Sunday, May 31, 2009

நம்மை நமக்கு மீட்டுத் தர.....

அழகான இந்தத் தலைப்பு உமாவின் பதிவிலிருந்து பெறப்பட்டது.சலிப்பும் சோர்வும் கொண்டிருந்த போது இச் சொல் புதிதாய் ஒரு கதவை மனதில் திறந்து சென்றது.

பிரச்சனைகளை எப்படி நாம் சமாளிக்கலாம் என்பதற்கு அவரவருக்கென்று சில வழிமுறைகள் உண்டு.புறக் காரணங்களாலும் அகக்காரணங்களாலும் ஏற்படும் மன அழுத்தங்கள் தீரும் வழிமுறைகள் பற்றி நேற்றய தினம் ஒரு கலந்துரையாடல் STARTTS இன் ஆதரவோடு இடம் பெற்றது.அவை பலருக்கும் பயனுடயதாக இருக்கலாம் என்பதால் இங்கு உங்களோடு இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1) குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை விட அச் சம்பவம் பற்றி நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளே பெரும்பாலும் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் காரணமாகின்றன.உதாரணமாக எமக்குத் தண்ணீர் விடாய்க்கிறது என்றும்;ஒரு பாத்திரத்துக்குள் பாதியளவு தண்ணீர் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.இதனை நாம் எப்படிப் பார்ப்போம்?
ஆஹா..தண்ணீர் இருக்கிறது!
ம்ம்.. பாதியளவு தானே இருக்கிறது.
எனக்கிது போதாது.
பாதியளவாவது கிடைத்ததே!
இது ஒருவாய்க்குக் காணுமா..?
பறவாயில்லை போதும்..!
நாளைக்கு என்ன செய்வது..?
இன்றைக்குச் சமாளிக்கலாம்.

இப்படிப் பலவிதமாகப் பார்க்கலாம்.இதனால் பாதியளவு தண்ணீர் என்பதல்ல பிரச்சினை; அதனை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் அடங்கியிருக்கிறது பிரச்சினை.நாம் பார்க்கின்ற பார்வையில் தான் பிரச்சினை.

பொதுவாக நம்முடய நடைபாதையில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது கல்லடிபட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். நாம் எப்படி அதனை மற்றவர்களுக்குச் சொல்கிறோம்? "கல்லடித்துவிட்டது" என்று தானே!உண்மையில் கல்லா நம்மை அடித்தது? நாமன்றோ கல்லை அடித்தோம்!நாம் அதனை எவ்வாறு பொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா?

அதனால் உண்மையில் பிரச்சினை என்ன என்பதைச் சரியாக அடையாளம் கண்டுகொள்வது என்பது மிக முக்கியமானது.சரியான மூலத்தினை அடையாளம் கண்டு கொண்டு விட்டோம் என்றால் அந்த இடத்திலேயே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடுகின்றன.பின்னர் தீர்வுகளும் இலகுவாகி விடுகின்றன.

அதனால் நாம் அச் சம்பவத்தால் என்ன உணர்வினைப் பெற்றிருக்கிறோம் என்பதை முதலில் இனம் கண்டு கொள்வதும்(துன்பம்,கோபம்,உடன்படாமை,வெறுப்பு...); அதன் மூல காரணத்தை அடையாளம் கண்டு கொள்வதும்; நமக்கு நம்பிக்கையானவர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்வதும் முக்கியமானதாகும்.

சரி நமக்குத் தெரியாத புறக் காரணிகளால் வருகின்ற தொந்தரவுகளை,பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம்?உதாரணமாகக் கோபமாக இருக்கும் அனால்,யாரோடு கோபப் படுவது என்று தெரியாமல் இருக்கும்.ஈழப் பிரச்சினையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.யாரோடு நாம் நோகலாம்? இந்த வலியை எங்கு சென்று நாம் தீர்த்துக் கொள்ளலாம்?

பொதுவாக நாம் இழப்பையோ வலிகளையோ சந்திக்கின்ற போது அது 6 கட்டங்களைச் சந்திப்பதாகச் சொல்லப் படுகிறது.

