Wednesday, October 7, 2020

அதிசய அணி – 9 - ( 02.10.20 )

 வழக்கமாக SBS வானொலியில் மாதத்தின் 4 வது ஞாயிறுகளில் 5 நிமிடங்கள் இடம் பெறும் தமிழ் அணிகள் பற்றிய அறிமுக  நிகழ்ச்சி, தம் குரலால் எம்மை வசப்படுத்தி வைத்திருந்த SPB அவர்களின்   மறைவை ஒட்டி அந்நிகழ்வு அடுத்து வந்த வெள்ளிக்கிழமை ( 2.10.2020 ) அன்று ஒலிபரப்பாகியது.    அதன் இணைப்பை வழக்கமாக இங்கு பதிவது வழக்கம். இம்முறை சில பல நிகழ்வுகளால் அதனை உடனேயே பதிவேற்ற முடியாது போயிற்று.  

குரலால் நம்மை வசமாக்கிய பெரும் பாடகர் S.B. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த மலரஞ்சலிகள்.🌹 அவர் ஆத்மா ஷாந்தி அடைவதாக!!

................................

இப்போது அணி பற்றிய வானொலி  இணைப்புக்குச் செல்ல கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்..

அதிசய அணி - 9 - SBS ( 2.10.2020)

 .............................

அதன் விரிவான எழுத்து வடிவம் கீழே:

கம்பராமாயணத்து நாடுகாண் காதையில் இலங்கையை காண்கிறான் கம்பன்.

கார் மேகங்களுக்கிடையே மின்னுகின்ற மின் கொடிகளாகிய மின்னல்களை வலிந்து மடக்கி அடக்கிப் பிடித்து விளக்குமாறு செய்து மாடி வீடுகள், அதாவது மேல் உள்ள மாடங்களின் உட் பரிகைகளில் வீழ்ந்து கிடக்கின்ற பூக்களின் மகரந்தத் துகள்களை பெருக்குகின்றார்கள் பெண்கள்.  அதனை இப்படியாக உரைப்பான்.

மாகாரின் மின்கொடி மடக்கினர்; அடுக்கி,

மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளிப்

பாகு ஆய செம் சொல் அவர் வீசுபடு அகாரம்!   


இன்றய நவீன பாடல் கூட 



https://www.youtube.com/watch?v=DXhoUscjoTM  2.19 – 2,35

தங்கைக்காக விண்மீன்களை பரித்து தருவார்கள் வானவில்லை கேட்டால் ஒடித்து ஒடித்து தருவார்கள் என்று சொல்கிறதே....

இவ்வாறெல்லாம் நிகழ்தல் சாத்தியமா? கவிஞர்களுக்கு மட்டும் அது சாத்தியம். இப்படியாக விரிகிற இந்தக் காட்சியைப் பார்க்க அதிசயமாக இருக்கிறதல்லவா ? அது தான் அதிசய அணி. இன்றைக்கு நாங்கள் பார்க்க இருக்கிற அணி.

இந்த அதிசய அணி பற்றி தண்டி அலங்கார இலக்கணம் என்ன சொல்கிறது ?

கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது சொல்லும் போது, உலக இயல்பில் இருந்து மீறாத படி உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசய அணி என்கிறது. 

     மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி

     உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி

     ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்

                                  

இது எப்படி இருக்கும் என்று விளக்குவதற்கு தண்டி ஆசிரியர் ஒரு உதாரண வெண்பா ஒன்று தருகிறார்.

