Saturday, December 28, 2013

படலைகளும் புகைக்கூடுகளும்; நாடோடியின் கண்ணூடே.......


மாற்றங்கள் பல வந்து விட்டன. பண்பாட்டில், பழக்கவழக்கங்களில், அன்றாட வாழ்வில், வாழும் வழிகளில் என பல கூறுகளிலும் அது தன் இருப்பை காட்டி வருகிறது.

கால ஓட்டங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே! யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்டமுறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச்  சங்கடங்களை  தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.

அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும்  வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் சீமேந்தினால் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தலும் மரபு. சில படலை அமைப்புகள் நிழல் மட்டும் கொடுத்த படி இருப்பதும் இயல்பு. அவை இப்போது வெகுவாக அருகி வருகின்ற போதும் சில இடங்களில் அவை இன்றும் புழக்கத்தில் இருக்கக் கானலாம். அவற்றின் சில படங்களைக் கீழே காண்க.

 (படங்கள்: நன்றி; கூகுள் இமேஜ்)











இவ்வாறே தெரு மூடி மடங்களும் அமைந்திருந்தன. தெருவையே மூடியவாறு அமைந்திருக்கும் கீழ்கண்ட இத்தகைய நிழலும் ஆறுதலும் தரும் அமைப்புடய வீதி ஒழுங்கைக் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஒரு கால கட்டத்தின் வடபகுதித் தமிழரின் ஒப்புரவான வாழ்க்கை முறைக்கு சாட்சியாக அமைந்துள்ளன.







கோயில் திருவிழாக்களின் போது தண்ணீர் பந்தல்கள் அவ்வாறான அமைப்பை ஒத்த வகையில் போடப்படுவதும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி செய்து அனுப்புதலும் தண்ணீர் பந்தல் போடும் தொண்டர்களின் சேவையின் பாற்படும்.



தண்ணீர் பந்தல் 

கூடவே தண்ணீர் தொட்டியும்  மாடுகள்முதுகு சொறிவதற்கான ஆவுரோஞ்சிக் கற்களும் (ஆ - மாடு, உரோஞ்சி - சொறிதல் கல் - கல்) அம் மக்களின் வாழ்க்கை முறையினை சொல்லும் இன்னொரு அம்சமாகும். வாய் பேசா ஜீவன்களின் சங்கடங்களை அறிந்து அவைகளுக்கு தேவையான விடயங்களைப் பொது இடங்களில் அமைத்து வாழ்ந்து வந்த ஒரு வசந்த வாழ்க்கையினை சொல்லும் அந்த விடயங்கள் எல்லாம் இப்போது வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் அமைந்து போனது காலத்தின் கட்டளை போலும்.




ஆவுரோஞ்சிக்கல்லும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கான தொட்டியும்

ஆனால், இந்தியாவிலோ சற்று வேறுபட்ட முறையில் அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. நம் ஊரில் காணப்பட்டிருக்கும் படலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் திண்ணை போன்ற அமைப்பு முறைகள் அங்கு வீட்டோடு சேர்த்து அமைக்கப்படிருப்பதை அவர்களின் பாரம்பரிய வீடுகளில் காணலாம்.

இந்திய வீட்டோடு கட்டப்பட்டுள்ள திண்னைகள்






ஆனால் நாற்சார வீடுகள் கேரளாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள தமிழ் மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த கட்டிடக்கலையாகும்....


ஆனால் இவ்வாறு இலங்கையின் வட பகுதியில் வீட்டுப் படலையோடு அமைக்கப்பட்டிருந்த கூரையும் திண்ணையும் சேர்ந்ததான அமைப்பு முறை அங்கு மட்டும் தனித்துவமாகக் காணப்பட அங்கு நிலவிய சாதி அமைப்பு முறையும் ஒதுக்கப்பட்ட மக்கள் தம் வீடுகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே அத்தகைய அமைப்புகள் அங்கு ஒரு கால கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்றும் தலித் எழுத்தாளர் டானியலும் பேராசிரியர்.சிவத்தம்பியும் கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவை ஆராய்ச்சி செய்து நிறுவுவதற்கு வேண்டியன.

