Wednesday, July 11, 2012

ஹென்றி லோசன் கதை

இன்றய தினம் தோழி ஒருத்தியை சுகயீனம் பார்க்கச் சென்றிருந்தேன். மனமொட்டிப் பேசக்கூடிய சிலருக்குள் அவரும் ஒருவர். சுகயீனம் பார்க்கச் செல்வது அடிப்படையில் இருந்தாலும் மனதுக்குப் பிடித்த விடயங்களை பேசுவதில் இருக்கும் ஆர்வம் அதை விடக் கூடுதலாக இருந்தது.அது அவரையும் என்னையும் சோர்வில் இருந்து சுறுசுறுப்புக்கு இட்டுச் செல்லும்  என்பது இருவருக்கும் தெரியும்.

என்னை அவர் ஏமாற்ற வில்லை. நம்முடய பேச்சு பலவிடயங்களையும் சுற்றி வந்து தான் இந்தியாவில் வாழ்ந்த போது தன்னோடு வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியிருந்த பெண்னைப் பற்றிய பேச்சில் வந்து நின்றது.

அமெரிக்காவில் வசித்த அப் பெற்றோருக்கு அப்பெண் இந்திய வாழ்வினையும் ஒழுக்க நெறிகளையும் அறிந்து வரவேண்டும் என்பது விருப்பமாய் இருந்தது. அவளுக்கு எப்படியோ இந்தியாவில் இடம் பெற்ற பெண் சிசுக்கொலை பற்றிய செய்தி கிட்டியிருந்திருக்கிறது. அவள் அது பற்றித் தன்னிடம் தூண்டித்துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பாளாம்.என் தோழியோ அப்படி எல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்லிய வண்ணம் இருப்பாராம்.

ஒரு நாள் பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த போது மேலாடை அணியாத நீண்டகாதுத் துவாரம் கொண்ட பெரும் பாரம் கொண்ட காதணி அணிந்த மூதாட்டியைக் கண்டு இம்மூதாட்டியிடம் அது உண்மையா என்று கேட்குமாறு அப்பெண் இவரை வற்புறுத்தினாராம்.(அப்பெண்னுக்குத் தமிழ் தெரியாது) இவரும் அதனைத் தவிர்க்க முடியாது கேட்டிருக்கிறார்.அம்மூதாட்டியும், ஆமாம், நானே அதைச் செய்திருக்கிறேன்.ஒரு நெற்பருக்கை அதற்குப் போதும்.அப்பெண் ஜென்மம் என்னைப் போலவோ ஏனைய நம் பெண்களைப் போலவோ கஸ்ரப்படவா வேண்டும்? நான் அக்குழந்தைக்கு நன்மையையே செய்திருக்கிறேன் என்று மிக மனநிறைவோடு சொன்னாராம்.

அவரைப் பொறுத்தவரை அவர் செய்தது அவருக்கு தர்மமாக இருந்திருக்கிறது. அதன் சரி பிழைகளை  விமர்சிப்பது எனது நோக்கமல்ல.ஒருவர் என்ன காரணத்துக்காக ஒரு விடயத்தைச் செய்கிறார் என்பதற்குப் பின்னால் இருக்கின்ற உளவியல் காரணங்களை பெரும்பாலான நேரங்களில் நாம் காணத்தவறி விடுகிறோம். உடனடியாகவே தீர்ப்புகளை வழங்கி விடுகிறோம்.

இது மனித சமுதாயத்துக்கே உரிய குறைபாடு போலும். நம்மிடம் இருக்கும் ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெகு சுலபமாக எடை போட்டு விடுகிறோம்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஹென்றிலோஷன் என்று ஒரு அவுஸ்திரேலிய வந்தேறு குடியான ஒரு மதுவுக்குப் பெரிதும் அடிமையாகி விட்ட அஃறிணை உயிரினங்களைப் பெரிதும் நேசித்த ஒரு இலக்கியவாதி இருந்தார். அவருடய பல சிறுகதைகள் அவுஸ்திரேலியப் பத்திரிகைகளில் வெளியாகி அவுஸ்திரேலியர்களுடய இலக்கியத்துக்குப் பெரிதும் பங்களிப்புச் செலுத்தியுள்ளன.