1) உயிர் தப்புதல்.
2) துன்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தல்.
3) கடவுளோடு பேரம் பேசுதல்.
4) கோபம் கொள்ளுதல்.
5) துன்பமடைதல்.
6) ஏற்றுக் கொள்ளுதல்.

எந்த ஒரு உயிருக்கும் முதலில் உயிர் தப்புதலே பிரதானமாக இருக்கும்.உதாரணமாக வளிநாடுகளுக்கு நம்மைப் போல் தப்பி வந்தவர்கள்.அதன் அடுத்த கட்டமாக இந்த 'இரண்டக நிலையை' ஏற்றுக் கொள்ள மறுத்தல் இருக்கும்.புலம் பெயர்ந்த தமிழரிடம் இருக்கும் இந்த 'ஈழதாகம்'அதனைச் சரியாகப் புலப்படுத்தும்.பின்னர் அது நம்மை விட மேலான ஒரு சக்தியிடம் பேரம் பேசுவதாகவோ அல்லது எடுத்துரைப்பதாகவோ இருக்கும்.உதாரணமாக பரீட்சை எழுதிவிட்டுக் கடவுளிடம் நேத்தி வைப்பதில்லையா அது போலத் தான்.புலம் பெயர்ந்தோர் தத்தம் நாட்டு அரசுகளோடு மகஜர்களைக் கொடுத்ததையும் இதற்கு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

அதன் அடுத்த கட்டமாகக் கோபம் புலப்படும்.இப்போது நம்மவர் இருக்கின்ற நிலையை அதற்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.குற்றவுணர்வும் இதற்குள் கலந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.இக்கோபம் தத்தம் நாட்டு அரசு மீதானதாகவும் சில வேளை தம்மீதானதாகவும் கூட இருக்க வாய்ப்புண்டு.(சிட்னியில் இடம் பெற்ற கைகலப்புகள் பொலிஸாரின் தலையீடு என்பன கவனிக்கத்தக்கது.)

இது பின்னர் துன்பமாக மாறி ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு இட்டுச் செல்லும் என்று கூறப் படுகிறது.

இந்தப் படிநிலைகளை உணர்ந்து கொள்வதன் மூலம் நாம் இப்போது என்ன மனநிலைப் படிமுறையில் இருக்கிறோம் என்பதை இனம் கண்டு கொண்டு போவது நல்லது.

இவை முழுக்க முழுக்க இயல்பானவை;இயற்கையானவை;எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோல்விகளையும் இழப்புகளையும் சந்தித்திருப்போம்.ஆதனால் அவை எல்லாம் இயற்கையானவை என்றும் இயல்பானவை என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

சரி, இந்தக் கோபத்தை,அன்றாட பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி? நேற்றய தினம்(30.05.09) ஒவ்வொருவரும் எப்படி எப்படித் தப்பிக் கொள்கிறார்கள் என்பது பற்றி சுவாரிஸமான பல தகவல்களைத் தந்தார்கள்.

அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Saturday, May 23, 2009

கோரிக்கைகள்

சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.ஊர்வலங்கள்,இணையம், வானொலி, தொலைக்காட்சி.. என எல்லாம் பார்த்தும் கேட்டும் சலித்த பின்னர் மனிதர்கள்,சத்தங்கள், வன்முறைகள், இரைச்சல்கள் என இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு மெளனமாகவும் அமைதியாகவும் நான் என்ன செய்யலாம் என்பது தான் எனது நீண்ட நாள் சிந்தனையாக இருந்தது.

செய்யலாம் என்று நினைத்த விடயங்கள் இரண்டு.

1) சிறிது பணத்தை சேமித்தும் தானமாய்ப் பெற்றும் நேரடியாக தமிழரின் முகாம்களுக்குச் சென்று சரியான தேவைகளைக் கண்டறிவதும் வேண்டிய சேவைகளை அவர்களோடு இருந்து கண்டுபிடித்துப் பெற்றுக் கொடுப்பதும்.

2) இரண்டு அனாதைத் தமிழ் குழந்தைகளைத் தத்தெடுத்து கொண்டு வந்து வளர்ப்பது.

