Thursday, December 17, 2020

season's Greetings

 


செட்டைகளை உதிர்த்தபடி

உயரப்பறக்கின்றன பறவைகள்.

இலைகளை உதிர்த்தபடி

உயர்கின்றன மரங்கள்.


மலர்ந்தும் மறைந்தும் போகின்றன பூக்கள்.

கனிந்தும் பிறகு கரைந்தும் உதிர்கின்றன கனிகள்.


காலம் காய்த்த காட்சியென

உதிக்கின்றனர் சூரிய சந்திரர்.

நாட்களை உதிர்த்து 

நகர்கின்றன காலங்கள்.


பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல்நீரில் இருந்து உப்பைப் பிரிக்கவும் 

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


மழை,கார் இருட்டிலும்

கொப்பிழக்கப் பாய்வதில்லை மந்திகள்.


சூரியனை நோக்கி விழித்திருக்கும் புற்கள்

முறைப்பாடுகள் செய்வதில்லை.


சேவலின் கம்பீரம் பேட்டிடத்து இல்லை.

பசுவின் சாந்தம் காளையிடத்து இல்லை.

விரையும் குதிரைக்கு கொம்பு இல்லை

பாடும் குயிலுக்கு அழகில்லை

யானைக்குத் தன் பலம் தெரிவதில்லை

புறா தன் இணை பிரிவதில்லை.


சுயாதீனமாய் திரியும் உயிரினங்கள்

பருமனே இல்லை.


பாருங்கள்,

காலத்தால் அன்றி கனிவதே இல்லை 

பழங்கள் மரத்தில்.


சங்கு என்னவோ சுட்டாலும்

வெண்மையையே தருகிறது.


உலகப் பண்பாட்டையே

உருட்டி விளையாடுகிறது

கண்ணுக்கே தெரியாத 

நுண்ணுயிர் ஒன்று.


இலவசக் காட்சியென

வாழ்க்கைக் கோலங்களை

 விரித்து வைக்கிறது பிரபஞ்சம்.


பின்புறமாக பறக்கவல்ல

ஹம்மிங் பறவை,

மூன்று விழிமடல்கள் கொண்ட ஒட்டகம்,

விழி திறந்த படி தூங்கும் டொல்பின்,

கால்களால் சுவை அறியும்

வண்ணாத்திப்பூச்சி,

இரண்டு கண்களாலும் இரண்டு காட்சிகள்

காணும் ஓணான்,

பிறந்த நிமிடமே பறக்கும் தேனீ,

வெட்டும் துண்டுகளில் இருந்தெல்லாம் 

உயிர்க்கும் நட்சத்திரமீனெனெ

இவைகளெல்லாம் 

கற்றுக் கொடுக்கிறன 

வாழ்க்கை வினோதங்களை


அவரவர்க்கான வல்லமைகளையும் 

புதிர்மிக்க இரகசியங்களையும்

இதற்குள் எங்கோ தான்

ஒழித்து வைத்துள்ளது இயற்கை....


கற்றபடியும் பெற்றபடியும்

தொடர்கிறது வாழ்க்கை.


இன்னும்,

குழந்தை உயிரினங்கள்

தவழும் மடியிலெல்லாம்

 நிறைந்தே கிடக்கிறது

கடவுளின் புன்னகை.


நீரூற்றி, கவனித்து நட்ட விதைகள்

நலிவின்றித் தருகின்றன கனிகள்.

அவைகளின் விதைகளில்

துளிர்க்கின்றன விருட்சங்கள்.


கவனிப்பிலும் அன்பிலும் 

உயிர்க்கிறது உலகு.


season சிரிக்க 

சிந்துகிறது வாழ்க்கை!


Season's Greetings!



யசோதா.பத்மநாதன்

13.12.2020.

Sunday, December 6, 2020

ஆறு....

 அகம் நகுதல் - உள்ளம் உவகை கொள்ளுதல் - உள்ளம் புன்னகைத்தல் - இப்படி ஒரு சம்பவத்தை ஏதேனும் ஒரு முறையேனும் நிச்சயம் நாம் அனுபவம் செய்திருப்போம்.

உவகை கொண்ட தருணங்கள், அகம் நகை செய்த தருணங்கள் பல இன்றைக்கும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை நடந்த அகம் உவகை கொண்டு ஆறாக பெருகி ஓடிய தருணம் ஒன்று இது.



                      ஆறு

சில நாட்கள் உன் வகுப்புக்கு நான் வரவில்லை.

அடுத்த வகுப்புக்குள் நுழைந்த தருணம் ஒன்றில்

நீ ஓடி வந்து வழி மறித்தாய்.

விழியெல்லாம் ஆர்வத்தைக் கோலி

பதினெட்டுப் பற்களிலும் புன்னகை தேக்கி

'ஒன்றைத் தொடு' என்றாய்.

நீலம் என்றேன்.

மேலுமொன்றைத் தொடு என்றாய்

பூ ஒன்றைத் தொட்டேன்.

மேலும் ஒன்றைத் தொடப் பணித்தாய்.

இரண்டைத் தொட்டேன்.

ஆறைத் தொடு; ஆறைத் தொடு என்று துள்ளினாய்.

ஆறைத் தொட்டேன்.

அதை விரித்து,’யூ ஆர் த குயின்’

என்றதைச் சொல்லி விட்டு

பரட்டை மயிர் துள்ளித் துள்ளி விழ

குதித்தோடிச் சென்றாய்.


உன்பின்னால் பெருகி ஓடியது

ஆறு....

Tuesday, November 24, 2020

தற்குறிப்பேற்ற அணி - 10 - ( 26.10.2020 )

   கடந்த மாதம் SBS வானொலியில் ஒலிபரப்பான ‘தற்குறிப்பேற்ற அணி’ குறித்த நிகழ்ச்சியினை இங்கு பதியத் தாமதமாயிற்று. மன்னிக்க.

SBS வானொலியில் தற்குறிப்பேற்ற அணி

    ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் அந் நிகழ்ச்சியில் எழுதியது முழுவதையும் இணைத்துக் கொள்ள முடியாத காரனத்தால் எழுதியதன் எழுத்துப் பிரதியினையும் இத்தோடு பிரசுரம் செய்கிறேன். 

சில நேரங்களில் இறுதி நேரங்களில் இடம்பெறும்    சமூக மாற்றங்கள்      நிகழ்ச்சியிலும் இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட வேண்டி   வரும். இதிலும் அப்படித்தான். இந் நிகழ்ச்சி நடந்த போது சிறந்த பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமாகி இருந்தார். அவரால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டதாக அமையப்பெற்ற இந் நிகழ்ச்சியில் அவரை நினைவு கூர்ந்தது மிக்க மன நிறைவைத் தந்த ஓர் தற்செயல் நிகழ்ச்சி!    

.......................................

          தற்குறிப்பேற்ற அணி            

அணிகளின் வரிசையிலே இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது தற்குறிப்பேற்ற அணியாகும்.

தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன? 

கவிஞன் தான் கருதும் பொருளை இயல்பாக நடக்கும் பொருள் ஒன்றின் மேல் ஏற்றி பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். உதாரணமாக

https://www.youtube.com/watch?v=1eTFoIwr74w

இளையநிலா பொழிகிறதே..

இளைய நிலா பொழிகிறதே பாடல்

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ….

இப்பாடல் வரியில் முகில் அலைவதும் அது மழையாகப் பொழிவதும்  இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சி. அதற்கு கவிஞன் தான் கருதும் ஒரு காரணத்தை கற்பித்து இதனால் தான் இது என்று புது அர்த்தம் கற்பிப்பதை தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லலாம். 

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்

இயல்பின் விளை திறனன்றி அயலொன்று

தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 ) என்று தற்குறிப்பேற்ற அணிக்கு இலக்கணம் சொல்லும் தண்டியலங்காரம்.

அதாவது பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

இந்த அணியைப் பயன் படுத்தி தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் சிறப்புப் பெற்றிருக்கிறது. சங்க இலக்கியங்களில் இருந்து, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம், நளவெண்பா, முத்தொள்ளாயிரம் என்று தமிழ் இலக்கியங்கள் இத் தற்குறிபேற்ற அணியினால் தம்மை அலங்காரம் செய்து கொண்டிருப்பது காணும் தோறும் களிப்பு தர வல்லது. நம் நவீன திரைக்கலைக் கவிஞர்களும்

https://www.youtube.com/watch?v=tOkFty1_Umk

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவில் வண்டு கூடும் பாடல்

https://www.youtube.com/watch?v=-K178KOmy2k

நீதானே எந்தன் பொன் வசந்தம் ( 2.08 – 2.17)

நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல்

https://www.youtube.com/watch?v=Nt-0Oj-vfbo

நதியில் ஆடும் பூவனம்

நதியில் ஆடும் பூவனம் பாடல்

https://www.youtube.com/watch?v=OOE8Ogxrqo4

இது ஒரு நிலாக்காலம்

இது ஒரு நிலாக் காலம் பாடல்

https://www.youtube.com/watch?v=yIPxZtuUb0k

பூவே இளைய பூவே

பூவே இளைய பூவே பாடல்

என்று இப்படிப் பலவாக இந்த அணியை நன்கு பயன்படுத்தி உள்ளனர். 

இப்படியாக நீளும் திரை இசையின் வரிசையில் வரும் இந்தப்பாடல் முழுக்க முழுக்க தற்குறிப்பேற்ற அணியை கையாண்டு புனையப்பட்டிருப்பது மேலும் இவ்வணிக்கு அழகு சேர்ப்பது.

https://www.youtube.com/watch?v=GmYlUUNn6fw

வானமெங்கும் தங்க விண்மீன்கள் 

வானமெங்கும் தங்க விண்மீன்கள் பாடல்

கவிஞருடய கற்பனை உள்ளமும் அவர் தம் ஆற்றலும் வெளிப்பட இவ்வணி பலவாறாக துணை செய்திருக்கிறது இப்பாடல்கள் வழி நாம் அறிந்திருப்போம். அதனை இலக்கியங்கள் தோறும் கூட கண்டு கண்டு களிப்புறலாம்.

முத்தொள்ளாயிரத்துக் காட்சி ஒன்று இது.

யானைகள் போர்க்களத்தில் பகைவர்களின் மார்புகளைக் குத்துதல் என்பது இயற்கையாக நடைபெறும் ஒன்று தானே?. ஆனால் இந்த யானைகளோ பகைவர்களின் மார்பினை ஓலையாக்கித் தங்கள் தந்தங்களை எழுத்தாணிகளாகக் கொண்டு, இந்நிலம் எம்மன்னனனுக்கே சொந்தம் என்று எழுதுவதாகக் கவிஞர் தன் குறிப்பினை அச் சம்பவத்தில் ஏற்றி,

“மருப்பூசியாக மறங் கலைவேல் மன்னர்

உருத்தகு மார்பு ஓலையாகத் திருத்தக 

வையகம் எல்லாம் எமதென்று எழுதுமே

மொய்யிலைவேல் மாறன் களிறு” (முத்தொள்ளாயிரம் - பா.எண்-60)

என்று தற்குறிப்பேற்ற அணிக்கு அழகு செய்துள்ளார். அவ்வாறு  கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணியை எழுத்தாணியாகவும் தம்கற்பனை வளத்தை கொண்டு தமிழ் இலக்கிய ஏடுகளை அழகாக்கிய தருணங்களை இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

இது முத்தொள்ளாயிரத்தில் வரும் இன்னொரு காட்சி.

சேரனின் நாட்டில் உள்ள வீடுகளின் வாசல் கதவுகளில் இருக்கிற கதவுக் குமிழ்கள் தேய்ந்து போய் கிடக்கின்றன. அது இயற்கையாக திறந்து திறந்து பூட்டுவதால் தேய்ந்து போன குமிழ்கள். ஆனால் கவிஞரின் கண்களுக்கோ அது வேறுவிதமாகப் புலப்படுகிறது.  அது ஒரு காட்சியாக கவிஞனுக்குத் தெரிகிறது. சேரமன்னன் தேரேறி பவனி வரும் போது மகள் கண்டால் அவளுக்கு காதல் நோய் வந்துவிடுமென தாய் கதவை தாழ் போடுகிறாளாம். மகளோ தாய் சென்றவுடன் தாள்பாழைத் திறக்கிறாள். அன்னை தாழ் போட மகள் தாழ் திறக்க காதல் பயிர் வளர குமிழ் தேய்கிறதாகத் தெரிகிறது கவிஞனின் கற்பனைக் கண்களுக்கு. தற்குறிப்பேற்ற அணியில் அது ‘தாயார் அடைப்ப, மகளிர் திறந்திட தேயத் திறந்த குடுமியவே’ என்று வருகிறது அவ்வரி.(முத்தொள்ளாயிரம் 10)

இனி நாம் நளவெண்பாவுக்கு போவோமா?. அங்கே ஒரு கடற்கரைக்காட்சி. நளன் கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறான். அரவம் கேட்டு நண்டுகள் கரையில் இருந்து கடலுக்குள் ஓடி மறைகின்றன. இது இயல்பாக நடைபெறும் காட்சி தான். ஆனால் கவிஞனுக்கோ அது வேறொரு விதமாகத் தெரிகிறது. தன் குறிப்பினை – தான் சொல்ல வந்த கருத்தினை அந் நிகழ்ச்சியில் ஏற்றி இவ்விதமாகச் சொல்கிறான்.

காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட

பாதகனை பார்க்கப் படாதேன்றோ – நாதம்

அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி

ஒளிக்கின்ற தென்னோ உரை. 

அதாவது, மனைவியை கானகத்தே தனியாக விட்டு விட்டு செல்லும் பாதகனைப் பார்க்கக் கூடாது என்று நண்டுகள் ஓடி ஒழிகின்றனவாம். என்பது கவிஞர் கையாண்ட சொல்லோவியம்.

இப்போது இராமாயணத்திலே ஓருகாட்சி காணப் போவோம். இராமன் வில் வளைத்துச் சீதையை மணக்க வேண்டி, விசுவாமித்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் மிதிலை மாநகரம் செல்கின்றான். அந்நகரத்து அருகில் செல்லும்போது, நகர் மதில் மேல் உள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன. கொடிகள் காற்றில் அசைந்தாடுவது இயல்பாக நிகழும் நிகழ்ச்சி தானே? ஆனால் கம்பருக்கோ, மதில் மேல் உள்ள கொடிகள் அசைந்தாடுவது, சீதையை விரைவில் வந்து மணம் புரியுமாறு இராமனைக் கை காட்டி அழைப்பது போல உள்ளது என்று தம் குறிப்பை கொடியில் மீதேற்றி கூறுகிறார். இதனை,

............ செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச்

செங்கண் ஐயனை ஒல்லை வா 

என்று அழைப்பது போன்றது என்கிறார்.

இது போல ஒரு காட்சியினை நாம் சிலப்பதிகாரத்திலும் காணலாம். ’போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட’என்கிறார் அங்கு இளங்கோ. 

அதாவது, அங்கு கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். வருகிற போது மதுரையின் மதில்கள் மேல் கொடிகள் இயல்பாக அசைகின்றன. அதனை  இளங்கோ அடிகள் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் அதனால் வராதே வராதே என சொல்வதைப் போல அசைகின்றன என்று தன் குறிப்பினை கொடி அசையும் இயல்பின் மீது ஏற்றிக் கூறுவது அறிந்து கொள்ளத்தக்கது. 

