Monday, April 1, 2019

நகைவேளம்பர்

அண்மையில் இரண்டு காரியங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.

1. தனபாலசிங்கம் ஐயாவைச் சந்தித்ததும் அவர் எனக்கு அன்பளித்த அவரது விரிவுரைகள் அடங்கிய சீடீ கிடைத்ததும்.
2. தமிழ் பாடசாலை மாணவர்களுக்காக பேச்சுப் போட்டிக்கான கட்டுரை ஒன்று எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று அமைந்தமையும் அதன் தலைப்பு’ தமிழ் கலைகள் பயில்வோம்’ என்ற கருப்பொருளைத் தாங்கி இருந்ததும்.

வழக்கம் போல இலக்கியம் ரசிக்க தனிமையான கார் பயணங்கள் மிக வாகானவை. வேலைக்குப் போய்வரும் நேரங்கள் அவ்வாறு தான் சுவாரிசமுறும் எனக்கு எப்போதும்.

அதில், சிலப்பதிகாரத்தில் வரும் இருபெரு நகரங்கள் - மருவூர் பாக்கம், பட்டினப்பாக்கம் என அமைந்த அந் நகரச் சிறப்பை ஐயா அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதில் ஒரு சொல் என்னைக் கெளவிக் கொண்டது. அது நகைவேளம்பர் என்ற சொல். ஐயா அவர்கள் அதற்கு விளக்கம் தரும் போது நகைச்சுவையோடு பேசி மக்களைச் சிரிக்க வைக்கும் கலைஞர் என அதற்கு சிறப்பான விளக்கம் தந்திருந்தார்.

அதற்கு மேலதிக விளக்கமாக இங்கு மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரபலமாக நடக்கும் One man comedy show க்களை   உதாரணம் காட்டி பேசி இருந்தார்.

பட்டினப்பாக்கத்து நகரை வர்ணிக்கும் இடத்தில் நகைவேளம்பர் எனச் சொல்லப்பட்ட - ஒரு கலைஞருக்குரியதான அந்தச் சொல் கிபி. 2ம் நூற்றாண்டளவிலேயே ( இந்தக் காலப்பகுதி குறித்து ஒரு சந்தேகம் உண்டு. கி.பி. 3 - 6 க்கிடைப்பட்டதென நாம் படித்தது இப்போது 2ம் நூற்றாண்டென ஆகிவிட்டது. ஆனால் அவ்வாரு கூறுவதற்குரிய சரியான ஆதாரங்களைத் தான் எங்கு தேடியும் காணோம்) நம்மிடையே நகைச்சுவை என்பது ஒரு கலையாக வளர்ந்திருந்ததையும்  அதை நிகழ்த்திக் காட்டுவோர் ‘நகைவேளம்பர் என அழைக்கப்பட்டதையும் எண்ணி ஒருவிதமாக பெருமிதம் கொள்ள முடிந்தது.

அது நிற்க,

இந்தப் பாடசாலைப் பிள்ளைகளுக்காக தமிழ் கலைகள் குறித்துத் தேட வேண்டிய சந்தோஷ நிர்ப்பந்தம் ஒன்று அண்மையில் வாய்ந்த்தது. சரி, கம்பர் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்கிறாரே என்ற ஒரு கோதாவில்  இந்த ஆயகலைகள்  தான் என்ன என்று பார்த்தேன். அதற்குள் தூசுபட்டு பட்டை தீட்டப்படாத வைரத்தைப் போல ஒளிமழுங்கி கானப்பட்டது 64 கலைகளில் ஒன்றான ’மகிழுறுத்தற்கலை’. அதற்கான விளக்கம் என்னவென்று கேட்டால் வேடிக்கையாகப் பேசி மற்றவர்களை மகிழுறுத்தும் கலை அதுவாகுமாம்.

சார்ளிசப்ளின் சைகைளால் செய்து காட்டி சிரிக்கச் செய்ததைப் போல; நம்ம வடிவேலு திரைப்படங்களில் செய்வது போல...இது தனி ஒருவராக மேடையில் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக வேடிக்கையாகப் பேசிச் சிரிக்கச் செய்வது.


