Wednesday, December 21, 2016

’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -


இனிய தமிழ் இலக்கிய உள்ளங்களே!

வருகிற புது வருடம் உங்கள் எல்லோருக்கும் சுகத்தையும் சுபீட்சத்தையும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் எடுத்து வருவதாக!

இந்த சந்தர்ப்பத்தில் என்னோடும் என் தமிழோடும் பயணித்த உங்கள் எல்லோருக்கும் என் அன்பினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறேன்.

புது வருடம் என்னவெல்லாவற்றையும் எடுத்து வரும் என்பது நத்தார் பாப்பா கொண்டு வரும் பரிசுப் பொருள் போல புதினமானது.

இருந்த போதும், ’முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமெல்லோ’? என் அன்புத் தோழி கீதாவின் / கீதா.மதிவாணனின் முதலாவது புத்தக வெளியீடு நம் அமைப்பான உயர்திணை ஊடாக முதலாவது புத்தக வெளியீடாக எதிர் வரும் தைத் திங்கள் 26ம் திகதி அவுஸ்திரேலிய தினமான விடுமுறைநாளாக இருக்கும் வியாழன்று வெளியிட இறையருள் கூடி இருக்கிறது.

கீதாவின் புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பிலக்கிய வகை சார்ந்தது. அவுஸ்திரேலியாவின் செவ்வியல் எழுத்தாளரான ஷென்றி லோஷனின் அவுஸ்திரேலியாவுக்கு ஆங்கிலேயர்கள் புலம்பெயர்ந்து வந்த போது அவர்கள் எதிர் கொண்ட சவால்கள்/ வாழ்வியல்கள்/ பாடுகள் / பண்பாடுகளைப் பேசுகிறது. 

தமிழ் இலக்கியத்துக்கு இது வரை வெளிவந்திராத புதுவகை வாழ்வியல் அறிமுகம் இது. எளிய தமிழில் ஒரு பண்பாட்டையே தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தி இருக்கும் தமிழின் ஆழுமை கதைகள் எங்கும் வியாபித்திருக்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்ததால் தமிழுக்கு சாத்தியமாகி வரும் இத்தகைய புதிய இலக்கிய முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

அன்றய தினம் அவுஸ்திரேலியா என்ற தேசம் உருவாகிய காலத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் குறும் படம் ஒன்றும் காட்டப்பட இருக்கிறது. இவை அக்கால வாழ்வியலை விளங்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பது நம் நம்பிக்கை.

நிகழ்ச்சி நிரல் விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்தப் படும்.

வர முடிந்தவர்கள் வாருங்கள்....
         வர வேண்டும்.....

Saturday, November 26, 2016

தன்னுணர்வு


அண்மையில் எனக்கு மிகவும் பிடித்தமான இந்தக் கவிதையை மீண்டும் ஒரு தடவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இது நீலாவாணன் என்ற இலங்கையின் கிழக்கத்தியக் கவி பாடி வைத்துப் போனது. ஒரு பாடும் மீனின் பெளர்ணமிப் பாடல் இது.

துயில்

இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரும்
என் ஹிம்சையினால்
நொந்தறியா...
யாருமெனை நொந்ததிலை" என்கின்ற
அந்த இனிய நினைவாம்....
அலங் கிர்தத் தாலாட்டுக் (கு)
என்னிதயம் தந்து...
பழம் பிசைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்
பருகி, அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தேன் என்
கம்பளியால்.

தாலாட்டில் மாலாகி
என்னை மறந்து துயில்கையில்....
வீண் ஒப்பாரி வைத்திங்(கு)
உலகத்தைக் கூட்டாதே!

அப்பால் நடப்பை அறிவேன்...
அதை ரசிக்க
இப்பயலை மீண்டும்
எழுப்பித் தொலைக்காதே!
தப்பாக எண்ணாதே,
தாழ்ப்பாளைப் பூட்டிவிடு!

மேளங்கள் கொட்டி, என்றன்
மேட்டிமையைக் காட்டாதே!
தாளம் மொழிந்து
நடிக்காதே! என் பயண
நீளவழிக்கு, நில
பாவாடை தூவாதே!
ஆழம் அகலம்.....
அளந் தெதுவும் பேசாதே!

மோனத்தில்உன் உணர்வை மொண்டு,
இதய நெடும் வானத்தில்
நீ தீட்டி வைத்திருக்கும்
என்னுடைய தீன உருவை
முழுதும் வடித் தெடுத்து
மீன் விழியில் இட்டு விளக்கேற்றி
தொட்டிலில் நம்
காவியத்தைப் பாடிக் களி!

பின், இயற்கையொடும்
சாவியலை எள்ளிச் சிரி!

இக் கவி மனம் தன்னுணர்வை - தன்னைப்பற்றிய அறிதலை பகிர்ந்து போன விதம் அது! ‘உன் அழகை என்னால் வர்ணிக்க முடியாது; ஆனால் அதனை என்னால் யாழில் வாசிக்க முடியும்’ என்று  எங்கோ எப்போதோ ஒரு பழைய சிரித்திரன் சஞ்சிகையில் வாசித்த வசனத்தைப்  போல இந்தக் கவிதையும் எனக்கு.

இப்போது அந்த யாழின் வாசிப்பைக் கேட்போமா?

புத்த பகவானின் அருளுரையைக் கேட்க மரத்தடியில் சீடர்கள் கூடி இருந்தார்கள். சற்று நேரத்தில் பகவான் அமைதியும் தெய்வீக புன்னகையும் முகத்தில் மலர வந்து மர நிழலில் அமர்ந்தார். மேலே குருவிகளின் பேச்சொலி; பழுத்த இலை ஒன்று காற்றில் மிதந்து மிதந்து மெல்ல அவர் மீது வந்து விழுந்தது; தென்றல் எல்லோரையும் வருடிக்கொண்டு போனது....புத்தர் அமைதியாக அவற்றை எல்லாம் உள்வாங்கிய படி அமர்ந்திருந்தார்.

வெகு நேரமாயிற்று. அவருடய அமைதியின் காரணம் சீடர்களுக்குப் புரிய வில்லை. அதன் காரணமாக சீடர்கள் மத்தியில் சலசலப்பு ஆரம்பமாயிற்று.

புத்தர் எழுந்து கொண்டார். ’இன்றய பாடம் முடிந்து விட்டது’ என்று கூறி நடந்தார்.

தன்னுணர்வை; இயற்கையின் ஒரு வித ஸ்பரிசத்தை; பிரபஞ்ச பாஷையை அனுபவம் கொள்ளல்.....
எத்தகைய ஓர் அற்புதம்......



Saturday, November 19, 2016

தாகூரும் பாரதியும்.....

இது தேவையா என்றொரு கேள்வி எனக்கு எழாமல் இல்லை. இரு வேறு அழகுகளை ஒப்பிடுதல் எவ்வகையில் பொருத்தமென்பது என் மனதில் எழுந்த கேள்வி. தவிரவும் வண்ன வண்னப் பூக்கள் என்றொரு புத்தகம் பற்றி சொல்லவும் வேண்டுமாயிருக்கையில் இது தேவை தானா என்றொரு கேள்வி குடைகிறது.

இத்தகைய பொருத்தமின்மைக்கு மனம் சொன்ன சமாதானம் இது விமர்சனமோ ஒப்பீடோ அல்ல; மாறாக, இரு யுகக் கவிஞர்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை எப்படி தமக்குரிய விதமாகப் பார்த்திருக்கிறார்கள் என்பதைக் காண்பதுவே!

5 விடயங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் உலகையும் உணர்வுகளையும் எவ்வாறு அணுகியிருக்கிறார்கள் என்று பார்க்க விளைகிறது இப்பதிவு.

1.பிரபஞ்ச சக்தி (பிரம்மம்)
2. மனம் (ஆண்மா)
3.அன்பு
4.தேச விடுதலை
5. இறப்பு.

1. பிரபஞ்ச சக்தி:

பாரதி பிரபஞ்சத்தை சக்தியாகக் கண்டவர். அவர்
‘ துன்பமில்ல நிலையே சக்தி
தூக்கமில்ல கண்விழிப்பே சக்தி
அன்புகனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த திருவே சக்தி
இன்பமுதிர்ந்த முதிர்வே சக்தி
எண்னத்திருக்கும் எரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி

சோம்பல் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம் பழம் தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
பாம்பை அடிக்கும் படையே சக்தி
பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி

வாழ்வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி
விண்னை அளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி
உள்லத்தொளிரும் விளக்கே சக்தி

என்றதோடு மட்டுமல்லாது தன் வாழ்க்கைக்கு தேவையானவைகளையும் அவளிடமே வேண்டிப் பெற்றவர் பாரதி. காணி நிலம் வேண்டும் என்ற போதிலும் மோகத்தைக் கொன்று விடு என்ற போதிலும் எண்ணிய காரியங்கள் முடிய வேண்டும் என்ற போதிலும்,அவளையே அவர் கேட்டார்.
‘விசையறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீ சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனகெதும் தடையுளதோ?

என்று கேள்வி கேட்கும் அளவுக்கு சக்தியோடு நெருக்கமான உறவு முறையையும் அவர் பேணி இருந்தார். அத்தகைய நம்பிக்கையும் உறுதிப்பாடும் இவ் வுலகத்தை இயக்கும் சக்தி மேல் அவருக்கு இருந்தது.

இன்னுமொரு இடத்தில்
‘இயற்கை என்றுரைப்பார் - சிலர்
இணங்கும் ஐம்பூதங்கள் என்றிசைப்பார்
செயற்கைச் சக்தி என்பார் உயிர்
தீ என்பார் அறிவென்பார் ஈசனென்பார்
.....
அன்புறு சோதி என்பார் - சிலர்
ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்
இன்பமென்றுரைத்திடுவார்  - சிலர்
எண்ணெரும் துன்பமென்றுனை இசைப்பார்
....
என்று தொடரும் பாடலிலும் அவர் உலகை இயக்கும் பிரம்மத்தை அவர் சக்தியாகக் காணும் பாண்மையைக் காணலாம்.

எல்லாம் சக்தி மயம் என்று எண்ணிய / நம்பிய பாரதி அவளைப் போற்றிப் பாடியும் காணி நிலம் வேண்டும் என்று வேண்டிப் பாடியும்  மோகத்தைக் கொன்று விடு என்று கட்டளை இட்டுப் பாடியும் உனக்கதை அருள்வதில் தடைஏதுமுளதோ? என்று கேள்வி கேட்டும் பாடிய பாரதி ஓரிடத்தில் உடைந்து போய் விடுகிறான். இவை எல்லாம் மாயை தானோ என்று விரக்தி நிலைக்குப் போய் விடுகிறான். விதியை பலமாக நம்ப ஆரம்பித்து விடுகிறான். நான் ஏன் இந்த மாயையான அற்ப அழகுகளில் மூழ்கிப்போய் கிடக்கிறேன் என்று தளர்ந்து போகிறான். மனம் தளர்ந்து போயுள்ள அந்த விரக்தி நிலையிலும் கூட சக்தியிடமே  உடைந்து சரணடைகிறான். உடைந்து போய் அவன் அழும் பாடல் மனதை உருக்க வல்லது.

‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ? பல தோற்ர மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச் செறிவே நீங்களெல்லாம்
கானல் நீரோ? வெறும் காட்சிப் பிழை தானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய் தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையில் என்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?

காண்பதுவே உறுதி கண்டோம் கண்பதல்லால் உறுதி இல்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்’

என்று அவன் முடித்து வைக்கையிலும் அவன் சக்தியை உறுதிஎன்றே காண்கிறான். சக்தியை அவன் உலக இயக்கத்தில் கண்டு உறுதி என்ற முடிவுக்கு வருகிறான்.