வானவில்லின் எழில் கோலம் ஒன்று முத்தொள்ளாயிரம் தந்த புலவனுக்கு இப்படியாக தெரிகிறது. அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாக வானவில் தெரிகிறது. அதனைக் கண்ட புலவனின் கற்பனை வேறுவிதமாக ஓடுகிறது. சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணவர் சேரனின் கொடியான விற்கொடியினை  அங்கு அழகாக வரைந்து வைத்துள்ளனர் என்று, 

“வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் 

வில் எழுதி வாழ்வார் விசும்பு”(முத்தொள்ளாயிரம் - பா.எண்-5)

என்ற பாடல் வரிகளில் பதிந்து வைத்துள்ளார். மழைபெய்து முடித்தவுடன் வானில் வானவில் தோன்றுவது இயற்கை. ஆனால் சேரனின் வீரச்சிறப்பைப் பறை சாற்ற புலவர் வலிமையிற் சிறந்த வானோர் கூட சேரனுக்கு அஞ்சி, அவனுக்குப் பணிந்து திறை செலுத்தி அவன் சின்னமாம் விற்கொடியினை வரைந்து அவனை மகிழ்விக்கின்றனர் என்று உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடியுள்ளார்

https://www.youtube.com/watch?v=Ux0LERGc1cc

இது ஒரு பொன்மாலைப்பொழுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல்

இப்படி ஒரு வானவில்லைக் கண்ட நாம் இடிமுழங்கி மழைபொழியும் காட்சி ஒன்று ஒரு பக்தனுக்கு எப்படி தெரிகிறது என்று பார்க்காமல் போக முடியுமா? இது ஓர் தமிழ் பக்தி இலக்கியக் காட்சி.

முன் இக் கடலைச் சுருக்கி, எழுந்து, உடையாள்

என்னத் திகழ்ந்து, எம்மை ஆள் உடையாள் இட்டு இடையின்

மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திரு அடிமேல்

பொன்னம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்

என்னச் சிலை குலவி, நம் தம்மை ஆள் உடையாள்

தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு

முன்னி, அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே

என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!

மாணிக்க வாசகருக்கு  வானத்திலே ஒரு காட்சி தெரிகிறது. அது மழை வரப்போகிற காட்சி. வானில் கருமேகம் சூழ்ந்து மின்னல் வெட்டுகிறது, இடி இடிக்கிறது, மழை பொழிகிறது, வானவில் தோன்றுகிறது, அது அவருக்கு 

மேகமே, நீ முதலில் இந்தக் கடலைக் குடித்துச் சுருக்கினாய், பிறகு மேலே எழுந்தாய், உமையின் கருமேக  நிறத்தைப் பெற்றுத் திகழ்ந்தாய். பிறகு எங்களை ஆளும் உமையின் சின்ன இடையைப்போல் அழகிய மின்னல்களை வெட்டினாய். உமையின் பாதங்களில் உள்ள தங்கச் சிலம்பைப்போல் இடிச் சத்தம் செய்தாய். நீ வரையும்  வண்ண வானவில்லோ உமையின் அழகிய புருவத்தைப்போல் தோன்றுகிறது. எங்களை ஆட்கொள்ளும் அந்த உமையவளை எப்போதும் பிரியாதவன் சிவபெருமான். அந்தச் சிவனுடைய அன்பர்கள் கேட்பதற்கு முன்பாகவே உமை அள்ளி அள்ளித் தருகின்ற அருளைப்போல, நீயும் மழையாகப் பொழிகிறாய்!

என்பதாகத் தோன்றுகிறது. 

இப்படி ஒரு மழைக்காட்சி இன்றய கவிஞர் உள்ளத்தில் அந்திமழையாக தற்குறிப்பேற்ற அணியில் ஏறி இப்படி ஒலிக்கிறது.

https://www.youtube.com/watch?v=iNi4SNm2RIo

அந்திமழை பொழிகிறது

அந்திமழை பொழிகிறது பாடல்

இப்போது பெய்த இந்த இலக்கிய மழையில் நனைந்த படியே சிலப்பதிகார காட்சி ஒன்றுக்கு வருவோமா?. இங்கு வைகைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் மூவரும் ஒரு படகொன்றில் ஏறி வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகர் செல்கின்றனர். இரு மருங்கிலும் சோலைகளில் உள்ள மரங்கள் உதிர்த்த மலர்களைச் சுமந்து கொண்டு வையை பெருகி ஓடுகிறது.அது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி. ஆனால் அதனை இளங்கோவடிகளோ அது கண்ணகிக்கு வரப் போகும் துன்பத்தை அவ் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி முன்பே அறிந்தவள் போல வருந்தி அழுத கண்ணீரே ஆறாக ஓடுகிறது என்றும்; அதனைப் பிறர்க்குத் தெரியாமல் மறைக்க வேண்டி மலர் ஆடை போர்த்துக் கொண்டு செல்கிறாள் என்றும் கற்பனை நயம் தோன்ற வேறு ஒரு குறிப்பை ஏற்றிக் கூறுகிறார். இதனை,

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி

(புறஞ்சேரி இறுத்த காதை,170-173)

என்ற அடிகளால் அறியலாம்

இப்படியாக மலர்களால் தம்மை மறைத்துக் கொண்டு ஓடும் வைகையைக் கண்டதும் முத்தொள்ளாயிரத்தில் இருக்கும் ஒரு மலர்காட்சி நினைவுக்கு வருகிறது. தற்குறிப்பேற்ற அணியினால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பாடல் இது தான்.

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ – கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்.(75)

கார் காலம். நல்ல மணம் கொண்ட நீல நிறக் குவளைப் பூ தினந்தோறும் நீர்நிலையின் மத்தியில் நின்றபடி தவம் செய்கிறது. எதற்காக? கூரான நுனி கொண்ட வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்தவன், விரைந்து செல்லும் குதிரையைக் கொண்டவன், பாண்டியன் வழுதியின் மார்பைச் சேரும் பெருமைக்காகதான் அந்தக் குவளை மலர் தவம் இருக்கிறதோ?

சாதாரணமாகக் குளத்தில் நிற்கிறது குவளை மலர். அதன்மீது ‘பாண்டியன் மார்பைச் சேர்வதற்காகத் தவம் செய்கிறாயோ’ என்று புலவர் தன்னுடைய குறிப்பை / கற்பனையை ஏற்றிச் சொல்வதால் இந்தப் பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது. இந்தப் பாடலின் மையக் கருத்தைச் சற்றே நீட்டி இன்றய கவிஞர் வைரமுத்து இப்படியாகச் சொல்வார்.

https://www.youtube.com/watch?v=CTkKDJNOUjI 

வெள்ளிமலரே, ( 1.11 – 2.00 )

வெள்ளி மலரே பாடல்

யசோதா.பத்மநாதன். 20.06.2020.


Saturday, November 14, 2020

நேர்ஸிங் ஹோம்

 இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் தமிழ் பண்பாட்டுக்குள் அண்மையில் புகுந்த ஒன்றுதான். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெளிநாட்டு வாழ்க்கையும் பணத்தை மையமாகக் கொண்ட நுகர்வுக்கலாசாரமும் புகுந்துவிட்டபின் தமிழ் பண்பாடு சார்ந்த வாழ்வு என்பது சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் நகர் புறங்களில்...

அதனால் 70, 80 களில் இருக்கின்ற வயதானவர்களுக்குத் தான் இந்தத் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் இத்தகைய கலாசார மாறுதல்களுக்குப் பழக்கப்படாது வாழ்ந்துவிட்டவர்கள். பிள்ளைகள் தம்மைக் கடசிவரை கைவிடாது காப்பாற்றுவார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். வயோதிபமும் அந்த நம்பிக்கையும் அவர்களைக் கைவிடும் போது அவர்கள் துவண்டு போவது வருத்தம் தருவது.

இந்த வாழ்க்கை முறை நம்மை வந்தடைந்து பலவருடங்கள் ஆயிற்று. எனினும், நாம் இன்னும் அதனை ஒரு சொல்லத் தகாத வார்த்தையாக; பிரயோகிக்க தயங்கும் ஒரு வார்த்தையாக; கேட்க விரும்பாத ஒரு சொல்லாக அதனை நாம் பரிபாலித்து வருகிறோம். 

குறிப்பாக 50களில் இருக்கிறவர்கள் இவை குறித்து இனி வெளிப்படையாகப் பேச முன்வரவேண்டும். நடைமுறை வாழ்க்கையினையும் அதில் இருக்கும் நன்மை தீமைகளையும் அலசி ஆராய்ந்து இன்னொருவரில் - அது தன் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வயோதிபத்தில் பாரமாக இல்லாது தமக்கான பாதையை முதலிலே தீர்மானித்து அதற்கேற்ப தம் மனதை அதில் எழும் எண்ணங்களை மறுபரிசீலனை செய்து தம்மைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிள்ளைக்கு நான் என்ன எல்லாம் செய்தேன்! அவர்கள் என்னைப் பார்க்க வேண்டியது அவர்களது கடமை என்ற விதமான எண்ணப்பாங்கையும் தங்கியிருத்தல் போன்ற இன்னொருவருக்கு பாரமாக இருக்கும் காரியத்தைப் பற்றியும் நாம் இனி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

மேலும் ஒரு வயோதிபர் ஒருவர் நேர்ஸிங் ஹோமில் இருக்கிறார் என்றால் அவரை ‘பாவமாய்’ பார்க்கும் தன்மையையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

நேர்ஸிங் ஹோம் கள் நன்றாகவே செயற்படுகின்றன. உயர்தர சேவைகளை சொந்தப் பிள்ளைகளை விட தரமானதாக வழங்குகிறார்கள். துறைசார்ந்த வல்லுனர்கள் அங்கு 24 மணி நேரமும் செயற்படுகிறார்கள். இதனை நாம் ஏன் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம்? ஏற்றுக்கொள்ள இயலா மன முரண்களோடு அல்லாடுகிறோம்?

பார்க்க ஒருவர் இல்லாத போது, பாதுகாப்பும் சிறந்த  24 மணி நேர சேவையும் வழங்கும் இத்தகைய இடங்களில் பெற்றோரை பிள்ளைகள் விடுவதென்பது பிள்ளை மீதான ஒரு  குற்றப்பார்வையாக பார்க்கப்படுவது ஏன்?

இன்னும் ஒரு 10 வருடத்தில் நான் சென்று தங்க ஏற்ற ஒரு நேர்ஸிங் ஹோமை நான் இப்போதே தெரிவு செய்து விட்டேன். அது தனி அறையாக; தனியான குளியலறை வசதிகளோடும் தமிழ் ஒலி/ஒளிபரப்புச் சேவை; தமிழ் உணவு வசதிகளோடும் 24 மணி நேரமும் தமிழில் உரையாடி வைத்திய வசதியைப் பெறத்தக்க தமிழ் வைத்தியர்கள் கொண்ட இடமாகவும், சொந்தமாகவே நகம் வெட்டுவோர், தலைமுடி திருத்துவோர், மருந்தகம் போன்ற வசதிகளை  தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறது அந்த மையம். உடற்பயிற்சி மையங்கள், நேர்ஸிங் வசதி மற்றும் ஒவ்வொரு நாளும் படுக்கை விரிப்புகள் மாற்றி தோய்த்து உலர்த்தி ஆடைகளை தரும் வசதிகளோடும் வேளைக்கு வேளை தமிழ் கலாசார நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும், பல தமிழ் வயோதிபர்கள் வாழும் மையமாகவும் அது இருக்கிறது. பொத்தானை அழுத்தியவுடன் பராமரிப்பாளர்கள் பெளவியமாக புன்னகையோடு வந்து என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். தகுந்த செளகரிகங்களை அக்கறையோடு செய்து விட்டுப் போகிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக படு சுத்தமாக அளவான பொருட்களோடு பெரு நிலப்பரப்பில் கம்பீரமாக அது அமைந்திருக்கிறது.

 மாலை நேரங்களில் விளையாட, உரையாட வசதிகள் உள்ளன. தனியாகவோ கூட்டாகவோ முதியவர்கள் விளையாடத்தக்க விளையாட்டுகளாக அவை இருக்கின்றன. வேளா வேளைக்கு வண்டிலை உருட்டிக் கொண்டு தேனீர் வேண்டுமா பிஸ்கட் வேண்டுமா என்று கேட்கும் பணியாளர்களின் தமிழ் கேட்க மிக இனிமையாக இருக்கிறது.

அது எனக்கு பெருத்த ஆறுதலைத் தருவதற்கு இன்னொரு காரணம் அது எம் ஓய்வூதிய வருவாயில் 85 % ஐ மட்டுமே இவற்றுக்காகப் பெற்றுக் கொள்ளுகிறது என்பதும் தான்.

இனி நேர்ஸிங் ஹோம் பற்றி புதிய ஓரு விழிப்புணர்வு வர வேண்டும். 

அது சென்று சேர ஏற்ற ஓர் இடம் தான்.

யார் யாரெல்லாம் வருகிறீர்கள்? :)

இனி ஒரு பின்னிணைப்பு:

அண்மையில் வாசிக்கக் கிடைத்த ’கனலி’ இதழ் இம்முறை யப்பானிய மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக பிரசுரமாகி இருக்கிறது. அருமையான அவர்களின் இந்தப் பிரயத்தனம் மிக்க நேர்த்தியோடும் சிறப்பாகவும் தமிழை வந்தடைந்திருக்கிறது. 

அதில், வெளிவந்துள்ள  யப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவற்றை இங்கே பகிரத்தோன்றியது. பகிரவும் சேகரிக்கவும் ஏற்றவையாக அவை இருக்கின்றன.

1.

இலட்சியத்துடன் இருப்பது 

களைப்பூட்டுவதாக இருக்கிறது.

தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டும் 

என்று விட்டு விட்டேன் இந்த உலகத்தை.

எனது சேமிப்பில் பத்து நாளுக்கான அரிசி

கணப்பு அடுப்புக்கருகே ஒரு கட்டுச் சுள்ளி இருக்கிறது.

இனி எதற்கு ஞானத்தையும் மாயையும் பற்றிப் புலம்ப வேண்டும்?

கூரையில் விழும் இரவு மழையை கவனித்தபடி

கால் இரண்டையும் நீட்டிக் கொண்டு

செளகரிகமாக அமர்ந்திருக்கிறேன்.

........................

2.

இந்தப் புதையலை மூங்கில் புதரில் இருந்து கண்டுபிடித்தேன்.

கிண்ணத்தை ஊற்று நீரில் கழுவி,

பின்பு அதனைச் சரி செய்தேன்.

காலைத் தியானத்திற்குப் பிறகு, எனது

கஞ்சியை அதில் எடுத்துக் கொள்கிறேன்.

இரவில் எனக்கு அது வடித்த சாற்றையோ சோற்றையோ தரும்.

கீறலுற்றது; உடைந்தது; வானிலையால் தாக்கப் பட்டது; நெளிந்தது.

இருந்த போதிலும் அது என்னுடய

மேன்மை மிக்க கையிருப்பு.

( Ryokan 1758 - 1821) 

.....................

அவ்வளவு நின்மதி இந்தப் புத்தாண்டில். 

மனம் காலியாயிருக்கிறது

ஏதோ என் ஒட்டுமொத்த கடந்த காலமும்

மறைந்து விட்டதைப் போல!

( Takuboku Ishikawa 1886 - 1912 )


1. 

காத்திருப்பது எதற்காக?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும்

குவிந்து கொண்டிருக்கின்றன

நிறைய உதிர்ந்த இலைகள்

.....

2.

மலையின் மெளனத்திற்கு மேலே

அமைதியான மழை!

(  taneda Santoka 1882 - 1940)


மொழிபெயர்ப்பு: வே.நி. சூர்யா. நன்றி கனலி)

 இணைப்புக்கு கனலி இங்கே அழுத்துங்கள்.


