Friday, July 30, 2021

மூலையில் ஒரு நாற்காலி

குளிர்காலத்தின் நடுவில் உட்காந்திருக்கிறோம்.

நாளுக்கு நாள் கொரோனாவின் பெருக்கம் அதிகரித்தபடி இருக்கிறது. நேற்றயதினம் கட்டுப்பாடுகள் இன்னும் இறுகி 5 கி.மீ. ற்குள் மாத்திரம் தான் - அதிலும் அத்தியாவசியம் என்றால் மாத்திரம் தான் வீட்டினை விட்டு வெளியே வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்த அத்தியாவசியங்களும் கூட என்ன என்னத்திற்காக என்று பட்டியல் தரப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு அபராதங்களும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. நகர்புறங்களில்; நாட்டுப் புறங்களில் இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக பொலிசாரோடு சேர்ந்து இராணுவமும் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தே வருகிறது.

என் வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கிற பிரதேசங்கள் எல்லாம் கொரோனா தொற்றுகளும் பாதிப்புகளும் மிக அதிகரித்துப் போயிருப்பது இதுதான் முதல் தடவை.

சரி, மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கக் காலம் எம்மைப் பணித்திருக்கிறது. அதைமீறி செய்ய என்ன இருக்கிறது? 

எதுவுமில்லை.

என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏதேனும் புதிதாக இருக்கிறதா என்ற என் இணையத்தேடலில் டொக்டர் ஜேன் என்று ஒருவரைக் கண்டு கொண்டு அவரிடம் இருந்து கொஞ்சம் படித்துக் கொண்டேன். அதன் மூலையில் ஒரு சிறு குறிப்பு ஒன்று புத்தக வாசிப்பு குறித்து இருந்தது. 

அது இவ்வாறு சொல்கிறது.

இந்தப் புத்தகம் என் வீடு.
கதவு திறந்திருந்திருக்க
நான் உள்நுழைவேன்..
இங்கு நான் மகிழ்ந்திருக்க
சாளரங்கள் பல உண்டு.
என்னை விரும்பும் நண்பர்கள் 
ஆண்களும் பெண்களுமாய்
இங்கிருக்க, 
என் சிரிப்பை, அன்பை, காதலை,
அழகை, மகிழ்ச்சியைக் 
இங்கு நானும் கண்டெடுப்பேன்.

Sunday, July 4, 2021

The Universal Declaration Of Human Rights

 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ‘அகதிகள் வாரம்’ கொண்டாட்டப் பட்டது. (20.6.21 - 27.6.21) அது வந்தது தெரியாமலே போய் விட்டது. கவனத்தில் எடுக்கப் படாதவர்களாகவே அவர்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது  ஒரு சோகம். மேலும் அவர்கள் தமக்கான உரிமைகள் பற்றியும் கடமைகள் பற்றியும் தெரியாதவர்களாக அடங்கி ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள். கூச்ச சுபாவத்தோடு ஒருவித இயலாமை சூழ, பவ்வியமாக அவர்கள் மற்றவர்களோடு  நடந்து கொள்வதைக் காண மனசு துடிக்கிறது.

பலர் தவறான வழிகளில் சூதாட்டம், மது, புகை பழக்கங்களுக்கும் ஆளாகிப் போயுள்ளனர். பெண்களும் தாய்மார்களும் தனிமையோடிருக்கிறார்கள். பலருக்கு வேலைக்குச் செல்லும் உரிமை இல்லை. வேலை செய்வதற்கான உரிமை உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கிறது. போதுமான வருமானம் இல்லாததால் குழந்தைகள் சரியாகக் கவனிக்கப் படாதவர்களாக வளர்க்கப் படுகிறதையும் ஆங்காங்கே காண முடிகிறது....

அரசாங்கம் கருணை காட்டாதவரை அவர்கள் திரிசங்கு சொர்க்கத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில் இருக்கிற தொழில் வழங்குனர்கள்; சமூகநிறுவனங்கள்; ஏதேனும் செய்யலாம்; செய்கிறார்கள் என்ற போதும் அது போதுமானதாக இல்லை. இதற்கென ஏதேனும் ஒரு பாரிய திட்டத்தை உருவாக்கி அமுல் படுத்த; தொழில் கொடுத்து அவர்களது வருமானத்தை ஊக்குவிக்க கொரோனா காலமும் விடுவதாக இல்லை......

அது நிற்க,

நான் தொழில் பார்க்கிற பாடசாலையில் நான்காம் வகுப்புப் பிள்ளைகளுக்கான புத்தகம் ஒன்று கிடைத்தது. அப் புத்தகம் என்னை மிகவும் வசீகரித்தது. அதன் தமிழாக்கம் இது.

நாங்கள் சுதந்திரமாகவும் எல்லோரைப்போலவும் பிறந்திருக்கிறோம்.

எங்கள் எல்லோருக்கும் சொந்த சிந்தனைகளும் எண்ணங்களும் உள்ளன.

நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

எங்களுக்குள் என்ன வேறுபாடு இருக்கிற போதும்

இந்த உரிமை எல்லோருக்குமானது.


நாங்கள் வாழ உரித்துடையவர்கள்.

சுதந்திரமாகவும் பாதுகாப்பகவும் வாழ உரித்துடையவர்கள்.

எம்மை அடிமை கொள்ள எவருக்கும் உரிமை இல்லை.

மற்றவரை அடிமை கொள்ள எமக்கும் உரிமை இல்லை.

எங்களை வருத்த எவருக்கும் உரிமை இல்லை.

சித்திரவதைக்கும் உரித்துக் கிடையாது.


சட்டம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்.

சட்டத்தின் பாதுகாப்பு எல்லோருக்குமானது.

எல்லோரையும் அது சமனாகவும் சரியாகவும் காக்க வேண்டும்.

