Showing posts with label தமிழ்; சில தகவல். Show all posts
Showing posts with label தமிழ்; சில தகவல். Show all posts

Saturday, August 28, 2021

ஆத்திசூடிகள்

தமிழ் சில தகவல் - 1


ஒளவையார் அருளிச் செய்தது ஆத்திசூடி என்பது பலரும் அறிந்த விஷயம். அது,

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்

 என்று அகர வரிசையில் 2,3, சொற்களில் வாழ்க்கையில் எப்படி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகும்.

பிறகு பாரதியார் புதிய ஆத்திசூடி என்று ஒன்று எழுதினார். அது,

அச்சம் தவிர்
 ஆண்மை தவறேல்
 இளைத்தல் இகழ்ச்சி
 ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
 ஊண் மிக விரும்பு
 எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை...

இவ்வாறாக தொடரும். காலத்தின் நிமித்தமாகவும் சொற்செறிவு, பொருள் அழகு, எளிமை, காலத்தின் தேவை, யாருக்கு பாடப்படுகிறது என்பது பொறுத்து அதன் பொருள் மாறுபட்டும், காலத்தின் தேவைக்குரியதாகவும் அமைந்திருப்பது வாசிக்கும் போது புலப்படும்.

கூடவே இந்த கவிப்புலவர்களின் சமூக கரிசனையும் .

பலருக்கும் தெரியாத இந்னொரு ஆத்திசூடியும் ஒன்று இருக்கிறது. அது பாரதி தாசன் இயற்றியது. அது இவ்வாறாகத் தொடர்கிறது.

அனைவரும் உறவினர்
ஆட்சியை பொதுமை செய்
இசை மொழி மேலதே
 ஈதல் இன்பம்.
 உடைமை பொதுவே
 ஊன்றுளம் ஊறும்
எழுது புதுநூல்
 ஏடு பெருக்கு
ஐந்தொழிற்கிறை நீ
ஒற்றுமை அமைதி
ஓவியம் பயில்
ஒளவியம் பெருநோய்

இவ்வாறாகத் தொடர்கிறது பாரதிதாசனின் ஆத்திசூடி.

ஆத்திசூடிகளும்......

நானாக இருந்தால் எப்படி எழுதக்கூடும் என்று நினைத்துப் பார்த்தேன். இன்றைக்கு இன்றய நிலையில் இது தான் என் ஆத்திசூடி.

அன்போடிரு
ஆசை தவிர்
இயன்றதைச் செய்
ஈதலே அறம்
உதவி புரி
ஊக்கம் கொள்
ஏற்றம் போற்று
ஐயம் வேண்டாம்
ஒன்றே இறைவன்
ஓடுக நதிபோல
ஒளடதம் அன்பே!

இனி எவரேனும் எழுதகூடின் அது எவ்வாறெனத் தொடர்தல் கூடும்.....?

உங்கள் ஆத்திசூடி எப்படி இருக்கும் என்று எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்! பெற்றுக் கொள்வதன் வழி கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம்.