Wednesday, October 7, 2020

அதிசய அணி – 9 - ( 02.10.20 )

 வழக்கமாக SBS வானொலியில் மாதத்தின் 4 வது ஞாயிறுகளில் 5 நிமிடங்கள் இடம் பெறும் தமிழ் அணிகள் பற்றிய அறிமுக  நிகழ்ச்சி, தம் குரலால் எம்மை வசப்படுத்தி வைத்திருந்த SPB அவர்களின்   மறைவை ஒட்டி அந்நிகழ்வு அடுத்து வந்த வெள்ளிக்கிழமை ( 2.10.2020 ) அன்று ஒலிபரப்பாகியது.    அதன் இணைப்பை வழக்கமாக இங்கு பதிவது வழக்கம். இம்முறை சில பல நிகழ்வுகளால் அதனை உடனேயே பதிவேற்ற முடியாது போயிற்று.  

குரலால் நம்மை வசமாக்கிய பெரும் பாடகர் S.B. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த மலரஞ்சலிகள்.🌹 அவர் ஆத்மா ஷாந்தி அடைவதாக!!

................................

இப்போது அணி பற்றிய வானொலி  இணைப்புக்குச் செல்ல கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்..

அதிசய அணி - 9 - SBS ( 2.10.2020)

 .............................

அதன் விரிவான எழுத்து வடிவம் கீழே:

கம்பராமாயணத்து நாடுகாண் காதையில் இலங்கையை காண்கிறான் கம்பன்.

கார் மேகங்களுக்கிடையே மின்னுகின்ற மின் கொடிகளாகிய மின்னல்களை வலிந்து மடக்கி அடக்கிப் பிடித்து விளக்குமாறு செய்து மாடி வீடுகள், அதாவது மேல் உள்ள மாடங்களின் உட் பரிகைகளில் வீழ்ந்து கிடக்கின்ற பூக்களின் மகரந்தத் துகள்களை பெருக்குகின்றார்கள் பெண்கள்.  அதனை இப்படியாக உரைப்பான்.

மாகாரின் மின்கொடி மடக்கினர்; அடுக்கி,

மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளிப்

பாகு ஆய செம் சொல் அவர் வீசுபடு அகாரம்!   


இன்றய நவீன பாடல் கூட 



https://www.youtube.com/watch?v=DXhoUscjoTM  2.19 – 2,35

தங்கைக்காக விண்மீன்களை பரித்து தருவார்கள் வானவில்லை கேட்டால் ஒடித்து ஒடித்து தருவார்கள் என்று சொல்கிறதே....

இவ்வாறெல்லாம் நிகழ்தல் சாத்தியமா? கவிஞர்களுக்கு மட்டும் அது சாத்தியம். இப்படியாக விரிகிற இந்தக் காட்சியைப் பார்க்க அதிசயமாக இருக்கிறதல்லவா ? அது தான் அதிசய அணி. இன்றைக்கு நாங்கள் பார்க்க இருக்கிற அணி.

இந்த அதிசய அணி பற்றி தண்டி அலங்கார இலக்கணம் என்ன சொல்கிறது ?

கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது சொல்லும் போது, உலக இயல்பில் இருந்து மீறாத படி உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசய அணி என்கிறது. 

     மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி

     உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி

     ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்

                                  

இது எப்படி இருக்கும் என்று விளக்குவதற்கு தண்டி ஆசிரியர் ஒரு உதாரண வெண்பா ஒன்று தருகிறார்.

"திங்கள் சொரி நிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்

பைங்கிள்ளை பாலென்று வாய் மடுக்கும் - அங்கயலே

காந்தர் முயக் கொழிந்தார் கைவறிதே நீட்டுவரால்

ஏந்திழையார் பூந்துகிலா மென்று''

முழுநிலா முற்றம். அங்கே கிளிகள் வெற்றுக் கிண்ணங்களைப் பார்த்து அதிலே பாலிருக்கின்றது என்றெண்ணி பாலை அருந்த முனைகின்றன; பிறகு தான் தெரிகிறது அது பாலில்லை; பால்வண்ண நிலவு என்று. அப்பாலே கணவனும் மனைவியுமாக இருவர். இன்பத்தின் இறுதியில் பெண் தன் துகிலை எடுக்க அந்த துகிலோ கைக்கு அகப்படவில்லை. ஏனென்றால் அது துகிலல்ல அது நிலவின் ஒளி. இவ்வாறு அஃறினை உயர்திணை என பாகுபாடின்றி நிலவின் ஒளி எல்லோருக்கும் மயக்கத்தைக் கொடுக்கிறதாம். நிலவின் ஒளியைப்பாட வந்த புலவர் என்ன ஒரு அதிசயமான காட்சியை புனைந்து விட்டார் பாருங்கள்? இது தண்டி அலங்கார இலக்கண ஆசிரியர் சொல்லும் அதிசய அணிக்கான உதாரணம்.

இதே காட்சியினை கலிங்கத்துப் பரணியிலும் கூட காணலாம். அதில் இதே காட்சி இப்படியாக வருகிறது,

கலவி களியின் மயக்கத்தால்

கலை போய் அகலக் கலைமதியின்

நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்

நீள்பொன் கபாடம் திறமினோ!

இந்த அதிசய அணி இதே உதாரணத்தோடு இந்தப் பாடல் காட்சியில் இப்படியாக மலர்கிறது.

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்.....



https://www.youtube.com/watch?v=Y6YtvVqk03I 

( 2.33 – 3.15 )

பாண்டிய மன்னனின் நாட்டில் அதிசய அணியில் ஒன்று முத்தொள்ளாயிரத்தில்  இப்படி ஜொலிக்கிறது.

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம்

நறுமணம் கொண்ட,நல்ல  நீல நிறக் குவளைப் பூவே, தினந்தோறும் நீர்நிலைக்கு மேலே நின்றுகொண்டு தவம் செய்கிறாயே, ஏன்? கூரான வேலை ஏந்திய வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த, விரைவாகச் செல்லும் குதிரையைக் கொண்ட, பாண்டியனின் மார்பைச் சென்று அடையத்தானே இப்படித் தவம் இருக்கிறாய்? என்பது அதன் பொருள்.

இது இன்றய திரைத்தமிழில் இப்படியாக ஒலிக்கிறது.



எனக்கே எனக்கா..... (ஜீன்ஸ்)

Link: http://www.youtube.com/watch?v=QIyBk0HH7zo

(4.50 – 5.00 )

இதனைப் போல கவிஞர் வைரமுத்து இப்படியாக ஒரு பாடல் தருகிறார்.



வெள்ளி மலரே... வெள்ளி மலரே...1.16 - 1.35

https://www.youtube.com/watch?v=CTkKDJNOUjI 

வெள்ளி மலரே...

இந்த மலர் என்று சொன்னவுடன் கண்ணதாசனின் அதிசய அணியில் மிளிரும் இந்தப்பாடலை கடந்து போவிட முடியுமா என்ன?



https://www.youtube.com/watch?v=2z8mTWg9vZw

2.10 – 2.48

நளவெண்பா அதை இப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 

‘மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்

பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்

காத்தாள்;அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே

வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து.

அதாவது மலர் கொய்து கொண்டிருக்கிற பெண்ணொருத்தி அவள். அவள் முகத்தை தாமரை என்று எண்ணி மொய்க்கிறது வண்டு. அவளோ பயந்து கைகளால் முகத்தை மூட வண்டு அவள் கரங்களைத் காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்க அவளுக்கு பயத்தால் வியர்க்கிறதாம்.

இவைகள் எல்லாம் உயர்வு நவிற்சி அணி என்றும் அதிசய அணி என்றும் சொல்லப்படும் அணியைப் பயன் படுத்தி கவிஞர்கள் புனைந்த அழகிய சொல் ஓவியங்கள்.



https://www.youtube.com/watch?v=NDIXSHmHRS8

1.30 – 1.54

என்ற இந்த வரிகளை நாம் சினிமாப்பாடலாக பல தடவைகள் கேட்டிருக்கிறோம் அல்லவா? கொடி இடை எப்படி படை கொண்டு வரும்? அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது நளவெண்பா. அங்கு தமயந்தி. படையோடு போகிறாள் எது படை?

நால்குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா,

ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்

வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்

ஆளுமே பெண்மை அரசு!

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய 4 குனங்களும் அவளுக்கு நாற்படை. மெய்வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்களும் அவளுக்கு நல்ல அமைச்சர்கள், சிலம்பொலி அவளது முரசொலி, வேற்படையும் வாளும் அவள் கண்கள், நிலவு முகம் வெண்கொற்றக் குடையாக அவளுடய பெண்மை அரசை ஆழுகிறது என்பது அதிசய அணியை பயன்படுத்தி புலவர் காட்டும் காட்சி.

பெண்ணின் கண்களை வர்ணிக்காதவர் யார் இருக்கக் கூடும்? வள்ளுவர் கூட அதற்கு விதிவிலக்கல்ல.அவர்,

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.

என்கிறார். அதாவது இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்கள் என்பது அவர் கணிப்பு. 

இந்த சினிமா இசை அதனை இப்படியாக அழகியலோடு உரைக்கிறது.



https://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM

2.08 – 2.37

இந்தப் பெண்ணுக்கோ காதல் நோயை சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அது  இன்றய பாடல் ஒன்றில் சொப்பனம் காண வழியே இல்லை என்று இப்படியகப் புலம்புகிறது



 https://www.youtube.com/watch?v=nobCEU0GVGE 

( 2.05 – 2.30 )

 இந்த முத்தொள்ளாயிரப்  பெண்ணுக்குத் தன் கண் மீது கோபம். தோழிக்கு அவள் இந்த வருத்தத்தை இப்படியாகச் சொல்கிறாள். கனவிலே தைரியமாகக் காண முடிகிற காதலன் பாண்டியனை நேரில் காணும் போது எங்கிருந்தோ இந்த நாணம் வந்து இந்தக் கண்கள் தாழ்ந்து போய் விடுகிறதே. அது தான் அவள் மீதே அவளுக்கு கோபம்.

கனவை நனவுஎன்று எதிர்விழிக்கும்; காணும்,

நனவில் எதிர்விழிக்க நாணும்  

என்பது அவளின் பெண்ணின் முறைப்பாடு. அதனால் அவள் இன்றைக்கு கண் விழிப்பதாக இல்லை. கண்ணைத் திறந்தால் கண்ணுக்குள் தான் சிறைவைத்த காதலன் பாண்டியன் தப்பி விடுவான். அதனால் நான் கண்களைத் திறக்கவே மாட்டேன் என்கிறாள் மகள்.

தளைஅவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி

களையினும்என் கைதிறந்து காட்டேன் வளைகொடுபோம்

வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து

என்கண் புகுந்தான் இரா.

பாண்டிய மன்னனின் புகழையும் பெருமையையும் கூற வந்த புலவர் எத்தனை நயத்தோடும் அழகோடும் அதிசய அணியில் அசத்தி விட்டார் பார்த்தீர்களா. 

திருக்குறளில் வளையல் ஒன்று படுகிற பாடு இது!

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

தலைவன் பிரிந்த செய்தியை பிரிவுத்துயரினால் மெலிந்த தலைவியின்  முன் கை மூட்டில் இருந்து களன்று விழும் வளையல் ஊராருக்கு தெரிவித்து விடுமே என்ற கவலை இந்தப் பெண்ணுக்கு! 

இறுதியாக இன்றய பிரிவுத்துயர் கொண்ட பெண்ணுக்கு மோதிரமொன்று வளையலாகி பிறகு அதுவே ஒட்டியாணமாய் ஆகும் திரைப்பாடல் அதிசயத்தோடு இன்றய அதிசய அணி பற்றிய நிகழ்வு நிறைவுக்கு வருகிறது.

செளக்கியமா கண்ணே செளக்கியமா…. ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்…..


 https://www.youtube.com/watch?v=yXCQ1BSpgfQ&feature=emb_logo

Friday, October 2, 2020

குமிழி - புத்தகப் பார்வை - பொதுசன கண் வழியே...

 


குமிழி - ஈழத்தின் விடுதலை இயக்க (புளொட்) உள்ளக முரண்பாடுகளின் / தோல்வியின் அடிப்படைக் கூறுகளை உள்ளே நின்றபடி சாட்சிப்படிமமாக முன்வைக்கும் ஓர் இலக்கிய வடிவம்.

நாவலுக்குள்ளோ ஆவணத்துக்குள்ளோ சுயசரிதைக்குள்ளோ அகப்பட்டுக் கொள்ளாத ஓரு நளின வார்ப்பு.

அட்டைப்படமும் வடிவமைப்பும் கச்சிதமாய் கோலி வைத்திருக்கிறது அதன் உள்ளடக்கத்தை. குறிப்பாக அட்டையை விரித்து பெரிதாக்கும் போது விரியும் தோற்றம் கனம் ஒன்றை கொண்டிருப்பதை காட்சியாக விரிக்கிறது.

அது கொண்டிருக்கும் உள்ளடக்கம் ஓர் உள்காயம்; ஏமாற்றத்தின் கதை; உள்வலி; ஊமைக்காயம்; போராட்டத்தின் இரத்தவாடை; உள்குலைவு; ஓர் இளம் தமிழ் போராளியின் இலட்சியக் கனவு சிதைக்கப்பட்டதன் சின்னாபின்னக் கூறுகள் சிதறிக்கிடக்கும் இடம்; அதே நேரம் நமக்கே நமக்கான பாடங்களை கற்கக் கூடிய அரிச்சுவடியும் ஆகும்.

மேலும், மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட  இளம் போராளியின் உள்மனக் காயம் ஒன்று இறுதியில் ஈழத்தமிழ் மக்களின் உள்காயமாக பரவி விரியும் ஆற்றலின் பிரவாஹம் இது எனிலும் தகும்.

ஓர் இனத்தின் பாரத்தைத் தூக்கிய தோள்கள் - அதன் பாரத்தை சமூகத்தின் மடியில் இருத்தி இருக்கிறது.

அது ஒரு தோல்வியின் சுமை.

’பிணக் கனம்.’

இது இவ்வாறிருக்க,

இதில் நான் முக்கியமாகக் காண்பது புத்தகம் முன்வைக்கும் சமூகம் மீதான ஒரு விமர்சனம்.’ எங்கட சனம் விடுதலை அடையிறதுக்குத் தகுதி இல்லாத சனம். நாங்கள் உள்ளுக்குள்ள காட்டுமிராண்டித்தனத்தோட தான் இருந்திருக்கிறம் எண்டு தெரியுது. விடுதலைக்கெண்டு வெளிக்கிட்டு உள்ளுக்க இருந்தவன் , பக்கத்தில நிண்டவன், எதிர்த்து நிண்டவன் எல்லாரையும் போட்டுத் தள்ளுற கூட்டம். இந்தக் கேட்டுக்க எங்களுக்கு விடுதலை கேக்குது.’

இந்த ’சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம்’ என்பதை இயக்கத்தின் உள்ளேயே ரவி காண்கிறார். 

1. தளத்திற்கும் பின் தளத்திற்கும் இடையே; மற்றும் பயிற்சிமுகாமில் காணப்பட்ட / பேணப்பட்ட அரசியல் சித்தாந்த - நடைமுறை இடைவெளி. (அண்ணன் - தோழர், உணவு,உடைப் பாவனை; அதிகார துஸ்பிரயோகம்; சுயநலப் பேணுகை, உயிர்கள் மீதான எதோச்சதிகாரம்... இன்னபிற..) 