"திங்கள் சொரி நிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்

பைங்கிள்ளை பாலென்று வாய் மடுக்கும் - அங்கயலே

காந்தர் முயக் கொழிந்தார் கைவறிதே நீட்டுவரால்

ஏந்திழையார் பூந்துகிலா மென்று''

முழுநிலா முற்றம். அங்கே கிளிகள் வெற்றுக் கிண்ணங்களைப் பார்த்து அதிலே பாலிருக்கின்றது என்றெண்ணி பாலை அருந்த முனைகின்றன; பிறகு தான் தெரிகிறது அது பாலில்லை; பால்வண்ண நிலவு என்று. அப்பாலே கணவனும் மனைவியுமாக இருவர். இன்பத்தின் இறுதியில் பெண் தன் துகிலை எடுக்க அந்த துகிலோ கைக்கு அகப்படவில்லை. ஏனென்றால் அது துகிலல்ல அது நிலவின் ஒளி. இவ்வாறு அஃறினை உயர்திணை என பாகுபாடின்றி நிலவின் ஒளி எல்லோருக்கும் மயக்கத்தைக் கொடுக்கிறதாம். நிலவின் ஒளியைப்பாட வந்த புலவர் என்ன ஒரு அதிசயமான காட்சியை புனைந்து விட்டார் பாருங்கள்? இது தண்டி அலங்கார இலக்கண ஆசிரியர் சொல்லும் அதிசய அணிக்கான உதாரணம்.

இதே காட்சியினை கலிங்கத்துப் பரணியிலும் கூட காணலாம். அதில் இதே காட்சி இப்படியாக வருகிறது,

கலவி களியின் மயக்கத்தால்

கலை போய் அகலக் கலைமதியின்

நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்

நீள்பொன் கபாடம் திறமினோ!

இந்த அதிசய அணி இதே உதாரணத்தோடு இந்தப் பாடல் காட்சியில் இப்படியாக மலர்கிறது.

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்.....



https://www.youtube.com/watch?v=Y6YtvVqk03I 

( 2.33 – 3.15 )

பாண்டிய மன்னனின் நாட்டில் அதிசய அணியில் ஒன்று முத்தொள்ளாயிரத்தில்  இப்படி ஜொலிக்கிறது.

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம்

நறுமணம் கொண்ட,நல்ல  நீல நிறக் குவளைப் பூவே, தினந்தோறும் நீர்நிலைக்கு மேலே நின்றுகொண்டு தவம் செய்கிறாயே, ஏன்? கூரான வேலை ஏந்திய வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த, விரைவாகச் செல்லும் குதிரையைக் கொண்ட, பாண்டியனின் மார்பைச் சென்று அடையத்தானே இப்படித் தவம் இருக்கிறாய்? என்பது அதன் பொருள்.

இது இன்றய திரைத்தமிழில் இப்படியாக ஒலிக்கிறது.



எனக்கே எனக்கா..... (ஜீன்ஸ்)

Link: http://www.youtube.com/watch?v=QIyBk0HH7zo

(4.50 – 5.00 )

இதனைப் போல கவிஞர் வைரமுத்து இப்படியாக ஒரு பாடல் தருகிறார்.



வெள்ளி மலரே... வெள்ளி மலரே...1.16 - 1.35

https://www.youtube.com/watch?v=CTkKDJNOUjI 

வெள்ளி மலரே...

இந்த மலர் என்று சொன்னவுடன் கண்ணதாசனின் அதிசய அணியில் மிளிரும் இந்தப்பாடலை கடந்து போவிட முடியுமா என்ன?



https://www.youtube.com/watch?v=2z8mTWg9vZw

2.10 – 2.48

நளவெண்பா அதை இப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 

‘மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்

பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்

காத்தாள்;அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே

வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து.

அதாவது மலர் கொய்து கொண்டிருக்கிற பெண்ணொருத்தி அவள். அவள் முகத்தை தாமரை என்று எண்ணி மொய்க்கிறது வண்டு. அவளோ பயந்து கைகளால் முகத்தை மூட வண்டு அவள் கரங்களைத் காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்க அவளுக்கு பயத்தால் வியர்க்கிறதாம்.

