Thursday, January 26, 2023

தால லாவண்யம்

 தாலம் என்பது பனை.

லாவண்யம் என்பது அழகு என்று பொருள் கொள்ளத்தக்க சொல். 

தால விலாசம், தால சோபனம் என்றெல்லாம் ஏற்கனவே பனை பற்றி எழுதி இருக்கிறார்கள்.

காய்ந்து வரண்ட பூமியில் நாம் நம் பால்ய வாழ்வுக் காலத்தை பனையுடனேயே கடந்திருக்கிறோம். பனையையும் தம்முடய ஒரு பிள்ளையைப் போல கருதி தம் வாழ்வை ஒரு வாழ்வாக வாழ்ந்தவர்கள் நம் பெற்றோர் என்ற போதும், அது குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமலே அதைத் தாண்டி வந்து விட்டோம்.

’பனங்கொட்டை சூப்பிகள்’ என்று ஏனைய மாவட்டத்தவர் நம்மை எள்ளி நகையாடும் அளவுக்கு அவைகளோடு நமக்கான சம்பந்தம் இருந்திருக்கிறது.

 பனைக்கும் நமக்குமான அன்னியோன்னிய உறவு நாம் பிறந்த காலந்தொட்டே நம்மோடு இருந்து வருவது. பனை ஓலைப் பாயில் தவழ்ந்து, சிறுவர்களாக இருந்த போது கோயில் திருவிழாக்களில் பனங்கட்டிக் குட்டானும் சோளன்பொரியும் வாங்கித் தின்று, பனை ஓலையில் பெட்டி,கடகங்கள் செய்து, நாளாந்தம் பனை ஓலை கிழித்து கால்நடைகளுக்கிட்டு, பனங்கிழங்கு சாப்பிட்டு பனம்பழப்பணியாரம்,  புழுக்கொடியல், பனாட்டு சாப்பிட்டு வளர்ந்தது யாழ்ப்பாணத்தானின்  உடம்பு. 

நுங்கும் பதநீரும் கள்ளும் தருவது பனை. பூரானும் தந்து மகிழ்ந்தது பனை.

ஆனால் அது எப்படி என்ற எந்த புரிதலும் அதனோடு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கமும் அப்போது எனக்கிருக்கவில்லை. அதில் ஒரு அக்கறை கூட இல்லாத ஒரு உதாசீன மனோபாவத்தோடு வளர்ந்ததை நினைத்து இப்போது வெட்கிக்கிறேன்; வருந்துகிறேன். குறைந்த பட்சம் ஒரு நட்புறவோடு அன்னாந்து பார்த்து மனசார நன்றி சொல்லி இருக்கலாம்....கட்டியனைத்து ஒரு முத்தம் ஈந்த்திருக்கலாம்....😊

இன்று ஊரில் இருக்கும் நம் காணிக்குள் நிற்கும் பனை மரங்களை வெட்டப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் தான் பனை பற்றிய பிரக்ஞை ஒன்று சித்தித்தது. 

பனை பற்றிப் படித்துப் பார்த்ததில் பல தகவல்கள் சிக்கியது. பாவம் பனை என்று ஒரு பரிவும் பச்சாதாபமும் தோன்றுகிறது. அவ்வப்போது அது ஒரு பெண்ணைப் போலவும் நின்று பிடிக்கும் அதன் தன்மையில் பெண்ணையே அது மிஞ்சிவிடும் போலவும் தோன்றுகிறது. அதனால் 

தாலத்தை ஒரு பெண்ணாக பார்க்க விளையும் ஒரு பதிவு இது.

பனையில் ஆண்பனை என்றும் பெண் பனை என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. விதைகளில் இருந்து வளரும் பனைகள் விதையாக இருக்கும் போது, அது ஆண்பனைக்கான விதையா பெண்பனைக்கான விதையா என்று அறிந்து கொள்ளுதல் சிரமம். எனினும் ஒற்றைக் கொட்டைப் பழவிதையாயின் ஆண் பனைக்கான விதையாக அது இருக்குமென்றும்; இரட்டைக் கொட்டை பழ விதையாயின் ஒன்று ஆணாகவும் மற்றயது பெண்னாகவும் வளர வாய்ப்பிருக்கிறதென்றும்; மூன்று விதையிருக்கும் பழமாயின் இரண்டு ஆண்பனைகளாகவும் ஒன்று பெண்பனையாகவும் வாய்ப்பிருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

அதனால் பனம் விதை நாட்டும் போது இரட்டை விதைகளை நாட்டினால் ஆணையும் பெண்ணையும் அருகருகாக வளர்க்கலாம்.

