Friday, December 30, 2022

The Great Lifco Dictionary

 



வெகு அபூர்வமாக நான் வைத்திருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று இந்த லிஃகோ அகராதி.1952 ம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்டு 1999ம் பதிப்பாக பதிவேறி 2002ம் ஆண்டு என்னை வந்தடைந்தது அது.

The Little Flower Company இந்திய ரூபாய்கள் 160 க்கு அப்போது இதனை விற்பனை செய்திருக்கிறது. மொத்தமான துணியினால் ஒட்டி அக்கறையோடு பைண்ட் செய்யப்பட்ட இந்த அகராதி “ suggestions for the improvement of this book or corrections will be gratefully welcome by the publishers - whose main aim is accuracy and service" என்ற முன்பக்க பதாகையோடு ஆங்கில; ஆங்கில; தமிழ் மொழி வளத்தோடு அமைந்திருக்கிறது.

இன்று எத்தனையோ விதமான அகராதிகள், online செயலிகள், கூகுள் translation என்று எத்தனையோ இலகுவாகவும் உடனடியாகவும் சுலபமாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டதால் உலக மொழிகளையே நொடிப்பொழுதில் மொழிமாற்றம் செய்யும் வசதிகளை நாம் கண்டடைந்து விட்டோம். 

இருந்த போதும் நேற்றய தினம் வருட இறுதியிலேனும் புத்தகத்தட்டைத் தூசி தட்டும் நிமித்தமாக இதனை வெளியே எடுத்துப் புரட்டிப் பார்த்த போது தான் அது எத்தனை சிரத்தையோடும் தகவல்களோடும் எக்காலத்திற்கும் பொருந்தி காலத்தை வென்று நிற்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காண முடிந்தது.  

அது மொழிபெயர்ப்பை மட்டும் செய்யவில்லை. தமிழோடு தமிழ் தகவல்கள், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என சகலவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஒரு சொல்லை எழுதும் போது அதற்கு எழுத்துகள் எவ்வாறாக அவற்றோடு இணைகின்றன, அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்ற தகவல், எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதற்கான விபரமான குறிப்புகளை ஒரு புறம் தருகிறது. 

ஒரு வசனம் அமைக்கும் போது பயன்படுத்த வேண்டிய குறியீடுகள்; அவை எங்கெங்கெல்லாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் உள்ளது. எப்போதும் ஒற்றுமையில் அமைந்துள்ள சொற்கள், எப்போதும் பன்மையிலேயே காணப்படும் ஆங்கிலச் சொற்கள், எப்போதும் சோடிகளாக வரும் சொற்கள், சிறப்புப் பாவனைக்குரிய சொற்கள் என இவை போன்றவை தனியாக இனங்காட்டப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் எத்துணை முக்கியமானது என்பது பற்றி லிஃகோ The Little Flower company எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று அது தன் தேசத்து மக்களை; இளைய சமுதாயத்தினரை எத்தனை அக்கறையோடு நேசிக்கிறது என்பதைப் பறை சாற்றுகிறது. ’We are interested not only in making you pass the examination, but also in shaping your mind and character’ என்று சொல்லும் அது தேசத்து இளைய சமுதாயத்துக்குக் கூறும் அறிவுரை மகத்தானதாக இருக்கிறது. அது பற்றி எல்லாம் எழுதப் புகுந்தால் இந்தப் பதிவே ஒரு அகராதி போலாகி விடும் என்பதால் கீழ் வரும் அவர்களின் வசனங்களோடு இதனை நிறுத்திக் கொள்கிறேன். ” We are proud to diclare that during the fifty years of our service to the student world, we have contributed our mite to elevate sons and daughters of india to be worthy citizens, by giving them sound and timely advice. many of our elders, we are sure, will tell you of this aspect of our service.

ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்றுக் கொள்வதற்கான அறிவுரைகளில் இருந்து நோபல் பரிசு பெற்றோரின் விபரங்கள், சுதந்திரமடைந்த உலகநாடுகளின் விபரங்கள், உலக நாடுகளின் பாராளுமன்றங்களின் பெயர்கள், உலகத்தில் பிரபலமானவை, உலக நாடுகளின் நேர வித்தியாசங்கள், அளவை முறைகள், புத்தக அளவுகள், கணித குறியீடுகள், விதிமுறைகள், சொற்களின் மூலம் எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள், சொற்களும் அதற்கான ஒலிஅமைப்புகளும் பற்றிய தகவல்கள், சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் வாசிக்கும் முறைமை பற்றிய தகவல்கள், வாழ்த்துக்கள் / முகமன் கூறும் முறைகள், மற்றும் நேரங்கள், ஒருவரை விழித்து அழைக்கும் பாணிகள், கடிதம் எழுதும் முறை, சில லத்தீன் சொல்லாடல்கள், உணவருந்தும் நேரங்களில் உணவு வகைமுறைகளுக்குப் பாவிக்கப்படும் சொல்லாடல்கள், ஷேக்ஸ்பியரின் 150 சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள், விஞ்ஞான விதிமுறை மற்றும் சொற்களுக்கான விளக்கங்கள், சில முக்கிய பத்திரிகைத் துணுக்குச் செய்திகள், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சொற் தொகுதிகள் என்று அது ஒரு வாழ்க்கைக் களஞ்சியமாகவே விளங்குகிறது. அவர்கள் உண்மையாகவே  ’shaping your mind and characte’. ஆங்கிலேயப் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கூட அவர்கள் இந்த அகராதி வழியாக இந்தியத் தமிழர்களுக்கு ஊட்டி விட்டிருக்கிறார்கள்.

இனி தமிழ் மொழியில் இருக்கும் சிறப்புகளையும் அழகுகளையும் தொகுத்திருக்கும் முறைடோ இன்னும் அழகாக இருக்கிறது. தமிழ் இலக்கண அணிகள், உருபுகளுக்கான ஆங்கில பெயர்கள், வழக்கமாக உரையாடல்களில் இடம் பெறும் சிறப்புத் தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இருப்பிட பாகங்களின் பெயர்கள், அன்றாடப் தமிழரின் பாவனைப் பொருள்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இடப்பெயர்கள், பலசரக்குப் பொருட்கள், நோய்கள், தானியங்களின் பெயர்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள், பூக்களின் பெயர்கள், வேலைகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன  மற்றும் மிருகங்களின் பெயர் அட்டவணை, ஜந்துக்களின் இரைச்சல்களின் பெயர்கள், கூட்டுப் பெயர்கள், நவரத்தினங்கள், ராசிகள், கிரகங்கள், மிருகக் குழந்தைகளின் பெயர்கள்,கணிதம், பல விதமான தமிழ் ஆங்கிலப் பழமொழிகள், எனப் பெருகிக் கிடக்கிறது விபரங்கள். கூடவே, விஞ்ஞான,பெளதீக, தாவர, உடலியல், இரசாயண,கணித, வரலாற்று, புவியியல், வர்த்தகம், அரசியல் சார்ந்த சொற்கள், என அறிவியல், தமிழ் கலாசாரத்தின் அம்சங்களையும் அது கொண்டிருக்கிறது.

6.9.1967ம் ஆண்டு டொக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு சொன்ன செய்தி ஒன்று இவ்வாறாகப் பதிவாகி இருக்கிறது. ‘The teachers should set an example to the puples by their behaviour....We should develop the habits of self - scrutiny and self- discipline......If proper attitudes are developed in our youth, we will certainly have a better future for our country'

கூடவே, வாசகர்களுக்கென சில முன்னைய கால இந்திய ஆண்மீக வாதிகளின் உன்னதமான பொன்மொழிகளைக் கட்டம் போட்டும் சொல்லி இருக்கும் இந்த அகராதி வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கான உந்து சக்தியையும் ஊக்க மருந்தையும் கூட அதன் வழியாகக் கொடுத்திருக்கிறது.

 மொழிபெயர்ப்புகளை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விரிவான தகவல்கள் மேலும் உபயோகமாக இருக்கிறது. முடிந்தால் அது பற்றி தனிப் பதிவாகவே எழுதத் தக்க அளவுக்கு அதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன.

 ஆங்கில; தமிழ் மொழிகளை மட்டுமல்லாது அவற்றின் இயல்புகளையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் தன்னுள்ளே பொதித்து ஒரு வாழ்க்கைச் சுரங்கமாக அமைந்திருக்கிறது இந்த அகராதி.

