Showing posts with label என் கவிதைகள். Show all posts
Showing posts with label என் கவிதைகள். Show all posts

Saturday, September 27, 2025

ஒரு காலை விழாவும் பள்ளி வளவும்

 

ஒரு காலை விழா


பாதையில் தெரியும் வீட்டு மருங்குகளில்

கொள்ளையாகப் பூத்திருக்கின்றன டெய்சி மலர்கள்.

வீதியோரத்து மின்கம்பத்தில் 

குந்தியிருக்கும் மக்பைகளுக்கு 

கண்கள் பூச்சிகளிலா? பூக்களிலா? 


கொக்கட்டூக்களுக்குப் 

பெரிய சாரீரம். 

கர்னகடூரமாய் சப்திக்கின்றன


அவ்வப்போது மனிதர்களைப் போலவே

கொக்கட்டமிட்டுச் சிரிக்கின்றன 

மரக்கிளைகளில் குந்தியிருக்கும்

சில கொக்குபாராக்கள்.


குருவிகளுக்கு என்னவோ

காலையில் தான் பலத்த உரையாடல்கள்....


அவரவர்க்கு இருக்கின்றன போலும் அவரவர்க்கான

பிரச்சினைகள், புலம்பல்கள்.


இந்தச் சத்தக் காலையில் 

சூரியன் வேறு சுளீரென்று.


வீதி சமிக்ஞைகளில்

தாமதிப்பின் சத்தமும் சேர்ந்து கொள்ள 

ஒரே ஆரவாரக் காலை.


பேரப்பிள்ளையைக் கூட்டி நடக்கிறாள்

அண்மையில் தான் வந்ததான பாவனையில் ஒரு மூதாட்டி.


பள்ளிச் சீருடையில்

சில செல்லச் சிரிப்பொலிகள்

ஹெட்போன் மாட்டியபடி

நடக்கும் சில

இருகால் இயந்திரங்கள்


பாதையில் நிற்கும் பொட்டில்பிரஷ் 

மரத்தில் தான் எத்தனை சிவப்பரும்புகள்.


அரும்புகளென சில குழந்தைகளும் 

நடைபோடுகின்றன பள்ளிக்கு......

....................


பள்ளி வளவுக்குள். .....


திறந்து திறந்து 

பிள்ளையை பத்திரமாய் உள்வாங்கி

மூடிக்கொள்கிறது பள்ளியின் திட்டிவாயில்.


 கட்டிடங்களின் கூட்டம் மட்டுமா உள்ளே? .


சீமாட்டியென நிமிர்ந்து நிற்கிறது

மைதான பூமியை முன்னே கொண்டிருக்கும்

முன்கட்டிடம். 

வயிறு பெருத்த சீமாட்டி.அவள்.


அந்த விளையாட்டுத் திடலில்

கூடிக் களிக்கின்றன குழந்தைகள்.


எத்தனை பிள்ளைகளின் களிப்பை கண்ணீரை 

விம்மலை வெப்பியாரத்தை

கனவுகளை அடிபிடியை 

 பிரிவை, பிரச்சினையை

கண்டிருக்கக் கூடும் இந்த மைதானம்?


இன்றும் யூதக்குழந்தையும் காசா குழந்தையும்

சேர்ந்தே விளையாடுகிறது முற்றத்தில்....

சிங்களக் குழந்தைக்கும் தமிழ் குழந்தைக்கும்

வித்தியாசமே தெரிவதில்லை தோற்றத்தில்.

கைகோர்த்து நடக்கின்றன 

பால்பாகுபாடறியா

பாலக நெஞ்சம்.

நீலக் கண்களும் பச்சைக் கண்களும் 

கறுப்புக் கண்களும் மண்ணிறக் கண்களும்

ஒன்றையே காண்கின்றன.

ஒன்றையே கற்கின்றன.


சாப்பாட்டுப் பெட்டியை மரத்திடம் 

பாதுகாப்பாய் இருத்தி விட்டு,

விளையாடித் திரிகின்றன  நிறங்கள்.

மஞ்சளும், வெள்ளையும், கறுப்பும், 

இவற்றுக்கிடைப்பட்ட 

அத்தனை நிறங்களையும் கலந்து கட்டி 

கண்டதில் களிப்புறுகின்றது தோட்டம்.