பனைப்பெண்ணாள் மனிதப் பெண் போல்வாள். பெண்ணின் வளர்ச்சிப் பருவமும் பனைப்பெண்ணாளில் வளர்ச்சிப் பருவமும் ஒன்று போலவே விளங்குகின்றது. இரண்டும் பருவமடைய பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு விதை முளைக்க ஆரம்பித்ததில் இருந்து அதன் வளர்ச்சிப் பருவம் ஆரம்பமாகின்றது. முளை - முறிகிழங்கு - நார் கிழங்கு - பீலிப்பருவம் - வடலி - பனை என்பது பனையின் வளர்ச்சிப் படிநிலைகளாகும்.

பெண்ணுக்கான பருவங்கள் பேதை - பெதும்பை - மங்கை - மடந்தை - அரிவை - தெரிவை - பேரிளம்பெண் என சொல்லப்படும். அது மாதிரி ஆணின் வளர்ச்சிப் பருவங்கள் பாலகன் - விடலை - காளை - மீளி - மறவோன் - திறவோன் - முதுமகன் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அது போல இலைகளுக்குப் பருவங்கள் ஐந்து. கொழுந்து - தளிர் - இலை - பழுப்பு - சருகு என்பன அவை. அது போல மலர்களுக்கு வளர்ச்சிப் பருவம் ஏழு. அவை அரும்பு - மொட்டு - முகை - மலர் - அலர் - வீ - செம்மல் ஆகியன.  

பனைகள் சிறியனவாய் இருக்கும் போது அவற்றுக்கு வேறுபாடு கிடையாது. அவை வடலி என்றே  பொதுப் பெயர் பெறும். குழந்தைகள் அல்லவா? அவைகளுக்கு ஏது வேறுபாடு? எல்லாம் குழந்தைகள் தானே!

பனம் விதையில் இருந்து ஒரு பனை வளர ஆரம்பிக்கும் போது முதல் 22 நாள் வரை அதனை விதைப்பருவம் என்று அழைப்பர். 22 நாளில் இருந்து மூன்று மாதம் வரை அதனை முறிகிழங்குப் பருவம் என்று அழைப்பர். 3 மாதத்தில் இருந்து 4 மாதம் வரையான காலத்தை நார்கிழங்குப் பருவம் என அழைப்பர். 4 மாதம் தொடக்கம் 2 வருடம் வரையான காலத்தை பீலிப்பருவம் என்றும்; 2வருடம் முதல் 10 வருடம் வரையான காலத்தை வடலிப்பருவம் என்றும் அழைப்பர்.

வடலியின் முதல் குருத்து பீலியாகும். அது வெளிவரும் போது தனக்குரிய உணவோடு வெளிவருகிறது. அதனை ‘ மூடுபடம் விரித்தாடு பாம்பைப்போல முளைத்து வரும் பருவம் என்று ஒரு கும்மிப்பாட்டு சொல்கிறது. இதன் பிறகு தொடங்கும் அதன் வளர்ச்சிப் பருவம் முதல் பத்து வருடத்திலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 3 அங்குல வளர்ச்சியை அது எட்டும் என்று அறியப்படுகிறது.

25 வருடங்கள் வரை வளர வல்லது பனை. 25 வருடத்துக்குப் பிறகு 45 ஆண்டுகள் வரை  அது வளருமாயினும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாக இருக்கும்.பின்னர் 45 - 60 ஆண்டு காலத்துக்குள் அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்து உரம்பெற ஆரம்பிக்கும்.

இப்படியாக வளர்ந்து உரம்பெறும் பனை தன் 100 வது வயதில் வைரம் நிரம்பியதாய் ஆகி விடும்.முதுமையினை அது சந்திக்கும் போது அதன் இலைகள் பசுமை குறைவாக இருப்பதற்குக் காரனம் அது வைரம் பாய்ந்து நீர்ச் சத்தினை மேலே செலுத்த முடியாதிருக்கும் தன்மையினாலேயே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதனுடய கொடுக்கும் கொடைக்குணம் அதன் வடலிப்பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. மயிலின் தோகை போல விரியும் அதன் ஓலைகள் விசிறி செய்யப் பெரிதும் பயன்படுகிறது. அளவாகவும் அழகாகவும் விரிந்து சிறியதாய் நிற்கும் அந்த ஓலைகள் விசிறி செய்ய கன கச்சிதமானவை.