எத்தனை செயலிகள் வந்தாலென்ன; எத்தனை சுகமாக அவை நம் விரல்களை வந்தடைந்தாலென்ன; இந்த லிஃகோ அகராதியை கையில் வைத்திருக்கும் போது ஒரு  வாழ்வியலையும் பண்பாட்டையும் வைத்திருப்பது போன்ற உணர்வு மட்டுமல்ல; பொதுநலமும், நாட்டு நலமும், சமூக நலமும், இளஞ்சமுதாயத்தினர் மீதான அக்கறையும் ஆதூரமும், மகத்தான  நாட்டுப்பற்றும், சேவை மனப்பண்மையும் கொண்ட ஒரு மனித கூட்டத்தின் மிகப்பெரும் மனங்களையும் பெரும் பேறினையும் கையில் தாங்கியிருப்பதைப் போல ஓர் எண்ணம்.

Hats Off to you guys!

உங்களாலேயும் தான் பாரதம் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது!! 

அதன் அறம் சார்ந்த ஆத்மா இப்படியான தேசபக்தர்களாலும் தான் தூக்கி நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

....

ஒரு குழந்தையை மடியில் கிடத்தியிருப்பதைப் போல ஒரு பண்பாட்டுப் பெட்டகத்தை என் மடியில் பெருமையோடு ஏந்தியிருக்கிறேன்.!

வாழ்க பாரத சமுதாயம்!! வாழ்க இனிது வாழ்கவே!!

Tuesday, December 27, 2022

ஆடு நாற்காலி - Rocking chair - அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 5 -







( முன்னும் பின்னும் அசைய வல்லதாகவும் அதே நேரம் பயமில்லாமல் பாதுகாப்பாகவும் முதுகு நிமிர்ந்திருக்கத் தக்கவாறு ஆடும் படியாகவும் அமைக்கப்பட்டுள்ள ஆடு நாற்காலி இது.)



( மிகவும் பலமாக ஆடும் வகையில் அமைந்துள்ள ஆடு நாற்காலிகள் மேலே உள்ள இவை.)

 நாற்காலிகள் பலதரப்பட்டவை. எனினும் அவற்றில் சோம்பேறி நாற்காலிகள் என்றழைக்கப்படுபவை சற்று வித்தியாசமானவை. Easy chair என்றழைக்கப்படும் துணி பொருத்தப்பட்டிருக்கும் வகையின நம் ஊர்களில் பரவலாக உபயோகத்தில் இருப்பவை.

நம் ஊர்களில் இன்னுமொருவிதமான சாய்வு நாற்காலிகள் உள்ளன. அவை மூங்கில் இழைகளினால் பின்னப்படுபவை.  அகலமானவையாகவும் சாய்ந்து படுக்கத் தக்கவையாகவும் இரு கைப்பிடிச்  சட்டங்களும் மடித்து மூடத்தக்க வகையிலும் அமைந்துள்ளவை. 

இந்திய மக்களால் உபயோகப்படுத்தப்படுபவை இன்னும் சற்று வேறுபட்ட பாங்கில் அமைந்தவை. ஆடு நாற்காலிகளுக்குப் பதிலாக அவர்களின் அக்கிரஹாரங்களிலும் வீட்டு நடுவிலும் ஊஞ்சல்கள் வீடுகளுக்கு தனிக் கம்பீரத்தை வழங்கி வந்தன.

சிங்கள மக்கள் அதனை வேறுவிதமாக செய்து பாவிப்பார்கள்.அவை மிகுந்த கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும். ஆனாலும் இவைகள் எல்லாம் அவுஸ்திரேலிய ஆடுநாற்காலிகளை விட பலவிதத்திலும் மாறுபட்டவை. சீதோஷன நிலைக்கும் கிடைக்கும் மூலப்பொருட்களுக்கும் கற்பனை வளத்திற்கும் ஏற்ப அவை மாறுபடுபவை.

இப்போதெல்லாம் அவுஸ்திரேலியாவில் பாரம்பரியமாக மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் இருக்கும் வகைகளினாலான ஆடுநாற்காலிகளைக் காண்பதரிது. இப்போது புழக்கத்தில் உள்ள இத்தகைய படத்தில் காட்டப்பட்டுள்ள ஆடு நாற்காலிகள் எல்லாம் சுமார் 60 / 70 வருடங்கள் பழமையானவை என்பது என் அனுமானம்.

இப்போதும் பாவனைக்குகந்ததாக இருக்கும் அவைகளின் செய்நேர்த்தியும் காத்திரத்தன்மையும் மரத் தெரிவும் அதனைப் பாவித்து வரும் மக்களிடம் காணப்படும் கவனமாகப் பாவிக்கும் தன்மையுமே அவற்றை இன்னும் பாவனைக்குகந்தவையாக இருக்க முக்கிய காரணமாகும்.