அவருடய பல கதைகள் மனிதாபிமானம், நாணயம்,தோழமை,கருணை போன்ற மனித இயல்புகளை சொல்லி நிற்கின்றன.அவருடய 10 கதைகளைத் தேர்ந்தெடுத்து நவீனன் ராஜதுரை என்பார் தமிழில் மொழிபெயர்த்து ’ஹென்றி லோஷன் கதைகள்’ என்ற தலைப்பில் 1995ம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அதில் மிச்சேல் என்ற முரடன் என்ற கதை தன் இயல்போடு இருக்கின்ற ஒருவனை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.

அந்தச் சம்பவத்தை கேட்ட போது இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்தது.

                                  மிச்சல் என்ற முரடன்



அது ஒரு வறிய பண்ணை. மேற்பார்வையாளரிடம் சென்று ஏதாவது உணவு கிடைக்குமா பார்க்கலாம் என்று மிச்சல் எண்னினான். அவன் தோழர்களோ மேற்பார்வையாளர் போன பின் சமையல் காரனிடம் சென்று கேட்கலாம் என்று காத்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் தந்திரசாலியும் வாயாடியுமான மிச்சல் அது வரை காத்திராமல் உள்ளே செல்லத் தீர்மானித்தான்.

‘வணக்கம்’ என்றான் மிச்சல்.

‘வணக்கம்’ என்றார் மனேஜர்.

‘நல்ல வெய்யில் இல்லையா?’ என்றான் மிச்சல்.

ஆமாம் வெய்யில் தான்.

ஏதாவது வேலை பார்க்கலாம் என்று தான் வந்தேன்.ஏதாவது வேலை.....

உம்... இல்லை.

வேலி கீலி ஏதாவது அடைக்க வேணுமா?

இல்லை.

வேலி கீலி திருத்தக் கொள்ள.....

இல்லை.

வேறு ஏதாவது வேலை செய்ய ஆள் தேவையா?

இல்லை.

அப்பிடித்தான் நானும் நினைச்சன். இப்ப எல்லாம் படு மோசம் போல தெரியுது.

இல்லை...அ..ஆமாம்..உண்மைதான்.

எங்கள் பாடும் அப்பிடித்தான். எண்டாலும் ஏதாவது சாப்பாடு கீப்பாடு கிடைக்குமோ எண்டுதான் வந்தனான்.

உனக்கு என்ன வேணும்?

என்ன ஒரு கொஞ்ச இறைச்சியும் மாவும் தான்.அது போதும் எண்டு தான் நினைக்கிறன். சீனியும் தேயிலையும் போதுமான அளவு இருக்குது.

கோக்கி அங்க இறைச்சி இருக்குதா?

உம்? இல்லை.

உனக்கு ஆடு அறுக்கத் தெரியுமா?

ஏன் தெரியாது?

இந்தாப்பா இவனுக்கு கத்தியும் துணியும் குடு. முற்றத்துக்குப் போய் ஆடு அறுக்கட்டும். என்றார் மனேஜர் சமயல்காரரிடம்.

பின்னர் மிச்சலிடம் - இந்தாப்பா! பிறகு முன்னங்கால் துண்டொன்றையும் கொஞ்ச மாவையும் கொண்டு போ.

அரை மணி நேரம் கழிந்த பின் மிச்சல் அறுத்த ஆட்டை துணியால் போர்த்த வண்ணம் வந்து சேர்ந்தான்.

இந்தா ஆடு! என்றான் சமையல் காரனிடம்.

அதோ அங்கே கொழுவு! முன்னங் கால் துண்டை எடுத்தியா?

