Thursday, January 26, 2023

தால லாவண்யம்

 தாலம் என்பது பனை.

லாவண்யம் என்பது அழகு என்று பொருள் கொள்ளத்தக்க சொல். 

தால விலாசம், தால சோபனம் என்றெல்லாம் ஏற்கனவே பனை பற்றி எழுதி இருக்கிறார்கள்.

காய்ந்து வரண்ட பூமியில் நாம் நம் பால்ய வாழ்வுக் காலத்தை பனையுடனேயே கடந்திருக்கிறோம். பனையையும் தம்முடய ஒரு பிள்ளையைப் போல கருதி தம் வாழ்வை ஒரு வாழ்வாக வாழ்ந்தவர்கள் நம் பெற்றோர் என்ற போதும், அது குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமலே அதைத் தாண்டி வந்து விட்டோம்.

’பனங்கொட்டை சூப்பிகள்’ என்று ஏனைய மாவட்டத்தவர் நம்மை எள்ளி நகையாடும் அளவுக்கு அவைகளோடு நமக்கான சம்பந்தம் இருந்திருக்கிறது.

 பனைக்கும் நமக்குமான அன்னியோன்னிய உறவு நாம் பிறந்த காலந்தொட்டே நம்மோடு இருந்து வருவது. பனை ஓலைப் பாயில் தவழ்ந்து, சிறுவர்களாக இருந்த போது கோயில் திருவிழாக்களில் பனங்கட்டிக் குட்டானும் சோளன்பொரியும் வாங்கித் தின்று, பனை ஓலையில் பெட்டி,கடகங்கள் செய்து, நாளாந்தம் பனை ஓலை கிழித்து கால்நடைகளுக்கிட்டு, பனங்கிழங்கு சாப்பிட்டு பனம்பழப்பணியாரம்,  புழுக்கொடியல், பனாட்டு சாப்பிட்டு வளர்ந்தது யாழ்ப்பாணத்தானின்  உடம்பு. 

நுங்கும் பதநீரும் கள்ளும் தருவது பனை. பூரானும் தந்து மகிழ்ந்தது பனை.

ஆனால் அது எப்படி என்ற எந்த புரிதலும் அதனோடு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கமும் அப்போது எனக்கிருக்கவில்லை. அதில் ஒரு அக்கறை கூட இல்லாத ஒரு உதாசீன மனோபாவத்தோடு வளர்ந்ததை நினைத்து இப்போது வெட்கிக்கிறேன்; வருந்துகிறேன். குறைந்த பட்சம் ஒரு நட்புறவோடு அன்னாந்து பார்த்து மனசார நன்றி சொல்லி இருக்கலாம்....கட்டியனைத்து ஒரு முத்தம் ஈந்த்திருக்கலாம்....😊

இன்று ஊரில் இருக்கும் நம் காணிக்குள் நிற்கும் பனை மரங்களை வெட்டப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் தான் பனை பற்றிய பிரக்ஞை ஒன்று சித்தித்தது. 

பனை பற்றிப் படித்துப் பார்த்ததில் பல தகவல்கள் சிக்கியது. பாவம் பனை என்று ஒரு பரிவும் பச்சாதாபமும் தோன்றுகிறது. அவ்வப்போது அது ஒரு பெண்ணைப் போலவும் நின்று பிடிக்கும் அதன் தன்மையில் பெண்ணையே அது மிஞ்சிவிடும் போலவும் தோன்றுகிறது. அதனால் 

தாலத்தை ஒரு பெண்ணாக பார்க்க விளையும் ஒரு பதிவு இது.

பனையில் ஆண்பனை என்றும் பெண் பனை என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. விதைகளில் இருந்து வளரும் பனைகள் விதையாக இருக்கும் போது, அது ஆண்பனைக்கான விதையா பெண்பனைக்கான விதையா என்று அறிந்து கொள்ளுதல் சிரமம். எனினும் ஒற்றைக் கொட்டைப் பழவிதையாயின் ஆண் பனைக்கான விதையாக அது இருக்குமென்றும்; இரட்டைக் கொட்டை பழ விதையாயின் ஒன்று ஆணாகவும் மற்றயது பெண்னாகவும் வளர வாய்ப்பிருக்கிறதென்றும்; மூன்று விதையிருக்கும் பழமாயின் இரண்டு ஆண்பனைகளாகவும் ஒன்று பெண்பனையாகவும் வாய்ப்பிருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

அதனால் பனம் விதை நாட்டும் போது இரட்டை விதைகளை நாட்டினால் ஆணையும் பெண்ணையும் அருகருகாக வளர்க்கலாம்.

பனைப்பெண்ணாள் மனிதப் பெண் போல்வாள். பெண்ணின் வளர்ச்சிப் பருவமும் பனைப்பெண்ணாளில் வளர்ச்சிப் பருவமும் ஒன்று போலவே விளங்குகின்றது. இரண்டும் பருவமடைய பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு விதை முளைக்க ஆரம்பித்ததில் இருந்து அதன் வளர்ச்சிப் பருவம் ஆரம்பமாகின்றது. முளை - முறிகிழங்கு - நார் கிழங்கு - பீலிப்பருவம் - வடலி - பனை என்பது பனையின் வளர்ச்சிப் படிநிலைகளாகும்.

பெண்ணுக்கான பருவங்கள் பேதை - பெதும்பை - மங்கை - மடந்தை - அரிவை - தெரிவை - பேரிளம்பெண் என சொல்லப்படும். அது மாதிரி ஆணின் வளர்ச்சிப் பருவங்கள் பாலகன் - விடலை - காளை - மீளி - மறவோன் - திறவோன் - முதுமகன் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அது போல இலைகளுக்குப் பருவங்கள் ஐந்து. கொழுந்து - தளிர் - இலை - பழுப்பு - சருகு என்பன அவை. அது போல மலர்களுக்கு வளர்ச்சிப் பருவம் ஏழு. அவை அரும்பு - மொட்டு - முகை - மலர் - அலர் - வீ - செம்மல் ஆகியன.  

பனைகள் சிறியனவாய் இருக்கும் போது அவற்றுக்கு வேறுபாடு கிடையாது. அவை வடலி என்றே  பொதுப் பெயர் பெறும். குழந்தைகள் அல்லவா? அவைகளுக்கு ஏது வேறுபாடு? எல்லாம் குழந்தைகள் தானே!

