Showing posts with label படித்தவை. Show all posts
Showing posts with label படித்தவை. Show all posts

Friday, December 30, 2022

The Great Lifco Dictionary

 



வெகு அபூர்வமாக நான் வைத்திருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று இந்த லிஃகோ அகராதி.1952 ம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்டு 1999ம் பதிப்பாக பதிவேறி 2002ம் ஆண்டு என்னை வந்தடைந்தது அது.

The Little Flower Company இந்திய ரூபாய்கள் 160 க்கு அப்போது இதனை விற்பனை செய்திருக்கிறது. மொத்தமான துணியினால் ஒட்டி அக்கறையோடு பைண்ட் செய்யப்பட்ட இந்த அகராதி “ suggestions for the improvement of this book or corrections will be gratefully welcome by the publishers - whose main aim is accuracy and service" என்ற முன்பக்க பதாகையோடு ஆங்கில; ஆங்கில; தமிழ் மொழி வளத்தோடு அமைந்திருக்கிறது.

இன்று எத்தனையோ விதமான அகராதிகள், online செயலிகள், கூகுள் translation என்று எத்தனையோ இலகுவாகவும் உடனடியாகவும் சுலபமாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டதால் உலக மொழிகளையே நொடிப்பொழுதில் மொழிமாற்றம் செய்யும் வசதிகளை நாம் கண்டடைந்து விட்டோம். 

இருந்த போதும் நேற்றய தினம் வருட இறுதியிலேனும் புத்தகத்தட்டைத் தூசி தட்டும் நிமித்தமாக இதனை வெளியே எடுத்துப் புரட்டிப் பார்த்த போது தான் அது எத்தனை சிரத்தையோடும் தகவல்களோடும் எக்காலத்திற்கும் பொருந்தி காலத்தை வென்று நிற்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காண முடிந்தது.  

அது மொழிபெயர்ப்பை மட்டும் செய்யவில்லை. தமிழோடு தமிழ் தகவல்கள், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என சகலவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஒரு சொல்லை எழுதும் போது அதற்கு எழுத்துகள் எவ்வாறாக அவற்றோடு இணைகின்றன, அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்ற தகவல், எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதற்கான விபரமான குறிப்புகளை ஒரு புறம் தருகிறது. 

ஒரு வசனம் அமைக்கும் போது பயன்படுத்த வேண்டிய குறியீடுகள்; அவை எங்கெங்கெல்லாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் உள்ளது. எப்போதும் ஒற்றுமையில் அமைந்துள்ள சொற்கள், எப்போதும் பன்மையிலேயே காணப்படும் ஆங்கிலச் சொற்கள், எப்போதும் சோடிகளாக வரும் சொற்கள், சிறப்புப் பாவனைக்குரிய சொற்கள் என இவை போன்றவை தனியாக இனங்காட்டப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் எத்துணை முக்கியமானது என்பது பற்றி லிஃகோ The Little Flower company எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று அது தன் தேசத்து மக்களை; இளைய சமுதாயத்தினரை எத்தனை அக்கறையோடு நேசிக்கிறது என்பதைப் பறை சாற்றுகிறது. ’We are interested not only in making you pass the examination, but also in shaping your mind and character’ என்று சொல்லும் அது தேசத்து இளைய சமுதாயத்துக்குக் கூறும் அறிவுரை மகத்தானதாக இருக்கிறது. அது பற்றி எல்லாம் எழுதப் புகுந்தால் இந்தப் பதிவே ஒரு அகராதி போலாகி விடும் என்பதால் கீழ் வரும் அவர்களின் வசனங்களோடு இதனை நிறுத்திக் கொள்கிறேன். ” We are proud to diclare that during the fifty years of our service to the student world, we have contributed our mite to elevate sons and daughters of india to be worthy citizens, by giving them sound and timely advice. many of our elders, we are sure, will tell you of this aspect of our service.

ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்றுக் கொள்வதற்கான அறிவுரைகளில் இருந்து நோபல் பரிசு பெற்றோரின் விபரங்கள், சுதந்திரமடைந்த உலகநாடுகளின் விபரங்கள், உலக நாடுகளின் பாராளுமன்றங்களின் பெயர்கள், உலகத்தில் பிரபலமானவை, உலக நாடுகளின் நேர வித்தியாசங்கள், அளவை முறைகள், புத்தக அளவுகள், கணித குறியீடுகள், விதிமுறைகள், சொற்களின் மூலம் எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள், சொற்களும் அதற்கான ஒலிஅமைப்புகளும் பற்றிய தகவல்கள், சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் வாசிக்கும் முறைமை பற்றிய தகவல்கள், வாழ்த்துக்கள் / முகமன் கூறும் முறைகள், மற்றும் நேரங்கள், ஒருவரை விழித்து அழைக்கும் பாணிகள், கடிதம் எழுதும் முறை, சில லத்தீன் சொல்லாடல்கள், உணவருந்தும் நேரங்களில் உணவு வகைமுறைகளுக்குப் பாவிக்கப்படும் சொல்லாடல்கள், ஷேக்ஸ்பியரின் 150 சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள், விஞ்ஞான விதிமுறை மற்றும் சொற்களுக்கான விளக்கங்கள், சில முக்கிய பத்திரிகைத் துணுக்குச் செய்திகள், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சொற் தொகுதிகள் என்று அது ஒரு வாழ்க்கைக் களஞ்சியமாகவே விளங்குகிறது. அவர்கள் உண்மையாகவே  ’shaping your mind and characte’. ஆங்கிலேயப் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கூட அவர்கள் இந்த அகராதி வழியாக இந்தியத் தமிழர்களுக்கு ஊட்டி விட்டிருக்கிறார்கள்.

இனி தமிழ் மொழியில் இருக்கும் சிறப்புகளையும் அழகுகளையும் தொகுத்திருக்கும் முறைடோ இன்னும் அழகாக இருக்கிறது. தமிழ் இலக்கண அணிகள், உருபுகளுக்கான ஆங்கில பெயர்கள், வழக்கமாக உரையாடல்களில் இடம் பெறும் சிறப்புத் தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இருப்பிட பாகங்களின் பெயர்கள், அன்றாடப் தமிழரின் பாவனைப் பொருள்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இடப்பெயர்கள், பலசரக்குப் பொருட்கள், நோய்கள், தானியங்களின் பெயர்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள், பூக்களின் பெயர்கள், வேலைகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன  மற்றும் மிருகங்களின் பெயர் அட்டவணை, ஜந்துக்களின் இரைச்சல்களின் பெயர்கள், கூட்டுப் பெயர்கள், நவரத்தினங்கள், ராசிகள், கிரகங்கள், மிருகக் குழந்தைகளின் பெயர்கள்,கணிதம், பல விதமான தமிழ் ஆங்கிலப் பழமொழிகள், எனப் பெருகிக் கிடக்கிறது விபரங்கள். கூடவே, விஞ்ஞான,பெளதீக, தாவர, உடலியல், இரசாயண,கணித, வரலாற்று, புவியியல், வர்த்தகம், அரசியல் சார்ந்த சொற்கள், என அறிவியல், தமிழ் கலாசாரத்தின் அம்சங்களையும் அது கொண்டிருக்கிறது.