இப்போது சிட்னி என் வசிப்பிடமாகி வருடங்கள் பலவாயிற்று. 30, 35 வருடங்களுக்கு முற்பட்ட பல வீடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் தொடர்மாடி வீடுகள் முளைத்து வருகின்றன. இப்படியான மாற்றங்களை எதிர் கொள்வது பல வேளைகளில் சிரமமாக பார்க்க கவலை அளிக்கும் விடயமாக இருக்கிறது. 

என் வீடு அமைந்திருக்கிற பாதையில் உள்ள பல வீடுகளில் இருந்த பல மூதாதையர்கள் இடம்பெயர்ந்து மூதாதையர்கள் விடுதிகளுக்கு போகிறார்கள். போகிற போது இள வயதில் இருந்து தாம் வசித்து வந்த வீடுகளை தம் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டோ, விற்று விட்டோ போகிறார்கள். கைமாறும் வீடுகள் மிக விரைவாகவே தன் சோபையை; பாரம்பரியத்தின் அழகை இழந்து அந்த இடத்தில் நவீன மோஸ்தரிலான வீடுகளும் தொடர்மாடிக் குடி இருப்புகளும் முளைத்து விடுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் இத்தகைய மாற்றங்களை பார்க்க பல வேளைகளில் கஸ்ரமாக இருக்கிறது.

நடந்து போகின்ற வேளைகளில் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டோ, களை பிடுங்கிக் கொண்டோ நிற்கும் மூதாட்டிகளை; புன்னகையோடு நலமா நீ என விசாரிக்கும் தோல் சுருங்கிய கிழவர்களை எல்லாம் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. அவர்கள் இருந்த இடங்களை போனோடு சல்லாபிக்கும் அருகாமைகளைக் கவனிக்காத; கவனிக்க விரும்பாத, கனவுகளில் மிதக்கும் இள முகங்களும் புது மோஸ்தரிலான வீடுகளும்.

அண்மையில் ஒரு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். ஒருவர் எழுதி இருந்தார்.தொழில்நுட்பம் வருவதற்கு முன்பான வாழ்க்கை முறையைக் கடசியாகச் சந்தித்த சந்ததி நாங்கள் தான் என்று. அதனால் தான் இதகைய வலியோ என்னமோ.

இரண்டையும்; இரண்டு விதமான வாழ்க்கை முறையையும் ஒரு வாழ்க்கைக் காலத்தில் - ஒரு மெலனியத்தில் சந்தித்திருக்கிறோம். 

இப்போதெல்லாம் அவற்றை அழிவதற்கிடையில் புகைப்படமாகச் சேமித்துக் கொள்ள தோன்றுகிறது. 

இவற்றை படமாக எடுக்கத் தோன்றியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்த முறையில் தமிழையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கற்பித்துக் கொடுக்க அவர்களுடய கண்களூடாக நம் நாட்டு வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்க நான் கையாள விரும்பும் ஒரு உத்தியும் இது வாகும். ( அது சம்பந்தமாகச் சேமிக்கத் தொடங்கிய பல புகைப்பட ஆவணங்கள் சேமிக்கப்பட்ட அரைவாசியில் நிற்கிறது. என் வாழ்க்கைக்காலத்துக்குள் அதனைச் செய்து முடித்து விட வேண்டும்.)

அவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகளில் சில அதிசய ஒற்றுமைகள் உண்டு.(இனி வரும் படங்கள் நான் எடுத்தவை)

1. சங்கடப்படலை போன்ற அமைப்பு







படலைக்கு நிழல் தருவது போன்ற அமைப்பு இங்குள்ள பழைய வீட்டு அமைப்போடு கூடப் பிறந்தவை. ஆனால் அவை கொடி மலர்கள் படர வீற்றிருக்கும். அவற்றின் சில படங்களையே மேலே காண்கிறீர்கள்.

