Tuesday, August 20, 2013

இலக்கியச் சந்திப்பு - 15 -


சூரியன் இதமான சூட்டோடு வெளியே வருகிறான். தென்றல் இதமாக வருடிச் செல்கிறது.மரங்கள் துளிர்விடுகின்றன. சிட்னியின் அழகு பூக்களாய் மலர்கிறது. ஆம் வசந்தகாலம் ஆரம்பமாகிறது.

இலக்கியங்கள் இயற்கையை பேசியிருக்கின்ற அழகை நாம் சங்ககாலத்தில் இருந்தே காணலாம்.’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே” என்று கொல்லையில் பூத்த பூவைக் கோவித்துக் கொண்ட போர்காலப் பெண்ணை  நாம் இன்றும் நம்மோடு பொருத்திப் பார்க்கலாம். பக்தியைப் பேசுகின்ற போதிலும் கூட ”மாசில் வீணையும்; மாலை மதியமும்; வீசு தென்றலும்; வீங்கிளவேனிலும்; மூசு வண்டறை பொய்கையும் போன்றதே; ஈசன் எந்தை” - என்றே பாடக் கண்டோம். ஈழத்தின் மகாகவி,’ நகர் புற நாகரிகத்தில் இருந்த படி தன் ஊரழகின் ஏக்கத்தை ‘ இந்நாளெல்லாம் எங்கள் வீட்டுப் பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்;முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும் ‘கொல்’லெனச் சிரிச்சுக்கொண்டிருக்குங்கள்’ என்பார். இன்றய நவீன காலத்தில் இயற்கையின் அழகை வியக்கின்ற இசைப்பாடல்கள்  அதிகம். கவிஞர் வைரமுத்து பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்றும்;ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயம் என்றும் அதிசயிப்பார்.

இந்த அதிசயங்களை நாம் காணவேண்டாமா? 

இம்மாத இலக்கிய சந்திப்பு - 15 - வசந்த கால ஆரம்பத்தைக் குறிக்கு முகமாகவும்; நமக்கு மிக அண்மையில் இருக்கும் ஓர்பன் உயிரியல் பூங்காவில் தற்போது "The Cherry Blossom Festival" நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தாலும்  இம்மாத சந்திப்பை கடந்த மாதம் தீர்மானித்த படி இயற்கையைச் சந்திக்கும் ஒரு நிகழ்வாக நிகழ்த்த எண்ணியுள்ளோம். 

இலக்கிய நெஞ்சங்கள் இயற்கையுடனான உங்கள் உறவு பற்றிய எண்ணங்களையும் இலக்கிய சிந்தனைகளையும் இயற்கையோடு உறவாடியபடி நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள்.

Saturday, August 10, 2013

முத்திரைகளும் பாரதத்தின் அழகுகளும்

சில நாட்களாய் வரமுடியவில்லை. எல்லோரும் நலம் தானா?

வருகிற 2,3, மாதங்களுக்கு இங்கு வர நேரம் கிட்டுவது அருமையாகவே இருக்கும். எனினும் அவ்வப்போது வந்து எழுத்துருவிலான உங்களை காண நிச்சயம் விளைவேன்.

எதிர்பாராத விதமாக இன்று அமைந்து விட்ட இந்த அரிய தருணத்தில் இலக்கிய சந்திப்பு பற்றிய ‘சுவையை’ பகிர மனம் ஆவலுற்ற போதும் தாய்லாந்தில் பார்த்த லேடிபோய் ஷோ பற்றிச் சொல்லவேண்டிய தேவை தேங்கி நிற்கின்ற போதும் மனதுக்குள் துருதுருத்துக் கொண்டிருக்கின்ற ஒரு விடயத்தை இப்போது எழுதலாம் என்று தோன்றுகிறது.

முத்திரைகள்!

