Saturday, May 13, 2017

காவலூர். இராசதுரை (13.10.1931 – 14.10.2014)

         
="315" src="https://www.youtube.com/embed/-xm3v8JlNsk" frameborder="0" allowfullscreen>


மேலே இருப்பது காவலூர் ராசதுரையின் பொன்மணி திரைப்படம்.

டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட காவலூர் ராசதுரை யாழப்பாணத்தில் ஊர்காவற்றுறையில் கரம்பொன் என்னும் கிராமத்தில் 86 வருடங்களுக்கு முன் பிறந்தார்.

இது ஒரு செய்தி அல்ல. ஒரு துணிச்சலான காலடியின் புற அடையாளம்.
அந்த அடையாளம் ஈழத்தின் நவீன சிறுகதை இலக்கியத்தின் தோற்றத்தோடும் வளர்ச்சியோடும் இணைந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் வரிசைக் கதைக் கலைஞர் இவர்.

தன்னை முன்னிலைப்படுத்தாது அநேகர் பார்க்காத கலைப்பக்கங்களைப் தமிழுக்குப் புரட்டிக் காட்டியவர்.
தன்னை விளம்பரப்படுத்தாது விளம்பரமற்றிருந்த விளம்பரக் கலையை தமிழுக்கு விளம்பரப் படுத்தியவர்.
செம்பாட்டு மண்ணில் புரட்டி எடுத்த சமூகக் கருவால் துணிந்து பொன்மணி என்றொரு சலனச் சித்திரம் புனைந்து காட்டியவர்.
சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் போன்றவழிகளால் மாத்திரமன்றி வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரத்துறை போன்றவற்றினூடாகவும் சமூகத்திற்குச் செய்தி சொன்னவர்.
போரால் நிலை குலைந்து,புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகம், தன்னை நிலைநிறுத்த, யூத மக்களின் வரலாற்றை பாடமாக எடுத்துக் கொண்டு எழும்பச் சொல்லித் தந்தவர்.

அது காவலூர் ராசதுரை.

அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘குழந்தை ஒரு தெய்வம்’ தமிழகத்தின் சரஸ்வதி வெளியீடாக அவரின் 30வது வயதில் வெளிவந்தது. அதுவே அவருக்குக் கிடைத்த முதல் இலக்கிய அடையாளம். அதனைத் தொடர்ந்து அவரின் பல புத்தகங்கள் வெளியாகின.

வானொலியில் கலைக்கோலம், செய்தியின் பின்னணியில்,லிப்டன் லாவோஜி தேயிலைக்கான விளம்பர நிகழ்ச்சியில் ‘துப்பறியும் லாவோஜி என்ற வானொலி தொடர் நாடகம், மெலிபன் கவிக்குரல், இசைக்கோவை போன்றன அவரின் ஆழுமையை பறைசாற்றிய வானொலி நிகழ்ச்சிகள். எழுபதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இணைந்து கொண்ட இவர், கிராமவளம் நிகழ்ச்சி மூலம் யாழ்ப்பாணத்து கிராமங்களின் வளங்களை இலங்கை முழுவதுக்கும் எடுத்துக் காட்டியதோடு 'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சி மூலம் தரமான விமர்சனப்போக்கை உருவாக்கவும் விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப் பாடல்களை ஜனரஞ்சகப் படுத்தவும் செய்தார்.

நாடகத் துறையிலும்  இவரது படைப்புகள் நாடகமாகவும் தொலைக்காட்சி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. வீடு யாருக்கு? என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது.

இருந்த போதும், அவர் பரவலாக அறியப்படுவது அவரது’பொன்மணி’ என்ற திரைப்பட உருவாக்கத்தின் மூலமே. எழுபதுகளில் வீரகேசரியின் துணைப்பத்திரிகையான மிதத்திரனில் அவர் எழுதிய தொடர்கதையான ‘பொன்மணி எங்கே போனாள்’ என்ற நாவலை ஒரு நூலாக வெளியிடாமல் தனது மைத்துனரான முத்தையா ராஜசிங்கத்துடன் இணைந்து திரைப்படமாக வெளியிட்ட துணிச்சல் அவருக்குரியது!

படம் சொன்ன முக்கியமான விசயங்கள் தோல்வி கண்ட போதும், தென்னிந்தியத் வணிக திரைப்பட முயற்சிகளுக்கு இணையாக; தன் மண் சார்ந்த சமூகப்பிரக்ஞையோடும், உயர்மட்ட புத்தி ஜீவிகளின் கூட்டு முயற்சியோடும் எடுக்கப்பட்ட இத் திரைபடம் இலங்கைத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு துணிச்சலான முயற்சி. இலங்கை ரூபாவாஹினி தொலைக்காட்சியில் முதன் முதலில் சிங்கள, ஆங்கில உப தலைப்புகளோடு காட்டப்பட்ட முதல் இலங்கைத் தமிழ்ப்படம் என்ற சிறப்பைப் பெறுவதும் ‘பொன்மணி’ தான்.

ஈழத்து  நவீன  தமிழ் இலக்கிய   வளர்ச்சியில்   மட்டுமன்றி  வானொலி  -   தொலைக்காட்சி - சினிமா -  மேடை நாடகம் -  விளம்பரக்கலை - மொழிபெயர்ப்பு   முதலானவற்றிலும் கணிசமான பங்களிப்புகளை வழங்கியவர் காவலூரார்.

தமிழுக்கும், சமூகத்துக்கும், மறைவாக இருந்த, எழிலார்ந்த பக்கங்களை, அறிமுகப்படுத்தியும்; பரீட்சித்துக் காட்டியும்; தன்னை முன்னிலைப்படுத்தாது, நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தி, துணிச்சலான முன்னுதாரணமாய் இருந்து காட்டி, தன் 83வது வயதில் சிட்னியில் விடைபெற்றுக் கொண்டவர் ராசதுரை.
அது ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்றான ஊர்காவற்துறையின் கரம்பன் கிராமம் ஈழத்தமிழுக்குத் தந்த ’பொன்மணி’ காவலூர் ராசதுரை..

        SBS இற்காக 13.1.17 எழுதியது. – யசோதா.பத்மநாதன்

7.5.2017 SBS வானிலியில் ஒலிபரப்பான தடம் நிகழ்ச்சியில் ஒலி வடிவில் கேட்க......

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-kavaloor-rasathurai?language=ta