6.9.1967ம் ஆண்டு டொக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு சொன்ன செய்தி ஒன்று இவ்வாறாகப் பதிவாகி இருக்கிறது. ‘The teachers should set an example to the puples by their behaviour....We should develop the habits of self - scrutiny and self- discipline......If proper attitudes are developed in our youth, we will certainly have a better future for our country'

கூடவே, வாசகர்களுக்கென சில முன்னைய கால இந்திய ஆண்மீக வாதிகளின் உன்னதமான பொன்மொழிகளைக் கட்டம் போட்டும் சொல்லி இருக்கும் இந்த அகராதி வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கான உந்து சக்தியையும் ஊக்க மருந்தையும் கூட அதன் வழியாகக் கொடுத்திருக்கிறது.

 மொழிபெயர்ப்புகளை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விரிவான தகவல்கள் மேலும் உபயோகமாக இருக்கிறது. முடிந்தால் அது பற்றி தனிப் பதிவாகவே எழுதத் தக்க அளவுக்கு அதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன.

 ஆங்கில; தமிழ் மொழிகளை மட்டுமல்லாது அவற்றின் இயல்புகளையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் தன்னுள்ளே பொதித்து ஒரு வாழ்க்கைச் சுரங்கமாக அமைந்திருக்கிறது இந்த அகராதி.

எத்தனை செயலிகள் வந்தாலென்ன; எத்தனை சுகமாக அவை நம் விரல்களை வந்தடைந்தாலென்ன; இந்த லிஃகோ அகராதியை கையில் வைத்திருக்கும் போது ஒரு  வாழ்வியலையும் பண்பாட்டையும் வைத்திருப்பது போன்ற உணர்வு மட்டுமல்ல; பொதுநலமும், நாட்டு நலமும், சமூக நலமும், இளஞ்சமுதாயத்தினர் மீதான அக்கறையும் ஆதூரமும், மகத்தான  நாட்டுப்பற்றும், சேவை மனப்பண்மையும் கொண்ட ஒரு மனித கூட்டத்தின் மிகப்பெரும் மனங்களையும் பெரும் பேறினையும் கையில் தாங்கியிருப்பதைப் போல ஓர் எண்ணம்.

Hats Off to you guys!

உங்களாலேயும் தான் பாரதம் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது!! 

அதன் அறம் சார்ந்த ஆத்மா இப்படியான தேசபக்தர்களாலும் தான் தூக்கி நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

....

ஒரு குழந்தையை மடியில் கிடத்தியிருப்பதைப் போல ஒரு பண்பாட்டுப் பெட்டகத்தை என் மடியில் பெருமையோடு ஏந்தியிருக்கிறேன்.!

வாழ்க பாரத சமுதாயம்!! வாழ்க இனிது வாழ்கவே!!

Friday, July 30, 2021

மூலையில் ஒரு நாற்காலி

குளிர்காலத்தின் நடுவில் உட்காந்திருக்கிறோம்.

நாளுக்கு நாள் கொரோனாவின் பெருக்கம் அதிகரித்தபடி இருக்கிறது. நேற்றயதினம் கட்டுப்பாடுகள் இன்னும் இறுகி 5 கி.மீ. ற்குள் மாத்திரம் தான் - அதிலும் அத்தியாவசியம் என்றால் மாத்திரம் தான் வீட்டினை விட்டு வெளியே வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்த அத்தியாவசியங்களும் கூட என்ன என்னத்திற்காக என்று பட்டியல் தரப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு அபராதங்களும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. நகர்புறங்களில்; நாட்டுப் புறங்களில் இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக பொலிசாரோடு சேர்ந்து இராணுவமும் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தே வருகிறது.

என் வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கிற பிரதேசங்கள் எல்லாம் கொரோனா தொற்றுகளும் பாதிப்புகளும் மிக அதிகரித்துப் போயிருப்பது இதுதான் முதல் தடவை.

சரி, மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கக் காலம் எம்மைப் பணித்திருக்கிறது. அதைமீறி செய்ய என்ன இருக்கிறது? 

எதுவுமில்லை.

என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏதேனும் புதிதாக இருக்கிறதா என்ற என் இணையத்தேடலில் டொக்டர் ஜேன் என்று ஒருவரைக் கண்டு கொண்டு அவரிடம் இருந்து கொஞ்சம் படித்துக் கொண்டேன். அதன் மூலையில் ஒரு சிறு குறிப்பு ஒன்று புத்தக வாசிப்பு குறித்து இருந்தது. 

அது இவ்வாறு சொல்கிறது.

இந்தப் புத்தகம் என் வீடு.
கதவு திறந்திருந்திருக்க
நான் உள்நுழைவேன்..
இங்கு நான் மகிழ்ந்திருக்க
சாளரங்கள் பல உண்டு.
என்னை விரும்பும் நண்பர்கள் 
ஆண்களும் பெண்களுமாய்
இங்கிருக்க, 
என் சிரிப்பை, அன்பை, காதலை,
அழகை, மகிழ்ச்சியைக் 
இங்கு நானும் கண்டெடுப்பேன்.

Wednesday, September 25, 2019

தமிழில் பேசினால்....

 குங்குமம் கொட்டும் செய்தி ...

அதாகப்பட்டது என்னவெனில், வணிக சஞ்சிகையான குங்குமம் வார இதழில் வரும் பல்வேறுவிதமான துணுக்குகளில் 6.9.19 திகதியில் வெளிவந்த (பக்:10) பேச்சுக் குறித்த சொற்களுக்கான ஆங்கிலத் தமிழ் விளக்கங்கள் அற்புதமாக இருந்தன.

அவைகளை என் சொந்த சேமிப்பாக இங்கு சேர்த்து வைக்க ஆசையாக இருந்ததால் இங்கு அதனை மறு பதிவிடுகிறேன்.


விளம்பு: Speak with a Massage

ஓது: Speak with Recite

இயம்பு: Speak Musically

பேசு: Speak

பகர்: Speak with Data

செப்பு: Speak with Answer

கழறு:Speak with Censure

உரை: Speak with Meaningfully

நவில்: Speak Rhymingly

கூறு: Speak Categorically

பறை: Speak with Reveal

சாற்று: Speak with Declare

நுவல்:Speak with an Introduction

கரை: Speak with Calling

மொத்தம் 14 வகையான பொருள்பட பேசும் கலைக்கு பெயர்களை வைத்திருக்கிறது நம் தமிழ்!