நாம் சரியாகக் காக்கப் படாதவிடத்து,

நாம் அனைவரும் சட்டத்தின் உதவியைக் கோரலாம்.

சரியான காரணம் இல்லாமல்,

யாரையும் சிறையிட உரிமை இல்லை.

எங்களை நாடுகடத்தவும் உரிமை இல்லை.

பரீட்சார்த்தங்கள் பகீரங்கமாக நிகழ்ந்த்தப்பட வேண்டும்.

அதில் மற்றவர்கள் தலையீடோ செல்வாக்கோ  இருத்தல் ஆகாது.

ஆதாரம் கிடைக்கும் வரை ஒருவரை குற்றவாளி எனக் கருத முடியாது.

நாம் குற்றம் இழைத்தோம் என்று குற்றம் சாட்டப்பட்டால்

இல்லை என்று நிரூபிக்க எமக்கு உரிமை உண்டு.


எங்கள் நற்பெயரர்க்கு களங்கம் விளைவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

எங்கள் வீட்டுக்குள் எங்கள் அனுமதி இன்றி நுழைய உரிமை கிடையாது.

உரிய காரணமின்றி, எங்கள் கடிதங்களை திறந்து பார்க்க, எங்களை; எங்கள் குடும்பத்தைத்  தொந்தரவு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.

எங்கள் எல்லோருக்கும் நம் நாட்டுக்குள் எங்கு போகவும்; விரும்பினால் வெளிநாட்டு போகவும் உரிமை உண்டு.

எங்கள் நாட்டில் நாம் சரியாக நடத்தப்படவில்லையானால் எங்கள் எல்லோருக்கும் வேறு நாட்டுக்குச் செல்ல உரிமை உண்டு.

நாங்கள் ஒரு நாட்டின் உரித்துக்குரிய பிரஜைகள்.

வளர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யவும் விரும்பினால் குடும்பத்தை உருவாக்கவும் உரிமை உண்டு.

அவர்கள் திருமணம் செய்யவும், பிரியவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகள் சமனாகும்.

சகல பிரஜைகளுக்கும் ஒரு பொருளை உடமையாக வைத்திருக்கவோ பகிர்ந்து கொள்ளவோ உரிமை உண்டு.

தகுந்த காரனமின்றி உங்களிடமிருந்து எவரும் அதனைப் பறிக்க முடியாது.

நமக்கு சரி என்று பட்ட சமயத்தை  நம்ப நமக்கு உரிமை உண்டு.

அது போல மாற விரும்பினால் மாறவும் நமக்கு உரிமை உண்டு.

நாங்கள் ஒன்றை  நினைக்கவும் நினைத்ததை வெளிப்படுத்தவும் அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் நம் நண்பர்களைச் சந்திக்கவும் அமைதியாக ஒன்றிணைந்து நம் உரிமைகளை கோரவும் நமக்கு உரிமை உண்டு.

அது போல, எமக்கு விருப்பமில்லாத போது அதிலிருந்து விலகி இருக்கவும் நமக்கு உரிமை உண்டு.

நம் நாட்டு அரசகாரியங்களில் பங்கெடுக்க நமக்கு உரிமை உண்டு. வளர்ந்த ஒவ்வொருவருக்கும் தனக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் வீட்டில் வசிக்க உரிமை உண்டு.

வாழத்தேவையான பணம் வைத்திருக்கவும் உரிமை உண்டு.

இசை, கலை, புனைவு, விளையாட்டு இவை எல்லாம் எல்லோரும் மகிழ்வதற்கானது.

ஒவ்வொரு வளர்ந்தவருக்கும் தொழில் பார்க்கவும் அதற்கான சரியான சம்பளத்தைப் பெறவும் தொழிற்சங்கத்தில் இணையவும் உரிமை உண்டு.

வேலைக்குப் பின்னர் ஓய்வெடுக்கவும், மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

நாங்கள் எல்லோரும் நல்வாழ்வுக்கு உரிமை உடையவர்கள்.

தாய்மார்கள்; பிள்ளைகள்; வயதானவர்; தொழிலற்றவர், மாற்றுத்திறனாளிகள், என்போருக்கும் அவரவர் தேவைகள் கவனிக்கப்படவும்  நல்லதொரு வாழ்க்கையை வாழவும் உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. ஆரம்பக்கல்வி கட்டாயம் இலவசமாக இருக்க வேண்டும்

நாங்கள் எங்கள் திறமையை நன்றாக சீராக்கி சிறந்த வேலைவாய்ப்பைப் பெற தொழில் கல்வி வாய்ப்பு இருக்க வேண்டும்.

பெற்றோருக்கு எப்படி எதை தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க உரிமை உண்டு.

ஐ.நா. சபை பற்றியும் ஏனைய மக்கள் பற்றியும் மற்றவர்கள் உரிமைகள் கடமைகள் பற்றியும் மேலும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்குப் பிடித்த வாழ்வை வாழ எமக்கு உரிமை உண்டு. அத்தோடு வாழ்ந்து அனுபவிக்கவும் கல்வியறிவு, விஞ்ஞானம் தொழில்நுட்பம் தரும் வசதி வாய்ப்புகளை பயன்படுத்தவும் நமக்கு உரிமை உண்டு.

உரிமைகளையும் சுதந்திரத்தையும் நாம் நம் நாட்டிலும் உலகிலும் அனுபவிக்க நல்ல ஆட்சி நிலவ வேண்டும்.

எங்களுக்கு மற்றவர்களுடய உரிமையை; சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிமை உண்டு.

யாரும் இந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் எங்களிடம் இருந்து  பறிக்க முடியாது.

நன்றி. சிறுவர்களுக்கான புத்தகம். - We are all born free.-