அவன் தமிழ் நாடு பெற்றெடுத்த உலக அரங்குக்குள் போக வாய்ப்பேதும் கிட்டாத மிடுக்கான தமிழகக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தவன்.

ஆனால் தாகூர் அப்படி இல்லை. பிரபு வம்சத்தில் பிறந்த மனிதர் அவர். வெளிநாடுகளுக்கு போகின்ற வாய்ப்புகள் பல பெற்றவர். ஆங்கில மொழி பாண்டித்தியமும் வெளிநாட்டுப் பிரபுக்களின் நட்புறவும் பெற்ற வங்கக் கவி. அதன் காரணமாகவே அவருக்கு உலக அரங்குக்கு தன் கீதங்களையும் பாடல்களையும் கொண்டு செல்லும் வல்லமை கிட்டியது. நோபல் பரிசு பெறும் சாத்தியமும் வாய்த்தது.

நோபல் பரிசு பெற்ற போது தாகூர் வழங்கிய ஏற்புரை அவரது கீதங்களைப் போலவே அழகானது; வசீகரமானது. அதனை அழகாக வங்க மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு த.நா. குமாரசுவாமி அவர்கள் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். அதனை சா. குமாரசுவாமி அவர்கள் ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற பெயரில் தொகுத்திருக்கிறார்.  அதில்,

‘.....
எனது வாழ்கையில் இலக்கியப் படைப்புகள்எப்படி என் இளமைப் பருவத்தில் இருந்து உருப்பெற்ரு வளர்ந்தன என்பது நினைவில் உள்லது. எனது இருபத்தைந்தாவது வயது வரை கங்கைக் கரையில் உள்ல ஒரு தனிமையான கிராமத்துப்  படகு வீட்டில் தனிமையில் வாழ்ந்தேன். இலயுதிர்காலத்தில் இமயமலையில் இருந்து வரும்  காட்டு வாத்துக்களே எனது துணை. அந்தத் தனிமையில் இயற்கையின் அழகை பொங்கி வரும் மதுவை அருந்துவதைப் போல அனுபவித்துள்லேன். தனது சிறிய ஒலிகள் மூலமாக தன்னை எனக்குத் தெரிவித்து என் கனவுகளுக்கு கவிதை வடிவம் தந்து கல்கத்தா பத்திரிகைகள் மூலம் என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்த இந்தத் தனிமையை நான் பயன் படுத்திக் கொண்டேன்....இப்படியான எனது வாழ்க்கை என் நாட்டு மக்களுக்கு புதிர். இந்தப் புதிர் வாழ்க்கை மக்களின் ஆர்வத்தில் இருந்து என்னைக் காப்பாற்றி வந்தது. எனக்கு அதில் திருப்தியே.
......
சூரியன் மறையும் மாலை நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிழல்களைப் போல தோற்ரமளிக்கும் மரங்களைக் கவனிப்பேன். மதிய நேரத்தின் அமைதியான தருணங்களில் குழ்ந்தைகளின் கூச்சல் தொலைவில் இருந்து மெதுவாக எனக்குக் கேட்கும். எனக்கு இந்தக் குழந்தைகலின் மகிழ்ச்சிக் குரல்களும் பாடல்களும் மரங்களை நினைவூட்டும். ஏனெனில் இந்த மரங்களும் அந்த மகிழ்ச்சியான பாடல்கலைப் போன்று பூமியின் இதயத்தில் இருந்து பீறிட்டு விண்னைத்தொடும் நீரூற்ருக்கள் போன்ரவை.அவை எனக்கு மனித குலத்தில் இதயத்திலிருந்து ஏக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியின் மொத்த வெளிப்பாட்டின் குறியீடுகளாகிய நாமும் நம் ஏக்கக் குரல்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். இதை நான் என் இதயத்தின் அடித்தளத்தில் உணர்ந்ததால் கீதாஞ்சலி என்ற கவிதை நூலை எழுதினேன்.

அப்பாடல்களை நான் விண்ணில் ஒளிரும் நட்சத்திரங்களுக்குக் கீழே எனக்கு நானே பாடிக்கொள்வேன்.மீண்டும் புலர்காலைப் பொழுதிலும் மதியப் பொழுதுகளில் வெளி உலகுக்கு  நான் வரவேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்கொள்ளும் வரையிலும் பாடிக்கொண்டேயிருப்பேன்.....’

இவ்வாறு தொடரும் அவருரை எவ்வாறு அவர் தனிமையில் இருந்தபடி இயற்கையில் இருந்து உலக வாழ்வை புரிந்து கொண்டார் என்பதையும் கருணை மிக்க அவரிதயம் எவ்வாறு அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது என்பதையும் சொல்லப் போதுமானதாக இருக்கும் என்பது என் எண்னம்.

அவர் தனிமையில் இருந்து இயற்கையை முழுவதுமாகப் பருகி அதில் தன் பிரம்ம சக்தியைக் கண்டு தன் கருணையான இதயத்தில் அதன் ஆற்றல்களை எல்லாம் நிரப்பிக் கொண்டு தன் கீதங்கள் மூலம் அதை அவர் அவ் ஆற்ரல்களின் வீரியத்தை உலகுக்கு அளித்தார் என்பது என் அபிப்பிராயம்.

தாகூரின் பாடல்கள் மென்மையான இறகுகள் வருடும் ஸ்பரிசம் போன்றவை; பேராற்ரலை மென்மையோடு போற்றுபவை; இந்த மென்மை இயல்பும் கருணையும் அன்பும் பொலியும் மொழியும்  அவருக்கு தனிமையும் பொருளாதார சுபீட்சமும் அவருக்கு அளித்தவையாக இருக்கலாம்.

அவர் இயற்கையின் ஆற்றலையே கடவுளாகக் காண்கிறார். அதில் இருந்தே அவர் உலகைப் புரிய முயல்கிறார். அதனால் அவர் கேள்விகள் எதுவும் கேட்காதவராகவும் ஏற்றுக் கொண்டு அமைதி காணும் போக்கு கொண்டவராகவும் விளங்குகிறார். அந்த அமைதியையே அவர் கவிதைகள் உலகுக்கு வழங்குகின்றன. வரும் துன்பங்களை; இடர்களையும்  ஏற்றுக் கொண்டு அனுபவித்து வருபவை அவர் கவிதைகள். அங்கு அன்பும் கருணையும் எளிமையும் ஏற்றுக் கொள்ளலுமே மிகுந்துள்ளன.

அவரது நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்பை சி.ஜெய பாரதன் அவர்கள் மிக அழகாக தமிழில் தந்திருக்கிறார். நன்றியுடன் அவற்றில் இருந்து உலக ஆற்றல் பற்றிய அவரது பார்வைகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

என்னிசைக் கீதம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

காற்றினிலே வருமென் கீதம், குழந்தாய்!
உனைத் தழுவி
ஆசைக் கரங்கள் போல்
அணைத்துக் கொள்ளும்!
உனது நெற்றி மீது முத்தமிட்டு
இதழால் ஆசி அளிக்கும்!
தனித்துள்ள போது உன்னருகில் அமர்ந்து
உனது செவியில்
முணுமுணுக்கும் என் கீதம்!
சந்தடி இரைச்சலில் நீ தவிக்கும் போது
அரண் அமைத் துனக்கு
ஏகாந்தம் அளிக்கும், என் கீதம்!
இரட்டைச் சிறகுகள் போல்
என் கீதம்
உன் கனவுகள் உயிர்த்தெழ
உந்துசக்தி தரும்!
கங்கு கரையற்ற காணாத காட்சிக்கு
உன் இதயத்தை
ஏந்திச் செல்லும் என் கீதம்!
நடக்கும் பாதையில்
காரிருள் சூழும் போது உனக்கு
நன்றியுடன்
வழிகாட்டும் என் கீதம்,
வானத்து விண்மீனாய்!
உன்னிரு கண்ணின் மணிக்குள்
அமர்ந்து கொண்டு
உன் நெஞ்சின் விழிகளுக்கு
ஒளியூட்டும், என் கீதம்!
மரணத்தில் எந்தன் குரல் மங்கி
மௌன மாகும் போது,
உயிருள்ள
உன்னித யத்தில் போய்
ஓசையிடும்
என் கீதம்!

************

கீதாஞ்சலி (1)
உடையும் பாண்டம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

அந்திமக் கால மின்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!
உந்தன் தெய்வீகக் கரங்கள்
என்மேல் படும்போது,
எந்தன் நெஞ்சம்
உவகையின்
எல்லை மீறிச் செல்லும்!
மேலும் அதில்
ஊகிக்க முடியா
உரைமொழிகள் உதிக்கும்!
அளவின்றி
அள்ளி அள்ளிப் பெய்த உந்தன்
கொடைப் பரிசுகள்
எனது இச்சிறு கைகளில் மட்டுமே
கிடைத்துள்ளன!
கடந்து
போயின யுகங்கள்!
ஆயினும்
இன்னும் நீ இப்பாண்டத்தில்
பொழிந்து பொழிந்து கொட்டுகிறாய்!
அங்கே
காலியிடம் உள்ளது இன்னும்,
மேலும் நீ நிரப்பிட!

**************
கீதாஞ்சலி (2)
இசைப் பாடகன்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இன்னிசைக் கீதத்தைப் பாடென்று
என்னை நீ
ஆணையிடும் போதென்
நெஞ்சம் திறந்து பெருமிதத்தில்
பூரிக்கிறது!
உன் முகத்தை நோக்கும்
என் விழிகள்
மடை திறந்து
வீழ்த்தும் நீர்த் துளிகள்!
வாழ்க்கை நெடுவே என்னை
துன்புறுத்தும்
இன்னல், வெறுப்பு, வேறுபாடு எல்லாம்
கனிந்துருகி
இனிய ஓர் சீரமைப்பில்
ஏகிச் சங்கமிக்கும்!
உன் மீது நான் கொண்டுள்ள
மதிப்பீடு
அகண்ட கடல் நெடுவே
பயணம் துவக்கும்
ஆனந்தப் பறவைபோல்
விரிக்கும் தனது
சிறகுகளை!

இன்னிசைக் கீதத்தை பாடும் போதுன்
செவிகள் சுவைத்து
இதயம் இன்புறும்
என்பதை நான் அறிவேன்!
உன்னரிய சன்னிதிக்கு முன்னால்
ஓரிசைப் பாடகனாய்
வருவதையே
விரும்புகிறேன் நான்!
வேட்கை மிகையாய் இருப்பினும்
என் கரங்கள் நீட்சிக்கு
எட்டாத
உன் பாதங்களை
வெகு தூரம் விரிந்து செல்லும் என்
கீதச் சிறகின் முனைதான்
தொட முடிகிறது!
இன்னிசைக்
கீதத்தை பாடிக் கொண்டுள்ள போதே
ஆனந்தப்
போதையில் மூழ்கி
மெய்மறந்து நான் உன்னை
நண்பா!
என்று அழைத்தேன்
என் அதிபனே!

*****************
கீதாஞ்சலி (3)
உன்னிசைக் கீதம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இன்னிசையில் கானத்தை,
எவ்விதம் நீ பாடுகிறாய்
என்பதை நான் அறிந்திலேன்
என்னரும் அதிபனே!
உன் கீதத்தைக் கேட்டு
காலங் காலமாய்
மௌனத்தில் மூழ்கி
உள்ளம் வியப்பில் ஆழ்ந்தது!
உலகெங்கும் பரவி விளக்கேற்றும்,
உன் கானத்தில் எழும்
ஒளிச்சுடர்!
உன் கானம் விடுகின்ற
உயிர் மூச்சு
அண்டவெளியில்
வான்விட்டு வான் தாவும்!
புனித நீரோடை போல
கரடு முரடான
கற்பாதைத் தடைகளைக்
கடந்து
முன்னோக்கி விரைந்தோடும்,
உன்னினிய கானம் !