தொழில் நுட்பம் இன்று போல வளர்ந்திராத ஒரு காலத்தில்; தொலைபேசியும் ஆகாயவிமானமும் மிக உயர்குடி மக்களுக்கு மட்டுமே வாய்த்திருந்த காலம் ஒன்றில் - அதிகமில்லை சுமார் 30,40 வருடங்களுக்கு பின்னாடி போய் பாருங்கள். தபால்கந்தோரும் வான்கடிதங்களும் தபால் தந்தி சேவைகளும் தான் தொலைவில் இருக்கும் ஒருவரோடு ஒருவர் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இருந்த ஒரே ஊடகம்.

அதில் ஒட்டப்படும் முத்திரைகளுக்கு தான் என்ன ஒரு பெறுமதி! ஒரு நாட்டின் வரலாறை; பண்பாட்டை;அழகை;நாட்டுச் செல்வத்தை; அதன் தனித்துவத்தை இன்னொரு நாட்டுக்குக் காட்டும் ஒரு முகத்தைப் போல முத்திரைகள் விளங்கின.

ஏதோ ஒரு சந்தர்ப்ப வசமாக முதல் தர நாடொன்றின் தபாலகத்தில் வேலை செய்கின்ற வாய்ப்பு கிட்டியதாலும் வரலாற்று ஆர்வம் உள்ள காரணத்தினாலும் நாளாந்தம் பல ஆயிரக்கணக்கான செய்திகளையும் பொதிகளைபும் கொண்டு சேர்க்கும் ஒரு தூதுக் கோஷ்டியாக நாங்கள் இருப்பதாலும் இப்போதும் அவற்றைக் காணும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

அதே நேரம் நாம் வாழும் காலத்திலேயே ஒரு தொழில்நுட்ப புரட்சியும் நடந்து முடிந்திருக்கிறது. அது தபால் சேவையில் கொண்டு வந்திருக்கிற மாற்றம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. பூகோளத்தினை - அதன் தொடர்பூடகத்தை - இணையம் புரட்டிப் போட்டு விட்டது. SMS களாலும் மின்னஞ்சல்களாலும் சமூகவலைத் தளங்களாலும், பார்த்து பேசும் வசதிகளைக் இலவசமாகத் தரும் ஸ்கைப் போன்றவற்றாலும் பாரம்பரியத் தபால் தந்தி சேவைகள் பலத்த அடியினைப் பெற்றிருக்கின்றன.

அதே நேரம் தபால் முத்திரைகளும் தம் ஆற்றலையும் வலுவினையும் அதன் தனித்துவ பெறுமதியையும் இழப்பது சற்றே காண்பதற்குக் கஸ்டராமான விடயம். குறிப்பாக இப்போதெல்லாம் தபாலகங்கள் முத்திரைக்குப் பதிலாக பெறுமதிக்கான ஸ்டிக்கர்களை மாத்திரம் ஒட்டி அனுப்புகின்றன. உலகப் பொருளாதார சரிவை சரிக்கட்ட விளையும் ஒரு பகுதியாக அது விளங்குகின்ற போதும் நாம் இழக்கின்ற அழகுகளிலும் பெறுமதியிலும் அது கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தி விடுவது கவலைக்குரிய விடயம்.

நான் வேலை செய்கின்ற மத்திய தபாலகத்தில் முன்வரவேற்பு மண்டபத்தில் அவுஸ்திரேலியாவின் தபாலக வரலாற்றுப் புகைப்படங்கள்; அவர்கள் ஆரம்பகாலத்தில் வேலைசெய்த முறைகள், காவிச்சென்ற வழிகள், தபால்பெட்டிகள், அவற்றில் தபால் சேகரிக்கும் முறைகள், கொண்டு சென்ற வாகனங்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைப் புகைப்படமாக மிகப்பெரிதாக்கப் பாட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் (உந்துருளி) ஒருகாலை பெடலிலும் மற்றக்காலை நிலத்திலும் ஊன்றியவாறு ஒரு சிறுமிக்கு கடிதத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற காட்சி மிக அழகாகப் படமாக்கப் பட்டிருந்தது. அதில் கனிந்து நிற்குமொரு உறவுமுறை! -