தொடர்ந்து அது வளரும் போது, அதன் கருக்கு மட்டைகள் வேலிகளுக்கும் ஓலைகள் கால்நடைகளுக்குத் தீவனமகவும் பயன் படுகின்றன. கங்கு வடலிப் பருவத்தில் கங்கு மட்டைத் தும்பு உற்பத்தியாகிறது. பத்து வயதளவில் வடலி ஆரடி உயரம் வளர்ந்து கம்பீரமாக நிற்கும்.

12 ஆண்டில் பருவம் அடையும் பெண்ணைப் போல பெண் பனையும் 12 வருடத்தில் இளம் பனையாய் வளர்ந்து நிற்கும். அதன் அஃறிணை இயல்பிலும் ஓரழகு ததும்பி நிற்கும். அப்போது அதன் உச்சியில் உள்ள மட்டைகள் நெகிழ்ச்சி அடையும். இதேவேளையில் அருகில் உள்ள ஆண்பனையின் விரல் போன்ற நீண்ட பாளைகளில் இருந்து மகரந்தப் பொடி மணங்கமழ காற்றோடு கலந்து வெளியேறி பெண்பனையின் குருத்தடியில் சேர்கிறது. மகரந்தத்தைக் கொண்ட பெண்பனை குரும்பை ஈணுகிறது. 

பனை பருவமைடைகிறது. பயன் தர ஆரம்பிக்கிறது.

இனி அவை தம் வாழ்வை தாமே பார்த்துக் கொள்ளும். நாம் அவைகளுக்கு சேதம் எதுவுஞ் செய்யாதிருந்தாலே போதுமானது.

இதனை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ‘முப்பாசம் தீர்த்த முனிவர் மொழி வாய்மை போல் எப்போதும் நின்று பயனீயுமே’ என்று மனமுருகி வர்ணித்துள்ளார்.

பனையில் இருந்து பெறப்படுவன:

பதநீர்: இது ஆண்பனையில் இருந்தும் பெண்பனையில் இருந்தும் பெறப்படுகிறது. இது ஒரு இனிப்பான பானமாகும். ஆண்பனையிலும் பெண்பனையிலும் பருவகாலங்களில் தோன்றும் பாளைகளை இடுக்கியால் இடுக்கி நுனியில் சீவுவதன் வழியாக இந்தப் பானம் பெறப்படுகிறது.

இப் பானம் உயிர் சத்துக்களும் மருத்துவ குணாம்சங்களும் கொண்டது. உடற்குளிர்மையும் முகப்பொலிவையும் தர வல்லதெனப் போற்றப்படும் பதநீரில் பல்வேறுவிதமான உயிர் சத்துக்களும் நோயணுகா சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. அதனால் இது கற்பகச் சாறு என்றும்; கற்பக அமிர்தம் என்றும்; பனஞ்சாறு என்றும்; பதனி என்றும் பன்னன் சாறு என்றும்  அழைத்தார்கள். பாலைப்போல சத்துள்ள பதநீரை காலை ஒருவேளை அருந்தினால் உணவருந்தத் தேவை இல்லை என்று சொல்கிறார்கள்.

இதனைக் காய்ச்சியே பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி, பனங்கட்டி ஆகியன தயாரிக்கிறார்கள்.

இதுவே நேரஞ் செல்லச் செல்ல புளித்து கள்ளாகி விடுகிறது.

இனி எங்கேயாவது ஒரு பனையைக் கண்டால் அதனை ஆண்பனையா பெண் பனையா என்று கவனியுங்கள். அது இளங் குமரியைப் போல வளர்ந்திருக்கும் வடலியா அல்லது குடும்பப் பெண்போல் உயர்ந்து நிற்கும் பனை மரமா என்றாராயுங்கள்.