குறிப்பாக வாழைப்பழ பகிர்வு பற்றிய சம்பவம் சமூகத்தை ருசிபார்க்க ஏதுவாயிருந்த அச்சொட்டான உதாரணம். - சமூகத்தின் அங்கத்தவர்களாக அங்கிருந்து உள்ளே வந்தவர்களிடம் காணப்பட்ட இத்தகைய இயல்புகள் எவ்வாறு இயக்கத்தின் போக்கை வழிநடத்திற்று என்பதை புத்தகம் சிறப்பாகப் பேசுகிறது.

2. மக்களுக்கும் இயக்கத்துக்கும் இடையே இருந்த வேறுபட்ட நம்பிக்கைப் பேணுகை.( மக்கள் ஒருநாள் இவர்கள் பெரும் படை திரட்டிக் கொண்டு ஈழத்தை வென்றெடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையும்  போராளிகளிடம் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாதிருந்த வெற்றிடமும்.)

3. தலைமைத்துவத்திடம் இருந்த அறிவு, தூரநோக்கு, ஞான  வெற்றிடம். பண்பற்ற எள்ளல்கள்...

4.பயிற்சிக்கே போதுமான ஆயுதங்கள் காட்டப்படாதிருந்த போதாமை அல்லது இல்லாமை.அல்லது நிரப்பப் படாமை. கேள்வி கேட்க முடியாத இராணுவ சித்தாந்த சிந்தனையும் அதிகார மேலாண்மையும்.

5.வெளிப்படைத் தன்மையும் உண்மையும் அற்றிருந்த; மரணபயம் பின்னிய சுயகம்பிச்சிறை வாழ்வு. மெளனிக்கப்பட்ட சொற்கள் உள்ளடக்கப்பட்ட மனம் கொண்டிருக்கும் அகத்தீ. வாழ்வோடு அடிக்கடி கேட்கும் காணும் நண்பர்களின் மரண ஓலங்களும் மரணங்களும் அவைகளோடு உள்ளேயே  வாழ நேர்ந்த சாபமும்.

6.சாதி, பெண்ணியம் என்பன கையாளப்பட்ட முறைகள்.

7. இயற்கையின் இயல்பான காமத்தை எப்படியாக இளைஞர்கள் கையாண்டார்கள்; காதலை எப்படி மூடிப் புதைத்தார்கள் என்பது குறித்தவை. சின்னச் சின்ன ஆசைகள், தேவைகள் கூட நிறைவேற்றப்படாமை.

8.தன் இனப்போராளியைத் தன் இனமே கொல்லும்  கொலைகளைக் காணும்; கேட்கும் மனநிலைக்கும் பகிரப்பட முடியாதிருக்கும் ; கேள்வி கேட்க முடியாதிருக்கும் இராணுவ சட்டங்களுக்கும் இடையே அல்லாடும் சக போராளியின் உள்மன உழைச்சல்களும் பாரங்களும் குற்ற உணர்வுகளும்.

9. பீதியோடு நம்பிக்கை ஒன்று அவநம்பிக்கையாகி அருகிலிருப்பவரையே நம்ப முடியாது போன அவலம்.

10. மூடுண்ட மெளனம்

என இவ்வாறாக அது பயணிக்கிறது. இவற்றினை ஒத்த பெரும்பாலான சாராம்சங்களை நாம் மூடுண்ட எனக்குத் தெரிந்த நம் வட ஈழ சமூகத்துக்குள்ளும் காணலாம். இன்றும் கூட. 

இவைகள் எல்லாவற்றையும் அவர், ‘அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம் ஒருபோதும் சோஸலிச விடுதலையை பெற்றுத்தரப் போவதில்லை; வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கெதிராகவே தனது துப்பாக்கியைத் திருப்பக் கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச் செய்யும்’ என்ற வரிகளால் நிறுவுகிறார்.

ஒரு போராளியின் உள்காயம் ஒன்று இறுதியாக தமிழ் மக்களின் உள்காயமாக எப்படி பரிமாணம் பெற்றது என்பதை உள்பக்கமாக நின்று சொல்ல விளைகிறது ஆவண அடிப்படை கொண்ட இப் புத்தகம். எனினும் ஆங்காங்கே பிரச்சார நெடிகளும் சுய கருத்துத் திணிப்புகளும் அதிகமாகிப் போகும் தன் பக்க வாதங்களும் அதன் இயல்பான ஓட்டத்தை; மக்கள் தாமாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு  தடையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடாமல் செல்ல முடியாது.

அது சொல்லும் கருத்துகளுக்கு அப்பால் அவற்றைச் சொல்லும் பாணியில் அது கொண்டிருக்கும் வர்ணனைகள் மிக வசீகரமானவை. உடல் களைப்பின் மேல் கோழித்தூக்கம் ஏறிநின்றது என்ற போதிலும் சரி; அவனை இருத்தி வைத்து ஊகங்கள் கதை சொல்லிக் கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; டாக்குத்தனின் மருத்துவம் கஸ்ரோவின் நோயோடு பகிடி விட்டுக் கொண்டிருந்தது என்ற போதிலும் சரி; இருள் நிலத்தில் ஓர் உயிர்குமிழியாய் முகாம் பூத்திருந்தது அதற்குள் வெக்கை இளைப்பாறிக்கொண்டிருக்கும் அது உடற்களைப்பை வருடி விடுவது போலிருக்கும் என்ற போதிலும் சரி; அவன் புன்னகையைக் கோபத்தால் கொன்று போட்டிருந்தான் என்பதிலும் சரி; கையிலிருந்த ரோச் லைட்டில் இருந்து ஒளியைக் கற்றையாக உதறி முற்றத்தில் வீசிவிட்டார். பூக்கள், காய்கள், கனிகள் என தக்காளி, வெண்டி, கத்தரி, மிளகாய் செடி எல்லாம் ஒரு பூந்தோட்டத்தின் அமைவாக தமது குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; மகிழ்ச்சி அவனை உலுப்பி உலுப்பி கதை கேட்டது என்ற போதிலும் சரி; இருளை கடல் இழுத்து போர்த்தி இருந்தது என்ற போதிலும் சரி; கடற்கரை மணலில் எனது பாதங்கள் வேர்களுடன் பரவின என்ற போதிலும் சரி; அந்தச் சொற்கள் என் அப்பாவித்தனத்தின் மீதோ அல்லது அவன் மீதான என் நம்பிக்கையின் மீதோ கூடுகட்டி அமர்ந்திருந்தன என்ற போதிலும் சரி; இலக்கியச் சுவை ஆங்காங்கே ஏறி உட்கார்ந்து ஒரு கிராமத்துச் சிறுவனின் விகடமில்லா புன்னகையை உதிர்த்துவிட்டுச் செல்வதை நிச்சயம் இலக்கிய ரசிகர்கள் வாசித்து இன்புறுவர். வாசிக்க வாசிக்க திகட்டாத அச் சொல்லோவியங்கள் ஆங்காங்கே புத்தகத்துக்கு  கசப்பு மருந்தை மூடி வைத்திருக்கும் இனிப்பாக உதவுகிறது. கவிதைகள் கொஞ்சிக்கொஞ்சி கதைகேட்கும் இடங்கள் அவை.

வேப்ப மரம் ஒன்று நம்பிக்கையின் சாயலாய் தோன்றி வெட்டி வீழ்த்தப்பட்ட  மரக்கட்டையாகக் காணும் அவ நம்பிக்கையில் - நிராசையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனநிலையையும் போராளிக் கண்களிடையே கண்டு தெளிகிறோம். அது ஒரு நல்ல உதாரண பிம்பமாக ஆங்காங்கே தலை சிலுப்பி தன் இருப்பை நிலைநிறுத்துகிறது.

தமிழக மக்கள் கொடுத்த ஆதரவு, புகலிடம், முன்னுரிமை, வைத்திருந்த மரியாதை, விருந்தோம்பல், உயர்ந்த எண்ணம் என்பன நெஞ்சை நெகிழ வைப்பன. போராளி இளஞர்களும் அதற்கேற்ப நடந்து கொண்டார்கள் என்பது நெஞ்சை நிறைக்கிறது. மனம் பெருமிதத்தில் பொங்குகிறது.

ஆங்காங்கே இளைஞர்களுக்குள் நடைபெறும் நகைச்சுவைகளோவெனில்  மனசை இலகுபடுத்த வல்ல வீரியம் கொண்டவை. காட்சி வர்ணனைகளும் நகைச்சுவைகளும் அபூர்வமாக இந்த கோட்பாடு, சித்தாந்தம், அரசியல் போன்றவற்றுக்கும் பொருந்திப் போகிறது என்பது அதிசயம். கவிதாம்சமும் தமிழும் சமயோசிதத்தோடு ஆங்காங்கே  லாவண்யமாய் புத்தகம் மீது நடைபோடுகிறன.

இருந்த போதும், உண்மைகள் முரண்டு பிடித்துக் கொண்டு முன் நிற்பதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லாவண்யங்கள் விலகி ஓடி விடுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். உண்மைக்கு அத்தகைய வீரியம் உண்டு. அது எதற்குள்ளும் மறந்தும் மறைந்து விடுவதில்லை. மேலும் இது நம்மவர் கதை. இரத்தமும் சதையும் உயிரும் மனமும் கொண்ட போராளிகளின் வாழ்வா சாவா என்பது பற்றிய; உண்மை கொண்டெழுதிய திகில் சித்திரம். இங்கு ரசிக்க ஏது அவகாசம்? நின்று பார்க்க ஏது திராணி? நிதானிக்க ஏது நேரம்? எல்லோரும் தப்பினார்களா என்பதே தேடலாக மனம் எங்கும் அவர்களே வியாபித்திருக்கையில்....

இதுவரை பெரும்பாலான பொது சனங்களால் அறியப்படாத செய்தி ஒன்றை; உடலின் உள்பக்கம் ஒன்றை; சத்திர சிகிச்சை மேடையில் வைத்து நம் நோய்வாய்ப் பட்ட உடலை நமக்குத் திறந்து காட்டி இருக்கிறது இந்தப் புத்தகம்.  மேலும், அது ஈழத்தமிழ் சமூகத்துக்காக இதுவரை தூக்கிச் சுமந்த பாரங்களை எல்லாம் சமூகத்தின் மடியில் இறக்கி வைத்து இளைப்பாறுகிறது. 

இறுதியாக ஆசிரியர் ரவி யின் தமிழில் சொல்வதாக இருந்தால் ’அலைகொண்ட கடலை உள்ளுக்குள் விழுங்கி இருந்த உயிர் ஒன்று, அதற்குள் மூழ்கடித்திருந்த சொற்களைக் கோர்த்து, அந்த மந்திரக்கயிறைப் பிடித்த படி சுயகம்பிச் சிறைக்குள் இருந்து தன் உடலுக்குள் திரும்பிய கதை இது’.

போராளி அன்ப,

இனியேனும் நீ இளைப்பாறுவாயாக; பாரம் சுமந்தது போதும்; பஞ்சுபோல் பாரமற்று இனி நீ இருப்பாயாக!!

வரலாறு அதனைச் சுமந்து, எதிர்காலம் ’படிக்கக்’ கொடுக்கட்டும்!

📎

இந்தப் புத்தகத்தை எனக்கு அன்பளித்த நீண்டகால சினேகிதி; சகோதரி பாமதிக்கு நன்றி. என் புத்தகத் தட்டில் காத்திரமான கனம் ஒன்று தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

Monday, August 24, 2020

பின்வருநிலையணி - 8 -

   SBS வானொலியில் நம்ம தமிழ் நிகழ்ச்சியில் ‘பின்வருநிலை அணி பற்றிக் கேட்க இங்கே அழுத்தவும்    

தமிழுக்கும் அமுதென்று பேர்…..


https://www.youtube.com/watch?v=yBjAWU6_938 


இந்தப் பாடல் தமிழ் குறித்து பாரதிதாசன் இயற்றிய கவிதையின் இசைவடிவம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான் இல்லையா? 

இதிலே பாரதி தாசன் பயன்படுத்தி இருக்கிற அணி என்ன தெரியுமா? 

அது தான் பின்வருநிலைஅணி. பின்வருநிலை அணி என்றால் என்ன? அதற்கு தண்டி அலங்காரம் என்ற இலக்கண நூல் என்ன வரைவிலக்கனம் சொல்கிறது? 

’முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்

பின்வரும் என்னில் பின்வரு நிலையே ’ 

என்று அது உரைக்கிறது. 

இந்தப் பாடலிலே தமிழ் என்ற சொல் பல இடங்களில் மீண்டும் மீண்டும் வந்து இருக்கிற போதும் அது தமிழ் என்ற ஒரே பொருளிலே வந்திருக்கிறதல்லவா? அது இந்த அணியின் ஒரு சிறப்பு ஆகும். அது என்ன ’ஒரு’ சிறப்பு? அப்படி என்றால் வேறு சில சிறப்புகளும் உள்ளனவா என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம். வேறு சில சிறப்புகளும் அதாவது உட்பிரிவுகளும் இதற்கு உள்ளன. 

இதிலே குறிப்பாக மூன்று வகையான உட்பிரிவுகள் உள்ளன. அதிலே ஒன்று சொல்பின்வருநிலையணி, இரண்டாவது பொருள்பின்வருநிலையணி மூன்றாவது சொல்பொருள் பின்வருநிலையணி. 

என்ன? இவைகளுக்கெல்லாம் என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்களா? அணியினுடய பெயர் என்னவோ பெரிதாக இருந்தாலும் வேறுபாடு என்னவோ மிகத் தெளிவானதும் எளிமையானதும் தான். 

சொல் பின்வருநிலை அணி என்பது ஒரு சொல் பல இடங்களிலும் ஒரே மாதிரியாக வரும். ஆனால் அது மற்றய இடத்தில் வருகிற போது அதன் சொல் ஒன்றாக இருப்பினும் பொருள் வேறொன்றாக இருக்கும். உதாரணமாக 

`குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்’   (குறள் எண் -965)

அதாவது குன்று போல உயர்ந்தவர்கள் குறுகிய அளவு இழிசெயலைச் செய்து விட்டாலும் அவர்கள் மேன்மை குன்றி விடும் என்று குன்றுதல் என்ற சொல் முதலில்`மலை’ என்ற பொருளிலும் இன்னோர் இடத்தில் `குறைந்துவிடும்’ என்ற பொருளிலும் வள்ளுவன் அமைத்துக் காட்டிய சொல்பின்வருநிலையணியாகும். 

‘காந்தியைப் பார்த்தேன்; அவன் காந்தியைப் பார்த்தேன்’ என்று பாரதியார் தன் பாடலில் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். இப்பாடல் அடியில் முதலில் வருகிற காந்தி என்ற சொல் காந்திமகானையும் அடுத்து வருகிற காந்தி என்ற சொல் வசீகரம் பொருந்திய என்ற அர்த்தம் தரும் காந்தி என்ற பொருளிலும் வந்து ஒரு சொல் இரு வேறு இடங்களில் இருவேறு அர்த்தத்துடன் வெளிப்பட்டுள்ளதல்லவா? இது சொல் பின் வரு நிலை அணியாகும். 

இப்போது கண்ணே கண்ணே என்று கலைவாணர் கூப்பிடும் இந்தப் பாடல் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

தங்கமே… தங்கமே……

.தங்கமே தங்கமே பாடல்

https://www.youtube.com/watch?time_continue=2&v=aCehtFHIMak&feature=emb_logo

இசையோடு கலந்து வரும் இந்த நிலாவுக்கு எத்தனை அர்த்தங்கள்?

வான் நிலா நிலா அல்ல….