பாடிவரும் உன் கானத்துடன்
ஒன்றாய்க் கலந்திட
நாடி ஏங்கும் என்னிதயம்!
வீணாய் அதற்கு
ஓரிசைக் குரலைத் தேடிப்
போராடும்,
என் மனது!
உரை நடையில் உன் கானத்தை
ஓதுவேன் ஆயினும்
இசை கலக்க முடியாமல்
குழம்பிக்
கூக்குர லிடுவேன்!
கால வரம்பில்லாத
உன்னரும் இன்னிசைக் கானத்தின்
பின்னலில்
என் இதயத்தைக் கட்டி
அந்தோ நீ!
வசப்படுத்தி வைத்துள்ளாய்
என் அதிபனே!

*****************
கீதாஞ்சலி (4)
என் வாழ்வில் கட்டுப்பாடு

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இது என் வாழ்வின்
வாழ்வைப் பற்றிய வரலாறு.
என் அங்கம் அனைத்தையும்
புத்துயிர் அளிக்கும்,
உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
என்னிதயம் உணர்வதால்
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க!
ஆதி மூலக் காரணியான
நித்திய ஒளியை எனது
நெஞ்சில் தூண்டி விடும்
சத்திய நெறியே
நீயென்று
முக்தி பெற்ற நான்
உண்மைக்குப் புறம்பட்ட அனைத்தையும்
எண்ணாமல் இருக்க
எந்நாளும் முயல்வேன்.

இதயக் கோயிலின்
உட்புறச் சன்னிதியில் நீ
திருப்பீடம் அமைத்து ஆசனத்தில்
இருப்பிடம் கொண்டுள்ளது
நினைவில் இருப்பதால்,
உள்ளத்தைக் களங்கப் படுத்தும்
தீவினை எல்லாம்
நெஞ்சத்தை நெருங்க விடாமல்
நீக்க முயல்வேன்,
பூக்கள் மேல் கொண்டுள்ள
என் மோகத்தைக்
குன்றாமல் வைத்துக் கொண்டு!
உனது பேராற்றல் இதுவரை
எனக்கு ஊட்டியுள்ள
மன உறுதியே
எப்போதும் என்னை இயக்கும் என்பது
தென்பட்டு வருவதால்,
நன்னெறி முறைகளைக்
கடைப்பிடித்துச்
சிரமப்பட்டு முயல்வேன்,
நடத்தையின் மூலம் என்னை
உனக்கு
எடுத்துக் காட்ட!

*****************


*****************
கீதாஞ்சலி (7)
உன் ஆடம்பர ஒப்பனைகள்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எனது கவித்துவ
மனது
ஒருங்கே புறக்கணிக்கும்,
உனது
ஒய்யாரக் கவர்ச்சி
ஆபரணங்களை!
ஒப்பனை புரிவதும்
ஆடம்பர ஆடை அணிவதும்
பெருமை தரவில்லை
உனக்கு!
நமது
நட்பின் இணைப்பை
நாசம் செய்வது
நகை அலங்காரம்!

உனக்கும்
எனக்கும் உள்ள
உறவின்
குறுக்கே நுழைவது!
நெருங்கி உள்ள போது
உனது
அணிகள் உண்டாக்கும்
சலசலப்பு ஓசை
முணுமுணுக்கும்
உன் இனிய மொழிகள்
என் செவியில் விழாமலே
அமுக்கி விடும்!

மகாகவிப் பெருமானே!
உந்தன்
திருப்பாதங்களின்
அருகே
அமர்ந்துள்ளேன்! என்னுள்ளத்தை
அவமானப்படுத்தும்
கவிஞன் என்னும்
கர்வம்
மகத்தான நின் காட்சி முன்னே
மாய்ந்து போனது!
நேரான பாதையில்
சீராகச் சென்று
எளிய வாழ்வைப் பின்பற்ற
வழியை மட்டும்
நாடுவேன்,
புல்லிலைப் புல்லாங் குழல்
உன்மீது
மெல்லிசை பொழிந்து
மீட்டுவது போல!

கீதாஞ்சலி (11)
இறைவன் எங்கிருக்கிறான் ?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
கூடவே குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிமேல் கீழிறங்கி
உழவரைப் போல்
உன் பாதங்களைப் பதித்திடு!

குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே காணப் போகிறாய்
அந்த விடுவிப்பை?
படைக்கும் போதே
நமை ஆளும் அதிபன்,
பந்த பாசப் பிணைப்புகளைச்
சொந்தமாய் மேற்கொண்டு
களிப்புடன்
அளித்து வந்திருக்கிறான்,
உயிர்களுக்கு!
நிரந்தரமாய் நம் எல்லோரையும்
தன்னுடன்
இரண்டறப் பிணைத்துள்ளான்
இறைவன்!
தியானத்தை நிறுத்தி விட்டு
வெளியே வா!
தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,
அகர் பத்திகளின்
நறுமணப் புகை அனைத்தையும்
புறக்கணித்து விடு!
உன் ஆடைகள்
கறைபட்டுக் கந்தலானால் என்ன?
தீங்கென்ன நேரும் உனக்கு?
மெய்வருந்திப் பணிசெய்யும்
உழைப்பாளியை
சந்தித்து
நில் அவனருகே நீ,
நெற்றி வேர்வை நிலத்தில்
சிந்தி!

கீதாஞ்சலி (36)
என் பிரார்த்தனை

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இதுவே நான் செய்யும்
பிரார்த்தனை இறைவா!
நெஞ்சில் முளைக்கும் தாழ்ச்சி
எண்ணத்தின்
வேரை நோக்கி அடி!
ஓங்கி அடி!
இன்ப துன்பத்தை எளிதில் தாங்கிட
எனக்குப் பொறுமை அளித்திடு!
நற்பலன்கள் விளையும் பணிகளை
நான் பாசமுடன் புரிய
நல்கிடு உறுதி!
வறியோரை என்றும் மறவா திருக்கவும்,
நெறியிலா மூர்க்கர் முன்பாக
முழங்கால் மடக்கி
என்றும்
வணங்கா திருக்கவும், எனக்கு
வைராக்கியம் கொடுத்திடு!
தினச் சச்சரவி லிருந்து விடுபட்டு
மனம் அப்பால் சென்று,
எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
மனத் தெளிவைத் தந்திடு!
அத்துடன்
எனது ஆற்றல் முழுவதையும்
ஒப்படைத்து
உன் ஆசைப் பணிக்கு
பாசமோடு உழைத்திட
எனக்குச்
சக்தியை அளித்திடு!


கீதாஞ்சலி (63)
வழிகாட்டித் துணைவன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நானறியாத புதிய தோழர்களைத்
தானாக அறிமுகம்
பண்ணி வைத்தாய் எனக்கு!
என்னை வரவேற்று உபசரிக்க
அன்னியர் இல்லத்தே
ஆசனங்கள் அளித்தாய் நீ!
தூரத்து மனிதரை அழைத்து எனது
ஓரத்தில் அமர வைத்தாய்!
தெரியாத வழிப்போக்கனை
உரிமையாய் எனக்குத்
தமையனாய் ஆக்கினாய்!
பிறந்தகம் விட்டுப்
பிரிய நேர்ந்திடும் போது,
கரிந்து போனதென் உள்ளம்!
புதிய தளத்தில் என் பூர்வத் தடம்
பதிந்திருந்தது,
மறந்து விட்ட தெனக்கு!
நிறைந் தங்கே நீ
இருப்பதுவும்,
தெரியாமல் போன தெனக்கு!

பிறப்பு, இறப்பு மூலமாகச்
மானிடர் தோன்றும் இவ்வுலகிலும்,
அடுத்துப் புகும் உலகிலும்,
முடிவில்லாமல் சுற்றி வரும்,
வாழ்க்கை நியதிக்கு
வழி காட்டித்
துணைவன் நீ ஒருவனே!
முன்பின் தெரியா தவரோடு
என்னைப் பந்தபாச மென்னும்
உன்னதப் பிணைப்பில்,
பின்னி யிருக்கிறாய் நீ!
உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு
அன்னியர் ஆகார்!
என்னை அவர் அண்டி வந்தால்,
கதவுகள் சாத்தப் படா!
வாழ்க்கை மேடையில்
திருவிளை யாடுவோன்
உருவினைத் தொட்டு,
உவப்புடன் வணங்கி
அவனை
ஒருபோதும்
மறவா திருக்கும் மனத்தை
அருள்வாய் எனக்கு!


கீதாஞ்சலி (79)
மனவலியைத் தாங்குவேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இந்தப் பிறப்பில் நேராக நின்னைச்
சந்திக்கும் கட்டம்
எனக்கில்லை என்றாகி விட்டால்,
உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன்
என்பதை
உணர வேண்டும் நான்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
வணிக உலகிலே
மணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,
தினமும் செல்வம் சேர்த்து
எனது பை நிரம்பி வழிந்தாலும்,
எதுவும் முடிவில்
சம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னிடம்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

பெரு மூச்சுடன் களைத்துப் போய்,
தெரு ஓரத்து மண்தூசியில்
தணிந்த கட்டிலின் மீது நான்
குந்தும் போது, எனது
நீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென
நானுணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
என்னறையில் தோரணங்கள் கட்டிப்
புல்லாங்குழல் இசை பொழிந்து,
சிரிப்பு வெடிகளில்
ஆரவாரம் செய்யும் போது,
வரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்
அழைக்க வில்லை யென
உணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

*****************

கீதாஞ்சலி (83)
என் கண்ணீர் முத்தாரம்..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அன்னையே! சோகத்தில்
சிந்துமென்
கண்ணீர்த் துளிகளை எல்லாம்
ஓர் முத்தார மாய்க்
கோர்த்துச் சூட்டுவேன்,
உன்னெழில் கழுத்தினில்!
விண்மீன் பரல்கள்
நடமிடும்
ஒளிச் சலங்கைகள்
ஒப்பனை செய்கின்றன உன்
திருப்பதங்களை!
ஆயினும்
கழுத்தில் தொங்குமென் முத்தாரமே,
ஊஞ்சல் ஆடுது
உன் மார்பின் மீது!

செல்வமும், புகழும்
தேடி வருகின்றன, நினது
திருவருளால்!
அவற்றை அளிப்பவனும் நீ!
பெற முடியாமல்,
நிறுத்தி விடுபவனும் நீ!
ஆயினும்
என்னைச் சார்ந்தவை,
என் துயர்கள் அனைத்தும்
முழுமையாய்!
என் துன்பங்களை
உன்னிடம் சமர்ப்பிக்கும் போது,
வெகுமதி
அளிக்கிறாய் எனக்கு
நளினமாக!

கீதாஞ்சலி (86)
மரண தேவனுக்கு வரவேற்பு .. !

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அதோ! மரண தேவன்
எதிரில் நிற்கிறான்,
எனது வாசற் கதவருகிலே,
உனது வேலையாள் அவன்!
எவருக்கும் தெரியாத தூரக்
கடல் கடந் தெனது
வீட்டிற்கே,
வந்து விட்டான்
உந்தன் கட்டளை நிறைவேற்ற!
காரிருள் கப்பி விட்ட திரவில்!
குடிகொண்ட தச்சம்
நெஞ்சில்! ஆயினும்
தீபத்தை கையில் கொண்டு
திறக்கிறேன்,
முன்வழிக் கதவை!
வரவேற் கிறேன் நான்,
சிரம் தாழ்த்தி
மரண தேவனை!
உந்தன் தூதுவன்தான்
வந்து நிற்கிறான்,
வாசலில்!

கரங்களைக் குவித்து,
மரண தேவனை வணங்குவேன்,
கண்ணீர் சொரிய!
திருப் பதங்களைத்
துதிப்பேன்,
இதயச் செல்வத்தை
அர்ப்பணம் செய்து!
திரும்பிச் செல்வான், மரண தேவன்
ஒருநாள்
கட்டளை நிறைவேற்றி,
எந்தன்
காலைப் பொழுதை
வெறும்
கருநிழ லாக்கி!
வெறுமையான என் வீட்டில்
புறக்கணித்த
தனி ஆன்மா மட்டும்
எஞ்சி நிற்கும்,
எனதிறுதிக் கொடையாக
உனக்கு!

