Sunday, December 18, 2011

ஈழத்தமிழர் முதுசங்கள் - 2 - வானொலிகளின் வரலாறு

இலங்கை வானொலிக்கு அதிலும் குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்சேவை 2, மற்றும் வர்த்தக சேவைகளின் ஒலிபரப்புக்கு ஒரு சுவை மிகுந்த வரலாறு இருக்கிறது.தமிழின் உச்சரிப்புச் சுத்தமும் ஒலித் துல்லியமும் அனேகத் தமிழரை அதனோடு கட்டிப் போட்டிருந்தது.

அப்போது தொலைக்காட்சியோ வேறு வகையான பொழுது போக்குச் சாதனங்களோ இல்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அதனைக் காரணம் காட்டி இந்த ஒலிபரப்புச் சேவையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.அது தன் தரத்தில் முன்னின்றது.

அது மாத்திரமன்றி அதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு நாள் காலையிலும் இடம் பெறும் பொங்கும் பூம்புனலும் அதற்கான முகப்பு இசையும்  மறக்கக் கூடிய ஒன்று தானா? அது போல பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்ற முகப்பு பாடலோடு அறிமுகமாகும் பிறந்த நாள் வாழ்த்து,பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்கு வரும் மங்கல கரமான முகப்பு இசையோடு வரும் ராஜேஷ்வரி சண்முகத்தின் இனிய குரல்,சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் செய்திக்கு முன்னால் இடம்பெற்ற மேள ஓசை அதனைத் தொடர்ந்து வரும் சற் சொரூபவதி நாதன் அவர்களின் உச்சரிப்புச் சுத்தமும் தேனில் குழைத்த கம்பீரமும் கலந்த செய்தி அறிக்கை,....

அது போல திரைவிருந்து அதனோடு வரும் கே.எஸ். ராஜாவின் கொஞ்சும் குரல், நல்லதமிழ் கேட்போம் என்ற படி வரும் ஒலிச்சித்திரமும் ராஜகுரு.சேனாதிபதி.கனகரட்னம் என்னும் பெயரும்,... அப்படியே நீட்டிக் கொண்டு போனால் சிறுவர் மலர், அதனை நடத்திக் கொண்டிருந்த வானொலி மாமா, (அவர் இப்போது இங்கு சிட்னியில் தான் இருக்கிறார்),ஸ்டார் ரொபியின் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி,லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, மற்றும் நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம்,

’முற்றத்து மல்லிகையில்’ வரும் ஈழத்துப் பாடல்கள்,மற்றும் அறிவிப்பாளர் ஜோசெப் ராஜேந்திரனின் நான் உங்கள் தோழன் எந்த நாளுமே நல்ல நண்பன்...பாடல்,அறிவிப்பாளர் நடேச சர்மா, அந்தக் குரலுக்கென்றிருந்த ஒரு மென்மை கலந்த வசீகரம்,இரவு 9 மணிச் செய்திக்கு முன்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒலிபரப்பாகும் முஸ்லீம் நிகழ்ச்சி, செய்திக்கு ஒரு நிமிடம் முன்பாக அவர்கள் சொல்லும் வரலாற்றில் ஓரேடும் குறிப்பும் சலவாத்தும், அப்படியே அவர்கள் சொல்லும் ’அஸலாமு அலைக்கும் ப்ஃரகத்துல்லாஹூ பரஹாத்துஹூ’..... எல்லாமும் இன்றும் அப்படியே மனதில் பதிந்து போயிருப்பதற்கு அந்த ஒலிபரப்புக்கு என்றிருந்த தரம், செல்வாக்கு நிச்சயமாக ஒரு காரணம் தான்.