இவற்றைப் பாவித்து வந்த மக்கள் காலமாகி விட பழங்கடைகளைத் தேடி மறுவாழ்வுக்காக வந்திருக்கும் இத்தகைய நாற்காலிகள் இனி வாங்குபவர்களின் மனநிலைக்கேற்ப தம் வாழ்வை கொண்டிருக்கும். இவற்றின் காலம் காலாவதியாகிப் போன பின்னால் இவற்றைக் காண்பதும் அரிதாகி விடும்.

ஒரு காலகட்டத்தின் வாழ்வும் பண்பாடும் கூட அதனோடு மறைந்து போய் விடும் என்பது தான் அதிலுள்ள பெரும் சோகம்!

அப்படியென்றால் இப்போது எப்படியான சாய்வு நாற்காலிகள் / ஆடு நாற்காலிகளை இன்றய மக்கள் பாவிக்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இன்றய காலங்களில் சொகுசு மெத்தைகளாலும் உலோகங்களாலும் செய்யப்படும் recliner chair கள் தான் பரவலான பாவனையில் உள்ளன.

மீசைக் காவலன் - Moustache Guard - அவுஸ்திரேலிய பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 4 -

 சில வருடங்களுக்கு முன்னால் ‘மீசைக்கரண்டி’ என்பது பற்றி என் பிரிய தோழி கீதா ஒரு பதிவு போட்டிருந்தார். மேசைக்கரண்டி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன மீசைக்கரண்டி என்று கேட்கிறீர்களா?

ஆங்கிலேயர்கள் சூப் குடிக்கும் போது மீசை இடைஞ்சலாய் இல்லாமல் இருப்பதற்காகவும் அதே நேரம் சூப்பில் நனையாமல் மீசையைப் பாதுகாப்பதற்காகவும் விசேடமாக தயாரிக்கப்பட்ட கரண்டி தான் அது. அந்தக் கரண்டி தான் கீழே காட்டப்பட்டிருக்கிற ஒளிப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

இம் மீசை மறி கரண்டிகளில் நடுவில் இருக்கும் பகுதி மீசையை நனையாமல் பாதுகாக்கும் அதே நேரம் கீழே இருக்கும் பகுதியினால் திரவ பதார்த்தத்தைக் குடிக்க இந்த மீசை மறி கரண்டிகள் உதவின.

அது போன்றது தான் இந்த Moustache Guard என்று சொல்லப்படுகிற கீழே காட்டப்பட்டிருக்கிற இச் சிறு சாதனம்.

தேவைப்படும் போது பொருத்தவும் நீக்கவும் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு செல்லவும் ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது இச் சாதனம்.

ஆங்கிலேயர்களிடம் ஒரு விதமான தரத்தை பேணும் நேர்த்தியும்; நுட்பமான சிந்தனைத் திறனும்; அழகுணர்ச்சியும், வாழ்க்கையை அனுபவிக்கும் இயல்பும் சற்று ஏனைய இனத்தவரை விட அதிகமாக இருக்கிறதோ என்று எனக்கு எண்ணத் தோன்றும்.

அவர்கள் தேநீர் அருந்துவதாக இருந்தால் கூட தேநீரின் தரத்தில் மட்டும் அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. அதனை பருகும் பாத்திரமும் அழகியல் நிரம்பியதாக இருக்கும். அவர்களுக்கு அதனைக் குடிப்பதென்பது ஒரு திருவிழா போன்ற இன்பம் பயப்பது. தயாரிக்கப்பட்ட தேனீராக அதனை அவர்கள் அருந்துவதில்லை. தனித்தனியாக எல்லாவற்றையும் எடுத்து வைத்து தத்தம் சுவைக்கேற்ப தாமே அதனைத் தயாரித்துக் கொள்வார்கள்.

கேத்தல், சீனி, பால் வைக்கும் பாத்திரங்கள், அவைகளை வைக்கும் மேசை, அதன் விரிப்புகள், கதிரை எல்லாமே அழகியலோடு இசைந்தவாறிருக்கும். அதனை; அந்த அழகியலை அனுபவித்தவாறே ஆறுதலாக ஒவ்வொரு சொட்டையும் அனுபவித்து அருந்துவார்கள். ( நம் நாட்டையே அதற்காகத் தானே கைப்பற்றிக் கொண்டார்கள்) 

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு சொட்டையும் அனுபவிக்கத் தெரிந்தவர்கள் தமக்கு இடைஞ்சலாக இருக்கும் தம் அழகு மீசைகளுக்கு ஒரு வழி கண்டுபிடிக்காமலா இருந்திருப்பார்கள்? அதற்கான தீர்வு தான் இந்த மீசைக் காவலன். Moustache Guard.