தகவல்: நன்றி: குங்குமம் வார இதழ்; 6.9.19; பக். 10)

Wednesday, August 7, 2019

கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்கோ...




வாழ்க்கையில் கனமான கணங்களைக் கடந்து போக - கொஞ்சமாக றிலாக்ஸ் செய்து கொள்ள - அன்றாட வேலை தவிர்ந்த, ஏதேனும் ஒன்று நமக்கு அன்றாடம் தேவைப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
நண்பர்கள்...
சினிமா...
இசை...
விளையாட்டு...
குழந்தைகள்...
இணையம்...
முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள்...

மேலும் வைன், பியர் வகையறாக்களும் மேலும் புகைத்தல், மதுபான நுகர்வும் இதற்குள் அடங்குமா என்று தெரியவில்லை...


இவ்வாறாக வளர்ந்து செல்லும் பட்டியலில் உங்கள் அம்சம் என்னவாக இருக்கிறது?

என் அக்காளுக்கு பூந்தோட்டம்.
என் தங்கைக்கு அவள் வளர்க்கும் நாய்குட்டி
என் பிரிய தோழிக்கு வீட்டுத் தோட்டம்...

எனக்கு?

எனக்கு என்னவாக இருக்கும் என்று யோசித்த போது புத்தகங்கள் இலகுவாக வந்து என்னோடு செல்லம் கொஞ்சிக்கொண்டு என்னைச் சொல், என்னைச் சொல் என்கின்றன.

என்றாலும் ஒரு பெற்றோருக்கான கண்டிப்போடு ’கனமான’ உள்ளடக்கம் கொண்ட புத்தகங்களுக்கு அந்த அன்பளிப்பை கொடுக்க மறுத்து, அது ஆனந்த விகடன் மாதிரியான சிறு வணிக சஞ்சிகைக்களுக்கானது அந்த இடம் என்று கண்டிப்பாகச் சொல்லி, ‘பெரியவர்களை’ அகற்றி, கொஞ்சம் தூரம் நிற்கச் சொல்லி, குழந்தைகளைப் போன்ற இச் சிறு சஞ்சிகைகளை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

ஆனந்த விகடன்.

அது ஒரு கனமில்லாத சுவாரிசஸம்...

இதற்கும் எனக்குமான பரீட்சயம் பலவருடங்கள் கொண்டது. விகடன் வீட்டுக்கு வாராந்த விருந்தாளி. இங்கும் கூட. (ஊரில் இருந்த போது கலைமகள்.) முன்னர் விகடனில்  மதன் என்றொருவர் மிக அற்புதமாக கார்ட்டூன் வரைவார். அப்போதெல்லாம் அவருடய கேள்வி பதில்கள் தான் நான் முதலில் விரும்பிப் படிப்பது. இப்போது எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை. அந்த அற்புதமான திறமைசாலியை விகடன் தொப் என்று போட்டு விட்டதில் எனக்கு இன்று வரை வருத்தமுண்டு. ஏன் கோபமும் தான்.

இப்போதெல்லாம் அதில் அரசியலும் சினிமாவும் அதிக இடத்தைப் பிடித்து விடுகிறது. கூடவே புத்தி மதிகளைப் போல அமைந்து விடும் கட்டுரைகளும் எனக்கு பிடிக்கிறதில்லை.  கூடவே கவிதைகளும்... எனக்கு சற்றேனும் உவப்பானவைகளாக இல்லை. ஏதோ புரியாத சொல்லடுக்குகளைக் கொண்டு மணல் வீடு போல அனேக கவிதைகள் அமைந்து விடுகின்றன.

இதில் ஏதேனும் உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் தெரிவியுங்கள். எனக்குள்ளே மீண்டும் நான் என்னை மீள் வாசிப்புச் செய்து கொள்ளுகிறேன். அதனால், அவைகளைத் தவிர்ந்து, வரும் ஒரே ஒரு சிறுகதையும் மற்றும் சில துணுக்குகளும், வலைப்பேச்சும் பார்த்து விடுவதோடு இப்போதெல்லாம் ஆனந்த விகடனைப் பார்ப்பது தீர்ந்து போய் விடுகிறது.

‘கனமாக’ வரும் / வந்த வேள்பாரி மற்றும் இப்போது வந்து கொண்டிருக்கும் இறையுதிர் காடு போன்றவை பயனுடைத்து எனினும் நான் அவைகளை ஆனந்த விகடனில் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் இப்போது கடைசி சில மாதங்களாக அதில் சில சுவாரிசங்கள் கூடி இருக்கின்றன. வாசகர் கேள்வி பதில் அந்த மாதிரியானது. அவற்றில் சிலதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. (நன்றி ஆனந்த விகடன்; 31.7.19; பக். 70 - 71.)

கேள்வி: உங்கள் மொபைலுக்கு காரணத்தோடு பேர் வைக்கச் சொன்னா என்ன பேர் வைப்பீங்க?

1. மாயவலை - வட்ஸப், பேஸ்புக், டுவிட்டர் எனத் தொடங்கும் இதனூடான பயணம், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆக்கிரமித்து, கடசியில் வலையில் சிக்கிய மானாக நம்மை ஆக்கி விடுவதால்... - லக்ஷ்மணன். திருநெல் வேலி.

2. குரங்குக் குட்டி - குட்டியை விட்டுத் தாய் இருக்காது. தாயை விட்டு குட்டி இருக்காது. அது போல நாம் செல்லை வைத்திருப்பதால் இந்தப் பெயரை வைத்துக் கொள்லலாம். - சரவன்கவி.

3. உலகத்தையே செல்போனில் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் பெட் நேம் ‘இரண்டாம் உலகம்’ - குப்புசாமி, சங்கரபுரம்.

4. மற்றவர்களுடன் நம்மை இணைப்பதால் டார்’லிங்’ - ஷிவாஸ்

5.’ஆளவந்தான்’ - கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மொபைல் என்பதால். - தரணிஷிராஜ்.

6. ‘கறையான்’ - நேரத்தை அரிப்பதால்.- மணி-

7.ருவிட்டர் அதிகம் பார்ப்பதால் செல்லமாய் ’ருவிட்டி’ னு பெயரிடுவேன். - முருகானந்தி.

8.’சனியன் சகடை’ இது இல்லேன்னா வாழ்க்கையில் உருப்பட்டு இருப்பேனோ என்னமோ...- கார்த்தி.-

9.ஷேக்’கிளார் - சம்சாரத்துக்கிட்ட இருந்து கால் வரும் போதெல்லாம் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்படுவதால்...! - லெக்ஸ்வெனி.

10. இடது பக்க பாக்கட்டில் தான் எப்போதும் செல்போனை வைத்திருப்பேன். இதயத்திற்குப் பக்கத்தில் இருப்பதால் ‘லப் டப்.’  -வைரச் சந்திரன்-

11. ஆந்தை மாதிரி நைட்டில முழிச்சுக்கிட்டு ஆன்லனில பிஸியா இருக்கிறதால ‘பிஸிராந்தை’.- புது வண்டி ரவீந்திரன்.