கீதாஞ்சலி (90)
மரணம் கதவைத் தட்டும் போது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்ன வழங்கப் போகிறாய் நீ,
மரண தேவன் வந்து,
உன்னில்லக் கதவைத் தட்டும்
அந்நாள்?
விருந்தாளிக்கு வாழ்க்கை
உருவாக்கிய என் முழுச் சடலத்தைத்
தருவதாக முன் வைப்பேன்!
ஒருபோதும் மரண தேவனை,
வெறுங்கையுடன்
திருப்பி அனுப்ப
விரும்ப வில்லை நான்!

இலையுதிர் காலப் பொழுதிலும்,
வேனிற் கால இரவுகளிலும்,
நானினிதாய்ச் சுவைத்த
நாட்களை எல்லாம்,
நானளிப்பேன்
அவன் முன்பாக! என்
ஊதியங்கள் அனைத்தையும்,
உடன் அளிப்பேன்!
சுறுசுறுப்பாய் உழைத்தென் வாழ்வில்
பெருக்கிய வற்றையும்,
தருவேன் அவனுக்கு,
என் ஆயுள்
தருணம் முடியும் தறுவாயில்,
மரண தேவன்
வருகை தந்தென்,
வாசற் கதவைத் தட்டும் போது!

*****************
கீதாஞ்சலி (95)
ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இம்மைப் பிறப்பின் தலை வாசலை
எப்போது தாண்டினேன்
என்பதை அறிய வில்லை
நான் முதலில்!
நடுக் காட்டினில்,
நள்ளிரவு வேளையில்
மொட்டு விரிந்தாற் போல,
மாய வாழ்வில் என்னை,
மலர வைத்த மகாசக்தி எது?
பொழுது விடிந்ததும்,
ஒளிமயம் கண்களில் பட்ட போது,
ஒருகணம் உணர்ந்தேன்,
இந்த உலகுக்கு,
நானோர் அன்னியன் அல்லன்
என்பதை!

பெயரும் வடிவமு மில்லாத
மாயச் சிற்பி, என்
தாயுருவின் அன்புக் கரங்களில்
தாலாட்டப் படும்
சேயாக உண்டாக்கி
ஆட்கொண்டான் என்னை!
அது போலவே
மரணத்திலும் புலனுக்குத்
தெரியாத ஒன்று
நிகழப் போவதை நானறிவேன்!
வாழப் பிறந்ததை நேசிக்கும் நான்
வாழ்க்கை முடிவில்
வரப்போகும்
மரணத்தையும்
வரவேற்பேன் வாஞ்சை யாக!
வலது முலையி லிருந்து தாய்
விலக்கும் போது,
வீறிட்டழும் குழந்தை!
அடுத்த கணத்தில் இடது முலைக்கு
அன்னை மாற்றும் போது,
அமைதியுறும் சேய்!

உன் மர்மங்களை அறியேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னை எனக்குத் தெரியும் என்று
மாந்தரிடையே
பீத்திக் கொண்டேன் நான்!
என் படைப்புகள் அனைத்திலும் உள்ள
உன் படத்தை
உற்று நோக்குவர் மற்றவர்.
என்னருகில் வந்து உடனே
“யார் அவன் படத்தில்?”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
உண்மையாய்
என்னால் கூற இயலாதென
எடுத்துரைப்பேன்!
துடுக்காய்த் திட்டி வெளியேறுவர்
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!

நின்னரிய கதைகளை
என்னினிய கீதாஞ்சலியாய்
எழுதி நீடிக்க வைப்பேன்!
உன்னுடைய மர்மங்கள்
என்னிதயத்தைக் கீறிக் கொண்டு
பொங்கி எழும்!
அருகில் வந்து மற்றவர்
“அவை கூறும் அர்த்தம் என்ன”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
“அந்தோ எவருக்குத் தெரியும்
அவை கூறும் அர்த்தங்கள்?” என்று
தவிர்த்து நிற்பேன்!
வெளியேறுவர் கேலி செய்து,
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!



Friday, October 28, 2016

சிட்னி கம்பன் விழா 2016

கடந்த வார இறுதியில் ( 21, 22, 23ம் திகதிகள்) நடந்தேறியது கம்பன் விழா.

வெள்ளி மாலையில் தொடங்கிய அவ் விழா சனி ஞாயிறு இரு அமர்வுகளாக காலை 9.30 மணியில் இருந்து 1.30 மணி வரையும் பின்னர் மாலை அமர்வுகள் 4.30 இலிருந்து இரவு பத்து மணி வரையும் நடந்தேறியது. மதிய உணவு இலவசம் என்பது ஒரு கொசுறுச் செய்தி.

தமிழுக்கு விழா
தமிழ் இலக்கியத்துக்கு விழா
இலக்கியம் தந்த கம்பனுக்கு விழா!

நிஜமாகவே நெஞ்சுக்குள் பெய்தது ஒரு மாமழை! நீருக்குள் மூழ்கியது தாமரை!!

கம்பராமாயண உவமை ஒன்று இப்படி பேசுவதாக தமிழகப் பேச்சாளர் ஒருவர் பாடினார். அது, ஆந்திராவில் பரந்து விரிந்து ஓடுகிற கோதாவரி நதி பற்றியது. கூடவே அது கவிதையின் வண்ணத்துக்கும் பொருந்திப் போகிற கம்ப வரி. சிலேடை வரி. அது இது தான்.

’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

இங்கும் ஓடியது ஒரு தமிழ் நதி, கோதாவரி போல.....

கரை புரண்ட படி.....

தமிழக, இலங்கை, அயல் மாநிலம் போன்ற இடங்களில் இருந்து மட்டுமன்றி உள்ளூர் பேச்சாளர்களோடு இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தம் ஆற்றல்களைக் காட்டியதும் பத்தாவது ஆண்டு விழா என்பதும் கூடுதல் சிறப்பு.

இந்த கம்பன் விழாவுக்கும் ஏனைய தமிழ் விழாக்களுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறு பாடு உண்டு. கம்பன் விழா ஒரு பண்பாட்டை சுமந்து நிற்கும். அதன் அலங்காரங்களில் இருந்து தொடங்கும் அது. மண்டபத்துக்கு போகும் பாதைகள் எங்கும் தமிழ் புத்தக வரிசைகள், கோலங்கள், குத்துவிளக்கு நிறைகுடம் கூடவே இளந்தமிழ் பெண்கள் திருநீறு சந்தனம் குங்குமம் பன்னீரோடும் பண்பாடு சார்ந்த உடைகளோடும் வரவேற்க காத்து நிற்பர். கூடவே ஓருருவர் அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்த புன்னகையோடு காத்து நிற்பர்.

மேடை பூக்களாலும் தோரணங்களாலும் பதாகைகளாலும் வண்ண விளக்குகளாலும்  பாவை விளக்குகள் ஆளுயரக் குத்து விளக்குகள் பித்தளைப் பூத்தாங்கிகள், குடைகள் சிம்மாசனங்களாலும் தனியழகு பெறும். மிகுந்த சிரத்தையோடு அதனைக் கவனித்த முறை கவனத்தை அள்ளும். அருகாக இராமா சீதா கல்யாண சமேத பெரும் படம் ஒன்று அதற்கான இடத்தில் அதற்கான மரியாதைகளோடு வீற்றிருக்க முன்னாலே பித்தளை விக்கிரகமாக கம்பர் ஏடோடும் எழுத்தாணியோடும் அமர்ந்திருப்பார். அவ்விடத்தை வியாபித்தும் மங்கல கர அணிகலன்கள்.....

இவைகள் ஒரு விதமாக பார்வையாளர்களை வசீகரப்படுத்தி கொண்டாட்ட உணர்வினையும் குதூகல மன நிலையையும் கொண்டுவரவல்லவை. ஏதோ இது நம்ம வீட்டுக் கல்யாணம் என்ற மன உணர்வை இவை கொண்டு வந்து விடுகிறது.

எனக்கிந்த புற அழகு சார்ந்த விடயங்களில் அத்தனை ஈடு பாடு இல்லாத போதும் - அநாவசிய ஆடம்பரத்துக்கு அளிக்கப் படும் செல்வம் - அது விரயக்கணக்கில் வைக்கப்பட வேண்டியது - என்று நான் நினைக்கின்ற போதும் அது கவனத்தை ஈர்த்து அந் நிகழ்வின் பால் ஒன்ற பாதை வகுக்கிறது  என்ற உண்மை  உறைக்கவே செய்தது.

கூடுதல் நிறைவாக ஒலி ஒளி அமைப்புகள்.....

பார்த்துப் பார்த்து; திட்டமிட்டு திட்டமிட்டு கூட்டு முயற்சியின் ஒட்டு மொத்த வெற்றி இவ்விழா!

இவை புறவயப்பட்ட தென்றால் அங்கு ஒட்டுமொத்தமாக நிலவுகின்ற ‘வாசம்’ என்று ஒன்றுண்டு. அது பேச்சில் நடத்தையில்  துலங்கும் ‘பண்பாட்டு வாசம்’. அனைத்துக் கம்பன் கழகத்தாரிடமும் ஒன்று போலவே  இருக்கும் பணிவு, அன்பு, புன்னகை, அடக்கம், உபசரிப்பு, ஒத்துழைப்பு, நட்பியல்பு கூடவே அவற்றுக்கு ஈடாக ராஜ கம்பீரத்தோடு துலங்கும் ஆற்றலும் பேச்சு வன்மையும்.

கம்பனில் இருந்து கம்ப வாரிதியை பிரிக்க முடியாது. சிட்னி என்றால் ஜெயராமில் இருந்து கம்பனைத் தனியே பிரிக்க இயலாது. Cumber land ( கம்பன் நிலம்) என்ற பிரதேசத்தில்  jeyram ( ஜெய (வெற்றி) ராமன்) வாழுதலும் விழா எடுத்தலும் எத்தனை பொருத்தம் பாருங்கள்!



இந்த ஜெயராம் பற்றி கொஞ்சமாய் ஏனும் ஏதும் சொல்லாமல் அப்பால் நகருத்தல் எனக்கு நான் செய்யும் அதர்மமாகும். அவர் கானக நடுவே அடர் வானில் தெரியும் ஒரு வடதுருவ நட்சத்திரம். ஒரு புலர் காலைப் பொழுதுக்கான அறிகுறி என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இவ்வாறான அபிப்பிராயம் நிலை பெற சில காரணங்கள் உண்டு.

1. அவரிடம் இருக்கும் அர்ப்பணிப்பும் தாய்மை உணர்வும்.
2. அவரிடம் இருக்கும் ஒரு விதமான துறவு நிலை
3. கூடவே அவரோடு இருக்கும் எளிமை அன்பு பணிவு அடக்கம் முதலான அணிகள். தள்ளியே நிற்கும் தன்மை. மற்றவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நிற்கும் குணம்.
4. இலக்கியம்,கலைகள், பண்பாடு இவற்றின் பால் அவருக்கு இருக்கும் அபரித்தமான நம்பிக்கை உறுதிப்பாடு மற்றும் அவற்றை அடுத்த சந்ததிக்கு கொடுக்கும் நாட்டம்.
5. பெறுமதி மிக்க தன் நேரத்தை அமைதியான முறையில் சமூகத்துக்குக் கொடுக்கும் உயர்ந்த உள்ளம்.

அவரின் செயற்பாடுகளை யாரும் சொல்லி நான் அறிகிற பொழுதுகளில் கடவுள் சிலரை சிலவற்றுக்காகப் படைக்கிறாரோ அதற்காகவே அவர்களை தயார் படுத்துகிறாரோ என்று தோன்றும். இவர் அதற்கு முழுதாகப் பொருந்திப் போகிறார்....

பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் திளைத்து மகிழவும் பல பல விடயங்கள் இருந்தன. இருந்த போதும் இரண்டரை நாட்களை முழுதாக எனக்கு ஒதுக்க இயலாது போயிற்று. அதனால் இந் நிகழ்வு பற்றிய முழுமையான பார்வையை - அபிப்பிராயத்தைத் தருதல் என்பதும் இயலாததாயிற்று. அதனால் ஒரு நினைவுக்காக குறிப்புகளாக மட்டும் சில;

கிட்டியவை:

1.இயற்கலை; பேச்சு வன்மை- குறிப்பாக ஈழத்துப் பேச்சாளர்கள், தமிழகப் பேச்சாளர்கள், அவுஸ்திரேலியப் பேச்சாளர்கள், இரண்டாம் தலைமுறைப் பேச்சாளர்கள் என பல அணிகள்!

இந்த 4 வகைப்பட்ட பேச்சாளர்களிடமும் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் சில விடயங்கள் இருந்தன. ஈழத்தில் இருந்து வந்த பேச்சாளர்களிடம் பேச்சு வன்மையோடு சிறந்த பேச்சுக்கான தயாரிப்பும் இருந்தது. தமிழகப் பேச்சாளர்களிடம்  நகைச்சுவையும் பொருள் வளமும் கலந்த ஓர் இயல்பான பேச்சு வழக்கு இருந்தது. அவுஸ்திரேலியப் பேச்சாளர்களிடம் பேச்சில் ஒரு வித தீவிரப் போக்கு; வாதத்திறன் காணப்பட்டது. இரண்டாம் தலைமுறைப்பேச்சாளர்களிடம் மிகுந்த திட்டமிட்ட வரையறைக்குள் நிற்கும் குணாம்சம் மிகுந்த சரளமான தமிழ் வீச்சோடு கூடிய அழகோடியது.



கூடவே இவற்றோடெல்லாம் சமூகப் பிரச்சினைகள், நடைமுறை அரசியல், சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு என சிலேடையாக தொட்டுச் சென்ற விடயங்கள் பேச்சோடு கிடைத்த ஓர் ஏலக்காய் வாசனை.

2. முதன் முதலாக கலை தெரி அரங்கம்: இது 10வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வு. இயல் இசை நாடகம் மூன்றையும் ஒன்றாக்கி ஒரு மேடையில் இரண்டாம் தலைமுறை படைத்தளித்த ஒரு கூட்டு வெளிப்பாடு.( அந்த ராமநாடக கீர்த்தனைக்கு  நிறைந்த மக்கள் கூட்டம், முடிவில் மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்தார்கள்).

3. சமூகத்துக்கு நாட்டுக்குச்சேவையாற்றிய பெரியோர்கள் மதிக்கப் பட்டமை; கெளரவிக்கப் பட்டமை. அந்த கெளரவத்தை அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளால் கையளித்தமை.(அவர்கள் கூட சொல்லி வைத்தது மாதிரி தமிழ் பண்பாட்டு உடையணிந்து வந்திருந்தார்கள்.)

4. மூன்றாம் தலைமுறையையும் உள்வாங்கி அவர்கள் வயது, பருவம் தன்மைகளுக்கேற்ப வழங்கப் பட்ட மேடை. (சிறு பிள்ளைகள் இராமாயண கதாபாத்திரங்களைப் போல உடை அணிந்து தம் குண இயல்பைக் குறிப்பிட்டு சபையோரிடம் தான் யார் எனக் கேட்டார்கள்)

5.ஒட்டு மொத்தமான நேர முகாமைத்துவம், தொண்டர் படையின் பொறுப்பான செயற்பாடுகள். ( உதாரணத்திற்கு ஒன்று,. கடைசி நாள், கடைசி நிகழ்வு; வழக்காடு மன்றம் .’ குற்றக் கூண்டில் சீதை’ என்பது தலைப்பு. கைத் தொலைபேசியில் அதனை ஒலிப்பதிவு செய்ததால் சொல்கிறேன். நிகழ்வு சரியாக 2 மணி நேரம் 3 நிமிடங்களில் முடிந்தது. மணிக்கூடு எதனையும் பார்க்காமல்; யாருக்கும் நேர சமிக்ஞைகள் வழங்காமல்; கம்பவாரிதி அந்த சாதனையைச் செய்திருந்தார்! )



கிட்ட வேண்டியவை:

1. சம பந்தி வாய்ப்பு; முதலாவது தொடக்க நிகழ்வாக அமைந்தது கவியரங்கம். ஒரு பெண் கவிஞர் கூடவா இருக்கவில்லை? வண்ணங்களைப் பற்றிய கவி அரங்கில் ஏன் இப்படி ஒரு தனி வண்ணம்?

2. கூடுதல் அலங்காரம்; நெருக்கடியாகப் பூக்கள். உதாரணமாக கலை தெரி அரங்க நிகழ்வில் ஆடல் பாடல் வாத்தியம் எல்லாம் ஒரு மேடையில் கூடவே பூக்கள் பாவைகளும் சற்றே நெருக்கடியாக....

3. வெளியே இருந்த காட்சியமைப்பு: புத்தக விற்பனை அரங்கு, கலைகாட்சிக்கு கொடுக்கப் பட்ட இடம்; -  பெரிதாக அறிவிக்கப் பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட உள்ளூர் படைப்பாளர்கள் பற்றிய விபரங்கள் படைப்புகளுக்கு வழங்கப்படவில்லை. ஒரு மூலையில் கவனிப்பாரற்று தேமே எனக் கிடந்தன அவரவர்  பெற்றெடுத்த புத்தகக் குழந்தைகள். தனிப்பட ஒருவரைத் தானும் அந்த இடத்திற்கு நிறுத்தப்படாமை சற்றே உறுத்திற்று.

4. தேடலின் தேவை: கவியரங்கு,பேச்சு, விவாத அரங்கு, வழக்காடு மன்றம்....இயற்கலையின் அழகு மிளிரும் வகைப்பாடுகள் தான். இனி இதை விட வேறு வகைப்பாடுகள் பற்றியும் யோசிக்கலாமோ எனத் தோன்றுகிறது.  தெரிந்த கதையும் அறிந்த ஊடகமும் சலிக்காமல் இருக்க ஒரு புதிய வடிவம் -  இந்தத் தேடல் - ஒரு முயற்சி - ஒரு மாற்றம் - நமக்குத் தேவை. பாற்கடலின் ஆழம் மந்திரமலைக்குத் தெரியும். சுழியோடிகளுக்கு முத்தெடுக்கவா தெரியாது?

பார்வையாளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயமும் ஒன்றுண்டு. மண்டபம் நிரம்பிய பார்வையாளர்கள். இரண்டாம் மூன்றாம் வரிசைகள் சில துப்பட்டாக்களாலும் இன்ன பிற தனிப்பட்ட சாதனங்களாலும் ‘இது என் சீட்’ என்று ’குறிகளால் காட்டும் முயற்சியை’ செவ்வனே செய்திருந்தது. கூடவே அருகிருப்பவர் ஆசனத்துக்கு காவலாக...ஆனால் பாருங்கள் நிகழ்ச்சி முடியும் வரை அவைகளே நிகழ்ச்சியைப் பார்த்தன. என்னே ஒரு இங்கிதம் பாருங்கள்....

என்றாலும் இவை எல்லாவற்றையும் தாண்டி கோதாவரி ஆறெனப் பெருகியது  தமிழ் வெள்ளம். அது,

’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து, புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து , தண்ணென்று, ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

என் மனம் கரை புரண்டு செல்லச் செல்ல... நெஞ்சுக்குள் பெய்தது மாமழை.

தமிழ் பேச்சின் வீச்சால் புயலடித்து போனதொரு வனமாயும் ஆனது  உள்ளம்....

தமிழ் வாழ்க! அதன் இயல் எழில் இனிதே வாழ்க!

வேண்டும்; மீண்டும்!

பின்னிணைப்பு ( 30.10.16) :

என் அன்புத் தோழி கீதா.மதிவாணன் நிகழ்வில் தான் எடுத்த புகைப்படங்களை அனுப்பி இப்பதிவோடு பாவிக்க அனுமதி தந்தார். இத்துடன் அவை பின்னிணைப்பாகப் பிரசுரமாகிறது. நன்றி கீதா.










Friday, October 21, 2016

எட்டுக்குப் பின்னே.....

இலக்கம் எட்டு பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொடுத்திருக்கிறது. எண்ணியல் சாஸ்திரப் பிரியர்களுக்கு அது ஓர் அதிஷ்டமற்ற எண்.

இங்கு வாழும் சீனர்களுக்கோ அது ஓர் பூரணத்தின்; சுபீட்சத்தின்; அதிஷ்டத்தின் அறிகுறி. அவர்கள் தேடித்தேடி அந்த இலக்கம் வரத்தக்கதான வீடுகளை வாங்குகிறார்கள். அவர்கள் பார்த்துப் பார்த்து வாங்கும் ஆடம்பர வாகனங்களுக்கு அதன் இலக்கத் தகட்டுக்கும் எட்டு என்ற இலக்கம் வரத்தக்கதான இலகக்த் தகட்டை மேலதிக விலை கொடுத்து வாங்கிப் பொருத்துகிறார்கள்.

இப்படியாக நம்பிக்கைகள்.........

ஆனால் நான் இங்கு சொல்ல வருவது எட்டு என்ற இலக்கம் அல்ல. அதற்கு பின்னால் வரும் ஒன்பது என்ற இலக்கம் பற்றியது.

தமிழில் ஒன்பது என்று ஓர் இலக்கம் இல்லையாம் என்ற தகவல் எனக்குப் புதியதாய் இருந்தது. அண்மையில் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்றொரு புத்தகம் பார்த்தேன். அதிலிருக்கும் நொறுக்குத் தீனி போலான தகவல்கள் மிக சுவாரிசமானவை. அதனை என். சொக்கன் என்பார் தந்திருக்கிறார். அதனை பார்த்த பின்னே அதைப் பற்றி என் இலக்கிய நண்பர்கள் பலருக்கும் சொல்லித் திரிகிறேன். அவருடய பல ஆக்கங்கள் இணையவெளிகளிலும் பரவலாகப் பார்க்கக் கிடைக்கின்றன. அதிலொன்றில் இருந்து தான் இந்தத் தகவலை பெற்றுக் கொண்டேன்.

நான் இனி இடையில் நுழையவில்லை.

( நன்றி http://www.tamiloviam.com )
(ஆக்கம்: கண்ணில் நிறைந்த பாவை)

”................
திருக்குறள் பதின்கவனகர் திரு. ராமையா அவர்களின் கேள்வி - பதில் தொகுப்பான, 'கேட்டதும் கிடைத்ததும்' நூல் வாசித்தேன். (இளமதி பதிப்பகம் - 256 பக்கங்கள் - விலை ரூ 50/-)

அதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.

இதற்குக் காரணம், தமிழில் ஒன்பது என்கிற எண்ணே இல்லை. அதனால்தான், திருவள்ளுவர் அந்த எண்ணைப் பயன்படுத்தவே இல்லையாம்.

அப்படியானால், எட்டுக்குப்பிறகு, பத்துதானா ?

இல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :

.... ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...

ஆகவே, தமிழில் எண்களை அடுக்கினால்,

ஏழு
எட்டு
தொண்டு
பத்து

என்றுதான் வரவேண்டும்.

ஆனால், எப்படியோ இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை / எண்ணைத் தொலைத்துவிட்டார்கள். ஆகவே, அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சரி செய்வதற்காக, பத்துகளை எண்ணும் வரிசையிலிருந்து ஒரு சொல்லை, முன்னே கொண்டுவந்துவிட்டார்களாம்.