அக்காலங்களில் ஒலிபரப்பான நாடகங்களைத் தான் மறக்க முடியுமா? இசையும் கதையும்,சனி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒலிபரப்பான கதம்பம்,தணியாத தாகம், இரைதேடும் பறவைகள், சந்தியாகாலத்துப் புஷ்பங்கள், கோமாளிகள் என்றொரு ந கைச்சுவை நாடகம்( அதில் மரிக்காராக ராமதாஸ், அப்புக்குட்டியாக ராஜகோபால்,............செல்வசேகரன்,போன்றவர்கள் பங்கேற்றிருந்தார்கள். மூன்று இனத்தவரையும் மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருந்த அந் நாடகம் அவர்களின் பேச்சு வழக்கையும் வாழ்க்கை முறையையும் நகைச்சுவையூடாக சிறப்பாக வெளிக்கொணர்ந்திருந்தது.)

இவை போன்றவை எல்லாம் நாம் தவறாமல் கேட்ட நாடகங்கள் அல்லவா? அதிலும் குறிப்பாக மக்கள் வங்கியால் வருடக்கணக்காக ஒலிபரப்பாக்கப் பட்டு வந்த தணியாத தாகம் ஞாயிற்றுக் கிழமை 4.30. மணிக்கு குடும்எபத்தையே வானொலிக்கு முன்னால் உட்காரவைத்த சாதனையைப் படைத்திருந்ததல்லவா? அதில் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இணைந்து பாடும்,
..............
...............
மனையிலே மக்கள் குறைவிலா கல்வி
மான்களாய் வளர வழியெதென்கிறாய்.

கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழி புரிவான் கண்ணே!
...............
..................

சிறு தொகை தானே சேமிக்கின்றோம்
செலவுக்கெது வழி ஆகும் என்கிறாய்
கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழிபுரிவான் கண்ணே!

பாடல் நினைவிருக்கிறதா?

இப்போது பல தனியார் வானொலிகள், போட்டிகள், ஒலிபரப்பு முறைகளில் கூட அநேக வேறுபாடுகள்,நிதானமற்ற ஒரு ஓட்டம்,அவசரம், உச்சரிப்புத் துல்லியம் இன்மை, அறுத்து உறுத்து முழுமையாகப் பேசாமல் நுனி நாக்கில் இருந்து புறப்படும் தமிழ், ர,ற,ல,ள,ழ வேறுபாடு தெரியாத ஒலிபரப்பாளர்கள்,நுனிப்புல் மேய்ந்த படியே ஓடிக்கொண்டிருக்கும் ஒலிபரப்புகள்,மற்றும் விளம்பரங்கள்........

இனியும் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ!

அதனால் தெரிந்ததையும் அறிந்ததையும் பதிந்தும் பகிர்ந்தும் கொள்வது ஆரோக்கியமானது தானே? உங்கள் நினைவுகளில் இருந்து ஏதேனும் இதில் கூறப்படாதிருந்தால் அதனை அறியத்தாருங்கள்.

இனி வானொலியின் வரலாறுக்கு வருவோம்.



வானொலி பற்றிய என் முதல் ஞாபகம் இது. நான் மிகச் சிறு பிள்ளையாக இருந்த போது பார்த்ததும் கேட்டதும் இதிலிருந்து தான்.பாடல் சம்பந்தமாக சப்பாணி வெட்டி அமர்ந்திருந்து எப்போதாவது அபூர்வமாய் ஒரு பொழுதில் குஞ்சம்மா வீட்டில் ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார்...”,” பாடலும் ஈச்சைமரத்து இன்பச் சோலையில்....” பாடலும் இதில் கேட்ட ஞாபகம்.





அதன் பின் இன்னும் சற்றே வளர்ந்த பின் கொழும்பில் இருக்கும் என் பெரிய மாமனார் வீட்டுக்குப் போகும் போது அங்கு இதனைப் பார்த்த ஞாபகம்.கொழும்பும் மாமாவும் ஒரு பெரிய பிம்பமாய் மனதில் விழுந்திருந்த காலம் அது. இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இதில் “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்...” பாடலும் கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மைதடவி....” பாடலும் மெல்லியதாக அவர்களின் அறையில் இருந்து வரக் கேட்ட ஞாபகம்.