அவர்களுக்கு சூப் குடிக்கும் போது மட்டுமா மீசை நனைகிறது? அது தேநீர் மற்றும் பியர் போன்ற பான வகைகளை அருந்தும் போதும் தானே தொந்தரவாக இருக்கிறது... அதற்காக எல்லாம் சிரத்தை எடுத்து வளர்த்துவரும் மீசையை எல்லாம் எடுத்துவிட முடியுமா என்ன? அது முடியாதென்பதால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறு கருவி தான் இது.

கைக்கடக்கமான அழகான பேழையில் வைத்து காவிச் செல்ல ஏற்ற விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிற இச் சாதனம் அவசியம் ஏற்படும் போது குவளையின் மேலே வைத்து மீசையைப் பாதுகாத்து விரும்பிய பானத்தை அருந்தும் விதமாக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.






சில பாத்திரங்கள் அதனோடு இணைந்தே பாவனையில் இருந்திருக்கிறது. அவற்றையே கீழே உள்ள இணைய வழி சேகரித்த படங்களில் காண்கிறீர்கள்.


இப்போதெல்லாம் மேலைத்தேயத்தவர்களுக்கு மீசையின் மீது மோகம் இல்லாது போய் மொழு மொழு முகங்களோடு காட்சி தருவதால் இதன் பாவனைகளும் படிப்படியாக மறைந்து இல்லாதொழிந்து போயின.

அடிச்சு வளர்க்காத பிள்ளையும் பிள்ளையோ! முறுக்கி வளர்க்காத மீசையும் மீசையோ!! என்று நம்மவர்களிடம் ஒரு பழமொழி வழங்கி வருகிறதல்லவா? நம்மவர்களும் மீசையில் வீரத்தை முடிந்து வைத்துக் கொண்டவர்கள் தானே?

 பல வடிவங்களிலும் தோற்றங்களிலும் தென்பட்டுவந்த மீசைகளில் பாரதியாரின் மீசையும் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் மீசையும் பிரபாகரனின் மீசையும் நமக்கு நினைவில் வரக்கூடும். கூடவே மெல்லிய கோடு போல வைக்கப்பட்டிருக்கும் மீசையும் அரிவாள் மீசையும் திரைப்படங்களில் பார்த்து வியந்தவை. கூடவே ஹிட்லரின் மீசை உலக மகா பிரபலமாயிருந்தது. 

அது சரி! அப்படி எல்லாம் பிரச்சினை இருந்திருக்குமென்றால் நம்மவர்கள் எப்படியெல்லாம் இதனைச் சமாளித்திருப்பார்கள்?

புகைப்படங்கள்: நன்றி -கூகுள் இணையம்.

Gossip Bench - வம்பளக்கும் வாங்கு - அவுஸ்திரேலிய பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 3 -




மேலே இருக்கும் இந்த பொருள் என்ன என்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா?

இதற்குப் பெயர் வம்பளக்கும் வாங்கு. அதாவது Gossip Bench. இதுவரை கண்டதோ கேள்விப்பட்டதோ இல்லாததாக இருந்த இந்தப் பொருளை முன்னைய பதிவில் சொல்லி இருந்த ஒரு பழம்பொருட்கள் விற்கும் கடையில் கண்டேன். 

ஏதோ ஒரு கம்பீரமான வீட்டில் பலகாலம் இருந்து விட்டு இரண்டாம் வீடு தேடி இந்தக் கடையில் காத்திருந்த இதனை கண்டதும் பிடித்துப் போய் விட்டது.

இரும்பினால் மிகக் காத்திரமாகவும் உறுதியாகவும் அழகுணர்ச்சியோடும் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தப் பொருளைப் பார்த்ததும் நான் அதன் மீது தீவிர காதல் கொண்டு விட்டேன்.

இன்றய காலங்களில் எல்லாம் தொட்டவுடன் உடைந்து விடும்; பெட்டிகளில் அடைத்து வரும்; நாமே முழுமைப் பொருளாக ஆக்கவேண்டிய தேவைகள் உள்ள படியாக வரும் பாவனைப்பொருட்களின் மத்தியில் உறுதியாகவும் அழகாகவும் நல்ல முறையில் பேணப்பட்டதாகவும் வசீகரமானதாகவும் இருந்த இச் சாதனம் என் கருத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? 
Old is Gold.