நான் என்ன பேர் வைப்பேன் என்று நினைத்துப் பார்த்தேன் பதில் இன்னும் அவ்வளவு இலகுவாகத் தெரியவில்லை. யோசிக்கிறேன்.

அது சரி, நீங்கள் என்ன பேர் வைப்பீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன்....

இதில் வந்த இன்னுமொரு கேள்வி.

உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் என்ன தலைப்பு வைப்பீர்கள்?

1.’முற்றும்’. - அரியாஸ். சேலம்.

2.’சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’? - கார்த்திகா.

3.’ஹையோ.. ஹையோ...
என் வாழ்க்கையின் நேசமணி மொமெண்ட்ஸ்’.-விக்கி-

4.’இந்த வாழ்க்கைய... அப்படியே வரலாறா... எழுதிட்டாலும்’...! - மாதொருபாகன் -

5.’இதெல்லாம் எங்க உருப்படப் போகுது’? - பாகம் 1.- ராமுவேல்-

6.90’s kid! -ரமேஷ். ஷா.

7.’படித்தவுடன் கிழித்து விடவும்’ - மனோ. பிரான்ஸிஸ்.

8.’ஒண்ணுஞ் சொல்லுறதுக்கில்ல’ - வைகை சுரேஷ்.

வேலைத்தலத்தில் என் மியன்மியார் நாட்டு தோழி ஒருத்தியிடம் உணவு இடைவேளையின் போதான உரையாடலில், ‘போனுக்கு நீ என்ன பேர் வைப்பாய் என்று கேட்டேன். அவள் சொன்னாள்,

'It is part of my body - actually my Head.- We don't need to save any think in our brain any more. All are saved in this device, சற்று நேரத்தின் பின் புன்னகையோடு சொன்னாள், For my husband, that is his 2nd wife.

நான் என்ன சொல்லக் கூடும்....? யோசிக்கிறேன்...

நீங்களும் யோசித்துச் சொல்லுங்களேன்......


Saturday, January 30, 2010

கவிதாவின் கவிதைகள்


கென்ற வாரம் கவிதாவின் 'என் எதேன் தோட்டம்' என்ற கவிதை நூலுக்கு திருப்பூர் தமிழ் சங்கம் பரிசு வழங்கி இருக்கிறது என்ற செய்தி கிட்டிற்று.தமிழ் நாட்டில் அத்தகைய பரிசு வெளிநாட்டில் வாழும் ஒரு ஈழத்துப் பெண்ணுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அவரது கவிதைகள் சிலவற்றை யுகமாயினி சஞ்சிகையில் முன்னர் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.வீரியமான சிந்தனை வீச்சுக்கள் கொண்ட கவிதைகள் அவை.உதாரணத்துக்கு அவரது இரண்டு கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சுயம் இழந்து வாழும் ஒரு பெண்ணைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்.

மூலைகள்

இது எனது வீடு
இந்த வீட்டின்
ஒவ்வொரு மூலையும் என்னுடையவை.
ஒவ்வொரு மூலையும் தனித்துவமானவை.

இதோ
இந்த மூலையில்
இரண்டு பாத்திரம்,நாலு கரண்டி
ஒரு அடுப்பு
எல்லாம் எனது.

எதிர் மூலையில்
எனக்கென்று வாங்கித் தந்த
பெரும் இயந்திரங்கள்
துணிகள் துவைக்கவும்
காயப் போடவும்.

ஒவ்வொரு அறையிலும்
பெரிய அலுமாரிகள்
காய்ந்ததை அடுக்கவென்று.

வலப் பக்கம்
இருக்கும் மூலையில் தான்
படுக்கையறை
படுக்கவும்...
கலைக்கவும்...

பின் விரிக்கவும்!

அதன் இடப்புறமும்
எனது மூலைதான்
ஒரு தொட்டில்
பால் போத்தல்கள்
பொம்மைகள்
அழுக்குத் துணிகள்

டீ.வி
மேசை
இருக்கைகள்.
அதன் மேல் எறியப் பட்ட
பொருட்கள்.

அடுக்கவும் துடைக்கவும்
சாப்பாட்டு மேசை.
தூசி தட்ட பலவித பொருட்கள்.

எல்லாம்
என்னுடையவை தாம்.

என் சுயவாழ்வு தவிர.



அவரது இன்னொரு கவிதை இப்படிப் பேசுகிறது.அக்கவிதையின் தலைப்பு

நான்,எனது மகள்

அவர்கள் இவர்கள் என்று
எல்லோருமாய்
உருவகித்த என்னில்

இப்போதெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறேன்

எங்கேயாவது மிச்சமிருக்கிறதா
நான்?

மிஞ்சிக் கிடக்கும்
என்னில் துளிர்விடும்
மகள்
நாளை தேட மாட்டாள்
அவளை

அவளுக்குரிய வட்டங்கள்
போடப்படும்
அவளது கைகளால்

காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு
அவளுக்குக் கொடுக்கவென்று!

நன்றி; யுகமாயினி இதழ் 17.

வாழ்த்துக்கள் கவிதா!

Thursday, November 12, 2009

ஆரோக்கியமான குடும்ப உறவு

!

ஒரு தமிழ் பெண்ணுக்குத் தன் கணவன், வீடு, குடும்பம், பிள்ளைகளே உலகம்.அதற்காக அவள் பம்பரமாகச் சுழல்கிறாள்.தன் வாழ்வையே அதனைச் சுற்றி அமைத்துக் கொள்கிறாள்.இவற்றுக்கப்பால் தன் அடையாளங்களை, விருப்பு வெற்றுப்புகளை தன் ஆற்றல்களை, திறமைகளை அவள் பெரும்பாலும் அறிந்து கொள்வதில்லை.அதனை அறிய நாட்டம் கொள்வதுமில்லை.பிள்ளைகளின் உயர்வே தன் சுகம்,குடும்ப வாழ்வே தன் வாழ்வின் எல்லை என்று அமைத்துக் கொள்வதால் பெரும்பாலான பெண்களால் அதனைத் தாண்டி ஒரு உலகம் இருப்பதை அறிய முடியாதிருக்கிறது.

நம்முடைய பண்பாடும்,சமூக அமைப்பும் அவ்வாறான ஒரு வாழ்க்கை முறையையே பெண்ணுக்கு அறிமுகப் படுத்துவதால் உருவங்கள் சிதைக்கப்பட்ட பெண்ணாய்; குடும்ப அங்கத்தவர் வாழ்வையே தன் உருவம் எனக் கொண்டவளாய் அவள் வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.படித்த நல்ல பதவியில் இருக்கின்ற பெண்களால் கூட அதைத் தாண்டி தனக்கான தன்னுடைய உருவத்தை அடையாளம் காண முடியாதிருக்கிறது.

