Saturday, September 5, 2026

உலக திருக்குறள் மகாநாடும் விருது விழாவும் 04.09.2026 சிட்னி

 






நேற்றய தினம் 04.09.2026 வெள்ளிக்கிழமை சர்வதேச திருக்குறள் மகாநாடு ஒன்று சிட்னியில் உள்ள அவுஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 

இதனைத் தமிழ் வளர்ச்சி மன்றம் ஒழுங்கு செய்திருந்தது. அவர்களுக்கு இணை அனுசரனையாளர்களாக மொறீசியஸ், மலேசிய மற்றும் இலங்கையைச் சேர்ந்த பண்பாட்டு மையங்கள் தம் ஆதரவை வழங்கியிருந்தன.

கூடவே, அவுஸ்திரேலிய SBS வானொலி, அவுஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், உட்பட பல நிறுவனங்கள் தம் நிதி மற்றும் நடைமுறை அனுசரனையை வழங்கியிருந்தன.

காலை தொடங்கி மாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந் நிகழ்வில் உலகநாடுகள் பலவற்றிலும் இருந்து சுமார் முப்பது அறிஞர்களும் அவுஸ்திரேலிய இளைய சமூகத்தினரும் கலந்து கொண்டு தம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தார்கள். 

வேலைநாள் என்பதால் முழு நிகழ்விலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் என் அன்புத் தோழி கீதா. மதிவாணன் அவர்களுக்கு அவருடய மொழிபெயர்ப்பு முயற்சிகளை பாராட்டி விருது வழங்கப்பட்ட நிகழ்வில் நான் கலந்து கொண்டேன்.

உலக அறிஞர்கள் முன்னிலையில் அவரது அரிய தமிழ்பணிகள் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டு அவரை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருது உண்மையானதும் பொருத்தமானதும் சிறப்பானதுமாகும்.

அவர் என்னுடய பிரிய தோழியாக இருப்பதானது இந்தத் தமிழின் வழியான தொடர்பால் ஏற்பட்டது தான். அவரிடம் இருக்கிற எளிமை, உண்மை, திறமை, அமைதியும் மென்மையுமான அவரது குணாம்சம், தன்னை எப்போதும் முன்நிறுத்தாத மேன்மை, ஆர்வம், தமிழ் மீதான பற்றுதல், அதனைச் செழுமைபெறச் செய்வதற்கு அவர் கொடுக்கும் பொன்னான நேரம், மற்றும் தமிழ் மீதான ஆழமான அறிவு, மொழிப்பற்றுதல் ஆகியனவற்றோடு எது தமிழுக்குத் தேவை / தமிழுக்கு எது முக்கியம் என்பதைக் கண்டறிந்து அதற்காக உண்மையாக உழைப்பது என்பவற்றின் வழியாகத் தமிழைச் சிறபிக்கிறவர் அவர். 

போட்டிகள், புகழ், பிரபலம், உள் அரசியல்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதவர் அவர். அவற்றில் இருந்து எப்போதும் விலகியே இருப்பவர். மத்தியஸ்தம் வகிக்க அவர் அமைப்புகளால் அழைக்கப்படுகின்ற போதும்; கருத்தரங்கங்களில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் கோரப்படும் போதும்; மொழிபெயர்ப்புகள் செய்து தரக் கேட்கப்படுகின்ற போதும்; பல இயலாதவர்கள் தமிழ்மொழியில் தட்டச்சுச் செய்து தரக் வேண்டுகின்ற போதும் தன் நிலைப்பாட்டை / உண்மைநிலையை சொல்லி இன்முகத்தோடு அவைகளைச் மறுப்பேதும் சொல்லாமல் செய்து கொடுப்பவர்.

அவர் விருதுகளுக்காகவோ அல்லது பாராட்டுதல், மற்றும் அங்கீகாரங்கள் இவற்றுக்காகவோ உழைப்பவர் அல்லர். ஆனால் அவ்வாறு ஒன்றை ஒருவரின் திறமையை இனம் கண்டு கொடுக்கின்ற போது, அது நிச்சயம் அவருக்கு ஓர் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் வழங்கும். அந்த வகையில் நேற்றயதினம் அவருக்குக் கிடைத்த விருது மிகப் பொருத்தமானதும் பாராட்டத்தக்கதுமான நிகழ்வாகும்.