வான் நிலா நிலா அல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=uKDtXNrm8vM 

அது சொல்பின்வருநிலையணி.                                                   

அப்படி என்றால் பொருள்பின்வருநிலையணி எதுவாக இருக்கும்? பொருள் பின்வருநிலை அணி என்பது ஒரே பொருளைக் குறிக்கின்ற பல சொற்கள் தொடர்ந்து வருவது போல அமைக்கப்பட்டிருப்பது. அதாவது சொல் வேறுவேறாக இருக்கின்ற போதும் அது குறிக்கின்ற பொருள் ஒன்றாக இருப்பதாக ஒரு பாடல் புனையப்பட்டிருப்பது பொருள்பின்வருநிலையணியாகும். அதற்கு உதாரணமாக இன்னொரு பாரதியார் பாடல் பார்ப்போமா? 

 ‘கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல்

கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வியர்த்தேன்’

என்றுவரும் பாரதியாரின் பாடலடியில் கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வியர்த்தேன் என்ற சொற்பதங்கள் எல்லாம் மனக்கலக்கத்தினைத் தரும் சொல்லடிகளின் வேறு வேறு மொழிவடிவங்கள் அல்லவா? அவ்வாறு ஒரு பாடலில் ஒரே பொருளைத்தரும் வேறு வேறு சொற்கள் ஒன்றாகி அமையப்பெறும் போது அதில் இடம் பெறும் அணி பொருள்பின்வருநிலை அணியாகும். 

’அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்

விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;

கொண்டன காந்தள் குலை’

என்ற தண்டியலங்கார ஆசிரியர் தரும் இந்த உதாரண பாடலில் வரும் 'அவிழ்ந்தன' அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ்விண்டன, விரிந்தன, குலைகொண்டன எனும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறதல்லவா?. ஆகவே இது பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

கேட்க இருக்கும் இந்தப் பாடலில் வரும் அன்புக்கு சமனான பொருள் தரும் பாசம் பக்தி கருணை போன்ற பதங்கள் ஒரே பாடலில் ஒரே பொருளைத் தரும் வகையில் புனையப்பட்டிருப்பது சொல்பின்வருநிலையணிக்கு  இசைவடிவிலமைந்த ஓர் உதாரணமாகும்.

அன்பு என்பதே தெய்வமானது…..

அன்பு என்பதே தெய்வமானது பாடல்

https://www.youtube.com/watch?v=jxvBHziR9P4

0.30 – 1.55

மூன்றாவதும் இறுதியானதுமாக அமையப்பெறுவதும்; இன்றய நிகழ்வின் முக்கிய கருவாகவும்; முகப்புப் பாடலுக்கு உதாரணமாகவும் அமையப்பெறும் அணி சொற்பொருள் பின்வருநிலையணியாகும். அதில் என்ன வேறுபாடு இருக்கக் கூடும்?  பெயர் என்னவோ பெரிதாக இருந்தாலும் அதன் பொருள் என்னவோ மிக எளிமையானது தான். கவிஞர் தான் இயற்றும் கவிதையில் ஒரே சொல் பல இடங்களிலும் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வருவது தான் அது.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.’ 

என்றும் 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!’

என்றவாறாக பல திருக்குறள்களை இந்த அணிக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். அதில் மேலுமொரு உதாரணமாக 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை     (குறள் : 411)

என்று வள்ளுவர் சொல்வதில் வரும் செல்வம் என்ற சொல் திரும்பத் திரும்ப ஐந்து இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமையைக் காணலாம். 

இப்போது இந்தச் செவிச்செல்வத்தின் மூலமாக சொற்பொருள் பின்வருநிலையணியில் அமைந்த பாடல் ஒன்றை இசையோடு கேட்போமா? 

( சொன்னது நீதானா….)

சொன்னது நீதானா பாடல்

https://www.youtube.com/watch?v=-NCtHKpRP0A

0.00 – 0.29

வள்ளுவர் 5 இடத்தில் வைத்துக் காட்டிய கைவண்ணத்திற்கு கம்பர் என்ன சளைத்தவரா? அவர் தன் இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 7 இடங்களில் ஏழு என்ற வார்த்தையை வைத்து  செய்த சொல் விளையாட்டு ஒன்று இந்த அணிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்

ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி

ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப-

’ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?’

என்று வருகிறது அப்பாடல். அதன் பொருள் என்னவென்றால் ஏழு கடல்களும், மேலே உயர்தனவாக உள்ள ஏழு உலகங்களும், ஏழு மலைகளும், ஏழு முனிகளும், சூரியனின் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும், இந்த அம்பிற்குக் குறி என்று அஞ்சி நடுங்கினர். இது கம்பன் சொற்பொருள் பின்வருநிலையணியை தன் பாடலில் பொருத்தி செய்து காட்டிய தமிழ் வித்தை.

( நீதானா எனை அழைத்தது நீதானா எனை நினைத்தது நீதானா…)

நீதானா என்னை அழைத்தது பாடல்

https://www.youtube.com/watch?v=F_K6wytvQD4

இப்பாடலில் வரும் நீதானா என்ற சொல்

கட்டோடு குழலாட ஆட...

கட்டோடு குழலாட ஆட பாடல்

https://www.youtube.com/watch?v=9x1zk19PM1c

இதில் வரும் ஆட என்ற சொல்

பூ கொடியின் புன்னகை...

பூ கொடியின் புன்னகை பாடல்

https://www.youtube.com/watch?v=fh4OWnO2pOE&lc=UgxW2MU9Q0DF46MDdYB4AaABAg

இப்பாடலில் வரும் புன்னகை என்ற சொல்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ என்ற பாடலில் வரும் பூ என்ற சொல்

பெண்ணல்ல பெண்ணல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=amAewEx3MmU 

( அன்பு என்பதே தெய்வமானது…..)

அன்பு என்பதே தெய்வமானது பாடல்

https://www.youtube.com/watch?v=jxvBHziR9P4

0.30 – 1.55

இந்தப்பாடலில் வரும் அன்பு என்ற சொல்

( நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா )

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல்

https://www.youtube.com/watch?v=b7QECUszUa8

0.0 – 0.52 

என்பதில் வரும் ராஜா என்ற சொல்

இவைகள் எல்லாம் சொற்பொருள்பின்வருநிலையணியைப் பயன்படுத்தி திரை இசை தந்த தமிழ் பாடல்களில் சில.

பாரதியார் தன் கவிதைகளில் இந்த அணியினை எப்படி எல்லாம் பயன் படுத்தி இருக்கிறார் பாருங்களேன்! 

பாரதியார் கவிதைகள்

https://www.youtube.com/watch?v=GQtTCVIfQpM

10.7 – 10.58 /  11.11 – 12.33 / 12.43 – 13.37 / 15.7 – 16.58.

நிகழ்ச்சியை நிறைவு செய்யும் நேரம் நெருங்கிவிட்ட இத்தருணத்தில் சொற்பொருள்பின்வருநிலையணியில் இடம்பெற்ற இந்த நாலடியார் பாடலோடு நிகழ்ச்சியை நிறைவு செய்வோமா?

நாலடியார் பாடல்

https://www.youtube.com/watch?v=FmHol1YLrE8 

0.12 – 0.41.

இதனோடு கூடவே வர இருக்கும் இந்த நிறைவுப் பாடலும் குறுகிய நம் வாழ்வை சினிமா என்ற திரைக் கலை இசை வழியாக சொற்பொருள் பின்வருநிலையணியில் இப்படியாக ஒலிக்கிறது. 

டிப்பு டிப்பு டிப்பு டிப்பு குமரி

https://sv-se.facebook.com/763611867102044/videos/812484335548130/ 


           பிரதி ஆக்கம்: யசோதா.பத்மநாதன் 5.8.2020.


Wednesday, August 19, 2020

அந்தாதி - 7 -

   
இன்று நாங்கள் பார்க்க இருப்பது சொல்லணிகளிலே ஒன்றான அந்தாதி என்பதாகும்.எழுத்துக்களின் தொகுதியை அழகுபடுத்திப் பார்க்கும் சொல்லணிகளிலே ஒருவகை இந்த அந்தாதி.

அந்தாதி என்பது பற்றி சுகி சிவம் எப்படிச் சொல்கிறார் என்று சற்றுக் கேட்போமா?

https://www.youtube.com/watch?v=w5T8GVcQSHU
0.20 – 1.42
ஆமாம். அதுதான் அந்தாதி. அதாவது
       ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதியென்று
                ஓதினர் மாதோ உணர்ந்திசினோரே

என்று அந்தாதிக்கு இலக்கணம் உரைக்கிறது யாப்பெருங்கலம்.
‘ஒரு செய்யுளுள்ளே ஓரடி இறுதி மற்றையடிக்கு முதலாகத் தொடுப்பனவுமுள’ என்று தண்டியலங்காரமும் அந்தாதிக்கு விளக்கம் உரைக்கின்றது. அதனை நம்ம தமிழில் சொல்வதாக இருந்தால்

அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பதற்கு தமிழில் 'முடிவு' என்று அர்த்தமாகும். ஆதி என்பது 'முதல்' என்றும் பொருள்படும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இப்போது. முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். அதாவது ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.

இந்தச் சினிமாப் பாடலில் அந்த அந்தாதி இப்படியாக வருகிறது.
ஆடிவெள்ளி தேடி உன்னை

https://www.youtube.com/watch?v=r6Zyo4LXxIE

 அந்தாதி என்ற சொல்லணி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே வரும்.. இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவார்கள். தமிழ் இலக்கியப் பரப்பில் அந்தாதித் தொடை அமைப்பே அந்தாதிச் செய்யுள் அமைப்பிற்கு வழி காட்டியது எனலாம். அந்தாதி அமைப்பு, மனப்பாடம் செய்வதற்கும் எளிதாக நினைவு கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் புலவர்களால் அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

இரண்டு அடிகளுக்கு இடையே வரும் அந்தாதித் தொடைக்கு இந்த நாட்டுப்புற பாடல் ஒரு சிறு உதாரணமாகும்.
                பணம் பணம்
                                பணத்திற்கு இல்லை குணம்
                                குணத்திற்கு இல்லை மணம்
                                மணம் என்றால் பூ தானே
                                பூ என்றால் கட்டுவோமே
                                கட்டுவது என்றால் பசுதானே
                                பசு என்றால் கறப்போமே
                                கறப்பது என்றால் பால் தானே
                                பால் என்றால் புளிக்குமே
                                புளிக்கும் என்றால் புளிதானே
                                புளி என்றால் தொங்குமே
                                தொங்குவது என்றால் பாம்புதானே
                                பாம்பு என்றால் கொத்துமே
                                கொத்துவது என்றால் கோழி தானே
                                கோழி என்றால் கூவுமே
                                கூவும் என்றால் நரிதானே
                                நரி என்றால் அதோடு சரி

என்ற நாட்டுப்புற பாடல் அந்தாதித்தொடை வரப் பாடியமைக்கு நல்ல சான்றாக அமைகின்றது. முதலடியில் முடியும் பணம், குணம்,மணம், பூ, கட்டுதல், பசு, கறத்தல், பால், புளித்தல், புளி, தொங்கல், பாம்பு, கொத்துதல், கோழி, நரி. சரி என்று வரும் நிறைநிலைப் பகுதிகள் அடுத்த அடிக்குத் தொடக்கமாக அமைகின்றன. இதன் காரணமாக பாடல் அந்தாதிதொடையின் அழகினைப் பெறுகின்றது.

ஒடிவது போல் இடை இருக்கும்

https://www.youtube.com/watch?v=0ckuFQssG5g

இவ்வாறாக மட்டுமன்றி அந்தாதி செய்யுள் வகைப் பாடல்கள் தமிழ் இலக்கிய பரப்பிலே நிறைய உண்டு. அதிலும் பக்தி இலக்கியப் புலவர்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவிலான பாடல்களைப் பாடியுள்ளார்கள். சைவவைணவ போட்டிகள் மலிந்திருந்த பல்லவர்களின் ஆட்சி நடந்த காலத்தில் இவ் அந்தாதி குறித்த இந்த பாடலும் உரையாடலும் ஒரு சிறு மாறுதலுக்காக இப்போது உங்களுக்காக…


https://es-la.facebook.com/TiruchendurMuruganTempleTiruchendur/videos/1814769931917740/UzpfSTIzMjE3NDUzMDYzMTY2Mzo2MzAyMDUwNjQxNjE5Mzk/
(1.30 – 2.02 / 3.34 – 4.18 )

இருந்த போதும் சேர நாட்டு மன்னனான ‘பொன்வண்ணத்தந்தாதியைப் பாடிய சேரமான் பெருமாள்நாயனார் சேர நாட்டு மன்னன் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவரின் காலம் 8ம் நூற்றாண்டு ஆகும். இந்தப் பொன்வண்ணத்தந்தாதி,

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே

என்று தொடங்கி அதன் 100வது பாடலை முடிக்கும் போது பொன்வண்ணமே என்று முடித்தமையாலும் பொன்வண்ணத்தந்தாதி என்று இது பெயர் பெறும். இப்பாடல்கள் மொத்தம் 101 உண்டு.

சொல்லழகும் கருத்தழகும்  சந்தங்களும்அமையப்பெற்றிருக்கும் அப் பாடல்களில்

கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே 91

என்று 91வது பாடல் முடிய சிந்தனை என்ற சொல்லை அடுத்த அடியாகக் கொண்டு 92வது பாடல்

சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே 92

என்றவாறாக வருவது ரசித்து இன்புறத்தக்கது அல்லவா. முதல் பாடலில் ’வண்ணமும்’ அடுத்த பாடலில் ’என்றும்’ என்பதும் மூன்றாம் பாடலில் ’தேன்’ என்றும் வருவது அந்தாதி வகைக்கு அப்பால் இலக்கிய ஆர்வலர்களுக்கு மேலும் இன்பம் பயப்பது ஆகும்.

இப்போது அந்தாதி வகையில் அமைந்த தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று கேட்போமா?

வசந்தகால நதிகளிலே

 https://www.youtube.com/watch?v=0bZL-9b-m9Y

இந்தப் பாடலை இயற்றிய கவிஞர் கண்ணதாசன் அந்தாதியில் ‘ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி’ என்று 100 பாடல்களைக் கூட தந்திருக்கி றார். ‘கண்ணதாசன்’ இலக்கிய இதழில் தொடராக வெளி வந்த அந்தாதி கவிதையில் இருந்து ஒரு சிறுபகுதியை இப்போது பார்ப்போம்.

 “நாடுவதில் மிகத்தேவை
நம்பிக்கை, வைராக்கியம்,
நல்ல பக்தி;
தேடுவதில் மிகத்தேவை
திட சித்தம், தேர்ந்த மனம்
சிறந்த ஞானம்;
பாடுவதில் மிகத்தேவை
ஊனுருக, உடலுருகப்
பாடும் பாவம்;
கூடுவதில் மனைவியினும்
கண்ணனோடு குழைவாகக்
கூடு வீரே ! ( 77 )

என்று முடியும் ஒரு பாடலின் முடிவுச் சொல்லான கூடுவீரே என்ற சொல்லில் இருந்து

கூடு வெறும் கூடாகிக்
கொள்ளியிலே வீழ்ந்து விடும்;
கொண்ட கோலம்
காடு வரை வாராது;
கனல் தனையும் வெல்லாது;
கரைந்து போகும்!
ஆடுவதும் பாடுவதும்
அறுபதிலோ இருபதிலோ
அடங்கிப் போகும் !
வாடுவதில் பயனில்லை;
‘சிக்’கென்று மாதவனை
வளைப்பீர் நீரே ! (78 )

இவ்வாறாக அந்தாதிப்பாடல்கள் பின்நாளில் பிரபலம் பெற்றன. அண்மைக்காலத்தில் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் இன்றுவரையான அந்தாதி வகைப் பாடலுக்கு ஓர் உதாரணம் தான்.