அவற்றினூடே நாளாந்தம் நடந்து செல்கின்ற போது ஒரு வரலாற்றின் பாதையூடாக காரியாலயத்துக்குள் நுழைவது போன்ற ஒரு பெருமையான உணர்வை அது ஏற்படுத்தும். (அண்மையில் அவற்றை எடுத்து விட்டார்கள்) 2009ம் ஆண்டு அவுஸ்திரேலிய தபால் சேவை தன் 200வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய போது தபால் ஊழியர்கள் அனைவருக்கும் தனித்துவமாக உருவாக்கப் பட்ட ரின் ஒன்றில் ஓட்ஸ் இல் செய்யப்பட்ட சுவையான பிஸ்கட்டுக்கள் பரிசளித்திருந்தார்கள். (அந்த ரின்னை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் அதுவும் ஒரு ஞாபகச் சின்னமாகலாம்)

நாளாந்த வேலையில் காணக்கிட்டும் வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளிலும் தபால்களிலும்  இருக்கும் முத்திரைகளை இப்போதும் பார்ப்பது எனக்கு ஆர்வமூட்டும் ஒரு விடயம். ஒரு நாட்டுக்குப் போகாமலே அந் நாட்டு வரலாறை காணக்கிட்டும் ஒரு விதமான குறுக்குவழி அது. தெரியாத நாடுகள்; அறியாத விடயங்கள் என பலவற்றை அது சொல்லாமல் சொல்லி நிற்கும்.  அவை. அவற்றில் எப்போதும் எனக்குப் பார்க்க பிரியமானவை குக்கூ ஐலண்ட் முத்திரைகளும் தாய்லாந்து நாட்டு முத்திரைகளும் தான். குக்கூ ஐலண்ட் முத்திரைகள் அத்தீவின் செழுமையை இயற்கையோடு அமைந்துள்ள அதன் எழிலை பழங்களாயும் சோலைகளாயும் பறவைகளாயும் கடற்கரைகளாயும் இயம்பி நிற்பன. தாய்லாந்து முத்திரைகள் றம்புட்டான் பழம், மங்குஸ்தான் பழம், மாம்பழம், கொய்யாப்பழம், பப்பாபழம், அன்னாசிப்பழம், றாகன் பழம் என அந் நாட்டின் பழச்சுவையையும் நாட்டின் வளந்தையும் வெளிப்படுத்தி நிற்பன. இந்த நாட்டுக்கு போய் வந்ததன் பின் அங்கு கண்ட இடமெல்லாம் பழங்களைக் கண்டபின்னால் அதன் முத்திரைச் சுவை இன்னும் கூடித் தான் போயிற்று.:) ஆனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து வரும் பொதிகள் துணியினால் கட்டி நூலினால் தைத்து வரும் மர்மம் ஏன் என்று எனக்கு இன்றுவரை புலப்படவே இல்லை. அதில் மைப்பேனாவால் முகவரி எழுதப்பட்டிருப்பதும் அவை சிலவேளைகளில் ( முகவரி) கரைந்து காணாமல் போய் விடுவதும் உண்டு. இப்படி பல சுவாரிஷங்கள் அன்றாடம் காணக்கிட்டும். அவை தொழில் ரகசியங்கள். பகிரப்பட முடியாதவை.

இவற்றை எல்லாம் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது.

கடந்த முறை நிகழ்ந்த இலக்கிய சந்திப்புக்கான அழைப்பிதழை உருவாக்கிக் கொண்டிருந்த போது சிவசோதி என்பார் ஒருவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என்ன என்று கேட்டால் தன்னிடம் இந்திய முத்திரைகள் பல இருக்கின்றன என்றும்;அவை தன்னுடய நீண்டகால சேகரிப்புகள் என்றும்; அவற்றை ஒரு அவசர பணத்தேவை காரணமாக விற்க இருப்பதாகவும்; ஆர்வம் இருக்கும் எவரையும் தெரிந்தால் சொல்லும் படியும் கூறினார்.