புகைக்கூடுகள்: அங்கும் இங்கும்

நம் ஊரிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. இங்குள்ள பாரம்பரிய வீடுகளிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் புகைக்கூடுகள் துல்லியமாய் வெளித்தெரியும். ஆனால் இவை இரண்டுக்கும் உபயோகங்களில் பெருத்த வேறுபாடுண்டு. 

அங்குள்ள புகை போக்கிகள் சமையல் அறையில் இருந்து விறகடுப்பின் புகையை போக்க அமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள புகை போக்கிகள் குளிர்காலத்து குளிரைப் போக்க வரவேற்பறைக்குள் விறகுகள் போட்டு எரிக்க பயன் பட்டு வந்தன. இவை கணப்படுப்புகள். இப்போதெல்லாம் இத்தகைய புகை போக்கிகளோடு வீடுகளை இங்கு யாரும் கட்டுவதில்லை. அதற்கான தேவையும் இல்லாது போயிற்று. அந்தப் பாரம்பரியத்தின் இடத்தை மின்சாரத்தில் இயங்கும் கணப்புகளும் குளிர் சாதனங்களும் நிரப்ப இப்போது வீட்டின் வெளிச் சுவர் புறமாக ஒரு சிறு கருவி மட்டும் வெளித்தெரிகிறது. 

அது வீட்டின் வெளிப்புற அமைப்பில் பாரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இப்போதெல்லாம் மிக அபூர்வமாகக் காணப்படும் கணப்படுப்பு கொண்ட பாரம்பரிய அவுஸ்திரேலிய வீட்டின் படங்களைக் கீழே காண்கிறீர்கள்.






இவை எல்லாம்; இத்தகைய வீடுகள் எல்லாம் காலப்போக்கில்; இன்னும் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு தசாப்தங்கள் கடந்தால் கூடக் காணக்கிட்டாது.



வெளி விறாந்தைகள் கொண்ட வீடுகள்




இவற்றோடு ஒத்ததான நம்மூர் வீடுகளின் படங்களை எடுக்க இன்னும் காலம் கனியவில்லை.



என்னிடம் இப்போது வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நத்தார், புது வருட வாழ்த்துக்கள்! அன்பும் அமைதியும் சுபீட்சமும் எங்கும் நிறைவதாக!

     அன்பே சிவம் !

Tuesday, December 3, 2013

என் வீட்டு றோட்டோரம்







நத்தார் கொண்டாட்டத்துக்கு தயாராகி நிற்கும் வீடொன்று. 1.12.13 இராக்காலம்.



Wednesday, November 13, 2013

நினைவிடை தோய்ந்து.....


”உணவு ஒரு மொழி” என்பதனை சற்று முன்னர் BBC யின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடக்கேட்டேன். அது ஒரு பொறியைப்போல மனதில் பெரும் சிந்தனை நெருப்பை தூண்டி விட்டிருந்தது.

ஒரு மொழி பாரம்பரியத்தை பண்பாட்டை, பட்டறிவை,கலையை, ஒரு வாழ்க்கைமுறையை தனக்குள்ளே கொண்டிருப்பது.ஒரு இனத்தின் வரலாறு முழுவதையும் காவி நிற்பது.

உணவு அதனை பரிமாற்றம் செய்கிறது. சமைக்கிற அழகில்; கொடுக்கிற முறையில்; பதார்த்தங்களை சேர்க்கிற வகையில்,மருந்தையும் குணத்தையும் பண்பாட்டையும் அது வெளிப்படுத்தி நிற்கும் போலும்.

புகைப்படங்களுக்கும் இருக்கிறது அப்படி ஒரு தகைமை. ‘காலப் பொறி’ அது.