மாறாகத் தன் திறமையை,ஆற்றலை, தன் சுயத்தை அடையாளம் காணும் ஒருவர் தன் வாழ்வில் வரும் பல சிக்கல்களுக்கு இலகுவாகவும் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் தீர்வுகளைக் கண்டு கொள்ளலாம் என்பது மிக எளிமையான உண்மை.

இருந்தபோதும் குடும்பவாழ்வும் அதன் மீதான கரிசனையும் அதனுடனான வாழ்வும் எல்லாக் குடும்பப் பெண்களுக்கும் இன்றியமையாத ஒன்றே.

அண்மையில் வேலை சம்பந்தமாக இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை பற்றிப் பேசப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்கள் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை எவ்வாறு இருக்கும் என்பது பற்றி இவ்வாறு கூறுகிறது.கருத்தரங்கில் சொல்லப்பட்ட முக்கியமான குறிப்புகள் இவை.

1. கணவனும் மனைவியும் இணைந்திருக்கும் போதே தாம் தாமாகவும் இருக்க முடியும்.

2.ஒருவரிடம் இருக்கும் திறமையை அடுத்தவரால் வெளிக்கொணர முடியும்.

3.ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க முடியும்.

4.ஒருவரை ஒருவர் மாற்றவோ ஆளுமைப்படுத்தவோ முயல மாட்டார்கள்.

5.ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவார்கள்.

6.ஒருவரை ஒருவர் மகிழ்வோடு அனுபவிப்பார்கள்.

7.ஒருவரில் ஒருவர் வசதியாயும் இயல்பாயும் இருப்பார்கள்.

8.ஒருவரின் தீர்மானங்கள், உணர்வுகள், சிந்தனைகளை மதிப்பார்கள்.

9.தம்மோடும், ஒருவர் மீதொருவரும் நேர்மையாக இருப்பார்கள்.

10. ஒருவரது குறை நிறைகளை ஏற்றுக் கொண்டு தமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவார்கள்.

11. ஒருவரின் குறை நிறைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

12. எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எல்லா விடயங்களையும் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள்.




சில நாட்களின் முன்( ஒக்ரோபர் 23ம் திகதி) hellorayar.blogspot.com என்ர வலைப்பூவில் மிஸ்டர் றைட் என்பவர் பதிவிட்டிருந்த கீழே உள்ள கட்டுரையும் அதற்குப் பொருத்தமாக இருப்பதால் அக்கட்டுரையையும் அப்படியே இங்கு மறு பதிவிடுகிறேன். அவருக்கு என் நன்றி.

'கோ.. கோ.. ஈகோ' என்று ஈகோவைத் தூக்கித் தூர எறியுங்கள். 'தோல்விகள்கூட காதலில் வெற்றிகளே' என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்!
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாததால்... திரும்பிய பக்கமெல்லாம் 'டைவர்ஸ்' குரல் கேட்கிறது.
"இது சரிப்பட்டு வரவே வராது... இனி டைவர்ஸ்தான் ஒரே வழி!"என இப்போது முண்டியடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் இளம் தம்பதிகள்! உலகம் முழுக்க ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை எகிறிக் கொண்டே போவதாக கவலை தருகின்றன புள்ளிவிவரங்கள்.

“சரிப்பட்டு வரலேனா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா!"என்பதுதான் லேட்டஸ்ட் அறிவுரை வேறு!

என்னவாயிற்று நம் குடும்ப வாழ்க்கை, கலாசாரத்துக்கு?!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும், மனைவியும் வேலைக்கு ஓடும் இந்தக் காலத்தில், இருவரும் இருந்து பேச, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை என அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்திலும், பேச்சு விவாதமாகி, முடிகிறது சண்டையில். சண்டை நீண்டு, கடைசியில் கேட்கிறது விவாகரத்து!


''ஒருவரின் குணம், குற்றம், விருப்பு, வெறுப்பு, ஆசை, விரக்தி... என அனைத்தையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்துவது, அவரின் உரையாடல் மூலம்தான். கணவன்மனைவிக்கு இடைப்பட்ட அந்த உரையாடலில், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்புதான். ஆனால், அதையெல்லாம் மீறி அவர்களின் வார்த்தைகளில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற அன்பு அடிக்கடி உணர்த்தப்பட்டு, உணரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தாம்பத்யத்தின் உயிர்!" என்று இல்லற விதி சொல்கிறார் ரினாடா பாரிஸ். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியலாளர். மனித உறவுகள் பற்றிய சிறப்புச் சிந்தனையாளர் (Relationship Specialist).

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடும்ப விரிசல்களை சரி செய்து கொண்டிருக்கும் இந்த குடும்பநல ஆலோசகரின் முயற்சியால் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவங்களையெல்லாம் வைத்தே... ஆறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ரினாடா பாரிஸ்.


''உலகம் முழுக்க இருக்கும் தம்பதிகளை அவர்களுக்கு இடையேயான உரையாடலின் அடிப்படையில் ஐந்து வகைகளுக்குள் அடக்கி விடலாம். நீங்கள் எந்த வகை என்பது, உங்கள் சுயமதிப்பீட்டுக்கு..." என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் ரினாடா, ஒவ்வொரு வகையையும் பிரித்து மேய்கிறார். அவரின் வார்த்தைகள், தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மனோ ரீதியாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும் 'ரொமான்ஸ் லென்ஸ்' என்றே சொல்லலாம்.

'அமைதித் தம்பதி' (The Silent Couple): இதுதான் முதல் வகை. அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்!

'பார்த்தீங்களா... எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ள சீனா பண்ற அட்டகாசத்தை..!'

'சுற்றுச்சூழல் பத்தி அருந்ததிராய் எழுதியிருக்கற அந்தப் புத்தகத்தைப் படிச்சீங்களா?'

இப்படி உலக நடப்புகளை எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஆனால், தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்!

'ஏன் டல்லா இருக்கிறே? எதாவது பிரச்னையா?' என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும், 'ஒண்ணுமில்ல' என்று சொல்லிவிட்டால், 'சரி ஏதோ பர்சனல் (!) பிராப்ளம் போல' என்று விட்டுவிடுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஆத்மார்த்த புரிதலோ, அன்போ இருக்காது. 'வீட்டில் நமக்கு ஒரு துணை உண்டு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!