குலைகுலையாய் பனங்காய்களைக் கொண்டிருக்கிறாளா? அருகில் நிற்கும் அவளின் ஆண்பனை மகன் எப்படியாய் இருக்கிறான் என்று பாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன அங்க வேறு பாடுகள் இருக்கின்றன என்றும் கூட ஆராயுங்களேன். அதில் தப்பென்ன இருக்கிறது? 

சுமார் 400 வருடங்கள் வரை வாழத்தக்க இவைகளை; தமக்குள்ளே ஆணென்றும் பெண் என்றும் பருவம் கொண்டு, வாழ்ந்து வரும் இவைகளை; தம்மை நமக்குப் பயன் தந்தும் எந்த ஒரு உதவியையும் நம்மிடம் கோராத இவற்றை நாம் கண்போல காப்போம்.

பொன்னி மழை வாழி! பூமி நலம் வாழி!

மண்ணுயிர்கள் வாழி! யறம் வாழி! - எந்நாளும்

கற்பகம் போலீயும் கடவுட்பனை வாழி!

நற்றமிழும் வாழி நயந்து! - சோமசுந்தரப் புலவர் - 

( தொடரும்....)


Saturday, January 14, 2023

சப்பாத்து வாங்கு - shoe bench - அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 6 -

 ஒரு நாட்டின் சீதோஷண நிலைமைகளுக்கும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அது அவர்களின் பொருள் பண்பாட்டிலும் பெருத்த ஆதிக்கத்தைச் செலுத்தும்.

நாம் எப்படி பருத்தி ஆடைகளுக்கு பழக்கப்பட்டிருக்கிறோமோ அப்படி மேலைத்தேயத்தவர் கம்பளி ஆடைகளுக்குப் பழக்கப் பட்டிருக்கிறார்கள். நாம் எப்படி செருப்புகளை அணிகிறோமோ அப்படி அவர்கள் சப்பாத்துகளை அணிகிறார்கள். கனத்த மேல் அங்கிகள், கழுத்துப் பட்டிகள் என நீழும் அவர்களின் ஆடை அணிகள் எல்லாம் அவர்களின் சீதோஷண நிலைமையின் பாற்பட்டது தானே! 

வீடுகள் கூட உயர்ந்த கூரைகளையும் சிறிய ஜன்னல்களையும் கொண்டமைவதும் அந்த ஜன்னல்கள் கூட திரைச் சேலைகளைக் கொண்டமைவதும் குளிரினால் வரும் தாக்கத்தைத் தாக்குப் பிடிக்கத் தானே! சீதோஷண நிலையைக் கருத்தில் கொண்டு தானே!

கழிப்பறைகளில் அவர்கள் மென்மையான கடதாசிகளை பயன்படுத்துகிறார்கள் என்றும்; நாம் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்றும்; அவர்கள் உணவுண்ணும் போது கரண்டி, கத்திகளைப் பயன் படுத்துகிறார்கள் என்றும்; நாம் நம் கைகளைப் பயன் படுத்துகிறோம் என்றெல்லாம் கூட விமர்சனங்கள் வருவதுண்டு.  அவ்வப்போது நாம் அவர்களைப் பார்த்து நகையாடுவதுமுண்டு. 

நினைத்துப் பார்த்தால் அவை எல்லாம் அவ் அவ் நாட்டு சீதோஷண நிலைகளால் தான் என்பது விளங்கும். குளிரால் உறையும் நாட்டில் ஜில் என்றிருக்கும் தண்ணீரை அவர்கள் அடிக்கடி எவ்வாறு பாவித்தல் கூடும்? 

இது தெரியாமல் நாமும் அவர்களையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் நம் நாட்டில் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும்; அதை பெருமையாக நினைப்பதும் சில பல வேளைகளில் பொருத்தமற்ற கேலிப்பொருளாக ஆகி விடுவதையும் அவ்வப்போது காண்கிறோம். 

சரி அதை விடுவோம்.

இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருப்பது shoe bench என்றழைக்கப்படும் சப்பாத்து வாங்கு என்ற பொருள். அதாவது தளபாடம் ஒன்று  பற்றியதாகும்.

இப்பொருள் வீட்டின் உள்பக்கம் பிரதான கதவுக்கு அருகாக உள்நடைபாதையில் அல்லது வரவேற்பறை முகப்பில் அநேகமாகக் காணப்படும். 

