Wednesday, August 7, 2019

கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்கோ...




வாழ்க்கையில் கனமான கணங்களைக் கடந்து போக - கொஞ்சமாக றிலாக்ஸ் செய்து கொள்ள - அன்றாட வேலை தவிர்ந்த, ஏதேனும் ஒன்று நமக்கு அன்றாடம் தேவைப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
நண்பர்கள்...
சினிமா...
இசை...
விளையாட்டு...
குழந்தைகள்...
இணையம்...
முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள்...

மேலும் வைன், பியர் வகையறாக்களும் மேலும் புகைத்தல், மதுபான நுகர்வும் இதற்குள் அடங்குமா என்று தெரியவில்லை...


இவ்வாறாக வளர்ந்து செல்லும் பட்டியலில் உங்கள் அம்சம் என்னவாக இருக்கிறது?

என் அக்காளுக்கு பூந்தோட்டம்.
என் தங்கைக்கு அவள் வளர்க்கும் நாய்குட்டி
என் பிரிய தோழிக்கு வீட்டுத் தோட்டம்...

எனக்கு?

எனக்கு என்னவாக இருக்கும் என்று யோசித்த போது புத்தகங்கள் இலகுவாக வந்து என்னோடு செல்லம் கொஞ்சிக்கொண்டு என்னைச் சொல், என்னைச் சொல் என்கின்றன.

என்றாலும் ஒரு பெற்றோருக்கான கண்டிப்போடு ’கனமான’ உள்ளடக்கம் கொண்ட புத்தகங்களுக்கு அந்த அன்பளிப்பை கொடுக்க மறுத்து, அது ஆனந்த விகடன் மாதிரியான சிறு வணிக சஞ்சிகைக்களுக்கானது அந்த இடம் என்று கண்டிப்பாகச் சொல்லி, ‘பெரியவர்களை’ அகற்றி, கொஞ்சம் தூரம் நிற்கச் சொல்லி, குழந்தைகளைப் போன்ற இச் சிறு சஞ்சிகைகளை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

ஆனந்த விகடன்.

அது ஒரு கனமில்லாத சுவாரிசஸம்...

இதற்கும் எனக்குமான பரீட்சயம் பலவருடங்கள் கொண்டது. விகடன் வீட்டுக்கு வாராந்த விருந்தாளி. இங்கும் கூட. (ஊரில் இருந்த போது கலைமகள்.) முன்னர் விகடனில்  மதன் என்றொருவர் மிக அற்புதமாக கார்ட்டூன் வரைவார். அப்போதெல்லாம் அவருடய கேள்வி பதில்கள் தான் நான் முதலில் விரும்பிப் படிப்பது. இப்போது எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை. அந்த அற்புதமான திறமைசாலியை விகடன் தொப் என்று போட்டு விட்டதில் எனக்கு இன்று வரை வருத்தமுண்டு. ஏன் கோபமும் தான்.

இப்போதெல்லாம் அதில் அரசியலும் சினிமாவும் அதிக இடத்தைப் பிடித்து விடுகிறது. கூடவே புத்தி மதிகளைப் போல அமைந்து விடும் கட்டுரைகளும் எனக்கு பிடிக்கிறதில்லை.  கூடவே கவிதைகளும்... எனக்கு சற்றேனும் உவப்பானவைகளாக இல்லை. ஏதோ புரியாத சொல்லடுக்குகளைக் கொண்டு மணல் வீடு போல அனேக கவிதைகள் அமைந்து விடுகின்றன.

இதில் ஏதேனும் உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் தெரிவியுங்கள். எனக்குள்ளே மீண்டும் நான் என்னை மீள் வாசிப்புச் செய்து கொள்ளுகிறேன். அதனால், அவைகளைத் தவிர்ந்து, வரும் ஒரே ஒரு சிறுகதையும் மற்றும் சில துணுக்குகளும், வலைப்பேச்சும் பார்த்து விடுவதோடு இப்போதெல்லாம் ஆனந்த விகடனைப் பார்ப்பது தீர்ந்து போய் விடுகிறது.

‘கனமாக’ வரும் / வந்த வேள்பாரி மற்றும் இப்போது வந்து கொண்டிருக்கும் இறையுதிர் காடு போன்றவை பயனுடைத்து எனினும் நான் அவைகளை ஆனந்த விகடனில் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் இப்போது கடைசி சில மாதங்களாக அதில் சில சுவாரிசங்கள் கூடி இருக்கின்றன. வாசகர் கேள்வி பதில் அந்த மாதிரியானது. அவற்றில் சிலதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. (நன்றி ஆனந்த விகடன்; 31.7.19; பக். 70 - 71.)

கேள்வி: உங்கள் மொபைலுக்கு காரணத்தோடு பேர் வைக்கச் சொன்னா என்ன பேர் வைப்பீங்க?

