Monday, December 14, 2015

உண்மையை எதிர் கொள்ளுதல்........



’உண்மையை எதிர் கொள்ளுதல்’

இப்படி ஒரு வாசகத்தை அதன் முழுமையான அர்த்தங்களுடன் எப்போதேனும் நாம் உள்வாங்கி இருக்கிறோமா என்று கேட்டால் பலருக்கும் - நான் உட்பட - பலவிதமான பதில்கள் அல்லது மழுப்பல்கள் இருக்கும்.

காரணம் உண்மை என்ற ஒன்று தரும் ஒரு விதமான கசப்பு அல்லது அது தரும் சுளீர் என்ற ஒரு கசையடி.

உண்மை எப்போதும் ஜீரணிக்க முடியாததாகவும்; பொய்கள் நாவுக்கு நல்ல இனியவையாகவும் இருப்பதால் பலருக்கும் உண்மையைப் பேச முடியாமல் இருக்கிறது. எதிர்கொள்ள இயலாமல் இருக்கிறது. பொய்களோடு நின்றுவிடப் பிடிக்கிறது. உண்மையை பேசுவோர் மீது ஆத்திரம் வருகிறது.

இது எல்லா வழிகளிலும் நம்மைப் பீடித்திருக்கிறது. ‘(புலம்பெயர் நாடுகளில்) தமிழ் மெல்ல இனி சாகும்’ என்று சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். எப்படி அது சாத்தியப்படும் என போர் கொடி தூக்கி பகீஸ்கரிப்புச் செய்து தனிப்பட ஒருவரைத் தாக்கி நம் ஆத்திரங்களுக்கு வடிகால் கண்டு கொள்ளுகிறோமே ஒழிய அதில் இருக்கும் சாத்திய அசாத்தியங்களை சீர்தூக்கிப் பார்க்கவோ அதிலிருக்கும் உண்மையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஆக்கபூர்வ வேலையை ஆரம்பிக்கவோ நாம் விரும்புவதுல்லை. தாயக பூமியில் இருந்து யாரேனும் வந்து ‘ஆஹா இங்குள்ல தமிழர் என்னமாய் வாழுகிறார்கள் இவர்களாலல்லவோ தமிழ் வாழ்கிறது “என்று சொன்னால் அடுத்த வருடம் அதே பேச்சாளர் இங்கு வருவது உறுதியாகி விடும். அதுவே அப் பேச்சாளருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் வேண்டி இருக்கும் பொய்யாக - இனிப்பான செய்தியாக இருக்கிறது.

உண்மையை சொன்னவர் எதிரியாகவும் ‘உறக்கத்துக்கு தாலாட்டுப் பாடுபவர்’  நல்லவராகவும் நமக்கு ஆகிப் போய் விடுகிறார்.

அண்மையில் இரண்டு மூன்று உண்மைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இரண்டும் இளவயது இறப்புகள்.

ஒன்று வேலைத் தலத்தில்.
இன்னொன்று சமூகத்தில்.

ஒருத்தி 4 இளம்பிள்ளைகளுக்குத் தாயான 37 வயது வெளிநாட்டுக் காறி.
இன்னொரு பெண் 34 வயது திருமணமான தமிழ் பெண்.

புன்னகையோடும் நேர்மறைச் சிந்தனைகளோடும் பிரமாண்டமான நம்பிக்கைகளோடும் வாழ்க்கையை எதிர்கொண்ண்ட இவர்களை மரணம் அள்ளிக் கொண்டு போய் விட்டது.

இந்த உண்மை என்ன தான் நமக்கு சொல்ல வருகிறது?

அண்மையில் ‘படலையில்’ ஒரு வசனம் என்னைக் கவர்ந்தது. “காதல் வசப்பட்டவனுக்கு புத்தி சொல்லப் போகாதீர்கள். - அவன் முடிவினை எடுத்து விட்டுத் தான் உங்கள் கருத்தைக் கேட்கத் தயாராக இருப்பான்” எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரிகிற உண்மை அந்த காதல் வசப்பட்ட மனிதனுக்கு மட்டும் தெரியாமல் போய் விடும். அல்லது தெரிய விருப்பம் இல்லாமல் போய் விடும். அப்படிப்பட்ட இடங்களிலும் பொய் ரொம்ப அழகாகிப் போய் விடும். உண்மையைச் சொல்லப் பிரியப்படுவதில்லை யாரும்.அது அவரது உரிமை என்றொரு பட்டாடைக்குள் உண்மை ஒழிந்து கொள்ளுகிறது.

உண்மைக்கும் விதிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதோ?

இப்போது எனக்கு இந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ள கஸ்டமாக இருக்கிறது.

உண்மையை எதிர் கொள்ளும் வீரியம் வாய்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிந்தவர்கள் சொன்னால்.......

எதிர் கொள்ள கஸ்ரப்பட நேராதில்லையா......