Monday, June 15, 2020

கம்பனின் / ஒளவையின் வித்துவச் செருக்கும் நன்றியறிதலும்



கம்பனையும் இராமாயணத்தையும் எல்லோருக்கும் தெரியும்.

இன்றைக்கு கம்பன் இயற்றிய அந்தாதி வகையில் அமைந்த சடகோபர் அந்தாதி படிக்கக் கிட்டியது. இந்த மனிதர் மீது கம்பனுக்கேன் இத்தனை நன்றியறிதல்?

கம்பன் வாழ்ந்த காலத்தில் சோழராட்சி நிலவியது. கம்பருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் என்று அறிஞர் பலரும் கூறி உள்ளனர். மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும்.

இச் சோழ அரசவையில் ஒட்டக்கூத்தர் அரசவை கவிஞர். அவருக்கும் ஒளவைக்கும் கூட போட்டி. கூடவே புகழேந்திப் புலவருக்கும்.அது ஒருவித வித்துவப் போட்டி. இதற்குள் கம்பரும் அகப்பட்டுக் கொண்டாரோ என்னவோ. அபிதான சிந்தாமணி கம்பரைப் பற்றிய பல கதைகளைக் கூறுகிறது.

அது ஒரு புறம் இருக்க தனிப்பாடல் திரட்டொன்றில்,

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு

என்று பாடிவிட்டு தன் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு போய் விட்டான் கம்பன்.

அப்படி போய்விட்டவரை ஆதரித்தவர் இந்த சடையப்பவள்ளல் என்று வரலாறு கூறுகிறது. இந்தச் சடையப்ப வள்ளலை தன் அமர பாடல்களில் என்றென்றைக்குமாக  அமர வைத்து போய் விட்டான் இந்தக் கம்பன்.

புலமையின் பலம் அது! ஞானச் செருக்கு அல்லது வித்துவச் செருக்கு என்று சில பெயர்கள் உண்டு அதற்கு.

சடகோபர் அந்தாதியில் 17வதாக வரும்

நாய்போல் பிற்கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய்போல் திரியும் பிறிவியினேனைப் பிறவியெனும்
நோய்போம் மருந்தென்னும் நுனதிரு வாய்மொழி நோக்குவித்துத
தாய்போல் உதவி செய் தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17

இப்பாடல் அவனின் நன்றியுணர்வுக்கு தக்க சான்றாகும். அது போல கம்பராமாயணத்திலும் இறுதியாக பட்டாபிஷேகத்தின் போது 

’அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி’

அதாவது ராம பட்டாபிஷேகத்தின் போது, அனுமன் அரியணையைத் தாங்கினான்; அங்கதன் உடை வாள் ஏந்தி நின்றான்; பரதன் குடை பிடித்தான்; வெண்ணை நல்லூர்ச் சடையன் குலத்தில் தோன்றிய அவனது முன்னோர் ஒருவர் மணிமுடியை எடுத்துக் கொடுக்க, வசிஷ்டர் ராமனுக்கு முடிசூட்டினார் என்று முடிக்கிறான் கம்பன். 

இந்த அடைக்கலம் தந்த வள்ளலை  பாடியதில் தான் கம்பனின் மனிதமும் தன்னுணர்வும் மிகுதியாக மிளிர்கிறது. 

அது நிற்க,

இப்படியான வீறாப்போடு சங்க காலத்து ஒளவையும் பாடிவிட்டுப் போயிருக்கிறாள். இந்த வித்துவச் செருக்கு தான் கவிஞர்களுடய அழகே!

புறம் 235 இல் ஒளவை  சொல்கிறாள்.