1. மாயவலை - வட்ஸப், பேஸ்புக், டுவிட்டர் எனத் தொடங்கும் இதனூடான பயணம், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆக்கிரமித்து, கடசியில் வலையில் சிக்கிய மானாக நம்மை ஆக்கி விடுவதால்... - லக்ஷ்மணன். திருநெல் வேலி.

2. குரங்குக் குட்டி - குட்டியை விட்டுத் தாய் இருக்காது. தாயை விட்டு குட்டி இருக்காது. அது போல நாம் செல்லை வைத்திருப்பதால் இந்தப் பெயரை வைத்துக் கொள்லலாம். - சரவன்கவி.

3. உலகத்தையே செல்போனில் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் பெட் நேம் ‘இரண்டாம் உலகம்’ - குப்புசாமி, சங்கரபுரம்.

4. மற்றவர்களுடன் நம்மை இணைப்பதால் டார்’லிங்’ - ஷிவாஸ்

5.’ஆளவந்தான்’ - கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மொபைல் என்பதால். - தரணிஷிராஜ்.

6. ‘கறையான்’ - நேரத்தை அரிப்பதால்.- மணி-

7.ருவிட்டர் அதிகம் பார்ப்பதால் செல்லமாய் ’ருவிட்டி’ னு பெயரிடுவேன். - முருகானந்தி.

8.’சனியன் சகடை’ இது இல்லேன்னா வாழ்க்கையில் உருப்பட்டு இருப்பேனோ என்னமோ...- கார்த்தி.-

9.ஷேக்’கிளார் - சம்சாரத்துக்கிட்ட இருந்து கால் வரும் போதெல்லாம் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்படுவதால்...! - லெக்ஸ்வெனி.

10. இடது பக்க பாக்கட்டில் தான் எப்போதும் செல்போனை வைத்திருப்பேன். இதயத்திற்குப் பக்கத்தில் இருப்பதால் ‘லப் டப்.’  -வைரச் சந்திரன்-

11. ஆந்தை மாதிரி நைட்டில முழிச்சுக்கிட்டு ஆன்லனில பிஸியா இருக்கிறதால ‘பிஸிராந்தை’.- புது வண்டி ரவீந்திரன்.

நான் என்ன பேர் வைப்பேன் என்று நினைத்துப் பார்த்தேன் பதில் இன்னும் அவ்வளவு இலகுவாகத் தெரியவில்லை. யோசிக்கிறேன்.

அது சரி, நீங்கள் என்ன பேர் வைப்பீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன்....

இதில் வந்த இன்னுமொரு கேள்வி.

உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் என்ன தலைப்பு வைப்பீர்கள்?

1.’முற்றும்’. - அரியாஸ். சேலம்.

2.’சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’? - கார்த்திகா.

3.’ஹையோ.. ஹையோ...
என் வாழ்க்கையின் நேசமணி மொமெண்ட்ஸ்’.-விக்கி-

4.’இந்த வாழ்க்கைய... அப்படியே வரலாறா... எழுதிட்டாலும்’...! - மாதொருபாகன் -

5.’இதெல்லாம் எங்க உருப்படப் போகுது’? - பாகம் 1.- ராமுவேல்-

6.90’s kid! -ரமேஷ். ஷா.

7.’படித்தவுடன் கிழித்து விடவும்’ - மனோ. பிரான்ஸிஸ்.

8.’ஒண்ணுஞ் சொல்லுறதுக்கில்ல’ - வைகை சுரேஷ்.

வேலைத்தலத்தில் என் மியன்மியார் நாட்டு தோழி ஒருத்தியிடம் உணவு இடைவேளையின் போதான உரையாடலில், ‘போனுக்கு நீ என்ன பேர் வைப்பாய் என்று கேட்டேன். அவள் சொன்னாள்,

'It is part of my body - actually my Head.- We don't need to save any think in our brain any more. All are saved in this device, சற்று நேரத்தின் பின் புன்னகையோடு சொன்னாள், For my husband, that is his 2nd wife.

நான் என்ன சொல்லக் கூடும்....? யோசிக்கிறேன்...

நீங்களும் யோசித்துச் சொல்லுங்களேன்......


Tuesday, August 6, 2019

பட்டறையில் பட்ட அறிவு

’காலம் பிழைத்தால் ஒரு புல்லுக் கூட உன் பல்லை உடைக்கும்’ என்று கண்ணதாசன் ஓரிடத்தில் கூறி இருந்தார்.



அதன் உண்மையினை அறிய முடிந்தது சமீபத்தில் தான். சமீபத்தில் வீட்டுக்கு வர்ணம் அடிக்கும் வேலைகள் நடந்தன. ஒருவர் வீட்டில் நின்று ஒவ்வொரு சிறு விடயங்களையும் அவதானமாகக் கண்காணித்தாலன்றி வேலைகள் உரிய வகையில் நடைபெறாதென்பதை உணர்ந்த தருணம் அது.