$35.00 களுக்கு விற்பனையில் இருந்த இதனை உடனடியாக வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது என்னவென்றால் மிருதுவான அதன் இருக்கையுடன் கூடிய மேல் தட்டு கையை வாகாக வைத்து ஏதேனும் எழுத மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தான்.

 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் விரிவுரை மண்டபங்களில் இருக்கும் மரத்தாலான மூங்கில் இழைகளினால் பின்னப்பட்ட கை பிடியுடன் கூடிய இருக்கையின் வலது கைப்புற கைப்பிடி மாத்திரம் நுனியில் சற்றே பரந்து ஒரு கொப்பி வைக்கக்கூடிய அளவுக்கு விரிந்து காணப்படும். அது அமரவும்; அமர்ந்து எழுதவும் வசதியாக  அமைந்த 2 in 1  கதிரை. இடச் சிக்கனமும் வசதியும் தேவைப்பட்டால் தனி ஒருவரால் நகர்த்தத் தக்கதாகவும் நடைமுறைக்கேற்ற வசதியோடும் உள்ள அது போல ஒன்றை இங்கும் எங்கு தேடினும் கிடைக்கப் பெறவில்லை. இணைய உலக விற்பனைச் சந்தையில் கூட அது இல்லை.

இது அதுபோல எனக்குப் பயன்படும் என்பது என் எண்ணம். அதனால் வாங்கி வந்து விட்டேன்.

ஆனால், இதனை எதற்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள் என்ற சுவாரிசமான கேள்விக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசு மிகவும் ஆச்சரியமானது.

அதற்கு, சுமார் 50 வருடங்களுக்கு முன்பான காலத்திற்கு நீங்கள் பின்புறமாகப் பயணிக்க வேண்டும். அப்போதெல்லாம் தொலைபேசி மிகவும் அபூர்வம். யாரேனும் ஒரிரு பணக்கார வீடுகளில் அது காணப்படும். இல்லையா? 

இந்த பாவனைப்பொருள் தொலைபேசி வைக்கப் பயன்பட்ட ஓர் உபகரணமாகும். வீடுகளில் அதற்கென தனியான ஓரிடமும் சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்தது. மேலே உள்ள தட்டில் தொலைபேசி வைக்கப்பட்டிருக்கும். தொலைபேசி அழைப்பு வந்தால் அதனை எடுப்பவர் அந்த இடத்துக்குப் போய் தொலைபேசியை எடுத்து அருகில் அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் வாங்கில் இருந்து ஆறுதலாக அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படி ஒருகாலம் இருந்திருக்கிறது. ஆற அமர இருந்து புதினம் கதைக்கும் ஒரு காலம். அதனால் இதற்கு Gossip Bench என்று பெயர். 

அதற்கு இன்றுவரை அதன் அழகும் கம்பீரமும் மிடுக்கும் குறையாத இந்தப் பாவனைப் பொருள் இன்றும் அபூர்வமான சாட்சியாக இருக்கிறது.

ஆங்கிலேயர்களின் அழகுணர்ச்சியின் சாட்சியாகவும் செல்வச் சீமாட்டிகளின் வாழ்க்கைமுறையின் ஓர் அங்கமாகவும் வீட்டுக்குத் தனிக் கம்பீரத்தைக் கொடுத்த ஒரு பாவனைப் பொருளாகவும் அமைந்த அது உண்மையில் ஓர் அழகுப் பொக்கிஷம் தான்.

ஆங்கிலேய அழகு!

இன்று என் வீட்டில்!











 

அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்கவழக்கங்களும் - 2 - மறு சுழற்சி -

 அவுஸ்திரேலிய முதலாம் உலக நாடுகளில் ஒன்று. அது பணக்கார நாடு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மக்கள் செல்வச் செழுமையுடனும் பாதுகாப்புடனும் சிறந்த மருத்துவ வசதிகளுடனும் நன்றாக வாழ்கிறார்கள். அரசாங்கம் மக்களை சிறப்பாகப் போஷிக்கிறது. கருத்தோடு கவனித்துக் கொள்கிறது.