உண்மையான திறமைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் அது. அவரை  இனம்கண்டு அவருக்கு விருது கொடுத்ததில் தமிழ் வளர்ச்சி மன்றமும் அதன் ஸ்தாபகர் சட்டத்தரணி திருமதி சந்திரிக்கா. சுப்பிரமணியன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

கீதா.மதிவாணன் பல்துறை ஆற்றல் வாய்ந்தவர். பல்வேறு புத்தகங்களை அவர் உருவாக்கி அளித்திருக்கிறார். அவர் ஓர் இயற்கை ஆர்வலர், புகைப்படக் கலைஞர் என பல்துறை விற்பன்னர் என்ற போதும்  எனக்குத் தனிப்பட்ட முறையில் அவரது மொழிபெயர்ப்பு வேலைகள் மீது தணியாத காதல் உண்டு. 

அவர் ஓர் இலாவகமான கதை சொல்லி. எளிமையான தமிழ் சொற்கள், வசீகரமான ஆற்றொழுக்கான வசனநடை, மொழிபெயர்ப்பு என்று தெரியாதபடி இயல்பாகச் கதையை எடுத்துச் செல்லும் ஒழுங்கு, மிக மென்மையாக அதே நேரம் ஆணித்தரமாக அவுஸ்திரேலியப் பண்பாட்டை தமிழ் மொழிக்குள் எடுத்து வரும் பாங்கு, மூல எழுத்தின் மீதும் எழுத்தாளர் மீதும் அவர் கொண்டிருக்கிற பற்றுதலும் அவர்களைப்பற்றிய முழுமையான அறிவும், அவசரப்படாமல் நிதானமாக அவர் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு எடுத்துக் கொள்ளுகிற நேரம் ஆகியன அவரது மொழிபெயர்ப்புகளை தமிழின் உச்சத்துக்கு எடுத்துச் செல்லுகின்றன.

ஹென்றி.லோஷன் வழியாக அவுஸ்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேறிகளின் அல்லல்களையும்; ரஷ்ய எழுத்தாளர்களின் வழியாக ரஷ்யப் பண்பாட்டின் தார்ப்பரியங்களையும்; யப்பானிய எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு வழியாக யப்பானியப் பண்பாட்டின் ஆழங்களையும் அவர்களின் எழுத்துக்களின் வசீகரங்களையும் அவர்தம் உலகங்களையும் நான் கீதாவின் வழியாக அறிந்து கொண்டிருக்கிறேன். 

நான் நம்பி அவற்றை வாசிப்பதற்குக் காரணம் அந்தக் கதைகளின் முக்கியத்துவம் மட்டுமன்றி, இவரின் மொழிபெயர்ப்பின் மீது எனக்கிருக்கிற நம்பிக்கை,  உண்மைத் தன்மை, அவற்றை மொழிபெயர்ப்பதற்கு அவர் கொடுத்திருக்கிற உழைப்பு, நேரம் மற்றும் அந்தக் கதைகளின் மீதான அவரது நேசம் ஆகியனவும் தான். தார்மீகமான அவரது தமிழ்பணி அது! அதில் நான் நனைந்து முழுகி முக்குளித்து மகிழ்ந்திருக்கிறேன். புதுப் புது உலகங்களைக் கண்டு உள்ளம் குளிர்ந்திருக்கிறேன். 

அவரது தமிழ் பணி வாழ்க!

அவருக்கு இந்த முதல் விருது கிடைத்ததில் நான் மிகுந்த பெருமைப் படுகிறேன்.

அவருக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். அவர் மேன்மேலும் குறிப்பாக அவுஸ்திரேலிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் பண்பாட்டு உலகங்களையும் தமிழுக்கு எடுத்து வரவேண்டும். தமிழ் அதன் வழி செழுமையுற வேண்டும்.

கீதா,

உங்களை என் தோழியாகப் பெற நான் மிகுந்த பாக்கியம் செய்திருக்கிறேன்.

வாழ்க உங்கள் பணி!

வளர்க உங்கள் சேவை!



Thursday, September 3, 2026

AI and Me


எனக்கும் இப்போது பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களும் இதுவரை காலமும் இருந்ததில்லை. 

அண்மையில் எனக்கு வாய்த்திருந்த ஓர் ஓய்வு நேரத்தின் போது புரட்டிப் பார்த்த இன்ஸ்ரகிறாம் பக்கத்தில் இரண்டு மூன்று கிளிக்குகளில் எப்படி ஒரு விடயத்தை இயங்கு நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை சொல்லியிருந்தது.