இப்போது எனக்கு சற்றே 9,10 வயதாகி விட்டது என வைத்துக் கொள்ளுங்களேன். இது யாழ்ப்பாணத்தில் என் அம்மம்மா வீட்டில் இருந்த றேடியோ.பெரும்பாலும் அந்தக் காலம் அனேகமானவரின் வீட்டில் இது தான் இருந்திருக்கும் என நம்புகிறேன்.சிப்பிகளால் செய்த உருவங்கள் கொண்ட show case இற்கு மேல் கையால் பூவேலைப்பாடுகள் செய்த விரிப்பின் மேல் கம்பீரமாய் அது அமர்ந்திருந்தது.


இப்போது நான் எங்கள் வீட்டில் இருந்த றேடியோவை அறிமுகப் படுத்தி ஆக வேண்டும். அதற்கு ஒரு சிறு அறிமுகமும் தேவை. என் பெற்றோரின் திருமணத்தின் போது நான் முன்னர் சொன்ன பெரியமாமாவால் திருமணப்பரிசாக அப்பா அம்மாவுக்குப் பரிசளிக்கப் பட்டது அந்த வானொலி. அது இதே தான்.எங்களை விடக் கூடுதலான வயசான அது நெடுங்காலம் சிறப்பாக உழைத்தது.





இதன் பின்னால் வந்து சேர்ந்தது ரேப் றக்கோடர்.



என் தந்தையாரின் நண்பர் லண்டனில் இருந்து வந்த போது தந்தையாருக்கு மேலே இருக்கிற இதே மாதிரியான ரேப் றக்கோடரைப் பரிசளித்திருந்தார்.அது பிறகு பல ரகங்களிலும் பல திணிசுகளிலும் பல வடிவங்கள் மற்றும் நிறங்களிலும் வந்தன.

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் வீடுகளையும் அலங்கரித்திருக்கலாம்.









அது பிறகு இளைஞர் யுவதிகளின் மத்தியில் Walkman ஆகப் பரினமித்து மிகப் பிரபலமானது.






கீழே இருக்கும் இவை இக் காலங்களில் பிரபலம் பெற்றிருந்த றேடியோ வகையறாக்கள்.

























வானொலிகளின் வரலாறு போராட்ட காலங்களில் டைனமோ சுற்றிக் கேட்கும் வகையில் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.

அதன் பின் CD PLAYER கள் பிரபலம் பெற்றன. அவை தனியாகவும் எல்லாம் சேர்ந்த ஒன்றாகவும் விற்பனைக்கு வந்தன. சீ.டீக்களை இறுவட்டு என்பதா குறுந்தட்டு என்பதா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தேறின.போர் இடம் பெற்ற பிரதேசங்களிலும் இத்தன்மை இருந்ததா என்று தெரியவில்லை.





பின்னர் அவை முத்திரையின் அளவுகளிலும் MP3,பிறகு கைத்தொலைபேசி கணணி வழியாக எல்லாம் இப்போது கேட்கக் கிட்டுகிறது.



இனி வரும் காலங்களில் அவை எப்படியான வடிவங்களை எடுக்கும் என்று சொல்லத் தெரியவில்லை.

இவை எல்லா நாட்டுக்கும் பொதுவானவையாகவும் இருக்கலாம்.எனினும் வழக்கொழிந்து போய் விட்டதால் நம் நாட்டின் ஒரு காலத்து வாழ்க்கை முறையை சேகரித்து வைக்கும் ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.

மேலும் இதிலிருக்கிற ஒரு சிறு படம் அல்லது ஒரு சிறு நினைவு நம் இளமைக் கால நினைவுகளை மீட்டுத் தரப் போதுமானவையாகவும் இருக்கலாம்.

உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பிற் குறிப்பு;
ஈழத்து வழக்கில் முதுசம் என்பது ஆண் சந்ததி வழியாக கிடைக்கிற பரம்பரைச் சொத்து. சீதனம் என்பது பெண்வழியாகக் கிடைக்கிற பரம்பரைச் சொத்து.

படங்கள்; நன்றி; கூகுள்

Sunday, December 11, 2011

ஈழத்தமிழர் முதுசங்கள் - 1 - பாவனைப் பொருட்கள்.