மக்களிடம் பணத்திற்கும் வசதிக்கும் பஞ்சமென்பதில்லை. வேண்டிய பொருட்களை வேண்டிய நேரம் உடனடியாக வாங்கிக்கொள்ள மக்களால் முடியும். ஆனாலும் இங்கு பொருள்களுக்கு  இரண்டாம் வாழ்க்கை கொடுக்கும் தொண்டு நிறுவன மனப்பாண்மையோடு இயங்கும் கடைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

ஆம்.ஆனேகமான அவுஸ்திரேலியர்கள் தாம் வாங்கும் பொருட்கள் நல்ல நிலையில் இருந்தால் கூட அவற்றில் சிறு கீறல் அல்லது அதன் பிரபலம் குறைந்து போனால் கூட அதனை விட்டு விட்டு புதிதான ஒன்றை வாங்க ஆசைப்படுகிறார்கள். நாம் இப்போதெல்லாம் தொலைபேசிகளை இரு வருடங்களுக்கொரு தடவை மாற்றிப் புதிய ஒன்றை வாங்கப் பிரியப்படுகிறோம் அல்லவா? அது மாதிரி.

ஆனால் பொருட்களோ புதிது போல பாவனைக்குரியதாக இருக்கிறது. அதற்கான ஒரு தீர்வாகவும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாங்குவதற்காகவும் இம்மாதிரியான பொருட்களை மக்கள் தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். இத் தொண்டு நிறுவனங்களுக்கு நாம் தொலைபேசி எடுத்து நாம் இருக்கும் இடத்தையும் இருக்கும் பொருட்களையும் ஆதாரங்களைக் காட்டிச் சொன்னால் இத் தொண்டு நிறுவனங்கள் வாகனத்தில் சென்று பொருட்களை ஏற்றி வந்து விடுகிறார்கள்.

 சில வேளைகளில் உரிமையாளர்களே எடுத்து வந்து இக்கடைகளில் கொடுத்து விடுவார்கள். இக் கடைகளில் வேலை பார்க்கும் தொண்டர்கள் அவற்றை சீர்படுத்தி தேர்ந்தவர்களால் விலை குறித்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்கிறார்கள். அல்லது இலவசமாக இல்லாதவர்கள் வந்து ஆதாரத்தோடு கேட்கின்ற போது அதனைக் கொடையாக வழங்குகிறார்கள்.

 இத்தகைய மலிவு விலைக் கடைகளில் உடுபுடவைகள் மட்டுமன்றி குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், தளபாடங்கள், மின்சார பாவனைப் பொடுட்கள், சமையலறை உபகரணங்கள், புத்தகங்கள், அழகு பொருட்கள் என சகலதும் இருக்கும். 

Treasure Hinter ஆக நான் அடிக்கடி போகும் இந்தக் கடையில் காணப்பட்ட வாசகம் இது!


இங்கு வரும் பல நூதனமான பொருட்கள் காண்போரை கவர வல்லதாகவும் ஆச்சரியப் படுத்துவனவாகவும் இருக்கின்றன. அப்படி நான் கண்ட ஒன்றை அடுத்துவரும் பதிவில் நீங்கள் காணலாம்.

இத்தகைய தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் அத்தனை பேரும் தொண்டு அடைப்படையிலேயே வேலை செய்கிறார்கள். நேர்மையோடும் கண்ணியத்தோடும் உண்மையோடும் தம் நேரத்தையும் சக்தியையும் அவர்கள் இந் நாட்டுக்குப் பயபக்தியோடு வழங்குகிறார்கள். 

இவ்வாறான செயல்களைச் செய்ய நம்பிக்கையான பல்லாண்டுகளாக இதனைச் செய்துவரும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. ஒருவித ஒழுங்கமையுடன் கூடிய மேற்பார்வை / கண்காணிப்பின் கீழ் இத்தகைய கடைகள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறன. இதற்கு அவ்வப்போது கோடீஸ்வரர்களும் ஏனைய நிறுவனங்களும் கூட பல்வேறுவகையான  நன்கொடைகளை அவ்வப்போது வாரி வழங்குகின்றன. அவை சமைத்த உணவு, உலர் உணவுப் பொருட்களில் இருந்து வீட்டு வசதிகள் வரை பல வகையின. இவற்றுக்கு வரிவிலக்குகளை அரசாங்கம் அறிவித்திருப்பதால் கொடுக்கப்படும் பணம் முழுக்க முழுக்க மக்களின் தேவைகளைச் சென்றடைகிறது. இருந்த போதும் இந் நிறுவனங்களும் அரசாங்கத்திற்குத் தன் கணக்கு வழக்குகளைக் காட்டித் தான் ஆக வேண்டும்.

