Showing posts with label பாரம்பரியம். Show all posts
Showing posts with label பாரம்பரியம். Show all posts

Thursday, January 26, 2023

தால லாவண்யம்

 தாலம் என்பது பனை.

லாவண்யம் என்பது அழகு என்று பொருள் கொள்ளத்தக்க சொல். 

தால விலாசம், தால சோபனம் என்றெல்லாம் ஏற்கனவே பனை பற்றி எழுதி இருக்கிறார்கள்.

காய்ந்து வரண்ட பூமியில் நாம் நம் பால்ய வாழ்வுக் காலத்தை பனையுடனேயே கடந்திருக்கிறோம். பனையையும் தம்முடய ஒரு பிள்ளையைப் போல கருதி தம் வாழ்வை ஒரு வாழ்வாக வாழ்ந்தவர்கள் நம் பெற்றோர் என்ற போதும், அது குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமலே அதைத் தாண்டி வந்து விட்டோம்.

’பனங்கொட்டை சூப்பிகள்’ என்று ஏனைய மாவட்டத்தவர் நம்மை எள்ளி நகையாடும் அளவுக்கு அவைகளோடு நமக்கான சம்பந்தம் இருந்திருக்கிறது.

 பனைக்கும் நமக்குமான அன்னியோன்னிய உறவு நாம் பிறந்த காலந்தொட்டே நம்மோடு இருந்து வருவது. பனை ஓலைப் பாயில் தவழ்ந்து, சிறுவர்களாக இருந்த போது கோயில் திருவிழாக்களில் பனங்கட்டிக் குட்டானும் சோளன்பொரியும் வாங்கித் தின்று, பனை ஓலையில் பெட்டி,கடகங்கள் செய்து, நாளாந்தம் பனை ஓலை கிழித்து கால்நடைகளுக்கிட்டு, பனங்கிழங்கு சாப்பிட்டு பனம்பழப்பணியாரம்,  புழுக்கொடியல், பனாட்டு சாப்பிட்டு வளர்ந்தது யாழ்ப்பாணத்தானின்  உடம்பு. 

நுங்கும் பதநீரும் கள்ளும் தருவது பனை. பூரானும் தந்து மகிழ்ந்தது பனை.

ஆனால் அது எப்படி என்ற எந்த புரிதலும் அதனோடு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கமும் அப்போது எனக்கிருக்கவில்லை. அதில் ஒரு அக்கறை கூட இல்லாத ஒரு உதாசீன மனோபாவத்தோடு வளர்ந்ததை நினைத்து இப்போது வெட்கிக்கிறேன்; வருந்துகிறேன். குறைந்த பட்சம் ஒரு நட்புறவோடு அன்னாந்து பார்த்து மனசார நன்றி சொல்லி இருக்கலாம்....கட்டியனைத்து ஒரு முத்தம் ஈந்த்திருக்கலாம்....😊

இன்று ஊரில் இருக்கும் நம் காணிக்குள் நிற்கும் பனை மரங்களை வெட்டப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் தான் பனை பற்றிய பிரக்ஞை ஒன்று சித்தித்தது. 

பனை பற்றிப் படித்துப் பார்த்ததில் பல தகவல்கள் சிக்கியது. பாவம் பனை என்று ஒரு பரிவும் பச்சாதாபமும் தோன்றுகிறது. அவ்வப்போது அது ஒரு பெண்ணைப் போலவும் நின்று பிடிக்கும் அதன் தன்மையில் பெண்ணையே அது மிஞ்சிவிடும் போலவும் தோன்றுகிறது. அதனால் 

தாலத்தை ஒரு பெண்ணாக பார்க்க விளையும் ஒரு பதிவு இது.

பனையில் ஆண்பனை என்றும் பெண் பனை என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. விதைகளில் இருந்து வளரும் பனைகள் விதையாக இருக்கும் போது, அது ஆண்பனைக்கான விதையா பெண்பனைக்கான விதையா என்று அறிந்து கொள்ளுதல் சிரமம். எனினும் ஒற்றைக் கொட்டைப் பழவிதையாயின் ஆண் பனைக்கான விதையாக அது இருக்குமென்றும்; இரட்டைக் கொட்டை பழ விதையாயின் ஒன்று ஆணாகவும் மற்றயது பெண்னாகவும் வளர வாய்ப்பிருக்கிறதென்றும்; மூன்று விதையிருக்கும் பழமாயின் இரண்டு ஆண்பனைகளாகவும் ஒன்று பெண்பனையாகவும் வாய்ப்பிருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

அதனால் பனம் விதை நாட்டும் போது இரட்டை விதைகளை நாட்டினால் ஆணையும் பெண்ணையும் அருகருகாக வளர்க்கலாம்.