இருந்தும், எங்கிருந்து முளைகொள்கின்றன

பிரிவினைகளின் பெருவிருட்சங்கள்? 

துவேசத்தின் விஷத் துளிகளை

இந்தப் பாலக நெஞ்சங்களில் தூவியது யார்?

பொறாமையின் முட்செடிகள் முளை கொண்ட

மார்க்கம் என்ன?

எங்ஙனம் மனங்கள் நஞ்சுண்டன? 


ஆங்காங்கே சிந்திக்கிடக்கும்

சிரிப்பொலிகளிலும்

துள்ளி நடந்த கால் தடங்களிலும் 

உருண்டு பிரண்ட சண்டைகளிலும் 

மேலும்,

உதிர்த்த சில கண்ணீர் துளிகளிலும் 

விதையென விழுந்து முளைகொள்ளக் கூடும்

சில வாழ்நாள் சினேகங்கள்.


கொஞ்சம் துவேசத்தின் விஷ விருட்சங்களும்!

Wednesday, September 17, 2025

மெளனமான மலர்வு...

 கவனத்தைக் 

கண்டிப்பான கண்களுக்குள் புதைத்து வைத்தபடி

வீதிக் கடவையில் 

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கிறாள்

ஒரு பேரிளம் பெண்.


சூரிய மஞ்சளில் குளித்தபடி 

பள்ளியின் வாசல் பெருக்கும் முதியாளுக்கு 

மண்ணிலே விழுந்து போய் கிடக்கின்றன விழிகள்.


மதாளித்து நிற்கும் ஓர்க் மரத்திற்கு 

மலர்வான இலைகள்.


வளாகத்தினுள்ளே

அங்கொன்றும் இங்கொன்றுமாய் 

நடமாடித் திரிகின்றன

சில இபீஸ் பறவைகள்.


பிள்ளையை உள்வாங்கி

தானே மூடிக் கொள்ளும் முன்வாசல்

தானியங்கி கதவுக்குத் 

தாயுள்ளம்.


சூரிய வெளிச்சத்தில்

பட்டொளி வீசிப் பறக்கிறது தேசியக் கொடி.


வாசலோரம் நிற்கும்

தைல இலைகளின் மூலிகை வாசத்தை

மீறி உள்ளே வருகிறது

இராக்கால பறவைகளின் எச்ச மணம்.


பாதைக்கு அப்பாலிருந்து 

கண்வலை வீசி கையசைத்து விரைகின்றன 

வாகனத் தந்தமைகள்.


சறுக்குப் பலகையில் ஏறி

பள்ளிக்கேகிய பின் 

சறுக்குப் பலகையைக் கையிலேந்தி 

வீடு நோக்கி நகர்கின்றனர் அன்னையர்.


ஒரு போக்குக்கும் வரவுக்குமிடையே -

எட்டுக்கும் மூன்றுக்குகிடையே  -

சிலநூறு மாணவரின்

மாபெரும் வாழ்வு ஒன்று 

உள்ளேதான் ஒளிந்து போயுள்ளது.


நாள் ஒன்றின் காலை....

பள்ளி ஒன்றின் விடியல்...

பிள்ளை ஒன்றின் பாதை....

மெளனமாக மலர்கிறது.


17.09.2025. புதன் கிழமை , காலை.

ஒரு மரத்தின் நகர்வு

 










வீதியோரம் சிந்திக் கிடந்த

புன்னகையை

கூந்தலில் அள்ளிச் செருகியபடி

நடக்கும் அவளோடு சேர்ந்து

ஓடியும்; நடந்தும்; திரும்பிப் பார்த்தபடியுமாக

முன்னேறி நடக்கின்றனர்

பாலர் பள்ளிப் பிள்ளைகள்.


கைகளைப் பிடித்து நடக்கும் படியும்;

பக்கத்தோடே பாதுகாப்பாய் வா

என்னும் வார்த்தைக்கும்

பதிலில்லை அவர்களிடம்....


பக்கத்தில் பூத்திருந்த பூக்களுக்குக் 

கால் முளைத்தது போல

வீதியை அழகாக்கி

முன்னோக்கியே ஓடும் நதியினைப் போல...

நடக்கும் அவர்களோடு சேர்ந்து

அவர்களையும் கூட்டிப் பெருக்கியபடி

ஒரு மரமாக

நானும் நடக்கிறேன் 

பின்னோடு....


