்பதுஇருவேறுஇடங்களிலும்இருவேறுபொருள் தாங்கிவருவதைக்கண்டீர்களா?

மடக்கணியில் இலக்கியவகை சார்ந்த பாடல்கள் அனேகம் உள்ளன. 

திருக்குறள்,கம்பராமாயணம்தொடக்கம்பக்திப்பாடல்கள் ஈறாக அநேகபாடல்கள் இந்தமடக்கணி வகையில் உருவாகி வந்துள்ளன. இராமாயனத்தில் அமைந்துள்ள பாடல் ஒன்று இது.

'வண்டலம்புநல் ஆற்றின் மராமரம், 

வண்டலம்புனல் ஆற்றில் மடிந்தன; 

விண்டலம் புகம் நீங்கிய வெண்புனல், 

விண்டலம் புக நீள் மரம் வீழ்ந்ததே." (32). 

இந்தப் பாடலில் வண்டலம்’ என்பது முதல் இரண்டு அடிகளிலும் விண்டலம்பு என்பது ஈற்று இரண்டடிகளிலும், பாடலடிகள்  மடங்கி வந்துள்ளன. இப்பாடலைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ளல் வேண்டும்: 

 'வண்டு அலம்புநல் ஆற்றின் மராமரம், 

வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன; 

விண்டு அலம்பு கம்.நீங்கிய, வெண் புனல் 

விண்கலம் புக நீள் மரம் வீழ்ந்தவே' 

அதாவது, அனுமன் எறிந்த மரங்களுள், வழிப் பாதையிலிருந்து மரங்கள் சில வண்டல் நீர் பொருந்திய ஆற்றில் விழுந்தன. அனுமன் உயரே தூக்கியெறிந்த நீண்ட மரங்கள் விண்ணிலே புக விண்னகத்திலே ஒடுகின்ற நீர் சிதறி அகலும்படி ஆகாய கங்கையில் வீழ்ந்தன.’ என்பது அதன் பொருளாகும்.

கவி காள மேகத்தாரின் பாடல் ஒன்று மடக்கணியில் இப்படியாக அமையப்பெற்றுள்ளது.

’வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்

கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை

அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி

அடிப்பது மத்தாலே அழ!’

இதிலே மூன்றாம் அடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பது (காலின் அடிப்பகுதியால்) அடிப்பதும் அத்தாலே என்றும்; இறுதியடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பதில் அடிப்பது( தயிர்கடையும்) மத்தாலே என்றும் வருதல் காண்க.

1889ம்ஆண்டில் ஈழத்திலுள்ள.கொல்லங்கலட்டி என்றஇடத்தைச் சேர்ந்த பூ. பொன்னம்பலப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட மாவையமகஅந்தாதி ஒன்று மாவைக் கந்தனை துதிசெய்வதாக மடக்கணியில் இப்படியாக வருகிறது.

’வானில வானிலவும் பொழின்மாவையின் மாணருள்செய்

வானில வானிலயம் புகுந்தேத்தல் செய்வாய் மலர்க்கோ

வானிலவானிலமால் குளிர்நீரெரி வன்னி சல 

வானிலவானிலயப் பொருளா மவன் மன்னடியே’

அதாவது

வானத்திலுள்ள மதிமண்டலத்தின் கண் அவாவி நிற்கும் சோலை சூழ்ந்த மாவைப்பதியின்கண் மிக்க திருவருளைச் செய்பவனாகிய முருகனுடய இடமாகிய கோயிலின் உள்ளேசென்று அவன்திருவடிகளை ஏத்துவாயாக. தாமரைமலரினல் இருக்கும் இறைவனாகிய பிரமதேவனது சத்தியலோகம் உட்பட நிலமும் பெரிய குளிர்ந்தநீரும் எரிகின்றதீயும் அலைகின்ற காற்றும் ஆகாயமும் அவனுடய பெருமையுற்ற திருவடியில் ஒடுங்கும் பொருள்களாகும்’ என்பதுஅப்பாடலின் உள்ளே அமைந்திருக்கும் கருத்தாகும்.