இல்லை.

ஏன் பெரியவர் தான் சொன்னாரே?

எனக்குப் பின்னங்கால் துண்டு தான் வேணும்.

அவன் பின்னங்கால் துண்டொன்றை வெட்டி எடுத்துக் கொண்டான்.

சமையல் காரன் தலையைச் சொறிந்து கொண்டான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை போலும். அத்தோடு மூளையும் வேலை செய்யவில்லை.

இந்தாப்பா இந்தப் பைகளை நிரப்பு. இது தேயிலைக்கு. இது சீனிக்கு. அது மாவுக்கு’ என்றான்.அவன் தன் சேட்டுக்குள் மறைத்து வைத்திருந்த பைகளை நீட்டியவண்ணம்.

நல்லா அள்ளி நிரப்பு. நான் இன்னும் இரண்டு கூட்டாளிமாருக்குச் சாப்பாடு போட வேண்டும்.

சமையல் காரன் அந்தப் பைகளை வாங்கி அவற்றை நிரப்பத் தொடங்கினான்.அவனுக்குத் தான் செய்வது என்னவென்றே அவனுக்குத் விளங்கவில்லை.

நன்றி என்றான் அவன். பேக்கிங் பவுடர் கொஞ்டம் கிடைக்குமா?

ஓ.. ஓ.. இங்கே.

நன்றி. இங்கே ஒரே சலிப்பாக இருக்கிறது இல்லையா?

ஆம் உண்மைதான்.அங்கே அவிச்ச இறைச்சியும் பாணும் இருக்கிறது.வேண்டுமானால் எடுத்துக் கொள்.

நன்றி என்றான் மிச்சல்.அந்த உணவுகளை தலையணைப் பை ஒன்றினுள் திணித்த வண்ணம்.இதற்கென்றே ஒரு பழய தலையணை உறை ஒன்றை அவன்  கொண்டு திரிந்தான்.

இங்கே ஒரே சலிப்பாக இருக்கிரது இல்லையா?

ஆம். உண்மைதான்.

கதைப்பதற்குக் கூட ஆட்கள் இல்லை

கனபேர் இல்லைத்தான்

சரி சரி நன்றி.இவ்வளவு நேரம் இருந்திட்டன்.

ஓ..ஓ.. இவ்வளவு நேரம்...’ என்றான் சமையல் காரன்.அவன் வாயில் இருந்து நன்றி என்ற சொல்லும் வரப்பார்த்தது.

அப்ப நான் வாறன். பிறகு சந்திப்பம். சமையல் காரன் தலையைச் சொரிந்து கொண்டான்.சற்று நேரத்தின் பின்னர் அவன் மேற்பார்வையாளருடன் பேசினான்.

அந்த வழிப்போக்கனுக்கு பைத்தியம் என்று இருவரும் எண்ணிக் கொண்டார்கள்.

அவனுக்கு உண்மையில் பைத்தியமல்ல. விறைத்த தலை. அவ்வளவுதான்.

நன்றி: ஹென்றிலோசன் கதைகள்;  தமிழாக்கம்; எடில்பேட் நவீனன் ராஜதுரை.


(ஆங்கிலேயர் அவுஸ்திரேலியாவைக் கைப்பற்றிய போது அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களிடம் பணப்புழக்கமோ வெலியடைத்து சொத்துப் பிரிக்கும் இயல்புகளோ இருக்கவில்லை. எல்லாம் எல்லோருக்கும் சொந்தமாய் இருந்த, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை அவர்களுடயது. ஆங்கிலேயர் வருகையோடு நிலங்கள் யாவும் அவர்கள் வசமாயின.பழங்குடி மக்கள் நிர்க்கதியானார்கள். இந்த நிலையில் மிச்சேலை ஒரு பழங்குடி பிரஜையாய் எண்ணிக் கொள்ளுங்கள்)