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட்பெறினே, -
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன், மன்னே!
பெருஞ்சோற் றாலும் நனிபல கலத்தன் மன்னே 5

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும்மன்னே!
நரந்தம் நாறும் தன்கையால்,
 புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே! -.
 அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ 1 O
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
 சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே! 15

ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று -
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே! 2O

( ஐயகோ அஞ்சியின் அரிய மார்பகத்தினிடத்தே தைத்த வேல் பாணரின் உண்கலங்களைத் துளையிட்டு, இரப்பவர்கள் கைகளை ஊடுருவி, அவர் சுற்றத்தினர் கண்ணொளியினை மழுங்கச் செய்து, நுணுகிய அறிவாற் சிறந்தோர் நாவினிற் சென்று தைத்ததே! சிறிய அளவு மதுவே பெற்றால் அதனை எமக்கே அளித்து விடுவான்; பெரிய அளவு கிடைத்தாலோ யாம் பாட எமக்கு அளித்து அவனும் உண்பான். சிறுசோறு எனினும் பலரோடு உண்பான்; பெருஞ்சேறு எனினோ மிகப் பலரோடு உண்பான். எலும்பும் தசையும் உடைய வேட்டைப்பொருள் எல்லாம் எமக்களித்து, அம்பும் வேலும் நுழையும் போர்க்களம் எல்லாம் தானே மேற்கொள்வான். நரந்தம் நாறும் தன் கையால், புலால் நாறும் எம் தலையிலே அன்போடு தடவி மகிழ்வான். அவனோ பட்டனன் எமக்குத் தந்தையாக விளங்கிக் காத்தவன் எங்கே உள்ளான்? இனிப் பாடுவார்க்கு ஒன்று தருவாரும் இல்லையே! நீர்த்துறையின் கண் உள்ள பகன்றைப் பெரும்பூ எவர்க்கும் பயன்படாது கழிவதுபோல, வறிதே மாய்ந்து போகும் உயிர்களே இனி பலவாகும்!)
 - காண்க புறநானூறு மூலமும் உரையும் - புகியூர் கேசிகன்

என்று அதியமானை சொல்லும் அவள் அத்துணை நட்புரிமை பூண்டொழுகியவளாக இருந்தாள். அதியமானுக்காக அயல் நாட்டினனிடம் தூது போய் இவன் பெருமையை சொல்லி மீண்டவள் அவள் ( புறநானூறு.-95) . ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்து தன் அன்பை நிரூபித்தவன் அரசனான அதியமான் (புறநானூறு -91) தமக்கிடையானது தந்தை மகள் உறவு போன்றது என்று  புறநானூற்றில் (92)ஒளவை சொல்வாள். தீக்கடை கோல் போல அதியனின் வீரமும் வலிமையும் மறைந்திருக்கும்.என்று புறநானூறு -315 பாடியவள் அவள்!

ஒரு மதியூகி போல அரசர்களிடத்து அவள் தூது போகும் காரியங்களைச் செய்தவள் (புறம் 267)அரசியலில் ஈடுபட்டிருந்த  இனக்குழுத் தலைவர்கள் ,வேளிர்கள் ,நாஞ்சில் வள்ளுவன் ,அதியமான் ,அவனது மகன் எழினி ,தொண்டைமான்,சேரன் மாவண்கோ ,பாண்டியன் கானப்பேரெயில் கடந்த  உக்கிரப் பெருவழுதி ,சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளி  அனைவருடனும் அவ்வப்போது தொடர்பு கொண்டவள் ஒளவை. அவள் அவ்வாறு உரையாட மூவேந்தரும் இடம் கொடுத்தனர் என்பதிலிருந்தே அவளின் அரசியல் செல்வாக்கையும் நாம் யூகிக்கலாம்.

ஒரு சராசரிப்  பெண்ணாக சமுதாய மக்களுடன் ஊடாடிய ஒளவை  தன்  பெற்றோருக்குப் பிறகு  தன்  சொந்தக்காலில் நிற்கிறாள் .