அதன் ஒரு கட்ட நடவெடிக்கையாக நான் இணைந்து செயற்படும் S.T.A.R.T.T.S என்ற அமைப்பினூடாக (சித்திரவதை,உணர்வதிர்ச்சி என்பவற்றிலிருந்து உயிர் பிழைத்தோருக்கான சிகிச்சைக்கும் மறு வாழ்வுக்குமான சேவைகளை வழங்கும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பு)அவர்களது உள்ளார்ந்த கரிசனையினாலும் இன்று ஒரு சிறு கூட்டம் ஒன்றை கூட்டினோம்.அதில் கலந்து கொண்ட எலிசபெத் அம்மையார் மக்களிடமிருந்து அவர்கள் என்னவகையில் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள் என்ற விடயம் பற்றிக் கலந்துரையாடினார்.

இனிய அந்த எம் மக்கள் உணர்வு பூர்வமாகவும் கண்ணீரோடும் அக்கறையோடும் சொன்ன விடயங்கள் கல்மனதையும் உருகச் செய்வன.அவர்கள் கேட்ட கோரிக்கைகள் இவைதான்.

*சரியான தரவுகள் எடுக்கப்பட வேண்டும்.

*அவசர உதவி அளிக்கப் பட வேண்டும்.

*அனாதயாக்கப் பட்ட குழந்தைகளுக்கு நீண்ட கால உதவித்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்.

*மருந்து, உணவுப் பொருட்கள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*கடத்தல், கற்பழிப்பு,என்பன ஒழிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*உண்மை தடைகளின்றி வெளிவர ஆவன செய்யப்பட வேண்டும்.

*போர் குற்றங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

*சர்வதேசம் ஏன் மெளனமாக இருந்தது என்பதற்குப் பதில் வேண்டும்.

*மனப் பாதிப்புக்கான சேவைகள் உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*வெளி நாடுகளுக்கு உண்மை நிலையை நடு நிலை அமைப்புகளால் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

*மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக மக்களைச் சென்றடைய ஏற்பாடு செய்யப் படுவதோடு அரசுக்கு உதவிக்காகப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

*சர்வதேச நடுவு நிலைமையாளர்கள் அங்கு நிறுத்தப்பட வேண்டும்.

*தமிழரின் அடையாளங்கள் அழிக்கப்படுவதும் பண்பாடு சிதைக்கப் படுவதும் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

*பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு சரியான தீர்வு எட்டப் பட வேண்டும்.

இவற்றை எல்லாம் அக்கறையோடு அந்த அம்மையார் கேட்டுக் கொண்டார்.

இந்த இடத்தில் இந்த அமைப்பினைப் பற்றியும் சொல்வது பொருத்தமாக இருக்கும்.உளவள நிபுணர்களால் அழகு பெற்றிருக்கிறது இந்த அமைப்பு. பொதுவாக போர்ச் சூழல்களால் பாதிக்கப் பட்டு வந்தவர்களுக்கான மீள் வாழ்வினைக் கொடுக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.சுகாதார அமைச்சு இதற்கான நிதிஉதவியை வழங்கிவருகிறது.இப்போது மேலும் தம்மை சுதந்திரமாக இயங்க விடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு அதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது இறங்கி இருக்கிறது. அதற்கான காரணங்கள்

* அரசின் கொள்கைகளுக்கும் மனிதாபிமானத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதாக இவ்வமைப்பு கருதுகிறது.

* ஒவ்வொரு அரசும் மாறும் போது அவர்களின் கொள்கைகள் தம்மைக் கட்டுப் படுத்தக் கூடாது என்று இவ்வமைப்பு கருதுகிறது.

இவ்வமைப்பினை எவ்வளவு தூரம் சுதந்திரமாக இயங்க அரசு அனுமதிக்கும் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாவிட்டாலும் இது கஸ்ரப்படும் மனிதர்கள் பால் கொண்டிருக்கும் கரிசனை சற்றே ஆறுதல் தரக்கூடியது.

இறுதியாக எலிசபெத் அம்மையார் பேசும் போது,தான் இது விடயமாகத் தன் மேலிடத்தோடு பேசுவதாகவும்;விரைவில் தமிழ் தலைவர்களோடு ஒரு திறந்த வெளிக் கூட்டம் ஒன்றக் கூட்டி தாம் செய்யக்கூடிய விடயங்கள் பற்றி கலந்துரயாடுவதாகவும்;உண்மைக்காக சர்வதேசத்தின் காதுகளைத் திறப்பதற்கான அனைத்து விடயங்களையும் தம் அமைப்பு மேற்கொள்ளும் எனவும்;அரசுக்கு அதற்கான அழுத்தங்களைத் தம் அமைப்பு கொடுக்க இயலும் எனவும் கூறினார்.