ஆசிரியருக்கு வேலை

வீதியிலும் இருக்கவே செய்கிறது..


17.09.2025 புதன் காலை

Saturday, July 1, 2023

தெருவோரம் அந்தச் சிறு மரம்



 சூரியன் தொட்டணைக்க மழைத்துளி பட்டணைக்க

முளை விட்ட அந்தச் சிறு செடி நாளை

விருட்சமாகுமோ? சிறு செடியென்றே ஆகுமோ?

பூடாகுமோ? விலங்குகளுக் கிரையாகுமோ?


பூக்குமோ? பூவோடு கனி தருமோ?

தேன் தருமோ? தேனோடு, வந்தமர கிளை தருமோ?

மனிதா! நீ வெட்டிச் செல்ல வழிவிட்டே மெல்ல சருகாகுமோ?

திருவுளமே! பெருநிலமே! அது வளர சம்மதமோ?


தளிர் விடுமோ? தனிமரமாய் இலங்கிடுமோ? 

கிளை விடுமோ? கிளைகளில் கிள்ளைகள் தங்கிடுமோ?

பழமரமோ? விதை தருமோ? தேன்பூக்களும் அங்குள லாகுமோ?

காற்று தருமோ அன்றேல் காற்றே முறித்து சாய்த்திடுமோ?


நடந்து செல்கிறாள் நிறைமாதத் தாயொருத்தி

பக்கத்தில் சிறு பிள்ளை கை பிடித்து போகிறது

திரும்பிப் பார்க்கிறேன் பெரு விருட்ச நிழலிலே

சிறு செடி அதுவும் தாயோடு நிற்கிறது.


துளிர் விடுவாய் சிறு மரமே! மகிழ்ந்திருப்பாய் பொறு மனமே!

குழந்தை நாளை பெரிதாகும்; களித்து நிழலில் கதை பேசும்

நீயும் நாளை மரமாக பழங்கள் நாளும் பழுத்து வரும்.

மரமும் மனிதனும் ஒன்றாகும் நாளும் அன்று வந்தணையும்.


மழையும் வெயிலும் மண் தரையும்

மகிழ்வாய் உதிக்கும் மரமனைத்தும்

உனதோ எனதோ என்றெண்ணா

எல்லாம் உயிரே என்றெண்ணி

மனசைக் கொஞ்சம் பெரிதாக்கி

இறைக்கும் கொஞ்சம் இடமொதுக்கி

கருணை உள்ள பெருந் தாயை

பணிந்தே போற்றி இரு மனமே!


ஆக்கம்: யசோதா.பத்மநாதன்

01.07.2023


Monday, June 12, 2023

இலையுதிர் காலத்தில் நடு நின்ற நெடுமரம்

 


கூரைமீதேறி நின்று
கூவி ஊரெழுப்பும் ஒரு 
செந்நிறச் சேவலைப் போலவும்
சந்தியா காலத்தில் நேரும் ஒரு
சூரியத் தூரிகை தீட்டும்
வண்ணத்து ஜாலம் போலவும்
சடையோடு கூடிய 
சிங்கம் ஒன்றின் 
கம்பீர நடை போலவும்
தோகை கொண்ட பெருமையோடு 
கழுத்துயர்த்தி நடக்கும் ஒரு 
நீலவண்ண மயில் போலவும்
இராச்சிய பாரத்தை ஏற்று நின்று
படையணியைப் பார்வையிடும் ஒரு
முடிக்குரிய ராஜா போலவும்
இலையுதிர் காலத்திலும் 
நிற்கிறதந்த 
இலையுதிர் காலத்து நெடுமரம்!




தென்றல் மெதுவாய் வருகிறது
இளவெய்யில் தானாய் காய்கிறது
மெல்ல இலைகள் உதிர்கின்றன
அடியில் அதுவாய் விழுகின்றன

போவோர் வருவோர் எல்லாம்
பேசிய படியே போகின்றார்
பார்க்க யார்க்கும் தோன்றாமல்
பாதை எங்கும் திரிகின்றார்

உதிரும் போதும் அழகாக
சிவந்த போதும் செழிப்பாக
சிரிக்கும் அந்தப் நெடுமரம்
இயற்கை தந்த பெரு வரம்!