பனைப்பெண்ணாள் மனிதப் பெண் போல்வாள். பெண்ணின் வளர்ச்சிப் பருவமும் பனைப்பெண்ணாளில் வளர்ச்சிப் பருவமும் ஒன்று போலவே விளங்குகின்றது. இரண்டும் பருவமடைய பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு விதை முளைக்க ஆரம்பித்ததில் இருந்து அதன் வளர்ச்சிப் பருவம் ஆரம்பமாகின்றது. முளை - முறிகிழங்கு - நார் கிழங்கு - பீலிப்பருவம் - வடலி - பனை என்பது பனையின் வளர்ச்சிப் படிநிலைகளாகும்.

பெண்ணுக்கான பருவங்கள் பேதை - பெதும்பை - மங்கை - மடந்தை - அரிவை - தெரிவை - பேரிளம்பெண் என சொல்லப்படும். அது மாதிரி ஆணின் வளர்ச்சிப் பருவங்கள் பாலகன் - விடலை - காளை - மீளி - மறவோன் - திறவோன் - முதுமகன் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அது போல இலைகளுக்குப் பருவங்கள் ஐந்து. கொழுந்து - தளிர் - இலை - பழுப்பு - சருகு என்பன அவை. அது போல மலர்களுக்கு வளர்ச்சிப் பருவம் ஏழு. அவை அரும்பு - மொட்டு - முகை - மலர் - அலர் - வீ - செம்மல் ஆகியன.  

பனைகள் சிறியனவாய் இருக்கும் போது அவற்றுக்கு வேறுபாடு கிடையாது. அவை வடலி என்றே  பொதுப் பெயர் பெறும். குழந்தைகள் அல்லவா? அவைகளுக்கு ஏது வேறுபாடு? எல்லாம் குழந்தைகள் தானே!

பனம் விதையில் இருந்து ஒரு பனை வளர ஆரம்பிக்கும் போது முதல் 22 நாள் வரை அதனை விதைப்பருவம் என்று அழைப்பர். 22 நாளில் இருந்து மூன்று மாதம் வரை அதனை முறிகிழங்குப் பருவம் என்று அழைப்பர். 3 மாதத்தில் இருந்து 4 மாதம் வரையான காலத்தை நார்கிழங்குப் பருவம் என அழைப்பர். 4 மாதம் தொடக்கம் 2 வருடம் வரையான காலத்தை பீலிப்பருவம் என்றும்; 2வருடம் முதல் 10 வருடம் வரையான காலத்தை வடலிப்பருவம் என்றும் அழைப்பர்.

வடலியின் முதல் குருத்து பீலியாகும். அது வெளிவரும் போது தனக்குரிய உணவோடு வெளிவருகிறது. அதனை ‘ மூடுபடம் விரித்தாடு பாம்பைப்போல முளைத்து வரும் பருவம் என்று ஒரு கும்மிப்பாட்டு சொல்கிறது. இதன் பிறகு தொடங்கும் அதன் வளர்ச்சிப் பருவம் முதல் பத்து வருடத்திலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 3 அங்குல வளர்ச்சியை அது எட்டும் என்று அறியப்படுகிறது.

25 வருடங்கள் வரை வளர வல்லது பனை. 25 வருடத்துக்குப் பிறகு 45 ஆண்டுகள் வரை  அது வளருமாயினும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாக இருக்கும்.பின்னர் 45 - 60 ஆண்டு காலத்துக்குள் அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்து உரம்பெற ஆரம்பிக்கும்.