நேற்றய தினம் நாற்சார வீடொன்றைத்  தேடப்போய் யாரோ ஒரு அன்பருடய புகைப்படப் பக்கத்துக்குள் போய் சேர்ந்தேன். அது கிளப்பி வைத்து விட்டுப் போன ஊர் பற்றிய நினைவுகளை இன்னும் ஒதுக்கி வைக்க முடியவில்லை.

ஊர் போய் பல வருடங்கள் ஆகி விட்டன. அங்கும் இப்போது பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இருந்த போதும் நினைவுகளில் நிற்கும் சில விடயங்கள், மனிதர்கள் எப்போதேனும் மனதில் இருந்து நீங்குவதுண்டா?





மேலுள்ள இந்தப் படத்தை பார்த்த போது எங்கள் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளிக்கூடம் நினைவுக்கு வந்தது. அது ஒரு  சிறிய பள்ளிக் கூடம். இவ்வளவு தான் மொத்தமும் அந்தப் பள்ளிக் கூடம். நாங்கள் அந்த வன்னிப்பகுதியின் கிராமப்புறத்துக்கு வந்த போது நான் 4ம் வகுப்பு. என்னை நேரடியாகவே பெரிய பாடசாலையில் சேர்த்து விட்டார்கள். ஆனால் என் தங்கை இந்த மாதிரியான பள்ளிக்கூடத்தில் தான் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றாள். 

காலையில் இவர்கள் பள்ளிக்கு போகும் போது ஊர் மாடுகள் அங்கு முற்றத்தில் படுத்திருக்கும். இவர்கள் போய் மாடுகளைக் கலைத்து விட்டு சாணங்களை அள்ளி முற்றம் மற்றும் வகுப்பறைகளைக் கூட்டி விட்டு படிக்க வேண்டும். இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான் அந்த ஐந்து வகுப்புகளுக்கும்.

இங்கிருந்தும் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றார்கள்.ஆசிரியர்களிடம் அப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்திருந்தது. புளோரா ரீச்சர் மறக்க முடியாதவர். தனக்கென பிள்ளைகள் இல்லாத அவர் இந்தப் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல பார்த்தார்.


மேற்கூறிய இந்த வீட்டைப் பார்த்த போது தென்மராட்சிப்பகுதியும் அந்த மணல் பாங்கான தரையமைப்பும் கூடவே யாழ்ப்பாணம் புலம் பெயர்ந்த 90ன் காலப்பகுதியும் நாம் சரணடைந்த வீடுகளும் அவர்தம் விருந்தோம்பலும் நினைவை நிறைத்தன. ஓர் இரவும் ஒரு பகலும் பீதியுடனும் விழிப்புடனும் மழியில் நனைந்து வெய்யிலில் காய்ந்து பயமும் பசியும் நிறைந்த மனிதர்களாய் தென்மராட்சியை அடைந்த போது வீதி தோறும் தம் வாசல் தோறும் வாளி நிறைய தண்ணீரோடும் குளுக்கோஸ் பக்கட்டுகளோடும் தேசிக்காய் கரைசல்களோடும் வீதி தோறும் நின்று பசியாற்றிய தென்மராட்சியின் மனிதம் மனதை நிறைத்தது.


இப்படியான மேற்கூறிய தோற்றத்துடனான கோயிலை அநேகமாக யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் அநேகமாகக் கானலாம். ஒரு விதாமான தெய்வீக அமைதி நிலவும். பிராமண அந்தணர்கள் மிக அக்கறையோடு விக்கிரகத்தை அலங்கரித்து மிக சிரத்தையோடு மந்திரங்கள் கூறி பூசை செய்து வீபூதி பிரசாதம் கொடுப்பார்கள். 

இந்தக் கோயில் எனக்கு திருநெல்வேலிப்பகுதியில் அமைந்திருக்கிற ஒரு முத்துமாரி அம்மன் கோயிலை நினைவுக்கு கொண்டு வந்தது. பல்கலைக் கழக நாட்கள் அவை. மனம் முதிரா பருவம். செவ்வாயும் வெள்ளியும் விரதமிருந்து இக்கோயிலுக்கு உந்துருளியில் போய் ஆலய வழிபாடு செய்து பின் வளாகத்துக்குப் போவது வழக்கமாக இருந்தது.