சமுதாயத்தோடும் அவள் ஒன்றித்து நிற்கிறாள். தன் மகன் மன்னனிடம் வாங்கும் சிறப்பான சலுகைகளைக் காட்டிலும் அவன் கால்கழி கட்டிலில் வெள்ளுடை போர்த்திப் பெரும்பேறு பெற வேண்டுமென்று அவா கொண்ட தாயை ரசிக்கிறாள்.(புறம்.-286)

தன்  மகனின் வீர மரணத்தைக்கேட்டவுடன் அவனுக்குக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிய தன்  வற்றிய மார்பில் மீண்டும் பால் சுரந்தது என்ற வீரத் தாயை ரசிக்கிறாள் (புறம்.-295)

கரந்தைப்போருக்குக் கிளம்பும் முன்னர் யாருக்கு முதல் சிறப்பு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி  அந்தப்போரில் ஈடுபட இருந்த வீரக்குடிமகனை ஊக்குகிறாள்.(புறம்.-290)

வீரமரணமடைந்து  கேட்பாரற்றுக் கிடந்த சவத்திற்கு இறுதிக்கடன் செய்கிறாள்.(புறம்.-311)அவளின் சமுதாய ஊடாடல் தமிழகத்திற்கு வீரர்கள் தேவை என்பதை உணர்கிறது.

{கீழ்வரும்  இந்த இணைப்பில் கண்மணி என்பார் மிகச் சிறப்பான ஒளவையாரைப் பற்றிய பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒளவையார் குறித்து கண்மணி அவர்கள்  கருத்துக்களைத் தழுவியதாகவே ஒளவை குறித்த  இந்தப் பகுதிப் பதிவு அமைந்திருக்கிறது. மேலதிகமாக ஒளவையாரை அறிய அங்கு செல்லவும். ( நன்றி; கண்மணி)}

 இருந்த போதும் தன்னைக் காக்க வைத்துவிட்டதில் அதியமான் மீது அவளுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. ‘எத்திசைச் செலிலும் அத்திசை சோறே என்றுவிட்டு போய் விட்டாள். ‘வரிசை’ பார்த்து அதாவது தகுதி பார்த்து அதியமான் எதுவும் செய்யாமல் சும்மா தன் வித்துவத்தை - தகுதியைக் காக்க வைத்து விட்ட கோபம் அது.

அந்தப் பாடல் இது. புறநானூறு 229வது பாடல்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! 5

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன்அறியலன்கொல்?
 என்னறி யலன்கொல்? அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை, 10
 மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே:
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே!

(வாயிற் காவலனே! வள்ளன்மை உடையவர் செவிகளிலே விளங்கிய சொற்களை விதைத்துப், பரிசிற் பயன் கொண்டு, தாம் நினைத்ததை முடிக்கும் வலிபெற்ற நெஞ்சமும், மேம்பாட்டினைப் பெற வருந்தும் இயல்பும் உடைய பரிசிலர்க்கு, அடையாத வாயிலோனின் காவலனே! அஞ்சி, தன் தரமறியானோ? அன்றி, எம் தரமும் அறியானோ? அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் எனும் வறுமையுற்ற உலகம் அன்று இது. அதனால், இசைக்கருவிகள் கொண்ட எம் காவினைத் தூக்கினேம்; முட்டுக் களைக் கட்டினேம். மரந் துணிக்கும் தச்சனின் தொழில்வல்ல மக்கள் காட்டுக்குச் சென்றால், ஏதாவது ஒரு மரம் கிடையாது போகுமோ? அது போலப் பரந்த இவ்வுலகிலே, எந்தத் திசையிலே சென்றாலும், அந்தத் திசையில் எமக்குச் சோறும் தட்டாது கிடைக்கும் என்று நின் வேந்தனிடம் அறிவிப்பாயாக!
( காண்க - புறநானூறு மூலமும் உரையும் 229- புலியூர்கேசிகன் )

வித்துவத்தின் மீதான அந்த ஞானச் செருக்கும் அவர்களுக்கு வரும் நன்றியுணர்வும் எத்தனை அழகு!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!

திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: திருமதி. கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: திரு. கே.வி. மகாதேவன்

இயற்றியவர்: கவியரசர் திரு. கண்ணதாசன்

Tuesday, June 9, 2020

வாழ்க்கை ஸ்தம்பித்தால்....

கொரோனா காலத்தில் வாழ்க்கை சட்டென்று ஸ்தம்பித்த போது.....