சும்மா முயற்சி செய்து பார்க்கலாமே என்று எண்ணி அண்மையில் நான் வண்ணம் தீட்டியிருந்த இரண்டு படங்களைக் கொடுத்து அதனை இயங்கு நிலைக்கு எடுத்துத் தர முடியுமா என்று கேட்டிருந்தேன். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அதனை அது தந்திருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

எத்தனை த்த்ரூபம்! எத்தனை உண்மைத்தன்மை!!

அதனை ஒரு பதிவாக இங்கு பகிரத் தோன்றியது. சேமித்து வைக்கவும் தான். படமும் அதன் இயங்கு நிலையும் கீழே வருகிறது.






இதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் உங்களிடம் ஒரு யூடியூப் கணக்கு இருந்தால் அங்கு உள்நுழைந்து சக அடையாளத்தை அழுத்திய பின்னர் வலது கைப்பக்க மேல் மூலையில் இருக்கும் நட்சத்திரம் போன்ற குறியீட்டை ( ஜெமினாய்) அழுத்தி அதில் விரும்பிய படத்தைக் கொடுத்து என்ன செய்யவேண்டு என்ற உத்தரவைக் கொடுத்தால் போதும் சில வினாடிகளில் அது தத்துரூபமாக நீங்கள் கேட்டதைத் தந்து விடுகிறது! அப்படிக் கிடைத்தது தான் மேலே இருக்கிற கொடுத்த படமும் அதன் இயங்கு நிலையும்!

இந்த உலகம் இனி எங்கு போக இருக்கிறது!!

 

Friday, August 7, 2026

இனியாவுக்கு நல்வரவு

 கடந்த 15.07.2026 அன்று அதிகாலை எங்களுக்கு ஒரு பேத்தி பிறந்திருக்கிறாள்.

முதன் முதலில் கிடைத்த மூத்த பேத்தி அவள்

பெயர் இனியா!

இன்று அவள் தன் தாய் தந்தையரோடு மூன்றுவாரக் குழந்தையாக என் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்காக நான் எழுதிய கவிதை ஒன்றை ஒரு ஞாபகார்த்தம் கருதி இங்கு பதிவேற்றி வைக்கலாம் என்று நம்புகிறேன்.


Welcome Home Iniya


நல் வரவு இனியா

முகம் மலர்ந்த முத்தமிழே

முன் உதித்த ரத்தினமே

தங்கத் தமிழ் மகளே

இனிய மகளே இனியா


கண் மலர்ந்து பாரம்மா

வந்து மடி சேரம்மா


கட்டிக் கனியமுதே

பேத்தியாக்கிய பொற்கிளியே

பாக்கியமே பார்புகழ 

வந்துதித்த பாற்குடமே


கண்மலர்ந்து பாரம்மா

வந்து மடி சேரம்மா


திவ்யா தந்த திவ்யமே

நாரா தந்த நற்கனியே

நாளும் உனை வாழ்த்துகிறேன்

நற்தமிழே வாழ்கவம்மா


மூத்த பேத்தி ஆனவளே

எங்கள் வீட்டு ஒளிவிளக்கே

புன்னகையே முழு நிலவே

பார்புகழ வாழ்கவம்மா


குடும்பத்தை உருவாக்க

குதூகலத்தைக் கொண்டாட

கூடி நாங்கள் களித்திருக்க

வந்தவளே வாழ்கவம்மா


நாங்கள் பெற்ற பெரும் பேறே

குணவதியாய் வாழுமம்மா

தமிழ் கொண்டு மொழிபேசி

பார் புகழ வாழுமம்மா

தமிழ் நெறிப் பாதையிலே

நல்ல நடை போடுமம்மா


நல்லவழி விளங்கி விட

ஆனைமுகன் காத்திருப்பான்

என்றும் அவன் பாதம் பற்றி

பாதையினை வகுத்திடம்மா


வருத்தம் வரும் வாழ்க்கையிலே

எதிர்பாரா இடரும் வரும்

'இதுவும் கடந்து போகும்'

என்றிருந்தால்

'எல்லாம் நன்மைக்கே'

என்றொரு திடம் இருந்தால்

வாழ்க்கையை வென்றிடலாம்

நல்லபடி வாழ்ந்திடலாம்


ஆத்தாப்பாட்டி சொன்னதனால்

ஏற்கவேண்டும் என்றில்லை

உள்ளத்தில் அறத்தை நீ

தெம்போடு சுமந்து நின்றால் 

எல்லாமே சுகமாகும்

 

பிரபஞ்சம் காத்து நிற்க 

சுபீட்சமாய் வாழ்ந்திடம்மா


எண்ணத்தால் உயர்ந்து நில்

அறத்தை நீ சுமந்து செல்

மிச்சமெல்லாம் இறைவன் செயல்

என்றேயிரு போதுமது!