'சண்டையைத் தவிர்க்கும் தம்பதி' (The Argument -Avoiding couple): இது இரண்டாவது வகை. 'சரி விடும்மா... நீ சொல்றபடியே பண்ணிடலாம்!' என்பது இந்த வகை தம்பதிகளின் உரையாடல் முடியும் புள்ளி. 'தேவையில்லாம எதுக்குச் சண்டை' என அடுத்தவர் சொல்வதை ஒப்புக் கொள்வது, அல்லது ஒன்றுமே பேசாமல் மௌனமாகி விடுவது இவர்களின் வழக்கம். எனவே, மனதிலிருப்பதை வெளிப்படையாக, அந்நியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள். திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலன்டாகிவிடுவார்.

சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple): 'எப்போ சண்டை வரும்' என்று காத்திருக்கும் மூன்றாவது வகை. 'சாப்பாட்டுல ஏதோ குறையுதே...' என்று எதார்த்தமாகச் சொன்னாலும், 'உங்க அம்மா சமைச்சா மட்டும்தான் உங்களுக்குப் புடிக்கும்' என்று சீறுவார்கள். பூதக் கண்ணாடி போட்டு தன் பார்ட்னரிடம் குற்றம் கண்டிபிடித்து சண்டை பிடிக்கும் சீரியஸ் கேஸ் இவர்கள். பெரும்பாலும் இவர்களின் உரையாடல்கள் மனக்கசப்பில்தான் முடியும். இவர்கள் பெரும்பாலும் நிம்மதியின்றி மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்£ர்கள்.

'நட்புத் தம்பதி' (The Friends/Partners Couple): இவர்கள் நான்காவது வகை! நல்ல நட்புடன் அலுவலகம், குடும்பம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷ§வல் கப்பிள் என்று இவர்களைச் சொல்லலாம். ஆனாலும், இவர்களுக்கிடையே அழுத்தமான குடும்ப உறவு, தாம்பத்ய நெருக்கம் இருக்காது. இருந்தும், வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது.

'நெருக்கமான தம்பதி' (The Fully Intimate Couple): இவர்கள் ஐந்தாவது வகை. 'இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்' என்பதுவரை வெளிப்படையாக பேசுவார்கள். எந்த விஷயத்தையும் ஒருவருக்கு ஒருவர் மறைக்க மாட்டார்கள். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும்தான் இதன் ஹைலைட். அதனாலேயே ஆழமான குடும்ப உறவும், புரிதலும் இவர்களுக்கிடையில் இருக்கும். சொல்லப்போனால், இப்படி வாழ்வதற்கு அதிக பக்குவமும், அன்பும் தேவை. மிகச் சில தம்பதிகள்தான் இந்த வகைக்குள் வருவார்கள்!

இப்படி வகைப்படுத்தும் ரினாடா பாரிஸ், அனைவரும் இதில் ஐந்தாம் வகைக்கு முன்னேறுவதற்காக, தங்களுக்கு இடையேயான உரையாடலை அந்நியோன்யமாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம் எனபதற்கும் அற்புதமான ஆலோசனைகளையும் சொல்கிறார். அவை

முதலில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும் பழக்கம் வரவேண்டும்.

உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம், மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்கவேண்டும். 'நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று நின்றால், நோ யூஸ்!

பொறுமையும் அவசியம். உங்கள் பார்ட்னர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். க்ளைமாக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா?! எனவே, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நடுவில் குதிக்காதீர்கள். எந்த முடிவையும் இருவரும் கலந்து பேசி எடுங்கள்!

உங்கள் துணையின் நம்பிக்கைகளை, விருப்பு, வெறுப்புகளை புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.

''உங்களாலதான்..." என்று குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். குற்றம், அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்!

மனம் திறந்து உண்மையைப் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் பேசியது பொய் என்று துணைக்கு தெரியவரும் பட்சத்தில், உங்கள் மீதுள்ள நம்பிக்கை சிதைந்து, பின் உங்கள் உரையாடல் எப்போதுமே 'ஹெல்த்தி'யாக இருக்காது!

சின்னச் சின்னப் பாராட்டுகள் மிகவும் முக்கியம்


உங்கள் துணை பேசுவதை கேட்காதீர்கள் (!)... கவனியுங்கள்! அதென்ன வித்தியாசம்? அவர் பேசும் வார்த்தைகளை காதில் வாங்குவது, கேட்பது; மனதில் வாங்குவது, கவனிப்பது. அவர் என்ன சொல்கிறார், என்ன மனநிலையில் சொல்கிறார், என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் கவனித்தால்தான் புரியும்.. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இந்தக் கவனிப்புதான் சொல்லும்! அதிகம் கவனித்தால், அதிகம் அந்நியோன்யமாவீர்கள்


நன்றி : அவள் விகடன்

Thursday, October 22, 2009

வீடு


எனக்கோர் வீடு வேண்டும்
நாலு சதுர அறைகளும்
நன் நான்கு மூலைகளும்
நீள் சதுர விறாந்தைகளும் அற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

என்னைச் சுளற்றும் கடிகாரமும்
என்னோடே வளரும் சுவர்களும்
சுற்றி உயர்ந்து இறுகிய
கல் மதில்களுமற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

பூட்டற்ற கதவுகளுடன்
சாத்த முடியாத ஜன்னல்களுடன்
எப்பக்கமும் வாயிலாக
வீடொன்று வேண்டும் எனக்கு.

குளிரில் கொடுகி
வெயிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்றில் அசைந்து என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த

ஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
வானத்து வளைவுடன்




ஆழியாழ். நன்றி -மை-

ஒரு கவிதை உனக்குப் புரியவில்லை என்றால் அது உனக்குரிய கவிதை அல்ல - யாரோ -

Saturday, August 1, 2009

பாலி ஆறு நகர்கிறது


அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் இரு மருங்கும்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச்சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்

ஆனாலும்
அமைதியாய்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியன்
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன் தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்குதலைத் திட்டமிட்டு
புளுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நின்மதியில்
சற்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது


இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில்
இன்றும் குளிக்கின்றார்
எங்களது ஊர் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலியாறு நகர்கிறது.

வ.ஐ.ச.ஜெயபாலன்,
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலில் இருந்து.

Sunday, July 19, 2009

சோகம்



இரத்தத்தின் அறிகுறி ஏதுமில்லை,எங்குமே இல்லை
எல்லா இடங்களிலும் நான் தேடிப் பார்த்து விட்டேன்.
கொலையாளியின் கைகள் சுத்தமாக இருக்கின்றன.
விரல் நகங்களோ பளீச்சென்று இருக்கின்றன.
கொலைக்காரன் ஒவ்வொருவனுடய சட்டைக் கைகளிலும்
எந்தக் கறையும் இல்லை.
இரத்தத்தின் அறிகுறி இல்லை;சிவப்பின் சுவடு இல்லை,
கத்தி ஓரத்தில் இல்லை,வாள் முனையிலும் இல்லை.
தரையில் கறைகள் இல்லை,கூரையும் வெள்ளை நிறம்.