வழியோரம் நிற்கிறது 
ஓர் இலையுதிர்காலத்து நெடுமரம்
செந்நிற இலைகளை வேருக்கு உரமாக்கி
பச்சை நிற மரங்களுக்கு மத்தியில்
நெடுத்துயர்ந்து தனியாக நிற்குமந்த 
கம்பீரத் தனிமரம்
நினைவுறுத்திப் போகிறது
சுயத்தோடு நிற்குமொரு 
விவாகரத்துப் பெற்ற பெண்ணை!

வேரில் விழுந்த செவ்விலைகள்
வேர்க்கு நல்ல உரமாக
நாளை அரும்பும் புது இலைகள்
சொல்லி நிற்கும் அவள் இருப்பை!
உண்மையான வாழ்வின் பொருளை!



படப்பிடிப்பும் கவிதை வரியும் : யசோதா.பத்மநாதன்
11.06.2023
( Targo road, Toongabbie)

Tuesday, May 23, 2023

தமிழும் தமிழ்நாடும் - ஒரு நகை முரண்

 


’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’

காணொளி வாயிலாய் 

பாரெங்கும் பரவுகிறது

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று.

’நேருக்கு நேர்’ நின்று பேசுகிறார் இளைஞர்

‘மெல்லத்தமிழினி சாகுமா சாகாதா’

என்றவர் வைக்கிறார் வாதங்கள்.

நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்குகிறது

‘தி சென்னை சில்க்’

புகழ் பூத்த பேச்சாளர் மேடையில் வீற்றிருக்க

திரையில் விழுகிறது 

அக்கறைக்குப் பதிலாய் அக்கரை என்றொரு வார்த்தை.


அக்கரையில் தான் தமிழினி வாழுமோ?

வலைத்தளப் போராளி கொள்கிறார் ஆவேசம்!

23.05.23.

Monday, April 19, 2021

அன்றாட பாடங்கள்

 


தண்ணீர் சொல்லித் தருகிறது

நழுவிச் செல்வதெவ்வாறென


நெருப்பு அறிவுறுத்துகிறது

சுட்டெரித்தல் பற்றி


நிலம் தோண்டியும் பொறுமை காக்கும் பூமி

போதிக்கும் பாடம் 

நெருப்புக்கு எதிர்மாறு


காற்றோ, ஊதிப்பெருப்பித்தும்

வருடிக்கொடுத்தும்

நோகாமல் நகர்கிறது.


இறுதியாக,

எல்லாவற்றையும் 

பார்த்துக் கொண்டிருக்கும் 

ஆகாயத்தின் மீது தான்

கோபமாக சூரியனும்

குளிர்ச்சியாக சந்திரனும்

பவனி வருகிறது.


அன்றாட வாழ்வில்

படிக்கும் பாடங்கள் அநேகம்..


Sunday, April 18, 2021

மர்மங்கள்....



பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல் நீரில் இருந்து உப்பை பிரிக்கவும்

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


பிறந்தவுடன் கடல் நோக்கி வரவும் 

பை நோக்கி நகரவும் 

சொல்லித் தரவில்லை யாரும் என்ற போதும்,

அறிந்து கொண்டுள்ளன

ஆமை, கங்காரு குட்டிகள்


ஐந்தறிவுக் குழந்தைகளுக்குச்

 சொல்லிக் கொடுத்தது யார்?

பிறந்தவுடன் எழும்பவும் 

தாய்மடி தேடி பால்பெறவும்?


ஆதாம் ஏவாள் காதலுக்கும் 

சேய் கொண்ட தாய்மைக்கும் 

பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை யாரும்.


பழம் தந்து விதைபோட்டு வளரும் மரங்கள்

சொல்லித் தருகின்றன வாழ்வின் பாடல்களை!

பழம் தந்து வீழும் வாழையும்

விழுது விட்டு வாழும் விருட்சங்களும்

மெளன மொழியில் சொல்கின்றன

பூமியின் ரகசியங்களை!


முள்ளுள்ள றோஜா; வெள்ளைநிற பாரிஜாதம்

தண்ணீரோடு ஒட்டாமலே தண்ணீரில் வாழும் தாமரை

சொல்லும் பாடங்களும் படிக்க உகந்தன.


குழந்தை உயிரினங்கள் தவழும்

மடியிலெல்லாம்

உயிர்ப்பின்  புன்னகை நிறைந்து கிடக்கிறது.