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே

இவ்வாறாக பின் நாளில் சொல்லினை அணிசெய்யும் இந்த அந்தாதிவகை பிரபலமாகு முன்னரே சங்க கால இலக்கியத்தில் ஒன்றான புறநானூற்றில் இந்த வகையில் பாடப்பட்ட பாடல் ஒன்று உண்டு.

மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும், என்றாங்கு … என்று வரும் அடிகளில் அந்தாதி அமைப்பு விளங்க காணலாம்.

அது அவ்வாறு இருந்த போதும் பல சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குக் காரணராக விளங்கிய பக்தி இயக்கப் புலவர்களே அந்தாதி இலக்கியத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆகி உள்ளனர். இன்று கிடைக்கும் அந்தாதி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது, காரைக்கால் அம்மையார் பாடிய 'அற்புதத் திருவந்தாதி' ஆகும். பதினோராம் திருமுறையை 'அந்தாதி மாலை' என்று கூறும் அளவிற்கு அத்திருமுறையில் எட்டு அந்தாதி இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றதாக அந்தாதி இருந்திருக்கிறது.

அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி ஆகியன உள்ளன. இவை அல்லாமல் கலித்துறை அந்தாதி, கலியந்தாதி, வெண்பா அந்தாதி ஆகியவற்றிற்கும் பாட்டியல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இவை தவிர வேறு சில அந்தாதி வகைகளும் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

பாட்டியல் நூல்கள் காட்டிய அந்தாதிகள் தவிர மேலும் பல புதிய வகை அந்தாதிகளும் காணப்படுகின்றன. செய்யுள் வகை, பாடல்களின் எண்ணிக்கை, அவற்றில் அமைந்த அணி நலன்கள், பாடல்களை உச்சரிக்கும் செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு வகையினவாகப் பெருகி உள்ளன.

இராமாயணத்தை இயற்றிய கம்பரை ஆதரித்தவர் சடகோபர் என்ற வள்ளல் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த செய்தி தான். அதனால் கம்பர்  சடகோபர் அந்தாதி என்று ஒன்றையும் பாடி இருக்கிறார். அந்தாதி வகையில் அமைந்த அப்பாடல்களில் தனக்குதவிய சடகோபரை சிறப்பித்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

’நாய்போல் பிற்கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப் பேய்போல் திரியும் பிறிவியினேனைப்...’ என்று அதில் தன்னை சொல்லும் கம்பர் ’நோய்போம் மருந்தென்னும் நுனதிரு வாய்மொழி நோக்குவித்து தாய்போல் உதவி செய் தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே’. (17) என்று சடகோபர் திருவந்தாதியில் உருகி

சொல் என்கெனோ முழுவேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கொனோ மறை நேர்நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக்கனி என்கெனோ
புகலவல் என்கெனோ குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே. 19

என்று ஒரு அச் செய்யுளை மாலை என்று முடித்து அடுத்த செய்யுளை

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம்பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சியம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20
என்பார்.

இவ்வாறாக அந்தாதி பல பெருமக்களிடம் அன்றிலிருந்து இன்றுவரை அவர் கரங்களில் தவழ்ந்து வந்து தமிழை வாழவைத்து அழகு பார்த்திருக்கிறது. அந்தவகையில் அமைந்த இந்தப்பாடலும் அந்தாதி வழி வந்தது.

வாழநினைத்தால் வாழலாம் (1.15 – 2.32.)

https://www.youtube.com/watch?v=s6H319KzL4I

Sunday, August 16, 2020

கால வங்கி ( Time bank )


சுமார் 9 வருடங்களுக்கு முன்னால் சுவிற்சிலாந்து தேசத்திற்கு என் தங்கையை பார்ப்பதற்காக முதன் முதலாகச் சென்றிருந்தேன்.

அவர்கள் கிராமங்களின் காதலர்கள். நகரில் இருந்து ஒரு மணி நேர அப்பாலில் உள்ள எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றில் குடியிருக்கிறார்கள். பச்சைப் புல்வெளிகள், நீல ஏரி ஒன்று, சுற்றிவர மலைகள், அதன் அருகாக ஓடும் வெள்ளி நிற நீரோடை, பூரண அமைதியும் மழை கழுவி விடும் சுத்தமுமாக  சுற்றுப்புறங்கள்,  பாதையோரமாக காய்த்து விழுந்து கிடக்கும் அப்பிள் பழங்கள், தாத்தா பாட்டிமார்களின் பூந்தோட்டங்களோடு கூடிய குட்டி குட்டி வீடுகள் அவர்கள் வளர்க்கும் பூனை, நாய், முயல் போன்ற பிராணிகள், வீதிகளில் நடந்தால் டொச் மொழியில் நலம் விசாரிக்கும் தோல் சுருங்கியும் புன்னகை சுருங்கி விடாத மனிதர்கள்.....

குட்டி மலை ஒன்றில் இவர்களின் வீடு. மலையை உடைத்து அதன் இயல்பை சிதைத்து விடாத வாறு அந்த மலையின் இயல்பான அம்சத்தை உள்வாங்கி அதன் இயல்பு சிதையாத விதத்தில் கவனமாகத் திட்டமிட்டு  ஓரமாக கட்டப்பட்ட மூன்று அடுக்கில் அமையப்பெற்ற வீடு ஒரு தனி அழகு. காதலனுக்கருகே வெட்கப் புன்னகையோடு ஒட்டிக்கொண்டு நிற்கும் ஒரு காதலியைப் போல....

அப்போது என் பெறாமகள் 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நடந்து செல்லும் தூரத்தில் பாடசாலை. 5ம் வகுப்பு வரையுமான அந்தப் பாடசாலையில் ஒரே ஒரு ஆசிரியர். மற்றும் ஒரே ஒரு நாய். பெரியவகுப்பு மாணவர்கள் தான் சிறியவகுப்பு மாணவர்களுக்குப் பொறுப்பு. அவர்களிடம் ஏற்படும் சின்னச் சின்ன பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு பெரிய வகுப்பு மாணவர்களுக்குரியது.

நாய் பாடசாலைக்குச் சொந்தமானது. ஆசிரியர் எந்த வகுப்புக்குப் போகிறாரோ அந்த வகுப்புக்கு அதுவும் போகும். அங்கு போகும் போது அந்த நாய் அந்த வகுப்பு மாணவர்களின் பராமரிப்பில் இருக்கும். அப்போ மாலையில் நாய்க்கு என்ன ஆகும்? மற்றும் விடுமுறை காலங்களில் அது எங்கு தங்கும்? ஏற்கனவே மாணவர்கள் தம் பெயரைப் பதிந்து வைத்திருக்கும் வரிசைக்கேற்ற படி அவர்களுடய வீடுகளுக்கு அது செல்லும். ஏனைய உயிரினங்களையும் மதிக்க; நேசிக்கக் கற்றுக் கொடுப்பதற்காக இந்த ஏற்பாடாம்.

பாடசாலைக்கு போக தனியாக சீருடை எதுவும் இல்லை. விரும்பிய ஆடையில் போகலாம். எல்லோரும் நடையாகவோ அல்லது ஈருருளியிலோ போகிறார்கள். எனக்கு இவர்கள் என்ன சமயம் படிக்கிறார்கள் என்றறிய ஆவல் ஏற்பட்ட நாள் ஒன்றில் அது பற்றி விசாரித்தேன். அவர்கள் எல்லோரும் எல்லா சமயமும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். சமய ஆசிரியர் ஒருவர் தான். அவர் எல்லா சமயங்களையும் கற்றுத் தேர்ந்தவராகவும் அவை எல்லாவற்றையும் அவைகளின் தத்துவார்த்த கருத்துக்களையும் பேதமின்றி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

அப்போ இந்து சமயமும் படித்தாயா என்று கேட்டேன். ஆம், தான் அதுவும் படித்ததாகவும் ஒரு முறை மாணவர்கள் எல்லோரும் தன் வீட்டுக்கு வந்து தங்கள் சுவாமி அறையையும் அதன் பரிவார தெய்வ விக்கிரகங்கள், படங்கள் மற்றும் பூசை புனக்காரங்கள் போடப்படும் வாசனைகள் போன்ற இத்யாதிகளையும் வணக்க முறைகளையும் தெரிந்து கொண்டு போனார்கள் என்ற தகவலையும்  தெரிவித்திருந்தாள். 

இவ்வாறான சமய கற்பித்தல் முறையில் இரு ஆதாயங்கள் உள்ளன.

1. சமய சமரசம் வளருவதோடு தனக்கு பிடித்த ஒரு தத்துவார்த்த நெறியை / நம்பிக்கையை பின்பற்ற மாணவருக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

2. பெற்றோர் பின்பற்றும் சமயத்தை; நம்பிக்கையைத் தான் பிள்ளையும் பின்பற்ற வேண்டும் என்ற  ஒரு தொடர் சங்கிலி அறுகிற அதே நேரம் ஏனைய சமயங்களையும் பிள்ளை அறிந்து கொள்ளவும் மதிக்கவும் கற்றுக் கொள்கிறது.

இத்தனை விஷயங்களும் எனக்கு மீண்டும் நினைவுக்கு வரக் காரணமாக இருந்தது அண்மையில் வட்ஸப் மூலம் கிடைத்த இன்னொரு சுவிற்சிலாந்து பற்றிய செய்தி தான்.

நாம் பொதுவாக நேரம் போனால் வராது என்று பொதுவாக நம்புகிறோம். அதனால் காலத்தைச் சரியாகச் செலவு செய்யவும் பயன்படுத்தவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்படவும் செய்கிறோம். ஆனால் சுவிஸ் நாட்டில் நேரத்தைச் சேமிக்க ஒரு வங்கி இருக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆம், நேர வங்கி!

காலத்தைச் சேர்த்து வைக்கும் வங்கி.

இப்படி ஒன்று அங்கிருக்கிறது என்ற தகவலை என் வட்ஸப்பில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதனை சுருக்கமாக  உங்களுக்கு தருகிறேன்.

“ சுவிஸ் பாங்கில் பணம் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுவிஸ் தேசத்தில் காலத்தையும் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம், சுவிஸ் தேசத்தில் ‘time bank' என்று ஒரு முதியோர் ஓய்வு ஊதியத் திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.( Swiss Federal Ministry of Social Security) 

இந்தக் கால வங்கியில் நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது நம்முடய நேரத்தை இங்கு சேமிப்புச் செய்து கொள்ளலாம்.

எப்படி?

நாம் சுகதேகிகளாக இருக்கும் போது Swiss Federal Ministry of Social Security யில் கணக்கு ஆரம்பித்து, நம்முடய ஓய்வு நேரத்தை இங்கு சேமித்துக் கொள்ளலாம். பிறகு நமக்குத் தேவைப்படும் போது அந்த நேரத்தை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி?

இதனை ஒருவர் இப்படிச் சொல்கிறார்.

நான் சுவிற்சிலாந்தில் தங்கி இருந்த போது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் கிறிஸ்டியானா 67 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை. தேவையான அளவுக்கு ஓய்வூதியம் பெறுபவர். 

அதற்கு மேல் நான் கொடுக்கும் வாடகை வேறு வருகிறது. இவற்றை வைத்துக் கொண்டு அவர் வசதியான வாழ்க்கையினை வாழ முடியும்.

ஆனால் அவர் தினமும் ஒரு 87 வயதான முதியவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வேலை செய்கிறார். அவருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து அவரோடு உரையாடி வருகிறார். அவருக்குத் தேவைப்படும் போது மருத்துவர்களோடு தொடர்பு கொள்ளவும் மருந்துகள் வாங்கவும் உதவி செய்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால் தினமும் இரண்டு மணி நேரம் அந்த முதியவர் வீட்டில் இவ்வாறாக அவர் வேலை செய்து வருகிறார். 

நான் கிறிஸ்டியானாவிடம், அந்த முதியவர் உங்களுக்கு உறவினரா அல்லது பணத்திற்காக அங்கு வேலை செய்கிறீர்களா என்று கேட்டேன். இரண்டுமில்லை; என்று சொல்லி விட்டு மேலும் விளக்கினார். ‘நான் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் இப்போது இந்த மாதிரியான வேலைகளைச் செய்ய முடிகிறது. எனவே இந்தமாதிரி வேலைகளைச் செய்து என்னுடய நேரத்தைச் சேமித்து வருகிறேன்.

நாளை எனக்கு இந்த ‘நேரம்’ தேவைப்படும் போது எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வேன். நான் Swiss Federal Ministry of Social Security யில் என்னைப் பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அந்த முதியவருக்கும் செலவிடும் என்னுடய நேரங்கள் என்னுடய நேரப் பதிவேட்டில் வரவு வைத்துக் கொள்ளப்படும். 

எப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறதோ அப்போது நான் அதனை  Swiss Federal Ministry of Social Security க்குத் தெரிவித்தால் அவர்கள் யாரையாவது ஒருவரை உதவிக்கு அனுப்பி என் கணக்கில் உள்ள ‘நேரத்தை’ செலவு செய்வார்கள். என்று விளக்கமளித்தார்.

அவர் மேலும் இதுபற்றிச் சொல்லும் போது ‘இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் சேவை மனப்பாண்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். மேலும் தினமும் உதவி தேவைப்படும் முதியவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் மனப்பாண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டியதும் அவசியம்.

இப்படியாக அவர்கள் செலவிடும் ’நேரம்’ அரசு பரிபாலித்து வரும் அவர்களுடய நேர வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படும். ஒவ்வொரு வருட முடிவிலும் இந்த நேர வங்கி எத்தனை மணி நேரம் அவர்களின் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு நேர சேமிப்பு அட்டை ஒன்றை அவர்களுக்கு வழங்கும்.( Time bank card)

பிறகு நமக்குத் தேவைப்படும் போது அந்த நேர சேமிப்பு அட்டையைப் பயன்படுத்தி நம்முடய நேரத்தை நாம் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.அப்படி நாம் நம்முடய நேரத்தை மீளப் பெற்றுக் கொள்ள நாம் விண்ணப்பிக்கும் போது அவர்கள் நமக்கு உதவி செய்ய ‘ நேர சேமிப்பாளர்கள்’களில் ஒருவரை அனுப்புவார்கள்.

இது தான் அந்தத் திட்டம் என்றார்.

இந்த உரையாடல் நடந்த சில நாட்களில் கிறிஸ்டியானா கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டிருந்தார். மறுநாள் அவரைக் கவனித்துக் கொள்ள ஓர் இளைஞர் வந்திருப்பதை அவதானித்தேன். அவர் கணக்கில் தேவையான அளவு நேரம் வரவு வைக்கப் பட்டிருந்ததாகவும் அவர் அதைப் பயன் படுத்த விண்ணப்பித்திருந்ததால் அரசு இந்த இளஞரைத் தனக்கு உதவுவதற்காக அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

என்ன ஓர் அருமையான திட்டம் இல்லையா?

நாமும் ஏதோ ஒரு விதத்தைல் இதனை முயன்று பார்த்தால் என்ன?

யாருக்கும் பாரமில்லாத; யாருக்கும் நட்டமில்லாத; மகிழ்ச்சியோடு கூடிய  சுகமான திட்டம் இல்லையா?