இவைகள் எல்லாம் உயர்வு நவிற்சி அணி என்றும் அதிசய அணி என்றும் சொல்லப்படும் அணியைப் பயன் படுத்தி கவிஞர்கள் புனைந்த அழகிய சொல் ஓவியங்கள்.



https://www.youtube.com/watch?v=NDIXSHmHRS8

1.30 – 1.54

என்ற இந்த வரிகளை நாம் சினிமாப்பாடலாக பல தடவைகள் கேட்டிருக்கிறோம் அல்லவா? கொடி இடை எப்படி படை கொண்டு வரும்? அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது நளவெண்பா. அங்கு தமயந்தி. படையோடு போகிறாள் எது படை?

நால்குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா,

ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்

வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்

ஆளுமே பெண்மை அரசு!

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய 4 குனங்களும் அவளுக்கு நாற்படை. மெய்வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்களும் அவளுக்கு நல்ல அமைச்சர்கள், சிலம்பொலி அவளது முரசொலி, வேற்படையும் வாளும் அவள் கண்கள், நிலவு முகம் வெண்கொற்றக் குடையாக அவளுடய பெண்மை அரசை ஆழுகிறது என்பது அதிசய அணியை பயன்படுத்தி புலவர் காட்டும் காட்சி.

பெண்ணின் கண்களை வர்ணிக்காதவர் யார் இருக்கக் கூடும்? வள்ளுவர் கூட அதற்கு விதிவிலக்கல்ல.அவர்,

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.

என்கிறார். அதாவது இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்கள் என்பது அவர் கணிப்பு. 

இந்த சினிமா இசை அதனை இப்படியாக அழகியலோடு உரைக்கிறது.



https://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM

2.08 – 2.37

இந்தப் பெண்ணுக்கோ காதல் நோயை சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அது  இன்றய பாடல் ஒன்றில் சொப்பனம் காண வழியே இல்லை என்று இப்படியகப் புலம்புகிறது



 https://www.youtube.com/watch?v=nobCEU0GVGE 

( 2.05 – 2.30 )

 இந்த முத்தொள்ளாயிரப்  பெண்ணுக்குத் தன் கண் மீது கோபம். தோழிக்கு அவள் இந்த வருத்தத்தை இப்படியாகச் சொல்கிறாள். கனவிலே தைரியமாகக் காண முடிகிற காதலன் பாண்டியனை நேரில் காணும் போது எங்கிருந்தோ இந்த நாணம் வந்து இந்தக் கண்கள் தாழ்ந்து போய் விடுகிறதே. அது தான் அவள் மீதே அவளுக்கு கோபம்.

கனவை நனவுஎன்று எதிர்விழிக்கும்; காணும்,

நனவில் எதிர்விழிக்க நாணும்  

என்பது அவளின் பெண்ணின் முறைப்பாடு. அதனால் அவள் இன்றைக்கு கண் விழிப்பதாக இல்லை. கண்ணைத் திறந்தால் கண்ணுக்குள் தான் சிறைவைத்த காதலன் பாண்டியன் தப்பி விடுவான். அதனால் நான் கண்களைத் திறக்கவே மாட்டேன் என்கிறாள் மகள்.

தளைஅவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி

களையினும்என் கைதிறந்து காட்டேன் வளைகொடுபோம்

வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து

என்கண் புகுந்தான் இரா.

பாண்டிய மன்னனின் புகழையும் பெருமையையும் கூற வந்த புலவர் எத்தனை நயத்தோடும் அழகோடும் அதிசய அணியில் அசத்தி விட்டார் பார்த்தீர்களா. 

திருக்குறளில் வளையல் ஒன்று படுகிற பாடு இது!

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

தலைவன் பிரிந்த செய்தியை பிரிவுத்துயரினால் மெலிந்த தலைவியின்  முன் கை மூட்டில் இருந்து களன்று விழும் வளையல் ஊராருக்கு தெரிவித்து விடுமே என்ற கவலை இந்தப் பெண்ணுக்கு! 