இப்படியாக வளர்ந்து உரம்பெறும் பனை தன் 100 வது வயதில் வைரம் நிரம்பியதாய் ஆகி விடும்.முதுமையினை அது சந்திக்கும் போது அதன் இலைகள் பசுமை குறைவாக இருப்பதற்குக் காரனம் அது வைரம் பாய்ந்து நீர்ச் சத்தினை மேலே செலுத்த முடியாதிருக்கும் தன்மையினாலேயே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதனுடய கொடுக்கும் கொடைக்குணம் அதன் வடலிப்பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. மயிலின் தோகை போல விரியும் அதன் ஓலைகள் விசிறி செய்யப் பெரிதும் பயன்படுகிறது. அளவாகவும் அழகாகவும் விரிந்து சிறியதாய் நிற்கும் அந்த ஓலைகள் விசிறி செய்ய கன கச்சிதமானவை.

தொடர்ந்து அது வளரும் போது, அதன் கருக்கு மட்டைகள் வேலிகளுக்கும் ஓலைகள் கால்நடைகளுக்குத் தீவனமகவும் பயன் படுகின்றன. கங்கு வடலிப் பருவத்தில் கங்கு மட்டைத் தும்பு உற்பத்தியாகிறது. பத்து வயதளவில் வடலி ஆரடி உயரம் வளர்ந்து கம்பீரமாக நிற்கும்.

12 ஆண்டில் பருவம் அடையும் பெண்ணைப் போல பெண் பனையும் 12 வருடத்தில் இளம் பனையாய் வளர்ந்து நிற்கும். அதன் அஃறிணை இயல்பிலும் ஓரழகு ததும்பி நிற்கும். அப்போது அதன் உச்சியில் உள்ள மட்டைகள் நெகிழ்ச்சி அடையும். இதேவேளையில் அருகில் உள்ள ஆண்பனையின் விரல் போன்ற நீண்ட பாளைகளில் இருந்து மகரந்தப் பொடி மணங்கமழ காற்றோடு கலந்து வெளியேறி பெண்பனையின் குருத்தடியில் சேர்கிறது. மகரந்தத்தைக் கொண்ட பெண்பனை குரும்பை ஈணுகிறது. 

பனை பருவமைடைகிறது. பயன் தர ஆரம்பிக்கிறது.

இனி அவை தம் வாழ்வை தாமே பார்த்துக் கொள்ளும். நாம் அவைகளுக்கு சேதம் எதுவுஞ் செய்யாதிருந்தாலே போதுமானது.

இதனை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ‘முப்பாசம் தீர்த்த முனிவர் மொழி வாய்மை போல் எப்போதும் நின்று பயனீயுமே’ என்று மனமுருகி வர்ணித்துள்ளார்.

பனையில் இருந்து பெறப்படுவன:

பதநீர்: இது ஆண்பனையில் இருந்தும் பெண்பனையில் இருந்தும் பெறப்படுகிறது. இது ஒரு இனிப்பான பானமாகும். ஆண்பனையிலும் பெண்பனையிலும் பருவகாலங்களில் தோன்றும் பாளைகளை இடுக்கியால் இடுக்கி நுனியில் சீவுவதன் வழியாக இந்தப் பானம் பெறப்படுகிறது.

இப் பானம் உயிர் சத்துக்களும் மருத்துவ குணாம்சங்களும் கொண்டது. உடற்குளிர்மையும் முகப்பொலிவையும் தர வல்லதெனப் போற்றப்படும் பதநீரில் பல்வேறுவிதமான உயிர் சத்துக்களும் நோயணுகா சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. அதனால் இது கற்பகச் சாறு என்றும்; கற்பக அமிர்தம் என்றும்; பனஞ்சாறு என்றும்; பதனி என்றும் பன்னன் சாறு என்றும்  அழைத்தார்கள். பாலைப்போல சத்துள்ள பதநீரை காலை ஒருவேளை அருந்தினால் உணவருந்தத் தேவை இல்லை என்று சொல்கிறார்கள்.

இதனைக் காய்ச்சியே பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி, பனங்கட்டி ஆகியன தயாரிக்கிறார்கள்.

இதுவே நேரஞ் செல்லச் செல்ல புளித்து கள்ளாகி விடுகிறது.

இனி எங்கேயாவது ஒரு பனையைக் கண்டால் அதனை ஆண்பனையா பெண் பனையா என்று கவனியுங்கள். அது இளங் குமரியைப் போல வளர்ந்திருக்கும் வடலியா அல்லது குடும்பப் பெண்போல் உயர்ந்து நிற்கும் பனை மரமா என்றாராயுங்கள்.