அதாவது,

எழுபது
எண்பது
தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

இதேபோல்,

எழுநூறு,
எண்ணூறு,
தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

இதேபோல்,

ஏழாயிரம்
எட்டாயிரம்
தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது.

இப்படியே, ஒவ்வொரு சொல்லாக இடம் பெயர்ந்து, பெரிய குழப்பத்தையே  உண்டாக்கிவிட்டது என்று நிறுவுகிறார் பதின்கவனகர் திரு. ராமையா”.


Monday, October 3, 2016

வண்ண வண்ணப் பூக்களூடே.....1.

நம்ம ஊரில இப்ப வசந்த காலம். பூக்களின் காலம். இளஞ்சூரிய சூட்டில் பச்சை புல்வெளிகளில் உட்கார்ந்திருக்கும் சின்ன சின்ன மழைத்துளிகள் வைர ஜாலம் காட்ட குளிரான தென்றல்காற்று வருடிச் செல்லும் காலைகளில் வண்ண வண்ணப் பூக்கள் சிரித்துக் கிடக்க கிளிகளும் குருவிகளும் தேன் குடித்துக் களிப்பது சிட்னியின் வசந்த கால அழகுகள்.

ஏராளமான பாதையோரத்து அழகுகளில் கை தொலைபேசி கிளிக்கியவை தான் இவை. இன்னும் ஏராளம் உண்டு. ஆனால், உங்களோடு பகிர இன்னொரு வண்ண வண்ண பூக்காடு உண்டு. அது புத்தகப் பூக்காட்டுக்குள் விரிந்த வண்ணங்கள். இதைத் தொடர்ந்து தனிப்பதிவாக அது வரும் விரைவில். இப்போதைக்கு கண்ணுக்கு இவை!



























Monday, September 26, 2016

நடனக் கலைஞன் சேரன்.....

உண்மைக்கு அதன் இயல்பே அழகு!

திறமைக்கு அலங்காரங்களும் கண்ணைப்பறிக்கும் நிறங்களும் தோற்றத்தை இனம் பிரித்துக் காட்டும் அங்க வஸ்திரங்களும் தேவை இல்லை.

நேற்றய தினம் ( 25.9.2016) சேரனின் நாட்டிய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

சேரன் - லண்டனில் பிறந்து சிட்னியில் கால்பதித்திருக்கும் இளந்தமிழன். இந்தியாவில் .....தம்பதியினரிடம் முறையாக நாட்டியம் பயின்றிருப்பவர். வருடம் ஒரு முறை மாத்திரம் நாட்டிய நிகழ்வு செய்பவர். அதில் வரும் அத்தனை பணத்தையும் அதே மன்றில் ஈழத்துப் போரில் மாற்றுத் திறனாளிகளாகி இருக்கும் உயிர்கள் நிமிர்ந்து மரியாதையோடு தாமாக இயங்க உதவியளித்து வரும் ’patch work' அமைப்புக்குக் கையளிப்பவர்.

எந்த ஒரு உன்னத படைப்பும் உடனே எந்த வித தாக்கத்தையும் தராது. அதன் ஏதோ ஒன்று ஆத்மாவில் சுவறி நாளாக நாளாக மெல்ல மெல்ல தன் குறிப்பிட்ட ஓரம்சத்தை நம்மில் வெளியிட்ட வண்ணம் இருக்கும்.

கடந்த வருடம் பரா மசாலா நிகழ்வில் இந்திய ‘கதக்’ கலைஞர் ஒருவரின் கதக் நடனத்தை முதன் முதலில் பார்த்தேன். உண்மைக்கு அலங்காரங்கள் தேவை இல்லை. அதன் இயல்பே அதன் அழகு என்பதை முதம் முதல் கலையூடாக புரிந்து கொண்டது அன்றைக்குத் தான்.

எந்த ஒரு அலங்காரங்களும் இல்லாத முழு வெள்ளை ஆடை. அங்கங்களை இனம்பிரித்துக் காட்டும் எந்த இயல்பும் அதில் இல்லை. உதட்டின் சிவப்பு சாயமும் உச்சம் தலையில் நெற்றிப்பட்டமும் தான் அலங்காரங்கள். சுமார் 1.30 மணி நேரம் அச் சிறு ஆனால் கச்சித நவீன அரங்கில் அவர் தனியாகவே ஆடினார். எந்த ஒரு உரையாடல் அறிமுகமும் கொடுக்காமல் அவர் முகத்தில் காட்டிய முகபாவங்களூடாக அன்பின் வலிமையை நேரடியாக அவர் பார்ப்பவர் ஆத்மாவில் பாய்ச்சி விட்டுச் சென்றது உயிருள்ளவரை என்னோடு இருக்கும். அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் வெள்ளைக் காரருக்கு. எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தது ஒரு நெகிழ்வூட்டிய நிகழ்வு!!

அதற்குப் பிறகு அதைப் போல ஒன்றை என் ஆத்மா அனுபவம் செய்தது நேற்றைக்கு!!

என் தமிழுக்கு போதாமை இருக்கிறது என்று இதை எழுதும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையாகவே என் மீது பரிவிரக்கம் கொள்கிறேன். மணலை அரித்து அரித்து தேவை அற்றவற்றை வெளியேற்றிய பிறகு தேங்கி நிற்கும் வைரக் கற்களைப் போல புற வயங்களில் நடந்த எல்லாம் வடிந்து போய் தேங்கி நிற்கும் கருக் கற்களை மாத்திரம் குறிப்பாக எடுத்துச் சொல்வதே இப்போதைக்கு இயலுமானதாக இருக்கிறது.

1. விநாயக வணக்கம்! விநாயகர் எழுந்து வந்து விட்டார். அவர் வந்து நடனமாடினால் இப்படித்தான் இருக்கும்.

2. நாட்டியத்தின் அடிப்படை அழகு! அலாரிப்பு

3. நவரசம்! சொந்தக் கலை படைப்பில் விளைந்த நவரச மணிகள்.

4.சிவதாண்டவ  ஸ்தோத்திரம் - தொன்மை சமயத்தின் வலிமை!! பண்பாட்டின் விழுமிய வேர்! மந்திர வலிமை...

5. ஆஞ்சநேய கெளத்துவம் - ஆஞ்ச நேய குண இயல்புகள் வெளிப்பட்ட ஒரு மனித உயிர்! ஆதன் குணங்களை வெளிப்படுத்தி ஒரு இலட்சிய மனிதனின் குண அழகு வெளிப்பட்ட அற்புதம்!!

6. பாடம் - பாரதியார் பாடல் - ஆசை முகம் மறந்து போச்சே... திறமைக்குக் - அதன் வலிமைக்கு - சேரன் கொடுத்த இடம்! கொடுத்த மேடை!! கொடுத்த நேரத் துளிகள். குரல் இசையை என்னவென்று சொல்வது...அதில் குழைந்து குழைந்து வந்த உணர்வினை உயிர் சித்திரம் எனலாமோ என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, குரலுக்கே அங்கு முதலிடம் கொடுத்து  நடனம் பின்னணியில் அமைந்ததை என்னவென்று சொல்வேன்?

பாரதி வரி ஒன்று இப்படிச் சொல்லும்,
‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
காசி நகர் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்
....”

இந்தக் கலைஞன் சேரன் அதை நிகழ்த்திக் காட்டினான் அரங்கில்...! சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்களை பரிசளித்து மகிழ்ந்தது நடனம். துலங்கி மிளிர்ந்திற்று ஓர் அறிவெழில் சுடர்! திறமையை தூக்கி நிறுத்தி பெருமை கொண்டது நடனம்!!

ஆண்மா அனுபவித்தது  ஒரு கவளம் அளவு தமிழம்!

7. சுவருக்குள்ளே....! இது தான் சேரன்.... கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற கைங்கரியம் அது!! முதலில் ஒரு வெள்ளைத் திரையில் நிழல் நடனம்! திரை மேலே செல்ல விரிகிறது மேடை. தெரிகிறது மேடை. செவ்வக எல்லை! எல்லைக்குள்ளே நடக்கிறது நடனம். எல்லைக்குள்ளே நின்றவாறு வெளியே எட்டி எட்டிப் பார்க்கிறது கால். சில வேளை கை...போகின்ற பொழுதுகளில் ஆச்சரியமாக அவலமாக ஏன் என்ற கேள்வியோடு பார்க்கிறது மற்றய நடனம். அவ்வப்போது எல்லையை வருடிப் பார்க்கிறது உள்ளம் / மனம்....அந்த விளிம்போடு அதன் இயல்போடு நிறையக் கேள்விகள் அதற்கு.  விளிம்பிலே தொங்கிய வாறும் கீழே போயும் மேலே போயும் எட்டி எட்டிப் பார்த்தும் பயந்த வாறும் ’வெளிப்புறத்தை’ ருசி பார்க்கிறது கொஞ்சம். பிறகு முழுவதுமாக செவ்வகத்துக்குள்ளே சரணடைகிறது. செவ்வக விளிம்பில் ஏறி நின்று புரிகிறது நெடும் சாகசம். அது சிலிர்க்க வைக்கும் சாகசம். (சமூகத்தை வியக்கும் சேரனின் கலை மிளிர்கிறது; சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது அதில்.)   ஒரு கட்டத்தில் முழுவதுமாக வெளியே வந்து விடுகிறது. கொஞ்சமாய் நடனமாடவும் செய்கிறது. பிறகும் விரும்பியும் விரும்பாமலும் செவ்வகத்துக்குள்ளே சென்று நடனமாடி முடிகிறது.

மீண்டும் வெள்ளைத் திரை கீழே இறங்குகின்றது. நிழல் நடனம் நடக்கிறது. திரை மூடப் படுகிறது.

வெளிநாட்டில் வாழும் சமூகத்தை; உள்ளூர இருக்கும் அதன் இயல்பை; திரை மறைவாக நடக்கும்  அதன் தடுமாற்றங்களை இதை விட அற்புதமாய் யார் காட்டி இருக்கக் கூடும்!! இது தான் கலை!! இது தான் கலையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லுதல் என்பது. இது தான் கலைஞத்துவம்!  உண்மை திறமையோடு கலந்து  கலையோடு சங்கமித்த காட்சி!! சமூக அக்கறையோடு சமூகத்தை சித்திரமாய் மனதில் பதித்த சாதனை! அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் தற்காலம்!!

இது தான் அனுபவம் செய்தலுக்கான இலட்சணம்!! இலக்கணம்!!

8. மங்களம். ஐம்பூதங்களுக்கும் வணக்கம்.

அழகு என்பது தோற்றத்திலும்; அலங்காரங்களிலும்; நிறங்களின் ஆர்ப்பாட்டங்களிலும்; அங்க அவயவங்களிலும் அல்ல; அழகு என்பது திறமை! அழகு என்பது அறிவு! அழகு என்பது திறமை எங்கெங்கு இருக்கிறதோ அவ்வவற்றைப் போற்றுதல்; அவ்வற்றுக்கு உகந்த இடம் அளித்தல் - இந்த நிகழ்வு முழுவதிலும்  ஆத்மாவாக நின்ற பொருள் இது தான். மக்களுக்கு சேரன் கொண்டு சென்ற கருத்து இவைதான். கலை வாகனத்தில் இக்கருத்து ஆவாகனம் செய்யப் பட்டிருந்தது!!

ஆத்மாவை ஆசுவாசம் செய்த கலை வெளிப்பாடு!!

ஆடை அலங்காரம் மிகஎளிமையான ஆனால் மிக மரியாதையான மரியாதை ஏற்படும் படியான வடிவமைப்பு! விரசத்துக்கும் கவர்ச்சிக்கும் நளினத்திற்கும் இடம் முற்றிலுமாக மறுக்கப் பட்டு அந்த இடம்  மரியாதை; உயர்ந்த பட்ச மதிப்பு என்பனவற்றால்  நிரம்பி இருந்தன.