அண்மையில் மாதேவி என்பவரின் வலைப் பூவுக்குப் போகக் கிட்டிற்று.மிக அரிதாகிக் கொண்டு போகும் ஈழத்தவரின் பாரம்பரியப் பொருட்களை கரிசனையோடு புகைப்படம் எடுத்து தன் வலைப்பூவில் பிரசுரித்திருந்தார்.

(http://maathevi.wordpress.com/)நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.

குறிப்பாக ஈழத்தில் போர் ஓய்ந்த பின் அங்கிருந்து வரும் செய்திகள் மகிழ்வூட்டுவனவாக இல்லை. அப்படியாக இருக்கின்ற போது இதனைப்போன்ற தகவல் சேகரிப்புகள் எதிர்கால சந்ததிக்கு மிகத் தேவையானவை.அது ஒரு காலத்தின் கட்டாயமுமாகும்.

என் சொந்தப் பாவனைக்கும் அது மிக உதவியாக இருக்கும் என்பதால் ஒரு சேகரிப்பு முயற்சியாகவும் இங்கே இவற்றை மீள பதிவு செய்து கொள்கிறேன்.


மிக்க நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.
இதனை அரிசி கிளையப் பயன்படுத்தியது ஒரு காலம்.அரிசிக்குள் இருக்கும் கற்களைக் களைய இது பயன் பட்டது.அரிசியைத் தண்னீர் ஊற்றிக் கழுவிய பின் ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக இதனை ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.

இப்போது கல்லில்லா அரிசியும் Rice cooker உம் வந்தபின் இதன் பயன்பாடு அருகி வருகிறது.



இது திரிகை.
தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.



இது அம்மி.
இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கல் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்லங்கலை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு?



கொக்கத் தடி என அழைப்பது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.



இது தயிர் கடையிற மத்து.
தயிரில் இருந்து வெண்னையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.


உரல்!
மறக்க முடியுமா இதை? உரல் மாதிரி ஏன் நிக்கிறாய் என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.

இதைப் போல பொக்குணி உரல் என்றும் ஒரு உரல் இருந்தது. அது மரத்தாலானது. இடித்து இடித்து அது மிக ஆழத்துக்கு உட் குழிந்து போயிருக்கும். தோசைக்கு இடிச்ச சம்பல் என்று ஒன்று இதில் தான் இடிப்பார்கள்.



அடுப்பு!
பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.



ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல்.
இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’



பாக்கு வெட்டி!
பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!



சட்டியும் அகப்பையும்!
களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!



காம்புச் சத்தகம்!
இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.



ஆட்டுக் கல்!
வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!



சுளகும் இடியப்பத் தட்டும்!
சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை,மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும். ’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்று அடிக்குமாம்’ என்ரொரு பழமொழி ஊரில் வழக்கில் இருந்தது.கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!



திருவலகை!
இது தான் சமையலறை நாயகன்.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!



வெத்திலத் தட்டம்!
வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது.



இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது. தட்டத்துக்கு அருகில் இருப்பதைப் பூட்டுச் செம்பு எண்டு எழுதி இருக்கிறா.தேநீர் கோப்பி போன்றவை ஊற்ரிவைக்கப் பயன் பட்டதாக அவரது குறிப்புச் சொல்கிறது.



இதுக்குப் பேர் விசிறி.
பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இவ்வாறு நன்னாரி வேர் மற்றும் மயில் இறகுகளாலான விசிறிகளும் வழக்கில் இருந்தன.

இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?




விசேட நன்றி;மாதேவி.

(http://maathevi.wordpress.com/)

Saturday, December 3, 2011

திவ்ய தேசம்


அது SWITZERLAND.

அந்த ஊரைப் பார்த்து வந்ததில் இருந்து அந்த அனுபவத்தை எழுத்தில் வடிக்கும் பிரயத்தனம் எதுவும் பலன் தரவில்லை.

அழகு,செழிப்பு,மலைகள்,ஏரி,பசுமை,மக்கள்,பொருட்கள்,வீடுகள்......

இது பற்றி எதுவும் நான் சொல்லப் போவதில்லை.அவை எழுத்துக்கும் புகைப்படக் கருவிக்கும் அகப்படாதவை.

ஆனால் அங்கத்திய கல்வி முறை பற்றி சொல்ல ஆவல்.