குளிர் பருவகாலத்தின் போது வெளியே போய் விட்டு வருபவர்கள் அல்லது வீட்டிலிருந்து வெளியே போகிறவர்கள் கண்ணாடியைப் பார்த்துத் தம்மைச் சரிசெய்து கொள்ளவும்; தம் சப்பாத்துகளை; தொப்பியை; குடையை; கைத்தடியை; கனமான தம் மேலங்கிகளைக் போட்டுக் கொள்ளவும் அல்லது களற்றி வைக்கவும்; ஆறுதலாக உட்கார்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் வீட்டினுள்ளே ஈரம் போகாதிருக்கவும்; வெளியேயோ உள்ளேயோ போகிறவர்கள் வசதியாகப் பிரதான வாசல் முகப்பிலேயே இவற்றை அணிந்தும் களற்றியும் வைத்துச் செல்லும் வசதிக்காகவும் இந்த மாதிரியான தளபாடம் ஒன்று அநேகமானவர்களின் வீட்டில் இருக்கும்.

(பாடசாலைகளிலும் கூட தம் புத்தகப்பைகளையும் தம் குளிர் மேலாடைகளையும் களற்றி வைக்க தனியான இடம் உண்டு. கொழுவிகளோடு அவரவர் பெயர் போட்ட மரச் சட்டங்கள் போட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மாணவர்கள் அவற்றை வைத்து விட்டுத் தான் வகுப்பறைக்குள் நுழைவார்கள்)

அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரம் அத்தனை குளிராக இல்லாத காரணத்தால் அதன் நீள அகலங்கள் மற்றும் அதன் அழகியலும் தாற்பரியங்களும் சுருங்கி புதுவடிவம் எடுத்து விட்டது. 

அது shoe bench என்றளவில் புதிய வடிவம் எடுத்து கச்சிதமாக சப்பாத்துகளை போட்டு வைக்கவும் அதன் மேல் இருந்து சப்பாத்தைப் போடவும் வசதியான வகையில் சுருங்கி விட்டது.

 அதனைத் தான் படத்தில் காண்கிறீர்கள்.








                    ( படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன். 05.01.2023 )

இவர்களின் மூலவர்களைப் பார்க்க வேண்டுமானால் நாம் பிரித்தானியாவுக்குப் போக வேண்டும். பிரித்தானிய பாரம்பரிய பின்னணியைக் கொண்ட மக்கள் இங்கு குடிவந்த போது எடுத்து வந்த இத்தகைய பாரம்பரியங்கள் இங்குள்ள சீதோஷண நிலைக்கேற்ப புது வடிவம் எடுத்த நிலைமையைத் தான் மேலே உள்ள படங்களில் காண்கிறீர்கள்.

இதன் மூலத்தை;  ’மூதாதை தளபாடத்தை’ இந்த shoe bench இனுடய அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால் கொஞ்சம் பின் நோக்கிப் போக வேண்டும். 

உங்களுக்காக தேடுபொறியில் தேடிய போது சில படங்கள் அகப்பட்டன. அவற்றையும் ஒரு பார்வைக்காக இங்கு உங்களோடு அவற்றையும் நன்றியோடு பகிர்ந்து கொள்கிறேன்














குடை கொழுவவும், கைத்தடியை வைக்கவும், தொப்பி, கோட் போன்றவற்றைக் கொழுவவும், கண்ணாடியில் முகம் பார்த்து தம்மை ஆசுவாசப்படுத்தி விட்டு அமர்ந்து, தம் கனமான சப்பாத்துக்களைக் களற்றவும் போடவும் தோதாக அமைந்த இத்தகைய தளபாடங்கள் அம் மக்களின் காலநிலைக்கும்; சிதோஷண சுவாத்தியங்கள் தரும் உபாதைகளுக்கு பரிகாரமாகவும் அதே நேரம் கலை நுணுக்க வேலைப்பாடுகளோடும் அமைந்திருப்பது அம் மக்களின்அழகியல் சார்ந்த பொருள் பண்பாட்டின் ஓரம்சம் என்றால் மிகை இல்லைத் தானே!

படங்கள்: நன்றி: இணையம்

Sunday, January 8, 2023

பெண்ணெனும் மெல்லியலாள்...