கண்கள் பார்க்க வேண்டியதை அறிவின்; திறமையின் பால் திருப்பிய கைவண்ணம் அது!! - ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பால் திறமையைக் கண்டன கண்கள்!! திறமை ஒன்றையே கண்டன கண்கள்!!

அது பார்வையாளர்களை அவர்கள் பார்க்க வேண்டிய திசையை; கோணத்தை நோக்கித் திருப்பியதில் சேரன் கண்ட வெற்றி!

பின்னணி இசைக்கு மேடையில் அவர் கொடுத்த இடம். திறமைக்கு அவர் நடனக் கலை மண்டி இட்ட இடம் அது!

சேரன் நீ உயர்ந்த மனிதன் அப்பா!

கலையை இன்னொரு தளத்துக்கு உயர்த்தினாய் நீ!

கலைஞன் என்பவன் யார் என்று சொன்னாய் நீ!!

எளிய ஆத்மாக்களுக்கு ஒரு பெரும் பொக்கிஷத்தைப் பரிசளித்தாய்!!

உன் உயரத்துக்கு நம்மை இழுத்து வந்து இச் சிறிய ஆத்மாவுக்கு உயர்வளித்தாய்!! ஆத்மாவை ஆசுவாசித்தாய் அப்பனே!!

நீ வாழி!! நின் கலை நீடு வாழி!!



Wednesday, September 21, 2016

தாகூர்......ரவீந்திரநாத் தாகூர்....

ஒரு கலை வடிவம் - அது இலக்கியம், ஓவியம், நடனம், சிற்பம் என விரிகிறதே 64 ஆக! அவைகளில் எதுவாக இருந்தாலும் சரி அது அந் நாட்டுப் பண்பாட்டின் ஆத்மாவை; வேரை; ஆழ அகலத்தை அதன் பாரம்பரிய வழி வந்த உள்ளடக்கத்தை பிரதி பலிக்க வேண்டும்.

ஒரு மூன்றாம் கண்களுக்கு அதாவது அன்னியப் பண்பாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு முன்னால் படைக்கப் படுகின்ற ஒரு கலைப்படைப்பு அமானுஷமாக அப் படைப்பின் பண்பாடு தாங்கி வரும் விழுமியத்தை - அல்லது பண்பாட்டின் ஏதேனும் ஓரம்சத்தை - பண்பாட்டின் ஏதேனும் ஒரு  மூலக்கூறை அந்த மூன்றாம் கண்களின் ஆத்மானுபவத்திற்குக் கொண்டு சென்றிருக்க  வேண்டும்.

ஆஹா என்று அதைக் காண்கின்ற ஆத்மா உணர்ந்து வியக்க வேண்டும். அல்லது ஓ... என ஏங்க வேண்டும். அக் கலை அம்சம்  உலகில் பிறந்த எந்த ஒரு ஆத்மாவையும் பற்றி இழுத்து வந்து ‘இது தாம் நாம்’ என்று சொல்லும் ஓர்மத்தை; ( அது நன்றோ தீதோ - எந்த ஒரு அம்சம் பாடுபொருளாய் இருந்தாலும்);  வெளிப்படுத்தி நிற்கவேண்டும். தம் மண், பண்பாடு சார்ந்த சத்து இதுவென அது சொல்ல வேண்டும். அதுவே கலைப்படைப்பு என்பது என் அபிப்பிராயம்.

ஒரு கராட்டிக் கலை; குங்ஃபு கலை; அது - சண்டைக் கலையாய் இருந்த போதும் அதைப் பார்க்கிற கண்களுக்கு அந் நாட்டுப் பண்பாட்டின் விழுமியம் புரிந்து விடுகிறதே அது மாதிரி!

நேற்றய தினம் எனக்கு அப்படி ஒரு வங்காள மொழியின்  விழுமிய விஸ்தாரத்தை அறியும் வாய்ப்பு கிட்டியது. அது ரவீந்திரநாத் தாகூரின் கதைப்பாடல்கள் வடிவில் அமைந்த அவரின் பாடல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதனை து.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் தமிழ் படுத்தி இருக்கிறார்.(கவிதையில் கதைகள்; வங்காளியில் இருந்து தமிழாக்கம்;சு.கிருஷ்ண மூர்த்தி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,ஏப்பிரல் 2014; பக் 80 -83) (புத்தகம் கிட்டிய இடம் Black town library)

தாகூர் என்ற பெயரை அறிந்திருந்த போதும் முதல் முதல் இப்போது தான் ‘அவரைப்’ படிக்கிறேன். அவரை மொழிபெயர்ப்பினூடாக உள்வாங்குகின்ற போது கவிதையின் ஆத்மா சேதமடையவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கவிதைகளை நுகரும் போது  தாகூரின் மொழிவீச்சு எத்தகைய பண்பைக் கொண்டிருந்திருக்கும் என்பதை உணர முடிகிறதெனினும்; தமிழ் மொழிக்கு  அப்படியே அதனை அதன் அத்தனை அழகும் கெடாமல் சொல்லக் கூடிய ஆற்றல் இருந்த போதும் ;அதை பெயர்த்தவருக்கு இன்னும் தமிழ் வசப்பட்டிருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.




தாகூரின் மொழி நடை வள்ளலாரினதைப் போல; தேசியவிநாயகம் பிள்ளையினதைப் போல, மறைமலை அடிகளினதைப் போலானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மொழிபெயர்த்தவர் அத்தகைய மொழி அழகை பெயர்த்து வரவில்லை. அது எனக்கு பெரிய குறையாகவும்; கோபத்தைத் தருவதாகவும் இருந்தது. ஒரு மாபெரும் கவிஞனை; நோபல் பரிசு பெற்ற விற்பன்னனை; தன் மொழிக்கு அழைத்து வரும் போது அதற்கான தகுதியும் திறமையும் கொண்டு வருபவருக்கு இருக்க வேண்டும். சும்மா ஏனோ தானோ என்று அதைச் செய்யக் கூடாது. இரு மொழிகளிலும் ஆளுமையும், இலக்கிய அறிவும், மொழிப்புலமையும், தார்மீகப் பொறுப்பும், ஈடுபாடும் இருக்க வேண்டியதோடு அதில் திளைத்துத் திளைத்து தான் பெற்ற இன்பத்தை; அனுபவத்தை அதன் ஆத்ம சங்கீதத்திற்கு பழுது வரா வண்னம் தமிழைக் குழைத்து குழைத்து திருத்தி திருத்தி தமிழால் எழிலாக்கி அதைத் தரவேண்டும். அதற்கு அதைச் செய்பவருக்கு மேற்கூறியவற்றோடு ரசனை உணர்வு கொண்ட மனத் தகுதியும் வாய்க்க வேண்டும். இவைகள் மொழிபெயர்ப்பாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள். வியாபாரம் ஆகி விட்டது சூழலும் வாழ்வும். நம் பாரதியை வேறொரு மொழி இப்படி சந்திக்கிழுத்துக் கொண்டு போனால் எமக்கு என்னமாய் கோபம் வரும்!வண்ணாத்துப் பூச்சியை கயிறுகட்டி யாரும் இழுத்து வருவதுண்டோ?

ஒரு இறகின் வருடலைப் போல; கழுவி விட்டுப் போன கடற்கரை மணலில் மெல்ல வந்து கால் நனைத்துப் போகும் கரையோர நீர் போல; அந்தக் கவிதைகளுக்கு இயல்புண்டு. சட்டென வந்து கரங்களில் குந்தி விட்டுப் போகும் வண்ணாத்துப் பூச்சியின் பாஷை அது! ஆனால் அது இயற்கையின் செல்லச் சீண்டல் அல்ல; மாறாக சிந்தனைக்குத் தரும் ஒரு தேன் துளி!அவைகள் கவிதைகள் அல்ல; பாடல்கள்! சங்கீதம்!!. மனதுக்கு இதம் தரும் ; சிந்தனையில் மெத்தெனப் படியும் ; ஆத்மாவை வருடும் பாடல்கள் அவை!

சரி அது நிற்க, மொழிபெயர்க்கப் பட்ட பாடலில் உள்ள ஆத்மாவை - கருவை எடுத்துக் கொண்டு எவ்வாறு இப்பெருங் கவிஞன் தாகூர் அதைத் தந்திருக்கக் கூடும் என்ற உணர்ந்து சில சொல் மாற்றங்கள் செய்து அதன் ஒரு கவிதையை பகிர ஆவல். (”கவிதையில் கதைகள்” என்று சொன்ன தலைப்பை ”கதைப் பாடல்கள்” என்று சொல்லலாம் என்பது போல) ஆனால் அதற்கு முன் திரு கிருஷ்ணமூர்த்தி கொணர்ந்த கவிதைப் பாடலை அப்படியே தருகிறேன்..

பழைய வேலைக்காரன்

பூதம் மாதிரி அவனுருவம், புத்தியிலும் மிக மட்டம்.
பொருளேதும் தொலைந்தால் வீட்டுக்காரி சொல்வாள்,
‘திருடன் கேஷ்டாவின் வேலை தான்.’
நானெப்போதும் திட்டிக் கொண்டிருப்பேன்
எதுவும் அவன் காதில் விழாது.
பணத்தை விட அதிகம் பிரம்படி பெறுவான்
அப்படியும் அவனுக்குப் புத்தி வராது
தேவைக்காக மீண்டும் அழைப்பேன்
கேஷ்டா, கேஷ்டா என்று கூவுவேன்
என் தொண்டை காய்ந்தாலும் வர மாட்டான்
ஊர் பூராவும் தேடுவேன் அவனை
மூன்று கொடுத்தால் ஒன்று தான் இருக்கும்
மீதி இரண்டும் எங்கே என்றறியான்
ஒன்றைக் கொடுத்தால் கண நேரத்தில்
மூன்றாய் உடைத்துக் கொண்டு வருவான்
எங்கே ஆனாலும் எவ் வேளையிலும்
உறக்கம் அவனுக்கு வரப் பிரசாதம்
கழுதை, முட்டாள், உதவாக்கரை
என்று நான் அவனை உரக்கத் திட்டினால்
கதவருகே நின்று கொண்டு சிரிப்பான்
அவனைப் பார்க்க எனக்கு எரிச்சல் மூளும்
எனினும் அவனை துறக்க மனமில்லை
மிகவும் பழைய சேவகன் கேஷ்டா.