மேலும், அவுஸ்திரேலிய தொலைத்தொடர்பு சாதனங்களோடு( வானொலி, தொலைக்காட்சி,பத்திரிகை) சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறு அணுகவேண்டும் என்பது பற்றிய அறிவுரகளையும் ஆலோசனைகளையும் தம்மால் வழங்க இயலுமெனவும்; அது ஒரு வெற்றிகரமாக தொடர்புசாதனங்களை எமக்கு சார்பாகப் பயன்படுத்துவதற்கு மிக முக்கியம் என்பது பற்றியும் கருத்துத் தெரிவித்தார்.

அத்தோடு எம் மனக்குறைகளை உள்ளார்ந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டதே மன ஆறுதலைத் தரத்தக்க அம்சமாக இருந்தது.

கண்ணீரோடு பலர் விடைபெற்றுக் கொண்டனர்.

நாமும் தான்.

(மேலதிகமாக இவ்வமைப்பினைப் பற்றி அறிய www.startts.com)

Wednesday, May 20, 2009

இலக்கியத்தில் அவலங்கள் - 1

பயனற்றவை

மாடில்லான் வாழ்வு, மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - கூடும்
குருவில்லாவித்தை, குணமில்லா பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்.

செல்வம் இல்லாதவனுடய வாழ்வும்,இயற்கை அறிவு இல்லாதவனுடய வாணிபமும்,நன்மை பயக்கத்தக்க நாடு இல்லாத அரசன் செங்கோல் செலுத்துவதும்,இசைந்த ஆசிரியன் இல்லாத கல்வியும், நற் பண்புகள் இல்லாத மனைவியும், விருந்தினரை ஓம்பாத குடும்பமும் வீணாகும்.

ஒளவையார்.


துன்பம்

ஆஈன, மழைபொழிய, இல்லம்வீழ,
அகத்தடியாள் மெய்நோவ, அடிமைசாக,
மாஈரம் போகுதென்று விதைகொண்டோட,
வழியிலே கடன் காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டொருவன் எதிரேசெல்ல,
தள்ளஒண்ணா விருந்துவர, சர்ப்பம் தீண்ட,
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!

பசு கன்று போட,பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ,வீட்டு வேலைக்காரி உடல் நோயினால் அவதியுற,பண்ணையாள் இறந்து போக,மிகுதியாக உள்ள ஈரம் காய்ந்து விடுமே என்று நெல் விதைகளைச் சுமந்து கொண்டு செல்ல,வழியிலே கடன் காரன் வந்து மறிக்க,அதே நேரம் இறப்புச் செய்தியைக் கொண்டு ஒருவன் எதிரே செல்ல,அதே நேரம் தள்ள முடியாத விருந்தாளி முன்னே வர,பாம்பு தீண்ட, அதே நேரம் அரசு நிலவரி கேட்க,பிராமணர் வந்து காணிக்கை தர வேண்டும் என்று கேட்டார்.

இராமச்சந்திர கவிராயர்.

கடவுளின் துன்பம்

வஞ்சகர் பால் நடந்தலைந்த காலில் புண்ணும்,
வாசல்தொறு முட்டுண்ட தலையிற் புண்ணும்,
செஞ்சொல்லை நினைத்துருகு நெஞ்சிற் புண்ணும்,
தீரும் என்றே சங்கரன் பால் சேர்ந்தேன் அப்பா!
'கொஞ்சம் அல்ல பிரம்பு அடியின் புண்ணும்,வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும்,கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பார்' என்றே காட்டி நின்றான் பரமன் தானே!