கொன்று தின்னப் பணிக்கும் இங்கே தான்

தாய்மையின் உயிர்ப்பிலும் குழந்தைகள் பிறப்பிலும்

மறுபடி மறுபடி உயிர்க்கிறது உலகு.


சிப்பிக்குள் இருக்கிறது முத்து.

மண்ணுக்குள் இருக்கிறது வைரம்.

பெறத் தெரிந்த மனிதனுக்கு புரியவில்லை 

பிறப்பின் முன் பின்  மர்மங்கள் மட்டும்.


எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் இலைகளை எல்லாம்

கூட்டிப் பெருக்குகிறாள் சிறுமி.

எனினும்,

மீண்டும் மீண்டும் உதிர்கின்றன இலைகள்.


உலகப் பள்ளியில் அறிய உள்ளன

எண்ணற்ற இரகசியங்கள்....

Thursday, December 17, 2020

season's Greetings

 


செட்டைகளை உதிர்த்தபடி

உயரப்பறக்கின்றன பறவைகள்.

இலைகளை உதிர்த்தபடி

உயர்கின்றன மரங்கள்.


மலர்ந்தும் மறைந்தும் போகின்றன பூக்கள்.

கனிந்தும் பிறகு கரைந்தும் உதிர்கின்றன கனிகள்.


காலம் காய்த்த காட்சியென

உதிக்கின்றனர் சூரிய சந்திரர்.

நாட்களை உதிர்த்து 

நகர்கின்றன காலங்கள்.


பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல்நீரில் இருந்து உப்பைப் பிரிக்கவும் 

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


மழை,கார் இருட்டிலும்

கொப்பிழக்கப் பாய்வதில்லை மந்திகள்.


சூரியனை நோக்கி விழித்திருக்கும் புற்கள்

முறைப்பாடுகள் செய்வதில்லை.


சேவலின் கம்பீரம் பேட்டிடத்து இல்லை.

பசுவின் சாந்தம் காளையிடத்து இல்லை.

விரையும் குதிரைக்கு கொம்பு இல்லை

பாடும் குயிலுக்கு அழகில்லை

யானைக்குத் தன் பலம் தெரிவதில்லை

புறா தன் இணை பிரிவதில்லை.


சுயாதீனமாய் திரியும் உயிரினங்கள்

பருமனே இல்லை.


பாருங்கள்,

காலத்தால் அன்றி கனிவதே இல்லை 

பழங்கள் மரத்தில்.


சங்கு என்னவோ சுட்டாலும்

வெண்மையையே தருகிறது.


உலகப் பண்பாட்டையே

உருட்டி விளையாடுகிறது

கண்ணுக்கே தெரியாத 

நுண்ணுயிர் ஒன்று.


இலவசக் காட்சியென

வாழ்க்கைக் கோலங்களை

 விரித்து வைக்கிறது பிரபஞ்சம்.


பின்புறமாக பறக்கவல்ல

ஹம்மிங் பறவை,

மூன்று விழிமடல்கள் கொண்ட ஒட்டகம்,

விழி திறந்த படி தூங்கும் டொல்பின்,

கால்களால் சுவை அறியும்

வண்ணாத்திப்பூச்சி,

இரண்டு கண்களாலும் இரண்டு காட்சிகள்

காணும் ஓணான்,

பிறந்த நிமிடமே பறக்கும் தேனீ,

வெட்டும் துண்டுகளில் இருந்தெல்லாம் 

உயிர்க்கும் நட்சத்திரமீனெனெ

இவைகளெல்லாம் 

கற்றுக் கொடுக்கிறன 

வாழ்க்கை வினோதங்களை


அவரவர்க்கான வல்லமைகளையும் 

புதிர்மிக்க இரகசியங்களையும்

இதற்குள் எங்கோ தான்

ஒழித்து வைத்துள்ளது இயற்கை....


கற்றபடியும் பெற்றபடியும்

தொடர்கிறது வாழ்க்கை.


இன்னும்,

குழந்தை உயிரினங்கள்

தவழும் மடியிலெல்லாம்

 நிறைந்தே கிடக்கிறது

கடவுளின் புன்னகை.


நீரூற்றி, கவனித்து நட்ட விதைகள்

நலிவின்றித் தருகின்றன கனிகள்.

அவைகளின் விதைகளில்

துளிர்க்கின்றன விருட்சங்கள்.