              கலை                                தமிழ் விளக்கம்

1. அக்கர இலக்கணம் ( எழுத்திலக்கணம்)
2. லிகிதம் (இலிகிதம்) (எழுத்தாற்றல்)
3. கணிதம் (கணிதவியல்)
4. வேதம் (மறை நூல்)
5. புராணம் (தொன்மம்)
6. வியாகரணம் (இலக்கணவியல்)
7. நீதி நூல் (நய நூல்)
8. சோதிடம் (கணியக் கலை)
9. தரும சாத்திரம் (அறத்து பால்)
10. யோகம் (ஓகக் கலை)
11. மந்திரம் (மந்திரக் கலை)
12. சகுனம் (நிமித்தக் கலை)
13. சிற்பம் (கம்மியக் கலை)
14. வைத்தியம் (மருத்துவக் கலை)
15. உருவ சாத்திரம் (உருப்பமைவு)
16. இதிகாசம் (மறவனப்பு)
17. காவியம் (வனப்பு)
18. அலங்காரம் (அணி இயல்)
19. மதுர பாடனம் (இனிது மொழிதல்)
20. நாடகம் (நாடகக் கலை)
21. நிருத்தம் (ஆடற் கலை)
22. சத்த பிரமம் (ஒலிநுட்ப அறிவு)
23. வீணை  (யாழ் இயல்)
24. வேனு (குழலிசை)
25. மிருதங்கம் (மத்தள நூல்)
26. தாளம் (தாள இயல்)
27. அகத்திர பரீட்சை (வில்லாற்றல்)
28. கனக பரீட்சை (பொன் நோட்டம்)
29. இரத பரீட்சை (தேர் பயிற்சி)
30. கச பரீட்சை (யானையேற்றம்)
31. அசுவ பரீட்சை (குதிரையேற்றம்)
32. இரத்தின பரீட்சை (மணி நோட்டம்)
33. பூ பரீட்சை (மண்ணியல்)
34. சங்கிராம இலக்கணம் (போர்ப் பயிற்சி)
35. மல்யுத்தம் (கைகலப்பு)
36. ஆகர்சணம் (கவிர்ச்சியல்)
37. உச்சாடணம் (ஓட்டுகை)
38. வித்து வேஷணம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாத்திரம் (மயக்குக் கலை)
40. மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசீகரணம் (வசியக் கலை)
42. இரசவாதம் (இதளியக் கலை)
43. காந்தர்வ விவாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீல வாதம் (பிறவுயிர் மொழி)
45. தாது வாதம் (நாடிப் பயிற்சி)
46. கெளுத்துக வாதம் (மகிழுறுத்தம்)
47. காருடம் (கலுழம்)
48. நட்டம் (இழப்பறிகை)
49. முட்டி (மறைத்ததையறிதல்)
50. ஆகாய பிரவேசம் (வான்புகுதல்)
51. ஆகாய கமனம் (வான் செல்கை)
52. பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டு கூடுபாய்தல்)
53. அதிரிச்யம் (தன்னுறு கரத்தல்)
54. இந்திர சாலம் (மாயம்)
55. மகேந்திர சாலம் (பெருமாயம்)
56. அக்னி தம்பம் (அழற் கட்டு)
57. சல தம்பம் (நீர்க் கட்டு)
58. வாயு தம்பம் (வளிக் கட்டு)
59. திட்டி தம்பம் (கண் கட்டு)
60. வாக்கு தம்பம் (நாவுக் கட்டு)
61. சுக்கில தம்பம் (விந்துக் கட்டு)
62. கன்ன தம்பம் (புதையற் கட்டு)
63. கட்க தம்பம் (வாட் கட்டு)
64. அவத்தை பிரயோகம் (சூனியம்)

இவ்வாறு பட்டியலிடுகிறது விக்கிபீடியா. (அந்த அறுபத்துநான்கு கலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 குறிப்பிடப்பட்டுள்ளவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.)

அட,
கிபி 2ல் தொடங்கி 64 கலைகளின் பட்டியலில் இடம்பெற்று நாம் இடையில் கைவிட்டுவிட்ட இந்த மகிழுறுத்தற்கலை இன்று என்னமாய் மேலைத் தேயங்களில் கொடிகட்டிப் பறக்கிறது!!

பின்னிணைப்பு: (பேச்சுப் போட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட கட்டுரை)

                                                மகிழுறுத்தற் கலை

வாழ்க்கையைச் சிறப்பிப்பவை கலைகள்.

தமிழருக்கெனச் சிறப்பாக உள்ள கலைக் கூறுகளை எல்லாம் தமிழ் மொழி தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. அவற்றை எல்லாம் மொழி ஞாயிறு எனப் போற்றப்படும் தேவநேயப் பாவானர் 64 என வகைப்படுத்தி உள்ளார்.

தியானமும் யோகாசனமும் சித்தர்கள் காட்டிய சித்த வைத்தியமும் உலகமே கண்டு இன்றும் நடைமுறைப்படுத்தும் வாழும் கலைகளாகும்.  தமிழரின் பரதமும் இன்றுவரை உயர்ந்து நிற்கும் கோயில் கட்டிடச் சிற்பக் கலைகளும் பெருமை மிக்க நம் கலைக் களஞ்சியங்களாகும்.

இருந்த போதும், ஒரு காலத்தில் வழக்காகவும் பிரபலமாகவும் இருக்கும் ஒரு கலை பிறிதொரு காலத்திலும் அவ்வாறே அமைந்திருக்கும் எனக் கருத இயலாது. மனித சமுதாயத்தின் நாகரிக சிந்தனை வளர்ச்சிகளின் ஊடே அவை மேன்நிலையடையவோ திரிந்து வேறொரு நிலையை அடையவோ அன்றி வலுவிழந்து இல்லாதொழியவோ கூடும்.

அவ்வாறே தமிழிலும் சில கலைகள் மறைந்து விட்டன. சில ஒளி மழுங்கி துலக்கம் பெறாது தீட்டப்படாத வைரத்தைப் போலக் காணப்படுகின்றன.
அவற்றில் ஒன்றுதான் இந்த மகிழுறுத்தற்கலையாகும்.

இதனைக் கவுத்துவ வாதம் என்றும் அழைப்பர். மகிழுறுத்தும் இக்கலையாவது யாது? அது தான் கவலையைப் போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கலைஞானம் ஆகும்.  இதனை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் வேடிக்கையாகப் பேசி மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் கலைஞானம் எனலாம்.

இந்த மகிழுறுத்தும் கலைஞரை ‘நகைவேளம்பர்’ என அழகிய தமிழ் சொல்லால் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.

இன்று பல்கலாசார நாடான அவுஸ்திரேலியாவிலே one-man comedy shows ஆக இதனை அடிக்கடி மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கண்டு களிக்கிறோம்.

இதனைத் தமிழர் சுமார் கி.பி.6ம் நூற்றாண்டளவிலேயே ஒரு கலையாக வளர்த்ததோடு மட்டுமன்றி அக்கலைஞருக்கென ஒரு சிறப்புப் பெயரும் சூட்டி அதனைக் கொண்டாடி வந்திருக்கிறனர் என்பது ஆச்சரியமான சந்தோஷமல்லவா?

ஆகையினால் தமிழ் கலைகளை அறிவோம்.

யசோதா.பத்மநாதன். 25.3.19