Thursday, August 6, 2020

’நம்ம தமிழ்’ - 6 - உருவக அணி






                 
https://www.youtube.com/watch?v=JAsNURZOB04
0.00 – 0.49

காதொளிரும் குண்டலமும், கைக்குவளை
யாபதியும், கருணை மார்பின் 
மீதொளிர் சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந் தாமரையு, பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளை
தாங்குதமிழ் நீடுவாழ்க!

என்ற இந்தப்பாடல் சுத்தானந்த பாரதியார் இயற்றியதாகும். 
ஐம்பெரும் தமிழ் இலக்கியச் செல்வங்களான குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய ஐந்தையும் கூடவே திருக்குறளையும் தமிழுக்கான அணியாக; நகைகளாக உருவகித்துப் பாடப்பட்டிருக்கின்ற இக்கவிதை உருவக அணிக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

உருவக அணி என்றால் என்ன?

உருவக அணி என்பது,’
 
‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃதுருவகமாகும்’ –

என்று தண்டி அலங்காரம் உருவக அணிக்கு இலக்கணம் கூறுகிறது. 
அதாவது உவமைக்கும் கருதும் பொருளுக்கும் வேற்றுமை தோன்றக் கூறினால் அது உவமை ஆகும். இரு பொருளையும் வேறு வேறாகக் காணாமல் ஒன்றிலே மற்றொன்றைக் காண்பது உருவக அணியாகும். 

உதாரணமாக  ’வேல் போல விழி’ என்பது உவமைஅணியாகும்.’விழிவேல்’ என்பது உருவக அணியாகும். வேலே விழியாக ஆகி விடுவது; ஒன்றில் ஒன்று மறைந்து இதுவே அதுவாக ஆகி விடுவது உருவக அணியின் சிறப்பு.
மையோ மரகதமோ மழைமுகிலோ என்று கம்பன் இராமனை வர்ணிப்பதை இன்னும் கொஞ்சம் சந்தத்தோடு இப்போது கேட்போமா?

https://soundcloud.com/kryes/kamban-kali-paa-veyyon-oli-1
0.55 – 1.20. )

இது உருவக அணியைப் பயன்படுத்தி கம்பர் செய்த வித்தை.
தமிழ் சினிமாப்பாடல்கள் பல இந்த உருவக அணியினைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன. பெண்ணை வர்ணிக்கும் இந்த சினிமாப்பாடல் அதற்கு ஓர் உதாரணமாகும்.


மோகனப் புன்னகை ஊர்வலமே….
https://www.youtube.com/watch?v=W398ID1YRiU 

இவ்வாறு எக்கச்சக்கமான சினிமாப்பட்டல்கள் திரைவானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. அவற்றுள் மேலும் சில கீழ் வருபவை.( அநேகமானவை இணையத் தேடலில் கிட்டியவை )

மூக்குத்தி முத்தழகு
வதனமே சந்ர பிம்பமோ
அவளொரு நவரச நாடகம்
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
பேசுவது கிளியா பெண்னரசி மொழியா
காலங்களில் அவள் வசந்தம்
சந்தோரதயம் ஒரு பெண்ணானதோ
மானல்லவோ கண்கள் தந்தது
பொன் என்பேன் சிறு பூ என்பேன்
விளக்கே நீ கொண்ட ஒளி 
மலருக்குத் தென்றல் பகையானால்
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
உள்ளம் என்றொரு கோயிலிலே
அண்னன் ஒரு கோயில் என்றால்
மாசிலா நிலவே நம் காதலை
பச்சைக்கிளி ஒன்று 
முத்துக்களோ கண்கள்
மலரே மலரே நீ சொல்ல
பால்வண்ணம் பருவம் கண்டு
காற்றுக்கென்ன வேலி
சின்ன சின்ன றோசாப்பூவே
குயிலப் புடிச்சு கூட்டிலடைச்சு
பூமாலையில் ஒரு மல்லிகை
மதுரையில் பறந்த மீன் கொடியை
அன்பு நடமாடும் கலைக்கூடமே
இது குழந்தை பாடும் தாலாட்டு
தங்கத்தில் நிறமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
என் ராஜாவின் றோஜா முகம்
மலரே குறிஞ்சி மலரே
நினைவோ ஒரு பறவை
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
தேனே தென் பாண்டி மீனே
ஈரமான றோஜாவே
பனி விழும் மலர் வனம்
வா வெண்ணிலா உன்னைத்தானே
தானா வந்த சந்தனமே
மன்றம் வந்த தென்றலுக்கு
நிலவே முகம் காட்டு
காதல் றோஜாவே
தாலாட்டும் பூங்காற்று
சங்கீத மேகம்
நீ காற்று நான் மரம்
வண்ணம் கொண்ட வெண்னிலவே
ஆகாய வெண்ணிலாவே தரைமீது
மலரே மெளனமா
செம்மீனா வெண்மீனா
கல்யாணத் தேன் நிலா காய்க்காத பால் நிலா
இஞ்சி இடுப்பழகி
தேன் சிந்துதே வானம்
மழை தருமோ என் மேகம்
ஊதா கலரு நிப்பன்
மூக்குத்தி முத்தழகு
ஆடி வெள்ளி தேடி உன்னை
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
கலையோ சிலையோ இது பொன்மான் நிலையோ
தலையைக் குனியும் தாமரையே
வளையாப்பட்டி தவிலே தவிலே
...............................
.............................. 
( இன்னும் பல இருக்கக் கூடும். உங்களுக்கு ஏதேனும் பாடல்கள் நினைவுக்கு வந்தால் தெரிவியுங்கள்.)

பொருளணியில் ஒன்றான இந்த உருவக அணி செய்யுள்களை அழகு படுத்தும் அணிகளிலே கருத்தின் சிறப்புக்கு முன்னுரிமை அளிப்பதால் அவை பாடல்களின் அழகுக்கும் பொருத்தப்பாட்டிற்கும் வித்துவச் சிறப்பிற்கும் கவிஞர் சொல்ல வரும் கருத்திற்கும் இலகுவாகச் சொல்ல ஏற்ற ஓர் உத்திப் பொருளாக அமைந்து விடுகிறது. அதனால் இது இன்றைக்கும் கவிஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஓர் அணியாகவும் விளங்குகின்றது.

https://www.youtube.com/watch?v=Tj_5XLu4Mbw
(நிலவு ஒரு பெண்ணாகி...)

இந்தப் பாடலில் நிலவு போல பெண் என்று ஆகி விடாமல் நிலவே ஒரு பெண்ணாக ஆகி விடுவதாக அமைவது உருவகத்திற்கு இன்னொரு உதாரணமாகும்..
இந்த உருவக அணியை ஆரம்பத்தில் கையாண்டவராக திருவள்ளுவர் விளங்குகிறார். அவர் தன் திருக்குறளிலே கையாண்ட ஒரு உருவக அணியை இப்போது பார்ப்போமா?

‘முறிமேனி, முத்தம் முறுவல் வெறி, நாற்றம்
வேல், உண்கண் வேய்த் தோளவட்கு – 1113.

காமத்துப் பாலில் வள்ளுவர் எடுத்தாண்ட உருவகம் இது. அதாவது, இவள்மேனி தளிர் பல்லோ முத்து. மனமோ மலர்; கண்களோ வேல் இவள் தோளோ மூங்கில்” 

முத்துக்களோ கண்கள்


https://www.youtube.com/watch?v=e3ejWO0nMJs

இந்த உருவக அணியிலே 15 வகையான உட்பிரிவுகள் உள்ளன என தண்டியலங்காரம் விபரிக்கிறது எனினும் நாம் உதாரணத்திற்கு தொகை உருவக வகை ஒன்றை இப்போது காண்போம்.

இங்கு ஆகிய என்ற உருபு மறைந்து போல, போன்று போன்ற இணைப்புச் சொற்கள் ஏதுவுமின்றி இதுவே அதுவாக ஆகி வரும் பாடல் ஒன்று இது.

அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்
கொங்கை முகிழும் குழல்காரும் - தங்கியதோர்
மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த
காதற்கு உளதோ கரை. 

இப்பாடலின் பொருள் என்னவென்றால், ’நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகியதளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகியஅரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்த காதலுக்கு நண்பா, கரை அதாவது எல்லை ஏதாவது உலகத்தில் உண்டோ? இல்லை!' என்று தலைவன் தன் தோழனிடம் கூறுகிறான்.

இப்பாடலில் அங்கை ஆகிய மலர் என்னும் உருவகம்'ஆகிய' எனும் உருபு மறைந்து 'அங்கைமலர்' எனவந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே 'அடித்தளிர், கண்வண்டு, கொங்கை முகிழ், குழல் கார்' என்னும்உருவகங்களும் உருபு இன்றி வந்துள்ளன. எனவே இப்பாடல்தொகை உருவகம் என்றழைக்கப்பட்டது

.. https://tamilmani.wordpress.com/2011/01/28/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/
தோகை இளமயில் ஆடி வருகுது..........................

அறநெறியினால் பண்பட்டது தமிழ் மொழி அல்லவா?. தமிழ் செம்மொழியாகிய அந்தஸ்தைப் பெற பக்தி இலக்கியங்களும் பெரும் தொண்டாற்றி உள்ளன. இத்தகைய பக்தி இலக்கியங்களும் இந்த உருவக அணியினைத் தம் கருத்தினைச் சொல்ல பெருமளவில் பயன்படுத்தி உள்ளன. அதற்கு உதாரணமாக கீழ் வரும் இந்த இரு தேவார பாசுரங்களைச் சொல்லலாம்.
’உள்ளம் பெரும் கோயில்; ஊனுடம்பு ஆலயம்; வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்; கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே’ என்பது திருமூலரின் திருமந்திரமாகும். 

பூதத்தாழ்வாரோ தன் இரண்டாம் திருவந்தாதியில் 

அன்பே தகளியா யார்வமே நெய்யாக
அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி
ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்'

என்கிறார்.

அது போலவே 13ம் நூற்றாண்டில் முனைப்பாடியார் பாடிய அறநெறிச் சாரத்திலும் உருவக அணி இவ்வாறாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்’

அதாவது, ’இனிமையான பேச்சை விளைநிலமாகவும் ஈதலை வித்தாகவும் கடுஞ்சொல்லாகிய களையை வெட்டி எறிந்து வாய்மையை எருவாக்கி அன்பை நீராக்கி அறமாகிய கதிரை விளைவிப்பதே பயிர்விளைச்சல்; இதனை இளமைக்காலத்திலிருந்தே செய்’ என்பது அதன் பொருளாகும்.

https://www.youtube.com/watch?v=cWsRU7xKuZg
1.20 -2.07.

கோயில் என்பதும் ஆலயமே குடும்பம் என்பதும்….

தமிழ் எல்லா மதத்தினரும் உரிமை பாராட்டக் கூடிய மொழியுமல்லவா? கிறீஸ்தவர்கள் பெருமைப்படக் கூடிய சிறந்த இலக்கியவளம் மிக்க தமிழ் இலக்கியங்களில் ஒன்று இரட்சணியயாத்திரிகமாகும். அதன் இலக்கியச் செழுமையால் இந் நூலை இயற்றிய ஆசிரியர் கிறீஸ்தவக் கம்பர் என அழைக்கப்படுகிறார். 

அதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அது முழுக்க முழுக்க உருவக அணியைப் பயன்படுத்திப் பாடப்பட்டிருப்பதாகும். வரும் பாத்திரங்களும் இடங்களும் நிகழ்ச்சிகளும் உருவகங்களே. இவ்வாறு காப்பியமே உருவகக் காப்பியமாக அமைந்திருப்பதோடு, பாடல்களிலும் உருவக அணி பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்று  கடவுளில் ஒருவரான பரிசுத்த ஆவி, உள்ளமாகிய வயலை உழுது, மெய்பக்தி  என்னும் விதை விதைத்து, நாட்டம் வைத்து, அருள் பாய்ச்சி, நலிவு என்னும் களையகற்றி, முளைத்த பயிரை வாடாமற் காத்து, நற்கதி விளைவித்து அடியார்களை வாழச் செய்பவர் என்று உருவக நிலையில் கூறியுள்ளது. உழுதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களையகற்றல், காத்தல், விளைவித்தல் என்னும் உழுவுத் தொழிலை முறைமை சிறிதும் மாறாது குறிப்பிடப்பட்டுள்ள செயல் கருதற்குரியது. இவ்வுருவக நிலையை,

 “கோட்டமற்று உளம்திருத்தி குலவுமெய்ப் பக்தி வித்தி
 நாட்டம் வைத்து அருள் நீர்பாய்ச்சி நலிவெலாம் அகற்றியாதும்
 வாட்டம் இன்றாக ஒம்பி வரகதி விளைவித்து அன்பர்
 ஈட்டம் ஆர்த்து  உய்த்துப்பிக்கும் இதய நாயகனே போற்றி”

என்ற பாடல் வழி உணர முடிகின்றது.

https://www.youtube.com/watch?v=wb5FFQVGCZ0
தைமாதப் பொங்கலுக்கு…


- யசோதா.பத்மநாதன்.-
28.3.2020.

Saturday, August 1, 2020

நம்ம தமிழ் - 5 - புகழாப் புகழ்ச்சி அணி. ( நிந்தாஸ்துதி - 28.12.19 )

     


வறுமையும் புலமையுமாக ஒட்டிப்பிறந்த பிள்ளைகள் புலவர்கள். அவர்கள் எப்போதும் ஒருவித கனவுலகில் சஞ்சரிப்பவர்களாகவும் மிதமான கற்பனையிலேயே எப்போதும் உலாவுபவர்களாகவும் உழைப்புத் திறனில் அக்கறை அற்றிருப்பதாகவும் வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.

அதிஸ்டவசமாக சில புலவர்கள் அரச ஆதரவோடு அரசவைப்புலவர்களாக வீற்றிருந்திருக்கிறார்கள். ஏனையவர்கள் பெரும்பாலும் பஞ்சத்திலும் பட்டினியிலும் இருந்த படி புரவலர்களைப் பாடி பரிசுபெற்று வாழ்க்கையை ஒருவாறாக ஓட்டியவர்களாகவே பெரும்பாலானோர் திகழ்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் ரோசத்திற்கும் தம் புலமை மீதான செருக்குக்கும் குறைச்சல் இல்லாதவர்கள். அவர்களில் ஒருவர் காளமேகம். அவருக்கு தன் வாழ்க்கை மீது மட்டுமல்ல; கடவுளோடும் பிணக்குத் தான்.

ஒருமுறை அதிமதுரக் கவிராயர் இவரைப் பார்த்து
மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

என்று பேசி விட்டார். ஆசுகவியான காளமேகத்தார் சும்மா இருப்பாரா? அவர் உடனே
இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய்

என்றார். காளமேகம் என்பது மழையினை கொண்டிருக்கிற கார்மேகம் ஆகும்.
அவர் இவருக்கும் மட்டும் பதிலடி கொடுக்கவில்லை; கடவுளுக்கும் அவர் அதைத் தான் செய்தார். நிந்தாஸ்துதி மூலம் அதாவது நிந்தனை செய்வதன் மூலம் துதிசெய்து புகழாப்புகழ்ச்சி அணி வழியாக கடவுளோடு உறவாடும் ஒருவித நட்புறவோடு பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடம் பெற்றவை.  பக்தி என்னும் உரிமையில், கடவுளை சமயோஜிதமாக கிண்டல் செய்து பாடுவது நிந்தாஸ்துதி.தமிழில் அது புகழாப்புகழ்ச்சி!

தன் தரித்திர ஏழை வாழ்வை எவ்வாறு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் கடவுளுடனான நிந்தித்து துதி செய்தபடி வாழ்வைஎப்படி எதிர் கொண்டார் என்பதையும் இன்று காண்போம்..

குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்டக்
கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ – விரைந்துபேய்
பற்றவேகள் ளுண்டுபச்சை மிளகைக் கடித்தால்
எத்தனைபார் சேட்டைக் கிடம். (60)

இப்படியாக இருக்கிறது புலவர் வாழ்வு. அது மட்டுமல்லாமல் ஒருநாள் ஏன் தான் கடவுள் சந்நிதானத்துக்கு வந்தேன் என்று காரணமுரைக்கிறார்.

காவென்றுஞ் சிந்தாமணி யென்றுஞ் சொல்லி யென்கையில் அள்ளித்
தாவென்று கேட்கத் தரித்திரம் பின்னின்று தள்ளி யென்னைப்
போவென் றுரைக்கவு நாணமங்கே யென்ன போவதிங்கு
வாவென் றிழுக்கவும் வந்தேன் விராலி மலைக் கந்தனே.

என்றபடிக்கு கடவுளிடம் வந்துவிட்டார். வந்தவர் இரந்தெதுவும் கேட்கவில்லை கடவுளைப் பார்க்கிறார்.,

வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாம் இவர்கள் எல்லோருமே நோய்வாய் பட்ட குடும்பத்தவர்களாக இருக்கிறார்களே! இவர்கள் தங்கள் நோயையே எப்ப தீர்ப்பது என்று தெரியாமல் இருக்கிறார்களே! இவர்கள் எப்ப என் நோயைத் தீர்க்கப் போகிறார்கள்? என்றவர், இப்படியாக ஒரு போக்கிடமற்றவரே உமக்கேன் ராஜாங்கம் என்று இப்படியாகக் கேட்கிறார்.

நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் – உச்சதமாங்
காளனேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராசாங்க மேன் .(65)

 என்னவோ எப்படியோ நீ இருந்திட்டுப் போ ஆனா என்னையும் கொஞ்சம் காப்பாத்துப்பா என்கிறார் இப்படியாக,

நீறாவாய் நெற்றிநெருப் பாவா யங்கமிரு
கூறாவாய் மேனிகொளுந் துவாய் – மாறாத
நட்டமாவாய் சொறுநஞ்சாவாய் நாயேனை
இட்டமாய் காப்பா யினி . (61 )

என்று கட்டளையிடுகிறார். ஆனால் கடவுளோ செவிசாய்க்கவில்லை. ஆற்றமை புலவருக்கு, பின்னும் அவர் பாடல் பிறக்கிறது,

பெருமாளு நல்ல பெருமா ளவர்தந்
திருநாளு நல்ல திருநாள் –பெருமாள்
இருந்திடத்திற் சும்மா யிராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிதே பார் .

என்று நையாண்டி பண்ணுகிறார். பின்னும்

அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை .

என்னவாமெனில், இவன் அப்பன் சிவபெருமான் பிச்சை எடுத்து உண்பவன். இவன் தாய் பார்வதி மலையில் பிறந்த பேய்.இவன் அண்ணன் ஆனைமுகன் சப்பைக்காலன், பெரிய வயிற்றிறினை உடையவன் ஆறுமுகத்தானுக்கு நாம் எண்ணிப் பார்க்கும் பெருமைகள் இவை. மேலும் இந்தக் கடவுள் எங்க இனி நமக்கு உதவப்போகிறான் என்றவுடன் அடுத்த பாடல் இப்படியாகப் பிறக்கிறது,

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோ –சீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரேநீர் திருச்செங்
காட்டிலே வற்றிருந்தக் கால் .(72)

காலனையும் காமனையும் காட்டு சிறுத்தொண்டர் தரு பாலனையும் கொன்ற பழி போமோ?சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர் திருச்செங்காட்டிலே வீற்றிருந்தக் கால் என்கிறார் செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது 

மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, சிவபெருமான் எமனைக் காலால் உதைத்துக் கொன்றார்.சிவன் தன் தவத்தைக் கலைத்த காமனை எரித்தார்.
திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டன் பிள்ளையைக் கறியுண்ணவேண்டி சிவன் கொல்லச்செய்தார். நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே! நீர் திருச்செங்காட்டங்குடியில் (செங்காடு என்னும் சுடுகாட்டில்) குடிகொண்டிருந்தால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா?

கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார்
மண்ணையுண்டார் வெண்ணெயுண்ட மாயனார் – எண்ணும்
சிரக்கொப் பரையேந்திச் செங்காட்டி லீசர்
இரக்கப் புறப்பட்டா ரென்று .(125)

கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் எண்ணும் சிரக் கொப்பரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்றுரைக்கிரார் வேறொரு இடத்தில்.

காளமேகப் புலவர் திருக்கண்ணபுரம் கோயிலுக்குச் சென்றபோது கோயில் கதவை அடைத்துவிட்டனர். அவர்கள் கோயில் கதவை அடைத்ததற்குக் காரணம் இது என்று வேடிக்கையாகப் பாடிய பாடல் இது.

வெண்ணெய் உண்ட மாயன் மண்ணை உண்டான். செங்காடு என்னும் ஊரில் (சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்துத் தந்த ஊர்) ஈசன் தலைக்கொப்பரை (தலைமண்டைத் திருவோடு) ஏந்தி இரக்கப் (பிச்சை எடுக்கப்) புறப்பட்டார் என்றெல்லாம் வருந்திக் கோவில் கதவை அடைத்துவிட்டார்களாம். – இப்படி ஒரு தற்குறிப்பேற்ற அணி.

பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றிநம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

பாளை மணம் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாரா கேள் | வேளை யென்றால் இவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேல் ஆயிற்று என் தோளை முறித்ததும் அன்றி நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய் நாளை இனி யார் சுமப்பார் என்னாளும் உன் கோயில் நாசந்தானே .(157)

கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்தாய். நாளைக்கு உன்னை யார் சும்பபார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும் என்பது இன்னொரு புகழாப்புகழ்ச்சி!

இந்த வறுமையும் புலமையும் அன்று மட்டுமா? இன்று அவை சினிமாப்பாடல்களிலும் படங்களிலும் மிளிரக் காண்கிறோம். திருவிளையாடல் திரைப்படத்துத் தருமியை நாம் பார்த்ததுண்டு தானே!


எனினும் இன்று நாம் கேட்க இருக்கும் தந்தை தாயிருந்தால்....என்று அருணாசாய்ராம் பாடும் இந்தப்பாடல் பாபநாசம் சிவன் இயற்றியதாகக் குறிப்புகள் இருக்கின்றன. எனினும் தஞ்சாவூர் கே.பொன்னையாபிள்ளை இயற்றியதாகவும்  சொல்லப்படுகிறது .



https://www.youtube.com/watch?v=qOcSdMHUI7Y

என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா…..



https://www.youtube.com/watch?v=3IKpWbffZio

தந்தை தாய் இருந்தால்…


https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE

.............................................................

( சுருக்கமான வானொலி நிகழ்ச்சியின் எழுத்து வடிவம் இது! )

அணிகளின் வரிசையிலே இன்று நாம் காண இருப்பது ‘புகழாப்புகழ்ச்சி அணி’. 
புகழாப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?

புகழாப்புகழ்ச்சி அணி என்பது ஒன்றைப் பழிப்பது போன்று குறிப்பிடும் விடயத்தின் மேன்மையை புகழ்ந்து கூறுவதாகும். இதனை, ’பழிப்பது போலும் பான்மையின் மேன்மை  புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி’ என்று தண்டியலங்காரம் இலக்கணம் கூறுகிறது.--(தண்டியலங்காரம், 84)

இவ்வாறாகப் புகழாமல் புகழும் இந்தப் புகழாப்புகழ்ச்சி அணிக்கு 
’போர்வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம் - நீர்நாடன்
 தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம் செங்கண்மால்
  ஓரடிக்கீழ் வைத்த உலகு ’ 

என்று தண்டியலங்காரம் மேற்கோள் பாடல் ஒன்றை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது. 

இந்தப் பாடலின் சுருக்கமான பொருள் என்னவென்றால்,சோழன் வேலால் வென்றும், புகழால் போர்த்தும், புயத்தால் தாங்கியும் உலகத்தைக் காக்கின்றான். அவன் இவ்வளவு முயன்று தாங்கும் உலகு, திருமால் தன் ஒரு பாதத்தில் அடக்கிய உலகாகும். இது சோழனின் தன்மையைப் பழிப்பதுபோல் உள்ளது. எனினும் திருமாலுக்கு நிகராக உலகம் முழுவதும் காக்கிறான், என உண்மையில் சோழனைப் புகழ்தலே அதன் நோக்கமாகும். ஆதலின் இது புகழாப் புகழ்ச்சி எனப்படல் ஆயிற்று.

இது போன்ற இகழ்வது போல புகழ் பாடும் பாடல்களை பாடுவதில் அதாவது நிந்தாஸ்துதிகளுக்கு பேர் போன புலவர் காளமேகம். அவர் நினைத்தவுடனேயே பாடல் பாடவல்ல ஆசுகவியுமாவார்.

ஒருமுறை அதிமதுரக் கவிராயர் இவரைப் பார்த்து 
மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

என்று பேசி விட்டார். ஆசுகவியான காளமேகத்தார் சும்மா இருப்பாரா? அவர் உடனே 

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் 

என்றார். காளமேகம் என்பது மழையினை கொண்டிருக்கிற கார்மேகம் ஆகும்.
 அப்படிப்பட்டவர் கவி காளமேகம்!.

நிந்தாஸ்துதி மூலம் அதாவது நிந்தனை செய்வதன் மூலம் துதிசெய்து கடவுளோடு உறவாடும் ஒருவித நட்புறவோடு அவர் பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. . பக்தி என்னும் உரிமையில், கடவுளை சமயோசிதமாக கிண்டல் செய்து மேன்மையினைக் கொண்டாடுவது அவர் பாணி.

ஒரு நாள் கடவுளிடம் வந்துவிட்டார். வந்தவர் இரந்தெதுவும் கேட்கவில்லை கடவுளைப் பார்க்கிறார்.,

பெருமாளு நல்ல பெருமா ளவர்தந்
திருநாளு நல்ல திருநாள் –பெருமாள்
இருந்திடத்திற் சும்மா யிராமையினா ஐயோ
பருந்தெடுத்துப் போகுதே பார் .

என்று நையாண்டி பண்ணும் பாணியில் புகழ்கிறார்.. இறைவனாகிய பெருமாள் நல்லவர்; அவருடய திருநாளும் நல்லது. அந் நன் நாளில் அவர் பருந்து வாகனத்தில் பவனி வருகிற மேன்மையை நையாண்டியாக ‘நல்லதொரு நாளில் பெருமாளை பருந்து எடுத்துக் கொண்டு போகுது பார்’ என்று நிந்தித்து துதி செய்கிறார். பின்னும் 

’அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை’ . 

சிவபெருமான் பிச்சை எடுத்துண்ணும் பிட்சாடனராகத் திருவிளையாடல் புரிந்தவனல்லவா? அன்னை உமையவளோ நீலவண்ணம் கொண்டவள்; தாய்மாமனாகிய கிருஷ்ணனோ இளம்வயதில் ஆய்ப்பாடியில் வெண்ணெய் திருடி உண்டு விளையாடல்கள் புரிந்தவன்’ இந்தப் பெருமைகளை எல்லாம் சொல்லவந்தவர் அதனை நையாண்டி பாணியில் சொல்லி இருப்பது ரசிக்கத்தக்கதல்லவா?

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோ –சீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரேநீர் திருச்செங்
காட்டிலே வந்திருந்தக் கால் .(72)

என்று செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது இப்படியாக மேலும் நிந்தாஸ்துதி செய்வது இலக்கிய உலகில் ’புகழாப்புகழ்ச்சி அணிக்கு’ மேலும் அழகு சேர்ப்பது. மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, சிவபெருமான் எமனைக் காலால் உதைத்துக் கொன்றார். சிவன் தன் தவத்தைக் கலைத்த காமனை எரித்தார். திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டன் பிள்ளையைக் கறியுண்ணவேண்டி சிவன் கொல்லச்செய்தார். நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே! நீர் திருச்செங்காட்டங்குடியில் வந்து இருந்து விட்டால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா? என்பது பாடலின் பொருள். திருச்செங்காடங்குடியில் குடி இருக்கும் சிவனாரின் பெருமையினை புலவர் இவ்வாறாகக் காண்கிறார்.

https://www.youtube.com/watch?v=3IKpWbffZio

என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா…..

’கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார் மண்ணையுண்டார் வெண்ணையுண்ட மாயனார் - என்னும் சிரக்கப் பரையேந்திச் செங்காட்டி லீசர் இரக்கப் புறப்பட்டா ரென்று’. (135) என்று வேறொரு பாடல் புகழாப்புகழ்ச்சி அணிக்கு அழகு சேர்க்கிறது.

திருச்செங்கோட்டிலே கோயில் கொண்டிருக்கும் ஈசனாகிய சிவபெருமான், மதிக்கத்தக்க தலையோடாகிய பிட்சாபாத்திரத்தை ஏந்தியவராகப் பிச்சை ஏற்று உண்பதற்குப் புறப்பட்டுவிட்டார்’ என்று அறிந்த கண்ணபுரத்துக் கோயிலார்கள், திருமாலும் சிவனைத் தொடர்ந்து போய்விடக் கூடாதே என்று பயந்து, திருக்கோயிற் கதவை அடைத்துத் தாழும் இட்டுவிட்டார்கள். அதனாலே, வெண்ணையுண்ட மாயனார், அது கிடையாமல் மண்ணைத் தின்பவரானார்! 
தாம் தரிசிக்கச் சென்றபோது திருக்கோயிற் கதவினைக் கோயிலார் அடைத்துத் தாழிடக் கண்டவர், இப்படிப் பாடி அவர்கள் செயலைப் பழித்தவாறாக பாடல் அமைந்த போதும் சிவன் உணவேதும் கிடையாமல், பிச்சை எடுக்கப் போய்விட்டான் எனப் பிட்சாடன் மூர்த்தத்தையும், வெண்ணை யுண்ட மாயன் மண்ணையுண்டான் எனத் திருமாலின் சிறப்பையும் பாடிய நயத்தினை அறிந்து இன்புறுக 

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி….


https://www.youtube.com/watch?v=XdPvopk3VrY 

. இனி, மேலுமொரு எடுத்துக் காட்டு பார்ப்போமா?
பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றி நம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

என்பது புலவரின் பாடல். கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் இப்போது 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்து விட்டாய். நாளைக்கு உன்னை யார் சுமப்பார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும். என்று நிந்தனையில் உரிமையோடு துதிக்கிறார் புலவர்.

எப்படி இருக்கிறது இந்த நிந்திப்பது போல துதி செய்யும் இந்தப் புகழாப்புகழ்ச்சி அணி? 

இனி நிந்தாஸ்துதி பாடல் ஒன்று.!

https://www.youtube.com/watch?v=qOcSdMHUI7Y

அருணாசாய்ராம் பாடும் இந்தப்பாடல் பாபநாசம் சிவன் இயற்றியதாகக் குறிப்புகள் இருக்கின்றன எனினும் தஞ்சாவூர் கே.பொன்னையாபிள்ளை இயற்றியதாகவும்  சொல்லப்படுகிறது ..
 

தந்தை தாய் இருந்தால் என்று வசந்தகோகிலத்தில் குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் பொன்னையாப் பிள்ளை இயற்றியது.…

https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE 

உருவாக்கம்: யசோதா.பத்மநாதன்.
19.3.2020.