அது ஒரு கிராமத்துப் பாடசாலை.அங்கு கல்வி ஐந்தாம் வகுப்பு வரை.அப்போ மேலே படிக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு அவர்கள் 3மைல் சைக்கிள் ஓடி அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டும்.

இந்தப் பாடசாலையில் எத்தனை பிள்ளைகள் என்று நினைக்கிறீர்கள்? ஐந்து வகுப்பையும் சேர்த்து மொத்தம் 47 பிள்ளைகள். ஒரு அற்புத அழகு வாய்ந்த பெரிய மணிக்கூட்டை முகப்பில் கொண்ட கட்டிடம்.ஒரே ஒரு கட்டிடம்.ஒரு ஆசிரியர்.ஒரு நாய்,மேலும் ஒரு கிராமக் குழு. இவ்வளவும் தான் அந்தப் பாடசாலையின் சொத்து.

பாடசாலை இரண்டு நேரம். மதியம் எல்லா மாணவர்களும் தத்தம் வீடுகளுக்குச் சென்று மதிய போசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பாடசாலைக்குச் செல்வர்.ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒவ்வொரு நேரம் பாடசாலை முடிவடையும். சீருடை எதுவுமில்லா சுதந்திரம்.

எல்லா மாணவர்களுக்கும் எல்லாப் பெற்றோரையும் அவர் தம் வீடுகளையும் நன்றாகத் தெரியும்.பாடசாலைக்குப் போகும் போதும் மதிய உணவுக்குச் செல்லும் போதும் தாம் நடந்து பாடசாலை விட்டு போகும் போதும் தாம் நடந்து போகும் பாதையோரம் இருக்கிற நண்பர் குடும்பத்தோடு கைகாட்டிய படியும் புன்னகைத்த படியும் டொச் மொழியில் வாழ்த்துக்களைப் பரிமாறிய படியும் போகும் இளம் குருத்துக்கள்!! அவர் தம் முகங்களில் தான் எத்தனை முக மலர்ச்சி, செழிப்பு,மகிழ்ச்சி!!

துன்பங்களின்,மனித விகாரங்களின் வாசனையே அறியா அழகுகள்!

அது ஒரு விவசாயக் கிராமமும் கூட!இயற்கையான நீரோடைகளும் சோளக் கொல்லைகளும் விளையாட்டு மைதானங்களும் மேச்சல் நிலங்களும், முயல், பன்றி,ஆடு முக்கியமாக மாட்டுப் பண்ணைகளும் நிறைவாக உள்ள தேசம்.பிரதேசம்.இதனைச் சுற்றி பாதுகாத்தபடி நீல மலைத் தொடர்கள்.

கிராமங்கள் தான் எத்தனை அழகு!! இன்னும் மாசு படா வசீகரம்,ரம்மியமாய் வீசும் தென்றல்,சுடாத சூரியன்,பச்சை புல் வெளி,வித விதமான உயிரினங்கள் அவரவர் சுதந்திரத்தோடு,தான் தோன்றியாய் வீதியோரம் பழமரங்கள்,அழகழகாய் பராமரிக்கப் படும் வீடுகளுக்குள் தேசவாழ்வு தந்த நிறைவோடு சினேகமாய் வாழ்ந்த பூரணத்தோடு புன்னகைக்கும் வயோதிப புன்னகைகள்,புத்துணர்ச்சியோடு புன்னகைக்கும் வெள்ளைக் குழந்தைகள்,.....

இயற்கை அன்னை தன் முழு எழிலையும் ஒரு வித கம்பீரத்தோடு வெளிப்படுத்திய இடம் இது.




பொழுது சாயும் நேரங்கள் பிள்ளைகளை இந்த இடமெங்கும் காணலாம்.வயோதிபர் தம்பதி சமேதரராய் நாய்களோடு உலாவருவர்.அப்போதுகளில் அவர்கள் பரிசளிக்கும் வயோதிபரின் நிறைவான harmonious புன் முறுவல் கோடி பெறும்!!அவர்களின் வீடுகள் பூங்கன்றுகளால் பொலிந்திருக்கும்.குழந்தைகள் ஓடிச் சென்று கொஞ்சிக் குலாவுவர்.முயல்களுக்கு புல் பறித்துக் கொடுப்பர்.ஆடுகளின் செவிகளைச் சற்றே நீவி விடுவர்.ஓடைகளில் குதித்து கும்மாளமிடுவர்.
இதற்கெல்லாம் அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை.