குலைகுலையாய் பனங்காய்களைக் கொண்டிருக்கிறாளா? அருகில் நிற்கும் அவளின் ஆண்பனை மகன் எப்படியாய் இருக்கிறான் என்று பாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன அங்க வேறு பாடுகள் இருக்கின்றன என்றும் கூட ஆராயுங்களேன். அதில் தப்பென்ன இருக்கிறது? 

சுமார் 400 வருடங்கள் வரை வாழத்தக்க இவைகளை; தமக்குள்ளே ஆணென்றும் பெண் என்றும் பருவம் கொண்டு, வாழ்ந்து வரும் இவைகளை; தம்மை நமக்குப் பயன் தந்தும் எந்த ஒரு உதவியையும் நம்மிடம் கோராத இவற்றை நாம் கண்போல காப்போம்.

பொன்னி மழை வாழி! பூமி நலம் வாழி!

மண்ணுயிர்கள் வாழி! யறம் வாழி! - எந்நாளும்

கற்பகம் போலீயும் கடவுட்பனை வாழி!

நற்றமிழும் வாழி நயந்து! - சோமசுந்தரப் புலவர் - 

( தொடரும்....)


Friday, September 30, 2022

சிட்னியின் பாரம்பரிய வீடுகள் - புகை போக்கிகளும் சங்கடப் படலைகளும் -

 சிட்னி அதி துரிதமாக தன் முகத்தை மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு பெரு நகரம். தனித்தனி வீடுகளாக இருந்த பல அழகான தோட்ட வீடுகள்- சுமார் 80 - 100 வருட பழமைமிக்க பாரம்பரிய வீடுகள் பல மறைந்து அந்த இடங்களில் துரித தொடர்மாடிக்குடியிருப்புகளும் உயர்ந்து வான் முட்ட நிற்கும் நவீன கோபுரங்களுமாக நாடு இயந்திரமுகம் கொண்டு வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் அழகிய வீடுகளும் பூமரங்களும் கொண்ட நகரம்  (Garden country ) என்றழைக்கப்பட்ட காலம் போய் concrete country என்றழைக்கப்படும் காலம் வந்து விடும்.

மேலும் அழகான அந்த வீடுகள் அதில் வாழ்ந்தவர்கள் மறைந்து போய்விட, பிள்ளைகள் அதனை விற்கும் போதோ அல்லது பிள்ளைகள் சொத்துகளைப் பங்கு பிரிக்கும் போதோ தவிர்க்கமுடியாமல் முகவர்களுக்கு அவற்றை விற்கும் நிலைக்கு உள்ளாகிறார்கள். அவற்றை வாங்கும் வியாபாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் அதில் எத்தனை வீடுகளைக் கட்டி எத்தனை பேருக்கு விற்கலாம் என்று கணக்குப் பார்ப்பதால் ஒரு அழகியல் மெல்ல மெல்ல மறைந்து காணாமல் போகிறது.

அதனோடு சேர்த்து ஒரு நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு போன்றனவும் நாட்டின்; ஊரின் தோற்றப்பாடுகளும் மறைந்து போகிறது. ஒருசில உள்ளூராட்சி மன்றங்கள் இன்னும் அதன் பழைமையை பேணி வருகிற போதும் எல்லா இடங்களிலும் இருக்கும் உள்ளூராட்சி மன்றங்கள் அதனை அமுல் படுத்துவதில்லை.

சில மாதங்களின் முன் சென்ற ஒரு பகுதியில் காணப்பட்ட சில பாரம்பரிய வீடுகளை ஒளிப்படம் எடுத்து வந்தேன். அவற்றை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் அந்தப் பாரம்பரிய வீடுகளில் காணப்பட்ட புகை போக்கிகள் மற்றும் சங்கடப்படலை போன்றமைக்கப்பட்ட படலைகள். இந்தப் புகைபோக்கிகளும் சங்கடப்படலைகளும் இலங்கையில் அதிலும்  குறிப்பாக தமிழர் வாழும் பிரதேசங்களில் பாரம்பரியமாக இருந்து வந்தவை.

