அக்ஷ்ய பாத்ரம்
"இது நான் கையால் அள்ளிய கடல்"
Thursday, September 3, 2026
AI and Me
Friday, August 7, 2026
இனியாவுக்கு நல்வரவு
கடந்த 15.07.2026 அன்று அதிகாலை எங்களுக்கு ஒரு பேத்தி பிறந்திருக்கிறாள்.
முதன் முதலில் கிடைத்த மூத்த பேத்தி அவள்
பெயர் இனியா!
இன்று அவள் தன் தாய் தந்தையரோடு மூன்றுவாரக் குழந்தையாக என் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்காக நான் எழுதிய கவிதை ஒன்றை ஒரு ஞாபகார்த்தம் கருதி இங்கு பதிவேற்றி வைக்கலாம் என்று நம்புகிறேன்.
Welcome Home Iniya
நல் வரவு இனியா
முகம் மலர்ந்த முத்தமிழே
முன் உதித்த ரத்தினமே
தங்கத் தமிழ் மகளே
இனிய மகளே இனியா
கண் மலர்ந்து பாரம்மா
வந்து மடி சேரம்மா
கட்டிக் கனியமுதே
பேத்தியாக்கிய பொற்கிளியே
பாக்கியமே பார்புகழ
வந்துதித்த பாற்குடமே
கண்மலர்ந்து பாரம்மா
வந்து மடி சேரம்மா
திவ்யா தந்த திவ்யமே
நாரா தந்த நற்கனியே
நாளும் உனை வாழ்த்துகிறேன்
நற்தமிழே வாழ்கவம்மா
மூத்த பேத்தி ஆனவளே
எங்கள் வீட்டு ஒளிவிளக்கே
புன்னகையே முழு நிலவே
பார்புகழ வாழ்கவம்மா
குடும்பத்தை உருவாக்க
குதூகலத்தைக் கொண்டாட
கூடி நாங்கள் களித்திருக்க
வந்தவளே வாழ்கவம்மா
நாங்கள் பெற்ற பெரும் பேறே
குணவதியாய் வாழுமம்மா
தமிழ் கொண்டு மொழிபேசி
பார் புகழ வாழுமம்மா
தமிழ் நெறிப் பாதையிலே
நல்ல நடை போடுமம்மா
நல்லவழி விளங்கி விட
ஆனைமுகன் காத்திருப்பான்
என்றும் அவன் பாதம் பற்றி
பாதையினை வகுத்திடம்மா
வருத்தம் வரும் வாழ்க்கையிலே
எதிர்பாரா இடரும் வரும்
'இதுவும் கடந்து போகும்'
என்றிருந்தால்
'எல்லாம் நன்மைக்கே'
என்றொரு திடம் இருந்தால்
வாழ்க்கையை வென்றிடலாம்
நல்லபடி வாழ்ந்திடலாம்
ஆத்தாப்பாட்டி சொன்னதனால்
ஏற்கவேண்டும் என்றில்லை
உள்ளத்தில் அறத்தை நீ
தெம்போடு சுமந்து நின்றால்
எல்லாமே சுகமாகும்
பிரபஞ்சம் காத்து நிற்க
சுபீட்சமாய் வாழ்ந்திடம்மா
எண்ணத்தால் உயர்ந்து நில்
அறத்தை நீ சுமந்து செல்
மிச்சமெல்லாம் இறைவன் செயல்
என்றேயிரு போதுமது!
காத்துநிற்பான் ஆனைமுகன்
ஆணை இது நம்புமம்மா
இனியவளே இனியா
இன்பமாக வாழ்ந்திடம்மா
வாழ்த்துகிறேன் வாழ்கவென்று
மகிழ்வாக வாழுமம்மா
ஆத்தாப்பாட்டி வாழ்த்துகிறேன்
ஆரோக்கியமாய் வாழுமம்மா
மாங்கனியே முத்தமிழே
மாண்புற நீர் வாழுமம்மா
எல்லா நலமும் பெற்று
எழிலே நீர் வாழுமம்மா
காலம் தந்த கண்மணியே
கமலமென மலர்ந்தவளே
களிப்போடு வாழுமம்மா
முடிக்கத்தான் பார்க்கின்றேன்
முடியவில்லை
சுருக்கத்தான் நினைக்கின்றேன்
இயலவில்லை
முனைகின்றேன் முனைகின்றேன்
முயற்சியோ முடியவில்லை
என்றாலும் என்கிளியே
என்வாழ்த்தும் அப்படித்தான்
முடியாமல் நீண்டு போகும்
முல்லைமலரே வாழுமம்மா
முதன் முதலாய் காண்கின்றேன்
என் உவகை என்ன சொல்வேன்!
அன்னையோடு வந்தாய் தாயே
பார்புகழ வாழ்க நீயே
தந்தையோடும் வந்தாய் தாயே
தரணியில் நீ தழைப்பாய் நீயே
தளிரே தங்கத்தில் வார்த்த வடிவழகே
காலமெல்லாம் நீ களிப்போடும்
நிறைவான சிரிப்போடும்
நின்மதியாய் வாழுமம்மா
அம்மா போல் அப்பா போல்
பாட்டி தாத்தா சுற்றத்தோடு
குணத்தில் வார்த்த குலக் கொழுந்தே
மகிழ்ந்து நீ வாழ்ந்திடம்மா
குமிழ் சிரிப்பே எம் குலக் கொழுந்தே
குலநிதியே களங்கமில்லா பொற்கிளியே
பொலிவோடு நீ விளங்கிடம்மா
ஆண்டவன் காத்து நிற்க
அருளோடு வாழ்ந்திடம்மா!