வீட்டுக்காரி காளியாகிக் கத்துவாள்
இனிப்பொறுக்க முடியாது என்னால்
வீட்டில் நீங்களே இருந்து கொள்ளுங்கள்
கேஷ்டாவைக் கூட வைத்துக் கொண்டு
அவன் யாருக்கும் அடங்குவதில்லை
துணிமணி பாத்திரம் உணவுப் பொருள்கள்
போகுமிடம் தெரியவில்லை
பணம் மட்டும் போகிறது தண்ணீராய்
கடைக்கு அனுப்பினால்
நாள் முழுதும் ஆளைக் காணோம்
கேஷ்டாவைத் தவிர வேறொரு சேவகன்
கிடைக்க மாட்டானா முயற்சி செய்தால்?
கடுஞ்சினம் கொண்டு நானும் சென்று
அவன் குடுமியைப் பிடித்து இழுத்து வந்து
‘தடியா, உனக்கினி வேலை இல்லை
தொலைந்து போ உடனே’ என்பேன்
தயங்கித் தயங்கியவாறு போவான்
‘சனியன் ஒழிந்தது என்றே நினைப்பேன்.
மறுநாள் நான் கண் விழிக்கும் போது
கையில் ஹூக்காவுடன் முன்னே நிற்பான்
அவனது முகம் மலர்ந்தே இருக்கும்
வருத்தத்தின் நிழல் கூட இராது
விரட்டினாலும் போக மாட்டான்
என் பழைய வேலைக்காரன்

அந்த ஆண்டு சிறிது உபரிப்பணம் கிடைத்தது
நான் செய்து வந்த தரகுத் தொழிலில்
முடிவு செய்தேன் அப்பணத்தில்
பிருந்தாவனத்திற்கு யாத்திரை செய்ய
மனைவியும் கூட வர ஆசைப்பட்டாள்
நான் அவளுக்கு விளக்கிச் சொன்னேன்
அவள் வந்தால் அதிக செலவு
என் புண்ணியத்தில் பாதி அவளுக்கு
பயணத்திற்கான பொருள்கள் சேர்த்து
மூட்டை முடிச்சுகள் கட்டி வைத்து
கைவளையல்கள் ஒலிக்க
மனைவி சொன்னாள் அழுது கொண்டு
‘வெளியூரில் கேஷ்டாவோடு
நீங்கள் கஷ்டப்படுவீர்கள் மிகவும்’
ஐயோ கேஷ்டா வேண்டாம்
நிவாரண் வரட்டும் என்றேன்
ரயில் வண்டி விரைந்து சென்றது
வர்த்தமான் நிலையத்தில் பார்க்கிறேன்
கேஷ்டா அமைதியே உருவாக
ஹூக்கா எடுத்து வருகிறான் எனக்கு
அவனை எவ்வளவு கடிந்து கொண்டாலும்
பழைய சேவகனைக்கண்டு மகிழ்ச்சி தான் எனக்கு
பிருந்தாவனம் போய் இறங்கினேன்
வலமும் இடமும் முன்னும் பின்னும்
பண்டாக்கள் வந்து சூழ்ந்து கொண்டார்
தாங்க முடியாமல் தொந்தரவு செய்தார்
ஆறு ஏழு பேர் ஒன்றாய் சேர்ந்து
ஒரு வீடு அமர்த்திக் கொண்டோம்
இனி சுகமாய் கழியும் போது
கவலை இல்லை என்று நினைத்தேன்

ஆனால், கோபிகை எங்கே, வனமாலை எங்கே?
வன மாலை அணிந்த கண்ணன் எங்கே?
எங்கே முடிவுற்ற வசந்த காலம்?
எனக்கு வைசூரி கண்டது
என் கூட்டாளிகள் எல்லோரும்
வீட்டில் இருந்து மறைந்தார் கனவு போல்
நான் தனியனாகி விட்டேன்
என் உடம்பெல்லாம் ரணமாயிற்று
மெலிந்த குரலில் இரவும் பகலும்
கேஷ்டாவை அருகழைத்து உரைத்தேன்
‘இவ்வளவு காலங்கழித்து
வெளியூர் வந்து சாகப் போகிறேன்’
அவனைப் பார்த்து என் நெஞ்சு நிறைந்தது
அவன் எனக்கொரு செல்வம் போல
இரவும் பகலும் என்னுடன் இருந்தான்
கேஷ்டா, என் பழைய சேவகன்

குடிக்க நீர் கொடுப்பான் குசலம் கேட்பான்
என் கையை எடுத்து தன் தலை மேல் வைப்பான்
அமைதியாய் நிற்பான் உறக்கமின்றி
உணவை முற்றும் ஒதுக்கி விட்டான்
அடிக்கடி சொல்வான், ’ஐயா
நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம்
திரும்புவீர் நீங்கள் பத்திரமாக
எசமானி அம்மாளைப் பார்ப்பீர் திண்ணம்’

நான் நோய் தீர்ந்து எழுந்தேன்
காச்சல் அவனைப் பிடித்துக் கொண்டது
என்னை வருத்திய நோய் தன்னை
தானே ஏற்றுக் கொண்டான் போலும்!
இரண்டு நாள் நினைவின்றிக் கிடந்தான்
நாடி இறங்கத் தொடங்கி விட்டது
இது காறும் அவனை விரட்டி வந்தேன்
இப்போது அவனே விலகிக் கொண்டான்
பல நாள் பிறகு திரும்பினேன் வீடு
புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு
ஆனால் என்கூட இல்லை இன்று
என் நெடுநாள் தோழன், பழைய சேவகன்!
(புரதன் ப்ருத்ய)

பாரதியாரும் சேவகனைப் பாடியிருக்கிறார்.  எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ..... என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?

அப்பாடலையும் இங்கு தரவே விருப்பம். ஆனால் அது மிக நீண்ட பாடல். பல வரிகளை நறுக்கி விட்டு சினிமாவில் அது வேறு விதமாய் ஒலிக்கும். அவசரப்படுபவர்கள் யூரியூப்பில் கேழுங்கள். முடிந்தவர்கள் பாரதி பாடல்களில் முழு வரிகளையும் முகருங்கள். வாசத்தில் திளையுங்கள்.

அவற்றை அனுபவம் செய்வீர்களாக!

அனுபவம் செய்தல் என்பது காணும் அனுபவத்தில் இருந்து வேறு பட்டது. உடல் சார்ந்த புலன்களின் இருந்து உயர்ந்து ஆத்மா அதை உணர்வது. அது கண் என்ற பாதையூடாக ஆத்மாவுக்குக் அவ் உணர்வை பணிவோடு ஏந்தி வந்து கொடுக்கும்.  இனி அது எங்கேயும் போகாது அங்கேயே ஒன்றாகி விடும். நிலையாக! உங்களோடு கூடவே வரும். எப்போதும்! அது பின்னர் உங்கள் அன்றாட வாழ்வில் பிரதி பலிக்க ஆரம்பிக்கும். தோற்றத்தைக் கூட சில வேளைகளில் மாற்றி அமைத்து விடும். கூடவே ஆத்மாவோடு பயணம் செய்யும் அது பிறவிகள் தோறும் பிறவிகள் தோறும் கூட ; கூட வரும்.....

இப்போது இரண்டு சேவகர்களினதும் ‘அழகு’ தெரிகிறதா? இரு  இனத்தினுடய துமான பண்பாட்டின் சாயல் இக்கவிதைகளில் புலப்படுகிறதா?

அறிய ஆவல்..... 

Sunday, September 11, 2016

பார்வைகள்....






பார்வைகள்....

ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் பார்க்கிற விதங்களில் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கண்களில் தான் எத்தனை விதமான பார்வைகள்....

அண்மையில் ஒரு பொழுது போக்கு வணிக சஞ்சிகை ஒன்றில் (16.5.15 குங்குமம்) ஆல்தோட்ட பூபதியின் குட்டிச் சுவர் சிந்தனை இப்படிப் போயிருந்தது. ‘ கருணை அருளும் கடவுள்தான் என்றாலும் கையில் வேல் வைத்திருப்பது போல,வீட்டின் பாதுகாப்புக்குத் தான் கதவு என்றாலும் அதில் பூட்டுத் தொங்குவது போல, இடுப்பில் இறுக்கமாய் ஜீன்ஸ் இருந்தும் அதில் பெல்ட் இருப்பது போல, பள்ளிக் கூடப் பேருந்துகளில் கம்பி இருந்தும் அதற்கு வெளியே கம்பி வலை இருப்பதைப் போல, காவல் நிலையம் என்றாலும் கண்காணிப்புக் கமரா இருப்பதைப் போல, பிணக்கிடங்குக்கு முன் காவல் காக்கும் வாட்ச்மன் போல, சாவி போட்டுத் தான் ஸ்ராட் செய்ய முடியும் என்றாலும் சென்றல் லொக்கிங் இருப்பதைப் போல, கடவுள் படங்களுக்குக் கண்ணாடிச் சட்டம் இருப்பதைப் போல, புத்தி சாலி என்றாலும் படித்துப் பெற்ற பட்டம் போல, மருத்துவ மனைக்கு முன்னால் இருக்கும் பிள்ளையார் சிலை போல,அன்பு மட்டுமே மொழி என்றாலும் அவ்வப்போது வரும் அம்மாவின் அதட்டல் போல......

எப்பிடி எல்லாம் பாக்கிறாங்கப்பா.....

கடந்த வார நடுப்பகுதியில் என் வேலைத்தலத்து கம்போடிய நாட்டுச் சினேகிதி ஒருத்தி மிக ஆர்வமாக ஓடி வந்து தன் முகப்புத்தகத்தில் தான் ஒரு இந்தியரை இணைத்திருப்பதாகவும் அவர் போடும் இந்து சமயச் சுவாமிப்படங்கள் மிக அருமையாக இருக்கிறதென்றும் இந்தச் சுவாமிகளை எல்லாம் உனக்குத் தெரியுமா? இப் பெண் சுவாமிகள் எத்தனை அழகாய் இருக்கின்றன பார்த்தாயா என மிக ஆர்வமாகக் காட்டினாள்.

மிக அழகாய் தான் இருந்தன.

கூடவே அவள் காட்டிக் கொண்டு போன போது சிவலிங்க படங்களும் வந்தன. தம் அங்கோர்வாட் கோயிலில் இத்தகைய சிற்பங்கள்  இருப்பதாகவும் அவற்றை தாம் லிங்கா, யோனி என அழைப்பதாகவும் சொன்ன போது நாமும் அவ்வாறு அழைப்பதுண்டு என்றேன்.

உரையாடல் பின்னர் சொற்கள் பற்றியும் அது கூறும் கருத்துக்கள் பற்றியதுமாகத் திரும்பியது. அச் சிவலிங்க ‘புருஷ பிராகிருதி’ தத்துவம் பற்றி சொன்ன போது மிக ஆர்வமாகக் கேட்டு அதையே தான்  அங்கோர்வாட் கோயிலுக்குப் போன போது கைட்டும் சொன்னதாக மிக ஆச்சரியப் பட்டாள்.

பின்னர் அவ் உரையாடல் ஒரு புன்னகையோடு முடிவுக்கு வந்தது.

மறு நாள் என்னைக் கண்ட போது  கண்களில் ஆர்வம் கொப்பளிக்க ஓடோடி வந்து, இந்து சமயத்தின் சிவலிங்க வணக்க முறையையும் படத்தையும் அதன் தத்துவார்த்த விளக்கத்தையும் தன் அவுஸ்திரேலியக் காதலனுக்கு விளக்கிக் கூறியதாகவும் அவர் மிக ஆச்சரியப் பட்டுப் போனதாகவும்கூறி, ‘இது நல்ல மொடேர்னான சமயமாய் இருக்கும் போலிருக்கு’ என்று சொன்னதாகவும் சொல்லி போனாள். சிற்றின்பமே வாழ்வின் உன்னத இலட்சியமாய் இருப்போருக்கு அது மேலான சமயமாய் இருப்பதில் வியப்பேது?

பார்க்கிற பார்வைகள்......

இந்தச் சம்பாசனையை என் இலக்கிய நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் தனக்கேற்பட்ட அனுபவத்தை இப்படிச் சொன்னார். அவர் தான் குடும்பத்தோடு நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்ற போது அங்கு வந்திருந்த இஸ்லாமியக் குடும்பத்தவர் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் இருக்கும் தலத்தின் முற்றலில் அதன் காரண விபரணங்களை அக்கறையோடு கேட்டு விட்டு ‘இவரும் நம்மளப் போல நம்ம சமயம் சொல்லுறதத் தான் செய்யிறாரு’ என்றாராம்.

பார்க்கிற பார்வைகள்......

கூடவே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயங்கள் சம்பந்தமான உரையாடலின் போது என்னை ‘உலகத்தின் மிகப் பழைமையான சமயம் (இந்து சமயம்) எனதென்றும்; இவர்கள் குரங்கு, (ஆஞ்சநேயர்) மாடு, யானை இவைகளை எல்லாம் இன்றும் வழிபடுகிறார்கள் என்று அறிமுகப் படுத்தியமையும் நினைவுக்கு வந்தது.

பார்க்கிற பார்வைகள்.....