இலங்கையின் பாரம்பரிய வீடுகள் புகைபோக்கிகளைக் கொண்டவை. அவை சமயலறையிலிருந்து மேலெழுந்து ஓடு வேயப்பட்ட கூரைக்கு ஒரு தனிக் கம்பீரத்தை அளிக்கும். கழிவறைகள் தொலைவில் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். அறைகளும் வரவேற்பு மண்டபமும் சமயலறை, களஞ்சிய அறையுமாகக் பாரம்பரிய வீடுகள் ஒரு வித கம்பீரத்தோடு காணப்படும். அங்கும் இப்போது அனேக மாற்றங்கள்.

மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை என்ற போதும் குறைந்த பட்சம் அவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்ளுதல் அவசியம்.

தமிழர் வாழும் பிரதேசத்து பாரம்பரிய வீடுகளில் காணப்படும் புகைபோக்கிகள் முன்னர் சொன்னது போல அவை சமையலறையில் நெருப்படுப்பில் சமைப்பதனால் வரும் புகையினைப் போக்க அமைக்கப்பட்டவை. ஆனால் சிட்னியில் உள்ள புகை போக்கிகள் குளிரை விரட்டுவதற்காக வரவேற்பறையினைச் சூடாக வைத்திருக்க வரவேற்பறையில் விறகினைப்போட்டு எரிப்பதனால் வரும் புகையை வெளியேற்ற அமைக்கப்பட்டவை.

புகைபோக்கிகள் ஒன்று தானென்றாலும் அதனைப் பயன்படுத்திய முறையும் தேவையும் வீட்டில் அது இடம்பெற்ற இடமும் வேறு வேறானவை. இப்போது நவீன வசதிகளோடு குளிரையும் உஷ்னத்தையும் விரட்டப் பல நவீன மின்சார இயந்திரசாதனங்கள் வந்து விட்டதால் புகைபோக்கிகளோடு யாரும் இப்போது வீடுகளைக் கட்டுவதில்லை. கட்டவேண்டிய அவசியமும் அற்றுப் போய் விட்டது.

அது போலத்தான் சங்கடப்படலையும். இலங்கையில் மக்கள் கால்நடையாக பல இடங்களுக்கும் போய் வந்த காலங்களில் பாதசாரிகள் இருந்து இளைப்பாறவும் குளிர் நீரைக் குடித்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் வீடுகளின் படலைகள் இருக்கைகளையும் இருக்கைகளுக்கு மேலே கூரையையும் கொண்டனவாக படலைகள் காணப்பட்டன. பாதசாரிகளின் சங்கடங்களைத் தீர்ப்பதால் அவற்றைச் சங்கடப்படலைகள்  என்றழைத்தார்கள். அவற்றின் ஓரத்தில் உயரத்தில் ஒரு மண்பானையில் தண்ணீரும் குடிக்க ஒரு குவளையும் வைக்கப் பட்டிருக்கும். 

இப்போது அவற்றின் பயன்பாடுகள் இல்லாதொழிந்து போயின. இலங்கையில் இத்தகைய அமைப்பினை இப்போது காண்பது கூட அரிது. சிட்னியிலும் அவ்வாறான அமைப்பினைக் கொண்ட பழங்கால வீடுகளைக் சில இடங்களில் மாத்திரம் தான்  காணலாம். வேறு சில சிட்னியின் பாரம்பரிய வீடுகள் தங்கள் படலைகளுக்கு பந்தல் போட்டு அழகு செய்திருப்பார்கள். அதில் பூமரங்கள் படர்ந்திருக்கும் காட்சி அழகு மிக்கது.

இன்றைக்கு என் கைபேசியில் எடுத்த சில ஒளிப்படங்கள் உங்களுக்காக...















ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்; 22.02.10 
Albert Road - 2135.

இதன் தொடர்ச்சியாக பதியப்பட்டிருக்கிற மேலும் சில ஒளிப்படங்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திச் சென்று பார்க்கலாம். 

Sunday, April 19, 2020

யோகாசனம்


      
                                 
                                 



Friday, December 22, 2017

லக்ஸலா....

லக்ஸலா.......