இறுதியாக இன்றய பிரிவுத்துயர் கொண்ட பெண்ணுக்கு மோதிரமொன்று வளையலாகி பிறகு அதுவே ஒட்டியாணமாய் ஆகும் திரைப்பாடல் அதிசயத்தோடு இன்றய அதிசய அணி பற்றிய நிகழ்வு நிறைவுக்கு வருகிறது.

செளக்கியமா கண்ணே செளக்கியமா…. ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்…..


 https://www.youtube.com/watch?v=yXCQ1BSpgfQ&feature=emb_logo

Friday, October 2, 2020

குமிழி - புத்தகப் பார்வை - பொதுசன கண் வழியே...

 


குமிழி - ஈழத்தின் விடுதலை இயக்க (புளொட்) உள்ளக முரண்பாடுகளின் / தோல்வியின் அடிப்படைக் கூறுகளை உள்ளே நின்றபடி சாட்சிப்படிமமாக முன்வைக்கும் ஓர் இலக்கிய வடிவம்.

நாவலுக்குள்ளோ ஆவணத்துக்குள்ளோ சுயசரிதைக்குள்ளோ அகப்பட்டுக் கொள்ளாத ஓரு நளின வார்ப்பு.

அட்டைப்படமும் வடிவமைப்பும் கச்சிதமாய் கோலி வைத்திருக்கிறது அதன் உள்ளடக்கத்தை. குறிப்பாக அட்டையை விரித்து பெரிதாக்கும் போது விரியும் தோற்றம் கனம் ஒன்றை கொண்டிருப்பதை காட்சியாக விரிக்கிறது.

அது கொண்டிருக்கும் உள்ளடக்கம் ஓர் உள்காயம்; ஏமாற்றத்தின் கதை; உள்வலி; ஊமைக்காயம்; போராட்டத்தின் இரத்தவாடை; உள்குலைவு; ஓர் இளம் தமிழ் போராளியின் இலட்சியக் கனவு சிதைக்கப்பட்டதன் சின்னாபின்னக் கூறுகள் சிதறிக்கிடக்கும் இடம்; அதே நேரம் நமக்கே நமக்கான பாடங்களை கற்கக் கூடிய அரிச்சுவடியும் ஆகும்.

மேலும், மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட  இளம் போராளியின் உள்மனக் காயம் ஒன்று இறுதியில் ஈழத்தமிழ் மக்களின் உள்காயமாக பரவி விரியும் ஆற்றலின் பிரவாஹம் இது எனிலும் தகும்.

ஓர் இனத்தின் பாரத்தைத் தூக்கிய தோள்கள் - அதன் பாரத்தை சமூகத்தின் மடியில் இருத்தி இருக்கிறது.

அது ஒரு தோல்வியின் சுமை.

’பிணக் கனம்.’

இது இவ்வாறிருக்க,

இதில் நான் முக்கியமாகக் காண்பது புத்தகம் முன்வைக்கும் சமூகம் மீதான ஒரு விமர்சனம்.’ எங்கட சனம் விடுதலை அடையிறதுக்குத் தகுதி இல்லாத சனம். நாங்கள் உள்ளுக்குள்ள காட்டுமிராண்டித்தனத்தோட தான் இருந்திருக்கிறம் எண்டு தெரியுது. விடுதலைக்கெண்டு வெளிக்கிட்டு உள்ளுக்க இருந்தவன் , பக்கத்தில நிண்டவன், எதிர்த்து நிண்டவன் எல்லாரையும் போட்டுத் தள்ளுற கூட்டம். இந்தக் கேட்டுக்க எங்களுக்கு விடுதலை கேக்குது.’

இந்த ’சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம்’ என்பதை இயக்கத்தின் உள்ளேயே ரவி காண்கிறார். 

1. தளத்திற்கும் பின் தளத்திற்கும் இடையே; மற்றும் பயிற்சிமுகாமில் காணப்பட்ட / பேணப்பட்ட அரசியல் சித்தாந்த - நடைமுறை இடைவெளி. (அண்ணன் - தோழர், உணவு,உடைப் பாவனை; அதிகார துஸ்பிரயோகம்; சுயநலப் பேணுகை, உயிர்கள் மீதான எதோச்சதிகாரம்... இன்னபிற..) 