கவனிப்பிலும் அன்பிலும் 

உயிர்க்கிறது உலகு.


season சிரிக்க 

சிந்துகிறது வாழ்க்கை!


Season's Greetings!



யசோதா.பத்மநாதன்

13.12.2020.

Sunday, December 6, 2020

ஆறு....

 அகம் நகுதல் - உள்ளம் உவகை கொள்ளுதல் - உள்ளம் புன்னகைத்தல் - இப்படி ஒரு சம்பவத்தை ஏதேனும் ஒரு முறையேனும் நிச்சயம் நாம் அனுபவம் செய்திருப்போம்.

உவகை கொண்ட தருணங்கள், அகம் நகை செய்த தருணங்கள் பல இன்றைக்கும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை நடந்த அகம் உவகை கொண்டு ஆறாக பெருகி ஓடிய தருணம் ஒன்று இது.



                      ஆறு

சில நாட்கள் உன் வகுப்புக்கு நான் வரவில்லை.

அடுத்த வகுப்புக்குள் நுழைந்த தருணம் ஒன்றில்

நீ ஓடி வந்து வழி மறித்தாய்.

விழியெல்லாம் ஆர்வத்தைக் கோலி

பதினெட்டுப் பற்களிலும் புன்னகை தேக்கி

'ஒன்றைத் தொடு' என்றாய்.

நீலம் என்றேன்.

மேலுமொன்றைத் தொடு என்றாய்

பூ ஒன்றைத் தொட்டேன்.

மேலும் ஒன்றைத் தொடப் பணித்தாய்.

இரண்டைத் தொட்டேன்.

ஆறைத் தொடு; ஆறைத் தொடு என்று துள்ளினாய்.

ஆறைத் தொட்டேன்.

அதை விரித்து,’யூ ஆர் த குயின்’

என்றதைச் சொல்லி விட்டு

பரட்டை மயிர் துள்ளித் துள்ளி விழ

குதித்தோடிச் சென்றாய்.


உன்பின்னால் பெருகி ஓடியது

ஆறு....

Sunday, May 31, 2020

மரத்தின் பாடல்


ஆதிக்குடி நான்.

என் நிறமூர்த்தத்தில் பதிந்திருக்கிறது
பிரபஞ்சத்தின் இரகசியக் கோடுகள்
கிளைபரப்பும் இலைகளில்
மண்ணின் சாறு கலந்திருக்க
ஆகாயம் நோக்கி நிமிர்ந்து
காற்றுக்குக் கையசைக்கும்
விரல்களில் விழித்திருக்கிறது
அந்த விசித்திர உண்மை.

பூவின் வாசத்தை
குப்பிப் பூக்களில் அடைத்து வைத்து
தேனீக்களை விருந்துக்கழைக்கிறேன்
மனிதர்க்கு ஒழித்து தேனை
குருவிகளுக்கும் பகிர்ந்தளிக்கிறேன்.
பூப்பூத்து காய்காய்த்து
பழங்களைத் தின்னக் கொடுக்கையில்
பறவைகளுக்குத் தாயாகிறேன்.
அவைகள் விசிறிச் செல்லும் எச்சங்களில்
என் விருட்சங்களாகும் சூட்சுமம் ஒளிந்திருக்க
திமிர்த்து நிமிர்கிறேன்.
இதுவே நானெனெ நிமிர்ந்து நிற்கிறேன்.

வேறென்ன? யாதொன்றும் நானறியேன்
வேறொன்றும் யானறியேன்.
எனினும் ஏன்
வெட்டி வீழ்த்தினாய் என்னை?

முள்ளிவாய்க்காலில்
முடிந்து போன என் தேசமே......

பொறுத்திரு
சூட்சுமத்தின் இரகசியமென
நீருக்கும் விதைக்கும் நேரத்துக்கும்
நேரப்பட்டிருக்கிறது ஒரு  சந்திப்பு.
பறவை சுமந்த என் விருட்சம்
வீழ்ந்து பெருகும் அந் நாளில்
நான் ஒரு பெரும்
வினையெனவே எழுவேன்.
பெரும் வினையெனவே எழுவேன்

அப்போது என் மண்ணில் வேரூன்றி
சாறுறிஞ்சி மேலேறி
ஆகாயம் நோக்கி நிமிர்ந்து
பிரபஞ்சத்தின் இரகசியக் கோடுகள்
கலந்திருக்கும் அந்த
ஆதி வண்ணத்தின் சாயலில்
கையசைக்கும் இலை மீது
காற்றைப் பிடித்து எழுதுவேன்
வினையெனவே எழுந்தேனென்ற
அந்த ரகசிய  பாடல் ஒன்றை

அதன் பிறகு

பூத்துக் குலுங்குமென் வாழ்வு
மகரந்தங்கள் பிரிந்து பெருக.....