கொழும்பில் இருக்கும் ஓர் அரச கலைக்கூடமும் விற்பனை அரங்கும்!

சிங்கள மக்களின் கலைகளின் முகம்!
ஸ்ரீலங்காவின் பண்பாட்டு பொருள்களின் விற்பனைக் களஞ்சியம்!

அரச ஆதரவோடு வெளி நாட்டவருக்காக தன்னை நேர்த்தியோடு  காட்சிப்படுத்தும் நாட்டின் முகம்!

இலங்கையில் பல்வேறு இடங்களிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் இக் காட்சியகம் கொழும்பில் 98/4, Havelok Road, Colombo - 5 - என்ற இடத்திலும் காட்சியகத்தைக் கொண்டிருக்கிறது.

5.10.2017 அன்று அங்கு சென்ற போது எடுத்த சில ஒளிப்படங்கள் இங்கே.
                                          ( முழுவதும் எடுக்க வில்லை...)
































மேலே காணப்படுகிற தலையாட்டி பொம்மைகள் சிங்கள மக்களின் கலைகளை வெளிப்படுத்தும் அவர்தம் தனித்துவக் கூறின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம். நான் சிறு பிள்ளையாக இருந்த போது கண்ட தலையாட்டி பொம்மைகள் தம்பதி சமேதரராக தத்ரூபமான வண்ணங்களோடு இருவகைப்பட்டவையான கூறுகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. 

ஒரு சோடி பெரஹெரா நடனமாதுவும் அதற்கு மேளம் அடிக்கும் ஆண் சோடியையும் கொண்டிருக்கும். அவர்கள் அழகிய கலைத் தம்பதியினர்.

 மற்றய சோடி கிராமத்து தம்பதிகளை நினைவுறுத்தும் வண்ணம் பெண் மரபு வழியான அவர்களின் ஆடையான லுங்கியும் பிளவுசும் அணிந்து பெரிய பல் வெளித்தெரியும் வெள்ளாந்திச் சிரிப்போடும் கட்டையான பருமனான தோற்றத்தோடும் ; ஆணும் அதே போல சாறமும் அதன் மேலே கறுப்பு பெல்ட்டும் அணிந்து வெறும் தோளிலே சால்வையும் போட்டபடி அதே வெள்ளாந்திச் சிரிப்போடும் கட்டயான மண்ணிறத் தேகத்தோடும் காணப்படுவர்.

மிகக் கச்சிதமான அழகு அது! 

ஆனால் அவற்றை எல்லாம் இப்போது அதே கலையழகோடு காணக்கிடைக்கவில்லை. இங்கு தம்பதியினராகக் கூட அவர்கள் இல்லை. கலை அம்சமும் முன்னரைப் போல நேர்த்தியாக இல்லை. 

majestic city என அழைக்கப்படும் கடைத்தொகுதிகளைக் கொண்ட வளாகத்தில் வெளி மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் இருந்து பொருட்களை நேரடியாக பெற்று விற்பனை செய்யும் ஒரு கடைக்கார பெண்மணியோடு உரையாடிய சமயம் அவர் ‘இப்போதெல்லாம் பழைய மாதிரி கலைஞர்களைக் காணக்கிட்டுவது அபூர்வம் என்றும்; புதிய சந்ததியினர் இவ்வாறான வேலைகளில் வருமானப் பற்றாக்குறையாக இருப்பதாலும்; படித்து வேலைகளுக்குப் போகும் விருப்பம் அதிகரித்து வருவதாலும்; இத்தகைய கலைகள் இப்போது அருகியும் அழிந்தும் வருகின்றன எனக் கூறினார்.

இன்று அவ்வாறான கலைப்பொருட்களைக் காணவே முடியவில்லை. லக்ஸலாவில் கூட  தலையாட்டிப் பொம்மையில் பெண் நடனமாது மாத்திரமே இருந்தது. எங்கே அந்த மேளம் அடிக்கிற ஆண் சோடி...? இருக்கின்ற அதிலும் கூட முன்னய கலையம்சத்தைக் காண முடியவில்லை....


















கீழே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பொக்கிஷப் பெட்டி கொழும்பில் இருக்கும் என் சினேகிதியினுடயது. ஒளிப்படம்: 5.10.17.