இத்தகைய தொண்டு நிறுவனங்களில் அநேகமாக வயதானவர்களே தம் உழைப்பை வழங்குகிறார்கள். வயதான காலத்தில் அரச வருமானத்தைப் பெற்று வாழ்ந்து வரும் இவர்கள், தம் உபரி நேரத்தை இவ்வாறு செலவு செய்ய விரும்புகிறார்கள். தாம் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு வாழ்வின் மீதான நேசத்தையும் பற்றையும் கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.

வாகனத்தைக் கொண்டு சென்று பொருட்களை ஏற்றி வந்து இறக்கும் ஒருவரும், மக்களிடம் இருந்து வந்திருக்கும் பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒருவரும், கடைமுகப்பில் நின்று பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யும் பிரதிநிதியும், வேலைபழக வந்திருக்கும் இளைஞர் யுவதிகளும் ஒன்றாக இருந்து மகிழ்ந்து சிரித்து அளவளாவி இம்மாதிரியான கடைகளை இயக்குவதற்கு அவர்களிடம் இருக்கும் ’நாம் எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக இங்கு வந்திருக்கிறோம்’ என்ற உணர்வே காரணம் போலும்! நலிந்தவர்களுக்காக இயங்கும் இவர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சினேகமான இயல்பும் பொறுமையும் புன்னகையும்  புரிந்துணர்வு மனப்பாண்மையும் மனித குணமும் மனிதாபிமானமும் இன்னும் உயிர்வாழ்கிறது என்ற நம்பிக்கையைத் தரவல்லதாக இருக்கிறது.

இப்படித்தான் மக்களும் பொருட்களும் நேரமும் மறுசுழற்சிக்குட்பட்டு உபயோகமாக இவ்வுலக வாழ்வைக் கடக்கின்றன.

அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்கவழக்கங்களும் - 1 - நாட்டுச் சுத்தம் -

 சிட்னிக்கு வந்த காலத்திலிருந்தே பார்த்து ஆச்சரியப்பட்ட விடயங்களில் ஒன்று சாதாரண குடி மக்களிடமும் காணப்படும் தம் நாடு குறித்த அக்கறையும் கரிசனையும் தான். 

யார் ஒருவர் வீதியில் குப்பையைப் போட்டாலும் அவரை அப்படிப் போட வேண்டாம் என்று சொல்லித் திருத்துகிறார்கள். போட்டவரைக் காணாதவிடத்து தாமே அதனை எடுத்து உரிய இடத்தில் போட்டுவிட்டுப் போகிறார்கள். வருடத்தில் ஒரு தடவை தம் நேரத்தை ஒதுக்கி நாட்டை சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறார்கள். எதிர்வரும் மார்ச் 5ம் திகதி (05.03.2023) Clean Up Australia Day. இதனைப் பாடசாலை மாணவர்களில் இருந்து தனிப்பட்ட பெரியவர்கள் வரை தம் நேரத்தையும் சக்தியையும் அதற்கென ஒதுக்குகிறார்கள்.

இந்த நாடு நம்முடையது. இதனைப் பாதுக்காப்பதற்கான உரிமையும் கடமையும் நமக்கு உண்டு என்று இருக்கும் இந்த குடிமக்கள் மனோபாவம் ஆச்சரியமும் அழகும் நிரம்பியதாக இருக்கிறது.

நேரமில்லை; நேரமில்லை என்று பறக்கும் இந் நாட்டு மக்கள் தான் இதனையும் செய்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இலவசமாகத் தம் நேரத்தை இந் நாட்டுக்கு வழங்குகிறார்கள். அதனை யாரும் வற்புறுத்துவது கிடையாது. பாராட்டுகளை எதிர்பார்த்து அவர்கள் இதனைச் செய்வதும் இல்லை. போகாமல் விடுவதனால் தண்டனைகளும் வழங்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தம் சொந்த விருப்பத்தின் பெயரில் கூட்டாக நாடு பூராக மக்கள் இதனைச் செய்து வருகிறார்கள்.

Friday, September 30, 2022

சிட்னி பாரம்பரிய வீடுகளின் ஜன்னல்கள், வாயில்கள், முகப்புகள்




































































படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன். 16.09.2019
parramatta 2150.

இதன் தொடர்ச்சியாக வந்திருக்கிற பதிவை முன் பதிவிலும் காணலாம். அதற்குச் செல்வதற்கு கீழே வரும் இணைப்பினைச் அழுத்தி அங்கு செல்லலாம்.