கந்தாநீஒருமலைவாசி.....



https://www.youtube.com/watch?v=UIMvJH9LL30

3.49 – 6.55   

மடக்கணியில் பல இலக்கியப் பாடல்கள் உள்ளன. உதாரணமாக மருத்துவநூல் ஒன்றில் அமையப் பெற்றிருக்கும் மடக்குஅணிஒன்றை இப்போது காண்போம்.

பத்தியத்தை நோயை யனுபானத்தை லங்கணத்தைப்

பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற்கேள் - பத்தியத்தை

யேகமாயார்த்தாலு மேறாச்செவிபோல

யேகமாயார்த்தாலு மெய்''20

இந்தவெண்பாவில், பத்தியத்தை என்னுஞ்சொல் மூன்றுஇடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ்சொல் இரண்டிடங்களில் அமைந்திருக்கிறது.

முதலாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பிணிநீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தையும், இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி+இயம்+அத்தை எனப்பிரிந்து, பத்தியமுறையைப் பற்றி அத்தையிடம் என்றும், தனிச்சொல்லில் வரும் பத்தியத்தை பத்து+இயம் +அத்து+ஐஎனப்பிரிந்து, பத்துவிதமான இசைக்கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமையப் பெற்றிருக்கிறது.

ஏகமாயார்த்தாலும் என்பது, ஒருமுகமாக முழங்குகின்றபோது என்றும், ஏக+மாய் + ஆர்த்து எனப்பிரிந்து பார்த்தால் போய்விட, கெட்டு, ஆரவாரம்செய்து என்னும்பொருளில் மாறிமாறி நின்று பொருளமைக்கும்.

இந்தப்பாடலின் பொருள்என்னவென்றால் பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்கவேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணைமருந்தான அனுபானத்தையும், நோய்நீங்கத்துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மாமியார் முன்னே மருமகள் செய்யும் பணிவுடன் நோயாளிக்கும் செய்க. மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மாமியாரைப்போல நோயாளி பத்தியமுறைகளை ஏற்றக்கொள்ளவும்.  பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின்போது சொல்லுகின்ற சொல் காதில் நுழையாததைப்போல இருந்தால், நோய்கள் ஆரவாரம்செய்துகொண்டு உடலைக் கெட்டுப் போய்விடச்செய்யும் என்பதால், பத்தியம்முக்கியம்என்பதைஉணர்க’ என்னும் பொருளை இது உரைக்கிறது.

வித்துவத் திறமைக்கு களம் அமைத்துத்தரும் இத்தகைய பாடல்கள் உடைத்துப் பொருள்அறியவேண்டியவை.

இன்றய காலங்களில் சினிமாக்களிலும் இந்த அணியினை புகுத்தி சில பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. 

கொஞ்சும் கிளி பாட வச்சான்...


https://www.youtube.com/watch?time_continue=182&v=VnmD2j3bEng&feature=emb_logo

2.40 – 3.00 

இப்போது ஒலித்த இப் பாடல் வரிகளில் மடக்கின் எழில் கொஞ்சுகிறது அல்லவா? .மடக்குஅணியின் அழகை வெளிப்படுத்தும் பல பாடலகள் கொண்ட கதம்பத்துடன் விடைபெறுகிறது இன்றய நம்மதமிழ்.

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை....

https://www.youtube.com/watch?v=FvRlKreWTX4&lc=UghmL7M5AUy2zngCoAEC

1.40 – 2.00 


 ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்...


https://www.youtube.com/watch?v=tXU1r0OVf3g

(8.05 – 8.22 )


உதய கீதம் பாடுவேன்.....

https://www.youtube.com/watch?v=Om3lOwdgxcw

(2.04 – 2.10 )  


திருமண மலர்கள் தருவாயா....

https://www.youtube.com/watch?v=528O3U7qMco