கொழும்புக் கடை ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சிங்கள மர சிற்பங்கள்...ஒளிப்படம்: 4.10.17.













இவற்றை எல்லாம் பார்த்து விட்டு யாழ்ப்பாணம் போன போது நம்மிடையே ஏன் இவ்வாறான கலைக்கூறுகளின் காட்சிப்படுத்தலும் விற்பனை அரங்கும் இல்லை என்ற மனக்குறையே எனக்கு ஏற்பட்டது. அங்கிருந்த மியூசியத்துக்குச் சென்ற போது கவனிப்பார் அற்ற ஒரு மூலையில் ஓரிரு தொழிலாளர்களோடு ஆள் அரவம் எதுவுமற்று ஒரு சிறு மூலையில் அது ஒதுங்கி இருக்கக் கண்டேன்.

குறைந்த பட்சம் ஓரளவு கற்றறிந்த மக்களிடம் கூட இந்த நூதனசாலை பற்றிய ; அதன் வரலாற்றுப் பெறுமதி பற்றிய; பிரக்ஞையோ, பரீட்சயமோ, தேடலோ,ஆர்வமோ, பெருமையோ இல்லாதிருப்பது வேதனையளிப்பது; வருத்தத்திற்குரியது! 

அங்கு பணியாற்றும் பெண்ணிடம் பேசிய போது அங்கு இருக்கும் பொருள்களை ஆவணப்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாகக் கூறினார். ஆனாலும் மழைக் காலங்களின் போது கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுவதாகவும் பொருட்கள் பல சேதமடையும் நிலமை இருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.

மேலும், புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை உண்டெனக் கூறிய அவர் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. மிகவும் விநயமாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு சில படங்களை மட்டும் எடுக்க அனுமதித்தார். அவருக்கு நன்றி. அவை கீழே வருகின்றன. ஒளிப்படம்: 13.10.2017.










மேலும் சில ஒளிப்படங்கள் கீழ் வரும் லிங்கில் யாரோ ஒருவரால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் அவைகளும் முழுமையானவையல்ல. 

https://hiveminer.com/flickr_hvmnd.cgi?method=GET&textinput=archaeological,olympus&tag_mode=all&search_domain=Tags&photo_number=50&page=1&noform=t&sorting=Interestingness&originput=archaeological,olympus&sort=Interestingness&search_type=Tags&photo_type=250

 அங்கு - அந்த நூதன சாலையில் - காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்ற பொருட்களில் பல வியந்து பார்க்கத் தகுந்தன. அதிலும் குறிப்பாக  யாழ். செண்ட்.ஜோன்ஸ் கல்லூரியின் முன்நாள் அதிபர் ருவைனம் அவர்கள் (ஆங்கிலேயர் ?) (194...) சேகரித்து வைத்திருந்து  பின்நாளில் நூதன சாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட அரிய பல கலைப் பொக்கிஷங்களைக் கண்டு மெய் சிலிர்த்தேன். இந்தளவு பொருட்களையும் கேகரித்து பாதுகாத்து சமூகத்துக்குக் கையளிக்க இந்த மனிதர் எத்தகைய ஒரு கலாரசிகராகவும் சமூகத்தின் கலைக் காவலனாகவும் இருந்திருக்கவேண்டும்! இந்த மாமனிதரைப் பற்றி அறிய அக் கல்லூரியின் இணையப்பக்கத்துக்குப் போனால் அங்கு அவரைப் பற்றிய எந்த தகவலும் காணப்படவில்லை. 

அங்கு இடம் பெற்றிருக்கும் அதிபர் வரிசையில் கூட அவருக்கு - அந்த உன்னத மனிதருக்கு - ஓர் இடம் இல்லை....

நம் நிலைமை இப்படியாக......

குளத்தங்கரையிலே கிடக்கும் தண்ணீர் வடிவமைத்த மொழு மொழு கூளாங்கல்லின் மேலே குளத்தடி  விருட்சத்தில் இருந்து விழும் பழுத்த ஓர் மஞ்சள் இலைக்கு உரையாட அவகாசம் நேர்ந்தால் அவை என்ன பேசிக்கொள்ளக் கூடும்?

இந்த வாழ்வு பற்றி......

வாழ்ந்த கதைகள் பற்றி......