- யசோதா.பத்மநாதன் -
22.5.20.

( பதினொரு வருடங்களுக்கு முன் இம்மாதம் முள்ளிவாய்க்காலில் பெருகி ஓடிய  மரணங்களுக்கும் இழப்புகளுக்கும் இரத்தத்திற்கும் கண்ணீருக்கும்  ஓங்கி ஒலித்த ஒப்பாரிகளுக்கும் பெருமூச்சுக்களுக்குமாக......
அவற்றை நினைவுகளில் ஏந்தி...

Monday, May 18, 2020

பிரிவின் நிறம் செம்மஞ்சள்



பிரிவின் நிறம் செம்மஞ்சள்.
கயர்ப்பு நெல்லி சுவையதற்கு.

பச்சை மஞ்சள் சிவப்பு என
நிறம் மாறுகின்றன இலைகள்
பருவகாலத்தைப் பின்தள்ளி
மாற்றங்களை முன்னிறுத்தி.....

மஞ்சளில் இருந்து
சிவப்புக்கு நிறம் பெயரும்
இலையின் நுனியில்
அமர்ந்திருக்கிறது
பிரிவின் துயர் கெட்டியாக.

இலையின் நுனியில்
ஒரு காலத்தைப் போல
அமர்ந்திருக்கும்
கருப்பும் சிவப்புமென
வண்ணம் கொண்ட லேடி Bக்கோ
கசப்பினை பிளிந்து
தைல வாசனையை
காற்றில் பரப்புகிறது.

இடம்பெயர்கிறன
மனநிலைகள் மெல்லெனவே..
கற்றில் பரவும்
தைலவாசனை போலவே
பருவகாலத்தைப் பின்தள்ளி
மாற்றங்களை முன்னிறுத்தி
இலைபோல வெகு இயல்பாக....

ரேகையோரமாய் ஊர்ந்து
கிளைரேகையில் பரந்து
இலை மெல்ல
செம்மஞ்சள் ஆகும் தருணம்
ஆயிற்று அமைதியாய்
ஒரு விடுபடல் சம்பவம்

கயர்ப்பு நெல்லி சுவையை
உண்டு உயிர்க்கிறது
வாழ்வு.

அதன் உந்திய உயிர்ப்பில்
விருட்சத்தில் இருந்து
பிரிந்து உதிர்கிறது
இயல்பாக
செம்மஞ்சளேயான
இலையொன்றும்

உடலில் இருந்து உளம் ஒன்றும்...

நம்புங்கள்,
கயர்ப்பு நெல்லி சுவை கொண்ட
பிரிவின் நிறம் செம்மஞ்சள்.
செம்மஞ்சளேயாகும்.

- யசோதா.பத்மநாதன் -
18.5.20.

( வீதியில் சற்று முன்னர் பார்த்த செம்மஞ்சள் இலையொன்று தந்த கவிதை (?) இது )

Saturday, May 2, 2020

கொரோனாவை நினைத்த படி...



கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்

பாதை எங்கனும்
சத்தமில்லா நிசப்தம்..

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு....

குர் குர் சத்தங்கள்...
பகிர்ந்தமரும் மாடங்களில்
சல்லாப உரையாடல்கள்...
இளமையின் வழுவழுப்பில்
வழுக்கி விழும் அழகுகள்...
குறு குறு பார்வைகள்...
எதிர்க்கத் தெரியாத
அவைகளின் குணாம்சம்...
மனிதரோடு உறவாடி
பயமற்றுப் போன அன்னியோன்யம்...

கணவன் மனைவியென
பகிர்ந்துண்ட வாழ்வு...
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
பேறாக்கிய பெருமை...
தாயாகும் தந்தைமை...
தந்தையாகும் தாய்மை..

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

எனினும்,
எச்சம் எஞ்சும் மாடங்களை
சுத்தம் செய்யப் பஞ்சிப்பட்டு
அவைகளைக் கொல்லுமொரு
நஞ்சுக்கிண்ணம்!