சுவடேதுமில்லாமல் மறந்து போன இந்த இரத்தம்
ஏடேறிய வரலாற்றின் ஒரு பகுதியல்ல;
அதனிடம் சென்றடைய
எனக்கு வழி காட்டுபவர் யார்?
பேரரசர்களுக்கான சேவையின் போது
சிந்தப்பட்ட இரத்தமல்ல-
அது பட்டம் பெருமை பெற்றதுமல்ல,
அதன் எந்த ஒரு ஆசையும் பூர்த்திசெய்யப்படவில்லை.
பலிச் சடங்குகளுக்காக வழங்கப்பட்டதல்ல அது.
கோயிலிலுள்ள புனிதக் கோப்பையில்
பிடித்து வைக்கப் பட்டதுமல்ல.
எந்த ஒரு சண்டையிலும் சிந்துப்பட்டதல்ல-
வெற்றிப் பதாகைகளில் எழுத்துக்களைப் பொறிப்பதற்கு
யாராலும் பயன்படுத்தப் பட்டதுமல்ல.

ஆயினும் யாருடய செவிக்கும் எட்டியிராத அது
தன் குரலைக் கேட்கச் சொல்லி இன்னும்
கூக்குரலிடுகிறது.
கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை;விருப்பமில்லை.
கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தது
இந்த அனாதை இரத்தம்.
ஆனால் அதற்கு சாட்சி ஏதுமில்லை.
வழக்கு ஏதும் பதிவு செய்யப் படவில்லை.
தொடக்கம் முதலே இந்த இரத்தத்திற்கு ஊட்டமாக இருந்தது
தூசி மட்டுமே.
பிறகு அது சாம்பலாயிற்று,சுவடு எதனையும்
விட்டுச் செல்லாமல்
தூசிக்கு இரையாயிற்று.

கவிஞர்;

ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ்

பட உதவி; நன்றி;இணையம்.

இராணுவ முகாம்களில் சித்திரவதைகளினால் கொல்லப்பட்டு சுவடேதும் இல்லாமல் காணாமல் போய் விட்ட ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு இக் கவிதை சமர்ப்பணம்.

Thursday, July 2, 2009

அறிவின் விழிப்பு - முருகையன் -

27.06.2009 அன்று காலமான கவிஞர் முருகையன் அவர்களின் நினைவாக!

நான் யாழ் வளாகத்தில் கற்றபோதும்; வேலை செய்த போதும் பதிவாளராகக் கடமையாற்றியவர்.உருவத்தில் சிறியவராகவும்; சுபாவத்தில் அமைதியானவராகவும் விளங்கியவர்.உணர்வுகளை வென்றவராக அவர் விளங்கினார்.அதனால் போலும் சர்ச்சைகள் அவரிடம் சொந்தம் கொண்டாடியதில்லை.

அவர் தமிழுக்குத் தந்த கவிதை இது!!!
ஈழத் தமிழருக்கு விட்டுச் சென்ற அவரின் சிந்தனைச் செல்வத்தில் ஒன்று!!



இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைய சுமை எங்களுக்கு



இரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு

மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின்முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள்பயணம்.
தேட்டம் என்று நம்பி,சிதைந்த பழம் பொருளின்
ஓட்டை,உடைசல்,உளுத்த இறவல்கள்,
பீத்தல்,பிறுதல்,பிசகி உதிர்ந்தவைகள்,
நைந்த கந்தல்- நன்றாக நாறிப் பழுதுபட்டு
சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை -
இப்படி யான இவற்றையெல்லாம் சேகரித்து
மூட்டைகட்டி, அந்த முழுப்பாரம் கண்பிதுக்கக்
காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.

மூட்டை முடிச்சு முதலியன இல்லாதார்
ஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும்.
பாதை நடையின் பயணத் துயர் உணரா
மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள்.
ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள்.

மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள்
பற்றி, முயன்று, பகை களைந்து,மேலேறி
விண்வெளியை எட்டி வெளிச்செல்லு முன்பாக
மண்தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும்,
வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும்
ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும்
நெஞ்சம் இசைந்தார்.
நிகழ்த்தினார் நீள்பயணம்.

பின் முதுகில் பாரப் பெருமை இல்லாதவர்கள்
இத்தனையும் செய்தார்.
இனியும் பல செய்ய
எத்தனிப்போம் என்றார்.
இவை கண்டும்,
நாமோ
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும்
சற்றே இறக்கிச் சலிப்பகற்றி, ஓய்வு பெற்றுப்
புத்தூக்கம் எய்திப் புறப்படவும் எண்ணுகிலோம்.

மேலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக்
கொட்டி உதறி, குவிகின்ற கூழத்துள்
வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி,
அப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதோ
சற்றேனும் இல்லோம்.
சலிப்பும் வலிப்பும் எழ,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த,
ஊருகிறோம்;ஊருகிறோம் - ஓயாமல் ஊருகிறோம்.

பரந்த உலகோர் பலரும், சுமையைச்
சுருங்கும் படியாகக் குறைத்துச் சிறிதாக்கிக்
கைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில்,
வெற்றுக்கை கொண்டும் வியப்புகள் ஆக்குகையில்,
புத்தி நுட்பம்,செய்கை நுட்பம்,போக்கு நுட்பம் என்பவற்றால்
சித்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில்,
நாங்கள் எனிலோ நலிந்து மிகவிரங்கி,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர் படுத்த
ஊருகிறோம்,ஊருகிறோம் - ஓயவில்லை,
ஊருகிறோம்.

வேண்டாத குப்பை விலக்கி,மணி பொறுக்கி
அப்பாலே செல்லும் அறிவோ குறைவு
ஓ!
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;
பண்பாட்டின் பேரால் பல சோலி எங்களுக்கு.



"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து....

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!
அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Wednesday, February 25, 2009

மனம்

ஆத்மா,உயிர், மனம், மனசாட்சி,எண்ணங்கள் இவைகள் எல்லாம் உடலில் எங்கிருக்கின்றன என்று கேட்டால் விடை தெரியவில்லை;ஆனால் உணர முடிகிறது என்று மட்டும் பதில் சொல்ல முடிகிறது.

இது பற்றி மெய்ஞானமும் விஞ்ஞானமும் பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து வந்திருக்கின்றன.அவரவருக்குரிய வகையில் பதில்களையும் சொல்லி வந்திருக்கின்றன.அவை முடிவடையா ஆராய்ச்சியாகவே இன்று வரை உள்ளன.கண்டவர் விண்டிலர்:விண்டவரோ கண்டிலர்.

ஆனால்,அதனை இலகுவாக விட்டுச் செல்ல முடியாத வகையில் அது மனிதனின் அக,புற வாழ்வில் கொண்டிருக்கும் பங்கு மிகப் பெரியது.மகிழ்ச்சி,துக்கம்,அன்பு,வெறுப்பு,கோபம் நேசம்,சஞ்சலம்,சோகம்,பாசம்,பூரிப்பு,பெருமை,நின்மதி போன்ற உணர்வுகளின் ஊற்று அங்கிருந்து தான் பிறப்பெடுக்கிறது.அவை விரும்பியோ விரும்பாமலோ மனிதனின் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்ததைச் செலுத்துகின்றன.