குறிப்பாக வாழைப்பழ பகிர்வு பற்றிய சம்பவம் சமூகத்தை ருசிபார்க்க ஏதுவாயிருந்த அச்சொட்டான உதாரணம். - சமூகத்தின் அங்கத்தவர்களாக அங்கிருந்து உள்ளே வந்தவர்களிடம் காணப்பட்ட இத்தகைய இயல்புகள் எவ்வாறு இயக்கத்தின் போக்கை வழிநடத்திற்று என்பதை புத்தகம் சிறப்பாகப் பேசுகிறது.

2. மக்களுக்கும் இயக்கத்துக்கும் இடையே இருந்த வேறுபட்ட நம்பிக்கைப் பேணுகை.( மக்கள் ஒருநாள் இவர்கள் பெரும் படை திரட்டிக் கொண்டு ஈழத்தை வென்றெடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையும்  போராளிகளிடம் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாதிருந்த வெற்றிடமும்.)

3. தலைமைத்துவத்திடம் இருந்த அறிவு, தூரநோக்கு, ஞான  வெற்றிடம். பண்பற்ற எள்ளல்கள்...

4.பயிற்சிக்கே போதுமான ஆயுதங்கள் காட்டப்படாதிருந்த போதாமை அல்லது இல்லாமை.அல்லது நிரப்பப் படாமை. கேள்வி கேட்க முடியாத இராணுவ சித்தாந்த சிந்தனையும் அதிகார மேலாண்மையும்.

5.வெளிப்படைத் தன்மையும் உண்மையும் அற்றிருந்த; மரணபயம் பின்னிய சுயகம்பிச்சிறை வாழ்வு. மெளனிக்கப்பட்ட சொற்கள் உள்ளடக்கப்பட்ட மனம் கொண்டிருக்கும் அகத்தீ. வாழ்வோடு அடிக்கடி கேட்கும் காணும் நண்பர்களின் மரண ஓலங்களும் மரணங்களும் அவைகளோடு உள்ளேயே  வாழ நேர்ந்த சாபமும்.

6.சாதி, பெண்ணியம் என்பன கையாளப்பட்ட முறைகள்.

7. இயற்கையின் இயல்பான காமத்தை எப்படியாக இளைஞர்கள் கையாண்டார்கள்; காதலை எப்படி மூடிப் புதைத்தார்கள் என்பது குறித்தவை. சின்னச் சின்ன ஆசைகள், தேவைகள் கூட நிறைவேற்றப்படாமை.

8.தன் இனப்போராளியைத் தன் இனமே கொல்லும்  கொலைகளைக் காணும்; கேட்கும் மனநிலைக்கும் பகிரப்பட முடியாதிருக்கும் ; கேள்வி கேட்க முடியாதிருக்கும் இராணுவ சட்டங்களுக்கும் இடையே அல்லாடும் சக போராளியின் உள்மன உழைச்சல்களும் பாரங்களும் குற்ற உணர்வுகளும்.

9. பீதியோடு நம்பிக்கை ஒன்று அவநம்பிக்கையாகி அருகிலிருப்பவரையே நம்ப முடியாது போன அவலம்.

10. மூடுண்ட மெளனம்

என இவ்வாறாக அது பயணிக்கிறது. இவற்றினை ஒத்த பெரும்பாலான சாராம்சங்களை நாம் மூடுண்ட எனக்குத் தெரிந்த நம் வட ஈழ சமூகத்துக்குள்ளும் காணலாம். இன்றும் கூட. 

இவைகள் எல்லாவற்றையும் அவர், ‘அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம் ஒருபோதும் சோஸலிச விடுதலையை பெற்றுத்தரப் போவதில்லை; வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கெதிராகவே தனது துப்பாக்கியைத் திருப்பக் கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச் செய்யும்’ என்ற வரிகளால் நிறுவுகிறார்.