பனம் விதையில் இருந்து ஒரு பனை வளர ஆரம்பிக்கும் போது முதல் 22 நாள் வரை அதனை விதைப்பருவம் என்று அழைப்பர். 22 நாளில் இருந்து மூன்று மாதம் வரை அதனை முறிகிழங்குப் பருவம் என்று அழைப்பர். 3 மாதத்தில் இருந்து 4 மாதம் வரையான காலத்தை நார்கிழங்குப் பருவம் என அழைப்பர். 4 மாதம் தொடக்கம் 2 வருடம் வரையான காலத்தை பீலிப்பருவம் என்றும்; 2வருடம் முதல் 10 வருடம் வரையான காலத்தை வடலிப்பருவம் என்றும் அழைப்பர்.

வடலியின் முதல் குருத்து பீலியாகும். அது வெளிவரும் போது தனக்குரிய உணவோடு வெளிவருகிறது. அதனை ‘ மூடுபடம் விரித்தாடு பாம்பைப்போல முளைத்து வரும் பருவம் என்று ஒரு கும்மிப்பாட்டு சொல்கிறது. இதன் பிறகு தொடங்கும் அதன் வளர்ச்சிப் பருவம் முதல் பத்து வருடத்திலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 3 அங்குல வளர்ச்சியை அது எட்டும் என்று அறியப்படுகிறது.

25 வருடங்கள் வரை வளர வல்லது பனை. 25 வருடத்துக்குப் பிறகு 45 ஆண்டுகள் வரை  அது வளருமாயினும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாக இருக்கும்.பின்னர் 45 - 60 ஆண்டு காலத்துக்குள் அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்து உரம்பெற ஆரம்பிக்கும்.

இப்படியாக வளர்ந்து உரம்பெறும் பனை தன் 100 வது வயதில் வைரம் நிரம்பியதாய் ஆகி விடும்.முதுமையினை அது சந்திக்கும் போது அதன் இலைகள் பசுமை குறைவாக இருப்பதற்குக் காரனம் அது வைரம் பாய்ந்து நீர்ச் சத்தினை மேலே செலுத்த முடியாதிருக்கும் தன்மையினாலேயே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதனுடய கொடுக்கும் கொடைக்குணம் அதன் வடலிப்பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. மயிலின் தோகை போல விரியும் அதன் ஓலைகள் விசிறி செய்யப் பெரிதும் பயன்படுகிறது. அளவாகவும் அழகாகவும் விரிந்து சிறியதாய் நிற்கும் அந்த ஓலைகள் விசிறி செய்ய கன கச்சிதமானவை.

தொடர்ந்து அது வளரும் போது, அதன் கருக்கு மட்டைகள் வேலிகளுக்கும் ஓலைகள் கால்நடைகளுக்குத் தீவனமகவும் பயன் படுகின்றன. கங்கு வடலிப் பருவத்தில் கங்கு மட்டைத் தும்பு உற்பத்தியாகிறது. பத்து வயதளவில் வடலி ஆரடி உயரம் வளர்ந்து கம்பீரமாக நிற்கும்.

12 ஆண்டில் பருவம் அடையும் பெண்ணைப் போல பெண் பனையும் 12 வருடத்தில் இளம் பனையாய் வளர்ந்து நிற்கும். அதன் அஃறிணை இயல்பிலும் ஓரழகு ததும்பி நிற்கும். அப்போது அதன் உச்சியில் உள்ள மட்டைகள் நெகிழ்ச்சி அடையும். இதேவேளையில் அருகில் உள்ள ஆண்பனையின் விரல் போன்ற நீண்ட பாளைகளில் இருந்து மகரந்தப் பொடி மணங்கமழ காற்றோடு கலந்து வெளியேறி பெண்பனையின் குருத்தடியில் சேர்கிறது. மகரந்தத்தைக் கொண்ட பெண்பனை குரும்பை ஈணுகிறது. 

பனை பருவமைடைகிறது. பயன் தர ஆரம்பிக்கிறது.

இனி அவை தம் வாழ்வை தாமே பார்த்துக் கொள்ளும். நாம் அவைகளுக்கு சேதம் எதுவுஞ் செய்யாதிருந்தாலே போதுமானது.

இதனை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ‘முப்பாசம் தீர்த்த முனிவர் மொழி வாய்மை போல் எப்போதும் நின்று பயனீயுமே’ என்று மனமுருகி வர்ணித்துள்ளார்.

பனையில் இருந்து பெறப்படுவன:

பதநீர்: இது ஆண்பனையில் இருந்தும் பெண்பனையில் இருந்தும் பெறப்படுகிறது. இது ஒரு இனிப்பான பானமாகும். ஆண்பனையிலும் பெண்பனையிலும் பருவகாலங்களில் தோன்றும் பாளைகளை இடுக்கியால் இடுக்கி நுனியில் சீவுவதன் வழியாக இந்தப் பானம் பெறப்படுகிறது.

இப் பானம் உயிர் சத்துக்களும் மருத்துவ குணாம்சங்களும் கொண்டது. உடற்குளிர்மையும் முகப்பொலிவையும் தர வல்லதெனப் போற்றப்படும் பதநீரில் பல்வேறுவிதமான உயிர் சத்துக்களும் நோயணுகா சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. அதனால் இது கற்பகச் சாறு என்றும்; கற்பக அமிர்தம் என்றும்; பனஞ்சாறு என்றும்; பதனி என்றும் பன்னன் சாறு என்றும்  அழைத்தார்கள். பாலைப்போல சத்துள்ள பதநீரை காலை ஒருவேளை அருந்தினால் உணவருந்தத் தேவை இல்லை என்று சொல்கிறார்கள்.

இதனைக் காய்ச்சியே பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி, பனங்கட்டி ஆகியன தயாரிக்கிறார்கள்.

இதுவே நேரஞ் செல்லச் செல்ல புளித்து கள்ளாகி விடுகிறது.

இனி எங்கேயாவது ஒரு பனையைக் கண்டால் அதனை ஆண்பனையா பெண் பனையா என்று கவனியுங்கள். அது இளங் குமரியைப் போல வளர்ந்திருக்கும் வடலியா அல்லது குடும்பப் பெண்போல் உயர்ந்து நிற்கும் பனை மரமா என்றாராயுங்கள்.