வஞ்சனை உள்ளவர் பால் சென்று வந்ததனால் எனது காலில் உண்டான காயத்தையும்,வீட்டு வாசல் படிகள் தோறும் முட்டுப்பட்டதனால் என் தலையில் ஏற்பட்ட காயத்தையும்,கடும் சொற்களால் மனதில் ஏற்பட்ட காயத்தையும்,சொல்லி ஆறுதல் பெற சிவனின் பால் சென்றேன்.அதனைக் கேட்ட அவர், நான் பட்ட துன்பமும் கொஞ்சமல்ல அப்பனே பார், பாண்டியனின் பிரம்படியால் பெற்ற காயத்தையும்,கண்ணப்பன் தன் காலினால் உதைந்த காயத்தையும்,பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுணன் கோபங் கொண்டு வில்லினால் அடித்ததனால் உண்டான காயத்தையும் என்று காட்டி நின்றான்.

இராமச்சந்திர கவிராயர்.

தொடரும்.....

Sunday, May 3, 2009

பல்லினப் பண்பாட்டின் பாதை

புதிதாய் இங்கு குடியேறியோருக்காக!


1)திறந்த மனப் பாண்மை(OPEN MINDEDNESS):-

புதிய விடயங்களை அணுகுவதற்கும்,அறிந்து கொள்வதற்கும், பிடித்திருந்தால் பாராட்டுவதற்கும்,சிலவேளைகளில் ஏற்றுக் கொள்வதற்கும் மற்றவர்களுடய வாழ்க்கை பற்றிய இலக்கணங்களை இனங்கண்டு கொள்வதற்கும் அதன் பெறுமானங்களை நாம் வாழ்வு பற்றிக் கொண்டிருக்கும் பெறுமானங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்கும் பல தெரிவுகளில் இருந்து சரியான ஒன்றை தெரிவு செய்து கொள்வதற்கும் இந்த மனதைத் திறந்து வைத்திருக்கும் மன நிலை (open mindedness) உதவுகிறது.

2) நகைச்சுவை உணர்வு( SENSE OF HUMAR):-

எப்போதும் எல்லாப் பண்பாடுகளிலும் கோபம் கொள்வதற்கும் எரிச்சல் படுவதற்கும் அழுவதற்கும் வெட்கம் கொள்வதற்கும் பல விடயங்கள் உள்ளன.இவற்றை புறம் தள்ளி அக் காட்டமான நிலையிலிருந்து விடுபட இந்த நகைச்சுவையாக விடயங்களை எடுத்துக்கொள்ளும் மன நிலை நமக்கு உதவுகிறது.


3) தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலை( ABILITY TO COPE WITH FAILURE):-
எப்போதும் ஒரு புதுப் பண்பாட்டு வாழ்க்கை முறைக்குள் நாம் முற்றாகத் தள்ளப் படும் போது தோல்லி மனநிலை ஏற்படுவது சகஜமே.அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய்வருவோர் சிலவேளை இந்த இயல்பிலிருந்து வேறுபடலாம்.இந்தத் தோல்வி மனநிலை சில வேளைகளில் மிக முக்கியமாக இருக்கிறது. அது எங்களுக்கு சமாளித்து வாழும் மன நிலையைப் பயிற்றுவிக்கிறது.


4)தொடர்பாடல்(COMMUNICATIVENESS):-

பல பண்பாடுகள் இது விடயத்தில் பல குழப்பமான சிந்தனைகளையும் நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன.புதிய நாடொன்றில் இலகுவாக வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவர் தன்னுடய உணர்வுகளையும் சிந்தனைகளையும் தெளிவாக மற்றவருக்குப் புரியும் படி தெளிவுபடுத்தும் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.உதவிகளைப் பெறுவதிலும் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.தன்னுடய தேவைகளை உரியவாறு தெரியப்படுத்தும் போது தான் அதற்குரிய உதவிகளையும் சரியான முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.


5)எதற்கும் தயாரான மனநிலை(FLEXIBILITY AND ADAPTABILITY):-

புதிய பண்பாட்டு வாழ்க்கை முறையைச் சரியாக விளங்கிக் கொள்ளவும் சிலவற்றைக் சமாளித்துக் கொள்ளவும் சில விமர்சனங்களைச் சகித்துக் கொள்ளவும் மனதை இணக்கமான மன நிலையில் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.இது சிலவேளை நமக்கு பல காலமாக இணக்கமாக இருந்த ஒன்றை கேள்விக் குறியாக்குகின்ற விடயமாகக் கூட இருக்கலாம்.அவற்றுக்கு மனதைத் தயார் படுத்தி வைத்திருத்தல் நமது மனநிலைக்குப் பாதுகாப்பாகும்.