 அண்மைக் காலமாக என் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பழம்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றைக் கண்டு பிடித்ததில் இருந்து எனக்கொரு புதுப்பழக்கம் உருவாகி இருக்கிறது. அது என்னவென்றால் அங்கிருக்கும் பழம் பொருட்களில் பெரும் பாலானவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் பழக்கம் தான் அது.

அது ஒரு addict மாதிரி என்னில் தொற்றிக் கொண்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாத படியாக அது என்னைப் பாடாகப் படுத்துகிறது. அவ்வாறாக அண்மையில் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்ட பொருளில் ஒன்று, ஒரு சுவரில் கொழுவத்தக்க ஒரு மேலைத்தேயப் பெண்ணின் ஓவியம். 

$ 8.00 களுக்கு விற்பனையில் இருந்த அந்தப் படத்தைப் பார்த்து விட்டு என்னை மிகுந்த பிரத்தனத்தோடு கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். யாரிடமும் அது பற்றி வீட்டில் மூச்சு விடவில்லை. கேட்டால் என்னையே அந்தப் பழம்பொருட்கள் விற்கும் கடையில் கொண்டுபோய் தள்ளி விடுவார்கள் என்ற பயம் தான் அதற்குக் காரணம்.

ஆனால் பாருங்கள்! என் ஆத்துமம் சாந்தியே ஆகவில்லை. சொல்வழி கேட்கவில்லை. சதா அந்தப் படத்தைப் பற்றிய யோசினை! சரியான உறக்கமில்லை. யாரோடும் இது பற்றிப் பேசவும் முடியவில்லை...அதனை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தால் தான் மனம் ஆறும் என்று எனக்குச் சத்தயமாகப் புரிந்து விட்டது.

மறுநாட் காலை வீட்டில் வரப்போகும் பிரளயத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை மனதில் வரவழைத்துக் கொண்டு யாரிடமும் பேசாமல் அக்கடைக்குப் போய் பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இப்போது வீட்டுக்குக் குடிவந்திருக்கிற அந்தப் பெண்ணைத் தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.


இந்தப் பெண்ணைப் பார்த்தால் நம்முடய ரவிவர்மா வரைந்த தமயந்தியை உங்களுக்கு நினைவு படுத்தவில்லையா? அதே மெல்லியலளாக அன்னப்பறவையோடு  இவளும் காட்சியளிக்கவில்லையா?

ஆண்பெண் சமத்துவம் பற்றி பேசுகிறவர்கள் என்னை மன்னிப்பீர்களாக! என்ன தான் விடுதலை குறித்துப் பேசினாலும் அடிப்படை வேறுபாட்டையும் அதனதன் தனித்துவமான இயல்புகலையும் நாம் மறந்துவிடலாகாது. பெண் பெண் தான். ஆண் ஆண் தான். பெண் விடுதலை பேசுவோர்கள் இது பற்றி என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். உடலளவில் பெண் ஆண் என இரு உருவ வேறு பாடுகளும் அவற்றுக்கான இயல்புகளும் தன்மைகளும் என்றென்றைக்கும் மாற்றவோ அழிக்கவோ முடியாதவை என் அபிப்பிராயம்.

பெண்ணிடம் இயல்பாகவே மென்மையும் உடலளவில் பலமற்ற தன்மையும் ஆனால் மனதளவில் உறுதிப்பாடும் இருக்கிறது. அது போலவே ஆணிடம் உடலளவில் உறுதியும் பலமும் மனதளவில் பெண்ணில் சார்ந்து வாழும் (?! ) தன்மையும் இருக்கிறது என்பது என் எண்ணம்.

சரி, அது இருக்கட்டும்,  இப்போது ரவிவர்மா வரைந்த தமயந்தியைப் பார்ப்போமா?


இதைப் பார்த்த பிறகு சொல்லுங்கள்! மேலைத்தேயப் பெண்ணாக இருந்தாலென்ன, கீழைத்தேயப் பெண்ணாக இருந்தால் என்ன! பெண் மெல்லியலாளாகத் தானே இருக்கிறாள்?

ஒவ்வொருவரும் அவரவர் இயல்போடும் குணத்தோடும் பண்போடும் இருக்கையில் ஒவ்வொன்றும் எத்தனை அழகாக இருக்கிறது இல்லையா...

எதுவும் இயல்போடு இருக்கையில் தான் எழிலோடு விளங்குகிறது!