குலைகுலையாய் பனங்காய்களைக் கொண்டிருக்கிறாளா? அருகில் நிற்கும் அவளின் ஆண்பனை மகன் எப்படியாய் இருக்கிறான் என்று பாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன அங்க வேறு பாடுகள் இருக்கின்றன என்றும் கூட ஆராயுங்களேன். அதில் தப்பென்ன இருக்கிறது? 

சுமார் 400 வருடங்கள் வரை வாழத்தக்க இவைகளை; தமக்குள்ளே ஆணென்றும் பெண் என்றும் பருவம் கொண்டு, வாழ்ந்து வரும் இவைகளை; தம்மை நமக்குப் பயன் தந்தும் எந்த ஒரு உதவியையும் நம்மிடம் கோராத இவற்றை நாம் கண்போல காப்போம்.

பொன்னி மழை வாழி! பூமி நலம் வாழி!

மண்ணுயிர்கள் வாழி! யறம் வாழி! - எந்நாளும்

கற்பகம் போலீயும் கடவுட்பனை வாழி!

நற்றமிழும் வாழி நயந்து! - சோமசுந்தரப் புலவர் - 

( தொடரும்....)


Saturday, January 14, 2023

சப்பாத்து வாங்கு - shoe bench - அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 6 -

 ஒரு நாட்டின் சீதோஷண நிலைமைகளுக்கும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அது அவர்களின் பொருள் பண்பாட்டிலும் பெருத்த ஆதிக்கத்தைச் செலுத்தும்.

நாம் எப்படி பருத்தி ஆடைகளுக்கு பழக்கப்பட்டிருக்கிறோமோ அப்படி மேலைத்தேயத்தவர் கம்பளி ஆடைகளுக்குப் பழக்கப் பட்டிருக்கிறார்கள். நாம் எப்படி செருப்புகளை அணிகிறோமோ அப்படி அவர்கள் சப்பாத்துகளை அணிகிறார்கள். கனத்த மேல் அங்கிகள், கழுத்துப் பட்டிகள் என நீழும் அவர்களின் ஆடை அணிகள் எல்லாம் அவர்களின் சீதோஷண நிலைமையின் பாற்பட்டது தானே! 

வீடுகள் கூட உயர்ந்த கூரைகளையும் சிறிய ஜன்னல்களையும் கொண்டமைவதும் அந்த ஜன்னல்கள் கூட திரைச் சேலைகளைக் கொண்டமைவதும் குளிரினால் வரும் தாக்கத்தைத் தாக்குப் பிடிக்கத் தானே! சீதோஷண நிலையைக் கருத்தில் கொண்டு தானே!

கழிப்பறைகளில் அவர்கள் மென்மையான கடதாசிகளை பயன்படுத்துகிறார்கள் என்றும்; நாம் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்றும்; அவர்கள் உணவுண்ணும் போது கரண்டி, கத்திகளைப் பயன் படுத்துகிறார்கள் என்றும்; நாம் நம் கைகளைப் பயன் படுத்துகிறோம் என்றெல்லாம் கூட விமர்சனங்கள் வருவதுண்டு.  அவ்வப்போது நாம் அவர்களைப் பார்த்து நகையாடுவதுமுண்டு. 

நினைத்துப் பார்த்தால் அவை எல்லாம் அவ் அவ் நாட்டு சீதோஷண நிலைகளால் தான் என்பது விளங்கும். குளிரால் உறையும் நாட்டில் ஜில் என்றிருக்கும் தண்ணீரை அவர்கள் அடிக்கடி எவ்வாறு பாவித்தல் கூடும்? 

இது தெரியாமல் நாமும் அவர்களையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் நம் நாட்டில் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும்; அதை பெருமையாக நினைப்பதும் சில பல வேளைகளில் பொருத்தமற்ற கேலிப்பொருளாக ஆகி விடுவதையும் அவ்வப்போது காண்கிறோம். 

சரி அதை விடுவோம்.

இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருப்பது shoe bench என்றழைக்கப்படும் சப்பாத்து வாங்கு என்ற பொருள். அதாவது தளபாடம் ஒன்று  பற்றியதாகும்.

இப்பொருள் வீட்டின் உள்பக்கம் பிரதான கதவுக்கு அருகாக உள்நடைபாதையில் அல்லது வரவேற்பறை முகப்பில் அநேகமாகக் காணப்படும். 

குளிர் பருவகாலத்தின் போது வெளியே போய் விட்டு வருபவர்கள் அல்லது வீட்டிலிருந்து வெளியே போகிறவர்கள் கண்ணாடியைப் பார்த்துத் தம்மைச் சரிசெய்து கொள்ளவும்; தம் சப்பாத்துகளை; தொப்பியை; குடையை; கைத்தடியை; கனமான தம் மேலங்கிகளைக் போட்டுக் கொள்ளவும் அல்லது களற்றி வைக்கவும்; ஆறுதலாக உட்கார்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் வீட்டினுள்ளே ஈரம் போகாதிருக்கவும்; வெளியேயோ உள்ளேயோ போகிறவர்கள் வசதியாகப் பிரதான வாசல் முகப்பிலேயே இவற்றை அணிந்தும் களற்றியும் வைத்துச் செல்லும் வசதிக்காகவும் இந்த மாதிரியான தளபாடம் ஒன்று அநேகமானவர்களின் வீட்டில் இருக்கும்.

(பாடசாலைகளிலும் கூட தம் புத்தகப்பைகளையும் தம் குளிர் மேலாடைகளையும் களற்றி வைக்க தனியான இடம் உண்டு. கொழுவிகளோடு அவரவர் பெயர் போட்ட மரச் சட்டங்கள் போட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மாணவர்கள் அவற்றை வைத்து விட்டுத் தான் வகுப்பறைக்குள் நுழைவார்கள்)

அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரம் அத்தனை குளிராக இல்லாத காரணத்தால் அதன் நீள அகலங்கள் மற்றும் அதன் அழகியலும் தாற்பரியங்களும் சுருங்கி புதுவடிவம் எடுத்து விட்டது. 

அது shoe bench என்றளவில் புதிய வடிவம் எடுத்து கச்சிதமாக சப்பாத்துகளை போட்டு வைக்கவும் அதன் மேல் இருந்து சப்பாத்தைப் போடவும் வசதியான வகையில் சுருங்கி விட்டது.

 அதனைத் தான் படத்தில் காண்கிறீர்கள்.