அவரைக் கண்டேன்; பார்த்தேன்; கேட்ட தொகையை உடனே கொடுத்து உரிமையாக்கிக் கொண்டேன். அவருடய பலவருட சேகரிப்புகள். ஒரு அரிய ஆவலுள்ள பொழுது போக்கு. அவை இந்தியத்தின் பொக்கிஷங்கள்.அவை இந்தியாவின் வரலாறுகள். தனியே முத்திரைகள் என்று மாத்திரம் இல்லை: First day cover, Brochures,என நீளும் அதன் காத்திரங்கள்! அவை மூல ஆதாரங்கள்!

இன்னும் பல வருடங்கள் - அது கூட தேவை இல்லை. இன்னும் சில தசாப்தங்களை நம் மானிடம் தாண்டி போய் விட்டால் இந்த முத்திரைகள் அதன் வரலாற்றுப் பெறுமதிகள் எல்லாம் ஆவணக் காப்பகங்களிலும் காட்சிச் சாலைகளிலும் தான் காணக்கிட்டும்.

தோழர்களே!

முடிந்தால் இந்த அரிய தபால்தலைகளை; முத்திரைகளை First day cover, Brochures, என நீளும் அதன் வரலாற்றுப் பெறுமதிகளை சேகரிக்க முன் வாருங்கள். சிறந்த ஒரு காத்திரமான மன ஆர்வைத்தை ஊட்டும் ஒரு பொழுது போக்காக அது இருக்கும். வேறு நாடுகளுக்குப் போகாமலே அந்த நாடுகளின் முகங்களை முத்திரைகளூடாக நீங்கள் காணலாம். எதிர்கால சந்ததிக்கு ஒரு பொக்கிஷமாக அதை நீங்கள் கையளித்துச் செல்லலாம்.

இந்தப் பொக்கிஷத்தை வாங்கியதன் பின்னால் ஒரு குற்ற உணர்வினையும் சேர்த்து வாங்கினாற்போல் மனது சஞ்சலப் படுகிறது. ஒரு பிச்சைக்காரனுக்குக் கிட்டிய ஒரு கல்யாணவிருந்து இந்தப் பொக்கிஷம். ஒரு விதமான சுயநலம் கொண்ட பேராசைத்தனம். மிஞ்சி மிஞ்சிப் போனால் என் புத்தக அலுமாரியில் அது தஞ்சமடையலாம்.

என் சக பதிவர் ஒருவரிடம் இது பற்றிப் பேசினேன். நான் எடுக்கிறேன் அக்கா என்றார் அவர். எடுக்கக் கூடும். எடுத்தால் நலம் விளையும். அது பலரையும் சென்றடையும். ஆனால் அவர் இன்னும் வரக் காணேன். அதனை எடுப்பதும் பார்ப்பதும் வைப்பதுமாக மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. அறிவு  வேறு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போதும் மனது 'Office works' ற்கு ஓடி Stamp Album தேடுகிறது. எப்படி இதனை வரிசைப்படுத்தலாம் என கணக்குப் போடுகிறது. About the Collector என்று இந்த சேகரிப்பாளரைப் பற்றிய தகவல்களை முன்னுரை மாதிரி தொடர்பு முகவரியோடு எழுதி  அவருடய வாழ்க்கைவரலாறு, ஆர்வம் ஏற்பட்ட காரணம், இவை எல்லாம் சொல்லி வைக்கத்தக்கதாக எப்படி இந்தப் புத்தகத்தை தயாரிக்கலாம் என்றும் அதற்கு எவ்வாறான அடிப்படைகள் தேவைப்படலாம் என்றும் மனம் சதா ஆர்வத்தோடு அலைந்த வாறு இருக்கிறது.  இருக்கிற வேலைப்பழுவுக்குள் இப்படி ஒரு கிறுக்கு வேறு பிடித்தால் என்னவாவது என்று ஒரு யோசினை வேறு.

அதற்குள் இன்னுமொரு குரல் எனக்கு பைத்தியம் நல்லா முற்றிப் போய் விட்டது என்று எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறது.