வஞ்சனை வாழ்க்கையின் வலிகள் எதுவுமற்ற உள்ளங்களின் குதூகலம்!!

நான் போயிருந்த நேரம் போகிற பாதைகளில் இயற்கையாக வளர்ந்திருந்த அப்பிள் மரங்களில் கொள்ளை கொள்ளையாய் பழங்கள்.செழித்த பச்சை இலை மரங்களுக்குள் சிவப்பு சிவப்பு பழங்கள்.மேலும் சில பச்சைப் பழங்கள்.பழுத்தும் கொட்டியும் பிஞ்டசும் பூவுமாய் ...அவை எக்கச்சக்கம்! அதனைச் சீண்டுவாரோ தேடுவாரோ இல்லை என்பது தான் என் ஒரே மன ஆதங்கம்.

பாடசாலையைப் பற்றிச் சொல்ல வந்து எங்கோ போய் விட்டேன்.அங்கு கற்கும் ஒவ்வொரு மேல் வகுப்பு (4,5ம்வகுப்பு) மாணவர்களுக்கும் கீழ்வகுப்பு மாணவர்களில் ஒருவரையோ இருவரையோ கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியரால் வழங்கப் பட்டிருக்கும்.பொறுப்பு என்றால் அந்தச் சிறு வகுப்பு குழந்தைகள் தமக்கிடையே பிணக்குப் பட்டு நீதி தேவைப் பட்டால் அல்லது தம் தனிப்பட்ட பிரச்சினைகள் என்றால் விளையாட்டில் ஏதேனும் சண்டை நேர்ந்தால், படிப்பில் ஏதேனும் சந்தேகம் வந்தால் அவர்கள் ஆசிரியரிடம் போகத் தேவையில்லை. அவர்கள் தம் குறிப்பிட்ட சீனிய மாணவரிடம் சென்று தம் தேவைகளைச் சொல்லி தீர்வுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியிலும் இந்த நிலைமை அமுலில் இருக்கும்.அதாவது வெளியில் என்று சொல்லும் போது பொது அரங்க வெளிகளின் போது ஏனைய பாடசாலைகளோடு போட்டிக்குச் செல்லும் போது, மேலும் பாடசாலையால் விடுமுறை முகாம்களுக்குச் செல்லும் போது இது நடைமுறையில் இருக்கும்.

பாடசாலைக்கு ஒரு நாய் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அதன் பெயர் லில்லி. பெண் பால் உயிரினம்.ஆசிரியர் வரும் போது அவவும் பாடசாலைக்கு வருவா. வகுபறை வாசல் புறம் காவல் இருப்பா.மாணவர்களோடு செல்லம் கொஞ்சுவா.அவவுக்கு உணவூட்ட மானவர்கள் தம் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.இயற்கை உபாதைகளுக்கு அழைத்துச் செல்வதும் அவ்வாறே!உணவு ஆசிரியருடய பொறுப்பு.

பாடசாலை முடிந்ததும் லில்லி தன் பாடசாலை உபாத்தியாயரோடு அவர் வீட்டுக்குச் செல்லும்.அவர் தான் அவவின் எஜமானன். விடுமுறை நாட்களில் லில்லியை தம் வீடுகளுக்குக் அழைத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு ஒரு பெரிய காத்திருப்புப் பட்டியல் உண்டு.அத்தனை பேருக்கும் அதில் அத்தனை ப்ரியம்.