                    ( படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன். 05.01.2023 )

இவர்களின் மூலவர்களைப் பார்க்க வேண்டுமானால் நாம் பிரித்தானியாவுக்குப் போக வேண்டும். பிரித்தானிய பாரம்பரிய பின்னணியைக் கொண்ட மக்கள் இங்கு குடிவந்த போது எடுத்து வந்த இத்தகைய பாரம்பரியங்கள் இங்குள்ள சீதோஷண நிலைக்கேற்ப புது வடிவம் எடுத்த நிலைமையைத் தான் மேலே உள்ள படங்களில் காண்கிறீர்கள்.

இதன் மூலத்தை;  ’மூதாதை தளபாடத்தை’ இந்த shoe bench இனுடய அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால் கொஞ்சம் பின் நோக்கிப் போக வேண்டும். 

உங்களுக்காக தேடுபொறியில் தேடிய போது சில படங்கள் அகப்பட்டன. அவற்றையும் ஒரு பார்வைக்காக இங்கு உங்களோடு அவற்றையும் நன்றியோடு பகிர்ந்து கொள்கிறேன்














குடை கொழுவவும், கைத்தடியை வைக்கவும், தொப்பி, கோட் போன்றவற்றைக் கொழுவவும், கண்ணாடியில் முகம் பார்த்து தம்மை ஆசுவாசப்படுத்தி விட்டு அமர்ந்து, தம் கனமான சப்பாத்துக்களைக் களற்றவும் போடவும் தோதாக அமைந்த இத்தகைய தளபாடங்கள் அம் மக்களின் காலநிலைக்கும்; சிதோஷண சுவாத்தியங்கள் தரும் உபாதைகளுக்கு பரிகாரமாகவும் அதே நேரம் கலை நுணுக்க வேலைப்பாடுகளோடும் அமைந்திருப்பது அம் மக்களின்அழகியல் சார்ந்த பொருள் பண்பாட்டின் ஓரம்சம் என்றால் மிகை இல்லைத் தானே!

படங்கள்: நன்றி: இணையம்

Sunday, January 8, 2023

பெண்ணெனும் மெல்லியலாள்...

 அண்மைக் காலமாக என் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பழம்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றைக் கண்டு பிடித்ததில் இருந்து எனக்கொரு புதுப்பழக்கம் உருவாகி இருக்கிறது. அது என்னவென்றால் அங்கிருக்கும் பழம் பொருட்களில் பெரும் பாலானவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் பழக்கம் தான் அது.

அது ஒரு addict மாதிரி என்னில் தொற்றிக் கொண்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாத படியாக அது என்னைப் பாடாகப் படுத்துகிறது. அவ்வாறாக அண்மையில் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்ட பொருளில் ஒன்று, ஒரு சுவரில் கொழுவத்தக்க ஒரு மேலைத்தேயப் பெண்ணின் ஓவியம். 

$ 8.00 களுக்கு விற்பனையில் இருந்த அந்தப் படத்தைப் பார்த்து விட்டு என்னை மிகுந்த பிரத்தனத்தோடு கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். யாரிடமும் அது பற்றி வீட்டில் மூச்சு விடவில்லை. கேட்டால் என்னையே அந்தப் பழம்பொருட்கள் விற்கும் கடையில் கொண்டுபோய் தள்ளி விடுவார்கள் என்ற பயம் தான் அதற்குக் காரணம்.

ஆனால் பாருங்கள்! என் ஆத்துமம் சாந்தியே ஆகவில்லை. சொல்வழி கேட்கவில்லை. சதா அந்தப் படத்தைப் பற்றிய யோசினை! சரியான உறக்கமில்லை. யாரோடும் இது பற்றிப் பேசவும் முடியவில்லை...அதனை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தால் தான் மனம் ஆறும் என்று எனக்குச் சத்தயமாகப் புரிந்து விட்டது.

மறுநாட் காலை வீட்டில் வரப்போகும் பிரளயத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை மனதில் வரவழைத்துக் கொண்டு யாரிடமும் பேசாமல் அக்கடைக்குப் போய் பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இப்போது வீட்டுக்குக் குடிவந்திருக்கிற அந்தப் பெண்ணைத் தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.


இந்தப் பெண்ணைப் பார்த்தால் நம்முடய ரவிவர்மா வரைந்த தமயந்தியை உங்களுக்கு நினைவு படுத்தவில்லையா? அதே மெல்லியலளாக அன்னப்பறவையோடு  இவளும் காட்சியளிக்கவில்லையா?

ஆண்பெண் சமத்துவம் பற்றி பேசுகிறவர்கள் என்னை மன்னிப்பீர்களாக! என்ன தான் விடுதலை குறித்துப் பேசினாலும் அடிப்படை வேறுபாட்டையும் அதனதன் தனித்துவமான இயல்புகலையும் நாம் மறந்துவிடலாகாது. பெண் பெண் தான். ஆண் ஆண் தான். பெண் விடுதலை பேசுவோர்கள் இது பற்றி என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். உடலளவில் பெண் ஆண் என இரு உருவ வேறு பாடுகளும் அவற்றுக்கான இயல்புகளும் தன்மைகளும் என்றென்றைக்கும் மாற்றவோ அழிக்கவோ முடியாதவை என் அபிப்பிராயம்.

பெண்ணிடம் இயல்பாகவே மென்மையும் உடலளவில் பலமற்ற தன்மையும் ஆனால் மனதளவில் உறுதிப்பாடும் இருக்கிறது. அது போலவே ஆணிடம் உடலளவில் உறுதியும் பலமும் மனதளவில் பெண்ணில் சார்ந்து வாழும் (?! ) தன்மையும் இருக்கிறது என்பது என் எண்ணம்.

சரி, அது இருக்கட்டும்,  இப்போது ரவிவர்மா வரைந்த தமயந்தியைப் பார்ப்போமா?


இதைப் பார்த்த பிறகு சொல்லுங்கள்! மேலைத்தேயப் பெண்ணாக இருந்தாலென்ன, கீழைத்தேயப் பெண்ணாக இருந்தால் என்ன! பெண் மெல்லியலாளாகத் தானே இருக்கிறாள்?

ஒவ்வொருவரும் அவரவர் இயல்போடும் குணத்தோடும் பண்போடும் இருக்கையில் ஒவ்வொன்றும் எத்தனை அழகாக இருக்கிறது இல்லையா...

எதுவும் இயல்போடு இருக்கையில் தான் எழிலோடு விளங்குகிறது!