என்னவோ அது ஒரு சிறு விடயம் தான். வேலைகள் நடைபெறுவதற்காக மின்சார உபகரனங்கள் அதன் மின்னிணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தன. மீண்டும் அவை உரிய இடத்துக்கு போகவும் நின்று சொல்லி செய்தாகி விட்டது. எனினும் off செய்யப்பட்ட மின்னிணைப்பை மீண்டும் வழங்குவதற்கான switch போட மறந்த ஒரு நாளில்  குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் இருந்த இறைச்சி வகைகள் குளிர் விட்டுப் போய் போட்ட நாற்றம் இருக்கிறதே.......

அது ஒரு வித எலி செத்த நெடி.....வீடு முழுவதுமாய் பரவி எங்கிருந்து அந்த நாற்றம் வருகிறதென்பதே தெரியாது இறுதியில் அது குளிர் சாதனப் பெட்டியில் இருந்து தான் என்பதைக் கண்டுபிடித்த போது அதனை சுத்தம் செய்ய ஒரு நாள் வேலையில் இருந்து விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.

இதில் இன்னொரு கஸ்ரம் என்னவென்றால் கெட்டுப் போனவற்றை உடனடியாகக் கொண்டு போய் Bin இற்குள்ளும் போட முடியாது. அது Bin எடுக்கும் வார நாள் வரை அப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் தான் இருக்க வேண்டிய நிலை. இல்லையெனில் அந்தச் சுற்றுப் புறமே நாற்றத்தின் தொட்டிலாகி விடும். அதனால் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாது அந்த நாற்றச் சகிப்புத் தன்மையையும் 3 நாட்கள் சகித்துக் கொள்ள வேண்டி இருந்தது.

அதனை ஒரு விதமாகச் செய்து முடித்த போது தான் தெரிகிறது அதன் நாற்றம் வீடு முழுவதிலும் ஆடைகளிலும் பொருள்கள் மீதும் படிந்து போயிருப்பதால் வீடு, பொருட்கள், ஆடைகள், துணிமணிகள், நிலையான பொருட்கள் எல்லாவற்றையும் சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது.

இத்தனைக்கும் செய்ய மறந்தது என்னவோ அந்த ஸ்விட்ஸ் ஐ போட மறந்த அந்த ஒன்று தான். அதுவும் சில மணித்துளி நேரம் மட்டும் தான்.

அது போலத்தான் ஆடை துவைக்கும் இயந்திரமும். அதனையும் களற்றி வேலை நடந்த பின் பூட்டியாகி விட்டது. பூட்டிய பின் தண்ணீர் வரும் குளாயைத் திறந்தால் அது தண்ணீர் வரும் பகுதியினூடாக தண்ணீர் ஒழுக ஆரம்பித்து விட்டது. இது என்னடா இப்படி ஆகிறது என்று பார்த்து உரிய வேலையாட்களை வர அழைத்தால் இன்று, நாளை என்று போக்குக் காட்டிய படியே இரு வாரங்கள் கழிந்து விட்டன. இதற்குள் உடுப்புகள் நிறைந்து வழிய ஆரம்பித்து விட்டது தனி ஒரு கதை.

இறுதியாக வேறு ஒருவர் வந்து பார்த்து விட்டு ( வந்து பார்த்து என்ன பிழை என்று சொல்ல மட்டும் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும்.) வந்தவர் குளாய் புதிதாக மாற்ற வேண்டும். அதற்கு 60 டொலர்கள் வரை செலவாகும் என்றார். சரி வாங்கி வந்து வேலையை முடிக்கலாம் என்று வந்ததற்கும் பொருளுக்கும் என்று அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டால் அவர் வருவதற்கிடையில் முதல் வருவதாகச் சொல்லி போக்குக் காட்டிக்கொண்டிருந்தவர்  சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் வந்து இறங்கினார்.

வந்து பார்த்து விட்டு அது setting இல் தான் தவறு நேர்ந்திருக்கிறது. தண்ணீர் குளாயை முழுவதுமாகத் திறக்கக் கூடாது. பாதி திறந்து விட்டால் மட்டும் போதும் என்று கூறி அதனைச் set பண்ணி விட்டு போனார். புரியினை சரியாகத் திறந்து விடத் தவறிய ஒரு சிறு சம்பவத்துக்காக கொடுத்த விலை அதிகம்.

மன உளைச்சலும் தான்.

இப்போது தான் புரிகிறது ஒரு சிறு தவறு அல்லது ஒரு சிறு அவதானமின்மை தரும் தண்டனை எத்தனை பெரிதென்று.

இதற்கே இத்தனை பாடென்றால் வாழ்க்கைக்கு.......

இதில் படித்த பாடம்,

 “ The best maths you can learn is how to calculate the future cost of current decision"

" No amount of guilt can solve the past and no amount of anxiety can change the future"

இது நான் பட்டறையில் பட்ட அறிவு.