என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

 இந்த இலங்கையைச் சேர்ந்த மனிதன் இந்தியாவின் அழகை அந்த மாதிரிக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

இனிப் பாரதத்தின் அழகை முத்திரையில் காண்போம் வாருங்கள்!


தபால் சேவையின் பயணத்தையும் தபால்காரரையும் சொல்லும் இந்த முத்திரைகள் எவ்வாறு ஒரு காலகட்டத்தில் தொடர்பூடகங்களாக தபால் சேவை விளங்கியிருந்தது என்பதைச் சொல்லுகிறது.


பாரதத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையின் அழகை சொல்லி நிற்கும் இந்த முத்திரைகள்.


பாரதத்தின் வாசனைத்திரவியங்கள் நாட்டின் செழுமையையும் உணவுப்பண்பாட்டையும் இயம்பி நிற்பன.


பாரதத்தின் நம்பிக்கைகளாக ராசி மண்டலங்கள். அவை அம் மக்கள் வானசாஸ்திரத்தில் எத்தகைய புலமையைப் பெற்றிருந்தார்கள் என்பதையும் கூடவே சொல்லும்.


வட்ட வட்ட ஓடும், கடதாசிப் பூக்களும் பழங்கால ஜன்னலும் முற்றத்துக் குடத்துமேலே சிட்டுக்குருவிகளும் புறாக்களும் சொல்லும் ஒரு கிராமத்து வாழ்வு தனை! (சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? தென்றலே உனக்கெது சொந்த வீடு என்ற பாடல் காலம் என்றும் இதைச் சொல்லலாமா? - இப்படி ஒரு காலத்தை இனி நாம் காணலாமா?)


பாரம்பரிய பட்டுப்புடவைகளின் திணுசுகளும் பாரம்பரிய கரை வடிவங்களும் பாரதத்தின் சேலைப்பாரம்பரியத்தை உலகுக்கு பறை சாற்றும். இந்த வகை முத்திரைகள் மாதிரி பாரம்பரிய அணிகலன்கள் பற்றிய முத்திரைகளும் உண்டு. எல்லாவற்றையும் இணைப்பதன் சிரமம் கருதி அவற்றைத் தவிர்த்து விட்டேன்.



பாரதத்து ஆலயங்கள் எழுந்து நிற்கும் கோபுர திணுசுகள். அவை இந்து மத நம்பிக்கையையும் மக்களின் ஆத்மீக ஆற்றலையும் எடுத்துக் காட்டுவன.


 Brochures எனச் சொல்லப்படும் அரச முத்திரையோடு கூடிய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் அவ் அவ் நாட்டுத் தபால் திணைக்களம் அவ்வப்போது வெளியிடுகிறது. மேலே இருக்கின்ற துண்டுப்பிரசுரம் இந்திய தபால் திணைக்களம் வெளியிட்டது. அது தபால் தலைகளை எவ்வாறு சேகரிக்க வேண்டும் எவ்வாறு அதனை பெறுதல் பரிமாறுதல், அதன் வரலாற்றுப் பெறுமதி, எவ்வாறு முதலில் அது அது சேகரிக்க ஆரம்பிக்கப்பட்டது என்பன போன்ற அரிய பல தகவல்களைத் தருகிறது.




அது போல  First day cover களையும் தபாலகங்கள் விற்பனை செய்கின்றன.மேலே இருக்கின்ற கடித உறை முதன் முதல் கணனி இந்தியாவுக்கு அறிமுகமான போது வெளியிடப்பட்டது. கீழே இருக்கின்ற கடித உறை பாரதத்து பாரம்பரிய நூலகம் ஒன்றை காட்டி நிற்கிறது.


பாரதத்துக்குப் போகாமலே பாரதத்தின் அழகை முத்திரைகளிலும் அது சார்ந்த தபால் வகைகளிலும் கண்டோம். நான் கண்டேன். 

இவ்வாறு இன்னும் ஏராளம் முத்திரைகள் அதன் அழகைச் சொல்லி நிற்கின்றன. 

நீங்களும் சேர்க்க ஆரம்பியுங்களேன். பிளீஸ்!