Friday, December 30, 2022

The Great Lifco Dictionary

 



வெகு அபூர்வமாக நான் வைத்திருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று இந்த லிஃகோ அகராதி.1952 ம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்டு 1999ம் பதிப்பாக பதிவேறி 2002ம் ஆண்டு என்னை வந்தடைந்தது அது.

The Little Flower Company இந்திய ரூபாய்கள் 160 க்கு அப்போது இதனை விற்பனை செய்திருக்கிறது. மொத்தமான துணியினால் ஒட்டி அக்கறையோடு பைண்ட் செய்யப்பட்ட இந்த அகராதி “ suggestions for the improvement of this book or corrections will be gratefully welcome by the publishers - whose main aim is accuracy and service" என்ற முன்பக்க பதாகையோடு ஆங்கில; ஆங்கில; தமிழ் மொழி வளத்தோடு அமைந்திருக்கிறது.

இன்று எத்தனையோ விதமான அகராதிகள், online செயலிகள், கூகுள் translation என்று எத்தனையோ இலகுவாகவும் உடனடியாகவும் சுலபமாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டதால் உலக மொழிகளையே நொடிப்பொழுதில் மொழிமாற்றம் செய்யும் வசதிகளை நாம் கண்டடைந்து விட்டோம். 

இருந்த போதும் நேற்றய தினம் வருட இறுதியிலேனும் புத்தகத்தட்டைத் தூசி தட்டும் நிமித்தமாக இதனை வெளியே எடுத்துப் புரட்டிப் பார்த்த போது தான் அது எத்தனை சிரத்தையோடும் தகவல்களோடும் எக்காலத்திற்கும் பொருந்தி காலத்தை வென்று நிற்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காண முடிந்தது.  

அது மொழிபெயர்ப்பை மட்டும் செய்யவில்லை. தமிழோடு தமிழ் தகவல்கள், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என சகலவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஒரு சொல்லை எழுதும் போது அதற்கு எழுத்துகள் எவ்வாறாக அவற்றோடு இணைகின்றன, அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்ற தகவல், எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதற்கான விபரமான குறிப்புகளை ஒரு புறம் தருகிறது. 

ஒரு வசனம் அமைக்கும் போது பயன்படுத்த வேண்டிய குறியீடுகள்; அவை எங்கெங்கெல்லாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் உள்ளது. எப்போதும் ஒற்றுமையில் அமைந்துள்ள சொற்கள், எப்போதும் பன்மையிலேயே காணப்படும் ஆங்கிலச் சொற்கள், எப்போதும் சோடிகளாக வரும் சொற்கள், சிறப்புப் பாவனைக்குரிய சொற்கள் என இவை போன்றவை தனியாக இனங்காட்டப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் எத்துணை முக்கியமானது என்பது பற்றி லிஃகோ The Little Flower company எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று அது தன் தேசத்து மக்களை; இளைய சமுதாயத்தினரை எத்தனை அக்கறையோடு நேசிக்கிறது என்பதைப் பறை சாற்றுகிறது. ’We are interested not only in making you pass the examination, but also in shaping your mind and character’ என்று சொல்லும் அது தேசத்து இளைய சமுதாயத்துக்குக் கூறும் அறிவுரை மகத்தானதாக இருக்கிறது. அது பற்றி எல்லாம் எழுதப் புகுந்தால் இந்தப் பதிவே ஒரு அகராதி போலாகி விடும் என்பதால் கீழ் வரும் அவர்களின் வசனங்களோடு இதனை நிறுத்திக் கொள்கிறேன். ” We are proud to diclare that during the fifty years of our service to the student world, we have contributed our mite to elevate sons and daughters of india to be worthy citizens, by giving them sound and timely advice. many of our elders, we are sure, will tell you of this aspect of our service.

ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்றுக் கொள்வதற்கான அறிவுரைகளில் இருந்து நோபல் பரிசு பெற்றோரின் விபரங்கள், சுதந்திரமடைந்த உலகநாடுகளின் விபரங்கள், உலக நாடுகளின் பாராளுமன்றங்களின் பெயர்கள், உலகத்தில் பிரபலமானவை, உலக நாடுகளின் நேர வித்தியாசங்கள், அளவை முறைகள், புத்தக அளவுகள், கணித குறியீடுகள், விதிமுறைகள், சொற்களின் மூலம் எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள், சொற்களும் அதற்கான ஒலிஅமைப்புகளும் பற்றிய தகவல்கள், சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் வாசிக்கும் முறைமை பற்றிய தகவல்கள், வாழ்த்துக்கள் / முகமன் கூறும் முறைகள், மற்றும் நேரங்கள், ஒருவரை விழித்து அழைக்கும் பாணிகள், கடிதம் எழுதும் முறை, சில லத்தீன் சொல்லாடல்கள், உணவருந்தும் நேரங்களில் உணவு வகைமுறைகளுக்குப் பாவிக்கப்படும் சொல்லாடல்கள், ஷேக்ஸ்பியரின் 150 சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள், விஞ்ஞான விதிமுறை மற்றும் சொற்களுக்கான விளக்கங்கள், சில முக்கிய பத்திரிகைத் துணுக்குச் செய்திகள், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சொற் தொகுதிகள் என்று அது ஒரு வாழ்க்கைக் களஞ்சியமாகவே விளங்குகிறது. அவர்கள் உண்மையாகவே  ’shaping your mind and characte’. ஆங்கிலேயப் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கூட அவர்கள் இந்த அகராதி வழியாக இந்தியத் தமிழர்களுக்கு ஊட்டி விட்டிருக்கிறார்கள்.

இனி தமிழ் மொழியில் இருக்கும் சிறப்புகளையும் அழகுகளையும் தொகுத்திருக்கும் முறைடோ இன்னும் அழகாக இருக்கிறது. தமிழ் இலக்கண அணிகள், உருபுகளுக்கான ஆங்கில பெயர்கள், வழக்கமாக உரையாடல்களில் இடம் பெறும் சிறப்புத் தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இருப்பிட பாகங்களின் பெயர்கள், அன்றாடப் தமிழரின் பாவனைப் பொருள்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இடப்பெயர்கள், பலசரக்குப் பொருட்கள், நோய்கள், தானியங்களின் பெயர்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள், பூக்களின் பெயர்கள், வேலைகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன  மற்றும் மிருகங்களின் பெயர் அட்டவணை, ஜந்துக்களின் இரைச்சல்களின் பெயர்கள், கூட்டுப் பெயர்கள், நவரத்தினங்கள், ராசிகள், கிரகங்கள், மிருகக் குழந்தைகளின் பெயர்கள்,கணிதம், பல விதமான தமிழ் ஆங்கிலப் பழமொழிகள், எனப் பெருகிக் கிடக்கிறது விபரங்கள். கூடவே, விஞ்ஞான,பெளதீக, தாவர, உடலியல், இரசாயண,கணித, வரலாற்று, புவியியல், வர்த்தகம், அரசியல் சார்ந்த சொற்கள், என அறிவியல், தமிழ் கலாசாரத்தின் அம்சங்களையும் அது கொண்டிருக்கிறது.