அழகும் வனப்பும் இளமையும் கொண்ட பிரம்ச்சார்ய பிராமனர் இங்கு பூசை செய்து வந்தார். கண்ணியத்தோடும் நாணயத்தோடும் நிறைந்த தொழில் நேர்த்தியோடும் சிறப்பாக சலிபேதுமில்லாமல் ஒவ்வொருவருக்காகவும் முழுமையாக முழு மந்திரங்களும் சொல்லி கருமமே கண்ணாய் அந்தக் கோயிலை பரிபாலித்து வந்தார்.

அங்கு நடைபெரும் திருவிழாவில் தண்டிகை அலங்காரம் கண்கொளாக் காட்சியாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு சமமாக வீதியில் அடுத்த பக்கம் இன்னுமொரு கோயிலும் இருந்தது. அங்கிருந்த இளம் பிராமனர் இன்னும் அழகாய் இருந்தார். :)

இவர்கள் இந்தக் கோயில் எல்லாம் இப்போது எப்படி இருக்கும்? இந்த மனிதர்கள் எல்லாம் என்ன ஆகி இருப்பார்கள்? 




இப்படியான வீதி தோறும் எத்தனை தடவை போய் வந்திருப்போம்?


வேலிகளும் வேலிப்பொட்டுகளும் சொல்லும் மனிதர்கள் மனிதர்களோடும் அயலாரோடும் சேர்ந்து வாழ்ந்த வாழ்வொன்றின் வசந்தத்தை! 

இன்னும் அங்கு அந்த வாழ்க்கை இருக்குமோ?



இந்த அன்னதான மடம் என் சிறு பிள்ளை நினைவு ஒன்றை மீட்டி வர போதுமாய் இருந்தது. அது என் சிறு பிராயம். மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரத்தில் இருந்தது இதைப்போல ஒரு மடம். அப்போதெல்லாம் என் அம்மாவின் தங்கை குடும்பத்தினர் அவர்களுக்குச் சொந்தமான லொறியில் குடும்பமாக அங்கு போன ஒரு தருணத்தில் நாமும் போனோம். லொறியின் பின் புறம் கதிரைகள், பாய்கள் எல்லாம் விரித்து தேவையான பொருட்களும் எல்லாம் ஏற்றி இரண்டு குடும்பங்கள் வவுனியாவில் இருந்து பயணமானோம். அங்கு பாலாவித் தீர்த்தத்தில் குளித்து கோயில் எல்லாம் கும்பிட்டு விட்டு இப்படி ஒரு மடத்தில் சாப்பிட்டோம். சோறும் சாம்பாரும் தான். பந்திப்பாய் விரித்து சாப்பாடு தந்தார்கள்.அத்ந்தச் சாப்பாட்டின் ருசியை இது வரை எந்தச் சாப்பாடும் மிஞ்சவில்லை. அதற்கு அப்படி ஒரு சுவை.


வீடு தோறும், கோயில் தோறும் இருக்கும் இதைப்போல கிணறுகள்.


கிராமங்கள் தோறும் வாசிக சாலைகளும் அதே மாதிரித் தான். அங்கு பத்திரிகைகள் தென்னிந்திய இலங்கைச் சஞ்சிகைகள் எல்லாம் வரும். இளைஞர்கள் கூடிக் கதைக்கும் இடமாகவும் அது இருந்தது.சில சனசமூக நிலையங்களில் ஆரம்பப் பாடசாலை வகுப்புகளும் நடந்த நினைவு.