ஒரு போராளியின் உள்காயம் ஒன்று இறுதியாக தமிழ் மக்களின் உள்காயமாக எப்படி பரிமாணம் பெற்றது என்பதை உள்பக்கமாக நின்று சொல்ல விளைகிறது ஆவண அடிப்படை கொண்ட இப் புத்தகம். எனினும் ஆங்காங்கே பிரச்சார நெடிகளும் சுய கருத்துத் திணிப்புகளும் அதிகமாகிப் போகும் தன் பக்க வாதங்களும் அதன் இயல்பான ஓட்டத்தை; மக்கள் தாமாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு  தடையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடாமல் செல்ல முடியாது.

அது சொல்லும் கருத்துகளுக்கு அப்பால் அவற்றைச் சொல்லும் பாணியில் அது கொண்டிருக்கும் வர்ணனைகள் மிக வசீகரமானவை. உடல் களைப்பின் மேல் கோழித்தூக்கம் ஏறிநின்றது என்ற போதிலும் சரி; அவனை இருத்தி வைத்து ஊகங்கள் கதை சொல்லிக் கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; டாக்குத்தனின் மருத்துவம் கஸ்ரோவின் நோயோடு பகிடி விட்டுக் கொண்டிருந்தது என்ற போதிலும் சரி; இருள் நிலத்தில் ஓர் உயிர்குமிழியாய் முகாம் பூத்திருந்தது அதற்குள் வெக்கை இளைப்பாறிக்கொண்டிருக்கும் அது உடற்களைப்பை வருடி விடுவது போலிருக்கும் என்ற போதிலும் சரி; அவன் புன்னகையைக் கோபத்தால் கொன்று போட்டிருந்தான் என்பதிலும் சரி; கையிலிருந்த ரோச் லைட்டில் இருந்து ஒளியைக் கற்றையாக உதறி முற்றத்தில் வீசிவிட்டார். பூக்கள், காய்கள், கனிகள் என தக்காளி, வெண்டி, கத்தரி, மிளகாய் செடி எல்லாம் ஒரு பூந்தோட்டத்தின் அமைவாக தமது குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; மகிழ்ச்சி அவனை உலுப்பி உலுப்பி கதை கேட்டது என்ற போதிலும் சரி; இருளை கடல் இழுத்து போர்த்தி இருந்தது என்ற போதிலும் சரி; கடற்கரை மணலில் எனது பாதங்கள் வேர்களுடன் பரவின என்ற போதிலும் சரி; அந்தச் சொற்கள் என் அப்பாவித்தனத்தின் மீதோ அல்லது அவன் மீதான என் நம்பிக்கையின் மீதோ கூடுகட்டி அமர்ந்திருந்தன என்ற போதிலும் சரி; இலக்கியச் சுவை ஆங்காங்கே ஏறி உட்கார்ந்து ஒரு கிராமத்துச் சிறுவனின் விகடமில்லா புன்னகையை உதிர்த்துவிட்டுச் செல்வதை நிச்சயம் இலக்கிய ரசிகர்கள் வாசித்து இன்புறுவர். வாசிக்க வாசிக்க திகட்டாத அச் சொல்லோவியங்கள் ஆங்காங்கே புத்தகத்துக்கு  கசப்பு மருந்தை மூடி வைத்திருக்கும் இனிப்பாக உதவுகிறது. கவிதைகள் கொஞ்சிக்கொஞ்சி கதைகேட்கும் இடங்கள் அவை.

வேப்ப மரம் ஒன்று நம்பிக்கையின் சாயலாய் தோன்றி வெட்டி வீழ்த்தப்பட்ட  மரக்கட்டையாகக் காணும் அவ நம்பிக்கையில் - நிராசையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனநிலையையும் போராளிக் கண்களிடையே கண்டு தெளிகிறோம். அது ஒரு நல்ல உதாரண பிம்பமாக ஆங்காங்கே தலை சிலுப்பி தன் இருப்பை நிலைநிறுத்துகிறது.