6.9.1967ம் ஆண்டு டொக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு சொன்ன செய்தி ஒன்று இவ்வாறாகப் பதிவாகி இருக்கிறது. ‘The teachers should set an example to the puples by their behaviour....We should develop the habits of self - scrutiny and self- discipline......If proper attitudes are developed in our youth, we will certainly have a better future for our country'

கூடவே, வாசகர்களுக்கென சில முன்னைய கால இந்திய ஆண்மீக வாதிகளின் உன்னதமான பொன்மொழிகளைக் கட்டம் போட்டும் சொல்லி இருக்கும் இந்த அகராதி வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கான உந்து சக்தியையும் ஊக்க மருந்தையும் கூட அதன் வழியாகக் கொடுத்திருக்கிறது.

 மொழிபெயர்ப்புகளை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விரிவான தகவல்கள் மேலும் உபயோகமாக இருக்கிறது. முடிந்தால் அது பற்றி தனிப் பதிவாகவே எழுதத் தக்க அளவுக்கு அதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன.

 ஆங்கில; தமிழ் மொழிகளை மட்டுமல்லாது அவற்றின் இயல்புகளையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் தன்னுள்ளே பொதித்து ஒரு வாழ்க்கைச் சுரங்கமாக அமைந்திருக்கிறது இந்த அகராதி.

எத்தனை செயலிகள் வந்தாலென்ன; எத்தனை சுகமாக அவை நம் விரல்களை வந்தடைந்தாலென்ன; இந்த லிஃகோ அகராதியை கையில் வைத்திருக்கும் போது ஒரு  வாழ்வியலையும் பண்பாட்டையும் வைத்திருப்பது போன்ற உணர்வு மட்டுமல்ல; பொதுநலமும், நாட்டு நலமும், சமூக நலமும், இளஞ்சமுதாயத்தினர் மீதான அக்கறையும் ஆதூரமும், மகத்தான  நாட்டுப்பற்றும், சேவை மனப்பண்மையும் கொண்ட ஒரு மனித கூட்டத்தின் மிகப்பெரும் மனங்களையும் பெரும் பேறினையும் கையில் தாங்கியிருப்பதைப் போல ஓர் எண்ணம்.

Hats Off to you guys!

உங்களாலேயும் தான் பாரதம் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது!! 

அதன் அறம் சார்ந்த ஆத்மா இப்படியான தேசபக்தர்களாலும் தான் தூக்கி நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

....

ஒரு குழந்தையை மடியில் கிடத்தியிருப்பதைப் போல ஒரு பண்பாட்டுப் பெட்டகத்தை என் மடியில் பெருமையோடு ஏந்தியிருக்கிறேன்.!

வாழ்க பாரத சமுதாயம்!! வாழ்க இனிது வாழ்கவே!!

Tuesday, December 27, 2022

ஆடு நாற்காலி - Rocking chair - அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 5 -







( முன்னும் பின்னும் அசைய வல்லதாகவும் அதே நேரம் பயமில்லாமல் பாதுகாப்பாகவும் முதுகு நிமிர்ந்திருக்கத் தக்கவாறு ஆடும் படியாகவும் அமைக்கப்பட்டுள்ள ஆடு நாற்காலி இது.)



( மிகவும் பலமாக ஆடும் வகையில் அமைந்துள்ள ஆடு நாற்காலிகள் மேலே உள்ள இவை.)

 நாற்காலிகள் பலதரப்பட்டவை. எனினும் அவற்றில் சோம்பேறி நாற்காலிகள் என்றழைக்கப்படுபவை சற்று வித்தியாசமானவை. Easy chair என்றழைக்கப்படும் துணி பொருத்தப்பட்டிருக்கும் வகையின நம் ஊர்களில் பரவலாக உபயோகத்தில் இருப்பவை.

நம் ஊர்களில் இன்னுமொருவிதமான சாய்வு நாற்காலிகள் உள்ளன. அவை மூங்கில் இழைகளினால் பின்னப்படுபவை.  அகலமானவையாகவும் சாய்ந்து படுக்கத் தக்கவையாகவும் இரு கைப்பிடிச்  சட்டங்களும் மடித்து மூடத்தக்க வகையிலும் அமைந்துள்ளவை. 

இந்திய மக்களால் உபயோகப்படுத்தப்படுபவை இன்னும் சற்று வேறுபட்ட பாங்கில் அமைந்தவை. ஆடு நாற்காலிகளுக்குப் பதிலாக அவர்களின் அக்கிரஹாரங்களிலும் வீட்டு நடுவிலும் ஊஞ்சல்கள் வீடுகளுக்கு தனிக் கம்பீரத்தை வழங்கி வந்தன.

சிங்கள மக்கள் அதனை வேறுவிதமாக செய்து பாவிப்பார்கள்.அவை மிகுந்த கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும். ஆனாலும் இவைகள் எல்லாம் அவுஸ்திரேலிய ஆடுநாற்காலிகளை விட பலவிதத்திலும் மாறுபட்டவை. சீதோஷன நிலைக்கும் கிடைக்கும் மூலப்பொருட்களுக்கும் கற்பனை வளத்திற்கும் ஏற்ப அவை மாறுபடுபவை.

இப்போதெல்லாம் அவுஸ்திரேலியாவில் பாரம்பரியமாக மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் இருக்கும் வகைகளினாலான ஆடுநாற்காலிகளைக் காண்பதரிது. இப்போது புழக்கத்தில் உள்ள இத்தகைய படத்தில் காட்டப்பட்டுள்ள ஆடு நாற்காலிகள் எல்லாம் சுமார் 60 / 70 வருடங்கள் பழமையானவை என்பது என் அனுமானம்.