அப்போ கல்வி, கற்பித்தல் எப்படி என்ற ஒரு வினா எழலாம்.அது இன்னொரு விதமான அழகு என்றே கூறலாம். தீவிர கல்வி முறை அங்கு நடைமுறையில் இல்லை. விளையாட்டு, கைவினை, மொழி, கணிதம்,கலை, பாடல்,இசைவாத்திய அறிமுகங்கள், முகாம்களுக்குச் சென்று தன் பாட்டில் சுயமாக வாழும் வழி வகைகளின் அறிமுகம், மனையியல்,அழகியல்,சமையல்,என இரு பாலாரும் கற்கவேண்டிய பாடத் திட்டங்களே அமுலில் உள்ளன.

தவணையில் ஒரு நாள் ஊர் சுத்தம் ஒரு பாடம். அதற்கு அவர்களுக்கு பாடசாலையில் ஒரு வாரம் பயிற்றுவித்தல் நடக்கும். பயிற்றுவித்தல் என்றால் வகுப்பு ரீதியாக மாணவர் குழுக்கள் பிரிக்கப் பட்டு அவரவர் பொறுப்புகள் அவ் அவவ் குழுக்களிடம் ஒப்புவிக்கப் படும்.ஒவ்வொரு கிராமத்து வீதியும் ஒவ்வொரு குழுக்களுக்கு வழங்கப் பட்டிருக்கும்.அவர்கள் அவ்வீதியில் இருக்கும் வீட்டுக் காரருக்கு கடிதங்கள் எழுதி - அதாவது இந்ந நாள் இந்ந திகதி இந்ந நேரத்துக்கும் இந்ந நேரத்துக்கும் இடையில் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். உங்கள் வீட்டில் தேவையற்ற பத்திரிகைகள், புத்தகங்கள் இருந்தால் அவற்றைக் கட்டி இந்ந திகதி உங்கள் வீட்டுக்கு வெளியே வைத்து விடுங்கள்.பாடசாலை மாணவர்களாகிய நாம் வந்து அவற்றை எடுத்துச் சென்று போட வேண்டிய பெரும் கழிவுக் கொள்கலனுக்குள் போட்டு விடுகிறோம் என்று எழுதப் பட்டிருக்கும்.

சொன்னவாறு அன்றைய திகதி அவர்கள் பாடசாலைக்குச் சென்று தம் குழுக்களோடு இணைந்து
அவர்கள் செல்லும் வீதியோரத்துக் குப்பைகளையும் மக்கள் வீடுகளின் வெளியே கட்டி வைத்திருக்கும் குப்பைகளையும் அகற்றுதல் தான் அன்றய நாள் பாடம். மாணவர்கள் மிக ஆர்வமாக இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.

வாழும் கலை,சகல உயிர்களையும் மதிக்கும் கலை,சமூகப் பொறுப்புணர்வு ஊட்டப் படும் முறை,சுத்தமான சூழலின் அவசியம்,நிறைய ஆர்வமூட்டும் இசை,பாடல், ஆடல், விளையாட்டுக்களும் கூடவே கொஞ்சமாய் பாடமும் - இது தான் அவர்கள் பாடசாலையில் கற்கும் கல்வி!

Isn't that nice?

பாலும் சொக்கிளேற்றும் மணிக்கூட்டோடு சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் பணக்கார நாடு!வளத்துக்கு குறைவேது அங்கு!!அதனால் தான் இத்தகைய கற்பித்தல் முறை போலும்!

அன்று தவணை ஒன்றின் முடிவு நாள்.மாலை நேரம்.அன்று பாடசாலையின் ஒன்று கூடல் நாளும் ஆகும்.பாட்டன் பாட்டி,பேரன் பேர்த்தி,குழந்தைகள்,பராமரிப்பாளர்கள், பரிசாரகர்கள்,அம்மா,அப்பா,சகோதர சகோதரிகள், காதல காதலியர், பழைய மாணவர் ... என்று ஒரே கூட்டம்.அந்தக் கிராமமே அங்கு திரண்டிருந்தது.

ஒரு பாடல் குழுவினரையும் அழைத்திருந்தார்கள்.அதனாலோ என்னவோ அது ஒரு கிராமக் கொண்டாட்டமாகவும் பரிமளித்திருந்தது.இம் மக்களுடய கொண்டாட்டம் என்பது இந்தப் பாடசாலையின் கொண்டாட்டம் தான்.எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் உறவாய் இருந்தனர்.மிக சரியான நேரத்துக்கு 5 நிமிடம் முன்னதாக எல்லோரும் அவரவர் இருக்கைகளில் வந்தமர பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சி ஆரம்பமானது.