தந்திரமாய் நஞ்சு வைத்து
கொல்லும் அந்தக் கைகளுக்கு
தெரிந்திருக்கக் கூடுமோ?
குஞ்சுகள் இன்னும்
இரைகளுக்குக் காத்திருப்பது குறித்து....
மாலை தேடி வரப் போகும்
ஜோடிப்புறா பெறப்போகும்
ஏமாற்றம் குறித்து....
மனித சகவாசத்தை
அவைகள் எவ்வளவு உண்மையென
நம்பின என்பது குறித்து...
அவைகளுக்கென்றும்
ஒரு வாழ்வு இருந்தது குறித்து
இன்னும் இன்னும்....
....................

இப்போதெல்லாம் மாடங்களில்
சத்தமே இல்லாத நிசப்தம்.
பாதை எங்கனும் காணும்
சத்தமில்லா நிசப்தம் போல....

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையைப்
பார்த்த சலிப்பு...

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்.

யசோதா.பத்மநாதன்
2.5.2020.

Wednesday, April 29, 2020

கவிதை யாதெனில்...


கவிதை ஒரு சங்கீதம்
கவிதை ஒரு முரசொலி
கவிதை ஒரு பீரங்கி
பூ அம்பு
காலம் தீட்டும் ஓவியம்
இருட்டின் கண்
சூரியச் சிறகு.

உணர்வுகளின் சிரஞ்சீவிதம்
உயிரின் வியாபகம்
ஒரு குழந்தையின் அழுகுரல்
ஊமை தேக்கி வைத்த சொற்தொகுதி!.
மேலும் அது ஒரு பெருமூச்சு.

கவிஞனுக்கோ அது
துன்பத்தைக் கடக்கும் படகு
அவ்வப்போது
பாரத்தை இறக்கி வைக்கும்
சுமைதாங்கி
மேலும்
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டை
சிலநேரம் குருடனுக்குக்
கிட்டிய கைத்தடி
போல்வதுமாகும்.

அபூர்வ சந்தப்பங்களில்
கவிஞன் யாவனெனில்
பிரபஞ்ச ரகசியம் ஒன்று
தன்னை வெளிப்படுத்த
தெரிவு செய்த
வரம் பெற்ற தாய்!

கண்ணுக்குத் தென்படாத
எழுத்துத் தேவதை
கொடுக்கும் ஒரு
வாஞ்சை மிக்க முத்தம்
கவிதை!

அது ஒரு குட்டிக் குழந்தை
அன்று பிறந்த
கோழிக்குஞ்சு
கடவுளின் பரிவட்டம்
இரங்கி தாய் கொடுத்த பால்.
தெரியாதவரையும் பார்த்து
புன்னகைக்கும் ஒரு
மழலை போல்வது.

தன்னைக் காட்டும் கண்ணாடி
மனசின் மொழிவடிவம்
சும்மா போகுமொரு
நிர்வாணம்.
மனுக்குல உணர்வுகளின்
வெளிச்சப்புள்ளி.
வழிப்போக்கனின் நாட்குறிப்பு.

உண்மையின் பிரகாசம்
பிரபஞ்சத்தின் சாயல்
அறத்தின்; தர்மத்தின்
நெற்றிக் கண்.
அவ்வப்போது
சீற்றத்தின் கூர் வாள்.

கோபம் போர்த்த
கவிதை ஒன்றைப்
போட்டுடைத்தால் அது
அன்பின் துகளெனவே
நொருங்கிச் சிதறும்.

அழும் கவிதை ஒன்றை
உடைத்துப் பாருங்கள்
அதுவும் அன்பென்றே
பெருகும்...

கடவுச்சீட்டின்றி பயணித்து
யாரோ ஒருவருக்கு
கொடுக்கும்
ஜீவித முத்தம் கவிதை.

இறுதியாகக் கவிதை என்பது
உயிர் உயிரோடு பேசும்
மொழிவடிவம்.
உயிர் தான் எழுதும்
 ஒரு சுயசரிதை
என்றும் சொல்லலாம்.

- யசோதா.பத்மநாதன்.-
29.4.2020.

( அண்மையில் சில கவிதைகளோடு உறவாட முடிந்தது. அதன் விளைவாக எழுந்தது இது.)