இப்போதும் பாவனைக்குகந்ததாக இருக்கும் அவைகளின் செய்நேர்த்தியும் காத்திரத்தன்மையும் மரத் தெரிவும் அதனைப் பாவித்து வரும் மக்களிடம் காணப்படும் கவனமாகப் பாவிக்கும் தன்மையுமே அவற்றை இன்னும் பாவனைக்குகந்தவையாக இருக்க முக்கிய காரணமாகும்.

இவற்றைப் பாவித்து வந்த மக்கள் காலமாகி விட பழங்கடைகளைத் தேடி மறுவாழ்வுக்காக வந்திருக்கும் இத்தகைய நாற்காலிகள் இனி வாங்குபவர்களின் மனநிலைக்கேற்ப தம் வாழ்வை கொண்டிருக்கும். இவற்றின் காலம் காலாவதியாகிப் போன பின்னால் இவற்றைக் காண்பதும் அரிதாகி விடும்.

ஒரு காலகட்டத்தின் வாழ்வும் பண்பாடும் கூட அதனோடு மறைந்து போய் விடும் என்பது தான் அதிலுள்ள பெரும் சோகம்!

அப்படியென்றால் இப்போது எப்படியான சாய்வு நாற்காலிகள் / ஆடு நாற்காலிகளை இன்றய மக்கள் பாவிக்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இன்றய காலங்களில் சொகுசு மெத்தைகளாலும் உலோகங்களாலும் செய்யப்படும் recliner chair கள் தான் பரவலான பாவனையில் உள்ளன.

மீசைக் காவலன் - Moustache Guard - அவுஸ்திரேலிய பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 4 -

 சில வருடங்களுக்கு முன்னால் ‘மீசைக்கரண்டி’ என்பது பற்றி என் பிரிய தோழி கீதா ஒரு பதிவு போட்டிருந்தார். மேசைக்கரண்டி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன மீசைக்கரண்டி என்று கேட்கிறீர்களா?

ஆங்கிலேயர்கள் சூப் குடிக்கும் போது மீசை இடைஞ்சலாய் இல்லாமல் இருப்பதற்காகவும் அதே நேரம் சூப்பில் நனையாமல் மீசையைப் பாதுகாப்பதற்காகவும் விசேடமாக தயாரிக்கப்பட்ட கரண்டி தான் அது. அந்தக் கரண்டி தான் கீழே காட்டப்பட்டிருக்கிற ஒளிப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

இம் மீசை மறி கரண்டிகளில் நடுவில் இருக்கும் பகுதி மீசையை நனையாமல் பாதுகாக்கும் அதே நேரம் கீழே இருக்கும் பகுதியினால் திரவ பதார்த்தத்தைக் குடிக்க இந்த மீசை மறி கரண்டிகள் உதவின.

அது போன்றது தான் இந்த Moustache Guard என்று சொல்லப்படுகிற கீழே காட்டப்பட்டிருக்கிற இச் சிறு சாதனம்.

தேவைப்படும் போது பொருத்தவும் நீக்கவும் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு செல்லவும் ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது இச் சாதனம்.

ஆங்கிலேயர்களிடம் ஒரு விதமான தரத்தை பேணும் நேர்த்தியும்; நுட்பமான சிந்தனைத் திறனும்; அழகுணர்ச்சியும், வாழ்க்கையை அனுபவிக்கும் இயல்பும் சற்று ஏனைய இனத்தவரை விட அதிகமாக இருக்கிறதோ என்று எனக்கு எண்ணத் தோன்றும்.

அவர்கள் தேநீர் அருந்துவதாக இருந்தால் கூட தேநீரின் தரத்தில் மட்டும் அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. அதனை பருகும் பாத்திரமும் அழகியல் நிரம்பியதாக இருக்கும். அவர்களுக்கு அதனைக் குடிப்பதென்பது ஒரு திருவிழா போன்ற இன்பம் பயப்பது. தயாரிக்கப்பட்ட தேனீராக அதனை அவர்கள் அருந்துவதில்லை. தனித்தனியாக எல்லாவற்றையும் எடுத்து வைத்து தத்தம் சுவைக்கேற்ப தாமே அதனைத் தயாரித்துக் கொள்வார்கள்.

கேத்தல், சீனி, பால் வைக்கும் பாத்திரங்கள், அவைகளை வைக்கும் மேசை, அதன் விரிப்புகள், கதிரை எல்லாமே அழகியலோடு இசைந்தவாறிருக்கும். அதனை; அந்த அழகியலை அனுபவித்தவாறே ஆறுதலாக ஒவ்வொரு சொட்டையும் அனுபவித்து அருந்துவார்கள். ( நம் நாட்டையே அதற்காகத் தானே கைப்பற்றிக் கொண்டார்கள்) 

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு சொட்டையும் அனுபவிக்கத் தெரிந்தவர்கள் தமக்கு இடைஞ்சலாக இருக்கும் தம் அழகு மீசைகளுக்கு ஒரு வழி கண்டுபிடிக்காமலா இருந்திருப்பார்கள்? அதற்கான தீர்வு தான் இந்த மீசைக் காவலன். Moustache Guard.




அவர்களுக்கு சூப் குடிக்கும் போது மட்டுமா மீசை நனைகிறது? அது தேநீர் மற்றும் பியர் போன்ற பான வகைகளை அருந்தும் போதும் தானே தொந்தரவாக இருக்கிறது... அதற்காக எல்லாம் சிரத்தை எடுத்து வளர்த்துவரும் மீசையை எல்லாம் எடுத்துவிட முடியுமா என்ன? அது முடியாதென்பதால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறு கருவி தான் இது.

கைக்கடக்கமான அழகான பேழையில் வைத்து காவிச் செல்ல ஏற்ற விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிற இச் சாதனம் அவசியம் ஏற்படும் போது குவளையின் மேலே வைத்து மீசையைப் பாதுகாத்து விரும்பிய பானத்தை அருந்தும் விதமாக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.






சில பாத்திரங்கள் அதனோடு இணைந்தே பாவனையில் இருந்திருக்கிறது. அவற்றையே கீழே உள்ள இணைய வழி சேகரித்த படங்களில் காண்கிறீர்கள்.


இப்போதெல்லாம் மேலைத்தேயத்தவர்களுக்கு மீசையின் மீது மோகம் இல்லாது போய் மொழு மொழு முகங்களோடு காட்சி தருவதால் இதன் பாவனைகளும் படிப்படியாக மறைந்து இல்லாதொழிந்து போயின.