பல நிகழ்ச்சிகள் டொச்சில் நடந்தேறின. மக்கள் மிகப் பெரும் பாராட்டுக்களை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வழங்கிச் சிறப்பித்தனர்.இறுதியாக சீனிய மாணவர்களின் பாடல்.சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே.... என்ற ஒரு பழைய தமிழ் சினிமாப் பாடல் ஒன்றுண்டல்லவா? நினைவிருக்கிறதா? அந்தப் பாடலை ஆங்கிலத்திலும் டொச்சிலும் இம் மேல் வகுப்பு மாணவர்கள் தம் சொந்த இசை வாத்தியங்களோடு பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.



இது பிரபல மர்மப் பட மன்னன் ஆல்பிரட் ஹிட்ச்ஹாக் என்பவரின் படமான, 'The Man who knew too much' என்ற படத்தில் டோரிஸ் டே (Doris Day) பாடிய 'கே செரா செரா' (Que Sera Sera) என்ற பாடல்

When I was just a little girl
I asked my mother what will I be
Will I be pretty will I be rich
Here's what she said to me

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be

When I grew up and fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows day after day
Here's what my sweetheart said

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be

Now I have children of my own
They ask their mother what will I be
Will I be handsome will I be rich
I tell them tenderly

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be
Que Sera Sera
Category:
Music
Tags:
Doris Day Que Sera
License:
Standard YouTube License

கிராமம் ஒரு தாயாய் பெருமை கொண்டது!மக்கள் சொக்கிப் போயிருந்தனர்.பின்னர் எழுந்து நின்று கொடுத்த கரகோஷத்தோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் கூட்ட நெரிசலுக்குள் அப் பிள்ளைகள் துள்ளிக் குதித்தோடி தம் பாட்டிமார்களையும் தாத்தாமார்களையும் கண்டடைந்து கட்டி அணைத்துக் கொண்டது தான் இன்னும் மன நிறைவான காட்சியாகக் கண்களுக்குள் நிறைந்து நிற்கின்றது.

இனி எப்போதேனும் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தால் இந்தக் கிராமம், இந்தப் பாடசாலை, இந்த மானவர்கள் மேலும் மிக முக்கியமாக எழில் நிலாவைப் போல தோற்றம் தரும்,கேட்கும் போதெல்லாம் சளைக்காமல் முக மலர்ச்சியோடு ஆங்கில டொச் வடிவங்களில் ஆர்வத்தோடு உடனடியாகப் பாடிக்காட்டிய திவ்ய தேசத்தில் விளைந்த என் ஒன்பது வயது பெறாமகளும் அவளோடு கூட எல்லோரும்,எல்லாமும் நினைவுக்கு வரும்.

1957ம் ஆண்டு வெளியான ஆரவல்லி என்ற தமிழ் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். ஜிக்கியும் ராஜாவும் (?) பாடி இருந்தார்கள்.அது இப்பாடல்.



பெண்: சின்னப் பெண்ணான போதிலே!
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா
நீ சொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா! - என்
கண்ணல்லவா கலா - உன்
எண்ணம் போல் வாழ்விலே!
இன்பம்தான் என்றாள்! (வெண்)

கன்னி என் ஆசைக் காதலே!
கண்டேன் மணாளன் நேரிலே!
என்னாசைக் காதல் இன்பம் உண்டோ? - தோழி
நீ சொல் என்றேன்! (வெண்)

கண் ஜாடை பேசும் வெண்ணிலா!
கண்ணாளன் எங்கே சொல் நிலா! - என்
கண்கள் தேடும் உண்மைதனை
சொல் நிலவே என்றேன்!

ஆண்: வெண்ணிலா! நிலா! - என்
கண்ணல்லவா கலா! - உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

மறக்க முடியாத சித்திரத்தை வரைந்து சென்றிருக்கிறது இந்த திவ்ய தேசம்.