கவிஞர்களும் அதைப் பற்றி பல விதங்களில் எழுதி வந்திருக்கிறார்கள்.என் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் என் தோழி - கவிஞையாக,சமூக சேவகியாக,பெண்ணின் உரிமைக் குரலாக, பல்கலைக் கழக விரிவுரையாளராக,தாயாக, மனைவியாக எனப் பல்வேறு வாழ்வியல் தளங்களில் இயங்கும் பாமதியின் இது வரை வெளி வராத கவிதை ஒன்று தன் மனதை இவ்வாறு கூறுகிறது.


தேவாங்கு

நான் என்ற ஒன்று
எங்கோ எனக்குள்
புதைந்து கிடக்கிறது.

தலைகீழாகத் தொங்கிக் கொண்டு
ஒரு தேவங்கு போல் அது
உன்னைப் பார்த்துச் சிரிக்கும்
அவர்களைப் பார்த்து வெறுக்கும்
வரையறைகளைத் தாண்டி
தாவித் திரிந்து
மேலும்கீழும் குதிக்கும்.

மெளனமானவர்களை எட்டிப் பார்க்கும்
இரைச்சல் போடுபவர்களைப் பார்த்து
தானும் கூச்சல் போடும்.

அது விரைந்து வரும்
பின்பு உறங்குவது போல்
கண் மூடி இருக்கும்

மறுபடியும் சில நொடிகளில்
எழுந்து தர தரவென அசைந்து போகும்
மொழி மறந்து போனதாய் பாசாங்கு செய்யும்

சோகமாய் அமர்ந்திருந்து
கனத்த மனத்துடன்
கண்ணீரை விழியில் தேக்கி வைக்கும்

தனக்கு உருவம் இல்லை என்று
மயக்கத்தில் இருக்கும்

உயரே உயரே குதித்து
திடீரென நிலத்தில் இறங்கி
குப்புறப் படுத்துக் கிடக்கும்

நான் என்ற ஒன்று
எங்கோ எனக்குள்
புதைந்து கிடக்கிறது.


(விரைவில் வெளிவர இருக்கும் அவரது கவிதைத் தொகுதியில் இருந்து)

நாமும் எம்மைப் பார்க்கத் தொடங்கும் போது பல வியப்பான அம்சங்கள் வெளிவரலாம்.எம்மை நாம் கண்டு கொள்ளும் ஆரம்பப் பாடம் அங்கிருந்து தான் ஆரம்பமாகிறதோ?


நம்முடய உருவத்தை நாம் பிடித்து ஒரு முறை பார்ப்போமா?

அடுத்த பதிவு "நான் என்ற நான்" பற்றி!

Sunday, February 1, 2009

அடையாளம்

ஒவ்வருவரும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் தனித்துவமானவர்கள் என்பதையும் 3-5 வயதுக்குரிய குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

நான் யார்

நீ நீதான்
மிகச்சரியாக உன்னைப் போல்
எவருமிலர் இவ்வுலகில்.

இது பற்றி நீ
சிந்தித்ததுண்டா?
நிறம், கண். கூந்தலெனவும்.....
முகவடிவு, மூக்கு, வாயெனவும்....
.........
நீளும் உன் தனித்துவம்.

ஒத்த இரட்டையர் போல் எனவும்
அம்மா, அப்பா போல் எனவும்
சில வேளை நீ இருப்பதுண்டு.

ஆழ்ந்து பார்த்தால் ஆழம் தெரியும்.
வேறு பாட்டின் வகைகள் புரியும்.

உனக்கு மட்டுமேயான பெயர்
உனதேயான குரல்
உனக்கு மட்டுமே உரித்தான
சிந்தனைகள்...யுக்திகள்...
........
பிடித்தவை....பிடிக்காதவை....
எனவும் அவை நீளும்.

நிறங்கள்...ஆடைகள்...
உணவுகள்...சுவாரிசங்கள்...
மேலும் உன் நண்பர்கள்...
எனவும் பெருகும் உன் அடையாளங்கள்.

உன் சிறப்புகள் எனவும்
விரியும் சில...
விளையாட்டு? கணணி?கணக்கு?
ஓவியம்? இசை? கலை?
........
........

மூளையும் ஐம்புலன்களும்
உதவியதால்
உருவானவன் நீ

தனித்துவமானவன்.

உலகின் விஷேஷ ஷிருஷ்டி.

உமா ஷக்தி குழந்தைகள் பற்றிய சிறப்பான ஒரு கட்டுரையை தன் இனையத்தளத்தில் தந்திருந்தார்.அதன் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய மக்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன்.

ஈழத்தின் போர் அவலங்களும், அதன் தொடர்ச்சியாக முத்துக்குமாரனின் தீக்குளிப்பும் தமிழ் மனங்களை மாளாத் துயரில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்ற தருணம் இது.வலைத்தளங்களும் வானொலிகளும் வெளி நாடுகளும் தொலை பேசிகளும் இன்னும் அதனை உணர்வு பூர்வமாக இயங்கச் செய்து கொண்டிருக்கிறன.தொலை நகல்கள், கடிதங்கள், ஊர்வலங்கல், உண்ணாவிரதங்கள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் என நகர்கிறது நான் உட்பட நம்மவர் வாழ்வு.

நாம் உணர்வு நிலையில் இருந்து அறிவு நிலைக்கு உயர வேண்டிய வேளை இது.உயிரின் மதிப்பு உணரப்பட வேண்டும்.அதன் சிறப்பும் மதிப்பும் நமக்கேனும் தெரிய வேண்டும்.அவர் எவராய் இருந்தாலும் பாதுகாக்கப் படவேண்டும்.இனியும் இப்படி ஒரு உயிரிழப்பு வேண்டாம் எங்களுக்கு.உணர்வுகளையும் அழுத்தங்களையும் வெளிப்படுத்த வேறு வழிகளைச் சிந்திப்போம்.

மரம் என்ற தலைப்பில் ஒரு சின்னக் கவிதை எங்கோ பார்த்தேன்.


மரம்

வெட்டப்பட்ட பிறகே
உணர்த்துகிறது
அதன் இருப்பை.

முத்துக் குமரனின் மரணம் குறித்த நினைவுகளும் கூடவே வருகிறது.கவிதையைப் போல கையாலாகாத நிலை ஒன்றே எஞ்சியுள்ளது எம்மிடமும்.

அவருக்கு இந்த வலைப்பூவின் கண்ணீர் அஞ்சலி.
இனியும் வேண்டாம் இப்படி ஒரு மரணம்.