காத்துநிற்பான் ஆனைமுகன்

ஆணை இது நம்புமம்மா


இனியவளே இனியா

இன்பமாக வாழ்ந்திடம்மா 


வாழ்த்துகிறேன் வாழ்கவென்று

மகிழ்வாக வாழுமம்மா

ஆத்தாப்பாட்டி வாழ்த்துகிறேன்

ஆரோக்கியமாய் வாழுமம்மா

மாங்கனியே முத்தமிழே

மாண்புற நீர் வாழுமம்மா

எல்லா நலமும் பெற்று

எழிலே நீர் வாழுமம்மா


காலம் தந்த கண்மணியே

கமலமென மலர்ந்தவளே

களிப்போடு வாழுமம்மா


முடிக்கத்தான் பார்க்கின்றேன்

முடியவில்லை

சுருக்கத்தான் நினைக்கின்றேன்

இயலவில்லை

முனைகின்றேன் முனைகின்றேன்

முயற்சியோ முடியவில்லை


என்றாலும் என்கிளியே

என்வாழ்த்தும் அப்படித்தான்

முடியாமல் நீண்டு போகும்

முல்லைமலரே வாழுமம்மா


முதன் முதலாய் காண்கின்றேன்

என் உவகை என்ன சொல்வேன்!


அன்னையோடு வந்தாய் தாயே

பார்புகழ வாழ்க நீயே

தந்தையோடும் வந்தாய் தாயே

தரணியில் நீ தழைப்பாய் நீயே


தளிரே தங்கத்தில் வார்த்த வடிவழகே

காலமெல்லாம் நீ களிப்போடும்

நிறைவான சிரிப்போடும் 

நின்மதியாய் வாழுமம்மா 


அம்மா போல் அப்பா போல்

பாட்டி தாத்தா சுற்றத்தோடு 

குணத்தில் வார்த்த குலக் கொழுந்தே

மகிழ்ந்து நீ வாழ்ந்திடம்மா


குமிழ் சிரிப்பே எம் குலக் கொழுந்தே

குலநிதியே களங்கமில்லா பொற்கிளியே

பொலிவோடு நீ விளங்கிடம்மா


ஆண்டவன் காத்து நிற்க

அருளோடு வாழ்ந்திடம்மா!

 

- யசோதா.பத்மநாதன்

07.08.2026 


Welcome to the world Iniya


Sweet Iniya, born to shine

Little star and joy of mine

Softest cheeks and brightest smile

Stay with paatti for a while

Hold my hand and feel my love


You are a blessed gift from above 

Grow up strong and dream so high

Touch the star up in the sky

Aaatha paatti's heart

Beats just for you!


7.8.2026

Wednesday, July 15, 2026

ஒரு படமும் சில பின்னணிகளும்

 ஒரு பெண்ணினுடய முகத்தின் பக்கவாட்டுத் தோற்றம் ஒரு கலண்டர் பக்கத்தின் பின்னணியில் எப்படி எல்லாம் தோற்றமளிக்கிறது பார்த்தீர்களா? 

அண்மையில் செய்து பார்த்த மிக எளிமையான Collage  Work.







பூக்களுக்குள்ளே ஒரு பூவையை வைத்துப் பார்த்தேன். :)

வெளிச்சத்தின் விழுதுகள்

 

கைத்தொலைபேசியும் வட்ஸப்பும் வந்த பிறகு வரும் செய்திகளுக்கு அளவே இல்லை. காலை எழுந்தால் எத்தனையோ காலை வணக்கங்கள். பகிரப்படும் தகவல்கள், தொலைதூர அழைப்புகள் என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஒரு வலைப்பின்னல் அது.

என்னைப் பொறுத்தவரை முக்கியமான தகவல் தொடர்புகளுக்கு மாத்திரம் தான் தொலைபேசி. அதனால் பெரும்பாலான பகிரப்படும் தகவல்கள் காலை நேர வாழ்த்துக்களுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை; பார்ப்பதும் இல்லை.

அதில் பலருக்கு வருத்தம்!

என்ன செய்வது!

அதற்காக என் இயல்பிலிருந்து விலத்திக் கொள்ள முடியுமா என்ன?

ஆனால் நேற்றய தினம் ஒரு வெளிச்சத்தின் விழுதினைப் போல வந்த இந்த இரண்டு காலை வணக்க செய்திகளும் பொருள் பொதிந்ததாய்; வளம் மிக்கதாய்; சிறியதாய் இருந்தது.