அடிச்சு வளர்க்காத பிள்ளையும் பிள்ளையோ! முறுக்கி வளர்க்காத மீசையும் மீசையோ!! என்று நம்மவர்களிடம் ஒரு பழமொழி வழங்கி வருகிறதல்லவா? நம்மவர்களும் மீசையில் வீரத்தை முடிந்து வைத்துக் கொண்டவர்கள் தானே?

 பல வடிவங்களிலும் தோற்றங்களிலும் தென்பட்டுவந்த மீசைகளில் பாரதியாரின் மீசையும் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் மீசையும் பிரபாகரனின் மீசையும் நமக்கு நினைவில் வரக்கூடும். கூடவே மெல்லிய கோடு போல வைக்கப்பட்டிருக்கும் மீசையும் அரிவாள் மீசையும் திரைப்படங்களில் பார்த்து வியந்தவை. கூடவே ஹிட்லரின் மீசை உலக மகா பிரபலமாயிருந்தது. 

அது சரி! அப்படி எல்லாம் பிரச்சினை இருந்திருக்குமென்றால் நம்மவர்கள் எப்படியெல்லாம் இதனைச் சமாளித்திருப்பார்கள்?

புகைப்படங்கள்: நன்றி -கூகுள் இணையம்.

Gossip Bench - வம்பளக்கும் வாங்கு - அவுஸ்திரேலிய பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 3 -




மேலே இருக்கும் இந்த பொருள் என்ன என்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா?

இதற்குப் பெயர் வம்பளக்கும் வாங்கு. அதாவது Gossip Bench. இதுவரை கண்டதோ கேள்விப்பட்டதோ இல்லாததாக இருந்த இந்தப் பொருளை முன்னைய பதிவில் சொல்லி இருந்த ஒரு பழம்பொருட்கள் விற்கும் கடையில் கண்டேன். 

ஏதோ ஒரு கம்பீரமான வீட்டில் பலகாலம் இருந்து விட்டு இரண்டாம் வீடு தேடி இந்தக் கடையில் காத்திருந்த இதனை கண்டதும் பிடித்துப் போய் விட்டது.

இரும்பினால் மிகக் காத்திரமாகவும் உறுதியாகவும் அழகுணர்ச்சியோடும் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தப் பொருளைப் பார்த்ததும் நான் அதன் மீது தீவிர காதல் கொண்டு விட்டேன்.

இன்றய காலங்களில் எல்லாம் தொட்டவுடன் உடைந்து விடும்; பெட்டிகளில் அடைத்து வரும்; நாமே முழுமைப் பொருளாக ஆக்கவேண்டிய தேவைகள் உள்ள படியாக வரும் பாவனைப்பொருட்களின் மத்தியில் உறுதியாகவும் அழகாகவும் நல்ல முறையில் பேணப்பட்டதாகவும் வசீகரமானதாகவும் இருந்த இச் சாதனம் என் கருத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? 
Old is Gold.

$35.00 களுக்கு விற்பனையில் இருந்த இதனை உடனடியாக வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது என்னவென்றால் மிருதுவான அதன் இருக்கையுடன் கூடிய மேல் தட்டு கையை வாகாக வைத்து ஏதேனும் எழுத மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தான்.

 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் விரிவுரை மண்டபங்களில் இருக்கும் மரத்தாலான மூங்கில் இழைகளினால் பின்னப்பட்ட கை பிடியுடன் கூடிய இருக்கையின் வலது கைப்புற கைப்பிடி மாத்திரம் நுனியில் சற்றே பரந்து ஒரு கொப்பி வைக்கக்கூடிய அளவுக்கு விரிந்து காணப்படும். அது அமரவும்; அமர்ந்து எழுதவும் வசதியாக  அமைந்த 2 in 1  கதிரை. இடச் சிக்கனமும் வசதியும் தேவைப்பட்டால் தனி ஒருவரால் நகர்த்தத் தக்கதாகவும் நடைமுறைக்கேற்ற வசதியோடும் உள்ள அது போல ஒன்றை இங்கும் எங்கு தேடினும் கிடைக்கப் பெறவில்லை. இணைய உலக விற்பனைச் சந்தையில் கூட அது இல்லை.

இது அதுபோல எனக்குப் பயன்படும் என்பது என் எண்ணம். அதனால் வாங்கி வந்து விட்டேன்.

ஆனால், இதனை எதற்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள் என்ற சுவாரிசமான கேள்விக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசு மிகவும் ஆச்சரியமானது.

அதற்கு, சுமார் 50 வருடங்களுக்கு முன்பான காலத்திற்கு நீங்கள் பின்புறமாகப் பயணிக்க வேண்டும். அப்போதெல்லாம் தொலைபேசி மிகவும் அபூர்வம். யாரேனும் ஒரிரு பணக்கார வீடுகளில் அது காணப்படும். இல்லையா? 

இந்த பாவனைப்பொருள் தொலைபேசி வைக்கப் பயன்பட்ட ஓர் உபகரணமாகும். வீடுகளில் அதற்கென தனியான ஓரிடமும் சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்தது. மேலே உள்ள தட்டில் தொலைபேசி வைக்கப்பட்டிருக்கும். தொலைபேசி அழைப்பு வந்தால் அதனை எடுப்பவர் அந்த இடத்துக்குப் போய் தொலைபேசியை எடுத்து அருகில் அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் வாங்கில் இருந்து ஆறுதலாக அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படி ஒருகாலம் இருந்திருக்கிறது. ஆற அமர இருந்து புதினம் கதைக்கும் ஒரு காலம். அதனால் இதற்கு Gossip Bench என்று பெயர். 

அதற்கு இன்றுவரை அதன் அழகும் கம்பீரமும் மிடுக்கும் குறையாத இந்தப் பாவனைப் பொருள் இன்றும் அபூர்வமான சாட்சியாக இருக்கிறது.

ஆங்கிலேயர்களின் அழகுணர்ச்சியின் சாட்சியாகவும் செல்வச் சீமாட்டிகளின் வாழ்க்கைமுறையின் ஓர் அங்கமாகவும் வீட்டுக்குத் தனிக் கம்பீரத்தைக் கொடுத்த ஒரு பாவனைப் பொருளாகவும் அமைந்த அது உண்மையில் ஓர் அழகுப் பொக்கிஷம் தான்.

ஆங்கிலேய அழகு!

இன்று என் வீட்டில்!