6) ஆர்வம்(CURIOSITY):-

இது மற்றவர்களுடய வாழ்க்கை முறையை,இடங்களை, புதுயுக்திகளை,இவை போன்ற பலவற்றை ஆராயத் தூண்டும்.புதிய நாடொன்றில் நிரந்தரமாய் இருக்க விரும்புவோருக்கு இத் திறமை வாழ்க்கையைத் திறம்பட நிலைநிறுத்த உதவும்.ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து பல புதிய நடத்தைகளையும் நிகழ்ச்சிகளையும் கண்டு அவர்களுக்குச் சரியெனப் பட்டது பற்றித் தெளிவான சிந்தனையைக் கொண்டிருப்பர்.



7) நடைமுறைக்கு ஒத்ததான எதிர்பார்ப்புகள்(POSITIVE AND REALISTIC EXPECTATIONS):-

புது நாடுபற்றி பல கனவுகளோடும் பல புதிய திறமைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வருவோருக்கு இது சற்றுக் கடினமாக இருந்தாலும் கூட அவற்றை அடைவதற்குக் காலம் எடுக்கும் என்ற நடைமுறை உண்மையை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.இது முக்கியமானதும் கூட.புது வாழ்க்கைக்குத் தன்னை பழக்கப் படுத்தும் படிமுறையில் மனநிலை அதி உச்சத்துக்கும் மிகத் தாழ்வுக்கும் மாறிமாறிச் செல்லுவது வழமை.ஆனால் அந்தச் சவால்களும் எதிர்மறையான சிந்தனைகளும் தான் அவர்களை உயர்வான நிலைக்கு இட்டுச் செல்லும் படிக் கற்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.


8) வேறுபாடுகளைச் சமாளித்தல்(TOLERANCE FOR DIFFERENCES):-

வேறுபாடான கருத்துக்களையும் வாழ்வு பற்றிய தனித்துவமான நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் மனிதர்களை சகித்துக் கொள்ளும் மனநிலையையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.அது மற்றவரைப் புரிந்து கொள்வதற்கு மாத்திரமன்றி நமது உள் மனதைப் பலப் படுத்தவும் உதவுகிறது.அதே நேரம்,வேறுபாடான தோற்றம், நடத்தை மற்றும் உணர்வுகள் கொண்டவர்கள் பாதுகாப்பை உணரவும் வைக்கிறது.அது நமக்கும் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும்.



9) மற்றவர்களைப் பற்றிய உடன்பாடான மன நிலை(POSITIVE REGARD FOR OTHERS):-

இது மற்றவர்களை நோக்கிய நமது மரியாதையை,நட்புறவை,இணக்கமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறான மனநிலை உள்ள மக்கள் விரைவில் மற்றவர்களின் கருத்தைக் கவருகிறார்கள்.ஒரு சிறு சம்பவம், ஒரு சிறு நடத்தை இதற்குப் போதுமானதாக இருக்கும்.


10) தன்னுணர்வு(SENSE OF SELF):-

தன்னை பற்றி தனக்கேயுரிய தனித்துவத்தை தெளிவாகவும் சிறப்பாகவும்அடையாளம் கண்டு அவற்றைத் தெளிவாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தும் ஒருவர் - தன்னுடய தெளிவான சிந்தனைக்காகத்- எழுந்து நின்று வாதாடத் தயாராக இருக்கும் ஒருவர் - மற்றவர்களுடய நம்பிக்கைகளைக் கொன்றுவிடாத பக்குவத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் - உறவு நிலைகளில் மற்றவருக்கும் அத்தகைய மனநிலையை அளிப்பார்.பலமும் பாதுகாப்பும் ஒருங்கு சேர அங்கிருக்கும்.

இங்கிருந்தே பல்லினப் பண்பாடு தோற்றம் பெறுகிறது. பண்பாடு வளம் கொள்கிறது.


Adapted from work by Laurette Bennhold - samaan and Storti,1996.
நன்றி: STARTTS.