- யசோதா.பத்மநாதன்
07.08.2026
Welcome to the world Iniya
Sweet Iniya, born to shine
Little star and joy of mine
Softest cheeks and brightest smile
Stay with paatti for a while
Hold my hand and feel my love
You are a blessed gift from above
Grow up strong and dream so high
Touch the star up in the sky
Aaatha paatti's heart
Beats just for you!
7.8.2026
Wednesday, July 15, 2026
ஒரு படமும் சில பின்னணிகளும்
ஒரு பெண்ணினுடய முகத்தின் பக்கவாட்டுத் தோற்றம் ஒரு கலண்டர் பக்கத்தின் பின்னணியில் எப்படி எல்லாம் தோற்றமளிக்கிறது பார்த்தீர்களா?
அண்மையில் செய்து பார்த்த மிக எளிமையான Collage Work.
வெளிச்சத்தின் விழுதுகள்
Sunday, July 12, 2026
collage works
வணக்கம் நண்பர்களே!
எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? நானும் சில பல சுகங்கள் மற்றும் சுகவீனங்கள், வீட்டு வேலைகள், திருத்தவேலைகள் என்பவற்றோடும் அன்றாட அலுவல்களோடும் நலமே இருக்கிறேன்.
நீங்களும் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
முன்னரைப் போல இங்கு இப்போது அதிகம் வருவதில்லை. இன்று பல மாதங்களுக்குப் பிறகு இங்கு வரும் போது பிறந்த வீட்டுக்கு வருவதைப் போல ஒரு மகிழ்ச்சி.
ஒரு காலத்தில் இந்தப் பக்கம் தான் எனக்கு தாய் மடியைப் போல இருந்தது. முகம் தெரியாத எத்தனை உறவுகளைச் சந்தித்தோம்! எழுத்தின் வழி ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டோம். இப்போது அவர்கள் எல்லாம் என்னவாகி இருப்பார்கள் ?
வித விதமான சமூக வலைத்தளங்களின் அறிமுகங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பக்கமாக நகர்த்தி விட்டிருக்கக் கூடும்.
என்னைப் போலவே!
இப்போது நான் அதிகம் You tube வீடியோக்கள் அதிகம் பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் சில பரீட்சார்த்த முயற்சிகளை நானும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.அதிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறேன்.
அதில் அண்மைக்காலமாக என்னை ஆட்கொண்ட விடயம் Collage Art என்று சொல்லப் படுகிற விடயம். எக்கச்சக்கமான செய்முறைகளோடு கூடிய வீடியோக்கள் யூரியூப்பில் காணக்கிடைக்கின்றன.
அது ஒருவகை கலை வடிவம் என்று சொல்லப்படுகிறது. செலவு அதிகம் தேவைப்படாது. பழைய சஞ்சிகைகள், கலண்டர் படங்கள், விற்பனை நிலையங்களில் கிடைக்கும் இலவச விளம்பரங்கள்.... போன்ற இவைகள் தான் மூலதனம்.
நான் மேலதிகமாக Winnie என்று சொல்லப்படும் - உபயோகித்த பொருட்களை விற்கும் - தொண்டு நிறுவனக் கடைக்குப் போய் பழைய புத்தகங்கள், சஞ்சிகைகள், படங்களோடு இருக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றையும் வாங்கி வருகிறேன்.
அவை பொதுவாக 2 டொலர்கள், 3 டொலர்களுக்குள் வரும்.
இப்படிப் போகிற போது மிக அரிய அருமையான புத்தகங்களைக் கூட கண்டெடுத்து கொண்டுவந்து காட்சிப் பொருளாகவும் பொக்கிஷமாகவும் கூட பேணி வருகிறேன்.
அது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் அவசியம் பேச வேண்டும்.
அது நிற்க.
இவ்வாறான படங்களைக் கொண்டு உங்கள் கற்பனைக்கு ஏற்ற விதமாக நீங்கள் ஒரு உருவத்தைக் கற்பனை செய்து புதிய வடிவத்தை உருவாக்குவது தான் இதன் அடிப்படை.
மிக ஆரம்பத்தில்செய்த சில உருவங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவை ஒரு பாலர் பள்ளிப் பிள்ளை ஒன்றின் சித்திரங்களைப் போன்றது.
பொதுவாக மிகக் குறைந்தது மூன்று வேறுபட்ட வடிவங்களை ஒன்றாக்கி புதிய கற்பனை வடிவங்களை உருவாக்க வேண்டும். நான் அதிக பட்சம் இரண்டு வடிவங்களைத் தான் ஒன்றாக்கி இருக்கிறேன்.
நீங்களும் ஒரு தடவை இந்த வேடிக்கையான வேலையைச் செய்து தான் பாருங்களேன்.
இது ஒரு புதிய அனுபவமாக எனக்கு இருந்தது.
மீண்டும் சந்திப்போம்.




















