உங்களோடும் அதனைப் பகிரத்தோன்றியது.




உங்கள் கிண்ணங்களும் அன்பாலும் அமைதியாலும் அழகாலும் நிறைவதாக!
வாழ்க்கை நம் கையில் இருக்கும் வரை நாம் எதையும் இழப்பதில்லை; ஆண்டவனின் ஆசீர்வாதம் வீட்டையும் இதயத்தையும் ஆத்மாவையும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்.

Sunday, July 12, 2026

collage works

 வணக்கம் நண்பர்களே!

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? நானும் சில பல சுகங்கள் மற்றும் சுகவீனங்கள், வீட்டு வேலைகள், திருத்தவேலைகள் என்பவற்றோடும் அன்றாட அலுவல்களோடும் நலமே இருக்கிறேன்.

நீங்களும் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னரைப் போல இங்கு இப்போது அதிகம் வருவதில்லை. இன்று பல மாதங்களுக்குப் பிறகு இங்கு வரும் போது  பிறந்த வீட்டுக்கு வருவதைப் போல ஒரு மகிழ்ச்சி.

ஒரு காலத்தில் இந்தப் பக்கம் தான் எனக்கு தாய் மடியைப் போல இருந்தது. முகம் தெரியாத எத்தனை உறவுகளைச் சந்தித்தோம்! எழுத்தின் வழி ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டோம். இப்போது அவர்கள் எல்லாம் என்னவாகி இருப்பார்கள் ?

வித விதமான சமூக வலைத்தளங்களின் அறிமுகங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பக்கமாக நகர்த்தி விட்டிருக்கக் கூடும்.

என்னைப் போலவே!

இப்போது நான் அதிகம் You tube வீடியோக்கள் அதிகம் பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் சில பரீட்சார்த்த முயற்சிகளை நானும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.அதிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறேன்.

அதில் அண்மைக்காலமாக என்னை ஆட்கொண்ட விடயம் Collage Art என்று சொல்லப் படுகிற விடயம். எக்கச்சக்கமான செய்முறைகளோடு கூடிய வீடியோக்கள் யூரியூப்பில் காணக்கிடைக்கின்றன.

அது ஒருவகை கலை வடிவம் என்று சொல்லப்படுகிறது. செலவு அதிகம் தேவைப்படாது. பழைய சஞ்சிகைகள், கலண்டர் படங்கள், விற்பனை நிலையங்களில் கிடைக்கும் இலவச விளம்பரங்கள்.... போன்ற இவைகள் தான் மூலதனம்.

நான் மேலதிகமாக Winnie என்று சொல்லப்படும் - உபயோகித்த பொருட்களை விற்கும் - தொண்டு நிறுவனக் கடைக்குப் போய் பழைய புத்தகங்கள், சஞ்சிகைகள்,  படங்களோடு இருக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றையும் வாங்கி வருகிறேன்.

அவை பொதுவாக 2 டொலர்கள், 3 டொலர்களுக்குள் வரும்.

இப்படிப் போகிற போது மிக அரிய அருமையான புத்தகங்களைக் கூட கண்டெடுத்து கொண்டுவந்து காட்சிப் பொருளாகவும் பொக்கிஷமாகவும் கூட பேணி வருகிறேன்.

அது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் அவசியம் பேச வேண்டும்.

அது நிற்க.

இவ்வாறான படங்களைக் கொண்டு உங்கள் கற்பனைக்கு ஏற்ற விதமாக நீங்கள் ஒரு உருவத்தைக் கற்பனை செய்து புதிய வடிவத்தை உருவாக்குவது தான் இதன் அடிப்படை.

மிக ஆரம்பத்தில்செய்த சில உருவங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவை ஒரு  பாலர் பள்ளிப் பிள்ளை ஒன்றின் சித்திரங்களைப் போன்றது.

பொதுவாக மிகக் குறைந்தது மூன்று வேறுபட்ட வடிவங்களை ஒன்றாக்கி புதிய கற்பனை வடிவங்களை உருவாக்க வேண்டும். நான் அதிக பட்சம் இரண்டு வடிவங்களைத் தான் ஒன்றாக்கி இருக்கிறேன்.

நீங்களும் ஒரு தடவை இந்த வேடிக்கையான வேலையைச் செய்து தான் பாருங்களேன்.

இது ஒரு புதிய அனுபவமாக எனக்கு இருந்தது.

மீண்டும் சந்திப்போம்.