தமிழக மக்கள் கொடுத்த ஆதரவு, புகலிடம், முன்னுரிமை, வைத்திருந்த மரியாதை, விருந்தோம்பல், உயர்ந்த எண்ணம் என்பன நெஞ்சை நெகிழ வைப்பன. போராளி இளஞர்களும் அதற்கேற்ப நடந்து கொண்டார்கள் என்பது நெஞ்சை நிறைக்கிறது. மனம் பெருமிதத்தில் பொங்குகிறது.

ஆங்காங்கே இளைஞர்களுக்குள் நடைபெறும் நகைச்சுவைகளோவெனில்  மனசை இலகுபடுத்த வல்ல வீரியம் கொண்டவை. காட்சி வர்ணனைகளும் நகைச்சுவைகளும் அபூர்வமாக இந்த கோட்பாடு, சித்தாந்தம், அரசியல் போன்றவற்றுக்கும் பொருந்திப் போகிறது என்பது அதிசயம். கவிதாம்சமும் தமிழும் சமயோசிதத்தோடு ஆங்காங்கே  லாவண்யமாய் புத்தகம் மீது நடைபோடுகிறன.

இருந்த போதும், உண்மைகள் முரண்டு பிடித்துக் கொண்டு முன் நிற்பதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லாவண்யங்கள் விலகி ஓடி விடுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். உண்மைக்கு அத்தகைய வீரியம் உண்டு. அது எதற்குள்ளும் மறந்தும் மறைந்து விடுவதில்லை. மேலும் இது நம்மவர் கதை. இரத்தமும் சதையும் உயிரும் மனமும் கொண்ட போராளிகளின் வாழ்வா சாவா என்பது பற்றிய; உண்மை கொண்டெழுதிய திகில் சித்திரம். இங்கு ரசிக்க ஏது அவகாசம்? நின்று பார்க்க ஏது திராணி? நிதானிக்க ஏது நேரம்? எல்லோரும் தப்பினார்களா என்பதே தேடலாக மனம் எங்கும் அவர்களே வியாபித்திருக்கையில்....

இதுவரை பெரும்பாலான பொது சனங்களால் அறியப்படாத செய்தி ஒன்றை; உடலின் உள்பக்கம் ஒன்றை; சத்திர சிகிச்சை மேடையில் வைத்து நம் நோய்வாய்ப் பட்ட உடலை நமக்குத் திறந்து காட்டி இருக்கிறது இந்தப் புத்தகம்.  மேலும், அது ஈழத்தமிழ் சமூகத்துக்காக இதுவரை தூக்கிச் சுமந்த பாரங்களை எல்லாம் சமூகத்தின் மடியில் இறக்கி வைத்து இளைப்பாறுகிறது. 

இறுதியாக ஆசிரியர் ரவி யின் தமிழில் சொல்வதாக இருந்தால் ’அலைகொண்ட கடலை உள்ளுக்குள் விழுங்கி இருந்த உயிர் ஒன்று, அதற்குள் மூழ்கடித்திருந்த சொற்களைக் கோர்த்து, அந்த மந்திரக்கயிறைப் பிடித்த படி சுயகம்பிச் சிறைக்குள் இருந்து தன் உடலுக்குள் திரும்பிய கதை இது’.

போராளி அன்ப,

இனியேனும் நீ இளைப்பாறுவாயாக; பாரம் சுமந்தது போதும்; பஞ்சுபோல் பாரமற்று இனி நீ இருப்பாயாக!!

வரலாறு அதனைச் சுமந்து, எதிர்காலம் ’படிக்கக்’ கொடுக்கட்டும்!

📎

இந்தப் புத்தகத்தை எனக்கு அன்பளித்த நீண்டகால சினேகிதி; சகோதரி பாமதிக்கு நன்றி. என் புத்தகத் தட்டில் காத்திரமான கனம் ஒன்று தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டது.