நான் படித்த பாடசாலையின் கிணற்றை இது நினைவுக்கு கொண்டு வந்தது. எத்தனை பிள்ளைகள் விழுந்து எழும்பினார்கள். எத்தனை ஆசிரியர்கள் உடனே குதித்து காப்பாற்றினார்கள். சரஸ்வதிப் பூசை நாட்களின் கடசி நாள் கும்பத்தண்னீரை இக்கிணற்ருக்குள் ஊற்ற போகும் போது சோ என பெரு மழை பெய்யும். அந்தணருக்கு பெரிய ஒரு குடை ஒன்றைப் பிடிக்க அவர் கும்பத்தைக் காவிச் செல்வார். நாம் அரைச்சுவர் கட்டிய சுவரோரம் நின்று மழையையும் இக்காட்சியையும் காண்போம். தெய்வீகம் பொலிந்த ஒரு வாசமும் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்திருக்கும். எல்லோரும் பொட்டும் பூவும் சுண்டலுமாய் சந்தோஷமாய் இருப்போம். அன்றய அந்த கடசி நாள் நிகழ்ச்சி முதல் மூன்று பாட வகுப்புகள் வரை நடக்கும். அடுத்த நாள் கலை விழா கோலாகலமாய் நடந்தேறும். சில பள்ளிக் காதல்களும்!


யாழ்ப்பானத்து பாரம்பரிய வீடொன்றை இது நினைவுறுத்திச் சென்றது. எங்கள் பல்கலைக்கழகத்து இராமநாதன் மண்டபத்திலும் இப்படியான ஒரு முன்புறம் இருக்கிறது.அங்கு படித்த போது தங்கேஸ்வரி என்றொரு தோழி என்னோடு படித்தாள். அவளின் வீடு கே.கே.எஸ். வீதியில் இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு அருகில் அமைந்திருந்தது. அந்த வீட்டுக்கு கமலாலயம் என்று பெயரும் இருந்தது. அவ்வீட்டுக்கு அவளின் அழைப்பின் பேரில் போயிருக்கிறேன். அவளுடய வீடும் இவ்வாறான அமைப்பைக் கொண்டிருந்தது. அவளுடய சிறிய தாயாரும் அவர் செய்து தந்த பொன்னாங்காணி சுண்டலும் தங்கேஸ்வரியின் பொன் நிறமும் ஆரோக்கியமும் சுருட்டையும் நீட்டமுமாக அமைந்திருந்த அவளுடய நீண்ட கூந்தலும் கூடவே நினைவுக்கு வருகின்றன. அவள் திருமணமாகி ஸ்வீடன் நாட்டுக்குப் போனதாய் அறிந்தேன். 

இப்ப எப்படி இருக்கக் கூடும் அவள்? சின்னம்மா சுகமாய் இருப்பாவா?



மாடுகளுக்கும் தொட்டிகள். நடுவில் உள்ள தொட்டியில் புல்லும் வைக்கோலும் கிளித்து ஈர்க்கில் எடுத்த பனையோலைகளும் போடப்பட்டிருக்கும்.மாடுகளை ஒரு செல்வமாய் - வீட்டின் அங்கத்தவரைப் போல பரிபாலித்தார்கள்.



இங்கு வசதிகள், வாய்ப்புகள்! எல்லாம் பளீச் என்று இருக்கும்.குறை என்று சொல்ல ஏதும் இல்லை.

தேடிப்பார்த்தால் இன்னதென்று சொல்ல முடியாத ஒன்று இடறிக் கொண்டு நிற்கும்.

ஒரு விதமான ஏக்கம்! அந்த ஏக்கம் ஊரின்  புழுதி மண்ணில் கலந்து கிடக்கிறது!

கடந்த காலத்துக்குள் மீண்டும் போக முடியுமா?

படங்கள்: நன்றி இணையம். 

(பெரும்பாலான படங்களை எடுத்த பக்கத்துக்கு மீண்டும் போக முடியவில்லை.அந்த அன்பருக்கும் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட அந்தப் புகைப்படங்களுக்கும் என் விசேட நன்றி)